நவீனவிருட்சம்

நவீனவிருட்சம் 98வது இதழ் வெளிவந்து விட்டது.  வழக்கம்போல கதைகள், கவிதைகள், கட்டுரைகள், புத்தக மதிபபுரை எல்லாம். வழக்கம்போல இதழ் தாமதமாக வந்துள்ளது.  முதன் முதலாக விருட்சம் அட்டையில் ஒரு எழுத்தாளரின் புகைப்படத்தைப் பிரசுரம் செய்துள்ளேன்.  வருத்தமான சூழ்நிலையில்தான இதைச செய்யுமபடி நேரிட்டது.  படைப்பின் ரகசியம் என்ற தலைப்பில் ஞானக்கூத்தன் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.  இதழில் மூன்று சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.  அ மலைச்சாமி என்பவர் ஊமைக் கொலுசுகள் என்ற பெயரில் கதை எழுதி உள்ளார்.  ஜாதுஷ்டிரன் என்ற கவிஞர் யார் என்பது தெரியவில்லை.  அவருடைய கவிதைகளை எல்லாம் திரட்டி வெளியிட்டிருக்கிறேன்.  இன்னும் சில கவிஞர்களின் கவிதைகளை இப்படிப் பிரசுரம் செய்ய உத்தேசம்.  இரண்டு புத்தகங்களுக்கு விமர்சனம் வந்துள்ளன.   

    கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக நவீன விருட்சம் வெளிவந்து கொண்டிருக்கிறது.  அதிகப் பக்கங்கள் இல்லை எளிமையான பத்திரிகையாகத்தான் விருட்சம் வெளிவந்து கொண்டிருக்கிறது.  இனிமேலும் வரும்.  உங்களுடைய வாழ்த்துகள் தேவை.

    வழக்கம் போல் நவீன விருட்சம் தனி இதழ் ரூ15.  ஆண்டுச் சந்தா ரூ.60.  பத்திரிகை யாருக்காவது வேண்டுமென்றால் அனுப்பி வைக்கப்படும.  பத்திரிகையைப் படிககப் பிடித்திருந்தால், ரூ.60 கொடுத்து சந்தா செலுத்துங்கள்.  இல்லாவிட்டால் ஒரு இதழ் அனுப்பியதற்காக ரு15 அனுப்பவும்.  இதழ் திருப்தி அளிக்காவிட்டால், பத்திரிகையை ஒரு கவரில் போட்டு பத்திரிகை அலுவலகத்திற்கே அனுப்பி விடலாம்.  

    இது குறித்து 9444113205 தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.  அல்லது navina.virutcham@gmail.com  உங்கள் முகவரியைக் குறித்து அனுப்பவும்
                                                                                                                  அன்புடன்
                                                                                                               அழகியசிங்கர்

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 18

    

    தலைப்பு     ஊடகக்  கலாச்சாரம்   

    பேசுவோர்     கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
       
    இடம் :         அலமேலு கல்யாண மண்டபம
                         அகஸ்தியர் கோயில் பின்புறம்
                         19 ராதாகிருஷ்ணன் தெரு
                        தி நகர், சென்னை 600 017

    தேதி        31.10.2015 (சனிக்கிழமை)       
   
    நேரம்         மாலை  6 மணிக்கு

    பேசுவோர் குறிப்பு : பல ஆண்டுகளாக அச்சு ஊடகத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருபவர்.  தீவிர வாசிப்பு, ஆக்கப்பூர்வமான உரையாடல் என இயங்கி வருபவர்.  சிறுபத்திரிகை சூழலோடு நெருக்கமான உறவுக் கொண்டிருப்பவர்.  கவிஞர், கட்டுரையாளர்.

