மழைபொழியும் நாளை
ஐஸ்கிரீம் வழிய
நீ பார்த்துக் கொண்டிருந்த
போதுதான்
என்
முதல் கவிதையை எழுதினேன்
நான்
o
அழும் குழந்தையை
அணைத்து சமாதனப்படுத்துவாய்
எப்பொழுதும்
மழை பொழியும் போதெல்லாம்
அழும் குழந்தாய் மாறிவிட
ஆசை எனக்கு
o
உன் கூந்தல்
வழிந்த மழையைத்தான்
தேனென சேகரித்துப்
போகிறது
தேனீக்களெல்லாம்.
o
நட்சத்திரங்களின்
எண்ணிக்கைக்கு முத்தமிடுகிறாய்
மழை நாளில்
மழை பொழிந்த வானாகிறேன்
முத்த நாளில்.
o
ஒற்றைக்குடைக்குள்
நீயும் நானும்
ஒண்டிக்கொண்டிருக்க
நிலமெல்லாம்
பூக்கள் தூவும்
காதலின் மழை
oOo
லதாமகன் கவிதை
குட்டி மீனைப்போல்
வாய்திறந்து பாடத்தொடங்குகிறாள்
சந்தியாக்குட்டி
ஸ்வரங்கள் தப்பிய
குரலுக்கு ஏற்ப
தன் ஸ்வரங்களை மாற்றிக்கொள்கிறது
இசை
o
டம் டம் சத்தத்தில்
ஆடத் தொடங்கும் கால்கள்
சந்தியாவுடையவை.
ஆடிமுடித்து
அப்பா என ஓடி வந்து
வெட்கத்துடன்
அணைத்துக் கொள்ளும்போதுதான்
முழுமையடைகிறது
எனக்கான நடனம்.
o
நீரை அள்ளி
கடலுக்குள் தெளித்துக் கொண்டிருக்கிறாள்
சந்தியாக்குட்டி
ஸ்பரிசங்களில் தன்
பிறப்பிடம் அறிகிறது
முன்னாள் மழை.
o
பப்லுக்குட்டிக்கு மம்மு என
பொம்மைக்கு
புட்டிப்பால் ஊட்டுகிறாள்
சந்தியாக்குட்டி
அகலச் சிரித்து
உடலெங்கும் பாலாகிறது
பப்லுகுட்டி.
o
எங்கள் எல்லோரையும்போல்
நடித்துக் காட்டுவாள்
சந்தியாக்குட்டி
அவளைப்போல்
வாழ்வதற்கு
இன்னும் யாரும் பிறக்கவில்லை.
oOo
க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்…….1
(பட்டியல்கள் தொடர்ச்சி……)
– அசோகமித்திரன்
க.நா.சு இல்லாமலும் இவர்கள் நன்றாக எழுதியிருப்பார்கள். எழுதினார்கள். க.நா.சு எடுத்துக் கூறுவதற்கு முன்புகூட இவர்களுக்கு உண்மையான ரசிகர்கள் இருந்திருக்கக்கூடும். ஆனால் க.நா.சுவால்தான் இவர்கள் பற்றி விமரிசனப் பூர்வமாக ஒரு ரசிகர் பார்வை உண்டு பண்ண முடிந்தது. மெளனியின் கதைகளுக்கும் நீல பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ நாவலுக்கும் அப்படைப்புகளையும், அப்படைப்பாளிகளையும் சிறிதும் பிடிக்காததோர் மத்தியில் கூட அவை இலக்கியமே என்று ஒத்துக்கொள்ளக் கூடிய சூழ்நிலை இன்றிருக்கிறதென்றால், அது க.நா.சுவின் திட்டவட்டமான, முறையான வாதங்கள் நிறைந்த விமர்சனங்களால்தான். அதேபோல ஜனரஞ்சங்கத் தன்மையே இலக்கிய நயமாக என்றென்றும் நியதியாகிவிடும் தமிழ் எழுத்துத்துறை வரை என்று மலைப்பூட்டிய நாளில் அந்த ஜனரஞ்சகப் படைப்புகள் பற்றித் துணிவாகவும், திட்டவட்டமாகவும், அறிவுபூர்வமாகவும் எடுத்துக் கூறிய பெருமை க.நா.சுவுடையதுதான். அவர் அறிவுபூர்வமாகத் தன் கணிப்புகளை எடுத்துக் கூறுவது – அவைகளுக்கு மறுப்புக் கூற இடமில்லாமல் அவர் வாதங்கள் இருப்பதால் – எவ்வளவோ பேருக்கு கோபமூட்டியிருக்கிறது, கோபமூட்டுகிறது.
