விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 8

9.12.2014
                 விருட்சம் இலக்கியச் சந்திப்பு-8
 நடைபெறும் நாள்                   :      13.12.2014 (சனிக்கிழமை)
நேரம்                 :        மாலை 6 மணிக்கு
இடம்             :    ஸ்ரீ அலர்மேலுமங்கா கல்யாண மண்டபம்
                                           அகஸ்தியர் கோயில் பின்பக்கம்
                                           19 ராதாகிருஷ்ணன் சாலை,
                                          தி. நகர், சென்னை 600 017
   
பொருள்               :         நானும் கதைகளும்
                                      
 உரை நிகழ்த்துபவர்     :                 எழுத்தாளர்   சா கந்தசாமி
(தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய எழுத்தாளர்.  சாகித்திய அக்காதெமி விருது முதல் பல விருதுகளைப் பெற்றவர்.  நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல எழுதி உள்ளார்.  இன்னும் தொடர்ந்து உற்சாகமாக இயங்கிக் கொண்டிருப்பவர்.  அவருடைய சிறுகதைகளைப் பற்றியும், அவரை எழுதத் தூண்டிய அவர் ரசித்த கதைகளைப் பற்றியும், பேச உள்ளார்)
அனைவரும் வருக.
அன்புடன்
அழகியசிங்கர் – ஆடிட்டர் கோவிந்தராஜன்

மழைக்காலம்.


ரவிஉதயன்

தவறி விடுமென்று நம்பிக்கையில்
பயமின்றி
நடுங்கும் கைகளோடு
குறி பார்க்கும் கண்களின்
துப்பாக்கி முனையில் நிற்கிறேன்.
ஊசி மழைத் துளிகள் போல
என்னுள் நுழைகின்றன ரவைகள்.
விரிபடாத குடையை
விரிக்க முயலுகிறவனைப் போல
விலுக்கென்று அப்படியே
நிற்கிறேன்.
காதலாகி கசிகிறது
மழைத்துளிகளின்  ரத்தம்.

ஞானக்கூத்தனும் விஷ்ணுபுரம் பரிசும்….

