எதையாவது சொல்லட்டுமா / 15

இந்த முறை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு 5 புத்தகங்கள் விருட்சம் வெளியீடாக வந்துள்ளன. இந்தப் புத்தகங்கள் கொண்டு வந்த வேகத்தில் விருட்சம் உரிய நேரத்தில் கொண்டு வர முடியவில்லை. காரணம் இடம் மாற்றம். நான் என்னை சரி செய்து கொண்டுவிட்டேன். இதோ விருட்சம் முதல்வாரம் பிப்பரவரி மாதம் வந்து விடும் என்று நினைக்கிறேன். அடுத்த முறை நவீன விருட்சம் இதழை இன்னும் சீக்கிரம் கொண்டு வர வேண்டுமென்று நினைக்கிறேன். இன்னொன்று நினைக்கிறேன். இதுவரை blogல் வந்த கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வரலாமா? அப்படி ஒரு புத்தகம் வந்தால் அது அற்புதமான புத்தகமாக அமையலாம். தமிழில் என்ன சாதிக்கலாம் என்பதை தமிழர்களாகிய நாம் எழுதிய கவிதைகள். நான் தேர்ந்தெடுத்தக் கவிதைகள் குறித்து தெளிவான பார்வை எனக்குண்டு. அது எளிமை. இனி புத்தகங்கள் பற்றி எதாவது சொல்கிறேன்.

கவிதைக்காக – ஞானக்கூத்தன் – விலை ரூ.150 – 256 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் கவிதைகளைக் குறித்து 34 கட்டுரைகள் உள்ளன. அந்தக் காலத்தில் கணையாழி இதழில் தொடர்ந்து மாதம் மாதம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. கவிதைகள் குறித்து புதிதாக சிந்திக்க விரும்புவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய புத்தகம். ஞானக்கூத்தன் கவிதைகள் மட்டுமல்ல கவிதைகளைக் குறித்தும் சிந்திக்கவும் தெரிந்தவர். சிந்திப்பது, கவிதை எழுதுவது. இரண்டும் முக்கியமான விஷயமாக எனக்குத் தோன்றுகிறது.
விடுதலையும் கலாச்சாரமும் – பிரமிள் – விலை ரூ.60 – 104 பக்கங்கள் – பிரமிள் என்னுடைய நண்பர். அவருடைய புத்தகம் பிரசுரம் செய்யவேண்டுமென்று நான் நினைப்பதுண்டு. ஆனால் அவர் படைப்புகளைப் பிரசுரம் செய்யும் உரிமையை லயம் சுப்பிரமணியம் அவர்களிடம் கொடுத்துவிட்டார். பிரமிளின் வேகம் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. எந்தவித லாபமும் அடையாமல் அவ்வளவு எழுதியிருக்கிறார். இப் புத்தகத்தில் எழுதப்பட்டவை மொழிபெயர்ப்பு கட்டுரை, கதை அப்படியெல்லாம். பிரமிளின் சில ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. பிரமிள் பற்றி நான் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் ஒன்றும் வர உள்ளது.
இயல்பு நிலை – யூ ஜி கிருஷ்ணமூர்த்தி – விலை ரூ.70 – 104 பக்கங்கள் – ஆர்.எஸ் என்ற பெயரில் மொழிபெயர்த்தவர் என் நண்பரும் கவிஞருமான ரா ஸ்ரீனிவாஸன் அவர்கள். யூ ஜியின் முக்கியமான புத்தகம் இது. மிகப் புதிரான தத்துவதரிசி. படிக்க படிக்க வாசகர்களை சிந்திக்கத் தூண்டும்.
சில கதைகள் – அழகியசிங்கர் – பக்கம் – 120 – விலை ரூ.60 – இந்தப் புத்தகம் அடியேனுடையது. கணையாழியில் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் இடம் பெற்ற கதைகள் கொண்ட புத்தகம். குறுநாவல் போட்டியில் என் குறுநாவல்கள் வரும் சமயத்தில் தொடர்ந்து குறுநாவல்களை எழுதிக் குவஸத்தவர்களில் பாவண்ணன், ஜெயமோகன், சுப்ரபாரதி மணியன், கோபிகிருஷ்ணன் மற்றும் பலர் எழுதிக் கொண்டிருந்தார்கள். என் தொகுப்பு மறு பிரசுரம் கண்டுள்ளது. கிட்டத்தட்ட 65 கதைகளும், 200 கவிதைகளும் எழுதி உள்ளேன். இப்போது நாவல் எழுதும் முயற்சியில் தளராமல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இப்படி எல்லாம் எழுதுவதால் ஒரு கவிஞனாகவும் சேர்க்க மாட்டார்கள், சிறுகதை ஆசிரியராகவும் சேர்க்க மாட்டார்கள். அவசியம் வாங்கினால் நிச்சயம் நீங்கள் ரசிக்கலாம்.
கடலின் மீது ஒரு கையெழுத்து – லாவண்யா – விலை ரூ.30 – கவிதைகள் – 53 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. தவறுதலாக இவருடைய முதல் கவிதைத் தொகுதிக்கு இன்னும் வரவில்லையா உன் நத்தை ரயில் என்று பெயர் வைத்துவிட்டார். நத்தை என்று பெயர் வைத்துவிட்டதால் புத்தகம் நகராமலர் ஒரே இடத்தில் நத்தை மாதிரி உட்கார்ந்து விட்டது. விருட்சம் வெளியீடாக வந்ததால் இவருக்குப் பெயர் கிடைத்துவிட்டது. அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

“எதையாவது சொல்லட்டுமா / 15” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன