எதையாவது சொல்லட்டுமா – 31

இங்கு இதுதான் எழுத வேண்டுமென்பதில்லை. மனதில் படும் எதையாவது எழுதுவதுதான் இந்தப் பகுதி. அதை எல்லோரும் படிக்கும்படியாக எழுத வேண்டும். இதுதான் என் நோக்கம். உண்மையில் தினமும் எதையாவது எழுதலாமா என்று யோசிப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். சி சு செல்லப்பா சென்னை திருவல்லிக்கேணியில் தனியாக வீடு வாடகை எடுத்துக்கொண்டு அவருடைய மனைவியுடன் வந்துவிட்டார். இருவரும் வயதானவர்கள். முடியாதவர்கள். சி சு செல்லப்பாவின் புதல்வர் பங்களூரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்து கொண்டிருந்தார். சி சு செவால் புதல்வருடன் இருக்க முடியவில்லை. துணிச்சலாக வந்து விட்டார். கூட அவருடைய உறவினர் சங்கரசுப்பிரமணியன் வசித்து வந்தார். சங்கரசுப்பிரமணியனின் தாயார் சி சு செல்லப்பாவின் மனைவியின் மூத்த சகோதரி. அவர் சென்னையில் இருந்த இந்தத் தருணத்தில்தான் நான் அவரைச் சந்தித்தேன்.

சி சு செல்லப்பாவை முதன் முதலாக க.நா.சுவின் இரங்கல் கூட்டம் போது சந்தித்தேன். அப்போது அவர் அழுக்கு வேஷ்டியும், சட்டையும் அணிந்திருந்தார். எளிமையான மனிதர். அந்தக் கூட்டத்தில் என்ன பேசினார் என்பது ஞாபகத்தில் இல்லை. ஆனால் படபடவென்று பேசிக் கொண்டிருந்ததாக தோன்றியது. சி சு செல்லப்பாவிற்கு க.நா.சுவை உண்மையாகப் பிடிக்காது. சி சு செ ஒருசிலரைப் பற்றியே அதாவது மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பார். மணிக்கொடி எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் எழுத்தாளர்கள் இல்லை என்று கூட சொல்வார். ஆனால் க.நா.சு அப்படி அல்ல. அவர் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களைப் பற்றியும் படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்வார். சி சு செ கொஞ்சம் பிடிவாதக்காரர். அவருக்கு இலக்கு பரிசு கிடைத்தபோது அதை அவர் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் அந்தப் பரிசுத் தொகையில் புத்தகம் கொண்டுவர வேண்டுமென்று விரும்பினார்.
அதுதான் சி சு செல்லப்பாவின் ‘என் சிறுகதைப் பாணி’ என்ற புத்தகம். அந்தப் பரிசு வழங்கும் தினத்தில் சிறப்பாகவே கூட்டம் நடந்தது. சிறுபத்திரிகையில் எழுதும் எழுத்தாளர்களைக் கூப்பிட்டு கெளரவம் செய்தார்கள். சி சு செல்லப்பா உற்சாகமாகப் பேசினார். ஆனால் சி சு செல்லப்பா அப்போது வந்து கொண்டிருந்த பத்திரிகைகளைப் படிப்பாரா என்பது சந்தேகம்.

ஒரு இலக்கியச் சிந்தனை நிகழ்ச்சியின்போது, சி சு செல்லப்பா அங்கு கூடியிருந்த பதிப்பாளர்களைச் சந்தித்து தன்னுடைய சுதந்திர தாகம் என்ற மெகா நாவலை பிரசுரம் செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். யாரும் அந்தப் புத்தகத்தைப் போட தயாராய் இல்லை. அந்தத் தருணத்தில்தான் எனக்கு சி சு செல்லப்பா மீது இரக்க உணர்ச்சியே ஏற்பட்டது.

அவர் 80 வயதிற்குமேல் அந்தப் புத்தகத்தை தானாகவே வெளியிடும்படி நேர்ந்தது. அந்தப் புத்தகம் கொண்டுவர, மணி ஆப்செட்டை அவருக்கு அறிமுகம் செய்தேன். அவர்கள் புத்தகம் சிறப்பாக வர எல்லா உதவியையும் செய்தார்கள். சி சு செல்லப்பா அந்த வயதில் துணிச்சலாக அவர் புத்தகத்தை வெளியிட்டார். அவர் ஒரு சாதனை வீரர். அப்புத்தகம் பற்றி விமர்சனம் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்து அவருக்கு பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்தத் தருணத்தில்தான் நான் அடிக்கடி சி சு செல்லப்பாவை அவர் வீட்டில் சந்திப்பேன். வீட்டிற்கு வந்தவுடன் சாப்பிட எதாவது கொடுப்பார். சி சு செல்லப்பா அந்தக் காலத்தில் உள்ள நண்பர்களைப் பற்றி பேசுவார். பி எஸ் ராமையா மீது அளவு கடந்த அன்பு அதிகம். க.நா.சு, மெளனி பற்றி சிலாகித்துச் சொல்ல மாட்டார். க.நா.சு பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. க.நா.சுவை சென்னையில் ஒரு இடத்தில் குடி வைக்க சி சு செல்லப்பா ஏற்பாடு செய்திருக்கிறார். க.நா.சுவால் வாடகைக் கொடுக்க முடியவில்லை. ஒரு சமயம் வீட்டுக்காரர் அவர் தங்கியிருக்கும் இடத்தைப் பார்க்க வந்தபோது அதிர்ச்சியாகி விட்டது அவருக்கு. க.நா.சு குடியிருந்த வீடு காலியாக இருந்ததோடு அல்லாமல், நாலைந்து மாத வாடகை வேறு தரவில்லையாம். வீட்டுக்காரர் சி சு செல்லப்பாவைப் பிடித்துக் கொண்டு விட்டார். சி சு செல்லப்பாவிற்கு க.நா.சுமீது கோபமான கோபம்.

இந்தச் சம்பவத்தை சி.சு செல்லப்பா என்னிடம் சொன்னபோது எனக்கு க.நா.சு மீதுதான் வருத்தம் ஏற்பட்டது. எந்த ஒரு நிலையில் அவர் வீட்டை காலி செய்திருக்க வேண்டும்?

எதையாவது சொல்லட்டுமா / 30

தீபாவளிக்கு அடுத்தநாள் என் இடது கண்ணைப் பார்க்க சகிக்கவில்லை. கண் வீங்கியிருந்தது. கண்ணில் வலியும் இருந்தது. எனக்கு பயம் வந்துவிட்டது. அன்று என் அம்மாவின் திதி. நானும் சகோதரனும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் திதியை நடத்துவோம். என்னைப் பார்த்தவுடன் என் சகோதரன்.

”என்ன மெட்ராஸ் ஐ யா?” என்றான். பின் ”கிட்ட வராதே…எல்லாருக்கும் பரவிவிடும்” என்று கூப்பாடு போட்டான்.

எனக்கு எப்படி இந்த நோய் வந்தது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். புரியவில்லை. அன்று திதி முடிந்து அவன் வீட்டிற்கு என் சகோதரன் போனபோது அவனுக்கும் மெட்ராஸ் ஐ வந்துவிட்டது. இந்த மெட்ராஸ் ஐ எப்படிப் பொறுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. நான் பெரும்பாலும் வசிக்கும் சீர்காழி வங்கிக் கிளையில் யாரோ ஒரு வாடிக்கையாளர் கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்திருந்தான். அவன் மூலம் எனக்குப் பரவியிருக்க வாய்ப்புண்டா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. கண்ணில் அழுக்குகள் சேர்ந்தால் அது மெட்ராஸ் ஐ ஆக மாறிவிடுமோ என்று தோன்றியது. என் கண் எப்போதும் சிவப்பாக இருக்காது. கண் சிவப்பாக மாறினால் அதற்குப் பல அறிகுறிகள் உண்டு என்று எனக்குத் தெரியும். உடலில் எதாவது குறை இருந்தால் கண் காட்டிக் கொடுத்துவிடும்.

எதாவது தப்பு செய்தால்கூட கண் காட்டிக்கொடுத்து விடும். எனக்கு ரமணரின் கண்கள் பிடிக்கும். தீர்க்க ஒளியுடன் தீட்சண்யமாக கண்கள் பளபளக்கும். அரவிந்தரின் கண்கள் சாந்தமாக இருக்கும். நடிகைகளில் ஸ்நேகாவின் கண்களைப் போல பிரகாசமான கண்களை நான் பார்த்ததில்லை.

என் மெட்ராஸ் ஐயால் எனக்கு சில அனுகூலங்கள். அலுவலகத்தில் முதலில் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டேன். பின் கண் வலி அவ்வளவாக தீரவில்லை என்பதால் இன்னொரு நாளும் எடுத்துக்கொண்டேன். இரண்டுநாள் விடுமுறையில் லைப்ரரி செல்வது என்று பல விஷயங்களை முடித்துக்கொள்ள பயன்படுத்திக்கொண்டேன். ஹூக்கின்பாதம்ஸ் சென்று ஒரு ஆண்டுக்கு முன் விற்பனைக்குக் கொடுத்தப் புத்தகப் பணத்தைக் கேட்டேன். எதுவும் ஒழுங்கில்லை. நான் கேட்காமலயே பணம் வரும் இடத்திலிருந்தும் பணம் வருவதில்லை. இப்போது கேட்டாலும் நடப்பதில்லை. அரசாங்க லைப்பரரியில் பத்திரிகை அனுப்பியதற்கு பில் அனுப்பினேன். போய் கேட்டேன். வரவில்லை என்று சொல்லி விட்டார்கள். போனில் எத்தனை முறை கேட்டாலும் அவர்கள் உதிர்க்கும் பதில் இதுவாகத்தான் இருக்கும். நான் திரும்பவும் விடுமுறை எடுத்துக்கொண்டு எனக்கு மெட்ராஸ் ஐ வந்தபிறகுதான் வரமுடியும். ஒருநாள் விடுமுறை எடுத்ததற்கே அலுவலகத்திலிருந்து போன் வந்துவிட்டது. ‘மெட்ராஸ் ஐ ஆக இருந்தாலும் பரவாயில்லை. வாருங்கள்.’ என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். புதன் கிழமை சென்றேன்.

என் சகோதரனனும் 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு விட்டான். கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபோது என் முகமா இது என்று திரும்பவும் கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு நண்பரை அடிக்கடி பார்க்கப் போவேன். அவர்கள் வீட்டில் அந்த நண்பரின் தாய் என்னைப் பார்த்து பாக்கியராஜ் என்று கூப்பிடுவார். அவர்கள் சினிமா பார்க்க மாட்டார்கள். ஆனால் டிவியில் வரும் சினிமாவைப் பார்த்திருப்பார். சமீபத்தில் அவர் இறந்து விட்டார். நண்பரின் வீட்டிற்கு துக்கம் விஜாரிக்கச் சென்றேன். என்னை பாக்கியராஜ் என்று நண்பரின் அம்மா கூப்பிட்டதை அவர்கள் ஞாபகப் படுத்தினார்கள்.

எனக்கும் பாக்கியராஜுற்கும் மூக்குக் கண்ணாடியைத் தவிர எந்த ஒற்றுமையும் கிடையாது. நான் உயரம். கிட்டத்தட்ட 6 அடி. மேலும் பாக்கியராஜ் சற்று குண்டாக தோற்றம் தருவார். அவரை விட நான் நிறம் அதிகம். குரல் கூட வித்தியாசம் உண்டு.