அழகியசிங்கர்
விஷ்ணுபுரம் விருது இந்த ஆண்டு ஞானக்கூத்தனுக்குக் கிடைத்துள்ளது.  முதலில் அவரை வாழ்த்துகிறேன்.  ஒரு விருது ஒருவருக்கு வழங்கினால், அதனுடைய எல்லாத் தகுதிகளும் அவருக்கு இருக்க வேண்டும்.  ஞானக்கூத்தனுக்கு அந்தத் தகுதி உண்டு.  கவிதை மட்டும் அவர் சிந்திப்பவர்.  விருட்சம் வெளியீடாக அவருடைய முழுத் தொகுப்பையும் நான் கொண்டு வந்துள்ளேன்.  ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற தொகுப்பு வெளிவரும்போது, ஞானக்கூத்தன் எழுதியும் பாதுகாக்காத கவிதைகள் பலவும் தீபம் பார்த்தசாரதியின் வீட்டிற்குச் சென்று (சிஐடி நகரில் உள்ள) பார்த்தசாரதியின் புதல்வரிடமிருந்து தீபம் இதழ்களைத் தேடி அதில் காணப்பட்ட ஞானக்கூத்தன் பல கவிதைகளை கையால் தாளில் எழுதி ஞானக்கூத்தன் கவிதைகள் தொகுதியில் சேர்த்தேன்.  அதன்பின் பென்சில் படங்கள் என்ற இன்னொரு தொகுதியை நானே கணினியில் அடித்துப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன்.  மூன்றாவதாக நான் கொண்டு வந்த அவர் புத்தகம் கவிதைக்காக.  இது ஒரு கட்டுரைத் தொகுதி மொத்தம் 300 பிரதிகள்தான் அடித்து வைத்துள்ளேன்.  கவிதையைப் பற்றி அறிய வேண்டியவர்கள் இப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும்.  படித்தால்தான் தெரியும் கவிதை என்றால் என்ன என்று.  இது ஒரு அருமையான கட்டுரைத் தொகுதி. 
எப்போதும் படிப்பதற்கு எளிமையாக இருக்கும் ஞானக்கூத்தன் கவிதைகள்.  பின் அவர் கவிதைகளில் காணப்படும் அங்கத உணர்வு.  அவர் எந்தக் கவிதை எழுதினாலும் அங்கத உணர்வுடன் கூடிய பார்வையைத்தான் கவிதை மூலம் வெளிப்படுத்துவார்.  இன்று நம் உலகத்தை அப்படிப் பார்ப்பது மிக சிறந்த விஷயமாகத் தோன்றுகிறது.கடைசியில் இந்த உலகத்தில் அடையப் போவது ஒன்றுமில்லை.   எழுதுபவர் பலருக்கு இது வருவதில்லை.  கவிதை மூலம் கஷ்டங்களைச் சொல்வது, கவலையைத் தெரிவிப்பது, பிரச்சாரம் செய்வது, அபத்தமாக கருத்தைத் தெரிவிப்பது என்று பல முயற்சிகள் கவிதைகள் மூலம் நடந்து கொண்டிருக்கிறது.  இதில் வித்தியாசமானவர் ஞானக்கூத்தன்.  அதனால்தான் பாரதிக்குப் பின் முக்கியமான கவிஞராக ஞானக்கூத்தன் தென்படுகிறார்.  கவிதையில் இந்தச் சாதனையை நிகழ்த்திய ஞானக்கூத்தன் போல், உரைநடையில் அசோகமித்திரன் அந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளார்.  இவர்கள் இருவரையும் தமிழ் நல்லுலகம் மறக்கக் கூடாது.  நான் அந்தக் காலத்தில் மாம்பலம் ரயில்வே நிலையத்திலிருந்து பீச் ரயில்நிலையம் வரை செல்லும்போது, பொதுவாக கவிதைகளைப் படித்துக்கொண்டு போவேன்.  அப்படித்தான்ü என்ன மாதிரி உலகம்ý என்ற ஞானக்கூத்தன் கவிதையைப் படித்துக்கொண்டு போனேன். இதோ அந்தக் கவிதை:
என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவதுபோல
கடையா? வீடா? கூடமா? கோயிலா?
என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்
அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்
என்ன மாதிரி உலகம் பார் இது.

கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்

கொடும்பாவி





ப கங்கைகொண்டான்                         






காய்ந்த வைக்கோலால்
கட்டி வைத்துத்
துணி போர்த்தி
கரித்துண்டால்
அரக்கிப் பல்வரிசை
அரக்கன் கொடு மீசை
உடல் முழுதும்
கறுப்புத் தார் அங்கி
தாரை தப்பட்டை
தரங்கெட்ட ஒப்பாரி
செருப்புப் பூக்களால்
செய்த மலர்மாலைச்
செண்டாக்கி
எரியூட்ட
இழுத்து நடப்போரே-
எதற்குக் கொடும்பாவி?
எரிக்கின்ற உடலுக்கோ
இளகாத மனதுக்கோ?

