உன்
காலடி வானம்

அன்றைய மழைக்கால
முன்னிரவில்

அவளது நீண்ட நேரக்
காத்திருப்பின் முடிவு

பேருந்துத்
தரிப்பிடத்தில் தேங்கி நின்றதோர் கணம்

தாண்டிச் சென்ற
எவரையோ அழைத்துப் பேசி

கூடச் செல்லுமுனது
பார்வையின் கீழே

நழுவியதவளது
பூமி

தெருவோரம் எவரோ
வெட்டி வீழ்த்தியிருந்த

மரத்தினை நோக்கிக்
கூடு திரும்பிய பட்சிகள்

இருளாய் வட்டமிட்ட
அன்றைய இரவு

ஒரு சாத்தானின்
உருவம் கொண்டது

அந்தகாரத்தில்
உனது நடை

மீன்களின் நீச்சலை
ஒத்திருந்தது

நீ எடுத்து வைத்த
ஒவ்வொரு எட்டிலும்

நதிகள்
உதித்தன

தண்ணீரில் தோன்றிய
மலையின் விம்பத்தில்

தலைகீழாய்
ஏறினாய்

வானவில் தொட்டில்
அந்தரத்தில் ஆடிய

அம் முன்னந்திப்
பொழுதில்

இதுநாள் வரையில்
அவள் கண்டிருந்த

மேகங்கள்,
வெண்ணிலவு, நட்சத்திரங்களெல்லாம்

உன் காலடியில்
நீந்தின

அந்தப் பயணத்தின்
முடிவில்

இருவரும்
பிரிந்துவிடுவதான உறுதி

தீர்மானமாயிற்ற
பின்னரும்

உனக்காக மட்டுமே
காத்திருந்தவளை

விழுங்கிய அம்
மௌனச் சிலந்தி

நீர்
வலைப்பின்னல்களின் மீது

இன்னும்
ஊர்கிறது

இரவின் பனியோடு
சொட்டுகிற

எட்டுக்கால்
பூச்சியின் ரேகைகள்

எம்.ரிஷான் ஷெரீப்,


கல்லும் கடவுளும்..

வித்யாசாகர்

மூடிய கண்களின் ஆழத்தில்
 பளிச்செனத் தெரிகிறதந்த
 வெளிச்சம்;
வெளிச்சத்தை
 உதறிப் போட்டு எழுந்தேன்
 கடவுள் கீழே கிடந்தார்!!
பாவம் கடவுளென தூக்க
 நினைத்தேன் –
 விழுந்தவர்கள் பலர் நினைவில் வர
 விழுந்துக் கிடவென்று விட்டுவிட்டேன்
உன் கோபம் நியாயம் தான்
 உன்னை இப்படி படைத்தது
 என் குற்றம் தானே என்றார் கடவுள்
உளறாதே நிறுத்து
 உன்னை
 இல்லையென்று எண்ணிதான் வணங்கினேன்
 இருக்கிறாய் என்று தெரிந்திருந்தால் என்
 உறவுகளைப் புதைத்த குழியில் உன்னையும் புதைத்திருப்பேனென்றேன்
கடவுள் வருத்தப் பட்டார்
 அந்த குழிகளிலிருந்து நிறைய பேர் பிறப்பர்
 உறுதி என்றார்
அப்படியா
 பெரிய ஞானவாக்கு தருவதாக நினைப்பா
 எழுந்து போ’ அதலாம் எங்களுக்குத் தெரியுமென்றேன்
உண்மையாகவே எழுந்துப் போய்விடவா
 பிறகு வருத்தப்பட மாட்டாயே என்றார்
நிறைய பட்டுவிட்டோம்
 அதில்
 இதுவும் ஒன்றாக இருக்கும் போ என்றேன்
உடம்பு சற்று குலுங்கி
 கீழே சரிந்துப் போனேன்
ஐயோ என்னாச்சு என்று என்
 மனைவி வந்து தூக்கி அமர்த்துகிறார்
 கத்தி பதறி எல்லோரையும் அழைக்கிறாள்
 குடும்பமே சூழ்ந்து நின்று
 கத்தி அலறியது கீழே சரிந்த எனைப் பார்த்து
நன்றாகத் தான் இருந்தார் என்கிறார்கள்
 தியானம் செய்து கொண்டிருந்தேன்
 அப்படியே சரிந்துவிட்டேன் என்கிறார்கள்
 கைகால் ஆட்டிப் பார்த்து கண்ணிமை நீக்கிப் பார்த்து
 இறந்துவிட்டேன் என்கிறார்கள்
 என் பிள்ளைகள் கத்தி கதறி
 அப்பா அப்பா எங்களைப் பாருப்பா என்று
 அழுகிறது –
 நான் கடவுளே என்னைக் காப்பாத்திவிடேன் என்றேன்
கடவுள் தெரிந்தார் எதிரே
 சட்டென –
 உடல் துடித்து அசைந்து
 கண்களைத் திறக்க’ அப்பா அப்பா உங்களைப் பார்க்க
 யாரோ வந்திருக்காங்க என்றான் என் மகன்
 மனைவி ஆமாங்க எப்போதோ வந்தார் பாவம்
 அதோ வாசல் ல அமரவைத்திருக்கேன் பாருங்க’ என்றாள்
சுற்றி சுற்றி பார்த்தேன் நான்
 யாரும் என்னைச் சுற்றி அழவோ
 கத்தவோ கதறவோ யில்லை
 அத்தனைக் கூட்டமும் வீட்டிலில்லை
எழுந்து சென்று
 வாசலில் எதிரேப் பார்த்து அமர்ந்திருந்தவரை வணங்கி
 ஐயா வாங்க
 வணக்கம் என்றேன்
 அவர் வணக்கம் சொல்லிவிட்டு
 தன்னை ஒரு கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவராக
 அறிமுகப் படுத்திக் கொண்டார்
இன்று மாலை இந்த ஊரில் ஒரு கூட்டம் வைத்துள்ளோம்
 தாங்களும் கலந்துக் கொள்ளவேண்டும்
 கடவுள் பற்றி பேசவேண்டும் என்றார்
நான் புன்னகைத்து விடை தந்தேன்
 கடவுளைப் பற்றிப் பேச வேகமாக
 மாலைக்கு முன்நேரமே புறப்பட்டுப் போனேன்
 அங்கே எனைத்தாக்கும் எதிர்வினைகள்
 நிறைய இருந்தன
எல்லோரும் கடவுள் பற்றி நிறைய இழிவாகப் பேசினர்
 கடவுள் ஒரு மூலையில் நின்றுக்கொண்டு
 நீ போய் பேசு என்றார்
 நான் மேடையேறி கடவுள்களுக்கு வணக்கம் என்றேன்
எல்லோரும் கைதட்டினார்கள்
எல்லாம் குற்றம் குறைகளுக்கும்
 காரணம் நாம் தான் பிறகு எதற்கு
 கடவுளையே குறை சொல்லிக் காலத்தைப் போக்குவானேன்
 மனிதரைப் பற்றி பேசுவோம்
 மனிதர் புரிந்தால் கடவுளும் புரியுமென்றேன்
இல்லாத கடவுள் ஏன் புரியவேண்டும்?
 மேலும் கடவுளை உண்டென்று பேசினால் முட்டைப் பறக்குமென்றார்
 கூட்டத்தில் ஒருவர் எழுந்து
நான் திரும்பி கடவுளைப் பார்க்க
 கடவுள் எனைப் பார்த்து பேசு பேசு தயங்காதே என்றார்
எத்தனை முட்டை அடிப்பீர்கள்?
 இன்னும் எத்தனை கொலை விழும்?
 எவ்வளவு நாளிற்கு இன்னுமிந்த இருக்கு இல்லை போராட்டம்,
 இதற்கு முற்றுப் புள்ளியே கிடையாதா?
ஏனில்லை கோவிலையும் சிலைகளையும் உடைத்துப் போடுங்கள்
 போராட்டம் முற்றுபெரும்,
தங்கத்தையும் வைரத்தையும் எடுத்து
 தாலி செய்யுங்கள்
 முதிர்கன்னிகள் எண்ணிக்கை குறையும்,
கோவிலிடத்தில் வீடும் பள்ளிக்கூடமும் கட்டுங்கள்
 ஏழையின் கண்ணீர் காயும்,
இறைஞ்சி நின்ற நேரத்தில்
 இன்னும் நல்லது கெட்டதைப் படியுங்கள் அறிவு வளரும்,
அதைவிட்டுவிட்டு மனிதராய் பிறந்து கடவுளில் தொலைவதா? மிக
 நன்றாக கேட்டார் என்னை அழைக்க வீடுவந்த
 அந்த பெரியவர்
என் கவலை கடவுள் பெயரில்
 மனிதரைக் கொள்வதில் மட்டுமே இருந்தது
சரி கடவுள் போகட்டும்
கடவுள் இல்லை என்போர் கையை உயர்த்துங்கள் என்றேன்
 அந்த அக்கூட்டத்தில் பாதிக்கும் மேல்
 கையுயர்த்தினர்;
சரி இப்போ கடவுள் இருக்கு என்பவர்கள்
 கை தூக்குங்கள் என்றேன்
அந்த கூட்டம் கடந்து
 அந்த ஊரில் இருந்த அத்தனைப் பெரும் கை தூக்கினர்
பார்த்தீர்களா?
 நீங்கள் உடைப்பது வெறும் கோவில் அல்ல
 இத்தனைப் பேரின் மனசு
 நீங்கள் எதிர்ப்பது வெறும் கடவுளின் சிலைகளையல்ல
 இவர்களின் நம்பிக்கையை’
கடவுள் தூர நின்று வெகு ஜோராக கைதட்டினார்
எல்லோரும் திரும்பி
 சப்தம் வரும் திசை நோக்கிப் பார்க்க
 கடவுள் நின்றிருந்த இடம் அவர்களுக்கு வெற்றிடமாகவே தெரிந்தது
நானாகப் பேசத் துவங்கினேன்
 கடவுள் நமக்கு ஒரு பொருட்டல்ல
 நன்மை தீமைகளை ஆராய்வோம்
 அதை யார் மனதும் நோகாமல் எடுத்துச் சொல்வோம்
 இருக்கு என்பவர்களுக்கு தெரியும் கடவுள் தெரிந்துப் போகட்டுமே
இல்லை என்போருக்கு தெரியாத கடவுள்
 எங்கேனும் மறைந்து நின்றுக் கொள்ளட்டுமே என்றேன்
கடவுள் மீண்டும் கைதட்டினார்
நான் கடவுளிருக்கும் திசை நோக்கி
 வணங்கிக் கொண்டேன்
என்ன என்ன நடக்கிறது ஏய் வீசுடா முட்டையை
 என்றொரு கும்பல் எழுந்திருக்க
நான் உங்களைத் தான் வணங்கினேன்
 என்றேன்
எங்களையா?
ஆம் உங்களுக்குள் இருக்கும் கடவுளை என்றேன்
இல்லை இவன் ஏதோ குழப்புறான்
 நீ கீழிறங்கு
 பேசினது போதும் போ’ என்றார்கள்
ஆம் இறங்கத் தான் போகிறேன்
 இறங்கும் முன் ஒன்றைக் கேளுங்கள்; உங்கள் கோபம் கடவுளின்
 மீது வேண்டாம்,
 கடவுள் உண்டென்று நம்பியே வளர்ந்துவிட்ட
 மனிதர்களின் மனதை நசுக்குவதில் வேண்டாம்,
 அவர்களின் நம்பிக்கையை விட்டுவிட்டு குறைகளை
 இதுவன்று மட்டும்
 அக்கறை உண்டெனில் எடுத்துக் காட்டுங்கள்,
 மூடபழக்கவழக்கத்தின் கொடூர தீவினையை
 முன்வைத்து
 மறுக்கக் கோருங்கள்’ நான் பேசிக்கொண்டிருக்கும் போதே
 ஒருத்தர் எழுந்தார்
வேறென்ன செய்கிறோம் நாங்கள் ?
 இல்லாத கடவுளை உண்டென்று நம்புவது
 மூடத்தனம் இல்லையா?
 அதைத் தானே வேண்டாம் என்கிறோம்?
மிகக் கோபமாக
 கேள்வி எழுப்பினார் அவர்
பொறுங்கள் பொறுங்கள்
 கடவுளே இல்லை என்று எண்ணிக் கொண்ட
 உங்கள் மனசு
 இருக்கு என்று நம்பி வாழ்வோருக்கு வேண்டாமா?
முதலில் கடவுளை நம்புவோர்
 மூடர் என்பதை விடுங்கள்
 முட்டாளை கூட முட்டாள் என்றால் வலிக்கும்
 அது முதலில் அவரவர் உணர்வென்று உணருங்கள்
 இதிலென்ன பெரிய உலக சீர்திருத்தம் வேண்டும்?
சீர்திருத்தம் செய்யத் தக்க இடங்கள் நிறைய உண்டு
 அதை செய்வோம்,
 நமது கோபத்தை
 அப்பாவி மக்களின் நம்பிக்கையின் மீது செலுத்தி
 மனவருத்தத்தை உண்டாக்குவதை விட
 கடவுள் உண்டென்றும் இல்லை என்றும் செய்யும்
 அரசியலின்மீது தொடுப்போம்,
 மூடதனத்தின் மூலதனமே சுயநலம் தான் இல்லையா?
 அந்த சுயநலம் அறுங்கள்
சரி தவறு புரிந்து நன்மைக்கு தோள் கொடுங்கள்
 கடவுள் எங்கேனும் இருந்துவிட்டுப் போகட்டும்..
 நாம் மனிதராக மட்டும் வாழ முயற்சிப்போம் என்று சொல்லிவிட்டு
இறங்கி கீழே நடந்தேன்
 கடவுள் என் பின்னாலேயே வந்தார்
 நான் அவரைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை
நில் எங்கேப் போகிறாய்
 நானும் வரேன் நில் என்றார்
நான் இல்லையில்லை
 எனக்கு வேறு வேலையுண்டு நான் போகிறேனென்றேன்
 எங்கேப் போகிறாய் இத்தனை அவசரமாக
 சற்று நில் என்றார் கடவுள்
வேறெங்கு போவது, இது என் தியானிக்கும் நேரம்
 என் மனைவிவேறு இன்றைக்கு முழுக்க விரதம்
 எனக்கு ஏக வேலை உண்டு
 உன்னைமாதிரியா நீ தான் வெறுமனே
 கண்மூடிக் கிடக்கிறாய் நானில்லை என்று சொல்லிவிட்டு
 அங்கிருந்து வேகமாக நடந்தேன்
கடவுள் சிரித்துக் கொண்டே அங்கேயே
 நின்றுக் கொண்டார்..
கடவுள் கூப்பிடுந் தூரத்தில் இருந்தும்
 என் பயணம் அவரைவிட்டு விலகி
 கல்லுக்கு பூஜை செய்வதிலேயே இருந்தது..
 

