கவிதையை வாசிக்கிறார்கள்

 துளி – 200
..

அழகியசிங்கர்

ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை கவிதை வாசிக்கும் நிகழ்ச்சி நடத்துகிறேன்.  அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும்முன் விருட்சம் இதழிலிருந்து ஒரு கவிதை வாசிக்கிறேன்.  பின் ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறேன்.


29.05.2021 அன்று நடந்த 53வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் நான் நாரணோ ஜெயராமன் கவிதைகளை அறிமுகப்படுத்தினேன்.


 டிஸ்கவரி புக் பேலஸ் இக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது.  200 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.150.

ஜெயராமன் வெகு காலம் கவிதைகள் எழுதாமலிருந்தார்.எல்லாவற்றிலும் அவர் ஒரு பற்றற்ற நிலையிலிருந்தார். ஆனால் 2011 லிருந்து 2018 வரை கவிதைகள் எழுதி உள்ளார்.  பின் காலகட்டத்தில் அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் மரணத்தைச் சுற்றிச் சுற்றி வருவதாக நினைக்கிறேன்.  எல்லாக் கவிதைகளையும் சேர்த்துப் புத்தகமாக வந்திருக்கின்றன.


அதில் நான் ரசித்த கவிதையை உங்களுடன் பகிர்கிறேன்.

வெட்டவெளி வேட்கை 

நினைக்கக் கூடாதென்றிருக்கிறேன்

முன்னும் பின்னும்

புரள்வது ஒழிய


பேசக்கூடாதென்றிருக்கிறேன்

புண்படாமல் இருக்க

மற்றும்

புண்படுத்தாமல் இருக்க


இதெல்லாம் நின்றால்

சித்திப்பது எது,

நம்மால் பெயரிடப்படாத

நமக்கு யாரும் கற்பிக்காத

ஒன்று?

( பிப்ரவரி 02, 2015)

சைக்கிள் தினமாம் இன்று..

 03.06.2021
துளி 199


அழகியசிங்கர்

சைக்கிள் தினம் என்பதால் என் அப்பாதான் ஞாபகத்திற்கு வருவார்.
86 வயதுவரை அவர் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தார். அப்பா சைக்கிள் ஓட்டும்போது கொஞ்சம் பயமாக இருக்கும்.


சைக்கிள் அவரை ஓட்டுகிறதா அல்லது அவர்தான் ஓட்டுகிறாரா?
நான் அவர் சைக்கிளை பெடல் பண்ணி ஆரம்பிக்கும்போது பார்க்கவே பயப்படுவேன்.
காலைத் தூக்கிப் போடும்போது எங்காவது தவறி விழுந்து விடுவாரா என்ற பயம் எனக்கு இருக்கும்.


கண்ணை மூடிக்கொண்டு விடுவேன்.


அவர் மேட் இன் இங்கிலாந்து சைக்கிள் வைத்திருந்தார்.  அந்த சைக்கிளுக்கும் எனக்கும் ஒரே வயது. 


அப்பாவைப் பற்றி ஞாபகப்படுத்தும்போது எனக்கும் அந்த சைக்கிளும் ஞாபகத்திற்கு வருகிறது.


அதில் ஏறி ஒருவர் சைக்கிள் ஓட்ட வேண்டுமென்றால் குதிரை மீது ஏறி ஓட்டுவதற்குச் சமம்.
அப்பா அவருடைய சைக்கிளில் மாம்பலம் முழுவதும் வலம் வருவார்.  காய்கறி கடைகளுக்குப் போய் காய்கறி வாங்குவார்.  ஓட்டலுக்குப் போய் வீட்டுக்குத் தெரியாமல் டிபன் சாப்பிடுவார்.  கோயில்களுக்குப் போவார்.


சின்ன வயதில் என் கனவு கூட சைக்கிள்தான்.  ஆரம்பத்தில் நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது சைக்கிளிலேயே எல்லா இடங்களுக்கும் செல்வதாகக் கற்பனை செய்வேன்.  ஒருமுறை நான், மனைவி இருவரும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.  என்னால் அழுத்தி வேகமாக ஓட்ட முடியவில்லை.