என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் என்னைப் பார்த்து, ‘ரவி சாஸ்திரி மாதிரி இருக்கேம்மா,’ என்றார். என்னால் நம்ப முடியவில்லை.ரவி சாஸ்திரிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏதோ சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் தலையில் வெள்ளை முடி அதிகமாக இருந்ததால் டை அடிக்கலாமென்று அடித்துக் கொண்டேன். என்னைப் பார்த்து என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் ஒரு நகைச்சுவை நடிகர் பெயரில் கூப்பிட ஆரம்பித்து விட்டார். திரும்பவும் அவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

திரும்பவும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக்கொண்டேன். உண்மையில் நான் யார். அவர்கள் சொல்லும் ஒருவர் இல்லை.

எதையாவது சொல்லட்டுமா / 29

தீபாவளிக்கு அடுத்தநாள் என் இடது கண்ணைப் பார்க்க சகிக்கவில்லை. கண் வீங்கியிருந்தது. கண்ணில் வலியும் இருந்தது. எனக்கு பயம் வந்துவிட்டது. அன்று என் அம்மாவின் திதி. நானும் சகோதரனும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் திதியை நடத்துவோம். என்னைப் பார்த்தவுடன் என் சகோதரன்.

”என்ன மெட்ராஸ் ஐ யா?” என்றான். பின் ”கிட்ட வராதே…எல்லாருக்கும் பரவிவிடும்” என்று கூப்பாடு போட்டான்.

எனக்கு எப்படி இந்த நோய் வந்தது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். புரியவில்லை. அன்று திதி முடிந்து அவன் வீட்டிற்கு என் சகோதரன் போனபோது அவனுக்கும் மெட்ராஸ் ஐ வந்துவிட்டது. இந்த மெட்ராஸ் ஐ எப்படிப் பொறுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. நான் பெரும்பாலும் வசிக்கும் சீர்காழி வங்கிக் கிளையில் யாரோ ஒரு வாடிக்கையாளர் கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்திருந்தான். அவன் மூலம் எனக்குப் பரவியிருக்க வாய்ப்புண்டா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. கண்ணில் அழுக்குகள் சேர்ந்தால் அது மெட்ராஸ் ஐ ஆக மாறிவிடுமோ என்று தோன்றியது. என் கண் எப்போதும் சிவப்பாக இருக்காது. கண் சிவப்பாக மாறினால் அதற்குப் பல அறிகுறிகள் உண்டு என்று எனக்குத் தெரியும். உடலில் எதாவது குறை இருந்தால் கண் காட்டிக் கொடுத்துவிடும்.

எதாவது தப்பு செய்தால்கூட கண் காட்டிக்கொடுத்து விடும். எனக்கு ரமணரின் கண்கள் பிடிக்கும். தீர்க்க ஒளியுடன் தீட்சண்யமாக கண்கள் பளபளக்கும். அரவிந்தரின் கண்கள் சாந்தமாக இருக்கும். நடிகைகளில் ஸ்நேகாவின் கண்களைப் போல பிரகாசமான கண்களை நான் பார்த்ததில்லை.

என் மெட்ராஸ் ஐயால் எனக்கு சில அனுகூலங்கள். அலுவலகத்தில் முதலில் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டேன். பின் கண் வலி அவ்வளவாக தீரவில்லை என்பதால் இன்னொரு நாளும் எடுத்துக்கொண்டேன். இரண்டுநாள் விடுமுறையில் லைப்ரரி செல்வது என்று பல விஷயங்களை முடித்துக்கொள்ள பயன்படுத்திக்கொண்டேன். ஹூக்கின்பாதம்ஸ் சென்று ஒரு ஆண்டுக்கு முன் விற்பனைக்குக் கொடுத்தப் புத்தகப் பணத்தைக் கேட்டேன். எதுவும் ஒழுங்கில்லை. நான் கேட்காமலயே பணம் வரும் இடத்திலிருந்தும் பணம் வருவதில்லை. இப்போது கேட்டாலும் நடப்பதில்லை. அரசாங்க லைப்பரரியில் பத்திரிகை அனுப்பியதற்கு பில் அனுப்பினேன். போய் கேட்டேன். வரவில்லை என்று சொல்லி விட்டார்கள். போனில் எத்தனை முறை கேட்டாலும் அவர்கள் உதிர்க்கும் பதில் இதுவாகத்தான் இருக்கும். நான் திரும்பவும் விடுமுறை எடுத்துக்கொண்டு எனக்கு மெட்ராஸ் ஐ வந்தபிறகுதான் வரமுடியும். ஒருநாள் விடுமுறை எடுத்ததற்கே அலுவலகத்திலிருந்து போன் வந்துவிட்டது. ‘மெட்ராஸ் ஐ ஆக இருந்தாலும் பரவாயில்லை. வாருங்கள்.’ என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். புதன் கிழமை சென்றேன்.

என் சகோதரனனும் 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு விட்டான். கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபோது என் முகமா இது என்று திரும்பவும் கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு நண்பரை அடிக்கடி பார்க்கப் போவேன். அவர்கள் வீட்டில் அந்த நண்பரின் தாய் என்னைப் பார்த்து பாக்கியராஜ் என்று கூப்பிடுவார். அவர்கள் சினிமா பார்க்க மாட்டார்கள். ஆனால் டிவியில் வரும் சினிமாவைப் பார்த்திருப்பார். சமீபத்தில் அவர் இறந்து விட்டார். நண்பரின் வீட்டிற்கு துக்கம் விஜாரிக்கச் சென்றேன். என்னை பாக்கியராஜ் என்று நண்பரின் அம்மா கூப்பிட்டதை அவர்கள் ஞாபகப் படுத்தினார்கள்.