நதி இலை எறும்பு

உன் வார்த்தைகளின் தடம் பற்றி
நான் நடந்துகொண்டிருக்கிறேன்

நீ ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறாய்  
அன்பை

காதலை
நம்பிக்கையை
துரோகத்தை
கோபத்தை

வன்மத்தை
வெறுமையை
நிறைவை

கொழுத்த உன் கன்னத்தில் 
திரண்டிருக்கும் அம்மச்சம்
என் கண்களில் விழுந்து உறுத்துவதை
அறியாமலேயே..!

******
செ.சுஜாதா,
பெங்களூர்.

எதையாவது சொல்லட்டுமா….75


அழகியசிங்கர் 
போன மாதம் ஒரு நாள் திருநாவுக்கரசிடமிருந்து போன் வந்தது.  அந்த மாதம் இறுதியில் அவர் பணியிலிருந்து மூப்பு அடைகிறார்.  அதை ஒரு  மூன்று நட்சத்திர ஓட்டலில் கொண்டாடுவதற்காகவே விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.  என்னை அழைத்தார். என்னைப்போல் வங்கியில் பணிபுரியும் நண்பர் திருநாவுக்கரசு.  அந்த விழாவில் கவிதை வாசிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.  36 ஆண்டுகள் வங்கித் தொழிலில் இருந்து பணி மூப்பு அடைகிறார்.  ஒருவர் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் ஓய்வு பெறுகிறார் என்றால் நிச்சயமாக வங்கித் தொழிலில் கொண்டாட வேண்டிய விஷயம்தான்.
பணிமூப்புக்காக விழா நடத்துவது என்பது புதிய முறை.  சிலர் போஸ்டர் ஒட்டி கூட விழா நடத்துகிறார்கள்.  இந்த விழா நடத்துவதன் முக்கிய நோக்கம் என்ன?  அவருடன் பழகிய பல நண்பர்களைச் சந்திப்பது. அப்படி சந்திப்பின் நிகழ்ச்சியின்போது நண்பரைப் பற்றி நாலு வார்த்தைகள் வருபவர்கள் பேச வேண்டுமென்று அவர் நினைத்திருக்கலாம். கமகமவென்று சாப்பிடும் மணத்துடன் அந்தப் பெரிய கூடம் வீற்றிருந்தது. திருநாவுக்கரசுடன் அந்தக் காலத்தில் வங்கிப் பணி புரிந்த பல நண்பர்கள் அங்கு வந்திருந்தார்கள். பலதரப்பட்ட யூனியன் தலைவர்களும் வந்திருந்தார்கள்.  அவர் மனைவி, அவருடைய மூன்றாவது பெண் என்று குடும்பத்துடன் திருநாவுக்கரசு வீற்றிருந்தார்.  திருநாவுக்கரசு ரொம்பவும் மகிழ்ச்சியுடன் இருந்தார்.  அவர் எதிர்பார்த்தபடி பல நண்பர்கள், பல ஆண்டுகளுக்கு முன் பழகிய அலுவலக நண்பர்கள் வந்திருந்தார்கள். 
திருநாவுக்கரசு, புகழ்பெற்ற சினிமா பாடலாசிரியர் கு மா பாலசுப்பிரமணியன் அவர்களின் புதல்வர்.  அமுதைப் பொழியும் நிலவே என்ற புகழ்பெற்ற சினிமா வரியை எழுதியவர் கு மா பா.  திருநாவுக்கரசும் கவிதைகள் எழுதியிருக்கிறார்.  அவருக்கும் சினிமா பாடலாசிரியராக வர  வேண்டுமென்ற எண்ணம் உண்டு.  ஆனால் அவர் வங்கியில் நுழைந்துவிட்டார்.  அவருக்கு கவிதை மீது உள்ள அபிமானத்தால் என்னையும் அவருடைய நிகழ்ச்சியில் கவிதை வாசிக்கும்படி கேட்டுக்கொண்டார்.  
பொதுவாக இதுமாதிரி கவிதை எழுதுவது சரியாக வராது என்று எனக்குத் தோன்றும்.  பலர் திருமணத்தை ஒட்டி கவிதைகள் எழுதி அதை கண்ணாடிப் போட்டு, கொண்டுவந்து கொடுப்பார்கள்.  அப்படி வழங்கப்படும் வாழ்த்துக் கவிதைகளை யாரும் மதிப்பதில்லை.  பல ஆண்டுகளுக்குமுன் நடந்த என் நண்பரின் திருமணத்தை ஒட்டி ஒருவர் இப்படித்தான் கவிதை ஒன்றை எழுதி கவனமாக கண்ணாடிச் சட்டத்திற்குள் கொண்டுவந்து நண்பரிடம் கொடுக்க முன் வந்தார்.  நண்பர் அதை வாங்கிக்கொள்ளவில்லை.  அவருடைய பின்பக்கத்தைத்தான் அதை வழங்க முன் வந்தவர் பார்க்க நேர்ந்தது.  நண்பருக்கும் எழுத்துக்கும் காத தூரம்.  கவிதை இன்னும் மோசம்.
இதுமாதிரி வாழ்த்துக் கவிதைகள் எழுதுவதை நான் விரும்புவதில்லை.  எனக்கு வரவும் வராது.  ஏன் யாருக்கும் வராது..ஒருவரை வாழ்த்துவது என்பது பொய்.  அந்தக் கூட்டத்திற்கு எப்படியும் போய் வர வேண்டுமென்று தீர்மானித்தேன்.  பொதுவாக என் வங்கிக் கிளையிலிருந்து எப்போதும் இரவு ஏழு மணிக்குக் கிளம்பி எட்டு மணிக்கு போய்ச் சேர்வேன்.  அன்று கூட்டத்திற்கு மாலை 5 மணிக்கே கிளம்பிவிட்டேன்.  திருநாவுக்கரசு கேட்டாரே என்று ஒரு கவிதை எழுத வேண்டுமென்று உட்கார்ந்தேன்.  கடந்த சில மாதங்களாக என் மூளை கவிதை எழுதுவது கதை எழுதுவது என்றெல்லாம் போகவில்லை.  காலையில் அலுவலகம் வந்தால் இரவு வீடு வரும்போது சோர்ந்து விடுகிறேன்.  கவிதையை மளமளவென்று எழுத ஆரம்பித்தேன்.   வாழ்த்துக் கவிதையாக இருந்தால் திருநாவுக்கரசுக்கு மட்டும்தான் போய்ச் சேரும்.  பொதுவாக இருந்தால், மற்றவர்களும் படிக்க வாய்ப்புண்டு.  என்னை அறியாமல் ஒரு கவிதை வந்துவிட்டது.  