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர் – ஆடிட்டர் கோவிந்தராஜன்   

ஒரு நினைவு – ஒரு திரைப்படம்

பிரபு மயிலாடுதுறை

எனது இளம் பிராயத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி மனதில் ஓர் ஆழமான ஞாபகமாக
பதிவாகி உள்ளது. அவ்வனுபவத்தின் கூறுகளாக ஒரு திரைப்படமும் நானும் எனது
தந்தையும் உள்ளோம். அது நிகழ்ந்த போது, எனக்கு ஐந்து வயது. பள்ளி
விடுமுறையாயிருந்த ஒரு சனிக்கிழமையில், எனது தந்தை என்னை சைக்கிளில்
முன்னால் அமர வைத்து அழைத்துச் சென்றார். அன்றைய பகலின் வெளிச்சம் கூட
தெளிவாக இன்னும் நினைவில் இருக்கிறது. வாகனம் ஒரு திரையரங்குக்கு சென்றது.
அது நாள் வரை, மாலை நேரத்தில் திரைப்படம் பார்க்க பெற்றோருடன் அல்லது
உறவினர்களுடன் அரங்குக்கு சென்றிருந்த எனக்கு தந்தையும் நானும் மட்டும்
படம் பார்க்கச் சென்றது நூதனமாக இருந்தது. பெரிய தாழ்வாரங்கள்,சிறு திறப்பு
கொண்ட டிக்கெட் கொடுக்குமிடம், பெரும் உயரம் வரை பொருத்தப்பட்டிருக்கும்
சிமெண்ட் ஜாலிகள், சுருண்டிருக்கும் சோள உருண்டைகள், டிக்கெட் கிழித்து
உள்ளே அனுப்பும் பணியாளர்கள் மற்றும் நீண்ட வரிசையில் நிற்கும் சைக்கிள்கள்
ஆகிய திரையரங்கின் காட்சிகள் மீது திரைப்படம் போலவே ஈர்ப்பு இருந்தது.
அங்கே நிறைய பேர் இருந்தனர். இருக்கையில் அமர்ந்ததும் எனது தந்தை என்னிடம்
நாம் பார்க்கப் போவது உமர் முக்தார் என்ற ஆங்கில மொழித் திரைப்படம் என்று
சொன்னார். உமர் முக்தார் உமர் முக்தார் என திரும்பத் திரும்ப மனதிற்குள்
சொல்லிக் கொண்டேன். அந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒரு பாலைமண் பிரதேசத்தில் விரியும் நிலக்காட்சியுடன் ஆரம்பிக்கும் அப்படம்
என்னை உள்ளிழுத்துக் கொண்டது. கண்ணைக் கூசச் செய்யும் மணல் பரப்பு,
இறுக்கமான உடல் கொண்ட மனிதர்கள், நான் பார்த்திராத வித்தியாசமான நிறத்தில்
கண்கள் கொண்ட பெண்கள், ஜீப் போன்ற வாகனங்கள் எழுப்பும் என்ஜின் சத்தம்,
சீருடை அணிந்த ராணுவ வீரர்கள், ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நிரல்
நிரையாக நிறுத்தப்பட்டு அவர்களைக் கடுமையாகத் திட்டி சிலருக்கு அருகில்
வரும் போது சுட்டுக் கொல்லும் அதிகாரி, ஒரு பாலத்தில் ராணுவத்துக்கும் உமர்
முக்தார் குழுவுக்கும் நடக்கும் சண்டை ஆகிய காட்சிகள் இன்று வரை
துல்லியமாக ஞாபகத்தில் உள்ளன. முப்பது ஆண்டுகள் ஆகி விட்டது அப்படம்
பார்த்து. இடைவேளையின் போது படம் எப்படியிருக்கிறது என அப்பா கேட்டார்.
நான் அப்போது மானசீகமாக அப்பாலைவனத்தில் இருந்தேன். ரொம்ப பிடிச்சிருக்கு
என்று சொன்னேன்.

குடும்பத்துடன் தியேட்டருக்குச் செல்லும் போது,
அங்கே எழும் சிகரெட்டின் நெடி எனக்கு புதுமையாக இருக்கும். அம்மா என்னுடைய
மூக்கைப் பொத்துவார்கள்.

‘அம்மா அவங்கள்ளாம் ஏன் சிகரெட் பிடிக்கிறாங்க?’

‘அது ரொம்ப தப்பு. அவங்களுக்கெல்லாம் பழக்கமாயிடுச்சு.’

‘தப்புன்னா ஏன் செய்யறாங்க?’

‘தம்பி! தியேட்டருக்கு வந்தா அதெல்லாம் கவனிக்கக்கூடாது.’

‘அம்மா!ஏன் இங்கே ரொம்ப குப்பையா இருக்கு?’

‘நிறைய பேர் வர்ராங்கள்ள.அதனால அப்படியிருக்கு. நீ குப்பையை குப்பைத்தொட்டியிலத்தான் போடனும்.சரியா?’

‘அம்மா!இந்த பிஸ்கட் கவர குப்பைத்தொட்டியில போடட்டுமா?’

‘சரி! போய் போட்டுட்டு வா.’

ஒரு சிமெண்ட் தொட்டியில் கொட்டப்பட்டிருந்த மணலில் வெற்றிலை எச்சில்
துப்பியிருப்பதைக் கண்டு பீதியுறுவேன். கவரை போட்டுவிட்டு ஓடி வந்து
விடுவேன். சினிமா முடிந்ததும் பார்வையாளர்கள் வேகவேகமாக வெளியே செல்வதைக்
காண அச்சமாக இருக்கும். சைக்கிள் ஸ்டாண்டில் கேரியர்கள் தூக்கப்பட்டு
ஸ்டாண்ட் வேகமாக வைக்கப்படுவதன் சத்தத்திற்கு பீதியடைவது இன்னும் நினைவில்
இருக்கிறது. பலரின் செருப்புகள் தேய்ந்து உருவாகும் ஒலியால் தொந்தரவடைவேன்.

உமர் முக்தார் படம் மீண்டும் துவங்கியது.

உமர் முக்தார் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு தூக்கு மேடைக்கு
கொண்டுவரப்படுவார்.அப்போது அங்கே கூடியிருக்கும் மக்கள் துயரத்துடன்
குரலெழுப்பி அவரை நோக்கி நெருங்கி வருவர். உமர் தூக்கிலிடப்படுவார்.
அக்கூட்டத்தில் ஒரு சிறுவன் இருப்பான். அவன் தரையில் விழுந்த உமர்
முக்தாரின் கண்ணாடியை எடுத்து கையில் வைத்துக் கொள்வான். படம் முடியும்.

படம் பார்த்த அனைவரும் வெளியே வந்தோம். யாரும் ஒரு வார்த்தை கூட
பேசவில்லை. அனைவரும் அமைதியாக மெதுவாக வெளியேறினர். சைக்கிள் ஸ்டாண்டில்
கூட இரைச்சல் இல்லை.சிறு சலனம் கூட இல்லாத பேரமைதி நிலவியது.

அப்பா என்னை சைக்கிளில் அமரச் செய்து ஓட்டிக் கொண்டு சென்றார். நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அப்பாவிடம் கேட்டேன்:
அந்தப் பையன் ஏன் உமர் முக்தார் கண்ணாடியை எடுத்து வச்சுகிட்டான்?
அப்பா மௌனமாக யோசித்தார். சைக்கிள் பெடலாவதன் ஒலி மட்டும் கேட்டது.

‘அவருடைய ஞாபகத்துக்காக இருக்கும்பா:’ அப்பா சொன்னார்.

‘உமர் முக்தாரின் மூக்குக் கண்ணாடி என்னிடமும் இருக்கிறது’

பின்குறிப்பு

உமர் முக்தார் லிபியாவில் முசோலினியின் ஃபாசிசப் படையின் ஆக்கிரமிப்புக்கு
எதிராகப் போராடிய போராளி.மக்கள் ஆதரவுடன் அவர் உருவாக்கிய குழுக்கள்
இத்தாலி இராணுவத்துக்கு எதிராகப் போராடின.போராளிகளின் கெரில்லா
தாக்குதல்கள் இத்தாலிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.உமர் முக்தாரைப்
பிடிக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக உமர் கைது
செய்யப்பட்டார்.விசாரணைக்குப் பின் பொதுமக்கள் முன்பாக தூக்கிலிடப்பட்டார்.

முஸ்தஃபா அக்கார்ட் என்ற இயக்குனர் Lion of the desert என்ற பெயரில் உமர்
முக்தாரின் வாழ்வை 1981ம் ஆண்டு திரைப்படமாக எடுத்தார்.1986ம் ஆண்டு
தமிழ்நாட்டில் உமர் முக்தார் என்ற பெயரில் வெளியாகி பரவலான வரவேற்பை
பெற்றது.ஆன்ட்டனி குவின் என்ற நடிகர் உமர் முக்தாராக நடித்தார்.

கட்டுரையில்,படத்தின் கிளைமாக்ஸுக்குப் பின் பார்வையாளர்களிடம் ஏற்பட்ட
அமைதிக்கு ஒரு போராளி மகத்துவமான விதத்தில் மரணத்தை எதிர்கொண்டது காரணமா
அல்லது முஸ்தஃபா அக்கார்டின் திரைக்கதை காரணமா அல்லது ஆன்ட்டனி குவினின்
தத்ரூபமான நடிப்பு காரணமா அல்லது மேற்சொன்ன அனைத்துமே காரணமா என்று
இப்போதும் யோசித்துப் பார்க்கிறேன்.

Chandramouli Azhagiyasingar's photo.

மறதியின் பயன்கள்

 
 ஞானக்கூத்தன்
 
 
 பல ஆண்கள் தங்கள் திருமண நாளை இக்காலத்தில் கொண்டாடுகிறார்கள். கொண்டாடுவது என்றால் மனைவிக்குப் புதிய புடவை வாங்கித் தருவது, முடிந்தால் கால் பவுன் அரைப் பவுனில் தங்க நகை வாங்கித் தருவது, காலையில் கோவிலுக்குப் போவது, இல்லையென்றால் மாலையில் போவது. இவற்றில் எது சாத்தியப்படுகிறதோ இல்லையோ, இரவு உணவை ஹோட்டலில் வைத்துக்கொள்வது. இப்படித் திருமண நாள் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் திருமண நாளைப் பெண்கள்தான் நினைவில் வைத்திருப்பார்கள். ஆண்கள் முற்றிலும் மறந்துபோய்விடுவார்கள். அப்படியே நினைவிருந்தாலும் தேதியும், மாதமும் நினைவில் இருக்குமே தவிர கல்யாணமான வருஷம் நினைவில் இராது. எத்தனையாவது வருஷம் என்று தெரியவந்தால் அவர்களுக்கு அதிசயமாகவும் அதிர்ச்சியாகவும்கூட இருக்கும்.
 
 பாரதியாரால் தனது கல்யாணத் தேதி, வருஷம் முதலானவற்றைச் சரியாக நினைவுபடுத்திக்கொள்ள முடிந்ததா என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. பாரதியின் வரலாற்றை எழுதிய வ. ராமஸ்வாமியால் பாரதியின் திருமணத்தைப் பற்றி, அவருக்கு என்ன வயது இருக்கும் என்பது பற்றி எதுவும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
 
