ஸ்டெல்லா புரூஸ்

மார்ச்சு ஒன்றாம் தேதி 2008ல் ஸ்டெல்லா புரூஸ் என்கிற ராம் மோஹன் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதம்.

“கடந்த 67 வருட எனது வாழ்க்கை பற்றி வருத்தங்கள் இல்லை.  எளிய, உண்மையான, அடக்கமான மனிதனாக ஆடம்பர சிந்தனை துளியும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன்.  கண்ணை இமை காப்பதுபோல் என்னை பார்த்து அலாதியான காதலுடன் நேசித்து பத்திரப்படுத்தி, அபூர்வ, ஆனந்த மனைவியாக என் மனைவி ஹேமா வாழ்ந்தார்.

எத்தனை பிறவியானாலும் இதை மறக்க மாட்டேன்.  நானும், அவளும் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமான, ஆன்மீகமான இலக்கிய தன்மையான காவியம். ஹேமாவின் துணை இல்லாத வாழ்க்கை சூனியமாக இருக்கிறது.  என்னால் அதை தாங்க முடியவில்லை.  தனிமை சிறை கடும் தன்மையாக என்னை நெரிக்கிறது.  எனவே நான் ஹேமாவிடம் செல்கிறேன். மரணத்தின் கதவுகளை திறந்து, வாழ்க்கை தண்டனை ஆகிவிடும்போது மரண விடுதலை பெறுகிறேன்.”

அவர் மரணம் அடைந்து 7 வருடங்கள் ஓடி விட்டன.  

புத்தக விமர்சனம் 2

                                                        அழகியசிங்கர்

நந்தாகுமாரன் என்ற கவிஞர் üமைனஸ் ஒன் – 1ý என்ற கவிதைத் தொகுப்பை எனக்கு அனுப்பியிருந்தார்.  உடனே நானும் அவர் கவிதைகளைப் படித்து அது குறித்து சில குறிப்புகளை எழுதி வைத்திருந்தேன்.  பின் அத் தொகுப்பையும், குறிப்பையும எங்கோ வைத்துவிட்டேன்.  உடனே எழுத முடியாமல் போய்விட்டது.  
இத் தொகுப்பைப் பற்றி எதாவது எழுதியே தீர வேண்டுமென்ற எண்ணத்துடன் திரும்பவும் அவருடைய புத்தகத்தையும், நான் எழுதி வைத்த குறிப்புகளையும் தேடிக் கண்டுபிடித்தேன்.  
இந்தப் புத்தகத்தில் அவர் 89 கவிதைகள் எழுதி உள்ளார்.  அவருடைய கவிதைகள் எல்லாம், எல்லாப் பத்திரிகைகளிலும் பிரசுரம் ஆகி இருக்கின்றன.  வெகு சுலபமாக வார்த்தைகளை வைத்து கவிதைகளில் விளையாடி இருக்கிறார்.  அவர் இப்படியே எழுதிக்கொண்டு போனல் ஒரு ஆயிரம் கவிதைகளாவது எழுதி இருப்பார்.  
நான் அப்போது எழுதி வைத்த குறிப்புகளை இப்போது ஒவ்வொன்றாய் அடுக்குகிறேன்.
– நந்தாகுமாரன் கவிதைத் தொகுதி எல்லா விதங்களிலும் வித்தியாசமாக இருக்கிறது;
– தன் முதல் கவிதைத் தொகுதியில் நந்தா பல தகவல்களை அலட்சியமாக அலசுகிறார்.  பல இடங்களில் கவிதை அவரிடமிருந்து நகர்ந்து அவரை நோக்கியே விரைகிறது
– நீ நான் என்று பெரும்பாலான கவிதைகளில் ஒரு சொல்லாடலை உருவாக்குகிறார்.  அதன் மூலம் அவர் சொல்ல வருவதுதன் கவிதை.  கவிதையின் ஒத்தக் குரலாக அவர் தென்படுகிறார்.
– அவர் கவிதைகளில் அவருடைய üநான்ý அவரைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது.  கவிதை தன் வயமாக நகர்ந்து போய்க் கொண்டிருக்கிறது.   உதாரணமாக, காட்சி ஒன்று என்ற கவிதை (பக்கம் : 13)
ஏதோ ஒரு செடி
ஏதோ ஒரு பயன்
தொட்டியில் இருப்பதால்
என்ன என்ற கேள்வி
‘நான்’ எப்போதாவது
கொப்பளித்துத் துப்பிவிடும் நீரை
ஆவேசமாக உறிஞ்சும்
அதன் Survival
இன்னொரு உதாரணம் :  üஇங்கே நான்ý  (பக்கம் 12) என்ற கவிதை.
வானத்தை சுருட்டி 
பைக்குள் போட்டுக்கொண்டேன்
கடலை நான்காக மடித்து
பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டேன்
மலைகளைப் பொறுக்கி
மடியில் கட்டிக் கொண்டேன்
பூமியை
எட்டி
உதைத்தேன்
‘நான் யார்’
திரும்ப  திரும்ப நான் இவர் கவிதைகளில் இவரிடம் வந்து தொந்தரவு செய்கிறது.   இவர் எதிரில் யாரோ இருப்பதுபோல் நினைத்து இவர் அதிகமாக கவிதைகள் எழுதித் தள்ளியிருக்கிறார்.  அப்படி எதிரில் இருப்பவர், இவர் காதலியோ மனைவியோ இருக்கலாம்.
கவிதைகளைப் பற்றி கவிதைகள் எழுதுவது திகட்டுகிற ஒன்று.  இவர் அதிகமாக அதுமாதிரி கவிதைகள் எழுதித் தள்ளியிருக்கிறார்.  பின் சோதனை முயற்சியாக பல கவிதைகள் எழுதியிருக்கிறார்.  இவருடைய பெரும்பாலான கவிதைகளில் ஆங்கில சொற்கள் அதிகமாக நெளிந்து கொண்டிருக்கின்றன.  இவர் இலக்கில் கவிதை பிடிபடாமல் சுழன்று சுழன்று சுற்றிக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது.
கவிதை என்றால் எதை வேண்டுமானாலும் எழுதலாம்.  ஒருமுறை எழுதியதை திரும்பவும் எழுதாமல் இருக்க வேண்டும். 
நம் எதிரில் யாரோ இருக்கிறார்கள் என்று நினைக்காமல் பொதுவான தன்மையுடன் கவிதைகள் எழுத வேண்டும்.  நந்தாகுமாரனுக்கு என் வாழ்த்துகள்.
மைனஸ் ஒன் – 1 – கவிதைகள் – நந்தாகுமாரன் – பக்கம் : 111 – விலை ரூ.90 – உயிர்மை பதிப்பகம், 11 /29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18 
 

மொட்டை மாடியில் தொட்டிப் பூவோரம்.. (காதல் கவிதை)


