க.நா.சு யார்?

அழகியசிங்கர்
சமீபத்தில் க.நா.சுவிற்கு ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது.  அவரது நூற்றாண்டை ஒட்டி இக்கூட்டம் நடந்தது. நடத்தியது சாகித்திய அகாதெமி என்ற அமைப்பு. அதில் பேசியவர்களில் ஒருசிலரைத் தவிர பலர் க.நா.சு யார் என்று கேட்பவர்கள்.  சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன்.  அக்கூட்டத்தில் நான் ஒரு கட்டுரை வாசித்தேன்.  கட்டுரையின் தலைப்பு க.நா.சு யார் என்பதுதான்.  க.நாசு மட்டுமல்ல, இன்னும்கூட பல எழுத்தாளர்களை நாம் யார் என்றுதான் கேட்போம்.  மெளனி யார்?  புதுமைப்பித்தன் யார்?  சி சு செல்லப்பா யார்? ந.பிச்சமூர்த்தி யார்?  என்று பல யார்களை வைத்திருப்போம்.  தமிழர்களிடையே இதுமாதிரியான அவலமான நிலைக்கு ஏற்பட்டுள்ளது.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நமது கேரளா அல்லது மேற்கு வங்காளம் சேர்ந்த மக்கள் எல்லாம் ஓரளவு அவர்களுடைய எழுத்தாளர்களைப் பற்றிய அறிவை தக்க வைத்திருக்கிறார்கள்.
சிசு செல்லப்பா மரணம் அடையும் தறுவாயில் அவரைச் சுற்றி அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருக்கும் முதலமைச்சர் வந்துகூடப் பார்க்கவில்லை.  ஆனால் அதே தருணத்தில் கேரளாவில் தகழி சிவசங்கரம்பிள்ளை மரணம் அடையும் தருணத்தில் பொது மக்களுடன் அந்த மாநிலத்தில் முதலமைச்சர் சென்று பார்த்துள்ளார்.  அவருடைய உடல்நிலையைக் குறித்து செய்தியை அறிந்து கொண்டிருக்கிறார்.
க.நா.சு இருந்தபோதும் அவர் இறந்த பின்பும் அவர் யார் என்ற கேள்விக்கு பலரிடம் பதில் இல்லை.  அவர் என்ன புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.  அவருடைய ஆளுமை என்ன என்ற விபரம் யாருக்கும் தெரியாது.  க.நா.சுவிற்கு நெருங்கிய நண்பர்கள் சென்னையில் உண்டு.  அவர்  டில்லியில் இருந்து சென்னைக்கு வரும்போது, சென்னையில்  தன் வீட்டில் தங்க வைத்துக்கொண்டு அவரைப் பாதுகாத்தவர் ஐராவதம் என்ற எழுத்தாளர்.  ஆனால் இன்று க.நா.சுவை மட்டுமல்ல இந்த ஐராவதம் யார் என்று கேட்பவர்கள்தான் அதிகம்.  ஐராவதம் க.நா.சுவை தன்னுடைய தந்தையைப் போல் பாதுகாத்தார்  சென்னையில்.  ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?  அவர் க.நா.சு என்ற மகத்தான எழுத்தாளருக்குக் கொடுத்த மரியாதை நிமித்தம் அவ்வாறு செய்தார்.  
புத்தகம் எழுதுவது படிப்பது தவிர வேற சிந்தனையே இல்லை இந்த க.நா.சுவிற்கு.  ஒரு முறை ஒரு நாவல் எழுதி அச்சில் புத்தகமாகக் கொண்டு வந்தார்.  அத்தனைப் புத்தகப் பிரதிகளும் விற்கவில்லை.  க.நா.சு அந்தப் புத்தகக் கட்டை  அவருடைய மாமனார் வீட்டில் வைத்திருந்தார்.  பரணில் தூங்கிக் கொண்டிருந்த அந்தப் புத்தகக் கட்டை என்ன செய்வது என்று அவருடைய மாமனார் கேட்க, பழைய பேப்பர் கடையில் போடுங்கள் என்று சொன்னவர். க.நா.சு.  
க.நா.சுவின் சீடர் நகுலன் என்பவர்.  க.நா.சுவையாவது யார் என்று கேட்பார்கள்.  இவரைப் பற்றி கேள்விப்பட்டால் யார் யார் என்று பலமுறை கேட்பார்கள்.  அந்த நகுலன் வேடிக்கையாக சொல்லும் விஷயம்.  மொத்தம் 60 பிரதிகள் புத்தகம் அச்சிட்டால் போதும்.  அதை நமக்குத் தெரிந்த 60 பேரிடம் கொடுத்துவிட்டால் போதும் என்று.
க.நா.சு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போய்விட்டார்.  இப்போது அவர் இருந்திருந்தால் இந்த விலைவாசியில் அவரால் எளிமையாக வாழ முடியுமா?  க.நா.சு யார் என்று கேட்பவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
அழகியசிங்கர்
7.
நான் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தாலும் என் சிந்தனை முழுவதும் என் குடும்பத்தைப் பற்றியே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.  நான் எடுத்த முடிவு சரிதானா என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன்.  என் தம்பி எனக்கு போன் பண்ணி விஜாரித்தான்.  ”என்ன உனக்கு கலெக்டர் உத்தியோகமா கொடுத்துள்ளார்கள்.  ஏன் போகணும்னு ஆசைப்படறே? கீழே இருக்கிறவனும் உன்னை மதிக்க மாட்டான்.  அதேபோல் மேலே இருக்கிறவனும் மதிக்க மாட்டான்.  பெரிய சம்பளமும் கிடையாது. ” அவன் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை என்பதை நான் உணர்ந்தேன். இதை அங்கே சென்றபிறகுதான் உணர்ந்தேன்.  தம்பி பெரிய பதவியில் இருப்பவன்.  
என் முட்டாள்தனத்தை நினைத்து பெரிதாக வருந்துவதைவிட வாய்விட்டுச் சிரித்தால் சரியாகிவிடும் என்று தோன்றும்  நான 50வது வயதை எட்டிக் கொண்டிருக்கிறேன்.  என் பெண்ணிற்கு திருமணம் ஏற்பாடு செய்து விட்டேன்.  ஆனால் திருமணம் நடக்கும் தருணத்தில் பெண்ணுடன் இல்லாமல் பந்தநல்லூரில் இருக்கிறேன்.  
விடுமுறை எடுத்துக்கொண்டு வருவதிலிருந்து எல்லோரிடமும் தொங்க வேண்டும்.  திருமணத்திற்காக ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு வர தீர்மானித்தேன்.  என் எண்ணம் நிறைவேறுமா என்பது தெரியவில்லை.  
வட்டார மேலாளராக இருக்கிற ராம்மோகனிடம் ஏற்கனவே பணி புரிந்திருக்கிறேன்.  தலைமை அலுவலகத்தில் அவரிடம் சுருக்கெழுத்தாளராக இருந்த அனுபவம் எனக்குண்டு.  பந்தநல்லூருக்கு வருவதற்குமுன் அவரிடம் போனில் தொடர்புகொண்டு கேட்டேன்.  ”சார், என் அப்பாவிற்கு சொந்த ஊர் மாயவரம்.  எனக்கு அங்கே போஸ்டிங் கொடுங்க..” என்று கேட்டேன்.  அவர் கையை விரித்துவிட்டார்.  பந்தநல்லூர்தான் ஒரே ஊர்.  மாயவரத்திலிருந்து 28 கிலோமீட்டர தூரத்தில் இருப்பதாகக் கூறி இங்கே போட்டுவிட்டார்.  வேற எங்காவது என்றால் கும்பகோணம் போக வேண்டும்.  மேலும் என் உறவினர்கள் சிலர் மாயவரத்தில் இருக்கிறார்கள். 
என் அத்தைப் பெண் குடும்பம் இருக்கிறது.  என் பெரியப்பா பையன் குடும்பமும் இருக்கிறது.  பஸ்ஸிலிருந்து நேராக நான் திருப்பனந்தால் என்ற இடத்தில் இறங்கினேன்.  அங்கிருந்து ஒரு பஸ்ஸைப் பிடித்து பந்தநல்லூருக்குச் சென்றேன்
                                                                                                                         (இன்னும் வரும்) 
                                                                  