க.நா.சுவுக்கு இப்படியும் ஒரு பெயர் உண்டு. அவர் இருப்பதும் இல்லாததுமாக ஆங்கிலத்தில் எழுதி, ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆதிக்கம் செலுத்துகிறார் என்று. க.நா.சு பல ஆங்கில வெளியீடுகளில் பல கட்டுரைகள் தற்காலத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் அந்த வெளியீடுகள் அவருக்கு மாறுபட்ட கருத்துகளை வெளியிடத் தடை விதித்ததில்லை.
தமிழ் இலக்கிய உலகைப் பற்றிக் க நா சு ஒருவரால்தான் ஆங்கிலத்தில் எழுத முடியும் என்றில்லை. அவரைவிட அந்த மொழியில் திறமையும் செல்வாக்கும் உள்ளவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எப்போதோ ஒரு முறை, அதுவும் க.நா.சு ஆரம்பித்த ஒரு சர்ச்சைக்கு பதிலடி போலத்தான் எழுதியிருக்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக, வருஷக் கணக்கில் அதுவும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக, அதே கோபத்துடன், அதே தீவிரத்துடன் எழுதவில்லை.
குறிப்பாக அவர்களே ஒரு இலக்கியப் பார்வை அமைத்துக்கொண்டு அப் பார்வையைப் பிறருக்குத் தெரியப்படுத்துவதில் க.நா.சு கொண்டிருக்கும் அயராத தீவிரத்துடன் செயல்படவில்லை. பல ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒன்றில் தீவிரத் தன்மை கொண்டிருப்பது அந்த ஒன்றில் அந்த நபர் கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையையும், அக்கறையையும்தான் காட்டும். க.நா.சுவின் கருத்துகள், கணிப்புகள் எப்படியாயினும் தமிழ் இலக்கியத் துறையில் அவருக்குள்ள நம்பிக்கையையும் அக்கறையையும் முப்பதாண்டுப் பணியின் நிரூபணம் ஆகியிருக்கின்றன. தமிழ் மொழி அல்லாதோர் மத்தியில் தமிழ் இலக்கியம் கவனத்தையும் கணிப்பையும் பெற்ற வருகிறதென்றால், அது க.நா.சுவும் அவர் போன்றோரும் தமிழ் இலக்கியம் பற்றி வேறு மொழிகளில் எழுதுவதால்தான். விஞ்ஞானப் பார்வை எல்லாத் துறையிலும் வளர்ந்திருக்கும் இந்த இருபதாம் நூற்றாண்டில் ஒருவர் முதன் முதலாக ஏதோ கூறியிருக்கிறார் என்பதால் மட்டும் அது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஒருவர் எடுத்துக் கூறுவதால்தான் அப்பொருள் பற்றி மேற்கொண்டு பரிசோதனை நடத்த ஒரு தளம் அமைகிறது. ஆதலால் முதன் முதலாக ஒன்றைப் பற்றி ஒருவர் கூறும் கருத்தும், கணிப்பும் முக்கியத்வமும், மதிப்பும் பெறத்தான் செய்கின்றன.
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்துவிட்டு ஸ்பெயின் திரும்பினார். அவருக்கு விருந்து. ஆனால் ஸ்பெயின் பிரபுகளுக்கு கொலம்பஸ் மீது மிகுந்த அலட்சியம். அந்த விருந்திலேயே அவர் காது கேட்க ‘அப்படி என்ன பிரமாதமாக இவன் சாதித்துக் கிழித்து விட்டான்’ என்று பரிமாறிக் கொண்டார்கள். கொலம்பஸ் விருந்து முடியும் தறுவாயில் ஒரு முட்டையை உங்களால் செங்குத்தாக நிற்கச் செய்ய முடியுமா?” என்று கேட்டார். பிரபுக்கள், சீமாட்டிகள் அனைவரும் விருந்து மேஜை மீது முட்டைகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்கள். இறுதியாக ”நீ செய்து காட்டு, பார்ப்போம்,” என்றார்கள். கொலம்பஸ் தன் கையிலிருந்த முட்டையின் ஒரு நுனியைச் சிறிது தட்டி விட்டார். முட்டை இப்போது செங்குத்தாக நின்றது. ”இது என்ன பிரமாதம்?” என்றார்கள் பிரபுக்கள். ”முற்றிலும் உண்மை. ஒருவர் செய்து காட்டிவிட்டால் அப்புறம் எதுவும் பிரமாதம் இல்லைதான்,” என்று கொலம்பஸ் கூறினார்.
தற்காலத் தமிழ் இலக்கியத்தைத் தரம் பிரித்து இனம் கண்டுகொள்ள வாசகர்களுக்கு ஒரு சூழ்நிலை ஏற்படுத்துவதில், அளவிலும் தரத்திலும் தொடர்ந்து ஊக்கம் குன்றாமலிருத்தலிலும் க.நா.சு ஆற்றிய பணிக்கு நிகராக இன்றுவரை யாரும் பணி புரியவில்லை. இந்த விதத்தில் அவர் துணையில்லாதவர். தனியர்.
(நன்றி : கசடதபற பிப்ரவரி 1972)
ஆத்மாநாம் கவிதைகள் இரண்டு
கவிதை தலைப்பிடப் படாதது
இந்தக் கவிதை
எப்படி முடியும்
எங்கு முடியும்
என்று தெரியாது.
திட்டமிட்டு முடியாது
என்றெனக்குத் தெரியும்
இது முடியும்போது
இருக்கும் (இருந்தால்) நான்
ஆரம்பத்தில் இருந்தவன் தானா
ஏன் இந்தக் கேள்வி
யாரை நோக்கி
இன்றிரவு உணவருந்தும்
நம்பிக்கையில் இங்கிருப்பேன்
இப்படியும் ஒரு நம்பிக்கை
இருந்த நேற்று
எனக்கிருண்ட கணங்கள்
அவற்றின் தவளைக் குரல்கள்
கேட்கும் அடிக்கடி
அதனை ஒதுக்கத் தெரியாமல்
தவிக்கையில்
நிகழ்ச்சியின் சப்தங்கள்
செவிப்பறை கிழிக்கும்
நாளை ஓர் ஒளிக்கடலாய்
கண்ணைப் பறிக்கும்
இருதயம்
இதோ இதோ என்று துடிக்கும்.
இன்னும்
புறாக்கள் பறந்து போகும்
கழுத்திலே வைரத்தோடு
கிளிகளும் விரட்டிச் செல்லும்
காதலின் மோகத்தோடு
காக்கைகள் கரைந்து செல்லும்
தானியம் தேடிக்கொண்டு
குருவிகள் கிளுகிளுப் பூட்டும்
கிளைகளில் தவழ்ந்து கொண்டு
பாசிக் கரை படர்ந்த
தாமரைக் குளத்து நீரில்
நீளக்கால் மெல்ல அளையும்
கரை நிழல் கீழமர்ந்து.