அலுவலகத்தில் ஒரு காகிதத்தை எடுத்து பாதியாகக் கிழித்து எழுத ஆரம்பித்த கவிதை இது.  
நண்பர் திருநாவுக்கரசு
பதவி மூப்படையும் நாள்
நெருங்கிவிட்டதென்று
அறிந்தபோது
எனக்கும் இன்னும் இன்னும்
20 மாதங்களென்று தோன்றியது
தெளிவாய்
பரபரப்பு இல்லாமல்
வீட்டிலமர்ந்து குடும்பத்தினருடன்
குதூகலிக்கும் நாள் வந்துவிட்டது
36 ஆண்டுகளாக நம்மைப் பிடித்துக்
கொண்டிருந்த உறவு
நச்சாக மாறுமுன் 
கழன்று கொண்டாகிவிட்டது
மெதுவாக
எத்தனையோ நண்பர்களை
சந்தித்தாகிவிட்டது
இனிமையான அனுபவங்களைப் 
பகிர்ந்து கொண்டாகிவிட்டது
வெட்டவெளியில் காற்று
சுகந்தமாய் வீசுகிறது
இனி என்ன
என்றபோது
எதுவாகி வேண்டுமானாலும்
இருக்கலாமென்று தோன்றுகிறது
காலையில் மெதுவாய் தூங்கி
விருப்பம்போல் எழுந்துகொள்ளலாம்
கண்ணை மூடி தியானம்
செய்யலாம்
பக்கத்திலுள்ள பூங்காவில்
காலாற நடக்கலாம்
இஷ்டம்போல் விருப்பப்பட்டதை
உண்ணலாம்
பிடித்த உறவினர்களைப்
போய்ப் பார்க்கலாம்
மனைவி மகள்களுடன் 
பாசம் கொள்ளலாம்
இந்த நாளிற்கு இத்தனை
ஆண்டுகள் காத்திருந்தேன்
என்கிறாரா திருநாவுக்கரசு….
எழுதிவிட்டேன்.  ஆனால் படிப்பதற்கு வெட்கமாக இருந்தது.  திருநாவுக்கரசைப் பார்த்தபோது கவிதை எழுதியிருக்கிறேன் என்று சொல்லவில்லை.  அவரும் கேட்கவில்லை.  அவருடைய இன்னொரு நெருங்கிய நண்பர் கண்ணாடி சட்டத்தில் கவிதை எழுதியிருந்தார்.  பெருமையாக எல்லோரிடமும் காட்டிக்கொண்டிருந்தார்.  அது வழக்கமாக  இந்திரன் சந்திரன் என்று எழுதும் வாழ்த்துக் கவிதை.  வழக்கமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொழிற்சங்க தலைவர்கள் தாமதமாக வந்தார்கள்.  திருநாவுக்கரசை ஆரம்ப காலத்திலிருந்து தெரிந்தவர்கள்.  திருநாவுக்கரசு நினைத்திருந்தால் தொழிற்சங்கத் தலைவராகக் கூட போயிருக்காலம்.  தொழிற்சங்கத் தலைவர்கள், அவருடைய இலக்கியப் பணி வங்கியில் இருந்ததால் மிளிராமல் போய்விட்டது.  இனி அவர் இலக்கியப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டு புகழ் அடைய வேண்டுமென்று பாராட்டி பேசினார்கள்.  ஒரு தொழிற்சங்கத் தலைவர் எனக்கு அவருடைய இலக்கிய முயற்சியைப் பற்றி ஒன்றும் தெரியாது.  
கூட்டம்  இரவு ஏழு மணிக்குமேல்தான் ஆரம்பமானது.  கூட்டத்திற்கு பெண்கள் அதிகமாக வந்திருந்தார்கள்.  தோழிகள் பலரும் அவருடன் பல வங்கிக் கிளைகளில் பணிபுரிந்தவர்கள்.  கூட்டம் இரவு 9 மணிக்குமேல் ஓடிக் கொண்டிருந்தது.  திருநாவுக்கரசு 4 பக்கங்களுக்குமேல் தன்னைப் பற்றி சொல்ல எழுதி வைத்திருந்தார்.  அழகாக டைப் அடித்து வைத்திருந்தார்.  அதைப் படிக்கப் போகிறாரே என்று நானே பயந்துகொண்டுதான் இருந்தேன். என்னையும் கவிதை வாசிக்கக் கூப்பிட மாட்டார் என்று முழுக்க முழுக்க நம்பிக்கொண்டிருந்தேன்.  அவருடைய நெருங்கிய நண்பர் கண்ணாடிச் சட்டத்தில் அடைத்து வைத்திருந்த கவிதையை வாசித்தார். எனக்கு ஒரே நம்பிக்கை.  என்னைக் கூப்பிட மாட்டாரென்று.  
எதிர்பாராதவிதமாய் என்னையும் கூப்பிட்டு விட்டார்.  எனக்கு சற்று வெட்கமாக இருந்தது.  நான் ஒரு ஜோல்னாப் பையை தோளில் மாட்டியபடி பேசச் சென்றேன்.  தொழிற்சங்கத் தலைவர்கள் பேசுவதுபோல் எனக்குப் பேச வரவில்லை.  யாருக்கும் நன்றிகூட சொல்லவில்லை.  எடுத்தவுடன் ஆரம்பித்தேன்.  “இந்த ஜோல்னாப் பையுடன் நான் ஏன் வந்தேன் தெரியுமா?…திருவல்லிக்கேணி கிளையின் சாவி இந்தப் பையில்தான் இருக்கிறது.  இது பத்திரமாக இருக்க வேண்டுமென்றுதான் என்னுடன் இருக்கிறது..திருநாவுக்கரசிற்கு என் வாழ்த்துகள்.   அவரைக் குறித்து நான் அவசரம் அவசரமாக எழுதிய கவிதையை வாசிக்கிறேன்,” என்று ஒரு வழியாக கவிதையை வாசித்துவிட்டேன். 
     அன்று கூட்டம் முடிந்து வீட்டிற்கு வரும்போது இரவு 11 மணிக்குமேல் ஆகிவிட்டது.  
நான் பேசியதைக் கேட்டு திருநாவுக்கரசு என்ன நினைத்திருப்பார் என்று தோன்றியது.  அடுத்தநாள் காலையில் திருநாவுக்கரசிடமிருந்து ஒரு மொபைலில் ஒரு செய்தி வந்தது.  கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு நன்றி என்று.
(ஆகஸ்ட் 2012 அம்ருதா இதழில் பிரசுரமாகி உள்ளது.)
  

லாவண்யா

தனிமை

அசௌகரியமானதென்கிறார்கள் பலரும்.
அவரவர் உண்மை அவரருடையது.

எனதுண்மையென்னவெனில்
வேடங்கலைந்த வெற்றுடம்பைக்
காட்டும் காலக்கண்ணாடி

மனப்பாறையை மணலாக்கும்
மாயவித்தை செய்யும் மர்மநிஜம்

தாகத்துக்குத் தண்ணீர் கேட்டு
வாசலில் நின்றழைக்கும் பசுவும்

நெட்லான்களைக் கிழித்து அறையில்
பிரசவத்துக்கிடம் தேடும் அணிலும்

விடாமல் தொடர்ந்து வீட்டைந்து
நிராகரிப்பை நேசமாக்கும் நாய்க்குட்டியும்

நிகழின் உயிரியக்க விந்தைகளாய்
பரிமாணக்கண் திறக்கும் திரைவிலகல்

காலநிரந்தரத்தில் திசை விசை
மாறாது ஓயாது மோதாது
சுழலும் கோள்களின் ஞாபகமும்

நிசப்த இரவுகளில் காற்றின் ரகசிய
இசைக்கென் காதுகளைத் தருவதும்

நிலாவெளிச்சம் இருட்டுமனதை
வெள்ளையடிக்கும் விநோதங்களும்
வேறெப்போதும் நிகழ்வதில்லை

சங்கடத்திலும் சவக்குழியிலும்
ஒற்றையாகும் துயரியல்
சிலசமயம் நெருடும்தான்

இவைகளைவிடவும் முக்கியமாய்
எல்லையிலா வெளி, கடல்,
எண்ணிலா மனிதர் உயிர்களிடையில்
நீ யாரென வினவி விடைபெறும்
ஒவ்வொருமுறையும்.

மல்லித்தோட்டம்.