எனக்கும் பாக்கியராஜுற்கும் மூக்குக் கண்ணாடியைத் தவிர எந்த ஒற்றுமையும் கிடையாது. நான் உயரம். கிட்டத்தட்ட 6 அடி. மேலும் பாக்கியராஜ் சற்று குண்டாக தோற்றம் தருவார். அவரை விட நான் நிறம் அதிகம். குரல் கூட வித்தியாசம் உண்டு.

என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் என்னைப் பார்த்து, ‘ரவி சாஸ்திரி மாதிரி இருக்கேம்மா,’ என்றார். என்னால் நம்ப முடியவில்லை.ரவி சாஸ்திரிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏதோ சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் தலையில் வெள்ளை முடி அதிகமாக இருந்ததால் டை அடிக்கலாமென்று அடித்துக் கொண்டேன். என்னைப் பார்த்து என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் ஒரு நகைச்சுவை நடிகர் பெயரில் கூப்பிட ஆரம்பித்து விட்டார். திரும்பவும் அவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

திரும்பவும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக்கொண்டேன். உண்மையில் நான் யார். அவர்கள் சொல்லும் ஒருவர் இல்லை.

மேன்மக்கள்

எல்லோரும் உடம்பின்

வியர்வை ஊற்றுக்

கண்களிலெல்லாம்

வாசனைத் திரவமூற்றி

காற்றில் போதையேற்றி

சற்றே முகமெங்கும்

வெள்ளை அடித்து

வீதிக்கு வருகிறார்கள்.

அவர்களின் ஒரு கையில்

பெரிய பூதக் கண்ணாடியும்

இன்னொரு கையில்

தார் சட்டியும்.

பூதக்கண்ணாடியால்

ஒவ்வொருவரையும்

கூர்ந்து பார்த்துவிட்டு

அவர்கள் முகத்தில்

சிறிது கரும்புள்ளி

தென்பட்டால் கூட

உடனடியாக அவருடைய

உருவம் வரைந்து

அதில் தார் பூசி

எல்லோருக்கும் காட்டி

இளித்து இன்பமடையும்

மக்கள்.

இரண்டு கவிதைகள்

கொல்லும் முகம்

சுழலும் விழிகளில் நீ஡ ஏனோ?
கழநிகளில் பாய்ந்ததுதான் போதாதோ!
மறையும் மாலையில் ஒளிர்ந்திடும் –
உன்முகம்தான் என் வாழ்வின் விதிப்பயனோ?

தெரிந்ததில்லை பயணம் தொடர்ந்தக்கால்!
தெரிந்ததில்லை – பருவமதில் – மாற்றத்தில் –
தெரிந்ததுதான் யாருக்கு எப்போது?
இயம்புமோ உன்முகம்தான் அதைப்பற்றி?

என் உறக்க, விழிப்பில், ஊர்ந்தவளே!
என் சிந்தையில் படர்ந்த கோடிப் பூவே
என் மூளையில் பூத்த வெண்மலரே!
உன் முகம்தான் என்னைக் கொன்றதடி.

இன்னொரு கவிதை

அழிவுப் பாதையில் பயணம் –
இல்லாத கேள்விகளை எல்லாம் கேட்டு –
தொடுவானம் கண்டது!
ஆக்கப் பாதையில் பயணம் –
செளகரியங்களின் நிரந்தரத்திறகான – கதறலோடு
பட்டமெனப் பறக்கவும் –
ஆதூரம் கொண்டது
ரொம்ப நாட்கள் கழித்து-
ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன் –
அழிவுப் பாதையும் –
ஆக்கப் பாதையும் –
தெரியாத இடத்தில் –
களைத்து!

யாராக இருக்கிறாள்?

குளிரும் கம்பிகளில்
முகம் வைத்தபடி
சிறுமி ஒருத்தி
கடும் மழையில்
தனித்து நிற்கிறாள்.

மழை
ஆயிரம் குமிழ்களாய்
பூத்து மறைவதை
உற்று நோக்கி
தன்னை மறக்கிறாள்.

பின்மாலை நேர மழை
வண்ணக் குடைகளாய்
ததும்பிச் செல்ல
பரவசம் இலைச் சொட்டாய்
அவள் இதயமெங்கும்.

வீட்டின் உள்ளே
திரும்பிப் பார்த்துவிட்டு
தவிர்க்கவியலா உந்தலோடு
உள்ளும் புறமும் நனைய
கம்பிகளூடே கை நீட்டுகிறாள்.

மழை – சிதறல்களாய்
உள்ளங்கைகளில்
பட்டுத் தெறிக்கும்
அந்த இடி, மின்னல் கணத்தில்
அவள் யாராக இருக்கிறாள்?

நான், பிரமிள், விசிறி சாமியார்….15

நான் இந்தத் தொடரை ஆரம்பித்து பல மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் தொடர்ந்து இதை எழுதி முடிக்க முடியவில்லை. பிரமிள் பற்றி பல விஷயங்கள் யோசித்து யோசித்து எழுத வேண்டி உள்ளது. எதுவும் ஒரு ஒழுங்கில்லாமல் இந்தத் தொடர் போய்க் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் பலருக்கு பிரமிளைப் பிடிக்கவில்லை. அது ஏன் என்று நான் ஆராய்ந்து பார்ப்பேன். பல மூத்த எழுத்தாளர்கள் அவருடன் ஒரு காலத்தில் நெருங்கி பழகியிருக்கிறார்கள். பின் அவரை விட்டு விலகி ஓடியும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் பிரமிள் பற்றி அவர்கள் மூலமாகவும், அவர்களைப் பற்றி பிரமிள் மூலமாகவும் கேட்டுக் கொண்டிருப்பேன்.

அவர்கள் பிரமிள் பற்றி பேசும்போதே கசப்புணர்வுடன் பேசுவார்கள். பிரமிள் இலங்கைக்காரரா தமிழ்நாட்டைச் சார்ந்தவரா? இந்தக் குழப்பமும் எல்லோருடனும் இருக்கும். ஆனால் இலங்கையில் தன் குடும்பத்தை விட்டு வந்தவர். பின் அங்கு செல்லவே இல்லை. தனி மனிதனாகவே தமிழ் நாட்டில் தங்கி விட்டார். கடைசிவரையில் அவர் தனிமனிதர். முரண்பாடு மிக்க மனிதர். எனக்கு அவர் வாழ்வதை நினைத்து ஆச்சரியமாக இருக்கும். அவர் யாரிடமும் அடிமையாய் போய் பணம் சம்பாதிக்கவே இல்லை. கொஞ்சம் இணங்கினால் போதும், அவரால் ஓரளவு பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் அவரால் முடியாது. அதேபோல் வறுமையை அவர் சந்தித்ததைப் போல் யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால் இதைப் பற்றியெல்லாம் அவர் பேச மாட்டார். வறுமையைப் பற்றி அவர் கவிதை எழுதியும் இருக்கிறார். அது தனி மனிதனின் வறுமையைப் பற்றி அல்ல.

அரும்பு பத்திரிகை ஆசிரியர் அவர் அன்புக்குரியவர். அவர் சொல்லி அரும்பு பத்திரிகையில் அவர் எழுதினார். ஆனால் கொஞ்ச காலம்தான் அது நீடித்தது. எல்லாவற்றிலும் ஒருவித முரண்பாடு மிக்க மனிதராகவே இருந்து வந்தார்.

அவர் கடைசிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் வசித்த வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த பெண்மணி கூறியதைக் கேட்டு எனக்குத் திகைப்பாக இருந்தது. பிரமிள் நுங்கம்பாக்கத்தில் ஓரிடத்தில் குடியிருந்தார். அந்த இடத்தின் பக்கத்திலேயே பன்றி மாமிசம் விற்கும் இடம். பன்றியை வெட்டிப் போடும்போது ஏற்படும் ஒரு வித துர்நாற்றம் சூழ்ந்தபடியே இருக்கும். பிரமிள் மட்டும் அங்கு இல்லை. இன்னும் நாலைந்து குடித்தனங்களும் அங்கு இருந்தன. மற்ற குடித்தனங்களில் இருந்தவர்கள் பிரமிளை பெரியவர் என்று குறிப்பிடுவார்கள்.

ஒருமுறை பிரமிள் தன் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள பெண்மணியிடம் ஒருநாள் மின்சார பில்லை கட்ட கார்டும், பணமும் கொடுத்துவிட்டு சென்று விட்டார். அந்தப் பெண்மணி அவர் கேட்டுக்கொண்டபடி பணம் கட்டிவிட்டார். பிரமிள் திரும்பவும் அந்தக் கார்டைப் பார்த்து பணம் கட்டுவதில் ஏதோ வித்தியாசம் இருப்பதாக நினைத்து அந்தப் பெண்மணியைத் திட்டிவிட்டார். பிரமிள் திட்டியதைக் கேட்டு அந்தப் பெண்மணி அழுது விட்டார். உண்மையில் தவறு பிரமிள் மீதுதான் என்பதை பிரமிள் உணர்ந்து விட்டார்.

இந்தத் தவறை உணர்ந்தவுடன், சாதாரணமானவர்கள் அதை வேறு விதமாக எடுத்துச் சென்றிருப்பார்கள். ஆனால் பிரமிள் செய்த காரியம் அந்தப் பெண்மணியை மேலும் மிரள வைத்துவிட்டது. பிரமிள் அந்தப் பெண்மணியைப் பார்த்து, அந்தப் பெண்மணியின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டார். அவருடைய இந்தச் செய்கை அந்தப் பெண்மணியை மிரள வைத்துவிட்டது. இதுதான் பிரமிள். அவருடைய அதீத தன்மையை நான் இப்போது கூட பலரிடம் பார்ப்பதுண்டு. பிரமிள் அறையில் பக்கவாத நோயுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, யாரும் அவருடைய அறைக்கு பல மணிநேரங்கள் செல்லவில்லை.
(இன்னும் வரும்)

அப்பாவின் குடை

மூட்டெலும்புகள் உடைந்து

மடங்காமல் முடங்கியது

அப்பாவின் குடை.

சிகிச்சைக்கு

வழக்கமான

இடத்திற்கேச் சென்றேன்.

அப்படியே இருந்தான்

அப்பாவின் குடைக்காரன்

அதே இளமையுடன்

அதே இடத்தில்.

சரி செய்ய முடியுமா என்று

குடைக்காரனிடம் கேட்டேன்.

சரி செய்து விடலாம்

என்றவன் சரி செய்து

கொண்டே அப்பா

எப்படி இருக்கிறார் என்றான்.

அப்பாவைக் காப்பாற்ற

முடியவில்லை என்றேன்

வருத்தத்துடன்.

அப்படியா….அதான்

அப்பாவைக் காணவில்லை…

என்றவன் சரி செய்த

குடையை விரித்தான்.

விரித்த கருங்குடைக்குள்

அப்பாவிற்கே உரிய

சிரிப்பு மழை

இடி முழக்கமாய்…..

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்…….1

(பட்டியல்கள் தொடர்ச்சி……)

க.நா.சுவின் விமர்சனப் பார்வையில் ஒரு படைப்பின் தனித்தனி அம்சங்கள் போதிய கவனம் தரப்படாமல் போவதில்லை. ஆனால் அவருடைய இறுதிக் கணிப்பில் அப்படைப்பு அதன் முழுமையில் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதற்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. இதைக் கூட ஒரு லெளகீக சாமர்த்தியத்துடன் செய்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு போய் விடலாம் குறைந்த பட்சம், பொல்லாப்பு பெற்றுக்கொள்ளாமல் சமாளித்துவிடலாம். ஆனால் க.நா.சு அவருடைய வாதங்கள், கணிப்புகளைக் கூறிவிட்டு அவைகளை விளக்கக் குறிப்பிட்ட படைப்புகள், படைப்பாளிகள் பெயர்களையும் எடுத்துக் கூறியிருக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் அவர்களை ரகவாரியாகப் பிரித்துப் பட்டியல்கள் போட்டிருக்கிறார்.

பட்டியல்கள் – இதை வைத்ததுத்தான் க.நா.சு எவரிடமும் முதல் வசவை வாங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய சக விமரிசகர்கள், எழுத்தாளர்களிலிருந்து தொடங்கி, ஒரு பத்திரிகை இதழ் வெளிவந்தால் அதன் அட்டவணையிலிருந்து கடைசிப் பக்கம்வரை உள்ளதை ஒவ்வொரு வரியில் வியந்து – பாராட்டி, திட்டி எழுதும் ஆர்வ வாசகன் வரை க.நா.சுவின் பட்டியல்கள் உபாதைப்படுத்தியிருக்கின்றன. க.நா.சு இப்போது எந்தப் பரிசுகளும், பாராட்டுகளும் வழங்க அதிகாரம் படைத்த அமைப்பு எதிலும் அங்கத்தினர் இல்லை. சுத்த சாதாரணர். ஆனால் அவர் பட்டியல்களில் இடம் பெறுவதும் இடம் பெறாமல் போவதும் எழுதாளர்களுக்குள் மிகவும் பெருமை தருவதாகவும் மிகவும் அவமதிக்கப் படுவதாகவுமான விஷயமாகி விடுகிறது.

நகுலன் ஒரு கவிதை எழுதியிருந்தார். அதன் வரிகள் முழுவதும் நினைவில் இல்லை. ஆனால் கவிதை இந்த முறையில் இருந்தது.

யார் இந்த
க.நா.சு –
இவர் முறையாகத் தமிழ் படித்தவரல்ல
இலக்கணம் இவரை மீறியது
கவிதை இவருக்குக் கைவராத
கலை
சிறுகதை நாவலோ சுத்தமாகப்
பிரயோசனம் இல்லை
விமரிசனமோ – ஒழுங்காக
நான்கு வார்த்தை எழுதத் தெரியாது
மனுஷனுக்கு.
அது போகட்டும்
இவர் என் கதை பற்றி என்ன சொன்னார்?

இது ஏதோ ஒருவரைப் பாராட்டி, கெட்டிகாரத்தனமாக எழுதிய கவிதையாகத் தோன்றவில்லை. நிதர்சனமாகக் காணக் கிடைக்கும் உண்மைதான். இல்லாது போனால் க.நா.சு என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்பது ஏன் இவ்வளவு தீவிரமான உணர்ச்சிகளைத் தமிழ் படைப்பிலக்கியத்தில் நேரடியாக, ஆத்மார்த்மாக ஈடுபடும் தொடர்பும் உள்ளவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்?

தமிழில் க.நா.சு பட்டியல்களை உபயோகப்படுத்தியதுபோல, தமிழுக்குப் பட்டியல்கள் தேவைப்படுவதுபோல, எல்லா மொழிகளுக்கும் பட்டியல்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்று தீர்மானமாகக் கூற முடியவில்லை. இலக்கிய வரலாறு என்று சிறிது விரிவாக எழுதப்படும்போதுதான் பட்டியல்களைக் காண முடிகிறது. ஆனால் தமிழ் நவீன இலக்கியம் சிறிது காலம் தாழ்த்திய துவக்கம் கண்டதாலும், தமிழில் விமரிசனப் பூர்வமான கணிப்புகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஸ்திரமாக இன்னும் உருவாகாத காரணத்தாலும் பட்டியல்கள் அத்யாவசியமாக இருக்கின்றன. பொதுப்படையான இலக்கிய விமரிசகன் சூத்திரங்கள், அல்லது கூற்றுகள், தற்கால படைப்பிலக்கியத்தைப் பொறுத்த வரையில், வாசகர்களுக்கு ஏதோ வாயுப்படலமாகப் போய்விடுகின்றன. விமரிசனக் கூற்றுகள், சூத்திரங்களுக்குத் திட்டவட்டமாக, ஸ்தூலமாக உதாரணங்களைக் கூறியே விளக்கக் கொண்டிருக்கிறது. அப்போது பட்டியல்கள் தவிர்க்க முடியாததாகப் போய்விடுகின்றன.

ஒரு குறிப்பிட்ட தருணத்தில் க.நா.சு தரும் பட்டியல், அப்படியே நூற்றுக்கு நூறு பூர்ணமானது என்று கொள்ள முடியாது. அவர் பார்வைக்குக் கிடைத்தவரை அந்தப் பட்டியல் முழுமையானது என்றுதான் கொள்ள முடியும். இதிலும் கூட, மனித இயல்பில் கூடிய ஞாபக மறதி, கவனக்குறைவு செயல்பட்டுச் சில பெயர்கள், சில படைப்புகள் ஒரு குறிப்பிட்ட க.நா.சு விமரிசத்திலோ கட்டுரையிலோ விட்டுப் போய்விட இடமிருக்கிறது. இருந்தும் க.நா.சு ஒவ்வொரு கால கட்டத்திலும் பல கண்டுபிடிப்புகளைச் சாதித்திருக்கிறார். அவர் பார்வைக்குட்படுவது மற்ற தமிழ் விமரிசகர்கள், இலக்கிய அன்பர்களுக்குக் குறையாத வண்ணம் இருந்துவருகிறது. நாற்பதாண்டு காலமாக எழுதி மணிவிழா பெற்ற எழுத்தாளரின் சமீபத்திய படைப்பு பற்றியும் க.நா.சுவால் அபிப்பிராயம் கூற முடியும். ஓராண்டு காலமாக நடக்கும் ஒரு சிறு பத்திரிகையில் ஒரு கதை எழுதி அடி எடுத்து வைக்கும் இளைஞனின் சாத்தியக் கூறுகள் பற்றியும் க.நா.சுவால் கூற முடியும். இன்று தமிழ் இலக்கிய உலகில் சிறப்பான பெயர்களாக இரக்கும் ஜெயகாந்தன், மெளனி, லா.ச.ரா., சுந்தர ராமசாமி, அழகிரிசாமி, ஹெப்சிபா ஜேசுதாசன், நீல பத்மநாபன், ஷண்முகசுந்தரம், நகுலன், வே.மாலி, ஷண்முகசுப்பையா, சா கந்தசாமி இவர்கள் எல்லோரும் ஒருவிதத்தில் க.நா.சுவின் கண்டுபிடிப்புகளே.

(இன்னும் வரும்)

– அசோகமித்திரன்

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்…..1




பட்டியல்கள்

இந்த ஆண்டு (1972) குடியரசு தினத்தன்று சென்னையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. ‘கைராலி ஸ்டடி சர்க்கிள்’ என்னும் குழு, நான்கு தென்னிந்திய மொழிகளின் தற்கால இலக்கியம் பற்றிக் கட்டுரைகள் படிக்க ஏற்பாடு செய்திருந்தது. கட்டுரையாசிரியர்கள் நான்கு பேருமே சிறிது கடுமையான விவாதத்திற்கு உட்பட வேண்டியிருந்தது. தெலுங்கு மொழிக் கட்டுரையை ஒரு அன்பர் வெகுவாகக் குறை கண்டார். தெலுங்கு மொழி புரட்சிகர எழுத்தாளர்களின் படைப்புகளுக்குப் போதிய கவனமும் முக்கியத்துவமும் தராதது குறித்துக் கண்டனம் தெரிவித்து, புரட்சிகர எழுத்தாளர்களின் நோக்கங்களைக் கட்டுரையாசிரியர் பூரணமாகப் புரிந்துகொள்ள புரட்சிகர எழுத்தாளர்க சங்கத்தின் பிரகடனத்தின் சில பகுதிகளை உன்னிப்பாகப் படிக்குமாறு வற்புறுத்தினார். கட்டுரையாசிரியர் கண்டனங்களுக்குப் பதில் அளித்தார். திருப்திகரமாகப் பதில் கூறினாரா என்று கூற முடியாது. ஆனால் அவர் கூறிய பதில் ஒன்று சிந்தனைக்குரியது ”எந்தப் பிரகடனம்தான் மிக உன்னத நோக்கங்களை எடுத்துக் கூறாமல் இருக்கிறது?

இலக்கிய சங்கம், மக்கள் எழுத்தாளர் சங்கம், படைப்பாளிகள் குழாம், இலக்கிய வாசகர் வட்டத்திலிருந்து திறனாய்வு மன்றம், தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், சாகித்திய அகாடமி, தமிழ் வளர்ச்சிக் வரலாற்றுக் கழகம், இலக்கியச் சிந்தனை வநடி இவ்வமைப்புகளின் இலக்கியக் கோட்பாடுகள் மிகவும் உன்னதமானவையே. அதேபோல் விமரிசர்கள் ரகுநாதன், சி சு செல்லப்பா, எழில் முதல்வன்,. வெ.சாமிநாதன், டாக்டர் ந. சஞ்சீவி, தி.க.சி, டாக்டர் கைலாசபதி இவர்களின் அடிப்படை இலக்கியக் கொள்கைகளும் உன்னதமானவையே, எழுத்து கலையாக உருக்கொள்ள வேண்டும். அது மனிதாபிமானத்தில் எழுந்ததாக இருக்க வேண்டும். மன விரிவை உண்டு பண்ணுவதாக இருக்க வேண்டும், கற்பனை மயக்கங்களைத் தவிர்ப்பதாக இருக்க வேண்டும், மனித ஆன்மிக எழுச்சிக்கு வழி கோலுவதாக இருக்க வேண்டும். சமூகப் பரிணாமத்திற்கு வலுவூட்டுவதாக இருக்க வேண்டும் – இதிலெல்லாம் ஒரு குறையும் காண முடியாது.

அநேகமாக எல்லாருமே இந்த அடிப்படைக் கொள்கைகளைத்தான் அளவுகோலாகக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதன்படிப் பார்த்தால் இவர்கள் அனைவரும் ஏகோபித்ததாகத்தான் ஒரு குறிப்பிட்ட படைப்பைச் சிறந்ததென்றும் இன்னொன்றைச் சிறந்தது அல்ல என்றும் கூற வேண்டும்.

ஆனால் நடைமுறை அவ்வாறில்லை. ஒருவர் நல்ல படைப்பு என்று கூறியது மற்றொருவரால் மிகவும் இழிவானது என்று தள்ளிவிடப் படுகிறது. ஒருவர் ஒரு எழுத்தாளரைச் சிறந்த எழுத்தாளர் என்று தேர்ந்தெடுத்தால் அது .இன்னொருவருடைய தேர்வுக்கு முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது. ஆதலால் அரசியல் அல்லது சமூக அமைப்புகளின் பிரகடனங்கள் போல இலக்கிய விமரிகர்களின் அடிப்படைக் கொள்கைகளும், அளவுகோல்களும் உன்னதமாக இருந்தபோதிலும் அவை செயல்படுத்தப்படும் முறையில் அந்த அமைப்பு அல்லது அந்த விமரிகரின் தன்மை வெளிப்பட்டுவிடுகிறது.

இன்னும் பொதுப்படையான இலக்கிய நோக்குகளை, வெவ்வேறு காலங்களில் அறிஞர்கள் கூறிவிட்டுப்போன இலக்கணங்களை மட்டும் எடுத்துச் சொல்லி சர்ச்சை – கண்டனங்களுக்கு உட்படாமல் நல்ல பெயர் வாங்கிப் போகும் கட்டுரைகளையும், கூட்டங்களிலும் எதிர்காண முடிகிறது. ஆனால் இன்றைய வாழ்க்கையில் இந்த நோக்கங்கள், கொள்கைகளின் பொருத்தம், குறிப்பிட்ட படைப்புகள் – படைப்பாளிகளைப் பொறுக்கி எடுத்துக் கூறுவதில் இருக்கிறது. இனங் கண்டு, தரம் பிரித்துக் கூறுவதில் இருக்கிறது. இனங் கண்டு, தரம் பிரித்துக் கூறுவதில் இருக்கிறது. இத் திசையில், தமிழ் இலக்கியத் துறையில், சுமார் முப்பதாண்டு காலமாக ஒருவர் பெயர் தனித்து நிற்கிறது. அது க.நா.சு.
தமிழிலக்கியம் நசித்துக் கொண்டிருக்கிறது,
சிறுகதை இலக்கியம் தேங்கிவிட்டது என்று பல பெரியோர்கள் அடித்துக் கூறும் இந்த ஆண்டிலும் பெயர் சொல்லிக் குறிப்பிடக்கூடிய முப்பது நாற்பது எழுத்தாளர்கள் போல, க நா சுவும் சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்னர், அவர் தமிழில் எழுத முன் வந்தபோது தன் வரையில் சுய விமரிசனம் செய்து கொண்டு, தன் படைப்பு நன்றாக அமைய வேண்டும் என்ற ஒற்றைத் தட நோக்கத்துடன் தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.

க.நா.சு நன்றாகவே எழுதினார். அன்றிலிருந்து இன்றுவரை அவருடைய படைப்பிலக்கிய எழுத்து ஒரு சீரான தகுதி படைத்ததாகவே இருந்து வந்திருக்கிறது. அவர் தனக்குக் குறைந்தபட்சத் தகுதியாக வைத்து வருவது மிக உயர்ந்த இலக்கியமாகவே இருந்து வருகிறது. அவர் பல மொழி பெரய்ப்புகளும் செய்திருக்கிறார். அவர் மொழிப்பெயர்ப்புக்காகத் தேர்ந்தெடுத்த படைப்புகளும் அவருடைய ஆராய்ந்துணரும் ஆற்றலுக்குச் சான்றாக இருக்கின்றன.

அவர் படைப்பிலக்கியம் படைப்பதில் மட்டும் அன்றிலிருந்து இன்றுவரை கவனம் செலுத்தியிருந்தால் பொது ஜனப் பார்வையில் அவருடைய உருவம் இன்றுள்ளது போலப் பலவிதப் பிரதிவாத கோப, தாப, விரோத உணர்ச்சிகளைத் தோற்றுவிப்பதாக இருந்திருக்காது. வாதப் பிரதிவாத சர்ச்சைகளில் உட்படுத்தப்படாமல் இருப்பதில் நன்மை உண்டா இல்லையோ, செளகரியங்கள் பல உண்டு. ஆனால் க.நா.சு செளகரியங்களை நாடிச் சென்றதாகத் தெரியவில்லை. சர்ச்சைகளை, சர்ச்சைகள் மூலமாகப் பலரின் ஆழ்ந்த விருப்பு வெறுப்புகளைத்தான் நாடிச் சென்றிருக்கிறார். நாடிச் சென்றிருக்கிறார் என்று கூறுவதுகூடத் தவறாக இருக்கலாம். அவருடைய இயல்பு, அவருடைய இலக்கிய உணர்வு, அவருடைய விமரிசனங்கள் காரணமாக அவரைச் சர்ச்சைகளிடத்தில்தான் அழைத்துச் சென்றது.

க.நா.சு தன் தேர்வுகளுக்கு, அவர் பொறுக்கி எடுத்த படைப்புகளுக்கு, அவை சிறந்தது, சிறந்ததல்ல என்று தான் நிர்ணயித்ததற்குக் காரணம் கூறாமல் இருந்ததில்லை. காரணங்கள் கூறுவதைப் பல வகைகளில் செய்யலாம். வெகு எளிதாக, படிப்போரும் உணராவண்ணம் அவர்களுடைய உணர்ச்சிகளை லேசாகத் தூண்டித் தான் கூறுவதே சரி என்று ஒப்புக்கொள்ள வைக்கும் விதத்தில் செய்யலாம். இது பிரசாரகர்களின் வழி. ஆனால் க.நா.சு விஞ்ஞான விளக்கங்களுக்குரிய மொழியில்தான் அவருடைய விமர்சனங்களைச் செய்திருக்கிறார்.

ஓரிலக்கியப் படைப்பு பல அம்சங்கள் கொண்டதாயிருப்பினும் அது வெற்றிகரமானதாக, அதை முழுமையாகப் பார்க்கும்போது அந்த உணர்வைத் தர வேண்டும். ஒரு கைகலப்பில் வெற்றி அடைந்து விட்டு, யுத்தத்தில் தோற்றுப் போவதற்குச் சமமாகும் ஒரு படைப்பு அதன் முழுமையில் வெற்றிகரமாக அமையாதது.
(இன்னும் வரும்)
-அசோகமித்திரன்