நானும் பார்க்கிறேன் சினிமாக்களை……

அழகியசிங்கர்                                      


நான் பார்த்து ரசித்தப் படம் தி வே ஹோம் ( (THE WAY HOME).).
இந்தப் படத்தை டைரக்ட் செய்தது தென் கொரிய பெண்.  பெயர் லீ ஷியான் ஹியான்.   காது சரியாக கேட்காத வாய் பேச முடியாத 75 வயது  வயதானவளுக்கும், ஏழு வயதுப் பேரனான சாங்க்வுக்கும் ஏற்படும் சமர்தான் இந்தப் படம்.  சாங்க்வின் அம்மா, அவள்  அம்மாவிடம் தன் பையனை சிலகாலம் அவன் பள்ளி விடுமுறையில் விட்டுவிட்டு செல்கிறாள்.  ஒரு பொட்டல் கிராமம்.  அருமையான மலையைச் சுற்றி உள்ளது.  அதிக வசதி இல்லாத மிகக் குறுகலான வீடு.  சாங்க்விற்கு அங்கு தங்குவதற்கே பிடித்தம் இல்லை.  அம்மாவிடம் சண்டை போடுகிறான்.  அம்மா அவனை அடித்து தரதரவென்று அழைத்துப் போகிறாள்.  அந்தக் கிராமத்தில் அதிகமாக மனிதர்கள் இல்லை.  வேறு வழியில்லை சாங்க்வி பாட்டியைப் பார்த்தபடிதான் இருக்க வேண்டும்.
பாட்டி அவனிடம் அன்பை பொழிந்து கொண்டிருக்கிறாள்.  அவனோ அவளைப் பார்த்து அலட்சியப் படுத்துகிறான்.  பொழுது போக்கிற்காக அவன் எடுத்துக்கொண்டு வந்த வீடியோ கேமை விளையாடிக் கொண்டிருக்கிறான்.  வேறு வழியில்லை, பாட்டியுடன்தான் தங்க வேண்டும்.  பாட்டியை என்னதான் கிண்டல் செய்தாலும், பாட்டி அவனிடம் அன்பை காட்டிக்கொண்டிருக்கிறாள்.  போரடிக்கும்வரை வீடியோ கேமை விளையாடுகிறான்.  பேட்டிரி தீர்ந்து விடுகிறது.  வீடியோ கேம் இனிமேல் விளையாட முடியாது.  பேட்டிரி வாங்க பாட்டியிடம் பணம் கேட்கிறான்.  பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.  வீட்டில் பாட்டி எங்கே பணத்தை ஒளித்து வைத்திருக்கிறாள் என்று தேடுகிறான்.  அவனுக்குப் பணம் கிடைக்கவில்லை என்ற நிலையில் வீட்டில் உள்ளவற்றை எடுத்து தூக்கிப் போட்டு கலாட்டா செய்கிறான்.   பணம் கிடைக்காத கோபத்தில் பாட்டியைத் தள்ளிவிடுகிறான்.  கலர் பென்சிலால் சுவர் முழுவதும் பாட்டியைக் கேலி செய்து வரைகிறான்.  பாட்டியின் செருப்பை ஒளித்து வைத்து விடுகிறான்.  பாட்டி அந்தத் தள்ளாத வயதிலும், செருப்பில்லாமல் தண்ணீர் எடுத்து வருகிறாள்.   பாட்டிக்கோ பேரன் மீது கோபமே வருவதில்லை.  பெரும்பாலும் பேசா மடந்தையாக இருக்கிறாள். அவன் தேவைகளை மெதுவாகத்தான் புரிந்து கொள்கிறாள்.
பேட்டிரி வாங்குவதற்காக பாட்டியை விட்டுவிட்டு தனியாக நடந்து கடைக்கெல்லாம் செல்கிறான். விடியோ கேமிற்கான பேட்டரி எங்கும் கிடைக்கவில்லை.  வரும் வழியில் வீட்டிற்கு வரும் வழியைத் தவற விடுகிறான்.அழுதுகொண்டே வருகிறான்.  யாரோ வழிபோக்கர் அவனைப் பத்திரமாகக் கொண்டு வருகிறார். 
பல சம்பவங்களின் கட்டுக்கோப்புதான் இந்தப் படம்.  பாட்டி மீது கோபம் இருந்தாலும், பாட்டிக்கு ஊசியில் நூல் கோர்த்துக் கொடுக்கிறான்.  வேண்டா வெறுப்பாக..