காத்திருக்கிறது உனக்காக
என் கூந்தலில் மல்லிகைத்தோட்டம்

குறிப்பறிந்த தோழிபோல
நழுவிச்சென்றதென்  தோள்பற்றியிருந்த
உள்ளாடை

நிலா காய்கிறது
என்னைத் தொட்டுப் பார்
தெரியும்

கணிகைபோல் கணினி
உன் மடியில்

கணினியும் கடலும் ஒன்று
மூழ்கியவன் கரைசேர்வதில்லை

மணித்துணிகளாயுதிர்கின்றன
மல்லிகைகள்

மடிக்கணினியையே நீ
மணந்திருக்கலாம்

என். எம் பதி என்கிற நண்பர்……………
அழகியசிங்கர்
போனவாரம் அசோகமித்திரன் கூட்டத்திற்கு செப்டம்பர் மாதம் நடத்தத் தீர்மானித்து அதற்கான விண்ணப்பத்தை அங்குள்ள அலுவலரிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டேன்.  கூட்டத்திற்கு யார் பேசப் போகிறார்கள்? யாரைக் கூப்பிடுவது? என்ற கேள்விகள் என் மனதைப் படாதபாடு படுத்தியது.  என் நண்பர் மயிலாடுதுறையில் இருப்பவர் பிரபுவைக் கூப்பிட்டேன்.  அவர் எல்லா விதங்களிலும் உதவுவதாகக் குறிப்பிட்டார். திருவல்லிக்கேணியில் இருக்கும் ராஜகோபாலனிடம் சொன்னேன்.  நானும் ராஜகோபாலனும் ஒருவரை ஒருவர் பார்த்து 1 மாதம் ஓடிப்போயிருக்கும்.  சரியாகப் பேசி 2 மாதங்கள் ஆகியிருக்கும்.  இன்னொரு நண்பரிடம் எனக்கு 2 ஆண்டுகளாகத் தொடர்பு இல்லை.  ஒருகாலத்தில் நானும் அந்த நண்பரும் மிகவும் நெருக்கமானவர்கள். இப்போதெல்லாம் யாருடனும் பேச முடியவில்லை என்பதோடல்லாமல், யாரையும் சந்திக்கக் கூட நேரம் இருப்பதில்லை. 
 டாக்டர் செல்வராஜுடம் உடம்பைப் பற்றிப் பேசவே முடிவதில்லை.  பார்க்கக் கூட முடிவதில்லை.  அப்படிப் பயப்படும்படியாக உடம்பு இல்லை.  ஆனால் கட்டுப்பாடு வேண்டும்.  சாப்பாடுவதில் கட்டுப்பாடு. நடை பயில்வதில் வேகம் என்றெல்லாம் வேண்டும.  முன்பு நான் பார்த்துப் பழகிய சென்னை இல்லை என்பதோடல்லாமல், சென்னையே முழுவதும் மாறிவிட்டது.  மாலை வண்டிகளின் அணுவகுப்புடன் வீட்டிற்குப் போவதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது.
ராஜகோபாலன் என்னிடம் 2 விஷயங்கள் குறிப்பிட்டார்.  முதல் விஷயம் அவருக்குப் பேரன் பிறந்த விஷயம்.  அது முக்கியமான விஷயம் என்பதோடல்லாமல், மகிழ்ச்சிகரமான ஒன்று கூட.  அதோட இன்னொன்றும் சொன்னார்.  பதி இறந்துபோய் பத்து நாட்கள் ஆகியிருக்கும் என்று.  கேட்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 
நான் சென்னைக்கு வந்தவுடன் சந்திக்க வேண்டுமென்று நினைத்த நண்பர்களில் பதியும் ஒருவர்.  கடந்த 8 ஆண்டுகளாக நான் அவசரக்கோலத்தில் ஞாயிறு மட்டும் சென்னையில் இருப்பேன்.  அப்போதெல்லாம் நான் அவரைச் சந்திக்க முடிந்ததில்லை.  ஆனால் சென்னைக்கும் வந்தும் யாரையும் சந்திக்க முடிவதில்லை என்பதில் எனக்கு பெரிய வியப்பாக இருந்தது.  உண்மையில் நானும் அவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தோம்.  விருட்சம் இதழ்களில் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பார். கொம்பன் என்ற பெயரில் பத்தி எழுதிக்கொண்டிருந்தார்.  பலருடைய கவனத்தை அந்தப் பத்தி கவர்ந்திருந்தது.  ஆனால யாரிடமும் கொம்பன் யார் என்பதைச் சொல்லாதீர்கள் என்று கேட்டுக்கொள்வார்.
பதி ஒரு உணர்ச்சிகரமான மனிதர்.  மனதில் பட்டதை சொல்லிவிடுவார்.  ஞாயிறுதோறும் போனில் பேசிக்கொண்டிருப்பார்.  என்ன தோன்றியதோ அவர் பேசுவதை நிறுத்தி விட்டார்.  நான் தொடர்பு கொண்டாலும் என்னால் அவரைப் பிடிக்க முடியவில்லை.  பின் தொடர் கட்டுரை எழுதுவதையும் நிறுத்தி விட்டார்.  பதிக்கு என்னயாயிற்று என்று தெரியவில்ல. என் மேல் எதாவது கோபம் இருந்திருக்கும். பதி அதை வெளிப்படுத்தக்கூட இல்லை.
ஒரு திருமண வைபவத்தில் பதியும் அவர் மனைவியையும் சந்தித்தேன்.  அப்போது அவர் நிதானம் இல்லாமல் இருந்தார்.  பதி ஓயாமல் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பார்.  எப்படி அவர் உடம்பு தாங்குகிறது என்று யோசிப்பேன்.  ஆனாலும் ஒரு கட்டத்தில் நிதானத்திற்கு வந்துவிடுவார்.  நவீன விருட்சம் இதழ்களைப் பார்த்து எனக்குக் கடிதம் எழுதுவார்.  அவருக்கு என் கவிதைத் தொகுதியைப் படிக்க அனுப்பியிருந்தேன்.  அதைப் படித்துவிட்டு அவர் எழுதிய கடிதம் இதோ.
என்.எம்.பதி
122/3, 33வது குறுக்குத் தெரு
பெசன்ட் நகர்,
சென்னை 600 090.
                                        23.05.2007
அன்புள்ள தோழர் அழகியசிங்கருக்கு,
பதி அநேக வணக்கங்களுடன் எழுதிக்
கொண்டது?  எப்போதும் ஓடிக்கொண்-
-டேயிருக்கும் உங்களை வார நாட்
களில அலைபேசியில் தேடினால்
நீங்கள் நீராடிக்கொண்டோ அல்லது மயிலாடு
-துறையில் ஆறிக்கொண்டிருக்கும்
இரவு உணவைத் தேடிச் செல்லும்
நேரமோ, வயலோ வரப்போ, புயலாகப்
போகும் பேருந்துகளுக்கு நடுவிலோ பிடிக்க
நேரிடும். சில வார்த்தைகளைத் தவிர
பேச முடியாது எனவே, மூச்சுவிட்டு
இந்த அஞ்சலட்டை.
கவிதைத் தொகுப்பு அற்புதம். அற்புதம்.
வரதராஜனின் வழவழ ஓவிய முகப்பிலிருந்து
கடைசிவரி 263ம் பக்கம் வரை
அற்புதம்.  ஞானக்கூத்தன் வழக்கம்போல்
சரியாக சொல்லியே தப்பித்து விட்டார்.
காரணம், அசாதாரணமாகும் கணங்
களும், கவிதையாவதையும் சாதாரணமாக
வே குறிப்பிட்டுவிட்டார்.  அவரும் ஒரு
கவிஞன் அல்லவா? கவிதைகளை
இடையிடையேயும், கடைசியிலும்
பிடித்துவிடுகிறார்.  சனி, ஞாயிறில் பேசு
வோம்.  இது வெறும் ரசீது..நன்றி.
எபபோதும் உண்மையுள்ள,
என்.எம்.பதி
பதியைப் பற்றி எழுதவேண்டுமென்று கடந்த சில தினங்களாக நினைத்துக்கொண்டிருந்தேன்.  தற்செயலாக கண்டபடி சிதறிக் கிடக்கும் என் புத்தகக் குவியலில் பதியின் இந்தக் கடிதம் பொக்கிஷம் மாதிரி கிடைத்தது.

பதி என்னை விட்டுப் போனாலும், ஏதோ விதத்தில் என்னுடன் பேச விரும்புவதாகவே தோன்றியது.  எப்போதோ அவர் எழுதிய கடிதம் ஏன் என் கண்ணில் பட வேண்டும்?  கடைசியில் அவரைப் பார்க்காமல் இருந்துவிட்டேன். ஒரு நல்ல நண்பரின் ஆத்மா சாந்தியடையட்டும்.  எல்லாவல்ல இறைவன் அவரை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தரட்டும். 
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு

அழகியசிங்கர்

5.

என்னை என் அலுவலகத்திலிருந்து விடுதலை செய்து விட்டார்கள்.  நான் போய்த்தான் ஆக வேண்டும்.  இந்த நினைப்பே என்னை மிரட்டியது.  வீட்டில் என் வயதான தந்தை, மனைவியின் தாய், என் பெண் என்று எல்லோரையும் விட்டு விட்டுப் போகவேண்டும்.  இது வலிய எடுத்துக்கொண்ட வலி. துக்கம்.  இந்தப் பதவி உயர்வால் பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை.  சம்பளம் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கும்.  அதற்குக் கொடுக்கும் உடல் உழைப்பு, மன அழுத்தம் மிக அதிகம்.  டாக்டர் செல்வா நீங்கள் போகாமல் இருந்து விடாதீர்கள் என்று எச்சரித்தார்.  போகாமல் இருந்தால் இன்னும் பின் விளைவுகள் ஏற்படும்.
சுரேஷிற்கும் பதவி உயர்வு கொடுத்திருந்தார்கள்.  அவனை மும்பைக்கு மாற்றி இருந்தார்கள்.  அவனுக்குப் போகவே விருப்பமில்லை.   “ஏன் நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள்?” என்று கேட்டான்.  “ஏதோ ஒரு தருணத்தில்  அசட்டுத் தைரியம் வந்து விடுகிறது,” என்றேன்.  அவன் சிரித்தான்.
ஒரு 50 வயதில் குடும்பத்தை விட்டுப் பிரிவது என்றால், வனவாசம் செல்வதுபோல்தான்.  அழகியசிங்கர் என்னை ஆறுதல்படுத்தவோ பேசவோ தயாராய் இல்லை.  அவருடைய இணை பிரியா நண்பர் அமுதுவும் என்னைக் கண்டுக்கொள்ளவில்லை.
நான் கிளம்புவதற்குமுன், டாக்டர் செல்வா பிபிக்கு 2 மாத்திரைகளை எழுதிக் கொடுத்திருந்தார்.  நான் முதலில் அம்லான்க் ஏ என்ற மாத்திரையைத்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.  பதவி உயர்வு, குடும்பத்தைவிட்டு விலகிப் போவது என்றெல்லாம் நினைத்தபோது பதைபதைப்பு அதிகரித்து விட்டது. 
பல ஆண்டுகளாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்த அம்லான்க் ஏ எந்தப் பிரயோசனமும் இல்லாமல் போய்விட்டது.  ஒரு விதத்தில் ரத்த அழுத்தம் என்பது மனப்பிராந்தியா என்று நினைப்பது உண்டு.
நான் பந்தநல்லூரில் சேர்வதற்கு முன்னால் பஸ்ஸில் செல்ல முடிவெடுத்தேன்.  வீட்டைவிட்டு காலையில் கிளம்பிவிட்டேன்.  வாசலில் என் குடும்பமே நின்று வழி அனுப்பியது.  அவர்கள் யாரையும் நான் திரும்பிப் பார்க்காமல் வேகமாக அசோக்நகரில் பஸ்ஸைப் பிடிக்கச் சென்றேன்.

                                                                                                                         (இன்னும் வரும்)
                                                            
A±®l×
YÚ¡ ùNlPmTW22 Bm úR§. AúNôLªj§Wu 81 YVÕ Ø¥kÕ 82YÕ YV§p A¥ GÓjÕ ûYd¡ôo. Rª¯p ϱl©PlTP úYi¥V TûPlTô°L°p AúNôLªj§WàdÏm CPm EiÓ. CûRd ùLôiPôÓm ®RUôL, TôW§Vôo CpXj§p JÚ G°V ®Zô SPjR Esú[u. C§p GÝjRô[oLs TXÚm LXkÕùLôs[ úYiÓùUuß ®Úmסúu. AYÚûPV ùSÚe¡ TZ¡V NL TûPlTô°LÞm, AúNôLªj§W²u YôNLoLÞm LXkÕùLôiÓ ®ZôûYf £l©dL úYiÓùUuß úLhÓdùLôs¡úu. UôûX 5 U¦dÏ CkR ®Zô SPdL Es[Õ. ®Zô®p TeúLtL Es[YoLs ReLs ùTVoLû[j ùR¬Vl TÓjR úYiÓùUuß Au×Pu úLhÓdùLôs¡úu.
 
AZ¡V£eLo