 வீடு

வந்த நாளிலிருந்து இந்த வீட்டில்
நான்கு அறைகளிலிருந்தன
இரண்டு கூடங்கள் பெரிதாக இருந்தன
சமையல் செய்ய தாராளமான இடம்
முகம் கழுவ பாத்ரூம் போக என
பலருக்கும் இடங்கள் பரந்து வீற்றிருந்தன
தேவையான நீர் எல்லோருக்கும் கிடைத்தது.
தெரு முனையில்
கடையில் எல்லாம் கிடைத்தன
நின்றால் பஸ் எளிதாக வர
பஸ் ஸடாண்டுகள்
சில நாட்கள் மட்டும் வீட்டில்
கூட்டம் நிரம்பி வழிந்தன

ஒவ்வொருவராய்ப் போக கூட்டம்
இல்லாமல்

இருக்க வேண்டியவர்கள் மட்டும் இருந்தார்கள்.
கூடத்தில் கலகலவென்று பேசிய
பேச்சுக் குரல்கள் முற்றிலும்
அடங்கி விட்டன.

இப்போது வீட்டில்

நானும் வீடும்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

அழகியசிங்கர்.

சாகசம்

கருவறைச் சிசுவின்
தரையிறங்கும் தருணம்
தாய்வசமில்லை.
கொடியறுந்து தனியான
மினிமனிதனுக்குப் பசி முதற்பாடம்.
முலைப்பால் ருசி தனிப்பெருங்கருணை.
தேனீக்குப் பூ, மீனுக்கு மீன்
மானுக்குப் புல், புலிக்கு மான்
வேடனுக்குப் புலியென
சங்கிலித்தொடர் ரகசியம்
மூளைக்குளத்தில் பூ விரியும்
ஆகாயத்தில் அந்தரவிளக்குகள்
அகிலத்தில் இருள்விலக்கும்
படைப்பு நுணுக்கமாய் திட்டமிட்டதுபோல.
கண் காட்சி காணும்
மனம் சிருஷ்டி ரகசியம் தேடும்
கடவுள்துகளை விண்டு பார்க்கும்
கண்டிராத முதல் கடவுள்துகளைத் தேடும்
அண்டப்பெருவெளியளக்கும்
சாகசம் நிகழ்த்தும்
எறும்பு.