ஒரு தருணத்தில் பேலன்ஸ் இல்லாமல் சைக்கிள் விழுந்து விட்டது.  நான் ரொம்பவும் துடித்து விட்டேன்.  என் மனைவி அப்போது குழந்தை பெறும் நிலையிலிருந்தார்.  எதாவது ஆகியிருக்குமோ என்ற பயம்.  நல்ல காலம் ஒன்றுமாகவில்லை. 


டூ வீலர் வாங்கிய பிறகு எனக்குச் சைக்கிள் ஓட்டும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. என்னிடமிருந்த சைக்கிளை என் பெண் ஓட்டினாள்.  என் பையன் ஓட்டினான். 
என்னைவிட்டு சைக்கிளும் ஓடி விட்டது.  இப்போது நினைத்துப் பார்த்தால் என்னால் சைக்கிளே ஓட்ட முடியாது என்று தோன்றுகிறது.

அப்பாவிடம் வருகிறேன்.


  ஒரு திருமண நிகழ்ச்சிக்கு அப்பா சைக்கிளில் கிளம்பினார். சைதாப்பேட்டை.  நெரிசல் மிகுந்த சாலையில் அப்பா போகும்போது தொப்பென்று விழுந்து விட்டார்.  
இடுப்புகிட்டே எலும்பு முறிவு.  அது தெரியாமல் வேதனையும் நாற்காலியில் தெருவில் வலியுடன் உட்கார்ந்திருந்தார்.  அப்போது எலும்பு முறிவு என்று தெரியவில்லை. 


உடனே மருத்துவ மனைக்கு அழைத்துக்கொண்டு போனோம்.  மருத்துவ மனையில் எக்ஸ்ரே பார்த்தபோது எலும்பு முறிவு என்று தெரிந்தது.
மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.  அப்பப்பா.  கொடுமை.
இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும்.  அப்பாவுக்கு சுகர், பிபி எதுவும் கிடையாது.  எளிமையான மனிதர்.  எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது.  வெற்றிலை பாக்குக் கூட போட மாட்டார்.


அதிலிருந்து மீண்டு வந்து விட்டார்.  அது ஒரு அதிசயம்.  அசாத்தியமான முயற்சியில் கூடிய சீக்கிரம் நடக்க ஆரம்பித்தார். ஆனால் அன்று முதல் அவர் சைக்கிளைத் தொடவில்லை. சைக்கிளை நன்கொடையாகக் கொடுத்துவிட்டார். 


என் திருப்திக்காகச் சைக்கிளைப் பற்றி இரண்டு கவிதைகள் எழுதினேன்.  ஒரு கதை எழுதினேன்.  என் கதையில் மேட் இன் இங்கிலாந்து என்று அப்பாவின் சைக்கிள் பெயர் அடிக்கடி வரும்.


இதோ அப்பா இறந்துபோய் 4 ஆண்டுகள் ஓடிவிட்டன.


என் சைக்கிள் கவிதையை இங்குத் தருகிறேன்.      

சைக்கிள்கள்


தெருவில்  சில சைக்கிள்கள்

ஞாபகக் குதிரையேறி

பால்ய வீதிக்குச் சென்றேன்

ஏறவும் இறங்கவும் தெரியாமல்

திசைத் தெரியாத திசைக்கு ஓடியது

குட்டிச் சைக்கிள்

பார்த்தவர்களை 

உற்சாகக்  குரல் கொடுத்துக் கத்தியது

பள்ளத்தில் வீழ்ந்தது

வளைந்தது முன் சக்கரம்

கசிந்தது ரத்தம் முட்டிக்காலில்

வல்லமை காட்ட

பின்னால் இழுத்துச் சென்றவளுடன்

மோதியது சுவரில்

பயத்தின் அலறல் ஒலித்தது எங்கும்…


கனவில் உலவிய இன்னொரு சைக்கிள்

எங்கும் நிற்காத இடங்களுக்கு பறந்தது

பெடலை அழுத்தாமல்

தாண்டிய குளத்தைத் தாமரை கண்டது

மலைமுகடுகளில் ஏறிக்குதித்தது

பனிச்சறுக்கில்

வழுக்கி வழுக்கிப் போயிற்று….

விருட்சம் நிகழ்த்தும் 54வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 05.06.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு.

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 54வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 05.06.2021ல் சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்

பத்துக் கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசிப்பதோடு அல்லாமல் கவிதை எழுத வேண்டிய சூழல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்தும் பேசுகிறார்கள்.

வாருங்கள் உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும்54வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

கூட்டத்தைச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த முத்து சந்திரசேகருக்கு நன்றி.

Time: Jun 5, 2021 18:30 IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/87840723335…Meeting ID: 878 4072 3335Passcode: 858460US02WEB.ZOOM.USJoin our Cloud HD Video MeetingLikeCommentShare

0 Comments

ActiveWrite a comment…

கவிதையும் ரசனையும் – 17 – 2

அழகியசிங்கர்

(தொடர்ச்சி)

நான் இந்த வகைமையில் கவிதையைப் பிரிப்பது கூட சரியா என்பது தெரியவில்லை. ஒரு கவிஞனின் ஆழ்ந்த அடிமனதில் அவனை அறியாமலேயே தென்படும் நிகழ்ச்சிகளைக் கவிதை விவரிக்கிறதா என்று சொல்லத் தெரியவில்லை.

பெரும்பாலான கவிதைகள் ஆர்ப்பாட்டமாகவும், கருத்துக் குவியலாகவும், ஆபாசமாகவும் இருக்கின்றன. ஆனால் உள்முகத் தேடல் கவிதை வித்தியாசமாக இருக்கிறது. இது குறித்து யாராவது யோசித்தார்களா என்பதும் தெரியாது. நான்தான் யோசனை செய்து சொண்டிருக்கிறேன். மற்றவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?

நான் அதைப் பற்றி கவலைப் படப்போவதில்லை. பலவிதமாகக் கவிதைகள் எழுதப்படுகின்றன. இந்த முறை நடந்த புத்தகக் கண்காட்சியில் நூற்றுக் கணக்கான கவிதைப் புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. வழக்கம்போல் கவிதைப் புத்தகத்தை ஒரு விஸிட்டிங் கார்டு மாதிரி பயன்படுத்திக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியமான நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

யாரும் எந்தக் கவிதைப் புத்தகத்தையும் வாங்கத் தயாராக இல்லை. அதற்குக் காரணம் கவிதை எழுதுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். வாசகர்கள் இல்லை. .

தேவதச்சன் என்ற கவிஞரின் கவிதைப் புத்தகம் கூட தெரியாமல் போய்விட வாய்ப்புள்ளது. பெரும்பாலான கவிதைகள் உள்முகத் தேடல் கவிதைகளாக இருந்தாலும், தேவதச்சனின் குறும்பான கவிதைகளும் பல இந்தப் புத்தகத்தில் உண்டு.


நகத்தை


நகத்தை கடிக்கும்

பெண்ணே

என்

அகத்தையும் சேர்த்து

கடிக்கிறாயே””


பழத்தைச் சாப்பிட்டுவிடு

பழத்தைச் சாப்பிட்டுவிடு

நாளைக்கென்றால் அழுகிவிடும்

என்றாள் அம்மா

வாங்கி விண்டு உண்டேன்

இன்றை

இக் கவிதையில் இன்றை என்று முடிக்கும்போது கவிதையின் அர்த்தம் மாறிப்போய் விடுகிறது. யோசிக்க வைக்கிறது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேவதச்சன் கவிதைகள் குறித்து எழுதியதையும் இங்கே கவனிக்கப்படும்.

‘தேவதச்சனின் கவிதைகள் தமிழ் வாழ்வியலின் நுட்பமான பதிவுகளைக் கொண்டிருக்கின்றன. மிக அபூர்வமான கவித்துவப் படிமங்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகின்றன. தத்துவச் சார்பு கொண்டது போன்ற தோற்றம் கொண்டிருந்தபோதும் இக்கவிதைகள் வாழ்வைக் கொண்டாடுகின்றன. தினசரி வாழ்வின் மீது இத்தனை ருசிகொண்ட கவிஞன் வேறு எவருமிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேவதச்சனின் கவிதைகள் தினசரி வாழ்வின் விசித்திரங்களையும் அற்புதங்களையும் மிக அண்மையில் சென்று ரசிக்கின்றன. ‘

எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் கூற்று முற்றிலும் உண்மை.

கவிதை எழுதுவதைப் பற்றியே தேவதச்சன் இரண்டு மூன்று கவிதைகள் எழுதி உள்ளார்.


முகம்


கவிதையே

உனக்குத் தெரியுமா

நான் உன்னை

வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று

உன்னை வாசிக்காமல், மேஜையில் நீ

மூடிக் கிடக்கும்போது

நீ தொணதொண வென்று“

ஏதும் சொல்கிறாயா,

என் அம்மாவைப் போல

கவிதையே! நீ யார்

சென்னையைப் போல

இறக்கை முளைத்த நகரமா நீ

அல்லது

ஆள் நடமாட்டம் அற்ற

எங்கள் சிற்றூரின்

மதியவேளையா

அல்லது

அதிகாலைப் பறவையின்

உற்சாகப் பேச்சரவமா

அங்கங்கே சிதறிக் கிடக்கும்

கவிதைப் புத்தகங்களே!

என் குடும்ப அட்டையில்

உன் பெயர் இல்லைதான்

எனினும்

என் வீட்டை எப்போது

புகைப்படம் எடுத்தாலும்

சிரித்தபடி தெரிகிறது

உன் முகம்.

இது ஒரு உள்முகத் தேடல் கவிதை. இதைப் படிக்கும்போது நமக்குக் காரணமில்லாத வியப்பு ஏற்படுகிறது. இந்தக் கவிதையை எழுதிக்கொண்டிருக்கும்போது தேவதச்சனுக்கும் காரணம் புரியாத வியப்பு ஏற்பட்டிருக்கும். அல்லது இந்தக் கவிதையை எப்படி எழுதி எப்படி முடிக்கப் போகிறோம் என்று தெரியாமலிருக்க வேண்டும். இக் கவிதையுடன் தொடர்புடைய பல உள்முகத் தேடல் கவிதைகளைக் கூறிக்கொண்டே போகலாம்.

‘பூவுடன் உரையாடல்’ என்ற பெருந்தேவி கவிதையைப் பார்க்கலாம்.


உன்னிலிருந்து நீ எப்போது வெளியேறப்போகிறாய்
நடைபாதையில் ஓர் அங்குல நீளச் செடியின்
வயலட் பூ என்னைக் கேட்டது
ஒவ்வொரு வசந்தத்திலும் இப்படி
எடக்குமடக்காகக் கேட்பது அதன் வழக்கம்தான்
எப்படி வெளியேறுவது என்றேன் சின்னப் பூவிடம்
எங்களைப் பார் என்றது தலையை ஆட்டி ஆட்டி
பக்கத்திலிருந்த இன்னும் குட்டிப் பூக்களெல்லாம்
என்னைப் பார்த்துச் சிரித்தன
ஒரே அவமானமாகிவிட்டது
இனிமேல்
தடுக்கிவிழுந்தாலும் சரி
அண்ணாந்து பார்த்து
நடக்கவேண்டியதுதான்
(அழுக்கு சாக்ஸ்)


அடுத்து அழகியசிங்கரின் ‘ஸ்ரீவித்யா பாட்டு பாடுகிறாள்’ என்ற கவிதையை எடுத்துக்கொள்ளலாம்.


எல்லோரும் சமையல் செய்கிறார்கள்
இந்த வீட்டில் ஸ்ரீவித்யா
பாட்டுப்பாடிச் சமையல் செய்கிறாள்
சாம்பாருக்கும் ரசத்திற்கும் தெரியுமா?
அவள் பாட்டுப் பாடுகிறாளென்று
பேத்தி வீரிட்டுக் கத்துகிறாள்
அவள் ஓடிப்போய் சமாதானம் செய்கிறாள்
அடுத்த அறையில்
கணவன் போனில் பேசிக்கொண்டிருக்கிறான்
அவளுக்குப் புரியவில்லை
அவன் என்ன பேசுகிறானென்று
ஸ்ரீவித்யா பாட்டுப்பாடியபடி
சமையல் செய்து கொண்டிருக்கிறாள்
தட்டில் சாதத்தை வைக்கும்போதுதான்
சாம்பாரில் ரசத்தில் உப்பு இருக்கிறதா என்று
தெரியும்
ஏனென்றால் அவை அவளுடைய பாட்டைக்
கேட்பதில்லை.


இப்படியெல்லாம் விவரித்துக்கொண்டே போகலாம். உள்முகத் தேடல் கவிதைகளை.

கவிதையும் ரசனையும் – 17 –1


தேவதச்சனின் முழுத் தொகுப்பு


அழகியசிங்கர்


நான் இப்போது எடுத்துக்கொண்டு எழுதப்போகும் கவிதைப் புத்தகத்தின் பெயர் ‘மர்ம நபர்’ என்ற தேவதச்சனின் முழுத் தொகுப்பு.
இது தேவதச்சனின் முழுத் தொகுப்பு. 350 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இத் தொகுப்பு ஏப்ரல் 2017ல் வெளிவந்தது. ஆனால் இன்னும் தேவதச்சன் கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பார்.
கவிதைகளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டு கவிதைகள் எழுதுபவர் தேவதச்சன்.
பெரும்பாலும் கவிதைகள் படிக்கும்போது எத்தனைக் கவிதைகளை ஒரு புத்தகத்தில் என்னால் ரசிக்க முடிகிறது என்று யோசித்துப் பார்ப்பேன்.
பலருடைய கவிதைப்புத்தகங்களில் என்னால் பெரும்பாலான கவிதைகளை ரசிக்க முடியவில்லை.
கவிதைகள் எழுதும் பலருக்கும் எதற்குக் கவிதை எழுத வேண்டுமென்று தெரிவதில்லை. கவிதை மாத்திரம் அவர்களுக்குத் தானாகவே வந்து விடுவதாக நினைக்கிறார்கள்.
அதாவது கவிதை அவருடைய பழக்கத்திற்கு ஆளாகாமல் கவிதை செயல்படுவதாக நினைக்கிறேன்.
ஆனால் தேவதச்சன் உணர்ந்து கவிதை எழுதுகிறார். இத்தனை வரிகள்தான் கவிதைக்கு என்று முன்னதாகவே நினைக்கிறார். அல்லது அவருடைய கவிதைகள் குறிப்பிட்ட வரிகளுக்குப் பின்னால் போகவிடுவதில்லை.
மேலும் அவர் கவிதைகளைப் படிக்கும்போது ஒவ்வொரு முறையும் ஒரு கவிதையைப் படித்துவிட்டுக் கடக்கும்போது திரும்பவும் கடந்து போன கவிதைக்கே மனம் திரும்பப் போய் விடுகிறது ஏன் படிக்கிறோம் என்ற அலுப்பே ஏற்படுவதில்லை.
அவர் கவிதைகள் உள்முகத் தேடல்கவிதைகள். இன்று பல வகைமைகளில் கவிதைகள் எடுத்துக்கொண்டு வரலாம். எல்லா வகைமைகளிலும் கவிதைகளைப் படிக்கப் படிக்க அலுத்துப் போக நேரிடும்.
ஆனால் தேவதச்சன் கவிதைகள் அலுப்பதில்லை. ஏனென்றால் அவருடைய கவிதைகள் உள்முகத் தேடல் கவிதைகள்.
கவிதைகள் எழுதுபவர்கள் எல்லோரும் அவர்களை அறியாமலேயே உள்முகத் தேடல் கவிதைகள் எழுதியிருப்பார்கள். சில கவிதைகள் தவிர சாதாரணமாகப் பல கவிதைகள் எழுதியிருப்பார்கள்.
ஒரு கவிதைப் புத்தகம் முழுவதும் பெரும்பாலும் உள்முகத் தேடல் கவிதைகள் எழுதியிருப்பவர் தேவதச்சன்.
பெரும்பாலோர் கவிதைகள் என்ற பெயரில் கருத்துக்களைக் கொட்டியிருப்பார்கள். சிலர் காதல் வசப்பட்டு காதல் கவிதைகளாக எழுதி இருப்பார்கள்.
அப்படி எழுதுபவர்கள் கூட உள்முகத் தேடல் கவிதைகளை அவர்களை அறியாமல் எழுதியிருப்பார்கள்.
பிரமிளின் ஒரு கவிதையை எடுத்துக்கொள்ளுங்கள்.

வண்ணத்துப்பூச்சியும் கடலும்

சமுத்திரக் கரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன் குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி.
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல்நோக்கிப் பறந்து
நள்ளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது


பிரமிளின் இந்தப் பிரபலமான கவிதை ஒரு உள்முகத் தேடல் கவிதை. 1980ஆண்டு எழுதி உள்ளார். எந்தத் தருணத்திலும் எப்போதும் இந்தக் கவிதையை ஒருவர் படித்துக்கொண்டிருக்கலாம். கொஞ்சங்கூட அலுக்காது.


இதில் கவிதை கூறும் ரகசியம் என்ன என்பதைக் குறித்து ஒருவர் ஆச்சரியப்படாமலிருக்க முடியாது. தேர்ந்த வாசகர் இந்தக் கவிதையைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பதோடல்லாம் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டாடவும் செய்வார்.
‘ஆலிலையும் நெற்கதிரும்‘ என்ற சச்சிதானந்தன் என்பவரின் கவிதைத் தொகுப்பை சிற்பி மொழிபெயர்த்துள்ளார்.


அந்தத் தொகுப்பைப் பார்த்துக்கொண்டு வரும்போது ஒரு உள்முகத் தேடல் கவிதைத் தென்பட்டது. பொதுவாக எல்லாக் கவிதைகளும் சிறப்பாக எழுதப் பட்டிருந்தன. ஒரு கவிதை மட்டும் விசேஷக் கவனமாக என் மனதில் பட்டது. மறக்கப்பட்ட குடை என்ற தலைப்பில் அக் கவிதை எழுதப்பட்டிருந்தது.
மறக்கப்பட்ட குடை


மறக்கப்பட்ட குடை

மழையை நினைத்துப் பார்த்தது

இடியோசை கேட்டுத் தோகை விரித்தது

மலைக் காக்கைபோல

குன்றுகளின் மேல் பறந்து வந்து இறங்கியது

எருமைபோல வயல்

வரப்பில் ஆடி நடந்தது “

இப்போது சிறகு விரிக்க முடியாமல்

மூலையில் இருக்கையில்

எட்டுக்கால் பூச்சி

நரைத்த உடலில்

வலை நெய்ய, மரத்துப் போகிறது


மேகங்கள் மூடிய ஒரு நாளில்

ஒரு கை அதை விரிக்கும்.

மழையின் நடனத்தில்

கருத்த இளமை திரும்பிவரும்,

குடைகளின் திருவிழாவில்

நெற்றிப் பட்டம் கட்டிக் கொண்டு.


இக் கவிதையைப் படிக்கும்போது என்ன தோன்றுகிறது? இது ஒரு உள்முகத் தேடல் கவிதையாகத் தோன்றவில்லையா? மறக்கப்பட்ட குடை என்னன்வோ யோசனைப் பண்ண வைக்கிறது.