பழங்களைக் கடித்துத் தின்ற
அணில்களும் அவ்வப்போது
கேள்விகள் கேட்டாற் போலத்
தலைகளைத் தூக்கிக் காட்டும்
சிவனருள் பூசாரி
குடத்தில் நீரெடுப்பார்
மந்திரம் சொல்லும் வாயால்
தம்மையே நொந்து கொண்டு
கற்புடைப் பெண்டிற் கூட்டம்
அக்கரைக் கற்கள் மீது
ஊர்க் கதை பேசிக்கொண்டு
துணிகளைத் துவைத்துச் செல்லும்
வயல்களுக்கப்பால் இருந்த
சூரியன் மேலே சென்றான்
எருமைகள் ஓட்டிச் சென்ற
சிறுவனின் தலையில் வீழ்ந்தான்.
எதையாவது சொல்லட்டுமா / 32
நான் கடைசியாக நாராணோ ஜெயராமனைப் பார்த்தது தி நகரில் உள்ள ஒரு துணிக்கடையில். அப்போது அவர் எழுதுவதை almost நிறுத்திவிட்டார். பிரமிள்தான் அவர் அங்கு இருப்பதை சொல்லி என்னை நா ஜெயராமனுக்கு அறிமுகப்படுத்தினார். ஜெயராமன் ஜெயின் கல்லூரியில் கெமிஸ்டிரி டிபார்ட்மெண்டில் டெமான்ஸ்டிரேட்டராகப் பணி ஆற்றிக்கொண்டிருந்தார். பின் ஒரு நண்பருடன் சேர்ந்து பார்ட்டனராக ஒரு துணிக்கடை வைத்திருந்தார். அது அவருக்குப் பொருத்தமில்லாத பணி. மேலும் அந்த இடத்தில் எதுவும் போணி ஆகாது. சில பதிப்பாளர்கள் அங்கு புத்தகக் கடை வைத்துக்கூட போணி ஆகாமல் கடையை இழுத்து மூடி விட்டார்கள்.
வேலி மீறிய கிளை என்ற 48 கவிதைகள் கொண்ட தொகுப்பை க்ரியா 1976 நவம்பரில் நாரோணோ ஜெயராமன் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதன் பின் அவர் பெரிதாக எதுவும் எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் எழுத முடியவில்லை என்பதற்கு சொன்ன காரணம்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.
‘எதற்கு எழுத வேண்டும்? ஜே கிருஷ்ணமூர்த்திதான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாரே?’ என்றார். ‘ஏன் ஞானக்கூத்தன், அசோகமித்திரன் கூட எதுவும் எழுத வேண்டாம். அதுதான் ஜே கிருஷ்ணமூர்த்தி ஒரு மாற்று மாற்றி விட்டாரே உலகத்தை.’ நா ஜெயராமனின் இந்தப் பேச்சு சங்கடமாக இருந்தது. ஜெயராமன் 48 கவிதைகளுடன் நின்றுவிட்டார். குறிப்பிடும்படியாக சில கதைகளும் எழுதி உள்ளார். சா கந்தசாமி நாவல் போல் தொலைந்து போனவர்களில் ஜெயராமனும் ஒருவர்.
அவர் புத்தகம் இனி வருவதற்கு வாய்ப்பில்லை. க்ரியா இன்னொருமுறை அவர் கவிதைத் தொகுதியை வெளியிடுமா என்பது தெரியவில்லை. அப்படி வெளியிட்டாலும் யார் இந்த ஜெயராமன். ஜெ கிருஷ்ணமூர்த்தியை தப்பாப் புரிந்துகொண்டு பல எழுத்தாளர்கள் எழுதாமல் போய்விட்டார்கள். பிரமிளால் ஒரு நாவல் எழுத முடியவில்லை. ஜே கிருஷ்ணமூர்த்தி தத்துவம் உள்ளே புகுந்து எழுத்தை எழுதவிடாமல் பண்ணிவிட்டது. அல்லது எழுதுவதில் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விட்டது.
எனக்கு ஜெயராமனின் 48 கவிதைகளாவது இதைப் படிப்பவர்கள் படிக்க வேண்டுமென்ற எண்ணம். அதனால் நான் கொஞ்சம் ஜெயராமனை இதில் இயங்க வைக்கிறேன்.
1. அமிழல்
ஆடாத கிளைமேல்
கரையாமல், சிறகு பரத்தி,
தலை தாழ்த்தி, நீட்டிய அலகால்
இடம், வலமெனச் சொறிந்து நின்றது – காகம்
இருகூறு என இருபக்கம் பிரிந்த
இறகுகள் தொய்ந்து விழும்நிலை பெற்றன-
அகம் பார்க்கும் நிலை இதுவெனத் தெளிவு.
2. நிலை
அமர்ந்திருக்கும் வரப்பு.
வரப்பின் மேல் சிலுக்கும் செடி.
அரக்குச் சிவப்பாய்
ஒளிரும்
மேற்குச் சிதறல்கள்.
அண்ணாந்த கண்
தொலைவில் அதிசயிக்க
வேகம் கொள்ளும் பறவைகள்.
வடப்புறத்தில் நீர்த்தடங்களாய்
முயங்கிக் கிடக்கும் உருவங்கள்.
தொலைவில் மேயும் மாடு.
கன்று
எல்லாமே ஸ்தம்பித்து நிற்கின்றன.
எங்கோ மூலையில்
கட்டிப் போட்ட
வீட்டு நாய் மட்டும்
குரைத்துக்கொண்டே யிருக்கிறது.
3. வானளாவி நின்று
இந்த வானிற்கும்
என் முகம்தான் போலும்!
குளுமையாய் கொஞ்சம் பச்சை.
அல்லது
இள நீலம்.
நரம்பு முறுக்க செஞ்சிவப்பு.
துக்கம் முட்டச் சாம்பல்
நுரை ததும்ப வெள்ளை என
நிறம் காட்டி
வெளியாய் விரிந்து…….
(இன்னும் வரும்)
இரண்டு கவிதைகள்
பிறந்தநாள் 58
ஓடிவிட்டன
நாட்களும், மாதங்களும், ஆண்டுகளும்
கழுத்தில் சுருக்கம்
இளமை இன்னும் மாறவில்லை
என்று அப்போதிருந்து சிந்தனை
ஓட்டம் ஒரே மாதிரிதான்
வானத்தில் நட்சத்திரம் மின்ன
தூரத்தில் தெருநாய் குரைத்தது
வேடிக்கையாக யாரோ
கொட்டாவி விட்டனர்
இன்று 58
@@@@@@@@
ஒரு ரோஜாப்பூவை
சூடிக்கொண்டிருந்த பெண்
என்ன நினைக்கிறாள்
சீர்காழி பஸ்ஸில் ஏறி
சிதம்பரம் போகிறாளா?
வழியில் எங்காவது
இறங்கி விடுவாளா?
அலுவலகம் போகிறாளா?
வகுப்பிற்குச் செல்கிறாளா?
வீட்டிற்குத்தான் போகிறாளா?
ஒற்றை ரோஜா
புத்தம்புது மலராய் மினுமினுக்க
அவள் கன்னத்திலும்
சிவப்பை அள்ளித் தெளித்திருந்ததா?
அவர்கள்..
*
அதன் பிறகு அவர்கள் வரவேயில்லை
ஒரு மௌனத்தை உடைத்து
நிழலை வெயிலில் ஊற்றிய பிறகு
ஒரு கோரிக்கையை
கிழித்துக் குப்பையில் எறிந்தபிறகு
ஒரு புன்னகையின்
அகால மரணத்துக்குரிய
ஈமக் காரியங்களுக்கு பிறகு
கனவின் கூச்சல்களை
மொழிப்பெயர்த்து வாசித்துக் காட்டிய
மனப் பிறழ்வுக்கு பிறகு
ஒவ்வொன்றின் உதிர்விலும்
தடயமற்று போவதிலும்
இருந்த அவர்கள்
அதன் பிறகு
வரவேயில்லை..
சாட்சிகளேதுமற்ற மழை
கதவு யன்னல்களிலிருந்து
வழிகின்றன முகங்கள்
கொட்டப்படும் நீர்த்தாரைகளைப் போல
கைகளில் கட்டப்பட்டிருக்கும்
நுண்ணிய கயிறுகளை அவிழ்த்துக் கொண்டு
பார்த்திருக்கும் அவற்றின் விழிகளில்
நிழலாக அசைகின்றன
பாதையோர மரங்களும்
ஈரப் பறவைகளும் மழையும்
ஒரு தெருச் சண்டையும்
புன்னகையும் சிரிப்பும் எள்ளலும்
சுழிப்பும் முணுமுணுப்பும்
அருவருப்பும் கலந்த உணர்ச்சிகள்
மழைச்சாரலிடையில்
அங்கிங்கு தாவும் தவளைகளைப் போல
அவதானித்திருக்கும் முகங்களில் மாறிட
பேய்களின் வாய்களுக்கெனவே
பிறப்பெடுத்தவை போல
வெளியெங்கும் வீச்சமேற்றுகின்றன
பிணங்களின் வாடையுடனான
அழுக்கு மொழிகள்
இடி வீழ்ந்து
இலைகள் கிளைகள் எரிய
மொட்டையாகிப்போன மரமொன்றென
நடுத்தெருவில் நின்று ஓலமிட்டழுதாள்
மேலாடையுரிக்கப்பட்ட குடிகாரனின் மனைவி
புதைக்கப்பட்ட விரல்களில்
புழுக்களூர்வதைப் போல
நேச உணர்வேதுமற்றவன்
தன் தாக்குதலைத் தொடர்ந்தான்
நத்தைகள் ஆமைகளைப் போல
தங்களை உள்ளிழுத்து
கதவுகளைப் பூட்டிக்கொண்டன
தெருவில் நிகழ்ந்த
கொலையைக் கண்டமுகங்கள்
எதையும் காணவில்லையென்ற
பொய்யை அணியக்கூடும்
இனி அவர்தம் நாவுகள்
பூனைகள்…..பூனைகள்…….பூனைகள்…..பூனைகள்…30
சாபம்
வைதீஸ்வரன்
என்
காலடியில் ஒரு பூனை
கடவுளை வேண்டித்
தவம் இருக்கிறது
என் கை தவறி விழும்
இட்டிலிக்காக.
அதன்
தவத்தை உண்மை யாக்க
நான் குட்டிக் கடவுளாகி
இட்டிலியைத்
தவற விடுவேன்.
பல தடவை நான்
கோணங்கிக் கடவுளாகி
இட்டிலியை கைவிடாமல்
கட்டை விரல் காட்டுவேன்
பொறுமை வறண்ட பூனையின்
அரை வெள்ளைக் கண்களில்
ஒரு நரகம் தெரியும்
விரல் முனையால் சிறிது
பல் முளைக்கும்.
நள்ளிரவில்
இருள் அறுக்கும் ஓலம்
பூனைக் குரவளைக்குள்
ஓரெலியின் இரத்தம்
பீச்சி யடிக்கும்.
கனவுக்குள் நான்
எலியாகி இறந்த பின்பும்,
விழித்துப்
பதறிக் கொண்டிருப்பேன்.
ஏனென்று தெரியாமல்
லதாமகன் கவிதை
அந்த நிலத்தில்
ஒரு பொம்மை இருந்தது.
பிறகு
ஒரு குடில் இருந்தது
பிறகு
ஒரு இடிபாடு இருந்தது
பிறகு
சில பிணங்கள் இருந்தது
பிறகு
ஒரு பங்கீடு இருந்தது
பிறகு
நிறைய சமாதி இருந்தது
பிறகு
ஒரு பிரளயத்தில் எல்லாம் அழிந்தது
பிறகு
அங்கு கடவுள் வந்தார்.