லாவண்யா

அறுந்த மஞ்சக் கயிறு..
வித்யாசாகர்

விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள்; அன்பிருந்தால் அருகே வரும் எமனைக்கூட எட்டி காலால் உதைத்துவிடலாம் என்பதன் அர்த்தம்நோக்கி பிறக்கிறது இச் சிறுகதை..
அது ஒரு வெள்ளிக்கிழமை, விமல் ஓடிவந்து எகுறி கட்டிலில் மல்லாந்துப் படுத்துக்கொண்டிருக்கும் கலையின் மேல் குதிக்கப்போக அவள் அவனை கைதூக்கி தடுத்து தட்டிவிட்டு வெடுக்கென ஓரமாக ஒதுங்கிக்கொள்ள கீழே விழயிருந்த விமல் எதையேனும் பிடித்து தன்னை விழாமல் காத்துக்கொள்வதற்காக அவளின் தாலிக் கயிற்றைப் பிடித்து இழுத்துவிடுகிறான், அது அறுந்து அவன் கையோடு போய்விடுகிறது.
கலைக்கு தாலி அறுந்ததும் பதற்றம் தாங்கமுடியவில்லை. ஐயோ கடவுளே ஈஸ்வரா என்று அலறுகிறாள். சாமியறைக்கு ஓடிப்போய் குங்குமத்தை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு கொஞ்சம் தாளியிலும் கண்ணீர்மல்க அப்பி வைக்கிறாள்.
தாஜ் ஓடிவந்து தாலிக் கயிற்றை வாங்கி அவளுடைய கழுற்றில் மீண்டும் கட்டிவிட்டு, அசடு இதற்கெல்லாம் போயா இப்படி அழுவாய் என்று சொல்லி அவளுடைய நெற்றியில் ஒரு முத்தமிடுகிறான்.
“வெள்ளிக்கிழமை அதுவுமா இப்படி அறுந்துப் போச்சே தாஜ்”

“அதனாலென்ன அதலாம் ஒன்னும் ஆகாது, இனி அறுந்துவிடாமப் பார்த்துக்கோ”

“இல்லை தாஜ்., தாலி அறுந்தாலே கெட்ட சகுனம்னுவாங்க, அதிலும் வெள்ளிக்கிழமைன்னு பார்த்து அருந்திருக்கே, இப்படி ஆச்சின்னா புருஷனுக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க தாஜ்”

“அம்மா அம்மா.. இதப்பாறேன்..”

“ஹேய்… சும்மா இரு சனியன்.., குழந்தையா நீ, உன்னால தான் இதெல்லாம்”
“ச்ச குழந்தையைப் போயி சனியன் அது இதுன்னு.. நீ வாடா செல்லம்”

அவன் தன் குழந்தை விமலைத் தூக்கி ஒரு முத்தமிட, கலையும் வந்து அவன் மார்மீது சாய்ந்துக் கொண்டாள். கலையும் தாஜும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். பெற்றோர் அவர்களை வீட்டைவிட்டே விரட்டிவிட்டதால் ஒதுங்கி தன் ஒரே மகனான விமலோடு வாழ்க்கையை வாழும் அன்பு இதயங்களுக்கிடையே இப்படி ஒரு மஞ்சக் கயிறு உயிரை அறுக்கும் கத்தியாக வந்துநிற்குமென்று அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