வித்யாசாகர்

1

மாடி மேலேறி
ஆண்டெனா திருப்ப வருவாய்
நான் கூரை மேலேறி
கோழி தேடுவேன்
கோழியும் கிடைத்ததில்லை
ஆண்டெனாவும் திரும்பியதில்லை
கூரைக்கும் மாடிக்கும் தெரியும்
நாம் யாரை தேட வந்தோமென்று..
——————————————————-
2
மொட்டைமாடியில்
பூ பூத்திருக்கும்
நான் எட்டிப் பார்ப்பேன்
மழை வரும்
மழையில் நீ நனைந்து ஓடி
கொடியில் போட்ட துணிகளை எடுப்பாய்
உன்னம்மா மேலேறி வந்து
நீ என்ன செய்கிறாய் என்பாள்
நான் பூ பார்க்க
வந்தேனென்பேன்
அவளுக்கு தெரியும் அது
எந்தப் பூவென்று
அசடு நீ தான்
தெரிந்திருக்கமாட்டாய்; நான்
உன்னைப் பார்க்க வந்ததை..
——————————————————
3
ஒளியும் ஒலியும் பார்க்க
ஓடிப்போய் அமர்வோம்..
முதல் பாட்டு
வரும் நீ என்னையேப் பார்ப்பாய்
இரண்டாவது பாடல் வரும்
நான் உன்னையேப் பார்ப்பேன்
விளம்பரம் மாற மாற
எல்லோரும் மாறி மாறி அமர்வார்கள்
நீயும் நானும் அதே இடத்தில்
அமர்ந்திருப்போம்
நமக்குள் ஒரு பாடல்
ஓயாது ஒலித்துக் கொண்டேயிருக்கும்..
——————————————————
4
எல்லோரும் கடற்கரைக்குப்
போகையில் அலைமிதித்து
வருவார்கள்
நான் கரையிலமர்ந்து
உனது பேரெழுதி எழுதி அழிப்பேன்
மீண்டும் மீண்டும்
உன் பேரெழுதுவதில்
அவ்வளவு சந்தோஷம் வரும்..
அலைகள் வந்து வந்து
போவதைப்போல
நீயும் போய் போய் வருவாய்..
எனக்குள்
இருந்துக்கொண்டே இருப்பாய்..
——————————————————
5
மதிய உணவு
கட்டிப்போனால்
திறக்கையில் உன் முகம் தெரியும்
மேலே வானத்தைப்
பார்த்துவிட்டு திரும்பி
காற்றை தொடுவேன்
காற்றில் உன் வாசம்
மணக்கும்
உணவை
மூடிவைத்து விட்டு
ஓடிவந்து
உன் வகுப்பறை ஓரம் நிற்பேன்
நீ சாப்பிட்ட உணவை
பாதியில் மூடி பையில் வைத்துவிட்டு
கைகளை நீட்டி
காற்றை தொடுவாய்
எனக்கு
பசியெல்லாம் பறந்துபோகும்
மனசெல்லாம் நீயே நீயே நிறைவாய்..
——————————————————
6
எப்போதும் எஸ்எம்எஸ் வரும்
ஏர்டெல் விளம்பரமென்றெண்ணி
விட்டுவிடுவேன்
இப்போது
ஏர்செல் விளம்பரம் செய்தால்கூட
நீயா இருக்குமோ
என்று திறந்துப் பார்க்கிறேன்

புத்தக விமர்சனம்

                                                      அழகியசிங்கர்



சமீபத்தில் நான் படித்த ஒரு நாவல் எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் என்ற நாவல்.  375 பக்கங்கள் கொண்ட இந் நாவலைப் படிக்க சில நாட்கள் ஆயிற்று.  ஒரே சமயத்தில் இப்போதெல்லாம் என்னால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை.  
இந் நாவல் குறித்து இரண்டு கருத்துகளை அறிய முடிந்தது.  இப்புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு நான் சென்றேன்.  இந் நாவலைப் பற்றி ராமகிருஷ்ணன் ஒன்று சொன்னார்.  அவருக்கு இசையைப் பற்றி  ஒன்றும் தெரியாதாம்.  இசையை ரசிப்பது வேறு; இசையைப் பற்றி நுணுக்கம் தெரிந்து கொள்வது வேறு.  இந்த நாவலுக்காக இசையைப் பற்றி தெரிந்த நண்பர்கள் பலரைத் தொடர்பு கொண்டு பல விஷயங்களûத் தெரிந்து கொண்டாராம்.  எனக்கு அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.  இந்தப் புத்தகததை வாங்கி வைத்துக்கொண்டிருந்த நான், எப்படி இப் புத்தகத்தில் இசையைப்ப் பற்றி அதுவும் நாதஸ்வரம் வாசிப்பைப் பற்றி எழுதியிருக்கிறார் என்பதை அறிய ஆவலாக இருந்தது.
இன்னொரு விஷயம்.  இப் புத்தகத்தை அந்த அரங்கில் விமர்சனம் செய்த ஒருவர் இப் புத்தகத்தின் எந்தப் பகுதியும எடுத்து வாசிக்கலாம் என்றார்.  அதாவது முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் என்பது இல்லை என்று.  மொத்தம் 33 அத்தியாயங்களாக மொத்தம் 375 பக்கங்கள் வரை எழுதியிருக்கிறார்.  அந்த விமர்சகர் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.  ஆனால் நாவல் ஆரம்பமும், முடிவும் முக்கியம்.  நடுவில் பல அத்தியாயங்களில் பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போனாலும், இந்த இரண்டு முனைகளும் சேராமல் நாவலை படித்தத் திருப்தி வராது.  
இந் நாவலைப் படிக்கும் போது, நாவல் கரிசல் கிராமத்தைச் சேர்ந்த நாதஸ்வரக்காரர்களைப் பற்றி சொல்கிறதா என்ற சந்தேகம் வருகிறது.  உண்மையில நாவல் ஜாதி கலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகப் படுகிறது.  
நாவலை அதன் மூலமாகச் சொல்லாமல், நாதஸ்வரம் வாசிக்கிற கலைஞர்களைப் பற்றி சொல்லிக் கொண்டு போகிறார்.  கதையை விறுவிறுப்பாக எழுதிக்கொண்டே போகிறார்.  ஒவ்வொரு அத்தியாயம் மூலமாக ஒவ்வொரு கதை மாதிரி பல கதைகளை நாதஸ்வரம் இசைக் கருவியை மையமாக வைத்து அடுக்கிக் கொண்டு போகிறார்.  இவர் எழுத்தைப் படிக்குமபோது,  இசையைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒரு மேதாவி எழுதுவதுபோல் எழுதிக் கொண்டு போகிறார்.  
நாவலின் 100வது பக்கத்தில் சாமிநாதப் பிள்ளையைப் பற்றி சொல்கிறார்:  …….மனுசன் நிக்குற வெறிய பார்த்தா நரசிம்மம் மாதிரி நம்ம வயிற்றைக் கிழித்துப் போட்டுறப் போறானோனு.  ஆனா அவர் ஒண்ணுமே செய்யலை.  சீவாளியை எடுத்து வாயிலே வச்சார்.  தோடி வாசிக்கத் துவங்கியதம் மேகத்துல சஞ்சரிக்கிறது மாதிரி எல்லோரும் மிதக்க ஆரû;பிஞ்சாங்க.  அப்படியொரு பிரவாகத்தை அவர்கள் கேட்டதேயில்லை.  பனங்கள்ளுல விழுந்த ஈ மாதிரி கிறங்கிப் போயிருந்தார்கள்.  வாசிதர்து முடியும்போது இரவு மணி இரண்டரை, பலலக்கிலிருந்து சிவனும் அத்தனை நேரம் வீதியிலே நின்று கொண்டிருந்தார்.  ஆனால் அவர் வாசித்து முடித்தவுடன் ராமஸ்வாமி போய் அவரது காலில் விழுந்து இத்தனை நேரம் தான் இசைத்த அத்தனையும் அழித்து மெழுகிவிட்டீர்கள்.  இதுக்கு மேல் சொல்ல எதுவுமில்லை எனக் கண்ணீர் மல்கினார்.
சாமிநாதபிள்ளை எதுவும் பேசவில்லை.  விடுவிடுவென தனது நாதஸ்வரத்தை அதே இடத்தில் வைத்துவிட்டு நடந்து போய்விட்டார். üüநமக்கு அதிர்ஷ்டமிருந்தாதான் அவர் இசையைக் கேட்க முடியும். பொன்னும்மணியும் கொட்டி குடுத்தாலும் அந்த வாசிப்பு கிடைக்காதுஞிýý….ஒவ்வொரு அத்தியாயத்திலும் ராமகிருஷ்ணனின் கதைகள் தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை உண்டாக்கிறது.  
இது நாதஸ்வரன் என்ற இசைக்கருவியுடன், பலவித இன்னல்களைச் சுமந்து வாழும் மனிதர்களைப் பற்றிய கதை.  இக்  கதையைப் படிக்கும்போது, சோகத்துடன் சுவையும் மிளிர்கிறது.  இசையைப் பற்றி தெரியாதவர் மாதிரி ராமகிருஷ்ணன் தெரியவில்லை.  அதிலேயே அவர் ஊறியவர் மாதிரி அவர் எழுத்து மூலம் தெரியவருகிறார்.
ஞ்சாரம் – நாவல் – எஸ் ராமகிருஷ்ணன் – 375 பக்கங்கள் – விலை ரூ.370 – உயிர்மை பதிப்பகம், 11,29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18  



சந்திரா மனோகரன் .

               
               
                     1.  என்னைக்  காண வில்லையென்று 

                    அவள்  அவளுக்குள்  தேடிக் கொண்டிருந்தாள் 

                     உறுமும்  புலிபோல்  நான் 

                    தப்பித்துவிட்டேன் 

                    எனக்குக்  கூண்டுவாழ்க்கை  பிடிக்காது 

                     அவள்  என்னைமட்டும்  தேடியிருந்தால் 

                    விலகிவந்திருக்கமாட்டென் , ஒருவேளை 

                     என்னைக்  கொல்வதற்குப்  பயன்படும் 

                    ஒரு  கூராயுதம்  அத்தருணத்தில் 

                     அவள்  கைக்கு  சிக்காமலிருந்தது .

                2.  மான்கள்  துள்ளும்  புல்வெளியில் 

                     என் தேடல்  விரிந்துகொண்டே  போயிற்று 

                     பெருகும்  ஈரப்  பனிபோல .

                      வேட்டைக்காரனின்  மிதியடிகளில் 

                     என் ரத்த  நாளங்கள்  நசுங்கின .

                     அவன்  காலடியோசையின்  மிரட்சியில் 

                     எங்கோ  தொலைவில்  ஓர்  அலறல் 

                     எனக்கு  ஒன்று  புரியவில்லை 

                     அழகு  புள்ளிமானின்  தோலை  மட்டும் 

                     யாருக்காகவோ  விட்டுச்  சென்றிருக்கிறான் .

                 

                 3.   சாமங்கியும்  சம்பந்தியும்  அவரைப்பூ  நிறமும் 

                        வருகிறாள்  அவள்  தீயின்  நாக்குபோல !

                        வளைக்கரங்களில்  ததும்பும் 

                        தேநீர்க் கோப்பைகளும் , திகட்டாத  பார்வையில் 

                        குழைந்து  குழைந்து  வரும்  வாசமும் 

                        நீருக்காக  ஏங்கும்  வேர்களைப்  போன்றவனுக்கு 

                        வெற்றுத்  தாளில்  வடிந்த 

                         வெறும்  கவிதைகளாகத்தான் ….

                         குப்பைக்கூடை  நிரம்பி  வழிகிறது 

                        அவன்  மனதைப்போலவே .

விருட்சம் தேர்ந்தெடுத்த மனதுக்குப் பிடித்த கதைகள்

   அழகியசிங்கர்

அக்டோபர் மாதத்தில் ஏகப்பட்ட கதைகள்.  ஐந்தாறு கதைகளில் பாவண்ணனின் அப்பாவின் சைக்கிள் என்ற கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
ஆனால் நவம்பர் மாதத்தில்அக்டோபர் மாதம் மாதிரி கதைகள் கிடைக்கவில்லை.  இரண்டே இரண்டு கதைகள் மட்டும் கிடைத்தன.  அதாவது இலக்கியத் தரமான கதைகளை மற்ற கதைகளுடன் பிரித்து கண்டுபிடிப்பதுதான் முக்கிய பணியாக இருந்தது.  
பெரும்பாலான பத்திரிகைகள் கதைகள் என்று பலவற்றைப் பிரசுரம் செய்கிறார்கள்.  அக் கதைகளைப் படித்தாலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  
நான் கண்டு பிடித்த இரண்டு கதைகளில் ஒன்று தீராநதியில் இரா முருகன் எழுதிய கல்லத்தி என்ற கதை.  இரண்டாவது கதை சுகா எழுதிய ராயல் டாக்கீஸ் என்ற கதை.
ஒவ்வொரு முறையும் ஒரு சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கும்போது இன்னொரு கதையும் நிழல் போல் தொடரும்.  போனமுறை ஒரு சிறந்த கதையுடன் நாலைந்து கதைகள் தொடர்ந்து கிடைத்தன.  
இந்த முறை ஒரே ஒரு கதைதான் தொடர்ந்து வந்தது.  இறுதியில் சுகா எழுதிய ராயல் டாக்கீஸ் என்ற கதையைத்தான் தேர்ந்தெடுக்க முடிந்தது.  அந்தக் கதையின் ஆரம்பமே தமபி என்ற ஒரு கதாபாத்திரத்தை அதிகம் பேசாத மற்றவர்கள் அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி அதிகம் பேசுகிற மாதிரி அறிமுகப் படுத்தப்படுகிறது.  தம்பி என்கிற பாத்திரம் தன்னுடைய மனக் குமறல்களை வெளிப்படையாக யாரிடமும் சொல்லாமல், இறுதியில் ஒரே ஒரு வாக்கியத்தால் தன் துயரத்தை வெளிப்படுத்துகிறது.  “ராயல் டாக்கீஸ் இல்லாத ஊர்ல என்னால இருக்க முடி0யுமால?”

என்று.

கதையை அதற்குமேல் இழுக்காமல் விட்டுவிடுகிறார் கதாசரியர்.  அவருக்குப் பாராட்டுகள்.  நவம்பர் மாதம் சிறந்த கதையாக இதைத் தேர்ந்தெடுத்துள்ளோம். 
இதுவும் ஆனந்தவிகடனில் வெளிவந்த கதை.

ஒரு பனித் துளி ஈரம்

எம்.ரிஷான் ஷெரீப்

இலைகளை உதிர்த்தழும் விருட்சங்களைத் தடவிக் கொடுத்து
தாண்டிச் சென்ற கோடையைக் கழுவி
ஞாபகக் கொடியில் காயப்போட்டாயிற்று உலர்த்தவென
வெண்சாயங்களில் தோய்த்தெடுத்த இழைகளைக் கொண்டு
குளிர்காலக் கம்பளிகளை
பின்னுகிறது காலம்
அதைப் பிடித்துக் கொண்டு படர்கிறது
நேற்றைக்கு முந்தைய தினங்களில் துளிர்விட்ட
சிறு ஒற்றைக் கொடி
வைசாக தினங்களில் வெண்ணிற ஆடையும் பூக்களுமென 
விகாரைக்கு அணிவகுத்துச் சென்ற பக்தர்கள்
எறிந்து போன சிறு விதையாக இருக்கலாம் தாவரத்தின் மூலம்
நிலம் பிளந்து வந்த கொழுந்துக்குப் புதிது
அலையெனச் சுழலும் காற்றும்
நிமிரும்போதெல்லாம்
உற்றுப் பார்த்தவாறிருக்கும் பரந்த ஆகாயமும்
விசாலமாய் நகரும் பூச்சிகளும் இன்னபிற ஜந்துக்களும்
இன்னும்
மிதிக்கக் காத்திருக்கும் மனிதர்களும்
வரும் காலங்களில்
அதன் கிளைகளில் வந்தமரும் அணில்கள்
இன்னும் பிறக்கவேயில்லை
இலைகளின் மறைவுகளுக்குள் தம்
கூடுகளைச் செதுக்கக் கூடிய பட்சிகள்
கண்டங்கள் தாண்டி இன்னும் புலம்பெயரவேயில்லை
வேர்களை வளப்படுத்தும் புழுக்களும்
இன்னும் நகரவேயில்லை எனினும்
எப்போதோ மனிதன் உறிஞ்சியகற்றி விட்டான்
தாவரங்களுக்கான ஈரத்தை
மண்ணிலிருந்தும் மனதிலிருந்தும்
பனிக் கூட்டம் விடியலை
பேரோசையுடன் பாடும் சொப்பனங்களெல்லாம்
காடுகளால் நிரம்பி வழிகின்றன
தீயிடம் யாசகனாக்கும்
குளிர் காலத்தின் நீள இரவுகளிலும்
வனங்களைத் தொழுத ஆதிவாசிகளை
கடவுளிடம் மீளக் கொடுத்துவிட்ட இக் காலத்தில்
துளிர்த்திடப் போதுமானதாக இருக்கலாம்
தளிரின் வேருக்கென
இப் பேரண்டம் தரும்
ஒரு பனித் துளி ஈரம்
– 

கமலாவும் நீலாவும்….

 

கந்தாச்ரமத்தில் கமலா என்ற பெண் நாய் இருந்தது.  அது குட்டியாக ஆச்ரமத்திற்கு வந்தபோது அங்கிருந்தவர்கள் அதை வெளியே துரத்தினார்கள்.  அது பெண்ணாக இருந்ததினால் ஒவ்வொரு வருடமும் குட்டிகள் போடும் என்று நிடனைத்து அவ்வாறு செய்தனர்  ஆனாலும் குட்டி கமலா அவர்கள்  திட்டியதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டுச் செல்லாமல் இருந்து விட்டது.  இறுதியில் ஆச்ரமவாசிகள் அவளுடைய உறுதிக்கு மதிப்புக் கொடுத்தனர்.  கமலா ஆச்ரமத்திலேயே வளர்ந்து ஒவ்வொரு வருடமும் குட்டிகளை ஈன்றது.  அவளுடைய குட்டடிகளே சந்தாச்ரமத்தில் ஒரு பெரிய குடும்பமாக விளங்கியது.
மனிதர்களுக்குக் குழந்தை பிறந்தால் எவ்வாறு பத்தாம்நாள்தொட்டிலிடும் சடங்கு நடக்குமோ, அதுபோல கமலா முதன்முறையாக குட்டிகள் ஈன்றபின் அக்குட்டிகளுக்கும் கமலாவுக்கும் பொட்டிட்டு, மாலை சூட்டி அங்கிருந்த அன்பர்கள் மகிழ்ந்தனர்  அன்று பாயசம் மற்றும் இனிப்புகளுடன் ஒரு பெரிய விருந்து நடந்தது.
புதிய அன்பர்கள் முதல் முறையாக கிரிபிரதடசிணம் செய்ய விரும்பினால் பகவான் கமலாவை அழைத்து “அவர்களுக்கு வழிகாட்டி அழைத்து வா” என்று ஆணையிட அதுவும் அவ்வாறே செய்யும்.
நீலா என்ற பெண் நாய் ஒன்று பகவானுக்கு அருகில் எப்போதும் இருந்து அவர் மடியில் அவ்வப்போது அமர்வது வழக்கம்.  வேறு எந்த நாயும் கந்தாச்ரமத்திற்குள் வர அவள் அனுமதிக்க மாட்டாள்.  ஏன், தன் தாயைக் கூட கந்தாச்ரமத்திற்குள் நுழைய விடாமல் விரட்டிவிடுவாள்.  அது நாயாக தப்பிப் பிறந்திருக்கிறது என்று நாயனா கூறுவது வழக்கம்.
நாய்கள் பகவானுடன் நீண்ட நாட்கள் தங்கியிருந்து உயிர்தரிக்காது.  மேலும் பகவானுக்கருகில் எந்தப் பிராணி வந்தாலும் அதற்கு மறு பிறப்பில்லை என்று நாயனா கூறுவதுண்டு  எனவே அவர்
அவைகளை விரட்டிவிடுவார்.
பகவான் அருணாசல மலையில் வசிக்கத் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து நாய்கள் அவர்களுடைய உற்ற தோழனாக இருந்து அவருடைய ஆச்ரம் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்தன.  ஒவ்வொரு நாயின் வம்சாவளியைப் பற்றி அவர் நன்கு அறிவார்.  புதிதாக யாராவது வந்தால் அவரிடம், “இந்தக் கமலாதான் முதலில் வந்த பெண்மணி.  அந்த நீலாவும் ஜாக்கியும் அவளுடைய குழந்தைகள்.  ரோசும் மற்ற இந்தப் பயல்களும் அவளுடைய பேரப்பிள்ளைகள்,” என்பார்.  கந்தாச்ரமத்தில் கமலா இறக்கப் போகும் தறுவாயில்,  “ஏண்டா பசங்களா…உங்கள் பாட்டியைப் போய்ப் பாருங்கள்.  உங்களை விட்டு சீக்கிரம் அவள் போகப்போறிளர்” என்றார்.  பின்னர் கமலா இறந்தபிறகு எப்படி மனிதர்களைத் துக்கம் விசார்பாரோ அதுபோலவே குட்டிகளிடத்தில் சென்று, “ரோஸ், பாவம். நீ உன்னுடைய பாடடி கமலாவை இழந்து விட்டாயா” என்பார
 (சரிதமும் உபதேசமும் பாகம் 1ல் இருந்து எடுத்தது)

அக்டோபர் மாதக் கதை…….

அக்டோபர் மாதம் சிறந்த கதையாக பெருமாள் முருகனின் ஆசை முகம் என்ற சிறுகதையைத் தேர்ந்தெடுத்தோம். இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கும் கூடவே சில சிறப்பான கதைகளை தள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக நேரிடுகிறது. அக்டோபர் மாதம் பெருமாள் முருகனின் கதையைத் தேர்ந்தெடுக்கும் முன் சிறந்த கதைகளை இரண்டை பாவண்ணனும், அகஸ்தியம் என்ற ஒரு கதையை வண்ணதாசனும், அதேபோல் அபிமானியும் எழுதி இருந்தார்கள். ஆனால் எங்கள் முடிவு பெருமாள் முருகனின் ஆசை முகம் கதையுடன் நின்று விட்டது. 
மாதெரரு பாகன் என்ற நாவல் பிரச்சினையால் பெருமாள் முருகன் தன் எழுத்துக்களை விலக்கிக் கொள்வதாக சொல்லிவிட்டார். அதனால் மேலே குறிப்பிட்ட ஆசைமுகம் கதையை நாங்கள் தேர்ந்தெடுத்தாலும், பெருமாள் முருகன் முடிவால் நாங்களும் அந்தக் கதையை எடுத்துக்கொள்ள முடியாமல் உள்ள நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
அக் கதைக்குப் பதிலாக 15.10.2014 ஆனந்தவிகடன் இதழில் வெளியான பாவண்ணனின் அப்பாவின் சைக்கிள் என்ற கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம். பாவண்ணனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்



ஒரு தாஒ கவிதை



சோளைக் கொல்லைப் பொம்மையிடம்
இரவல் பெற்ற தொப்பியின் மேல்
மழை வலுத்துப் பெய்கிறது.

தமிழில் : ஞானக்கூத்தன்