ஒரு உள்முகத் தேடல் கவிதை வாசகனைக் கவர்ந்தால் போதும். முழு அர்த்தமும் தெரிய வேண்டும் என்பதில்லை.


கவிஞன் தன்னை அறியாமல் எழுதுகிற கவிதைதான் அது.


இன்னொரு கவிதை. ஞானக்கூத்தன் எழுதியது.

பட்டாம்பூச்சி என்ற கவிதை

மஞ்சள் நிறமுடைய பட்டாம் பூச்சி

தோட்டத்தில் நுழைந்தது

சமையலறையில் நுழையும் மாட்டுப்பெண் போல

வெண்டை பூத்திருந்தது

கத்திரி பூத்திருந்தது

அவரை பூத்திருந்தது

கட்டிவிடப்பட்ட கயிறுடன்

புடலை தொங்கிக் கொண்டிருந்தது

பட்டாம் பூச்சி ஒவ்வொரு பூவின் மேலும்

பறந்தது, உட்கார்ந்தது.

அடுத்த பூவை நாடிற்று

உதவி செய்யவா என்றேன்

சிறகை வேகமாய் வீசி பறந்து போயிற்று


உள்முகத் தேடல் கவிதைக்கு மேலே குறிப்பிடப்பட்ட ஞானக்கூத்தனின் கவிதையும் உதாரணம். இப்படிப் பலருடைய கவிதைகளை உற்று நோக்கினால் உள்முகத் தேடல் தென்படாமல் இருக்காது. இந்த உள்முகத் தேடல் கவிதை அபூர்வமாகத்தான் பெரும்பாலான கவிஞர்களிடம் தென்படும்.


இதில் தேவ தச்சன் விதிவிலக்கு.

அவருடைய ஒவ்வொரு கவிதையும் அபூர்வமான தன்மை உடையதாக இருக்கிறது.


முழு மரம்

குழந்தை நெளிந்துகொண்டிருக்கிறான். அம்மா

இன்னொரு கையில் தொலைபேசியில்

பேசியபடி இருக்கிறாள்.

தொலைபேசியையும் கீழே

வைக்க முடியவில்ல்லை

குழந்தை நெளிந்தபடி

வழுக்கத் தொடங்குகிறான்.

ஒரு இலை“

நெளிந்து

உதிரும்போது

முழு மரமும்

சாய்ந்து விழுகிறது.


எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் ஒரு உஉள்முகத் தேடல் கவிதையை எழுதியிருக்கிறார் தேவதச்சன். வாசகரை ஊகிக்க வைக்கிறார். அல்லது திகைக்க வைக்கிறார். நான் படித்த மர்ம நபர் என்ற புத்தகத்தில் ஒவ்வொரு கவிதையும் படிக்கும்போது ஒருவித பரவச உணர்ச்சி .ஏற்படுகிறது இன்னும் அவருடைய கவிதைகளைப் பார்க்கலாம்.

(இன்னும் வரும்)

(திண்ணை இணைய வார இதழில் (23.05.2021) வெளி வந்துள்ளது)

சுந்தர ராமசாமியின் பிறந்தநாள் இன்று

துளி 198

அழகியசிங்கர்

ஆண்டு ஞாபகமில்லை. சுந்தர ராமசாமி சென்னையில் அவர் மனைவியுடன் ஏதோ விழாவிற்கு வந்திருந்தார். அவரை நானும், சிபியும் போய்ப் பார்த்தோம். விருட்சம் இலக்கியக் கூட்டத்தில் பேச முடியுமா என்று கேட்டேன். ஒப்புக்கொண்டார். வீட்டிற்குக் கூப்பிட்டேன். வருகிறேன் என்றார். அவரும் அவர் மனைவியும் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டிலிருந்த என் அப்பா, மாமியாரிடம் அறிமுகப் படுத்தினேன். இப்போதைய காலமாக இருந்தால் செல்பி எடுத்துக்கொண்டிருப்போம். அப்போதெல்லாம் அதெல்லாம் தோணக் கூட இல்லை. மாலைதான் விருட்சம் கூட்டம். வழக்கம்போல் கூட்டம் ஆரம்பிக்கும் முன் பதற்றமடைவேன். அன்றும் அப்படித்தான். சுந்தரராமசாமி காரில் வந்தார். கூடவே சிபிச்செல்வன். நான் பைக்கில் கிளம்பினேன். கொஞ்ச தூரத்தில் என் பைக் பள்ளத்தில் இறங்கி நான் கீழே விழுந்தேன். காரில் இருந்தபடி சுந்தர ராமசாமி இதைக் கவனித்து விட்டார். சிபியை உடனே போய்ப் பார்க்கச் சொன்னார். உடனே சுதாரித்துக்கொண்டேன். அன்று கூட்டம் சிறப்பாக நடந்தது. அவர் பேசுவதை ஆடியோவில் பதிவு செய்திருந்தேன். இப்போது அளிக்கிறேன்.….

1Pachaiyappan Ge

விருட்சம் நிகழ்ந்தும் 53வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

விருட்சம் நிகழ்ந்தும் 53வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 29.05.2021 அன்று நடந்தது. காணொளி காட்சி.

விருட்சம் நிகழ்ந்தும் 53வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி29.05.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு

. . அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 53வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. நாளை (சனிக்கிழமை) மாலை 6.30மணிக்கு 29.05.2021ல் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த முறை கவிதையைப் பற்றி உரையாடல் நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறேன். சில கேள்விகளை எழுப்பி அதற்குத் தகுந்த பதில்களை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். விருட்சம் நிகழ்ந்தும் 53வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

29.05.2021 Zoom MeetingTime: May 29, 2021 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/89463130247…

Meeting ID: 894 6313 0247Passcode: 432697

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 12வது கதை வாசிக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை 28.05.2021 அன்று மாலை 6.30 மணிக்கு.

27.05.2021

அழகியசிங்கர்

ஜெயகாந்தன், ஆதவன்  என்ற இரு கதைஞர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து 8 நண்பர்கள் கதைகளின் சிறப்புகளைச் சொன்னார்கள். 
எல்லோரும் அவசியம் கலந்து கொள்ளவும்.

நூற்றாண்டில் 3 புத்தகங்கள்


அழகியசிங்கர்


சமீபத்தில் என் நண்பர் கு.மா.பா. திருநாவுக்கரசு, புகழ்பெற்ற அவருடைய தந்தையாரின் 3 புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளார். இந்த 3 புத்தகங்களில் நான் அதிகமாக விரும்பியது கு.மா.பா வின் திரைப்படப் பாடல்கள். 1960 ஆண்டில் குழந்தைகள் கண்ட குடியரசு என்ற படத்தில் குமாபாவின் பாடலான


சிட்டு சிட்டு சிட்


என்ற பாடலை எப்படிப் பாடியிருப்பார்கள் என்பதை அறிய ஆசை. மேலும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த ஆவணமாக இருக்குமென்று தோன்றுகிறது. அவருடைய அம்பிகாபதி என்ற படத்தில் எழுதிய புகழ் பெற்ற பாடலான ‘மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே…கண்ணே’ என்ற பாடல் எப்போதும் எல்லோருடைய மனதிலும் இருக்கும்.1957ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டு வரை அவர் இயற்றிய 256 பாடல்களை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கம் போல் சில பாடல்கள் பதிவு செய்யக் கிடைக்கவில்லை.
அவருடைய மூன்று புத்தகங்களையும் வழக்கம்போல் நடைபெற்ற கவிதை வாசிக்கும் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினேன். எல்லோரும் புத்தகங்களை வாங்குங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.


பாடல்களைத் தவிர அவருடைய சிறுகதைகள், அவருடைய வாழ்க்கை வரலாறும் புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். தொடர்புக்கு : திருநாவுக்கரசு – 9840634279