கலைக்கு மட்டும் அந்த கவலை மிகையாக இருந்தது. இப்படி தாலி அறுந்து புருஷன் இறந்த நிறைய கதைகளை அவளின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தார் சொல்ல அவள் முன்பே கேட்டிருக்கிறாள். அதும் வெள்ளிக்கிழமையன்று கண்ணாடியே உடையக் கூடாது என்பார்கள் இன்றென்னடான்னா தாலியே அறுந்துவிட்டதே என்றொரு பெரிய கவலை அவளைத் தொற்றிக்கொள்ள வருத்தத்தில் தாஜைக் கட்டிப்பிடித்துக் கொண்டு உறங்க முயற்சிக்கிறாள்.
கடிகார முட்களின் சப்தத்திற்கு இடையிலும் மின்விசிறியின் காற்று உரசும் பொழுதிற்கு நடுவேயும் எப்படியோ அவளுக்கு தூக்கம் வந்து தூங்கிதான் போகிறாள்.
அவள் தூங்கினாலென்ன சும்மா விடுமா அந்த தாலியறுந்த சகுணம் அவளை? என்று கேட்டாற்போல் இதோ அவளின் தூக்கத்தில் புகுந்து கண்திரை கிழித்து கனவாகப் படர்கிறது அந்த மரணபயம்..
கனவை விரட்டி கைகளை அசைத்து போ.. போவென்று தள்ளிவிடுகிறாள் கலை. அவளின் கைபட்டு தாஜ் கண்விழிக்க, தூங்கிக் கொண்டிருந்த கலை எழுந்து தாஜ்.. தாஜ்.. என்று கத்துகிறாள். தலையிலடித்துக் கொண்டு அழுகிறாள். யாரையுமே கன் திறந்துப் பார்க்காமலே அவனுக்கு ஏதோ அசம்பாவிதம் நேர்ந்துவிட்டதுபோல் துடிதுடித்துப்போகிறாள் கலை.
தாஜ் அவளைக் கட்டி தன் மார்போடு அணைத்துக் கொண்டு சமாதானப் படுத்த முயல கலை அவனை தொட்டு தொட்டு பார்த்து அழுதாள், உடம்பெல்லாம் தடவி உண்மையாகவே அவன் உயிரோடுதான் இருக்கிறானா என்று சரிபார்த்துக் கொண்டாள். ஒரு ஆபத்து நிறைந்த கனவு கண்டதாகவும், வெள்ளிக்கிழமையில் தாலி அறுந்ததன் காரணமே இப்படியெல்லாம் வருகிறதென்றும், கட்டாயமாக ஏதோ கெட்டது நடப்பதற்கான சகுணம்தான் இதலாமென்றும் அழுதுப் புலம்பினாள் கலை.
தாஜ் ஏதோ வேகமாக காரோட்டிப் போனதாகவும், திடீரென கார் பிரேக் பழுதாகி வண்டி நேரே போய் வேறு நிறைய கார்களின்மீது மோதி; பிறகு ஒரு பாலத்தில்மீது முட்டி நசுங்கிவிட்டதாககவும், இவளுக்கு மட்டும் ஒன்றுமே ஆகாமல் பின்னால் நன்றாக அமர்ந்திருந்ததாகவும், பின் பயந்து எட்டியுள்ளே பார்த்தால் தாஜ் நசுங்கிய காரினுடைய பாகத்திலிருந்து தவறி அந்த பாலத்தின் கீழிருந்த ஆற்றினுள் விழுந்து இறந்துவிட்டதாகவும் சொல்லி அவள் கதற – அதைக்கேட்ட தாஜுக்கே கூட கொஞ்சம் பயம் வந்தது.
அதற்குள் தூங்கிக் கொண்டிருந்த விமல் வேறு இவள் செய்த அட்டகாசத்தில் அலறி எழுந்து அவனொரு பக்கம் அழுதுக் கொண்டிருந்தான். தாஜூக்கு யாரை சமாதானப் படுத்துவதென்பதேப் புரியாமல் தவிக்க அருகாமை வீட்டு ஆட்கள் வந்து அதற்குள் கதவைத் தட்டினார்கள்.
பார்த்தியா நீ கத்தி செய்த ஆர்பாட்டம்தான் அக்கம்பக்கம் கூட எழுந்து வந்த விட்டார்கள், ஏன் கலை இப்படி பண்ற, எனக்கு அதலாம் ஒன்றும் ஆயிடாது, சகுனம் ஜோசியமெல்லாம் அத்தனை முழுமையான உண்மையொன்றுமில்லை. அப்படிச் சொல்லத் தக்க ஆட்கள் இப்போதெல்லாம் மிகக் குறைந்துப்போய்விட்டார்கள். இந்த காலத்தில்போய் ஒரு மஞ்சக் கயிறு அறுந்ததுக்கு நீ இப்படி அவஸ்தைப் படுறியே கலை (?). அதலாம் ஒரு கணிப்பு’ எச்சரிக்கை’ அவ்வளவு தான். அதற்காக இப்படி பயந்து நடுங்கி ச்சே..” என்று தலையில் அடித்துக்கொள்ள அவள் மன்னித்துவிடக் கேட்டு அழுதாள். மனசெல்லாம் படபடன்னு இருப்பதாகவும் ஏதோ நடந்துவிடுமோ என்று பயமாகவே இருப்பதாகவும் சொல்லி தவித்தாள் கலை. தாஜூக்கு அவள் படும் அவஸ்தையைக் காண வலிப்பதாக உணர்ந்தான். அதற்குள் மீண்டும் படப்படவென கதவு வேகமாக தட்டப்பட்டது.
ஓடிப்போய் கதவு திறந்தால், தலையில் ரத்தம் சொட்ட சொட்ட அடிப்பட்ட தன் குழந்தையை தூக்கிக் கொண்டு நின்றிருந்த பக்கத்துவீட்டுக் காராரின் மனைவி வந்து அவன் காலில் விழுந்து ஓவென்று கத்தினாள்.
ரத்தம் வழிய குழந்தையைப் பார்த்ததும் ‘ஆ அல்லா..’ வென வாய்பொத்திக் கொண்டு தாஜ் அவர்களிடம் என்ன ஆனதென்று கேட்க, திருடன் யாரோ திடீரென வீட்டிற்குள் வந்ததாகவும், அவன் குழந்தையைத் தூக்கி கையில் வைத்துக்கொண்டு மிரட்டியதாகவும், கடைசியில் பொருட்களைத் தூக்கிக் கொண்டு ஓடுகையில் மகளை தூக்கி தூரே எரிந்துவிட்டதாகவும், இந்த இரவு நேரத்தில் யாரும் உதவ வரமாட்டார்கள் நீங்கள் தான் மருத்துவமனை வரை வந்து உதவவேண்டும் என்றும் கேட்க, தாஜ் சற்று கவலையோடு கலையைப் பார்க்க ‘ஐயோ வென கலை பதறினாள்’ அழத் துவங்கினாள், அவர்களுக்கு இதலாம் ஒன்றும் புரியவில்லை என்பதைவிட புரிந்துக் கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லாதிருக்க, தாஜ் ஒன்னுமாகாது நீ போவென்று சொல்லி அவளை உள்ளே அனுப்பி கதவைச் சாற்றிவிட்டு கார்சாவி எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
ரத்தம் போக போக குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக கண்களை இறுக்கி மூடலானாள். அதற்குள் அந்த குழந்தையின் தாய் ஐயோ என் குழந்தை கண்மூடுதே என்று கத்த, தாஜ் பதறியடித்து அவளைத் தூக்கி தன் காரில் படுக்கவைத்துக்கொண்டு அவர்களோடு மருத்துவமனைக்கு விரைந்தான்.
குழந்தை என்பதால் எல்லோருமே மிகுந்த கவனம் காட்டினார்கள். ஆளாளுக்கு ஒருபுறம் ஓடி, ஒரு தனியறையை உடனடியாக சுத்தம் செய்து குழந்தையை அங்கே கிடத்தி ரத்தமெல்லாம் துடைக்க, அவசரமாக அங்கு வந்த மருத்துவர் குழந்தையை நன்றாக பறிசோதித்து, ரத்தமேற்றி மருந்திட்டு வலிபொருக்க மயக்கமருந்தும் கொடுக்க குழந்தை கண்ணயர்ந்து மூடிக் கொண்டது.
பொழுது மெல்ல சாய்ந்து விடிகாலைப் புலர, காகங்கள் இதற்கெல்லாம் சம்மந்தமே இல்லாததாய் தன் மொழியில் கத்திக் கொண்டிருக்க, தாஜ் அருகிலிருந்த ஒரு தேநீர் விடுதிக்கு அந்த குழந்தையின் பெற்றோரை அழைத்துச்சென்று குடிக்க தேநீர் வாங்கிக்கொடுத்து அவனும் ஒரு தேநீர் வாங்கிக்கொள்ள கலை மீண்டும் அவனை அலைபேசியின் வழியே அழைத்தாள்.
இரவெல்லாம் இப்படித் தான் நிமிஷத்திற்கோர் முறை அவள் அவனை இடை இடையே அழைத்து நடப்பதைக் கேட்டுக் கொண்டேயிருந்தாள், அவளுக்கு நடப்பதெல்லாமே ஒவ்வொன்றும் விபரீதமானதாகவே இருக்க அது மேலும் பயத்தைக் கூட்டியது.
ஏனோ எல்லாம் நிகழ்வுகக்ளையுயம் வைத்துப்பார்த்தால் ஒவ்வொன்றாக நகர்ந்து கடைசியில் அது தாஜின் மரணம்வரைதான் வந்துவிட யிருக்கிறதோ, அந்த தாலி அறுந்த சகுணம் சங்கதியெல்லாம் சரிதானோ எனுமொரு அச்சம் உள்ளுக்குள்ளே அவளுக்கு மிகுதியாகிக் கொண்டேயிருக்க, அதைப் புரிந்துக்கொண்ட தாஜ் அதைப்பற்றியெஎல்லாம அவளிடம் காட்டிக்கொள்ளாமல் இங்கு மருத்துவமனனயில் நடந்த விவரத்தையெல்லாம் அவ்வப்பொழுது சொல்லிவிட்டு ‘இதோ புறப்பட்டுவிட்டேன், இனி நீ அழைப்பதை விடு கவலையெல்லாம் படாதே நானின்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவேன்’ என்று சொல்ல, அவளுக்கு பயமாக இருப்பதாகவும், அவனின்றி அவள் ஒரு நொடி கூட உயிரோடிருக்கமாட்டாளென்றும் சொல்லி அழுகிறாள்.
‘வாழ்க்கையின்னா இப்படித் தானே, எல்லாம் தானிருக்கும், நீ கலவரமில்லாமல் இரு, நான் இன்னும் கொஞ்சம் நேரத்தில் அங்கே வந்துவிடுவேன்’ என்று சமாதானமாகச் சொல்லி அலைபேசியை மடக்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டு தேனீருக்குப் பணம் தர தன் பணத்தை எடுத்து நீட்ட, அவர்கள் தாம் தருவதாக முன்வர பரவாயில்லை குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
நேரே அங்கிருந்து கார் பார்க்கிங் போய், பார்கிங்கிலிருந்து காரெடுத்து வெளிப்புறம் திரும்பி, பின் வாசலுக்கு வந்து வாசலிலிருந்த அந்த தேநீர் கடை அருகே வர, அங்கே சோகமாய் அமர்ந்திருந்த அந்த பெற்றோர்களைப் பார்த்து மனம் நொந்தான், இப்படி தனியே விட்டுச் சொல்கிறோமே என்றொரு வருத்தம் அவனை மேவிக்கொள்ள, வண்டியை நிறுத்தி இறங்க எண்ணுவதற்குள் மீண்டும் கலை அவனை விடாமல் அலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தாள்.
அழைப்பைத் துண்டித்து அலைபேசியை கார் டேஷ்போர்டின் மேல் வைத்துவிட்டு, அங்கிருந்தே ஜன்னல் கண்ணாடியை கீழிறக்கி அந்த பெற்றோரை ஒரு ஆர்ன் அடித்து அழைத்து ‘சரி நான் சென்று வருகிறேன் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், ஏதேனும் அவசியமெனில் அழையுங்கள்’ என்று சொல்லிவிட்டு மருத்துவமனையிலிருந்து புறப்படுகிறான்.
அங்கிருந்து புறப்பட்டு வேகமாக திரும்பி, நான்கைந்து தெரு தாண்டி தன் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் இடைப்பட்டதொரு தூரத்தில் வருமந்த பாலத்தில் ஏற, கலை மீண்டும் அவனுடைய அலைபேசிக்கு விடாமல் மாறி மாறி அழைக்கிறாள்.
அவனுக்கு கோபமே வந்துவிட்டது. அலைபேசியில் வரும் அழைப்பை ஏற்று அவளிடம் பேசுவதா இல்லை திருப்பத்தில் வண்டி பாலத்தின் மீதேறுகிறதே அதைப் பார்ப்பதா என்று இரண்டிற்கும் மத்தியில் தடுமாறி நிதானிப்பதற்குள் தலையெழுத்தென அந்த கனவுவேறு நினைவில் வந்துத் தொலைக்கிறது.
அவளும் விடாமல் அழைக்கிறாள், மணி அடித்துக் கொண்டேயிருக்கிறது, தாஜ் பாலத்தைப் பார்க்கிறான், அலைபேசி கையில் அலறுகிறது, பின்னால் வந்துகொண்டிருந்த வண்டிகள் வேறு இவனின் வேகக்குறைவினை கண்டித்து வீல் என்று அலறுவதுபோல் மாறி மாறி ஆர்ன் அடிக்கிறார்கள், எதிரே வேகமாக ஒரு லாரி வந்து திரும்பி இடித்துவிடாமல் விலகிவிடும் இடைவெளிக்குள் குப்பென இவனுக்கு வியர்த்து கைகால் ஆடி கண்திரை மூடப்பட்டு இதயம் வெடிப்பதுபோல் ஒரு அதிர்வு மூளைக்குள் அதிர, எட்டிமுறித்து எப்படியேனும் இந்த விபத்தை உதறிவிட்டு தப்பித்துவிடுவதாக எண்ணி ஓங்கி ஒரு உதையை காலால் பிரேக் மீது எட்டிவிட, அது இடம் தவறி ஆக்சிலேட்டர் மீது பட்டு,

அடுத்த வினாடியே வண்டி பாய்ந்துபோய் நான்கைந்து வண்டிகளைத் தாண்டி பாலத்தின் மறுமுனையில் விழுந்து சீறிக்கொண்டுபோய் வேறொரு எதிரே வந்த காரின்மீது முட்டி டயர்கள் இளகி கண்ணாடிகள் உடைந்து ஆடி கலகலத்து பின்பும் முன்நகர்ந்துபோய் நிற்க –

எதிரே எதிர்பாராமல் வந்த வண்டிகளின் மீதெல்லாம் மோதி, ஒன்றன் மீது ஒன்றாக நான்கைந்து வண்டிகள் முட்டி ஒருவழியாக நின்றுவிட, வண்டி மொத்தமும் புகை பரவி, மக்கள் கூட்டம் கூடி உள்ளேயிருந்த தாஜை எடுத்து வெளியே கிடத்துகிறார்கள் தெருப் பயணிகள். அதற்குள் விவரம் அவசரப் பிரிவுக்கு அழைத்துச் சொல்லப்பட்டு ஐந்தாறு மணித்துளிகள் நகர்வதற்குள் ஆம்புலன்ஸும் தீயணைப்பு வண்டிகளும் சீறிக் கொண்டுவருகிறது.

தாஜினுடைய கதை இப்படியெனில் கலைக்கு நடந்த இன்னொரு கொடுமையைப் பாருங்கள். கலை மீண்டும் மீண்டும் தாஜ் மருத்துவமனையில் நின்றிருந்தபோதே விடாமல் அழைத்துக்கொண்டிருந்தாள் இல்லையா (?)
தாஜ் அதை எடுக்காமல் விட்டதால் அவள் பயந்து பதறி அப்போதே வீட்டிலிருந்துப் புறப்பட்டு மருத்துவமனை வரத் தொடங்கிவிட்டாள். அதைச் சொல்லத் தான் மீண்டும் மீண்டும் அவனை அழைத்து அவன் எடுக்காமல்போக என்னவோ அபாயம் தான் நேர்ந்து விட்டதோ என்று பதறி வேகமாக வந்து பாலம் நெருங்கி தாஜினுடைய காரில் முதன்முதலாய் முட்டியதே இவள் தான்.
சிலநேரம் இப்படித் தான், விதி எல்லாவற்றையும் வென்று விடுகிறது. என்றாலும், அதையும் மதியை பயன்படுத்தி அன்பினால் வெல்ல இயலும் என்பதை இங்கே கலை புரியவைத்துவிடுகிறாள்.
ஆம்புலன்சில் தாஜைத் தூக்கிக் கிடத்தி, அவனோடு முட்டி மோதி தலையில் கைகாளில் அடிப்பட்டு வீழ்ந்த வேறு இரண்டு மூன்று பேரையுமென எல்லோரோடும் சேர்த்து கலையையும் ஏற்றி ஆம்புலன்சிற்குள் படுக்க வைக்கிறார்கள் அவசரப் பிரிவினர்.
அதோடு ஆம்புலன்ஸ் வேகமாக மருத்துவமனை நோக்கிப் புறப்பட, அந்த வண்டிக்குள்ளேயே அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் மூலம் எல்லோருக்கும் உடனடி உயிர்காப்பு மருத்துவம் பார்க்கப் படுகிறது. இரண்டு மூன்று பேர் வலியால் துடிக்கின்றனர். தாஜ்க்கு உடம்பெல்லாம் சிராய்ப்பும் மண்டையில் பலத்த அடியும் பட்டிருப்பதாகவும் கலைக்கு அத்தனை அடியில்லை பயத்தில் மயங்கித் தான் கிடக்கிறாள் என்றும் மருத்துவர் சொல்ல, கலை மெல்ல முயன்று கண்களை லேசாக திறக்கப் பார்க்கிறாள்
எதிரே இருப்பவர்கள் கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறார்கள். சற்று உற்று இமைப் பிரித்துப் நன்றாக ஆழ்ந்துப் பார்க்கிறாள் தாஜ் எதிரே படுத்திருப்பதுபோல் லேசாகத் தெரிகிறது அவளுக்கு. தாஜுக்கு சீ.பி.ஆர் கொடுத்து வேகமாக மூச்சு வாங்கியதும் ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தி ரத்தம் பரிசோதித்தவரிடம் என்ன வகை ரத்தமென்று கேட்டு அதை எடுத்து அவனுக்கு ஏற்ற, அருகிலிருந்தவர் வந்து மானிடர் பார்த்துவிட்டு உயர்த குரலில் இப்போ ஹார்ட் பீட் ஓகே, இனி பயப்படவேண்டாம் உயிர் பிழைத்துக் கொள்வார் என்று சொல்ல..,

கலைக்கு கண்களின் ஓரம் ஒரு சொட்டு கண்ணீர் உயிரில் கரைந்து வழிந்தது. முழுதாக கண்திறந்துப் பார்த்து அவன் பிழைத்துவிட்ட சந்தோசத்தில் அவனைக் கட்டிக்கொண்டு அழ இயலாவிட்டாலும் அவளால் அந்த தருணத்தின் உயிர்ப்பினை நன்றாக உணர முடிந்தது.
மனதின் தாளா சந்தோஷம் உடலெங்கும் பரவிநிற்க, கையைத் தூக்கி தன் தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ள மார்பில் தடவுகிறாள். அதற்குள் அருகிலிருந்த மருத்துவர் வெடுக்கென கையைப் பிடித்துக்கொண்டு நோ நோ கையையசைக்கக் கூடாது என்று சொல்லி அவள் கையை கீழே அழுத்தி கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, லேசாக உதடு கோணி சிரித்துக்கொண்டே அவனைப் பார்த்தவாறே மகிழ்வாக கண்மூடி ஆனந்தப் பட்டுக் கொள்கிறாள் கலை.

அவளுக்கெப்படித் தெரியும் அவள் கழுத்திலந்த மஞ்சள் கயிறு இல்லையென்று, அது அப்போதே அந்த பாலத்தில் தாஜினுடைய கார்மீது வந்து அவள் இடித்தபோதே அவளின் கழுற்றிலிருந்து அறுந்து தூர எறியப்பட்டு பாலத்தின் ஓரமிருந்த ஒரு கம்பியில் மாட்டிக் கொண்டிருந்ததை யார்தான் கண்டார்.., அது இப்போதும் காற்று சற்று வேகமாய் வீச அப்போது விழுந்த அதே கம்பியிலிருந்து ஆடிக் கொண்டேயிருந்தது..
தாஜும் கலையும் விதியின் வாசல்களை உடைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் மனதால் எண்ணி எண்ணி இனி வாழப்போகும் நாட்களுக்காய் ஏங்கி படுத்துக் கொண்டிருந்தனர். விமல் வெளியேச் சென்ற அப்பாவும் அம்மாவும் எப்போது வருவார்களோ என்று ஜன்னல் வழியே வாசலையேப் பார்த்துக்கொண்டிருந்தான்..
கடவுளின்குரல்

இறந்தநண்பனின்
கைத்தொலைபேசியை
ஒருமுறை
தொடர்புகொண்டுபார்கிறேன்
இம்முறை
மறுமுனையில்
தொடர்பு எல்லைக்கு
அப்பாலிருப்பதாகச்சொன்னகுரல்
கடவுளுடையது

ரவிஉதயன்

முற்றுகை

விடுமுறைநாட்களில் கைப்பேசிகள்
குடும்பக்கதைகள் சொல்கின்றன.
அவைகளில் காதல்கதைகள்
மர்மக்கதைகள், சோக்கஃகதைகள்
பலவகையுண்டு. ஒவ்வொன்றும்
தனித்தனிக்கதையாகத் தெரிந்தாலும்
அவற்றின் சாராம்சமொன்றுதான்.
ஒருகூரையின்கீழ் பலதீவுகளாயான
உறவுகளின் உரிமைப்போர்களால்
அகந்தைக்கலகங்களால்
வீடுகள்குட்டிச்சுவர்களானதுதான்.
அப்பாவின் கடிதங்களை உன்னிப்பாக
படிக்கமுடிவதும் விடுமுறை நாட்களில்தான்.
என் கிராமத்து ந்தி மணல்கிணறானதும்
(ஏ) மாற்று விதைகளை விதைத்து
பொன்வயல் பொட்டல்காடானதும்
தாலாட்டும் தெம்மாங்கும் ஊமைகளானதும்
அப்பாவுக்கு இருமையின் அடையாள இழப்புகளாய் தெரிவது
காலம் பின்னுக்குத்தள்ளும் ஒரு கிழவனின்
ஆற்றாமை மட்டுமில்லையென உணர்கிறேன்.
கழனிகளைத் தின்று வளர்ந்த
கான்க்ரீட் வனங்களிலிருந்து பரவும்
பேராசைத்தீயின் நடுவில் ஒரு ரோபோவாய்
பட்டப்பகலில் வெறிநாய்கள்
பெண்மாமிசம் தின்னும் நகரில் பிழைக்கிறேன்.
கல்வெட்டாய் கண்முன் நிற்கிறது காலம்
இந்தக்கல்வெட்டின் தர்மகர்த்தாக்கள் யார்?
அவர்கள் மலைகளை விழுங்கும் மாயம் செய்பவர்கள்.
அவர்கள் அதிகாரத்துக்கு அருகிலிருப்பவர்கள்
அவர்கள் ஆயுதங்களுடனிருப்பவர்கள்
ஊதுவத்திச் சாம்பலாய் உதிர்கிறது நம் பொறுமை
நாம் அவர்களை முற்றுகையிடும் நாள் தொலைவிலில்லை.
மேலும் முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியுமென்று
நேற்றுவந்த கடித்தஃதில் அப்பா எழுதியிருக்கிறார்
 
 
லாவண்யா
 
 
 
   சுமை
 
சுமக்கமுடியாமல்
சுமையை
இறக்கிப்போட்டு
அவன் போய்விட்டான்.
அவர்கள்
சுமக்கிறார்கள்
சுமக்கமுடியாமல்.
 