கிராமத்தில் அவன் வயதுடைய ஒரு சிறுமியும், வயல் வேலை செய்யும் சியோல் என்னும் ஒரு பையனும் அவனுக்கு அறிமுகமாகிறார்கள்.  சிறுவர்களுக்குள்ளே நடக்கும் மனப் பேதத்தை அருமையாகக் காட்சிப் படுத்துகிறார் டைரக்டர்.  மாடு பின்னால் துரத்தி வருவதை ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியாக சாங்கவும், அவனது தோழியும் எதிர் கொள்கிறார்கள்.  சியோல் தூக்க முடியாத பாரத்தைத் தூக்கிக் கொண்டு வருகிறான்.  அவனைப் பார்த்த சாங்க்வின் பின்னால் மாடு துரத்துகிறது என்று பொய் சொலலி அவனை துரத்துகிறான்.  பயத்தில் அவன் ஓடும்போது அவன் கீழே விழுந்து அடிப்பட்டு விடுகிறது.  சாங்க்வை அடிக்க வருகிறான்.  சாங்கவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  பாட்டி அவனிடம் செய்கையில் மார்பை சுற்றி கையால் ஆட்டுவாள்.  அதேபோல் செய்கிறான்.  சியோல் ஒன்றும் சொல்லாமல் போய் விடுகிறான்.  
தோட்டத்தில் விளையும் பூசனிகளை எடுத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள ஊருக்குச் சென்று சந்தையில் விற்கிறாள் பாட்டி .  அவளிடம் யாருமே வாங்க வருவதில்லை.  பாட்டி சத்தம் போட்டு  விற்கிறாரள்.  சாங்கவி பாட்டியையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  பூசனியை விற்றப் பணத்தில் பாட்டி சாங்க்விக்கு கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறாள்.  பாட்டி மீது காரணம் இல்லாத கோபமாக இருக்கும் சாங்க்வி பாட்டி மீது அன்பைப் பொழிய ஆரம்பிக்கிறான்.    
பாட்டி மீது கோபம் இருந்தாலும், பாட்டியை முதலில் தவிர்க்க முடியவில்லை.  உதாரணமாக பாட்டி ரொம்பவும் களைப்பாகி படுத்து விடுகிறாள்.  பாட்டிக்கு இறந்து விட்டாளோ என்று பயப்படுகிறான் சாங்க்வி.  பாட்டியின் முகத்தில் கை வைத்துப் பார்க்கிறான்.  பயத்தால்.  இன்னொரு இடத்தில் சந்தைக்குப் போய்விட்டு திரும்பி வரும்போது பாட்டி சாங்க்வியை அவனுடைய நண்பர்களுடன் பஸ்ஸில் அனுப்பி விடுகிறாள்.  பாட்டி ஏன் வரவில்லை என்பது சாங்க்விக்குப் புரியவில்லை.  வீட்டுக்கு வந்தவுடன், பாட்டியை எதிர்பார்த்த சாங்க்வி பஸ் வருமிடத்தில் நின்றுகொண்டு ஒவ்வொரு பஸ்ஸக பாட்டி வருகிறாளா என்று பார்த்துக் கொண்டிருக்கிறான்.  பாட்டி வரவில்லை என்றவுடன் அவனிடம் பதட்டம் கூடி விடுகிறது.  பாட்டி நடந்து வருவதைப் பார்த்து வருத்தப் படுகிறான்.  
பேரன் என்ன குறும்பு செய்தாலும், பாட்டி அவன் மீது அன்பை காட்டத் தவறுவதில்லை.  நேர் மாறாக தன் அம்மாவிடம் கிடைக்கும் தண்டனையும், பாட்டியிடம் காணும் அன்பும் அவனை மாற்றுகிறது.  பாட்டியை விட்டு, அந்தக் கிராமத்தை விட்டு பிரியும்போது அவன் மனம் பேதலிக்கிறது.  பாட்டிக்காக வருத்தப் படுகிறான்.  பாட்டியைப் பிரியப் போகிற சமயத்தில் பாட்டிக்காக இரண்டு அட்டையில் இரண்டு வாசகங்களை எழுதி பாட்டியிடம் கொடுக்க விரும்புகிறான் ஒரு அட்டையின் வாசகம்  I am sick.  இன்னொரு அட்டையின் வாசகம் : I miss you.  .  பாட்டியைப் பிரிந்து அவன் அம்மாவுடன் செல்லும்போது பாட்டி நினைவாகவே இருக்கிறான்.  பஸ்ஸிலிருந்து திடீரென்று இறங்கி வேகமாக பாட்டியிடம் ஓடிப்போய் அந்த இரண்டு அட்டைகளைக் கொடுக்கிறான்.பஸ்ஸிலிருந்து பாட்டி செல்வதையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  பாட்டியும் வருத்தத்துடன் செல்கிறாள்.  பேரன் கொடுத்த அட்டைகளைத் திரும்பி திரும்பிப் பார்க்கிறாள்.
கொஞ்சங்கூட போரடிக்காமல் ரொம்பவும் பிரமாதமாக எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் படம் வெளிவந்து 12 ஆண்டுகள் ஓடிவிட்டன.  இன்னும்கூட இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்க முடியும்.  

கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்

திட்டமற்ற….

எஸ். வைதீஸ்வரன்

வானம் கட்டுப்பாடற்று,
பெற்றுத் திரியவிட்ட
மேகங்கள்,
பொல்லா வாண்டுகள்.
நினைத்த இடத்தில, கவலையற்று,
நின்ற தலையில் பெய்து விட்டு,
மூலைக்கொன்றாய் மறையுதுகள்,
வெள்ளை வால்கள்

கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்

மூன்று ஜப்பானியக் கவிதைகள்

நடவு நடும் பெண்கள்
பாடும் பாட்டுகளிலே மட்டும்தான்
சேறு பட்டிருக்கவில்லை

                           – கொனிஷ் ரெய்லான்

முடியாது –
மனித உள்ளத்தை
யாரும் சரிவரப்
புரிந்து கொள்ள முடியாது.
ஆனால்
நான் பிறந்த ஊரில்
மலர்கள்
முன் போலவே
மலர்ந்து
மணம் வீசுகின்றன.

                          – ஸராயுகி

யாரோ கிழவன்
     – நான் அறியாத அந்நியன் –
என்னைத் தடுக்கிறான்
நான் கண்ணாடியில்
       பார்த்துக் கொள்ளும்போது

                          – ஹீடோமாரோ

                            தமிழில் :  க.நா.சு

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் ஆறாவது கூட்டம்


                                                              
அழகியசிங்கர்


 25.10.2014 சனிக்கிழமை அன்று நடந்தது.   தமிழில் கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் இரா முருகன் அவர்கள் தலைமையில் இக் கூட்டம் இனிதாக துவங்கியது. 
கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக விருட்சம் ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கும் சிறுகதையைப் பற்றிய பின்னணியுடன் ஆரம்பமானது. 
உயிர்எழுத்து செப்டம்பர் மாதம் வெளிவந்த புதுச் சட்டை என்கிற ப முகமது ஜமிலுதீனின் கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.  அதைப் பற்றிய குறிப்பை அடியேன் வாசித்தேன்.
பின், தேனுகா, ராஜம் கிருஷ்ணன் மறைவை ஒட்டி ஒரு நிமிடம்  மௌன அஞ்சலி நடத்தினோம். 
ஒரே மழை பயமாக இருந்ததால் கூட்டம் எங்கே நடக்காமல் போய்விடுமோ என்ற அசசம் எங்களை விட இரா முருகனுக்கு அதிகமாக இருந்தது.  நல்லகாலம்.  கூட்டம் இனிதே நடந்து முடிந்தது.
இரா முருகனின் விஸ்வரூபம் என்ற மெகா நாவலை  தினமும் சில பக்கங்கள் என்று படித்துக் கொண்டு வருகிறேன்.  எப்போது முடிக்கப் போகிறேன் என்பதை அம்பலப் புழை ஸ்ரீகிருஷ்ணன்தான் அறிவார்.
எனக்கு இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.  காஞ்சிபுரத்தில் வே நாராயணன் என்ற ஒருவர் இருந்தார்.  அவர் ஒவ்வொரு மாதமும் இலக்கியக் கூட்டம் நடத்துவார்.  கூட்டம் முடிந்தவுடன் யார் யார் என்னன்ன பேசினார்கள், என்னன்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதை கொஞ்சங் கூட பிசகாமல் கூட்டம் முடிந்தவுடன் ஒப்பிப்பார்.  
நானோ அதுமாதிரி செய்ய இயலாதவன்.  மேலும் கூட்டத்தில் பேசாத விபரத்தையும் கூட்டத்தில் பேசியதுபோல் சொல்லக் கூடியவன்.  அந்தக் காலத்தில் கணையாழி குறுநாவல் போட்டியில் ஜெயமோகன், பாவண்ணன், இரா முருகன், சுப்ரபாரதி மணியன், அழகிய சிங்கராகிய நான் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குறுநாவல்கள் கணையாழியில் படைத்துக் கொண்டு வருவோம்.  அதில் ஜெய மோகனும், இரா முருகனும் பிடிக்க முடியாத இடத்திற்குப் போய்விட்டார்கள். அப்படியென்றால் என்ன?  அதிகப் பக்கங்கள் கூடிய குண்டு குண்டு நாவல்களை எழுதி தள்ளுகிறார்கள்.  ஜெயமோகன் பிடிக்க முடியாத வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்.  இரா முருகனின் விஸ்வரூபம் நாவலை எப்போது படித்து முடிப்பேன் என்று தெரியவில்லை.  இந்தக் கூட்ட முடிவில் நான் அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன்.  ‘இத்தனைப் பக்ககங்கள் உடைய நாவலை எப்போது படித்து முடிப்பது’ என்று.  அது ஒரு பிரச்சினை இல்லை என்பதுபோல்தான் இரா முருகன் குறிப்பிட்டார்.  
இரா முருகன் நாவல் மட்டுமல்லாமல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று பல தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பவர்.  முதலில் பேச ஆரம்பித்தபோது எப்படி எழுதவே தெரியாத அவர் எழுத்துத் துறைக்கு வந்தார் என்பதைக் குறிப்பிட்டார்.  கிட்டத்தட்ட 2 மணிநேரம் இரா முருகன் தம் கட்டி பேசியது ஆச்சரியமாக இருந்தது.  ஆனால் கேட்பவர்களுக்கு கொஞ்சங்கூட அவர் பேசியது அலுக்கவில்லை என்பது நிஜம்.  வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாகவே வந்தது.  எத்தனை எண்ணிக்கை என்பதை உங்களுக்குச் சொல்லப் போவதில்லை.  
நடிகர் கமல்ஹாசனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு, எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்த நிகழ்ச்சி என்றெல்லாம் குறிப்பிட்டார்.  அவர் சில படங்களுக்கு திரைக்கதை வசனமும் எழுதி உள்ளார்.  கிரேஸி மோகன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாடகம் ஒன்றும் எழுதி உள்ளார்.  டிவியில் சீரியல் எழுதுவதையும் இப்போது ஆரம்பித்திருப்பதாகக் கூறி உள்ளார்.  அவர் முதலில் கதை எழுதத் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர்களில் அவர் கல்லூரியில் வகுப்பெடுத்து இளம்பாரதி என்ற ஆசிரியர் என்று குறிப்பிட்டுள்ளார்.பின் மீரா.  இரா முருகன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, இரவு பத்து மணிக்கு மேல் மேலை வீதியிலிருந்து கீழ வீதிக்கு நடை பயிலும் கறுப்பான உருவம் என்றெல்லாம் குறிப்பிட்டுப் போகிறார்.  
அவர் பேசியதை SONY RECORDER மூலம் பதிவு செய்துள்ளேன்.  இதை எப்படி இத்துடன் இணைப்பது என்பது மட்டும் எனக்கு இன்னும் தெரியவில்லை.  யாராவது ஒரே ஒரு முறை உதவி செய்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.  

இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது

ஷஸிகா அமாலி முணசிங்க

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
கன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில்
உடைந்து தெறித்தது மலையின் சிரசு
இடையறாது குருதியோடும் சதுப்பு நிலமாய் இதயம்
புதைந்தது குளிர்ந்த பள்ளத்தாக்கினிடையே
அருளும் பாதுகாப்பும் தரும்படி நாம்
உருவச் சிலைகளுக்கு மலர் வைக்கும்போதும்
நேசித்த மலை பற்றியே முணுமுணுத்தோம்
தென்னோலைக் கூரையினூடே தென்படும் வானத்தை நோக்கி
வசந்தங்களைக் கேட்டபோதும்
உழைத்துத் தேயும் கரங்களுக்குக் கிடைக்காது ஒருபோதும்
எனவே இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது
உறங்குகிறேன் மண்ணின் கீழே வழமைபோலவே

குறிப்பு – அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது
உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும் !

அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

எம்.ரிஷான் ஷெரீப்

கழுத்து நீண்ட வாத்துக்கள் பற்றிய உன் கதையாடலில்
சாவல் குருவிக்கு என்ன திரை
அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்
அடித்த சாரலில்
வண்ணத்துப் பூச்சியின் நிறம் மட்டும் கரைந்தே போயிற்று
நல்லவேளை சருகுப் பூக்கள் அப்படியேதானே

பிறகென்ன
வற்றிய ஆழக் கடல்களின் நிலக் கரையில்
துருப்பிடித்துப் பாதி மணலில் மூழ்குண்ட
நங்கூரங்களின் கயிற்றோடு
உப்புக் கரித்துத் தனித்திருக்கின்றன சிதிலப் படகுகள்

அந்தி மாலையில் தூண்டிலிட்டமர்ந்து
வெகுநேரம் காத்திருக்கும் சிறுவன்
பாரம்பரிய விழுமியங்களைப் போர்த்தி
உணவு தயாரிக்கும் இளம்பெண்
நிலவொளியில் புயல் சரிக்க
போராடி அலையும் பாய்மரக் கப்பல்
அழிந்த மாளிகை
அசையாப் பிரேதம்

அது என் நிலம்தான்
உன் மொழி வரையும் ஓவியங்களில்
எல்லாமும் என்னவோர் அழகு

உண்மைதான்
மந்தையொன்றை அந்தியில்
நெடுந் தொலைவுக்கு ஓட்டிச் செல்லும்
இடையனொருவனை நான் கண்டிருக்கிறேன்
நீ சொல்வதைப் போல
காலத்தை மிதித்தபடிதான் அவன் நடந்துகொண்டிருந்தான்
நெடிதுயர்ந்த மலைகள்
உறைந்துபோன விலங்குகளைத்தான் தின்று வளர்கின்றன
ஆகவே மலைக் குகை வாசல்களில் அவன் அவைகளோடு
அச்சமின்றி ஓய்வெடுத்தான்

சொல்
மெய்யாகவே நீ கனவுதான் கண்டாயா

என்னைக் கேட்டால்
வாசப் பூஞ்சோலை
சுவனத்துப் பேரொளி
தழையத் தழையப் பட்டாடை
தாங்கப் பஞ்சுப் பாதணி
கால் நனைக்கக் கடல்
எல்லாவற்றிலும் நேர்த்தியும் மினுமினுப்பும்
தேவையெனில் அமைதியும்
தேர்ந்தெடுத்த மெல்லிசையும் என
எல்லாமும் இன்பமயம் என்பேன்

அத்தோடு
இன்னும் கூட இரவு
தினந்தோறும் கொஞ்சம் இருட்டை
எனக்காக விட்டுச் செல்கிறது கிணற்றுக்குள்
என்பதைச் சொல்வேன்
வேறென்ன கேட்கிறாய்

இலையுதிர் காலத்து மரத்தின் வலி
அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை