விருட்சம் இலக்கிய சந்திப்பு – 11.

டாக்டர் பாஸ்கரன்’ 


விருட்சம் தனது 11 ஆவது இலக்கிய சந்திப்பு நிகழ்வினை 25- 4 – 2015 அன்று
மாலை, தி நகர் அலமேலுமங்கா திருமண மண்டபத்தில் நடத்தியது. சமீபத்தில்
விஷ்ணுபுரம் பரிசு பெற்ற கவிஞர் திரு ஞானக்கூத்தன் அவர்கள் ‘படைப்பின்
இரக்சியம்’ பற்றிப் பேசினார்.
கொல்லன் பட்டறையில் ஈயாக நானும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்!
முதுபெரும் எழுத்தாளர் திரு அசோகமித்திரன் அவர்களைச் சந்திக்கும் அவா
மேலோங்கியிருந்தது !

சுஜாதா அவர்கள் பல கட்டுரைகளில், பல சந்தர்ப்பங்களில்
ஞானக்கூத்தனைவாசிக்கச் சொல்லுவார்! கவிதையுலகில் தனக்கென ஒருதனியிடம்
உள்ளவர் – அவர் கவிதைகள், காலம் கடந்தும் அவர் புகழ் பாடும். அவரது கவிதை
உள்ளமும், வார்த்தைகளை அலசி ஆராயும் திறனும், தொலை நோக்குப் பார்வையும்,
பரந்துபட்ட இலக்கிய அறிவும், அவரது “கவிதைக்காக” ( கட்டுரைகள்,
மதிப்புரைகள்) – விருட்சம் வெளியீடு – புத்தகத்தை வாசிக்கும்போது
புலப்படும் ! அவரைப் போல்,வரிகளுக்கிடையே, வார்த்தைகளுக்கு நடுவே,
எழுத்துக்களுக்குப் பின்னே என அழகாகப் பொருள் சொல்லமுடியாது – அதற்கு,
அவருள் இருக்கும் கவிஞனின் பார்வையும், தேடலும் தேவை ! ’கவிதைக்காக’
புத்தகம் பற்றி சற்று விரிவாக வேறொரு சமயம் சொல்லவேண்டியிருக்கிறது .

முதலில், ஞானக்கூத்தன் அவர்களைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது.
மிகச் சிறப்பான முறையில் தயாரிக்கப் பட்டிருந்தது. திருவல்லிக்கேணியில்
அவர் வாழும் வீடு, தெரு,பார்த்தசாரதி கோயில், கறவைப் பசு, சைக்கிள்,
மனிதர்கள் எல்லாம் கவிதை பேசின ! இலக்கிய ஆளுமைகள், உறவினர்கள், நண்பர்கள்
மற்றும் ஞானக்கூத்தன் ஆகியோரது கருத்துக்களை அவர்களே சொல்லுவதுபோல் நல்ல
முறையில் தொகுத்திருந்தார்கள். இரயிலின் கடைசீப் பெட்டி மெதுவாக ஊர்ந்து
மறைய, அது மனதில் ஏற்படுத்தும் வெறுமையைக் கூறும் ஞானக்கூத்தனின் கவிதை
வரிகளுடன் படம் முடிவது நல்ல முத்தாய்ப்பான நெகிழ்ச்சி. இப்படத்தினைத்
தயாரித்த அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் !

கணையாழியில் தான் எழுதிய ஞானக்கூத்தன் பற்றிய கட்டுரையை திரு மூர்த்தி
அவர்கள் வாசித்தார் – தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக ஞானக்கூத்தன் பற்றிய
அவர் கட்டுரைகள் வெளியாவதாகக் குறிப்பிட்டார். மூன்று கட்டுரைகள்
போதாதுதான் !

பிறகு பேசிய ஞானக்கூத்தன் அவர்கள், மொழி, சொற்கள், அவை உணர்த்தும் ‘இலை மறை
காய்’ அர்த்தங்கள் எனத் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு
படைப்பாளி எப்படித் தன் தூக்கத்தை இழக்கிறான் என்று விளக்கிய அவர், அந்தக்
காரணத்தாலேயே கூட்டங்களுக்கு அதிகம் பேச வருவதில்லை என்றும் கூறினார்.
நல்லவற்றை எழுத, ஒரு படைப்பாளி நல்ல மனமுடையவனாகவும் இருப்பது அவசியம்
என்றார்.

கேள்வி பதில் நேரத்தில், சில கவிதைகளை அவற்றின் போக்கிலேயே, இடம், காலம்
சார்ந்து பொருள் கொள்ளவேண்டும் என்றார். மற்றொரு கேள்விக்கு பதில்
அளிக்கையில்,” காலைத் தூக்கி நிற்பவர்தான் நடராஜர் – இல்லையேல் அது அவர்
இல்லை “ என்றும், ‘காலைத் தூக்கி’ என்று எழுதுவதற்கும், ’தூக்கிய திருவடி’
என்பதற்குமான இலக்கிய நய வேறுபாட்டை அழகாக எடுத்துரைத்தார்.

திரு அசோகமித்திரன் அவர்கள் எழுத்தாளர்கள் தூக்கம் இழப்பதைப் பற்றியும்,
ஒரு கவிதை எந்த சூழலில் எழுதப்படுகிறது என்பதின் முக்கியத்துவத்தைப்
பற்றியும் அழகாகப் பேசினார். இந்தத் தள்ளாத வயதிலும் அவர் காட்டும் இலக்கிய
ரசனை இன்னும் இளமையாக இருப்பது வியப்புக்குரியது !
நன்றி கூறிய ஆடிட்டர் திரு கோவிந்தராஜன், புதியவர்கள் பலர்
இக்கூட்டங்களுக்கு வருகை தருவது மகிழ்ச்சிக்குரியது என்றார். மார்ச் மாத
சிறந்த சிறுகதைக்கான பரிசினை திரு அசோகமித்திரனுக்கும், சிறப்புரை ஆற்றிய
ஞானக்கூத்தன் அவர்களுக்குப் பரிசினையும் வழங்கியவுடன் கூட்டம்
நிறைவடைந்தது.

நல்ல இலக்கிய சிந்தனையுடனும், மகிழ்ச்சியான மன நிறைவுடனும் விருட்சம் இலக்கியக் கூட்டம் நிறைவடைந்தது !

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் பதினோராவது கூட்டம்

அழகியசிங்கர்
ஆச்சரியமாக இருக்கிறது.  11 கூட்டங்கள் நடந்து முடிந்து விட்டதை எண்ணி.  முதலில் நானும் ஆடிட்டர் கோவிந்தராஜன் அவர்களும் சேர்ந்து நடத்தும் கூட்டம், சில கூட்டங்களில் நின்று விடுமென்று நினைத்தேன்.

ஆனால் கூட்டம் தொடர்ந்து நடத்துவதென்பது சாத்தியமாக எனக்குத் தோன்றவில்லை.  ஒவ்வொரு கூட்டம் முடிவிலும் ஒவ்வொன்றை சரி செய்ய வேண்டுமென்று நான் நினைப்பேன்.  ஸ்ரீ அசோகமித்திரனை வைத்து முதல் கூட்டம் ஆரம்பித்தபோது, மைக் முதலில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்தோம்.  உடனே வாங்கினோம்.  இப்போது மைக் மூலமாகத்தான் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறோம்.

கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருகிறார்கள் என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்பட வில்லை.  எனக்கும் ஆடிட்டருக்கும் இதில் தெளிவான பார்வை உண்டு.  ஆனால் ஒவ்வொரு மாதமும் கூட்டத்திற்காக செலவழிக்கும் நேரத்தை உபயோகமாகக் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு.  அதனால் கூட்டத்தில் பேசுவதை பதிவு செய்ய வாய்ஸ் ரெக்கார்டரை நான் பயன் படுத்துவது வழுக்கம்.  சோனியின் இந்த வாய்ஸ் ரெக்கார்டர் மூலம் பல கூட்டங்களைத் துல்லியமாக பதிவு செய்திருக்கிறேன்.
என் நெடுந்நாளைய நண்பரும், கவிஞருமான ஞானக்கூத்தனை இந்த முறை பேசக் கூப்பிட்டேன்.  அவரும் பெரிய மனது பண்ணி பேச இசைந்தார்.  அவர் என்னைவிட 15 ஆண்டுகளுக்குமேல் மூத்தவர்.  மேலும் திருவல்லிக்கேணியிலிருந்து அவர் கூட்டம் நடக்குமிடத்திற்கு வரவேண்டும்.  எந்தத் தலைப்பில் அவர் பேசப் போகிறார் என்று கேட்டதற்கு அவர் உடனே படைப்பின் ரகசியம் என்ற தலைப்பில் பேச ஒப்புக் கொண்டார்.
முன்னதாக ஸ்ரீ வினோத் என்பவர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில்  ஞானக்கூத்தன் குறித்து ஒரு குறும்படம் எடுத்திருந்தார். அதைச் சிறப்பாகவே அவர் எடுத்திருந்தார்.  ஆரம்பத்தில் எனக்கு ஸ்ரீ வினோத் மீது அவநம்பிக்கையே கூடி இருந்தது.  ஆனால் அந்த குறும்படத்தைப் பார்த்தபோது ஆச்சரியமாகப் போய்விட்டது.  கச்சிதமாகவும் திறமையாகவும் அந்தப் படம் தயாரிக்கப்பட்டிருந்தது.  அந்தக் குறம்படத்தைக் காட்டிவிட்டு பின் கூட்டம் ஏற்பாடு செய்யலாமென்று தோன்றியது.  அதன்படியே குறும்பட நிகழ்ச்சியை முதலில் ஆரம்பித்தோம்.
குறும்படம் முடிய 45 நிமிடங்கள் ஆனது. ஞானக்கூத்தன் பேசுவதற்கு முன் தேவகோட்டை வா மூர்த்தி என்ற எழுத்தாளர் ஞானக்கூத்தன் குறித்து எழுதிய கட்டுரையை வாசிக்க விரும்பினார்.  கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கட்டுரையை வாசித்தார்.  அக் கட்டுரை 1960ல் கணையாழியில் எழுதிய கட்டுரை.  தொடர்ந்து இப்போதும் ஞானக்கூத்தன் கவிதைகள் எழுதி வருகிறார்.  அது குறித்து அவர் என்ன நினைக்கிறார்.  பின் ஞானக்கூத்தன் தன்னுடைய உரையைத் துவக்கினார்.  கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவர் பேசினார்.  கடந்த 11 கூட்டங்களில் நான் கேட்ட  சற்று கனமான உரை வீச்சை அன்றுதான்  உணர்ந்தேன்.  கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் அவர் என்ன பேச வருகிறார் என்பது தெரியாமல் போய்விடும்.   ஆரம்பத்தில் அவர் சொல்வது சற்று புரியாமல்தான் போயிற்று.  
ஞானக்கூத்தன் பேசும்போது குறிப்பிட்டார், ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் பிறர் மேல் விட மாட்டேன்.  இந்தக் கவிதையை எல்லோரும் சொன்னதை நான் கவிதையாக எழுதி உள்ளேன்.  நான் சொல்லலை அது மாதிரி,’ என்றார். 
‘எழுத்தெல்லாம் படிக்கறவங்க மனசுல புகுந்து கொள்கிறது.  அதனால் எழுதறவங்க படிக்கிறவங்க மனசை கெடுக்காமல் எழுத வேண்டும்.’
அசோகமித்திரன் ஞானக்கூத்தனைப் பற்றி எடுத்த குறும்படம் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.  கூட்டம் வழக்கம்போல் எட்டுமணிக்கு முடிந்துவிட்டதுஞி
 

மகளிர் மட்டும் !

SMALL STORY 
ஜெ.பாஸ்கரன்
‘சே, என்ன டிராஃபிக்; மூணு கிலோமீட்டர் ஊர்ந்து வரதுக்கு மூணு மணி நேரம்’ சலித்துக் கொண்டே வந்தமர்ந்தாள் சுலோசனா – மேல்நாட்டு பெர்ஃப்யூம் அவளைச் சுற்றி மூன்றடிக்கு விரவியிருந்தது !
அன்று அவள் பள்ளித் தோழி காஞ்சனாவின் மகளுக்குத் திருமணம். இது போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் பள்ளித் தோழிகள் சந்தித்துப் பழங்கதைகளையும் புதுச் சுவையோடு பகிர்ந்து கொள்வது அவர்களது பழக்கம் !
காஞ்சனாவின் கணவர் பெரிய தொழிலதிபர் – டெல்லியில் சென்ட்ரல் மினிஸ்டர் வரைக்கும் நல்ல செல்வாக்கு. அவர்களது ஒரே பெண் அனன்யாவுக்கு, ஊரையே கூட்டித் திருமணம். மண்டபம் நிரம்பி வழிந்தது.
எங்கு பார்த்தாலும் பட்டுப் புடவை சர சரக்க, பெரிய்ய ஜன்னலில் இரண்டு நூல் கட்டின முதுகு தெரிய, வைரம் பள பளக்க,நுனி நாக்கு வார்த்தையும், பளிச்சென்ற பற்கள் உதட்டுச் சாயத்தில் படாத சிரிப்புமாய் மண்டபமே களை கட்டியிருந்தது !
‘ காஞ்சனாவுக்குப் பெரிய மனசுடீ – பொண்ணுக்கு  நூறு பவுன் நகையும், பதினைந்து கிலோ வெள்ளியும்னு பிரமாதமா கல்யாணம் பண்றா ‘என்றாள் சுலோசனா.
‘ ஆமாமாம், பட்சண சீரெல்லாம் கூட நூற்றி ஒண்ணு, ஏழு வகை சுவீட்டு, பத்து சுத்து சீர் முறுக்குன்னு சபை நெறைவா பண்றா – இது ஏஜிஎஸ் வந்தனா.
அமெரிக்கா மாப்பிள்ளை, பாத்த உடனேயே பொண்ண புடிச்சுப் போச்சாம் – அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம், அந்தப் பொண்ணுக்கும் அதிர்ஷ்டம்தான்னு வெச்சுக்கோ ‘ என்றாள் மீனா – அவள் வீட்டுக்காரன் பெரிய டிராவல்ஸ் கம்பெனி வெச்சிருக்கான், பெரிய கைதான்.
’அவரையும் சும்மா சொல்லக் கூடாது, காஞ்சனா கிழிச்ச கோட்ட தாண்ட மாட்டார்.- பொண்ணுக்கு என்னென்ன வேணுமோ, கேட்டு நீயே எல்லாத்தையும் செஞ்சுடுன்னுட்டாராம் – பொட்டி நெறையப் பணம், டிரைவரோட காரையும் கொடுத்தார் – இவ சூப்பரா எல்லாத்தையும் ஆர்கனைஸ் பண்ணிட்டா – என்ன இருந்தாலும் காஞ்சனா ஸ்மார்ட் தான்’ என்றாள் சுலோசனா.
அவ ஸ்கூல் நாட்கள்ளேயே அப்படித்தானே – எல்லார்கிட்டேயும் பணம் கலெக்ட் பண்ணி, நல்ல கிஃப்ட்டா செலெக்ட் பண்ணி,க்ளாஸ் டீச்சருக்குப் பள்ளி ஆண்டு விழாவிலெ கொடுத்து அசத்திடுவாளே என்றாள் மீனா.
முகூர்த்தம் முடிஞ்சு, வந்த விருந்தினருக்கெல்லாம் ’மில்க் ஷேக்’ ஓடிக்கொண்டிருந்தது – ஆளுக்கொரு காகிதக் கோப்பையைக் கையில் வைத்துக் கொண்டு, அரட்டை தொடர்ந்தது..
‘ என்னடீ பண்றான் உன் பிள்ளை ,சாய்ரமேஷ் ? என்றாள் மீனா.
‘ ஃபைனல் இயர் – கேம்பஸ்லயே நல்ல வேலை கெடச்சிடுத்து. ஏகப்பட்ட பணத்தைக் கட்டி படிச்ச படிப்பு, வீணாகலை. பங்களூரோ, ஹைதராபாத்தோ, கிளம்பிடுவான். இவருக்கு ஒண்ணும் தெரியாது- எல்லாத்துக்கும் நான்தான் போகணும். சம்பாதிச்சா மட்டும் போதுமா இந்தக் காலத்திலெ – இந்த ஆம்பளைங்களுக்கு எங்கே இதெல்லாம் புரியுது? என்றாள் சுலோசனா.
‘ ஒரு வென்னீர் வெச்சுக்கத் தெரியாது- அது ஏன், அடுப்பே பத்த வெக்கத் தெரியாது ! ஏதோ ஆபீஸ் போய்ட்டு வந்துட்டா எல்லாம் தானா நடந்துடும்னு ஒரு நெனப்பு. வீட்டுக்கு வந்தா, காபி டிபன் ரெடியா இருக்கணும்- நாம்பதான் சமையல்காரியாட்டமா எப்பவும் அடுப்படியிலேயே வேகணும்… எப்போதான் இந்த மேல் சாவனிஸம் ஒழியுமோ’ அலுத்துக்கொண்டாள் வந்தனா.
எங்க வீட்ல கொஞ்சம் பெட்டர் ! காலையில் எழுந்து, பால் காய்ச்சி, டிகாக்‌ஷன் போட்டு, காபி தயார் பண்ணிடுவார்- அவருக்கு காலைல முதல் காபி குடிச்சாகணும், இல்லேன்னா அடுத்த வேலை ஓடாது – இது மீனா.
’ காலங்கார்த்தாலெ அப்படி என்னப்பா வேலை – வாக் போவாரோ?’ என்றபடி மில்க் ஷேக் ஒரு மிடறு விழுங்கினாள் வந்தனா..
‘ம்ஹூம், அதுக்கெல்லாம் அவருக்கு நேரமில்லப்பா; குளிக்கப் போறதுக்குள்ள, காய்கறி கொஞ்சம் நறுக்கி வெச்சிட்டுப் போவார் – குழந்தைகளைக் குளுப்பாட்டி, யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்கு அனுப்புற வேலையெல்லாம் இப்போ இல்லே – பெரிய குழந்தைகள் தானா காலேஜுக்கு போயிடறதுகள் ! என்றாள் மீனா.
இதையெல்லாம் கேட்ட சுலோசனாவுக்கு கொஞ்சம் வருத்தமாயிருந்தது – எல்லா வீட்டுக்காரரும் ஏதாவது உதவி செய்யறாங்க – நம்ம வீட்லேயும் ஒண்ணு இருக்கே, சதா ‘உர்’ ருன்னு மூஞ்சியெ வெச்சுண்டு- ஒரு துரும்ப எடுத்துப் போடாது1 எல்லாம் நம்ப வந்த வழி – கழிவிரக்கம் அவள் கண்ணில் தெரிந்தது.
‘ என்ன சுலோ,ஸைலெண்ட் ஆய்ட்டெ ? வீட்டு ஞாபகம் வந்துருச்சா ? இது எல்லா வீட்டுலேயும் நடக்கறதுதான், கவலைய விடு’ – என்றபடி வந்தனா காகிதக் கோப்பையை அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் வீசினாள்.
’ நாளைக்கு மயிலாப்பூர் சபாவில ஒரு நாட்டிய நாடகம் அரங்கேற்றம் இருக்கு, வரயா போகலாம் ? வீடுதான் எப்பொவும் இருக்கே; யோசிக்காம வந்துடு’ என்றாள் ஆறுதலாய் வந்தனா.
‘ பாக்கலாம் வந்தனா, நாளைக்கு இவர் எங்கேயோ நண்பர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போகணும்னார் ‘
 ’ நீ போகலைன்னா எங்க கூட வாயேன் ‘  என்றாள் வந்தனா “நீயும்தான்”  என்றாள் மீனாவைப் பார்த்து.
தாலி கட்டி முகூர்த்தம் முடிந்த கையோடு மணமேடைக்குச் சென்று மணமக்களை வாழ்த்தினர். பல வண்ணங்களில் சிறிதும் பெரிதுமாய் பரிசுப் பொட்டலங்கள் கை மாறின ! கேமரா பளிச்சிட,புன்னகையுடன், பட்டுப் புடவைக்குள் பூவையரும் பளிச்சென்று கண் மினுக்கினர் !
‘ஏய், எல்லோரும் சாப்பிட்டுட்டுப் போங்க  அப்புறம் கிளப்ல பாக்கலாம் ‘ என்றாள் காஞ்சனா அகமும் முகமும் மலர !( அந்தப் புது வைர மாட்டல் டாலடிக்குது – கண்ணைப் பறிக்குது !)
யூனிஃபார்ம் போட்ட ஆண்களும் பெண்களுமாக பந்திகளைக் கவனித்தனர். தள்ளு வண்டிகளில் வகை வகையாகப் பொடிகளும்,பொறியல் , கூட்டு என எல்லாம் கொண்டு வரப்பட்டு,இலைகளில் அணிவகுத்தன! இந்த விருந்தைப் பார்க்கும் எவனும் காசு கொடுத்தாலும், இந்தியா ஒரு ஏழை நாடு என்று ஒத்துக்கொள்ள மாட்டான்! பந்தி முடிந்து, பாதி இலைக்கு மேல் மீதம் வைத்துக்,காகித டவலில் கை துடைத்து வெளியே வந்தனர். ஐந்து வகை ஐஸ்கிரீம், நேர்த்தியாக வெட்டப் பட்ட பழ வகைகள் மற்றும் வெற்றிலைப் பாக்கு,இஞ்சி முறபா, காய்ந்த நெல்லிக்காய், கிராம்பு, என வாய் மணக்க விருந்து முடிந்தது !
கூப்பிய கையுடன் தாம்பூலப் பை வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.
போன் பண்ணுடீ, கிளப்புல பாக்கலாம் – மீனா காரில் ஏறிக்கொண்டே ‘பார்லருக்குப் போப்பா’ என்றாள் டிரைவரிடம்.
வந்தனா மந்தைவெளியில் உள்ள முன்னணி நடிகையின் தையற்கடைக்குக் கிளம்பினாள் !
காரில் வீட்டுக்குத் திரும்பினள் சுலோசனா !
தெரு முனையில் ஒரு சிறு கும்பல் – நிற்கமுடியாமல் தள்ளாடிய குடிகாரக் கணவனுடன் அவன் மனைவி சண்டை – கிழிந்து, கலைந்த அழுக்குப் புடவையில் தலைவிரி கோலமாய் அவள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள் ‘’ ஐயோ., வூட்லேர்ந்த துட்ட எல்லாம் இப்பிடிக் குடிச்சிட்டு வந்து நிக்கிறியே, நல்லா இருப்பியா நீ, நாசமாப் போவ “
அவிழ்ந்த லுங்கியுடன், கண்கள் சிவக்க, ஏதோ கெட்ட வார்த்தை சொல்லி, கையை ஓங்கி அடிக்க வந்தவன், தட்டுத் தடுமாறி தரையில் விழுந்தான் ! சாராய நெடியில் சிறுநீர் மணந்தது !
‘நாலு வூட்ல வேலெ செஞ்சி சேத்து வெச்ச காசையெல்லாம், குடிச்சி அழிக்கிறியே, அந்த மாரியாத்தா உன்னெ வாரிக்கினு போவாதா?’ அழுது புலம்பினாள் அவள்.
தெருக் கூச்சல் மெல்லக் காற்றில் கரைய, வீடு வந்து சேர்ந்தாள் சுலோசனா.- ‘என்ன மன்ஷனுங்க; இவன்களையெல்லாம்; அப்படியே கட்டிவெச்சி தோலை உரிக்கணும்’ பல்லைக் கடித்தாள் சுலோசனா.. தலை விரி கோலமாய் அலரிய அப்பெண்னின் முகம் மனதில் வந்து போனது.
காரிலிருந்து இறங்கியவள், ஃப்ளாட் வாசலில் வாட்ச்மேன் முனுசாமியின் மனைவி பொன்னாத்தாள் நிற்பதைக் கண்டாள். போன வாரம் அவள் கொடுத்த சில்க் காட்டன் புடவையை மிக நேர்த்தியாகக் கட்டிக்கொண்டு, மஞ்சள் முகம் மலர, பெரிய குங்குமப் பொட்டுடன் சிரித்தாள் பொன்னாத்தா.
‘என்ன பொன்னு, முனுசாமிக்கு சாப்பாடா ?’
‘ஆமாம்மா, வெளீல துண்ணா ஒத்துக்கறதில்லை; வவுத்து வலீன்றாரு. பீடியவு வுட மாட்டேன்றாரு; பொழுதன்னைக்கும் வேல பாக்குறாரு- அதான், வூட்லெயே ஆக்கிக் கொண்டாந்தேன்’  என்றாள். ’இப்படியும் இந்தக் காலத்தில் பெண்கள்’ என்று வியந்தவாறே, லிப்டில் மாடியேறி, காலிங் பெல் பட்டனை ஒற்றினாள்.
கதவு ஒரு ‘கிளிக்’ குடன் திறந்தது !
“ ஹை சுலோ, நல்லா நடந்துதா கல்யாணம் ?” என்றபடி உள்ளே சென்றான் அவள் கணவன். ஹாலில் சோபாவில் சாயுமுன் கேட்டது உள்ளிருந்து சமையல்காரரின் குரல், “ மாமி, காபி ரெடி ! ”

தப்பித்தால் போதுமென..

. ஷைலஜா

கிருஷ்ணராஜபுரம் நெருங்க நெருங்க எனக்கு வயிற்றில் புளியைக்கரைக்க ஆரம்பித்தது.
 
சின்ன  உதறலுடன் டாய்லெட் பக்கம் நழுவினேன். ரயில் அந்த ஸ்டெஷனை விட்டுப்புறப்படுகிறவரை டாய்லட் கண்ணாடியில் வழுக்கைத் தலையை விரல்களால் வாரிக்கொண்டு, பல் வரிசைஅயை அழகு பார்த்துக்கொண்டு , அழகு காட்டிக்கோண்டு இருந்தேன்.
 
‘அம்மாடா தப்பினோம்’ என்று வெளியே வந்தால்….
 
 
“ஹலோ ஸார்!” ரதனசாமி நிற்கிறார்!
 
அசடு வழிகிறது எனக்கு.
 
யாரிடமிருந்து தப்பவேண்டும் என்று நினைத்தேனோ அவரிடமே மாட்டிக்கொண்டுவிட்டேன்.
 
“ஸார்! வண்டி இன்னிக்கு மூணு நிமிஷம் லேட். நல்ல காலம் முப்பது நிமிஷம் லேட்டாக்காமல் விட்டானே! அதுகூடப்பெரிதில்லை வண்டி தண்டவாளத்துமேல போகிற வரை புண்ணியம். அதெல்லாம் லால்பகதூரோட போச்சு. என்னைக்கேட்டால் இந்த ரயில்வே போர்டு, ரயில்வே மந்திரி எல்லாமே…..”
 
ரத்னசாமி ஆரம்பித்துவிட்டார். இனிமேல் சிடி ஸ்டேஷன் போகிறவரைக்கும் மனுஷர் நிறுத்தமாட்டார். பேச்சு பேச்சு வாய் ஓயாமல் பேச்சு.
 
“கையில என்ன ஹிண்டுவா?”’
 
“ஆமா  படிங்கோ” என் பேப்பரை நீட்டினேன். ஆளைவிட்டால்  போதும்..
 
“நோ ஸார் பேப்பரை எவன் படிப்பான்? நான் பேப்பர் படிக்கறதை நிறுத்திப் பல வருஷம் ஆச்சு. மௌனமா பேப்பர் படிக்கறது என்கிறது கொடிய தண்டனைன்னு நினைக்கிறேன்! வாய்விட்டுப்பேசினாலே உலகவிஷயம் எல்லாம் வெளில வந்துடுமே  என்ன சொல்றீங்க?”
 
நான் ஒன்றும் சொல்லவில்லை.
 
“கட்லேக்காய் கட்லேக்காய்” என்ற வியாபாரக்குரல்ரத்னசாமியின் காதருகே வரவும், கடலைக்கூடையை  சுமந்து வந்த இளைஞனை ஏறிட்டார். பிறகு,”தமிழ்தான நீ? மூஞ்சிசிலயே தெரியுதே அது? எங்களைப்போல கர்னாடகாக்கு பொழைக்கவந்தவனாக்கும்?சரி சரி….கடலைஅஞ்சுரூபாக்குக்கொடு” என்று வாங்கிக்கொண்டு பொட்டலத்தைப்பிரித்தவர்,”முன்னெல்லாம் அம்பது பைசாக்கு கிடச்ச கடலை இப்போ அஞ்சுரூபா பாருங்க சார்!” என்றார்.
 
நாலுகடலைமணிகளை எடுத்த தன்கையில் வைத்துக்கொண்டு பொட்டலத்தை அப்படியே என்னிடம் நீட்டினார்.”எடுத்துக்குங்க..மல்லாட்டை என்பா சௌத் ஆர்காட்ல. நம்மூர்ல..இங்க பெங்கலூர்ல கடலக்காய்! கடவுள்மாதிரி உருவம் ஒன்று பெயர்கள் பல  ஹஹ்ஹா!” தனக்குத்தானே ரசித்து சிரித்துக்கொண்டார்.
 
எனக்குத்  தலையைப்   பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது. இனிமேல் இந்த பங்கார்பேட் பாசஞ்சரில் பயணமே செய்யக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தேன்.
 
ஒருமாதமா இரண்டுமாதமா ஒன்பதுமாதமாய் இந்த ரத்னசாமியுடன் இதே தொல்லை. தினமும் பெஙகளூர் சிடி ரயில்நிலையத்திலிருந்து பங்கார்பேட் பாசஞ்சரில் ஏறி ஒருமணீநேரப்பயணத்தில்  அந்த ஊருக்குபோய் அலுவலகப்பணி முடித்து  பெங்கலூர் திரும்போது சரியாய் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் ரத்னசாமியும்
நான் இருக்கும் பெட்டியாகப்பார்த்து  வந்துவிடுவது வழக்கமாகிவிட்டது. பதினைந்துநிமிடங்கள்- சிடி ரயில்நிலையம் -வருகிறவரை பேசிப்பேசியே அறுத்துவிடுவார்.
 
“என்ன சார் டல் ஆகிட்டீங்க? ”
 
“ஒண்ணுமில்ல லேசா தலைவலி” என்று ஜன்னல்பக்கம் முகத்தைத்திருப்பிக்கொண்டேன். ரயிலைவேறு க்ராசிங் என்று நட்டநடுவழியில் நிறுத்திவிட்டார்கள். இன்றைக்கு பதினைந்து நிமிஷம்  என்பது முப்பது நிமிஷமாகவும் ஆகலாம்.
 
“தலைவலிக்கு நான் ஒரு வைத்தியம் சொல்றேன் கேளுங்கோ…மிளகு இருக்கோல்லியோ அதை எடுத்து,லேசா அதை..” அவர் என்னவோ சொல்லிக்கொண்டிருக்க நான் ஜன்னலுக்கு வெளியே கண்ணோடு மனத்தையும் செலுத்த ஆரம்பித்தேன். தலை மட்டும் ஒப்புக்கு ஆடிக்கொண்டிருந்தது.
 
ரயில்மறுபடி ஓட ஆரம்பித்தது.
 
“பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்தாச்சு  அடுத்து சிடி ஸ்டேஷன் தான்” வீறிட்டார் திடீரென.
 
பிறகு என்னிடம்” தினம் பங்கார்பேட் பயணம்பண்றது சிரமமாயில்லையோ ஸார்? ஆங் ,,,ஆனாஅதான் சொன்னேளே அன்னிக்கே இன்னும்  ஒரேவருஷம் தான் அப்றோம் ரிடையர் ஆகிடுவேன்னு… மேலும் சொந்தவீடு  பெங்களூர்ல கட்டிண்டதும் இப்படி திடீர்னு பாங்குல வேலை மாத்திட்டான்னும் சொன்னீங்க….நினைவுக்கு வந்துட்டது இப்போ…. என்னவோ போங்க  வயசு எனக்கு அம்பதுதான் ஆறது ஆனா வர வர அசாத்திய ஞாபகமறதி. எங்கப்பா மைசூர்ல எழுபத்திஎட்டுவயசுக்கு கிண்ணுனு  இருக்கார்.
சாம்ராஜ் உடையார்கிட்ட சின்னவயசுல வேலைபார்த்தப்பொ ந்டந்ததையெல்லாம்  மறக்காம் சொல்வார்….”
 
சிடிஸ்டேஷன் வருகிறவரைதன் அப்பாவின் பெருமையை இழுத்துக்கொண்டே வந்தார்.
 
அப்பாடா பெஙக்ளூர் சிடி ஸ்டேஷன் வந்துவிட்டது.
 
நான் வேகமாய் இறங்க கதவருகில் வந்தவர்,”பாத்து ஸார்…. வண்டி இன்னும் நி8க்கவே இல்லை…. நிதானமாய் இறங்கணும் ..ஒருதடவை இப்படித்தான் என் மச்சினன அனுமந்து…..” ரத்னசாமியை அப்படியே வெட்டிக்கொண்டு  கூட்டத்தில்  கலந்துவிட்டேன்.சப்வேயில் நடந்து எதிரே ஃப்ளைஓவரில் வேகமாய் நடந்து எனது பஸ்ஸிற்காக  மெஜஸ்டிக் பஸ்நிலயத்தில் காத்திருக்கையில் அங்கும் வந்துவிட்டார்.
 
“ஸார்! உங்க ஏரியா ஜெய்நகர் ஒன்பதாவது ப்ளாக்தானே அதுக்கு 18ஆம் நம்பர் பஸ் தானே? ”
 
வெறுப்பைவெளிக்காட்டாமல் தலை ஆட்டினேன்.
 
“அங்கபாருங்க வந்திட்டுருக்கு! எனக்கு ராம்மூர்த்திநகர்போகணும் அங்க வாஸ்து சாஸ்திரம் சொல்ல  என்னை அழைச்சிருக்கார் மிஸ்டர் பூவராகவன்னு ஒருத்தர். என்ன பண்றது  சிட்ஃப்ண்ட் கம்பெனியை இழுத்துமூடினதும் எனக்கும் வேலைபோயி இப்படி வாஸ்துலதான் பிழைப்பேநடக்கறது. இன்ஃபாக்ட் வாஸ்து சாஸ்திரம்ல என் அண்ணன் கில்லாடி. பேரு வாசுதேவன்.சென்னைல வியாசர்பாடில  இருக்கான் . வாஸ்துதேவன்னு தான் அவனை எல்லாரும் சொல்வா…..” ரத்னசாமி சொல்லிக்கொண்டே இருக்க..
 
நல்லவேளை பஸ் வந்துவிட்டது.
 
வாழ்க பதினெட்டு எனக்கூவிக்கொண்டே பஸ்ஸிலேறிக்கொண்டுவிட்டேன்.
 
மறுநாள் காலை எழுந்ததுமே என் மனைவி,” இன்னிக்கு நீங்க கிருஷ்ணராஜபுரம் போயி நம்ம ரேகாக்கு தரகர் சொன்ன வரனை  நேர்ல போய் பார்த்துவாங்க” என்றாள்.
 
தலையாட்டினேன்
 
“பைய்னைமட்டும் பார்த்துட்டுவந்துடாதீஙக்  வீடு வாசல் அங்கே இருக்கிற சூழ்நிலை பையனோட அம்மா அப்பா கூடப்பொறந்தவங்க எல்லாரும் எப்படீன்னும் நோட்டமிட்டு வாங்க..”
 
”சரிடி எனக்கு எல்லாம் தெரியும்”
 
“என்ன தெரியும்? யார் எது சொன்னாலும் ஒருவார்த்தை பேசாமல் தலையாட்டத்தெரியும் குரும்பாடுமாதிரி”
 
ஹா! ரத்னசாமிக்கு நான் தலையாட்டுவது இவளுக்கு எப்படித்தெரியும்?
 
க்ருஷ்ணராஜபுரத்திற்கு ஆட்டோவில் வந்துசேர்ந்தேன்.மனைவி சொன்ன விலாசத்தில் தெருமுனையிலேயே இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.
 
”ஹலோ! ரயில் ஃப்ரண்ட்! எங்க இத்தனைதூரம் அதுவும்  ஞாயித்துக்கிழமைல?  ஹார்ட்டி வெல்கம் டு கிருஷ்ணராஜபுரம் ஸார்! இது என் ஹோம் டவுன்!”
 
 
பின் பக்கமிருந்து குரல்கொடுத்தபடி ரத்னசாமி ஓடிவந்து எனக்கு முன்வந்து கைகுவித்து நின்றார். வாயெல்லாம் சிரிப்பு!
 
நான் கடுப்பை மறைத்தபடி,” ஹிஹி..இங்க ஒருத்தரைப்பார்க்கவந்தேன் அர்ஜண்டா போயிட்டுருக்கேன்” என்று ஓரடி எடுத்துவைத்தவனை குறுக்கே வந்து தடுத்தார்.
 
,” மூச் விடக்கூடாது…என்னோட பேட்டை இது. இங்க நுழைந்தவர்களை என் வீட்டுக்கு அழைக்காமல் நான் விடமாட்டேன். …”
 
”ர.. ரத்னசாமி?”
 
“பேசப்படாது வாங்கோ”
 
வேறுவழியின்றி அவரைத்தொடர்ந்தேன்
 
குரும்பாடுதானோ நான்? இருக்கட்டும் இருக்கட்டும் இன்றோடு இந்த ரத்னசாமிக்கு முழுக்கு போட்டுவிடவேண்டியதுதான். நடுத்தெருவில் எதற்கு ரசாபாசம்? சிஙக்த்தை அதன் குகையிலேயே சந்திப்போம். ரத்னசாமி வழியெல்லாம் பேசிக்கொண்டே வந்தார். தெருவைப்பற்றி தார்சாலையைப்பற்றி லாந்தக்கம்பத்தைப்பற்றி கம்பத்தில் கட்டி இருந்த பசுமாட்டைப்பற்றி….
 
“இதான் ஸார் என் வசந்த மாளிகை வாங்கோ  உள்ள வாங்கோ”
 
உள்ளே அழைத்துப்போனவர் கூடத்தில் நாற்காலியைத்தட்டிப்போட்டார்.
 
பரபரவென் உள்ளே போனவர் ஐந்துநிமிடத்தில் காபிடம்ப்ளருடன் வந்துவிட்டார்.
 
”சார்! இந்தக்காபியை  குடிங்கோ…இதைக்குடிச்சா ஜன்மத்துக்கும்மறக்கமாட்டீங்கோ.. ஒருதடவை இப்படித்தான்  ஜான்சன்னு ஒருத்தர்-என்-பேனாநண்பர்- இங்கிலாந்துலேந்து இங்கவந்தவர் இந்தக் காபியைக்குடிச்சிக்குடிச்சி  பைத்தியமே பிடிச்சிட்டதுன்னா பாத்துக்குங்களேன்”
 
“அப்போ எனக்கும் பைத்தியம் பிடிக்கணுமா ரத்னசாமீ?” சீறினேன் நான்.
 
“ஸார்! என்ன  திடீர்னு இப்படி..என்ன ஆச்சு ஸார்? பதட்டமுடன் ரத்னசாமி கேட்க நான் கோபமாய்  அந்த காபிடம்ளரை சமையலறை நோக்கி வீசி எறிகிறேன். அப்போது அவர் மனைவிபோலிருக்கிறது  நாற்பத்திஏழு வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி  சமையற்கட்டு வாசலுக்கு பதறிப்போய் வந்துநின்றாள்.
 
அவளைகக்ண்டதும் ரத்னசாமி,”நீ ஏன் வந்தே போ போ “ என்றுவிரட்டினார் பதிலுக்கு அவள்,”பே பேபே..” என்று விழித்தாள்.
 
“ போயேன் உள்ள..சாரெல்லாம் நமம் வீட்டுக்கு வரக்கூடியவர் இல்ல நான்  ரொம்பக்கேட்டுட்டு வந்திருக்கார் அவர் முன்னாடி உன் ஊமை வாயை திறக்காதே போ” என்றார் ரத்னசாமி எரிச்சலுடன்.
 
தலைப்பொட்டில் அடித்தமாதிரி இருந்தது எனக்கு.
 
 
“ரத்னசாமீ?’ என்கிறேன் திடுக்கிட்டகுரலில்.
 
அவர் குரலைத்தழைத்து,”ஸார்! மன்னிச்சிடுங்க..வீட்ல நான் சுவரோடதான் பேசணும்…குழந்தைகுட்டியும் கிடையாது..பெண்டாட்டிக்கும் பத்துவருஷம் முன்னாடி எனக்கு சிட்ஃப்ண்ட் கம்பெனில திடீர்னு வேலைபோன சேதிகேட்ட அதிர்ச்சில  வாய் ஊமையாகிட்டது…….” என்று தயக்கமாய் சொல்லி முடித்தாலும் அவரிடமிருந்து நான் நகரவில்லை   இல்லை இல்லை நகரமுடியவில்லை.
*****************************************************************************
 

எனக்குத் தெரிந்த ஜெயகாந்தன்……..

அழகியசிங்கர் 


இன்றைய செய்தித்தாளில் (09.04.2015) பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது 80வது வயதில் மரணமடைந்ததை வெளியிட்டிருந்தார்கள்.   கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயகாந்தன் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.  பல தமிழ் எழுத்தாளர்களுக்கு அவர் முன் மாதிரியாகச் செயல்பட்டவர்.  தமிழ் எழுத்தாளர்கள் பலரும் வேஷ்டிக் கட்டிக்கொண்டுதான் ஆனந்தவிகடன் பத்திரிகை அலுவலகத்திற்குப் படை எடுப்பார்களாம்.  அப்போது பேன்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு மிடுக்காக வருபவர் ஜெயகாந்தன் என்று கூற  கேள்விப்பட்டிருக்கிறேன்.  
1970 ஆண்டு வாக்கில் கிருத்துவக் கல்லூரியில்  நான் படித்தக் காலத்தில் ஒருமுறை பேச ஜெயகாந்தான் வந்திருந்தார்.  அன்று மாணவர்களைப் பார்த்து கோபமாக கூட்டத்தில் பேசினார்.  மாணவர்களும் அவரை எதிர்த்துப் பேசினார்கள்.  சமாதானம் செய்யவே முடியாது போலிருந்தது.  ரொம்பவும் துணிச்சல்காரர்.  அந்தச் சமயத்தில் அவர் பேச்சு எனக்குப் பிடித்திருந்தது.  ஒருமுறை பரங்கிமலையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அவர் பேச வந்திருந்தார்.  அவர் பேசுவதைக் கேட்க நானும் சென்றிருந்தேன்.       அன்று அவர் வைத்திருந்த துண்டை தலையில் முண்டாசு மாதிரி (பாரதியார் ஸ்டைலில்) கட்டி இருந்தார்.  பின் கூட்டம் ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகிகளையே  தாக்கிப் பேச ஆரம்பித்தார்.  அதைக் கேட்க வந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அந்த மாதிரி காலக் கட்டத்தில் அப்படிப் பேசுவது அவர் இயல்பு என்று எனக்குப் பின்னால் பட்டது.
             அவர் பேச்சைக் கேட்ட எனக்கும், அவர்  மாதிரி பேச வேண்டுமென்ற  ஆசை ஏற்பட்டது.  அதே மாதிரி நானும்  மாம்பலத்தில் நாங்கள் ஏற்பாடு செய்த இலக்கியக் கூட்டத்தில் நானும் சத்தமாகக் கத்திப் பேசி கேட்க வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினேன்.  உண்மையில் என் இயல்புக்கு அதுமாதிரி பேசுவது  ஒத்து வராததால்,  அப்படிப் பேசுவதையே விட்டுவிட்டேன்.  அதேபோல் ஜெயகாந்தன் பேசுவதையும் கேட்கப் போவதை நிறுத்திக் கொண்டேன். 
நான் ஜெயகாந்தன் புத்தகங்கள் பலவற்றைப் படித்திருக்கிறேன்.  இன்னும் கூட எனக்கு ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன் என்ற நாவல் படித்த ஞாபகம் இருக்கிறது.  பெண் பாத்திரமே வராமல் நாவல் எழுதியிருப்பார்.  அவர் சிறுகதைகளில் கதாபாத்திரங்கள்   அறிவி ஜீவிகளைப் போல் சத்தமாக உரையாடிக் கொண்டிருப்பார்கள். பின்னாளில் அவர் பேசும் தன்மை மாறிவிட்டது.  அவர் எதைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அந்தப் பேச்சில் ஒரு நியாயம் இருப்பதுபோல் படும்.  
ஏகப்பட்ட சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று எழுதிக் குவித்த ஜெயகாந்தன் எழுதுவதை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டார்.  ஆனால் எழுத்தாளர்களில் அவருக்குக் கிடைத்த மரியாதை வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.  எழுதியே சம்பாதித்தவர் அவர் ஒருவர்தான்.  ஞானப்பீட பரிசிலிருந்து எல்லாப் பரிசுகளும்  அவரைத் தேடி வந்தன.
எனக்குத் தெரிந்து அவர் எழுத்து கூட பல எழுத்தாளர்களைப் பாதித்திருக்கிறது.     அவர்  கதைகளை சினிமாப் படங்களாகவும் எடுத்திருந்தார்கள்.  சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.       அதேபோல் நானும் என் சகோதரரும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தைப் பார்த்துவிட்டு பாதியிலே எழுந்து வந்திருக்கிறேன். நடிகை லட்சுமி அப்படத்தில் புகையிலையைத் துப்பி துப்பியே நம் மீதும் துப்பி விடுவார்களோ என்ற பயம் வந்துவிடும். 
1999ஆம் ஆண்டு விருட்சம் சார்பாக முப்பெரும் கூட்டம் ஒன்றை நடத்தினேன்.  ஆதிமூலம், ஞானக்கூத்தன், சா கந்தசாமி மூவருக்கும். நடிகர் கமல்ஹாசன் அக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஞானக்கூத்தன் கவிதைகள் புத்தகத்தை வெளியிட்டார்.  அவர் முதல் முதலாக கலந்துகொண்ட இலக்கியக் கூட்டம் அதுதான் என்று நினைக்கிறேன்.
அக் கூட்டத்திற்கு எதிர்பாராமல் எழுத்தாளர் ஜெயகாந்தன் கலந்து கொண்டார்.  எனக்கு இது ரொம்ப ஆச்சரியமான விஷயம். ஜெயகாந்தனுடன் சேர்ந்து கூட்டமாக ஒரு புகைப்படம எடுத்துக்கொண்டோம்.
கடைசியாக அவருடைய சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டு விழா மியூசிக் அகாடெமியில் ஆனந்தவிகடன் நடத்தியது. அதில் கலந்து கொண்டேன்.  ஏகப்பட்ட கூட்டம்.  ஜெயகாந்தனால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. 
அவர் மறைவைக் குறித்து விருட்சம் தன் ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறது.

கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ்

சி சத்திய மூர்த்தி

நான்

எடுத்த நாள் தொட்டு
எத்தனையோ ஆண்டாக
இந்த உடற்பாரம்
இறக்காது தூக்கிவரும் நான்
ஓர் üவெயிற் லிப்ரிங் சாம்பியன்ý

விடலைகள்


பாலகுமாரன்

துள்ளித் துவண்டு
தென்றல் கடக்க
விஸில் அடித்தன
மூங்கில் மரங்கள்

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் பத்தாவது கூட்டம்

அழகியசிங்கர்
விருட்சம் இலக்கியச் சந்திப்பு பத்தாவது கூட்டம் சிறப்பாக 28ஆம் தேதிந நடந்தது.  கூட்டத்தின் சிறப்புப் பேச்சாளர் ரவி ஷங்கர். முதலில் இக் கூட்டம் எல்லோரும் பேசுகிற உரையாடலாகத் தொடர்ந்தது.  இனிமேல் கூட்டம் நடத்த இதுதான் உகந்த வழி என்று தோன்றுகிறது.  அதாவது பேசுகிறவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் எந்தவித இடைவெளியும் கிடையாது.  எல்லோரும் ஒரு தளத்தில் அமர்ந்து கொண்டு பேச வேண்டும். கூட்டத்தில் ஒருவரை முக்கியமானவராகத் தேர்ந்தெடுக்கப் படவேண்டும்.
ரவி ஷங்கரை மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் அறிமுகம் செய்து வைத்தார்.  பிரக்ஞை முதல் இதழ் அக்டோபர் மாதம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்தது.  
கசடதபற என்ற பத்திரிகை ஆரம்பித்த நா கிருஷ்ணமூர்த்திக்கும்ட, பிரக்ஞை ரவி ஷங்கருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.  இருவரும் அவர்கள் கொண்டு வந்த பத்திரிகையின் ஒரு பிரதியைக் கூட வைத்திருக்கவில்லை.  இது ஒரு சோகம்.  
மாம்பலம் சாரதா ஸ்டோரில் (அப்பளம், வடாம் விற்கிற கடையில்) நான் பிரக்ஞையின் கடைசி இதழை வாங்கியதாக ஞாபகம். 1975ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.  அப்போது அந்த இதழ் எனக்குப் புரியவில்லை.  ஆனால் ஒரு பத்திரிகை இப்படியெல்லாம் வரலாமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. 
ஏன் இப்படி புரிபடாமல் எழுதுகிறார்கள் என்று அவர்கள் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது.  பல ஆண்டுகளுக்கு முன் திலிப் குமார் வீட்டில் ரவிஷங்கரைப் பார்த்தபோது, üபிரக்ஞை இதழ்களைத் தொகுத்து வெளியிடலாமா?ý என்று கேட்டேன். üஎனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை,ý என்று அவர் குறிப்பிட்டார்.  லாவண்யா என்ற இலக்கிய நண்பரிடம் பிரக்ஞை முழு தொகுதி இருந்தது.  அதை அவரிடமிருந்து வாங்கி முழுத் தொகுப்பு கொண்டு வர நினைத்தேன். ஆனால் அது சாத்தியமில்லை என்று பட்டது.  கிட்டத்தட்ட 1000 பக்கங்களுக்கு மேல் கொண்டு வர வேண்டும்.  அவ்வளவு பக்கங்கள் கொண்டு வர அதிக மூலதனம் போட வேண்டி வரும்.  அப்படி கொண்டு வந்தாலும் அதை விற்பது என்பது சாத்தியமே இல்லை. அதனால் அந்த முயற்சியைக் கை விட்டுவிட்டேன்.  
அந்தக் காலத்தில் பிரக்ஞை இதழ் எப்படி துவங்கப்பட்டது என்பது பற்றி ரவிஷங்கர் குறிப்பிட்டார்.  அப்பத்திரிகையின் ஆசரியர் ரவீந்திரன் என்று குறிப்பிட்டார் (இயக்குநர் ஜெயபாரதியின் தமையனார் இவர்).  ரவீந்திரன் இப்போது உயிரோடு இல்லை.  ஒருமுறை ரவீந்திரனை பைலட் தியேட்டரில் பார்த்தபோது, நான் நடத்திக்கொண்டு வரும் விருட்சம் பத்திரிகையை நிறுத்தி விடும்படி அறிவுரை கூறினார்.  
ஏன் எனில் ஒரு சிறு பத்திரிகை நடத்துவதில் உள்ள சிரமங்கள், மன சஞ்சலங்களைப் பற்றி அறிந்தவர் போல் அவர் தென்பட்டார்.
பிரக்ஞை என்ற பத்திரிகை கசடதபற என்ற பத்திரிகை நிற்கும்போது தொடர்ந்த பத்திரிகை.  கசடதபற என்ற பத்திரிகை நிற்பதற்கு என்ன உண்மையான காரணம் என்பது புரியவில்லை.  பணம் ஒரு பிரச்சினையாக இருந்தால், அதைத்  தருவதற்கு தான் தயாராக இருப்பதாக ரவிஷங்கர் அந்தக் குழுவினரிடம் கொடுப்பதாக இருந்தார்.  ஆனால் அது உண்மையான காரணமல்ல.  சரி நாமும் இப்படி ஒரு பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பித்த பத்திரிகைதான் பிரகஞை.  குறிப்பிடும்படியான எந்தக் கொள்கையும் பிரக்ஞைக்குக் கிடையாது.  முதல் இதழ் ஆரம்பிக்கும்போது, பிரக்ஞையில் எழுதப்பட்ட வாசகங்கள் இதுதான்:
நாங்களும்….
இலக்கியப் பத்திரிகை ஆரம்பிப்பதும் ஆரம்பித்த
பத்திரிகையை சில மாதங்களில் அல்லது
சில வருடங்களில் நிறுத்திவிடுவதம்
தமிழ் இலக்கிய உலகத்திற்கு புதியதல்ல.
இந்தப் பத்திரிகை எழுத்துலகத்தில்
ஒரு திருப்பத்தையோ, அல்லது
ஒரு செம்புரட்சியையோ ஏற்படுத்தும்
என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.
இது என்ன பத்திரிகையா
அது என்ன படமா
இது என்ன எழுத்தா
அது என்ன நடிப்பா
என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறீர்களே ஒழிய
நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்?
இது பலர் எங்கள் மேல் சுமத்திய குற்றச்சாட்டு.
எழுதத் தெரியாதவர்கள்
எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பத்திரிகை நடத்தத் தெரியாதவர்கள்.
நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்
படம் எடுக்கத் தெரியாதவர்கள்
எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நடிக்கத் தெரியாதவர்கள்
நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நாங்கள் இதுவரரை ஒன்றும் செய்துவிடவில்லைதான்.
செய்து விட்டோம்.
üüபிரக்ஞைýý யை ஆரம்பித்து விட்டோம்.
இனி எங்களை யாரும்ட குற்றம் சொல்ல முடியாது.
ஒரு 40 இதழ்களுக்கு மேல் வெளிவந்து பிரக்ஞையும் நின்று விட்டது என்று தோன்றுகிறது.  ஆரம்பித்த போது இருந்த பிரக்ஞை, நின்று போனபோது இல்லை.
ரவிஷங்கர் ஒரு சிறந்த படிப்பாளி.  வெளி நாட்டல் பல ஆண்டுகளாக வசிக்கிறார்.  பிரக்ஞையை விட்டு வந்த பிறகு வெவ்வேறு இடங்களில் வசிக்கும் பலருடன் சேர்ந்து சொல்வனம் என்ற பத்திரிகையை ஆன் லைனில் கொண்டு வருகிறார்.
திருப்தியாக நடந்த கூட்டங்களில் இதுவும் ஒன்று.
     

புத்தக விமர்சனம் 3


அழகியசிங்கர்

1999 ஆம் ஆண்டு மே மாதம் ஆனந்தவிகடன் பிரசுரம், üஉச்சி முதல் உள்ளங்கால் வரைý என்ற புத்தகத்தை முதன் முறையாகக் கொண்டு வந்தது.  அப் புத்தகத்தில் பல அரிய தகவல்களை பல மருத்துவர்கள் கேள்வி பதில் விதமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.  எளிய முறையில் மருத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்கிற அற்புதமான புத்தகம் அது. 
ஆனந்தவிகடன்தான் இது மாதிரியான மருத்துவப் புத்தகங்களை பிரபலமாக்கியது என்று தோன்றுகிறது.  அதன் பின் இதைப்போல் மருத்துவப் புத்தகங்களை பல மருத்துவர்கள் எழுதிக் குவித்துள்ளார்கள்.  அப் புத்தகங்களைப் பார்க்கும்போது, ஆனந்தவிகடன் மாதிரி முயற்சியா என்பது ரியவில்லை.
இப்போதெல்லாம் மருத்துவத்திற்கான தனி இதழ்களே வர ஆரம்பித்துவிட்டன.  அதை மட்டும் வாசிக்கும் வாசகர்களும் நம்மிடையே அதிகரித்துள்ளார்கள்.  
மருத்துவத்திற்கென்று புத்தகங்கள், பத்திரிகைகள் வருவதுபோல் இசைக்கென்று, விளையாட்டிற்கென்று பல புத்தகங்கள் வரத் தொடங்கி விட்டன. 
இந்த வரிசையில் டாக்டர் ஜெ பாஸ்கரனின் மூன்று புத்தகங்களைக் காண நேர்ந்தது.  அவருடைய மூன்றாவது புத்தகம்தான் ‘தலைவலி’. 
இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியபோது முதலில் இப்புத்தகத்தைப் படிக்கக்கூடிய வாசகர்கள் யார் யார் இருப்பார்கள் என்று தோன்றியது.  
நெடுநாளாக தலைவலியால் அவதிப்படுகின்ற ஒரு நோயாளி இப்புத்தகத்தை விரும்பிப் படிக்கலாமென்று தோன்றியது.  நோயால் அவதிப்படுபவர்களுக்குத்தான் நோயின் தன்மைப் பற்றியும், அதிலிருந்து மீண்டு வரவேண்டுமென்ற எண்ணமும் உண்டாகும்.  அந்த வகையில் பாஸ்கரினின் தலைவலி புத்தகத்தைப் படிக்கத் தோன்றும்.  
மருத்துவப்படிப்பெல்லாம் நாம் ஆங்கில வழியில்தான் கற்க வேண்டி உள்ளது.  பாஸ்கரன் புத்தகத்தைப் படிக்கும்போது தாய் மொழியில் கூட மருத்துவ படிப்பை ஏன் உருவாக்கக் கூடாது என்று தோன்றியது.  இதெல்லாம் சாத்தியமா என்பது தெரியவில்லை.  எளிதாக பாமரர்களும் புரிந்துகொள்ளும்படி பாஸ்கரன் எழுதி உள்ளார்.  அதனால் அவருடைய முயற்சியை எளிமையாக கருதி விட முடியாது.  108 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தை எழுத அவர் எந்த அளவிற்குச் சிரமப்பட்டிருப்பார் என்பது தெரியவில்லை.
என் நெருங்கிய உறவினர் ஒருவர் உள்ளார்.  அவர் எப்போதும் நூல் நிலையத்திற்குச் சென்று புத்தகம் எடுக்க வேண்டுமென்று நினைத்தால் மருத்துவப் புத்தகங்களாகவே கொண்டு வருவார்.  அந்த அளவிற்கு மருத்துவ நூல்களைப் படிப்பதற்கும் வாசகர்கள் குவிந்து  விட்டார்கள்.  எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் அவருடைய சிறுகதைத் தொகுதியையும், கிட்னியைப் பற்றி ஒரு புத்தகமும் கொண்டு வந்தார்.  கிட்னிப் பற்றிய புத்தகம்தான் அதிகமாக விற்றது.  அவர் சிறுகதைத் தொகுதியை யாரும் சீண்டக் கூட இல்லை.
இப்படி மருத்துவப் புத்தகத்தை யார் முதன் முதலில் வெளியிட்டார் என்பது தெரியவில்லை. பெரிய பத்திரிகைகள் வாரந்தோறும் மருத்துவக் குறிப்புகளை வெளியிடாமல் இருப்பதில்லை.  அதாவது முதல் தமிழ்ப்புத்தகம் யார் எழுதியிருப்பார்கள்.  ஆனால் இன்று மருத்துவ சம்பந்தமான புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.  க்ரியாவின் டாக்டரைத் தேடி என்ற பெரிய புத்தகம் அதிகமான பிரதிகளை விற்ற வியாபார ரீதியான வெற்றிகரமான புத்தகம். ஆனால் இது ஒரு மொழிபெயர்ப்புப் புத்தகம்.  
பெரும்பாலும் இந்த மருத்துவப் புத்தகங்களை மருத்துவர்களே எழுதுகிறார்கள்.  அவர்கள் எழுதுவதுதான் சரி.  சமீபத்தில் வந்துள்ள ஒரு அவுட் லுக் இதழில் How Salt Kills என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளி வந்துள்ளது.  
பாஸ்கரன் எழுதிய தலைவலி புத்தகத்திற்கு வருவோம்.   பாஸ்கரன் படிக்கும்படி இப்புத்தகத்தை எழுதி உள்ளார்.  ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் தலைவலி இல்லாமல் எந்த மனிதனும் இருப்பதில்லை.  ஆனால்  என்னன்ன காரணங்களால் இதுமாதிரி தலைவலி வருகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.  பாஸ்கரனின் புத்தகம் படிக்கும்போது நமக்கு மலைப்பாக இருக்கிறது.  இப்படிப் பலதரப்பட்ட தலைவலிகள் உள்ளனவா என்ற கவலை இப்புத்தகத்தைப் படிக்கும்போது நம்மிடம் தொற்றிக்கொள்ளாமல் இருப்பதில்லை.  பயமும் கூடி வருகிறது.  ஆனால் உண்மையில் தலைவலியால் அவதிப்படுகிறவர்கள் இப் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தால் ஆறுதல் அடையாமல் இருக்க மாட்டார்கள். 
இப் புத்தகம் மூலம் டாக்டர் பாஸ்கரன் பல அறிவுரைகள் கூறுகிறார்:  நடு நடுவே கிண்டலாகவும் தலைவலியைப் பற்றி விவரிக்கவும் செய்கிறார் :  “ஐயன் திருவள்ளுவர் படைத்த திருக்குறளை ‘உலகப் பொதுமுறை’ என்று சொன்னால், உலகளாவிய மக்கள் அனுபவிக்கும் தலைவலியை, இயற்கையின் படைப்பு எனலாம்”  என்கிறார்.
இப்படி கிண்டலாகவே தலைவலியைப் பற்றி விவரித்துக் கொண்டு போகிறார்.  பின் கேஸ் ஸ்டெடி மாதிரி பல உதாரணங்களை தலைவலிக்குக் கொடுத்துக்கொண்டு போகிறார். 
இப்புத்தகத்தின் நம்பகத் தன்மைக்கு இதுமாதிரியான நோயாளிகளின் வெளிப்பாடு அவசியம் தேவை.  
பின், தலைவலி வருவதற்கு இரண்டுவித காரணங்கள்தான் இருக்க வேண்டுமென்று பிரிக்கிறார்.  ஒன்று உடல் சார்ந்தவை, இரண்டு மனம் சார்ந்தவை.  இவையெல்லாம் சரியாகப் புரிந்து கொண்டால் தலைவலியை விரட்டலாம் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்துகிறார்.
ஒரு இடத்தில் இப்படியும் எழுதுகிறார் :
“50 வயதுக்கு மேல் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் டிரைஜெமினல் நரம்பை அழுத்தும் தமனி /கட்டி உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது என்பது மருத்துவர்களுக்கு இன்றளவும் ஒரு சவாலாகவே உள்ளது.”
தலைவலி என்பது எல்லோருக்கும் ஏற்றபடக் கூடிய ஒன்று.  ஒவ்வொருவரும் அவரவர் தலைவலியைக் குறித்து சில குறிப்புகளை எழுதிக்கொண்டு மருத்துவரை அணுக வேண்டுமென்று டாக்டர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார்.
நான் இப்புத்தகத்தை எடுத்து ஒரே மூச்சில் படித்து விட்டேன்.  இப்படிப் படிப்பது ஒரு சுவையான அனுபவமாக எனக்குப் பட்டது.
தலைவலி – பாதிப்புகளும் – தீர்வுகளும் – டாக்டர் ஜெ பாஸ்கரன் – பக்கம்112 – விலை ரூ.90 – உஷா பிரசுரம் – 2 /3 நாலாவது தெரு, கோபாலபுரம், சென்னை 86
 

ஆகாயம் தாண்டி வா..



 வித்யாசாகர்





டிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா
அழகுமயிலப் போல நீயும்
தோகை விரித் தாடிவா,

கிழங்கு வத்தல் தின்னலாம் கண்ணாமூச்சி ஆடலாம்
குனிந்து நிமிர்ந்து குதிக்கலாம்
குச்சி தள்ளி ஓடலாம்!

ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா
நாலுபாய்ச்சல் குதிரைப்போல
துள்ளித் துள்ளி ஓடி வா,

நொண்டி காலு ஆடலாம் நிலாமேல ஏறலாம்
மூச்சடக்கி ஓடலாம்
முழுக்கடலைத் தாண்டலாம்!

ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா
ஆண்டக் கதையைப் பாடி வா
பழையவீர(ம்) ஊட்ட வா,

மனிதாபிமானம் மறையும் மருத்துவம் ! (மருத்துவம் அன்றும் இன்றும்)



டாக்டர் பாஸ்கரன்

எட்டாம் வகுப்பு வரை நான் சிதம்பரத்தில் தாத்தா, பாட்டிவீட்டிலிருந்துதான் படித்தேன் – மாலைகட்டித் தெரு, முனிசிபாலிடி ஹயர் செகண்டரி பள்ளிக்கூடம் – என்பெற்றோர் சென்னையில் இருந்தனர். சிறு வயது முதலேடாக்டர், மருந்து என்றாலே ஒரு பயம்; அதிலும் ஊசிஎன்றால், மரண பயம் !
ஒரு நாள் முனிசிபாலிடியிலிருந்து சின்ன அம்மைக்கு(நீர்க்குளுவான் – CHICKEN POX.) தடுப்பூசி போடுவதற்குப்பள்ளிக்கு வந்தனர். (அப்போதெல்லாம் பொது சுகாதாரம்அரசின் முக்கியமான பணிகளில் ஒன்றாக இருந்தது). ஒருசொட்டு வாக்சினை முழங்கைக்குக் கீழே, நிமிர்த்திய கைமேல் வைத்து, அதன் மேல் மெல்லிய ஊசிகள் கொண்டசிறிய திருகாணியால் சுழற்றி விடுவர் – மருந்தும்தோலுக்குள் சென்றுவிடும் ! எறும்புக்கடியை விட குறைவானவலிதான். இந்த ஊசிக்குப் பயந்து நான் பிரேயர் மைதானம்முழுவதும் அலறியபடி ஓடியதும், ஹெட்மாஸ்டர் திருஉமாபதி அவர்கள் என்னைத் துரத்திப் பிடித்ததும் இன்றும்நினைவிலிருக்கிறது ! (ஊசி போட்டுக் கொண்டேனாஎன்பது நினைவில் இல்லை !) ஊசியை விட என்அலறலுக்கு மிரண்ட குழந்தைகளே அன்று அதிகம் ! இன்றுபள்ளிகளில் அந்த தடுப்பூசிகள் இல்லை – சின்ன அம்மையும்அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
அப்போது என் மாமா வீட்டுக் குடும்ப டாக்டர் திருவெங்கடேசம் பிள்ளை  – தீவிர காந்திய வாதி;அரைக்கைகதர்ச் சட்டை, கதர் வேட்டியுடன்தான் டிஸ்பென்சரியில்இருப்பார்.  அந்த கால கருப்பு பிரேம் கண்ணாடி அணிந்து, கிட்டத்தட்டஅன்றைய முதலமைச்சர் திரு பக்தவத்சலம்சாயலில் இருப்பார் !
பளபளவென்று மின்னும் சிமெண்ட் தரை, சுற்றிலும் மூன்றுஅல்லது நான்கு அடி உயர சுவர் – அதன் நான்கு மூலையிலும்மூங்கில் நட்டு, அதன்மேல் தென்னங்கீற்றுகளால்அருமையாக வேய்ந்த கூரை, பக்கத்துக்கு ஒன்றாக தொங்கும் இரண்டு நாற்பது வாட் பல்புகள்  – இதுதான் கன்ஸல்டிங்ரூம் ! ஒரு மேஜை, நாற்காலி, நோயாளியைப் பரிசோதிக்கஒரு பெஞ்சு, மர அலமாரியில் மருந்துகள், ஊசிகள் ( நான்அந்தப் பக்கமே திரும்ப மாட்டேன், பயம்!), ஸ்டெரிலைஸ்செய்ய ஓர் எலெக்ட்ரிக் ஹீட்டர் இத்யாதிகள். இயற்கையான காற்றுடன், நல்ல வெளிச்சத்துடன் இருக்கும்அந்த இடமும், சூழலும், இன்றைய குளிர் வசதியுடன் கூடிய, ஐந்து நட்சத்திர ஓட்டல் அறை போன்ற கன்ஸல்டிங்அறைகளை விடப் பல மடங்கு ஆரோக்கியமானதும், மனதுக்கு இதமளிப்பதும் ஆகும்.
உருண்டையான அல்லது பட்டையான பாட்டிலில் கலர்மருந்துகள் – அதன் முதுகில், வேளைக்கு ஏற்ப கத்தரித்துஒட்டப்பட்ட சீட்டு; சிறிய காகிதப் பாக்கெட்டுகளில் இரண்டுமூன்று மாத்திரைகள் அல்லது பொடிகள் ! இதற்கென்றுதனியாக மற்றுமொரு கீற்றுக் கொட்டகை – அன்றையபார்மசி ! மாத்திரை, மருந்துகளைக் கலந்து கொடுக்கும்கம்பவுண்டர், பளிச்சென வெள்ளை உடையில், புன்முறுவலுடன் !
மூன்றாவது கீற்றுக் கொட்டகையில், மூன்று படுக்கைகள் – அவசர கேஸ்கள், செலைன் ஏற்றுவதற்கு, புண், காயங்களுக்குக் கட்டு போடுவதற்கு, மற்றும் சிறிய அறுவைசிகிச்சை செய்வதற்கு என !
ஒரு நர்சு, ஒரு கம்பவுண்டர், ஓர் அசிஸ்டண்ட் – அவ்வளவுதான்.  நல்ல ஆரோக்கியமான சூழலில், அழகாகப்பராமரிக்கப்பட்ட டிஸ்பென்ஸரி அது !
‘ஸ்டெதாஸ்கோப்’ அன்றைய மருத்துவரின் மிக முக்கியமானஅணிகலன் – புன்னகைக்கு அடுத்தபடி ! இதயம், நுரையீரல், வயிற்றுப்பகுதி என எல்லா வியாதிகளுக்கும்ஸ்டெதாஸ்கோப் ஒன்றுதான் பரிசோதனைக்கு – இரத்தக்கொதிப்பு அளக்க மெர்குரி மானோமீட்டர், காய்ச்சல் அறியஒரு தெர்மாமீட்டர், நிறையப் பொது அறிவுடன் கூடிய மூளை – இவைதான் அன்றைய மருத்துவரின் மருத்துவக் கருவிகள் ! 
மிகக் குறைவான இரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், எப்போதாவது ஒரு எக்ஸ்ரே  ! மிக மிகக் குறைவானமருந்துகள் – சல்பாடயசின், பெண்டிட்சல்பா, பெனிசிலின் ஊசி, டெராமைசின், ரிபோப்ளேவின் போன்ற மிகக் குறைந்த விலையிலான சிறந்த மருந்துகள் – இவற்றுடன்தான் அன்றைய மருத்துவம் நடந்தது !,
சிறுவனான என்னைக்கூட, ‘என்ன தம்பீ, தாத்தா கூடவந்திருக்கியா ? மாமா ஊர்லெ இல்லயா ? அம்மாமெட்ராசுலெ நல்லா இருக்காங்களா ?’ போன்ற நலவிசாரிப்புகள் அவரை நம்மில் ஒருவராகச் செய்துவிடும் – வியாதியில் பாதி மறைந்து விடும் !
ஊசிக்குப் பயந்து நான் கதற, இரண்டு பேர் என்னைஅமுக்கிப் பிடிக்க, ‘ நல்லா உரக்க சத்தம்போடு தம்பீ – மெட்ராஸ்லெ அம்மாவுக்குக் கேக்கணுமில்ல ‘ என்றுசிரித்தபடியே வலியின்றி ஊசி குத்துவார் !
மனிதநேயம், அன்பு, அனுதாபம் நிறைந்த கரிசனம், குறைந்தமருந்துகள், நிறைந்த மன அமைதி, செய்யும் மருத்துவம் மீது நம்பிக்கை – இவையே அன்றைய மருத்துவர்களைஅடையாளம் காட்டின – அவர்கள் என்றும் வணக்கத்துக்கும், மரியாதைக்கும் உரியவர்களாக இருந்ததில் வியப்பென்ன?    
இன்றைய நிலை என்ன ?
இன்று மருத்துவத் துறையில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையேயும் ஒரு அவசர நிலை நிலவுகிறது. பேசுகிறவர்கள் தவறான தகவல் தருகிறார்கள் ; மற்றவர்கள்பேசாதிருக்கிறார்கள் ! நோயாளி – மருத்துவர் இடையில் நிலவ வேண்டிய பரஸ்பர நம்பிக்கை இன்று குறைந்து வருகிறது.
முன்பிருந்த ‘குடும்ப டாக்டர்’ (FAMILY PHYSICIAN), என்னும் உறவு வழக்கொழிந்து வருகின்றது. இன்று படித்த அனைவரும் ‘ஸ்பெஷலிஸ்ட்’ மோகம் பிடித்து அலைகிறார்கள். முன்பெல்லாம், முதலில் குடும்ப டாக்டர்பார்த்து, பின்னர் தேவைக்கு ஏற்ப சிறப்பு மருத்துவரை சிபாரிசு செய்வர். இன்று ஊடகங்கள், வலைதளம் போன்றவை வெளியிடும் தகவல்களைக் கொண்டு மக்களும் சிறப்பு மருத்துவரையே நாடுகின்றனர் – பல சமயங்களில், தவறாகப் புரிந்துகொண்டு, தவறான மருத்துவரிடமும் செல்கின்றனர் – தேவையற்ற பரிசோதனைகள், மருந்துகள் என நேரமும், பணமும் விரயமாக்கப் படுகின்றன. அரிதாக ஒரு டாக்டர் டெஸ்டுகள் வேண்டாம் என்று சொல்லப் போக, உடனே வேறு ஒரு டாக்டரின் அல்லது நண்பரின் உதவியுடன் தாம் விரும்பும் டெஸ்டுகளை எடுத்து விடுகின்றனர் ! அறியாமை ஒரு புறம், ஏதாவது வியாதி இருந்து விடுமோ என்ற அச்சம் ஒரு புறம் மனிதனை ஆட்டுவிக்கிறது.
அறிவியல் வளர்ச்சி, புதிய பரிசோதனை முறைகள், புதிய மருந்துகள் என மருத்துவத் துறையின் முன்னேற்றம் பல புதிய தளங்களில் இன்று செயல்படுகின்றது. சராசரியாக 30-35 வயதுதான் வாழமுடியும் என்று இருந்தது, இன்று 60-65 வயது வரை வாழலாம் என்று ஆகிப்போனது ! மருத்துவத்துறையின் மகத்தான முன்னேற்றம் இது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதிக நாள் வாழ்வதற்கான விலையையும் கொடுக்க வேண்டிய நிலையையும் மறுப்பதற்கில்லை ! மனிதனின் வயது அதிகமாக ஆக, உடன் வயது சார்ந்த வியாதிகளும் அதிகரிக்கத் தானே செய்யும் – நீரிழிவு, இரத்தக்கொதிப்பு, ஸ்ட்ரோக் எனும் பக்கவாதம், அல்சைமர்ஸ். பார்க்கின்ஸன்ஸ், எலும்பு முறிவு, புற்று நோய்போன்ற வியாதிகள் அதிகமாகக் காணப்படுவதும் இயல்புதானே ! இன்றைய மருத்துவத் துறை எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலே ‘வயதானவர்களும் அவர்களது நோய்களும்’ தான் !
ஏன் வியாபாரமாகிப் போனது ?
அறுபதுகளில் நான் மருத்துவம் படிக்கும்போது – அரசு மருத்துவக் கல்லூரியில் தகுதி ஒன்றே கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுள் நானும் ஒருவன் – என் ஒரு வருடக் கல்லூரி கட்டணம் ரூ271/- !(கடைசீ தேதி வரைஅந்தப் பணம் கூட இல்லாமல் அலைந்தது, வேறு தனிக்கதை !) 
இன்று  பல இலட்சங்கள் – கோடிகள் மருத்துவ மேல் படிப்புக்குச் செலவாகிறது. போட்ட முதலை எடுக்கவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது ! .பணம் பண்ணுவதும், ஏமாற்றுவதும் மனித உயிர்களைப் பணயம் வைத்துச் செய்யும் வியாபாரம் ஆகும் – மருத்துவம்வியாபாரம் அல்ல ! 
பணம் படைத்த பெற்றோரும் தன் மகனையோ அல்லது மகளையோ மருத்துவராக்கிப் பார்க்க ஆசைப் படுகின்றனர் ! மருத்துவத்தில் நிறைய பணம்சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் சமூகத்தில் பரவியுள்ளது. இப்போது பணம் கொடுத்தால் மருத்துவ சீட் கிடைக்கிறது – இவைகள் ஒருபோதும் மருத்துவம் பயிலக் காரணமாகி விடக்கூடாது. உண்மையிலேயே ஊக்கமுடைய மருத்துவராக வேலை – இல்லைசேவை – செய்வதாக இருந்தால் மட்டும், இத்துறையைத் தேர்வு செய்யலாம். சமூகத்தில் உள்ள மதிப்புக்குக் காரணம், பணமோ, பகட்டோ, பலமாடிக் கட்டிடமோ அல்ல – உயிர்காக்கும் கடமைக்கும், தன்னலமற்ற சேவைக்கும் மக்கள்காட்டும் நன்றியறிதல் ! மருத்துவத்தைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொருவரும் உணர வேண்டிய சத்தியம் இது ! 
சமூகம் என்ன எதிர்பார்க்கிறது ?
மருத்துவர்கள் சோதிடர்களோ, மந்திரவாதிகளோ அல்லது கடவுளோ அல்ல ! அவர்கள் கற்றறிந்துள்ள மருத்துவத்தின் மூலம் வியாதியைத் தீர்க்கவோ அல்லது வீரியத்தைக் குறைக்கவோ முயல்கின்றனர்.
சமூக சிந்தனைகளில் மாற்றம் தேவை ! இன்றும் ஏதாவது ஊசி போட்டால்தான் வியாதி குணமாகும் என்ற எண்ணம் பாமர மக்களிடம் மட்டுமல்லாமல், படித்தவர்களிடையேயும் காணப்படும் அறியாமையாகும்.
தனக்கு ஒரு குறைபாடு/ நோய் உள்ளதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனமே இங்கு அதிகம் காணப்படுகின்றது. “ இதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? “ என்பதை விட, “ எனக்கு ஏன் வந்தது ? ஏதாவது செய்து இதனைத் துடைத்து விட்டாற்போல், தீர்த்துவிட முடியுமா ? “ என்கிற எண்ணங்களே அதிகம் காணப்படுகின்றன !
நாம் நினைப்பதைச் சொல்லும் டாக்டர் கிடைக்கும்வரை,சட்டை மாற்றுவதைப் போல, –மருத்துவர்களை மாற்றிக்கொண்டே இருப்பவர்கள் நம்மிடையே ஏராளம்!!
மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுகிறோம் என்ற பெயரில், ஊடகங்கள் வெளியிடும் தகவல்களின் நம்பகத் தன்மை கேள்விக் குறியாகி விடக்கூடாது. மக்கள் மனதில் தவறான கருத்துக்களைப் பரவ விடுதல், வீண் மனக்கலவரத்தையும், பீதியையுமே தோற்றுவிக்கும். இன்றைய மருத்துவத்தின் அணுகுமுறை, மருத்துவர்-நோயாளி இருவருக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை , நோய் குறித்த விளக்கங்கள், விளைவுகள் போன்ற பலதளங்களிலும் மாற்றம் அவசியம்.
இது குறித்து மருத்துவக் கல்வியில் ஒரு தனி பிரிவே தொடங்கி, இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டலாம் !