 
 
 
தீர்க்கதரிசி
 
கூடுகட்டவொரு கடன் மகனின்
கண்ணைத் திறக்கவொரு கடன்
மகளின் காதலை மணமாக்க
ஒரு கடன். காலில் சக்கரம் கட்டி
காலத்தை சேமிக்கவொரு கடன்
ஆயுள்காப்பீட்டுப் பத்திரத்தை
அடகுவைத்தொரு கடன்
ஆறுமாத்தஃதுக்கொரு நகைக்கடன்
அவ்வப்போது  கடனட்டைக்கடன்
 
அம்மா ஒரு தீர்க்கதரிசி.
 
லாவண்யா

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
அழகியசிங்கர்
6.

நாம் எதைப் பெறுவதாக இருந்தாலும் அதற்குக் கூலி கொடுத்தாக வேண்டும்.  பந்தநல்லூர் பதவிக்கு நான் நன்றாகவே கூலி கொடுத்துவிட்டேன்.   இன்னும் யோசிக்கப்போனால் இதைப்பற்றி ஏன் இப்படி தீவிரமாக யோசிக்க வேண்டுமென்று தோன்றியது.  அழகியசிங்கரிடம் சொன்னபோது, ”ஒருவிதத்தில் சரி, இன்னொரு விதத்தில் சரியில்லை,” என்றார்.
கும்பகோணம் செல்லும் அரசாங்கப் பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.  கையில் ஒரு புத்தகம் வைத்திருந்தேன்.  அந்தப் புத்தகத்தின் பெயர்.  கொத்தமங்கலம் சுப்பு எழுதிய பந்தநல்லூரில் பாமா.  என்னால் அந்தப் புத்தகத்தை எடுத்து சில பக்கங்கள்கூட படிக்க முடியவில்லை.  ஏன் என்று தெரியவில்லை.  எல்லோரையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன்.    
புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு அழகியசிங்கர் மூலம்தான் ஏற்பட்டது. அவர்தான் எங்கே புத்தகம் கிடைத்தாலும் விலைக்கு வாங்கி பத்திரப்படுத்துவார். அசோகமித்திரன், ஜானகிராமன் என்று வித்தியாசமான எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கக் கொடுப்பார். ஆனால் அதெல்லாம் ஆரம்பத்தில்தான். எனக்கும் அழகியசிங்கருக்கும் நட்பு என்பது 35 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது.  
ஆரம்பத்தில் நாங்கள் புத்தகங்கள் படிப்பதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருப்போம். என்னை வைத்து அவர் எழுதும் எழுத்துக்களையும் நான் படிப்பேன்.  என் நிழல் நீதான் என்பார் அழகியசிங்கர். உன் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டு வருகிறேன்.  அதை வைத்துத்தான் நான் எழுத முடிகிறது என்பார். நான் வெறுமனே புத்தகம் படிப்பவன்.  சிலசமயம் அழகியசிங்கர் படைப்புகளைப் படித்து என் அபிபப்பிராயத்தைச் சொல்லாமல் இருக்க மாட்டேன்.  
புத்தகம் படிப்பதுதான் உலகம் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம். நம்மைச் சுற்றிலும் புத்தகம் படிக்காதவர்களே இருக்கிறார்கள்.  யாரிடம் புத்தகம் படிப்பது பற்றி பேசுவது. அதேபோல் நானும் அழகியசிங்கரும் சந்தித்தால் புத்தகங்கள் பற்றி எழுத்தாளர்களைப் பற்றி பேசிக்கொண்டே இருப்போம்.  யாராவது எங்கள் பக்கம் வந்தால் போரடித்து ஓடிப்போய் விடுவார்கள்.  
நான் பந்தநல்லூருக்குப் போவது அழகியசிங்கருக்கு கை ஒடிந்தாற்போல் ஆகிவிடும்.  யாரும் அவரிடம் புத்தகங்களைப் பற்றி இலக்கியக் கூட்டங்களைப் பற்றி பேச மாட்டார்கள்.  
                                                                                                                                (இன்னும் வரும்)   
மேலும் 

அன்பு செய்வதை விடுத்து
கொலை செய்தலை கையாள்தல்
பூதாகரமான அன்பிற்கு
நீ என்னையும்
நான் உன்னையும்
அறிமுகப்படுத்தியதின்
முன்னமே
தன் தற்கொலை டைரியில்
பதிந்து வைத்திருந்ததின்
குறிப்பொன்றை
சற்று முன் வழியில் கண்ட
அதிகம் பரிச்சயமுள்ள
நிமிர்த்த முடியாத வாலுடைய
ஜீவன் ஒன்று சொல்லிப் போகிறது
தன் பாஷையில்
மேலும்
உன்னிலிருந்து
திரும்பிக்கொண்டிருக்கிறேன்
உன்னிற்கு

ஆறுமுகம் முருகேசன்