இன்னும் சற்று மேம்பட்டதாக இன்னும் சிறிது சுரத்துள்ளதாக இன்னும் கொஞ்சம் உவப்பானதாக இன்னும் எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம் என்கிறீர்கள். இந்த ஒரு சிறு வாழ்வில் இந்தளவாவது இயன்றதே என்கிறேன். இதையும் எப்படியாவது புரிந்து கொள்ளுங்கள் ஏனைய பிற யாவற்றையும் போல.o
Author: virutcham
தெரு நாயின் சாயல் கொண்டவன் பற்றிய குறிப்புகள்
சாம்பல் நிற பறவைகள் இரண்டு கவிதைநோட்டின் அட்டையில் பறந்துகொண்டிருந்தன. குழந்தையொன்றை ஒப்படைப்பது போல் மிகுந்த கவனத்துடன் அவரிடம் அந்த நோட்டை இவன் ஒப்படைத்தபோது இருள் கவிய துவங்கியிருந்தது. திருவல்லிக்கேணியின் மிகப் பிரபலமான அந்த தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்தியில் எங்கோ ஒலிக்கும் பாடலின் வரிகள் காற்றில் மிதந்து வந்தன. பரிட்சைக்காக காத்திருக்கும் மாணவனின் படபடப்புடன் இவன் அமர்ந்திருந்தான் . சுற்றிலுமிருந்த புத்தகங்களை கண்கள் துழாவியபோதும் எதிலும் லயிக்கவில்லை மனம். மின்விசிறியின் சத்தம் பெருகி பெருகி இவனை விழுங்கிக்கொண்டிருந்தது. கவிதைத்தாள்களை வாங்கியவர் முதல் பக்கத்தை பார்த்துவிட்டு கேட்டார்
“கிருஷ்ணமூர்த்தி ஏதோ கதை புஸ்தகம்னு சொன்னான்..”
“இல்ல சார் கவிதைகள்.புதுக்கவிதைகள் “ இவன் பதிலிட்ட மறுகணம் அவரது தொலைபேசி அலறியது. இவனது இருத்தல் பற்றிய பிரக்ஞையின்றி அழைப்பில் மூழ்கிப்போனார் அவர். தெருவை வெறித்துக்கொண்டிருந்தவன் பூ விற்கும் பெண்ணொருத்தி கூடை நிறைய மஞ்சள் ரோஜாக்கள் சுமந்து செல்வதை கண்டு மெல்லியதாய் புன்னகைத்தான்.லேசான தூறலில் அழகாகிக்கொண்டிருந்தது அந்தி. மழைத்துளியில் நனைந்த ரோஜா இதழ்களின் செளந்தர்யத்தில் தொலைய ஆரம்பித்தபோது தர்ஷிணியின் ஞாபகம் வந்தது.
—–o0o——
ஆழ் மனதின் வெடிப்பில் சிதறிய துகள்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரிட்டு ஏதேதோ கனவுகளில் வசித்துக்கொண்டு மிகத்தீவரமாக கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த போது முதுகலை படிப்பதற்கு சென்னைக்கு வந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. கல்லூரி விடுதியில் கிடைத்த நேரம் முழுவதும் கவிதைக்குள் மூழ்கிக்கிடந்தான். கேலியும் கிண்டலும் கலந்திருக்கும் கல்லூரி வாழ்வை தவிர்த்துவிட்டு எப்போதும் கவிதை நூல்கள் வாசிப்பதிலும் எழுதுவதிலுமே விருப்பமுற்று கிடந்ததால் சக மாணவர்கள் மத்தியில் ஒன்றுக்கும் லாயக்கற்றவனாக அறியப்பட்டான். பேண்ட் சட்டை போட்ட புலவன் வருகிறான் என்கிற பரிகாசத்தின் நடுவிலும் கவிதையும் அவளும் மட்டுமே வாழ்க்கை மீதான நம்பிக்கையை அர்த்தப்படுத்திபடி இருந்தார்கள். அவள் தர்ஷிணி. வகுப்புத்தோழி. ஒவ்வொரு கவிதையின் பிரசவத்தின் போதும் குழந்தையாக மாறி குதூகலத்துடன் கவிதைகளின் கரம் பிடித்து நடப்பவள்.
கவிதை என்றால் காததூரம் ஓடும் நண்பர்கள் கூட காதல்கடிதமெழுத இவன் அறைக்கு வரும்போதெல்லாம் மனதெங்கும் உற்சாகமும் பெருமையும் ஒன்றுசேர்ந்து ஆனந்த தாண்டவமாடும். யாரோ ஒருத்திக்கென எழுதப்படும் காதல்கடிதங்களாக இருப்பினும் எழுதும்போதே தனக்குள் இழுத்துக்கொள்ளும் கவிதைக்காதலியின் மடியில் முகம்புதைப்பது பேரானந்த அனுபவமாக தோன்றும்.
நண்பர்களுக்காக எழுதுகின்ற காதல்கடிதங்களையும் அதை எழுதுகின்றபோது அருகில் பயபக்தியுடன் காத்திருக்கும் நண்பர்களின் முகபாவங்களை பற்றியும் தர்ஷிணி ரசித்துக் கேட்பாள். தனக்கு வந்த காதல் கடிதங்கள் எதுவும் இதைப்போலில்லை என்றும் எழுத்துப்பிழைகள் தாங்கி வருகின்ற அபத்தக் கடிதங்களே அதிகம் என்றும் அவள் சொல்லும்போது சிரித்துக்கொள்வான். தர்ஷிணி போன்ற எட்டாவது அதிசயங்களுக்கெல்லாம் கடிதமெதற்கு? கண்களை உற்று நோக்கி எப்போதும் உன்னுடன் வாழவிரும்புகிறேன் என்ற ஒற்றை வரி போதாதா? காதல் கடிதங்கள் வெறும் உணர்ச்சிக்குப்பைகள்.போலித்தனங்களும் பொய்களும் கொட்டிக்கிடக்கும் கடிதங்களைவிட தீர்க்கமான பார்வை மட்டுமே நேசத்தை பகிர்ந்துகொள்ள உன்னத வழி. யதார்த்தங்களை மீறுபவர்களே பக்கம் பக்கமாக கடிதமெழுதி காத்திருக்கிறார்கள். தன் காதலிக்கு கடிதம் எழுத மற்றொருவனை தேடும் காதலனை சிரச்சேதம் செய்துவிடும் சட்டம் ஏதுமில்லையா? இந்தக் கேள்விகளையெல்லாம் தர்ஷிணியிடம் இவன் சொன்னபோது “ உனக்கு முத்திப்போச்சு ரொம்ப அதிகமா யோசிக்கிறடா” சிரித்துக்கொண்டே சொன்னாள்.
—–o0o——
சில நூறு கவிதைகள் சேர்ந்தவுடன் தர்ஷிணிதான் முதலில் அந்த யோசனையை இவனிடம் பகிர்ந்தாள். வகுப்புக்கு வெளியே சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தபடி “நீ ஏன் ஒரு கவிதை புத்தகம் வெளியிடக்கூடாது?” அவள் கேட்டபோது மனதெங்கும் பரவசநிலை படர்வது போலிருந்தது. அந்தக் கேள்வியே இவனுக்கு அதிகம் பிடித்திருந்தது. சட்டென்று மலர்ந்த மொட்டுபோல் உடன் மலர்ந்து புன்னகைத்தான்.
“என் கவிதைகளை யாரு வெளியிடுவா?”
“நீ ட்ரை பண்ணி பாரேன் டா. கண்டிப்பா வெளியிடுவாங்க” அவள் நம்பிக்கையை கலைக்க விரும்பாமல் சரியென்று தலையாட்டிவிட்டு விடுதிக்கு வந்து மொட்டை மாடியில் வானம் பார்த்து கிடந்தான். நட்சத்திரங்களின் காதுகளில் கவிதை நூலை தான் வெளியிடப்போகும் செய்தியை சொன்னபோது இவனுடல் சிலிர்த்தடங்கியது. சத்தமிட்டு கத்தவேண்டும் போலிருந்தது.பொங்கி வழிகின்ற சந்தோஷத்துடன் அறைக்கு திரும்பியவன் எழுதியதில் சிறந்த ஐம்பது கவிதைகளை தேர்ந்தெடுக்கும் வேலையில் இறங்கினான். பின்னிரவில் சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுத்த நிம்மதியில் கவிதை நோட்டை நெஞ்சில் கவிழ்த்தபடி உறங்கிப் போனான்.
—–o0o——
தொலைபேசி அழைப்பிலிருந்து மீண்டவர் இவனது கவிதை நோட்டை புரட்டினார்.நான்கு நிமிட இடைவெளியில் கவிதை நோட்டிலிருந்து நிமிர்ந்தவரின் கண்களை உற்றுப் பார்த்தபடி இருந்தவனுக்கு மிச்சமிருந்த நம்பிக்கையும் அறுந்து விழுந்தது. உதடு பிதுக்கலுடன் கவிதை நோட்டை திருப்பித் தந்தவர் கேட்டு கேட்டுப் புளித்துப்போன அதே வார்த்தைகளை உச்சரித்தார்
“யாரு தம்பி கவிதை புக் வாங்குறா.. ஐம்பது பிரதி வித்தாலே பெரிய விசயம்..ஏதாவது நாவல் கீவல் இருந்தா கொண்டாப்பா” இவனது பதிலை எதிர்பாராமல் மீண்டும் தொலைபேச ஆரம்பித்துவிட்டார்.
வலித்தது.சத்தமிட்டு அழவேண்டும் போலிருந்தது.முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு நியோன் விளக்கின் வெளிச்சம் விழுந்துகொண்டிருந்த அத்தெருவில் திரும்பி நடக்க ஆரம்பித்தான். நான்கு நிமிடத்தில் எப்படி நாற்பது பக்க கவிதைகளை இவர் வாசித்திருக்க முடியும்? கொடும் இரவுகளில் கசிகின்ற மெளனத்தின் துணையுடன் தானெழுதிய உயிர்க்கவிதைகள் நான்கு நிமிடத்தில் மறுதலிக்கப்பட்டது தீயென சுட்டது. பச்சை நிற குப்பைத்தொட்டியொன்றின் அருகில் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வேகமாக வீடு திரும்பினான்.
—–o0o——
தர்ஷிணி எம்.எஸ் படிப்பதற்கு அமெரிக்கா போய் விட்டிருந்தாள். வேலை தேடுதல் ஒன்றே இலக்காக இவன் திரிந்தபோதும் எந்தவொரு வேலையும் கிடைத்துவிடவில்லை. வேலையின்மையின் வலியிலும் நண்பர்களற்ற தனிமையிலும் கவிதை மட்டுமே வலிமிகுந்த பொழுதுகளில் உடனிருந்தது.
துயரத்தின் கரங்கள் இவனை இறுக்கிய ஓர் இரவில் உக்கிரத்துடன் கவிதை எழுதிக்கொண்டிருந்தபோதுதான் அச்சம்பவம் நிகழ்ந்தது. அறைக்குள் நுழைந்த அப்பா இவன் கவிதை எழுதிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அம்மாவிடம் கத்த ஆரம்பித்தார் “எப்ப பாரு கவிதை கிறுக்கிட்டு கிடக்கானே உம் பையன் இத வெச்சு நாக்கு வழிக்க கூட முடியாதுன்னு அவன் கிட்ட சொல்லுடி. ஒரு வேலை வாங்க துப்பில்ல இவனெல்லாம் கவிதை எழுதி என்னத்த கிழிக்க போறான்?” முதன் முதலாய் இதயம் கிழிபட்டது அன்றுதான். நாக்கு வழிக்கக்கூட லாயக்கற்ற கவிதைநோட்டை சுவற்றில் எறிந்துவிட்டு விடுவிடுவென்று வீட்டை விட்டு வெளியேறினான். அதென்ன கவிதை எழுதுபவன் என்றால் இத்தனை கேவலம்? ஏனிந்த அவலம்? கோபத்தில் எங்கு போவதென்று தெரியவில்லை. வீட்டிற்கு அருகிலிருந்த தியேட்டருக்குள் நுழைய எத்தனித்தபோது அலைபேசி சிணுங்கியது. அமெரிக்காவிலிருந்து தர்ஷிணி அழைத்திருந்தாள். கோபத்தை மறைத்துக்கொண்டு போலியாய் தான் சந்தோஷமாக இருப்பதாகவும் விரைவில் வேலை கிடைத்துவிடுமென்றும் சொல்லிக்கொண்டிருந்தான். பேசிமுடிந்தவுடன் மனம் லேசாக ஆனது போலிருந்தது.என் நிரந்தர தோழிகள் கவிதையும்,தர்ஷிணியும் மட்டும்தானென்று முணுமுணுத்தன உதடுகள். வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டான். காலை அம்மா கதவை திறந்தபோது மேசை மீது தலைகவிழ்ந்த நிலையில் படுத்திருந்தான். மேசையில் கிடந்த கவிதைநோட்டின் தாள்கள் ஜன்னல் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தன. அருகில் சென்ற அம்மா கவிதை நோட்டில் சிகப்பு எழுத்தில் எழுதப்பட்டிருந்த வரிகளை வாசித்தாள். தெரு நாயின் சாயல் கொண்டவன் பற்றிய குறிப்புகள் என்றிருந்தது. இரத்தம் தோய்ந்த அவனது விரல்களை கண்டு அலற ஆரம்பித்தாள் அம்மா.-
எதையாவது சொல்லட்டுமா….16
சமீபத்தில் யோசிப்பவர் எழுதிய செருப்பு கதையைப் படித்ததும் எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னால் நானும் செருப்பு என்ற பெயரில் ஒரு கதை எழுதியிருக்கிறேன். அப்போது என் வயதும் யோசிப்பவர் வயது இப்போது என்ன இருக்கிறதோ அதுதான் இருந்திருக்கும். என் கதையை மலர்த்தும்பி என்ற சிறுபத்திரிகைதான் வெளியிட்டது. அக் கதையின் இறுதியில் செருப்பை நாய் கவ்விக்கொண்டு போய்விடும். வேலைத் தேடிப் போகும் ஒரு படித்த இளைஞனின் சோகக் கதை நான் எழுதியது.
யோசிப்பவர் ரொம்பவும் வித்தியாசமாக இன்னொரு செருப்பு கதையை எழுதி உள்ளார். வரும் விருட்சம் இதழில் அக் கதை பிரசுரமாக உள்ளது. செருப்பைத் தூக்கி வீசி எறிவதைப் பற்றி கதை எழுதியிருக்கிறார்.கடைசியில் கூட யார் செருப்பைத் தூக்கி எறிந்தது என்பது தெரியவில்லை.செருப்பைத் தூக்கி எறியும் கலாச்சாரத்தை நையாண்டி செய்திருப்பதுதான் கதை.
இன்றைய சூழலில் கதை எழுதும் உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும். நம்மைச் சுற்றிலும் இயந்திரத்தனமான வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. கதையும் கவிதையும்தான் இதிலிருந்து தப்பிக்க வழி செய்யும். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் நான் இதெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுச் சொல்வதாகத் தோன்றுகிறது. உலக முழுக்கவும் புத்தகம் படிக்காமல் பலர் இருக்கிறார்கள். புத்தகம் படிப்பவர்களைக் கண்டால் எரிச்சல் அடைபவர்களும் இருக்கிறார்கள்.
நம் படைப்புகளைப் பற்றி பரஸ்பரம் பேசிக்கொள்ள முடியாத நிலை உள்ளது. நான் சில மாதங்களுக்கு முன்னால் இப்படி யோசித்தேன். தினமும்ஒரு கவிதை அல்லது கதை படித்துவிட்டுச் செல்வது என்று. அப்படி முயற்சி செய்தும் பார்த்தேன். ஒரு கதையைப் படித்துவிட்டு கதையின் கீழ் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதி வைத்துவிட்டு என்று படிக்கிறேனோ அன்றைய தேதியும், படித்து முடித்த நேரத்தையும் குறிப்பிட்டேன். ஏன் என்றால் கதைக்கும் கவிதைக்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டுமென்ற எண்ணம் என் மனதில் பலமாக விழுந்திருநந்தது.ஆனால் அது ஒரு பைத்தியக்காரத்தனம் என்றும் எனக்குத் தோன்றியது.
ஆனால் கதையைப் பற்றியோ கவிதைப் பற்றியோ யாருடன் பரிமாற்றம் செய்து கொள்ள முடியாது. அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அப்படி பரிமாற்றம் செய்துகொள்ள முன் வரும்போது இருவருக்கும் பொதுவான நேரம், மூட் இருக்க வேண்டும்.
இன்னொரு விஷயமும் இங்கே சொல்ல வேண்டும். கவிதைக் கணம் என்ற அமைப்பை நாங்கள் நடத்திக்கொண்டு வந்தோம். எங்களை வெளியூரில் பேசக் கூப்பிட்டார்கள். நாங்களும் சென்றோம். கவிதையைப் பற்றி தெரியாத மாணவர்கள் முன்னால் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் யார் பெரியவன் என்ற பிரச்சினை ஏற்பட்டு விட்டது. அதனால் நாங்கள் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கியபோது இன்னொருவர் அதைக் கட் செய்து விடுவார். அப்படி கட் செய்துவிட்டு அவர்தான் அக்கூட்டத்தில் முக்கியமானவராக மாறி விடுவார். அக் கூட்டத்தின் முடிவில் எங்களுக்குள் சண்டையே வந்துவிட்டது.
ஒருவர் இப்படிப் பேச ஆரம்பித்தார். ”என் கவிதைகளைப் படிக்கிறவர் இங்கே நிறையா பேர்கள் இருக்கிறார்கள்,” என்று தற்பெருமை அடித்துக் கொண்டார். அவர் பொதுவாக காலச்சுவடில் என் கவிதை வந்தது. அதைப் படித்து விட்டு 100 பேர்கள் போன் செய்தார்கள் என்ற ரீதியில் பேசுபவர்.
இன்னொரு விஷயமும் இங்கே சொல்ல வேண்டும். என்னை ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்குமுன் கவிதை வாசிக்கக் கூப்பிட்டார்கள். எனக்குப் பெருமிதமாக இருந்தது. நான் எல்லோருடைய கவிதைகளையும் சேர்த்து வாசிக்க தீர்மானித்தேன். கவிதைக்காக ஒரு மூவ்மெண்ட் நடத்த வேண்டுமென்றும், கவிதையை எல்லோரிடமும் பரப்ப வேண்டுமென்ற முட்டாள்தனமான கொள்கைகளை வைத்திருந்தேன். வழக்கமாக கூட்டம் என்றால் நான் டென்சன் ஆகிவிடுவேன். அந்த முறையும் நான் அப்படித்தான் இருந்தேன். ஆனாலும் போய் கவிதைகளை வாசித்துக் கொண்டே இருந்தேன். ஒரு முறை கவிதை வாசித்து முடித்தவுடன் மாணவர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல். நான் பிரமித்துப்போய் விட்டேன். கவிதைக்கு இந்த வரவேற்பா..நல்ல எதிர்காலம் கவிதைக்கு இருக்கிறது என்று நினைத்தேன். வீட்டிற்குத் திரும்பும்போது நிறைவாக இருந்தது. அடுத்தநாள் காலையில் கூட்டம் ஏற்பாடு செய்தவர் என்னைப் பார்க்க வந்தார். அவரிடம், ”மாணவர்கள் இந்த அளவிற்கு ரசனை உள்ளவர்களாக இருக்கிறார்களே.., நான் வாசித்த கவிதையை ரசித்துக் கேட்டு கைத் தட்டினார்களே,” என்றேன். அதற்கு அவர், ”நாங்கள் சிக்னல் செய்தோம்..அதைப் பார்த்து மாணவர்கள் கைத் தட்டினார்கள்…”என்றார்.
நான் என்ன சொல்வது?
தூறல் மழைக்காலம்
குளிர் காற்றினூடான வானம்
இளநீலம்
மெல்லிய நீர்த்துளிகள்
இசை சேர்த்து வந்து
மேனி முழுதும் தெளிக்கின்றன
நீண்ட காலங்களாக
சேகரித்து வைத்த அன்பை
அமானுஷ்ய ஈரத்தோடு
தளிர் விட்டிருக்கும் அகத்தி
பெண் நெற்றிப் பொட்டு வடிவ
பச்சை நீளிலை மரத்தில்
ஊதாப்பூக் காய்கள் கொத்தியுண்ணும்
ஏழெட்டுக் கிளிகள்
செந்நிறச் சொண்டுகளுடன்
மாதுளம்பூக்கள்
தனிமையை அணைத்தபடி
அடுத்த பாடலை
நான் ஆரம்பிக்கலாம்
அதன் பிண்ணனியில்
மழையும்
நதியின் ஈரலிப்பும்
குளிரின் வாசனையும்
இதே பசுமையும் என்றுமிருக்கும்
நீயும்
என்னுடன் இருந்திருக்கலாம்
–
மகத்தான..
சின்ன மகள்
மேடையில் பாடுகிறாள்
அழகாகப் பாடும் வரிகளில்
அம்மா இலயிப்பதில்லை
ஸ்வரம் பிறழும் போதெல்லாம்
தவறாமல் நெளிகிறாள்
பாடிய மற்ற குழந்தைகள்
அவள் நினைவிலேயே இல்லை
முடிவை அறிவிக்கும் முன்
பயந்திருக்கிறாள்
அறிவித்த பின்பு
அழத் துவங்குகிறாள்
ஆனந்தமோ அயர்ச்சியோ
அல்லது அழுபவள் மட்டும்
அறிந்த வேறெதுவோ
அம்மாவின் கைப்பிடித்து
உள்ளே நுழைந்த குழந்தை
அம்மாவைக் கைத்தாங்கி
அழைத்துச் செல்கையில்
வடகிழக்கில் பயணிக்கும்
பச்சை அம்பை
சில விரல்கள் வருடுகின்றன
மூன்று கவிதைகள்
விஜய தசமி சென்ற விஜயதசமி
கடல் கடந்த
சீதள பூமியில்
இன்று இங்கே
சொந்த வீட்டில்
பூஜையறையில்
யாருமில்லாத
தந்நதனிமை
முன்னால்
வாக்தேவதை
நீ
சுற்றி ஏனைய
தேவதைகள் தேவர்கள்
வெளியில் வீதியில்
வாகனங்களின் சந்தடியில்
உள்ளே மனப்பாதையில்
வாழ்வின் கசப்புக்களில்
வழுதிச்செல்லும் மனதை
பிடித்திழுத்து
உன் பாதசரணத்தில்
உன் வீணைநாதத்தில்
கரைத்திடும்
விடாமுயற்சி
வெற்றிபெற
பெயரினை நீக்கிய பிறகும்
செத்தபின் சிவலோகம் வைகுண்டம்
இல்லை நரகமோ போவது இருக்கட்டும்
விட்டுவந்த வெறுங்கூண்டை
கண்ணாடிப்பேழைக்குள்
காட்சிப்பொருளாக்கி
ஊரூராய் இழுத்துவந்து
விழாவெடுப்பதும்
கட்டையில் வெந்தபின்னர்
கலையங்களிலாக்கி
இங்குமங்கும் இறைப்பதும்
பத்திரப்படுத்துவதும்
அங்கிங்கில்லானபடி
எங்குமே நிறைந்திடும்
ஆத்மாவின்
சாந்திக்கா இல்லை
ஹரி ஸ்ரீ கணபதாயே நமஹ
இன்னுமொரு விஜயதசமி
வாக் தேவதையே
உன் முன,
வாக்குகள் வந்தழுத்தி
திக்குமுக்காடித்திணறிப்
பரிதவித்த நாட்கள
பழங்கனவாய்
இன்று
வாக்குகள் வழுதிச்செல்லும்
சூன்யமான
வற்றிவரண்ட நெஞ்சமுடன்
வீற்றிருக்கிறேன்
எழுத்தாணி கையிலெடுத்து
உனை முன்நிறுத்தி
எண்ணும் எழுத்தும்
கற்பித்த
ஆதிநாளில்
ஆசான் மடியிலிருந்து
அவர் கைபிடித்து
புத்தரிசி பரப்பிய
தாம்பாளத்தில்
தங்கமோதிரத்தால்
கிறுக்கிய
அதே வரியை
கிறுக்குகிறேன்
ஓம் கணபதாயே நமஹ
என்னை ஆளும் விலங்குகள்
எல்லாமாயும் எனக்குள்ளேஒளிந்திருக்கின்றன பல விலங்குகள்பூசி மெழுகும் சொற்களெதுவும்அவையிடத்திலில்லைசில மீன்களைப் போல அமைதியாயும்இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும்சில நேரங்களில் மட்டும்எறும்பு, தேனி, கரையான்களைப் போலசுறுசுறுப்பாகுபவையுமுண்டு காலத்தைப் பயனுள்ளதாக நகர்த்திப் போவதாகப் பெருமை பேசிதிரும்பிப் பார்க்கையில் தடங்களேதுமற்ற பொழுதில் பறவையாயும்கோபமுறுகையில் சீறும் சர்ப்பத்தைக் கொண்டு சிலதும்நன்றி காட்டுகையில் நாயின் வாலாட்டுதலோடும் நன்றி மறப்பதில் பூனையின் மெதுநடைத் திருட்டு போலவும்குவிந்த பல குணவியல்புகளோடு உலாவருகையில்புன்னகைப்பது மட்டும் மனிதத்தை ஒத்திருக்கிறது
செருப்பு
அந்த ஒற்றை செருப்பு பின்னாலிருந்து அழகாக ஸ்கேட் செய்து முன்னால் வந்து நின்றது. முன் வரிசையில் தனியாக அமர்ந்திருந்த நான் கவனிக்கவேயில்லை. நியூரல் நெட்வொர்க்ஸ் நடத்திக் கொண்டிருந்த சந்தியா மேடம் முகத்தில் ஏற்பட்ட திடீர் பிரமிப்பை கவனித்த பிறகே, அவரின் பார்வை கோணத்தில் பார்த்தால், அந்த செருப்பு! எங்கள் கிளாஸில் மொத்தம் பதிமூன்று ஆண்கள், ஆறு பெண்கள். இந்த பதிமூன்றில் எப்படியும் தினசரி 7,8 இருக்கைகள்தான் அதிகபட்சம் நிரம்பும். மற்றவர்களெல்லாம் அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட்ஸ் – கல்லூரிக்கே! எனக்கும் மற்ற பன்னிரெண்டு பேருக்கும் முதல் வருடம் நடந்த எக்ஸ்போவிலேயே கொஞ்சம் பிரச்சனை. நான் எக்ஸ்போவை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று நினைத்த தேர்ட் இயர் மாணவர்களுக்கு உதவினேன். தேர்ட் இயர் பசங்களை பிடிக்காததால், எக்ஸ்போவை கெடுக்க வேண்டும் என்று நினைத்த செகண்ட் இயர் மாணவர்கள், அவர்களை கைக்குள் போட்டுக் கொண்டார்கள். இதெல்லாம் போன வருடப் பிரச்சனை. இப்பொழுது நாங்கள் செகண்ட் இயர். சந்தியா மேடம் கொஞ்சம் கருப்பு. பாடமும் அவ்வளவாக நடத்தத் தெரியாது. அது என்னவோ தெரியவில்லை, என் எம்சிஏ படிப்பில், எனக்கு பலமுறை வந்த சந்தேகம், எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு பாடம் நடத்துகிறார்களா, இல்லை நான் அவர்களுக்கு பாடம் நடத்துகிறேனா என்பதுதான். ஆனாலும் அப்படிப்பட்ட ஆசிரியர்களையும் நண்பர்களாக்கி கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். மற்றபேர் தலை மேல் ஏறி கழுதை மேய்க்க முனைந்தார்கள். சந்தியா மேடம் கிளாஸில் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. மாணவர்களின் கிண்டல்களை பொருட்படுத்தாமல், பதிலுக்கு பதில் கிண்டலாகவே விஷயத்தை முடித்து விடுவார். பசங்க இன்று பாடம் நடத்த வேண்டாம் என்று சொன்னால் பாடம் நடத்துவதில்லை. சில சமயம் “போர்ஷன் முடிக்கனும்பா. ஒரு அரைமணி நேரம் பாடம் நடத்திக்கிறேன். ப்ளீஸ்” என்பார். அப்படி நடத்துவதையும் யாரும் கவனிப்பதில்லை என்பது வேறு விஷயம். இந்தளவுக்கு ஸ்டூண்ட்ஸோடு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் மேடத்தின் முகத்தில் அவ்வளவு கோபத்தை பார்த்த பிறகுதான் எனக்கும் விஷயத்தின் தீவிரம் உரைத்தது. “யார் செருப்பு இது?” கொஞ்சம் உயர்ந்த குரலில்தான் மேடம் கேட்டார். பதிலில்லை. “யாருதுன்னு கேக்கறனில்லை?!” குரல் மேலும் உயர்ந்தது, கோபமும்! நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். யாரும் அசைவதாகத் தெரியவில்லை. ஃப்ரெட்ரிக் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். மேடம் முகத்தில் அவமானம். என்ன செய்வதென்று அவருக்கும் தெரியவில்லை. கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது. “ஓகே. யாரோடதாவும் இருக்கட்டும். யாராவது ஒருத்தர் அதை எடுத்து வெளில போடுங்க.” யாரும் வரவில்லை. “இந்தக் கிளாஸ்ல எம்பேச்சை கேக்கிறதுக்கு ஒர்த்தர் கூட இல்லியா?” பாக்கியராஜ் கடைசி வரிசையிலிருந்து வேகமாக எழுந்து வந்து வெளியே சென்றான். அங்கு முக்கில் சார்த்தி வைக்கப்பட்டிருந்த ஒட்டடை குச்சியை எடுத்து வந்து, அந்த செருப்பை கொழுக்கி வெளியே எடுத்து சென்று ஜன்னல் வழியே வெளியே விட்டான். வகுப்பிருந்தது முதல் மாடியில். அதனால் கீழே போடப்பட்ட செருப்பு சன் ஷேடில் விழுந்தது. மேடம் தவறான முடிவு எடுத்துவிட்டார் என்று எனக்குத் தோன்றியது. பசங்க இன்னிக்கும் கிளாஸை காலி பண்ண முடிவு செய்துவிட்டார்கள். செமஸ்டர் முடியப் போகிறது. இன்னும் பாதி போர்ஷன் கூட முடியவில்லை. ”நான் கொஞ்ச நேரம் கழிச்சு நடத்துறேன்.” என்று சொல்லிவிட்டு வகுப்பில் ஜன்னல் பக்கமாக திரும்பி நின்று கொண்டார். வழக்கமாக இப்படி நின்றிருந்தால் பசங்க ஃபிரீயாக அரட்டை அடிப்பார்கள். இன்றும் உடனே அரட்டை ஆரம்பமான சத்தம் கேட்டது. மேடம் திரும்பி, “உங்களுக்கு கொஞ்சம்கூட டிஸிப்ளின் தெரியாதா? இங்க முன்னாடி வந்து பாடம் நடத்திப் பாருங்க. அப்ப யாராவது உங்க முன்னாடி செருப்ப விட்டெறிஞ்சா எப்படியிருக்கும்னு தெரியும். சே!” என்று மறுபடி திரும்பிக் கொண்டார். நான் பின்னால் திரும்பிப் பார்த்து மெதுவாக சிரித்துக் கொண்டேன், ’இந்தப் பசங்களுக்கு நல்லா வேணும்.’ பின்னால் தூங்கிக் கொண்டிருந்த ஃப்ரெட்ரிக்கை யாரோ தட்டி விட்டார்கள். பாக்கியராஜ் அவனிடம், “யேல, ஒன் செருப்பு எங்க?” என்று கேட்டது என் காதில் விழுந்தது. மேடத்துக்கு கேட்டிருக்காது. ஃப்ரெட்ரிக் மலங்க மலங்க விழித்து குனிந்து தேட ஆரம்பித்தான். “யேல! என்ன?” “என் செருப்பக் காணோம்ல.” மேடம் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். “மேடம் ஓன் செருப்பத் தூக்கி வெளியே வீசிட்டாங்க” கடைசி வரிசை பசங்க ஊதி விட்டார்கள். ஃப்ரெட்ரிக் எழுந்து மேடத்தை நோக்கி விழித்தான். மேடம், ”என்ன?” “செருப்பு!?!” “என்னது?” “என் செருப்பக் காணோம் மேடம்.” கொஞ்சம் குறைந்திருந்த மேடத்தின் கோபம் மறுபடி கூடியது. “அப்பத நான் கேட்டப்பவே ஏன் சொல்லலை.” “அவன் தூங்கிட்டான் மேடம்.” பின்னாலிருந்து கேட்ட குரல் பாக்கியராஜினுடையதுதான். “ஏன் சொல்லலைன்னு கேட்கிறேன்.” “தூங்கிட்டேன் மேடம்.”. ஃப்ரெட்ரிக் இப்படித்தான். கொஞ்சம் மெண்டலி டிஸ்டர்ப்ட் ஆனவன். சில சமயம் என்ன சொல்கிறோம், செய்கிறோம் என்பதை உணராமலே சொல்லி/செய்து விடக் கூடியவன். அவன் சொந்த வாழ்வை புகுந்து பார்த்தால், அம்மா கிடையாது, சித்தி கொடுமை, அப்பா கவனிக்கவில்லை என்று பல காரணங்கள் சொன்னாலும், இந்தக் கதைக்கு அவையெல்லாம் தேவையில்லையாதலால், அவன் மெண்டலி டிஸ்டர்ப்ட். அது போதும். “இங்க ஒருத்தி போர்ஷன் முடிக்கனுமேன்னு, உங்களுக்காக நைட்டெல்லாம் நோட்ஸ் எடுத்து வந்து பாடம் நடத்துவா. நீ பாட்டுக்கு அதை கவனிக்காம தூங்கிருவே. ஒன் செருப்ப எடுத்து இன்னொருத்தன் அவ மேல வீசுவான். அதுவும் ஒனக்குத் தெரியாதுல்ல. என்னன்னும் போங்க.” மேடம் மறுபடி வெடித்தார். இப்பொழுது பின் வரிசையிலிருந்து ஸாம் எழுந்தான், “மேடம் அவன் நெஜமாவே தூங்கிட்டிருந்தான். அவனுக்கு எதுவும் தெரியாது. அவன் செருப்பை எடுத்து யாரோ லேசா தள்ளி விட்ருக்காங்க. அதுக்காக அவன் செருப்பை எடுத்து வெளியே வீசினா என்ன மேடம் அர்த்தம். பாவம் மேடம். ரொம்ப கஷ்டப்பட்ட பையன். இன்னொரு ஜோடி செருப்பு வாங்குறதனா அவனுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? இருந்தாலும் நீங்க சரியா விசாரிக்காம அவன் செருப்ப வெளியே போட்ருக்கக் கூடாது மேடம்.” எனக்கு சனியன் சங்கில் ஏறி உட்காருவதாகத் தோன்றியது. “அப்ப அவன் செருப்ப யாரு முன்னாடி தள்ளி விட்டதுன்னு சொல்லுங்க.” “அத நான் கவனிக்கலை மேடம். ஆனா நீங்க எப்படி மேடம் அவன் செருப்ப வெளில போடலாம். இப்ப அவன் செருப்புக்கு என்ன மேடம் பதில். நீங்க வாங்கிக் கொடுப்பீங்களா? யேல, ஒனக்காகத்தான்ல பேசிட்டிருக்கேன். ஒன் செருப்புக்கு என்ன பண்ணப் போறாங்கன்னு கேளு.” இன்னும் தூக்கம் சரியாகக் கலையாத ஃப்ரெட்ரிக்கை உசுப்பிவிட்டான். “நீங்க நான் கேட்கிறதுக்கு பதில் சொல்ல மாட்டேங்கறீங்க. செருப்ப…” என்று மேடம் திரும்ப பழைய பல்லவியை பாட, ஸாமும் பதிலுக்கு அவன் பல்லவியை பாட, இதற்குள், கடைசி வரிசை பசங்க நாலு பேரும் ஸாமுடன் இணைந்து கொண்டார்கள். பொன்ராஜுக்கு ஸாமை பகைத்துக் கொள்ள முடியாது. முரளிக்கு கிளாஸை எப்படியாவது ஓய்த்து விட வேண்டும். எப்படி ஓய்த்தால் என்ன. பாக்கியராஜோ எப்பொழுது எந்தப் பக்கம் நிற்கிறான் என்றே தெரியவில்லை. அப்புறம் நடந்த சம்பாஷனைகளை விவரிப்பது கொஞ்சம் கடினம். இரு தரப்பும் மாறி மாறிப் பேச, சண்டை போட,மாணவர்கள் பக்கம் மடத்தனமான பலம் சேர்ந்து விட, செருப்பை வெளியே வீசச் சொன்ன சந்தியா மேடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிலைமை தலை கீழாக மாறியது. பீரியட் முடிய ஐந்து நிமிடமே பாக்கியிருந்ததால், மேடம் கோபித்துக் கொண்டு ஸ்டாஃப் ரூமுக்கு போய் விட்டார். அடுத்து பத்து நிமிடம் பிரேக். அதற்கு அடுத்து கம்யூட்டர் பிராக்டிக்கல் பீரியட். பின் வரிசையில் மாணவர்கள் மாநாடு கூட்டப்பட்டது. ’மேடம் எப்படியும் பிரச்சனையை இந்நேரத்துக்கு ஸ்டாஃப் ரூம்ல ரிப்போர்ட் பண்ணிருப்பா. ஹெச்.ஓ.டி. கலைமகள் சும்மாவே முசுடு. ஏற்கெனவே நம்ம கிளாஸ் மேல கொலவெறில இருக்கா. அதுனால பிரச்சனையை பிரின்ஸி வரைக்கும் கொண்டு போய்டுவா. அவங்க பிரச்சனையை பிரின்ஸிகிட்ட கொண்டு போறதுக்கு முன்னாடி நாம முந்திக்கனும். அதுனால நாம ஒத்துமையா இருக்கனும். நம்ம மேல தப்பு வராம இருக்கனும்னா, நாமளும் ஸ்ட்ராங்கா ஏதாவது பண்ணனும். பேசாம பிராக்டிக்கல் லேப பாய்காட் பண்ணிரலாம். அப்பதான் அவங்க பக்கமும் தப்பு இருக்குன்னு பிரின்ஸிக்குப் புரியும்.’ ”நான் ரெடிப்பா”, என்றான் முரளி, “பாய்காட்!” என்று கூவினான். ”ஸோ, அடுத்த பீரியட், கம்ப்யூட்டர் லேபை எம்.சி.ஏ. செகண்ட் இயர் பாய்காட் பண்றோம். பண்றோம்டா. பண்றோம்டா” என்று பொன்ராஜ் எக்கோ கொடுத்தான். கடைசி வரிசை பசங்கள் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தனர். நான் எதுவும் காதில் விழாத மாதிரி பிரேக்குக்கு போய் விட்டேன். பிரேக் முடிந்ததும், நேராக லேபுக்கு போய் விட்டேன். லேப் கீழேதான். அதனால் முதல் மாடி வகுப்புக்குள் நுழையவோ, வாசலைக் கடக்கும் பிரச்சனையோ இல்லை. அப்ஸர்வேசன் நோட்டெல்லாம் லேபுக்கு எடுத்துப் போகும் பழக்கமும் நமக்கு கிடையாது. அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் லேபுக்குள் நுழைந்தேன், அதாவது லேப் காரிடாரில். லேபுக்குள் நுழைய இன்னொரு கதவைத் திறக்க வேண்டும். லேப் காரிடாரில் எங்கள் வகுப்பு பெண்கள் நின்று குழம்பிக் கொண்டிருந்தது தெரிந்தது. பசங்களை பகைத்து கொண்டு லேபுக்குள் போவதா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்தனர். நான் உள்ளே நுழையவும் ஹேமாவையும், ரம்யாவையும் என்னிடம் அனுப்பி என்ன செய்யலாம் என்று கேட்கச் சொன்னார்கள். அவர்கள் இருவர் மட்டும்தான் பசங்களோடு வெட்கப்படாமல் பேசுபவர்கள். ஹேமா என்னிடம் வந்து, ”என்னடா பண்றது? நீ உள்ளப் போப்போறியா?” என்று கவலையோடு கேட்டாள். நான் வாயைத் திறந்து, “ஆ…”, யாரோ என் பெயரை சொல்லி அழைத்ததால் திரும்பிப் பார்த்தேன். பாக்கியராஜ் காரிடார் வாசலில் நின்று கொண்டிருந்தான். “என்ன?” என்றேன். “ஒர் நிம்சம் இங்க வாயேன்.” போனேன். “நம்ம பசங்கல்லாம் லேபை பாய்காட் பண்றதுன்னு முடிவு பண்ணிருக்காங்க.” சொல்லும்பொழுது அவன் குரல் மிகவும் தாழ்ந்து இருந்தது, ஏதோ சொல்லக் கூடாததை சொல்வது போல. பசங்களுக்கு என் மேல் எப்பொழுதும் ஒரு பயமுண்டு. நான் அடிதடி பயில்வான் என்றெல்லாம் இல்லை. சொல்லப்போனால் என்னை புல்தடுக்கி பயில்வான் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் நான் எப்பொழுதும் எந்த விஷயத்திலும் கரெக்டாக நடந்து கொள்வேன் என்பதால்தான் என் மீது பயம். அந்த பயம் எனக்கும் கொஞ்சம் கர்வமாக இருந்தது. “சரி, அதுக்கென்ன?” “அதான், நீயும்….”, என்று இழுத்தான். “இங்கப் பாரு. தப்பு யாரு மேல? ஒருத்தங்க பாடம் நடத்திட்டிருக்கும்போது அவங்க முன்னாடி செருப்ப விட்டெறிஞ்சா அவங்களுக்கு கோபம் வராம என்ன செய்யும்? இந்த ஃப்ரெட்ரிக் வேற பாடம் நடத்தறப்போ தூங்கிட்டு, அதையும் அவங்ககிட்டயே சொன்னா எரிச்சல் வராதா. இதுல இவன்கிட்ட மேடம் மன்னிப்பு கேக்கனும்னு வேற நீங்கல்லாம் சொல்றீங்க.” “எனக்கும் தெரியுதுடா. இருந்தாலும் இப்ப நாம ஒன்னா இல்லைன்னா நம்ம கிளாஸுக்குதான் அவமானம். இந்த ஒரு தடவை மட்டும் வந்துறேன்.” அவன் குரல் மிகவும் கெஞ்சலோடு இருந்தது. எனக்கு அவன் மீது எப்பொழுதும் கொஞ்சம் மதிப்பு உண்டு. ’பையன் நல்லவந்தான். சேர்க்கதான் சரியில்ல’ என்று நினைத்துக் கொள்வேன். அவன் மறுபடி, “ப்ளீஸ்டா” என்றான். கொஞ்சம் தர்மசங்கடமாக அவனைப் பார்த்தேன். “சரி வர்ரேன். ஆனா, உங்களுக்கு சாதகமா ஒரு வார்த்தைகூட பேச மாட்டேன்.” என்றேன். “நீ வந்தா போதும்.” என்றான், என்னை இழுத்துச் செல்லும் அவசரத்துடன். பின்னால் திரும்பி பெண்களை ஒருமுறை பார்த்துவிட்டு, அவனுடன் மேலே சென்றேன். நானும் வந்து விட்டதால், பெண்களும் பின்னாலேயே வந்து விட்டார்கள். கிளாஸுக்குள் என் இருக்கைக்கு போய் உட்கார்ந்து கொண்டேன். யாரையும் திரும்பிப் பார்க்கவில்லை. யாருடனும் பேசவில்லை. அரைமணி நேரம் கழித்து ஹெச்.ஓ.டி. கலைமகள் வந்தார். பசங்க அசைந்து கொடுக்கவில்லை. அடுத்த பதினைந்து நிமிடத்தில் பிரின்ஸி எங்கள் அறைக்குள் நுழைந்தார். எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார். நான் முதல் வரிசையில், நான் மட்டும். அவரும், “ஒருத்தங்க முன்னாடி கிளாஸ் எடுத்தி….” என்று பழைய பல்லவியை பாடிவிட்டு, “நீங்களெல்லாம் படிக்க வந்திருக்கீங்களா வேற எதுக்காவது வந்திருக்கீங்களா? ஆர்ட்ஸ் படிக்கிற பயலுங்கதான் இந்த மாதிரி ஸ்ட்ரைக் கிய்க்ன்னு பண்ணுவாங்க. நீ சைன்ஸ் படிக்க வந்திருக்கேய்யா. பொறுப்பு வேணாம்…..” அரை மணி நேரத்துக்கு அவர் ஓயவில்லை. பசங்கள் இடையில் ஒரு வார்த்தை பேசவில்லை. எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. நேராக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரும் என்னைப் பார்த்துதான் அவ்வளவு திட்டுக்களையும் திட்டிக் கொண்டிருந்தார். போன வருடம் நடத்திய எக்ஸ்போ மூலம் என்னை அவருக்கு மிக நன்றாகத் தெரியும். என்னிடம் அவருக்கு நல்லெண்ணம் உண்டு என்று எனக்கும் தெரியும். ஆனால் அவ்வளவு நல்லெண்ணமும் இன்று நாசமாகிவிட்டது என்று தோன்றியது. இறுதியில், “கடைசியா சொல்றேன். இப்ப எல்லாரும் அவங்கவங்க அப்ஸர்வேசன் நோட்டை எடுத்துகிட்டு லேபுக்கு போங்க.” என்றார். அரைமணி நேரமாக இதற்காகவே காத்திருந்தது போல நான் எனது ஒரே நோட்டை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறி, லேபுக்கு போனேன். என்னைத் தொடர்ந்து இன்னும் இருவர் வர, அவர்களைத் தொடர்ந்து பெண்களும் வர, கடைசி வரிசை பாக்கியராஜ், ஸாம், முரளி, பொன்ராஜ், செருப்புக்கு சொந்தக்காரன் ஃப்ரெட்ரிக் ஆகிய ஐவர் தவிர எல்லோரும் லேபுக்கு போய்விட்டோம். எங்கள் முன்னால் வாங்கு வாங்கென்று வாங்கிய பிரின்ஸி, முக்கியமாக என்னை கிழி கிழியென்று கிழித்தவர், நாங்கள் லேபுக்கு வந்தபின்னும், அவர்கள் ஐவரும் பிடிவாதமாக நின்றதால், அவர்களிடம் சமாதானமாக பேசியதாகவும், மேடம் ஃப்ரெட்ரிக்கிடம் தனியாக மன்னிப்பு கேட்டதாகவும், யார் மீதும் எந்த நடவடிக்கையும் கிடையாது என்றும், பின்னர் ஸ்டாஃப் ரூமில் நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து லேபுக்குள் செய்தி கிடைத்தது. எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. இந்த நிகழ்வின் நியாய தர்மங்கள் எனக்குப் புரியவேயில்லை. அந்த நிகழ்வுக்குப் பிறகு, கிளாஸில் நான் யாருடனும் பேசுவதில்லை, கிட்டத்தட்ட ஒரு வருடம். அப்புறம் பிரியப்போகிற சமயம் எதற்கு வீணாக பகையோடு பிரிய வேண்டும் என்று சமாதானமாகி, கல்லூரி விட்டு வெளியே வந்து, சென்னையில் வேலை தேடும் பொழுது ஸாம், பொன்ராஜோடு ஒரே மேன்ஷனிலும், முரளியோடு ஒரே அறையிலும் காலம் தள்ளி என்று வாழ்க்கை போய் விட்டது. கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதும் இந்த நிகழ்வு குறித்து எனக்குள் எழுவது ஒரே ஒரு கேள்விதான். ’அந்த செருப்ப எறிஞ்சது யாரு?’
எதையாவது சொல்லட்டுமா / 15
இந்த முறை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு 5 புத்தகங்கள் விருட்சம் வெளியீடாக வந்துள்ளன. இந்தப் புத்தகங்கள் கொண்டு வந்த வேகத்தில் விருட்சம் உரிய நேரத்தில் கொண்டு வர முடியவில்லை. காரணம் இடம் மாற்றம். நான் என்னை சரி செய்து கொண்டுவிட்டேன். இதோ விருட்சம் முதல்வாரம் பிப்பரவரி மாதம் வந்து விடும் என்று நினைக்கிறேன். அடுத்த முறை நவீன விருட்சம் இதழை இன்னும் சீக்கிரம் கொண்டு வர வேண்டுமென்று நினைக்கிறேன். இன்னொன்று நினைக்கிறேன். இதுவரை blogல் வந்த கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வரலாமா? அப்படி ஒரு புத்தகம் வந்தால் அது அற்புதமான புத்தகமாக அமையலாம். தமிழில் என்ன சாதிக்கலாம் என்பதை தமிழர்களாகிய நாம் எழுதிய கவிதைகள். நான் தேர்ந்தெடுத்தக் கவிதைகள் குறித்து தெளிவான பார்வை எனக்குண்டு. அது எளிமை. இனி புத்தகங்கள் பற்றி எதாவது சொல்கிறேன்.
எதையாவது சொல்லட்டுமா / 14
தமிழில் விமர்சர்கள் மிகக் குறைவு. ஆரம்பத்தில் க.நா.சுதான் தமிழில் விமர்சனத்தைத் தொடங்கி வைத்தார். படைப்பாளியாக இருந்த க.நா.சு விமர்சனத்தையும் ஆரம்பித்து வைத்தார். அவருடன் அதை வளப்படுத்திய பெருமை சி சு செல்லப்பாவிற்கும் உண்டு. க.நா.சு ஒரு முறை என்றால், சிசு செல்லப்பா வேறு முறையில் விமர்சனத்தை அணுகினார். சி சு செல்லப்பா மேலை நாட்டு புத்தகங்களைப் படித்துவிட்டு தமிழில் அது மாதிரி முயற்சியை மேற்கொண்டார். க நா சு எந்தத் தியரியையும் படிக்கவில்லை. அவர் படிக்கிற புத்தகங்களைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல ஆரம்பித்தார். பத்து பேர்கள் என்று லிஸ்ட் போட ஆரம்பித்தார். அதை எதிர்த்தவர்களும் உண்டு. வேகமாகப் புத்தகங்களைப் படித்துவிட்டு வேகமாக அபிப்பிராயம் சொல்லும் பழக்கத்தை ஆரம்பித்தவரும் க.நா.சுதான். சி சு செல்லப்பா மணிக்கொடி எழுத்தாளர்களுடன் நின்றுவிட்டார். அலசல் முறை விமர்சனம் என்று மேலே போக முடியவில்லை. க.நா.சுவோ அப்படியில்லை. எந்தப் புத்தகமாக இருந்தாலும் சரி, ஏன் குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைளையும் பற்றியும் எழுதி விடுவார்.
விமர்சனத்திற்கென்று தனி கவனம் செலுத்திய க.நா.சுவும், சி.சு செல்லப்பாவும் வளர்த்த விமர்சன பண்பு இன்று பலரால் பின்பற்றப்படுகிறது. மார்க்ஸிய முறை, பின் நவீனத்துவ முறை என்றெல்லாம் பலர் விமர்சனத் துறையில் இறங்கி விட்டார்கள். எப்போதுமே படைப்பாளிகளை விட விமர்சர்கள் ஒரு படி தாழ்வுதான். விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்தவர்களுக்குப் பெரிதாக பரிசு எதுவும் கிடைத்துவிடாது. பொல்லாப்பு அதிகமாக சேரும். நடுநிலைமையோடு புத்தகம் விமர்சனம் செய்வது சாத்தியமா என்பதும் கேள்விக் குறியே?70 வாக்கில் விமர்சனம் தனி நபர் தாக்குதலாக மாறிவிட்டது. இதனால் வளர வேண்டிய பத்திரிகைகள் ஒழிந்து போனதுதான் சாத்தியமாயிற்று. அன்றைய விமர்சர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதால், படைப்பிலக்கியத்துக்குத் தர வேண்டிய மரியாதைப் போய்விட்டது. நான் ஒரு முறை பிரஞ்ஞை என்ற பத்திரிகையை வாங்கிப் பார்த்தேன். எனக்கு தலையைச் சுற்றுவதுபோல் தோன்றியது. தனிநபர் தாக்குதலுக்காகப் பத்திரிகையின் பக்கம் முழுவதும் வீணடிக்கப்பட்டிருந்தது. உண்மையில் விமர்சனத்திற்காக அல்ல. விமர்சனம் என்ற பெயரில் முன்வைத்த சண்டைக்காக. விமர்சனம் என்பது ஒரு படைப்பைப் படிக்க தூண்டுதலாக இருக்க வேண்டுமே தவிர, படைப்பை ஒழிக்கக் கூடாது.
க.நா.சு, சி சு செல்லப்பா காலத்தில் தனிநபர் தாக்குதல் நடைபெறவில்லை. புத்தகம் பற்றி விமர்சனம் மட்டும் இருக்கும். இன்றைய காலத்தில் புத்தக விமர்சனம் சாயங்களுடன் வெளிவரத் தொடங்கி உள்ளன. தலித் என்கிற சாயம், பெண்ணியம் என்கிற சாயம், ஜாதி என்கிற சாயம்..பின் நவீனத்துவம் போக்கை வளர்த்தவர்களில் தமிழவன், நாகார்ஜூனம் முக்கிய பங்கை வகிக்கிறார்கள். அவர்களால் வளர்ந்தவர்கள்தான் சண்முகம் போன்ற சிலர். சண்முகம் முதலில் கவிதை எழுத ஆரம்பித்தவர், பின் விமர்சனத்திற்கு தாவிவிட்டார்.
ஒரு புத்தகத்தைப் பற்றி எதிரான கருத்தைத் தெரிவித்தால் அது படைப்பாளிக்கு பாதகமான எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது.
எனக்குத் தெரிந்து ஒரு எழுத்தாள நண்பர். அவர் ஒரு பாதரியார். பழக நல்ல மனிதர். தீவிரமாக சிந்திப்பவர். கவிதை எழுதுபவர். அவர் கவிதைகளை எல்லாம் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்தார். அவர் புத்தகத்தை இன்னொரு இலக்கிய நண்பரிடம் கொடுத்து அபிப்பிராயம் கேட்டார். இன்னொரு இலக்கிய நண்பரும் கவிதைகள் எழுதுபவர். அவர் புத்தகம் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார். அவ்வளவுதான் பாதரியார் நண்பருக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது.
எனக்கும் புத்தக விமர்சனம் எழுதுகிற அனுபவம் உண்டு. அதனால் சில சங்கடங்களைச் சந்தித்ததுண்டு. விருட்சத்திற்கும் வரும் புத்தகங்கள் சிலவற்றை நானும் விமர்சனம் செய்திருக்கிறேன். ஒரு சிறுகதை எழுத்தாளரின் புத்தகத்தை எடுத்துக்கொண்டு விமர்சனம் எழுதினேன். என் மனசில் அப்போது என்ன பட்டதோ அதை எழுதினேன். மொத்தமே விருட்சத்தில் 2 பக்கங்கள்தான் எழுதியிருப்பேன். அந்தச் சிறுகதை எழுத்தாளர் என்னைப்போல் வங்கி ஊழியர். மேலும் எங்கள் 2 பேர்கள் வங்கிகளும் பக்கத்திலேயே இருந்தன. ஒருநாள் மாலையில் அவரிடம் மாட்டிக்கொண்டேன். ”வாருங்கள் டீ சாப்பிடலாம்,” என்று பக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துப் போனார். அங்கு போனபிறகுதான் தெரிந்தது. என்னைத் திட்டுவதற்காக அழைத்துப் போகிறார் என்று. அவர் வைத்திருந்த பெட்டியைத் திறந்தார். அதிலிருந்து சில கடிதங்களை எடுத்துக் காட்டினார். ”இதப் பாருங்க..குமுதம் ஆனந்தவிகடனிலிருந்து கடிதங்கள் வந்திருக்கின்றன..கதை அனுப்பச் சொல்லி…..உங்கப் பத்திரிகையை எத்தனைப் பேர் படிப்பாங்க….100 பேர்…200பேர்….புத்தகம் விமர்சனமா எழுதறீங்க…புத்தக விமர்சனம்…” என்று ஒரு பிடிபிடித்தாரே பார்க்கலாம், என்ன சொல்வது என்பதே தெரியவில்லை. உண்மையில் நான் எழுதினால் மேலே அவர் சொன்ன பத்திரிகைகளில் வராது…மேலும் எனக்கு அவருக்குக் கிடைத்த பெயர் இல்லை…அன்று பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். இந்த எழுத்தாளருடன் ஏற்பட்ட அனுபவத்தோடு நிற்கவில்லை, அந்தப் புத்தகத்தை அச்சட்டவரிடமும் மாட்டிக்கொண்டேன். அவர் ஒரு கேள்வி கேட்டார்: ”அப்படி என்ன சார் எழுதிட்டீங்க..அது என்ன பார்த்தாலே போதும் அலுப்பு வந்துவிடுமா…ஏன் சார், புத்தகம் படிக்காமலே பார்த்தால்போதும் அலுப்பு வந்துவிடுமா..?”என்றாரே பார்க்கலாம்.. அப்புறம்தான் தெரிந்தது. நான் எழுதும்போது என்னை அறியாமலே பார்த்தாலே போதும் அலுப்பு வந்துவிடும் என்று எழுதியிருக்கிறேன் என்று. வீட்டிற்கு வந்து விமர்சனம் வந்திருந்த விருட்சம் இதழைப் புரட்டிப் பார்த்தேன். ஆமாம். அப்படித்தான் எழுதியிருந்தேன். பார்த்தாலே போதும் அலுப்பு வந்துவிடும் என்று. எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.