 கல்யாணத்துக்கு முன்பு 11ம் வயதில் பாரதி என்ற விருதைப் பாரதியார் பெறுகிறார். பல புலவர்கள் சொன்ன அடிகளை வைத்துக்கொண்டு அவர் பாடிய திறமையை அங்கீகரித்து இவ்விருது அவருக்குத் தரப்பட்டதாம். ஆனால் இவ்விருதுக்குக் காரணமான எந்தப் பாட்டும் கிடைக்கவில்லை. காலம் கடந்து நிற்கவில்லை. 7ம் வயதிலேயே கவிகளைக் கவனம் செய்தவர் என்கிறார் அவரது பால்யகால நண்பர் சோமசுந்தர பாரதியார். 7 வயதில் பாடகர்கள் கிடைப்பார்கள். ஆனால் புலவர்கள் கிடைக்க மாட்டார்கள். பாரதி காந்திமதி நாதன் என்பவரைக் கேலிசெய்த வெண்பா அவர் உயர்நிலைப் பள்ளியில் மாணவராக இருந்தபோது பாடியதாம். இந்த வயது கவி புனையும் வயதுதான். ஆனால் பாரதியின் இளம் பருவத்துக் கவிதைகள் பல நிற்கவில்லை. 7ம் வயதில் பாரதி அருட்கவி பொழிந்தார் என்று விகடன் பதிப்பு கூறுகிறது. ‘காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல்’ என்ற சமத்காரப் பாடல் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளது. பாரதி 7ம் வயதில் கவி புனைந்தாரென்றால் அவருக்குக் கல்யாணம் நடக்கும் முன் எத்தனைக் கவிகள் புனைந்திருக்க வேண்டும்? அப்படிப் புனைந்திருந்தால் அவற்றில் ஒன்றிரண்டாவது நிலை பெற்றிருக்க வேண்டுமே! ஆனால் ஒரே ஒரு பாட்டு நிற்கிறது. அது அவர் தனது கல்யாணத்தின்போது புதிய மனைவியைப் பார்த்துப் பாடியது. அவருடைய மனைவிக்கு அப்போது வயது 7. உணவை ‘மம்மு’ என்றும், பருப்பைப் ‘பப்பு’ என்றும் சொல்கிற வயது. அவரைப் பார்த்துப் பாரதி பாடினாராம். எப்படி?
 
 தேடக் கிடைக்காத சொன்னமே – உயிர்ச்
 சித்திரமே மட அன்னமே
 கட்டி அணைத்தொரு முத்தமே – தந்தால்
 கை தொடுவேன் உனை நித்தமே.
 
 பாரதி இப்படி எல்லோர் எதிரிலும் பாடினாராம். பதினான்கு வயதில் இப்படிப் பாட முடியுமா? முடியும். பாரதி சிற்றிலக்கியம் வியாபகமான ஜமீன்தார் இல்லத்துச் சூழலில் துரதிர்ஷ்டவசமாகத் தனது திறமைக்குத் தீனி போட்டிருக்கிறார். பாடத்தான் முடியுமே தவிர உள்ளடக்கம் அவருடையதல்ல. உ.வே. சாமிநாத அய்யர் தான் செய்யுள் இயற்றியதைப் பற்றி எழுதியிருப்பதை இலக்கிய வாசகர்கள் இங்கே நினைவுகூரலாம். திருமணத்துக்கு முன்பே பெண்ணைப் பற்றிய, சம்போகத்தைப் பற்றிய அறிவு இப்பாடலில் வெளிப்படுகிறது. வைதிகக் கல்யாணத்தில் சிறுவர்-சிறுமியரான மணமக்கள் விளையாடும் சமயமான நலங்கில் இது நிகழ்ந்திருக்கலாம். ஆனால் இந்தப் பாட்டை இயற்றியவர் யார்? இந்தக் கல்யாணம் தனது பன்னிரண்டாம் வயதில் நடந்ததாகப் பாரதி சொல்கிறார்.
 
 ஈங்கொர் கன்னியைப் பன்னிரண்டு ஆண்டனுள்
 எந்தை வந்து மணம் புரிவித்தனன்
 என்கிறது பாரதியின் செய்யுள்.
 பன்னிரண்டு ஆட்டை இளைஞனுக்கு
 என்னை வேண்டும் இடர்க்குறு சூழ்ச்சிதான்
 
 என்று இரண்டாம் முறையாகக் கல்யாணத்தின்போது தனது வயது பன்னிரண்டு என்கிறார் பாரதி. ஆனால் சோமசுந்தர பாரதியாரோ பாரதியாருக்கு அப்போது வயது 14 முடிந்து ஆறு மாதம் என்கிறார். 1897ம் வருடம் ஜூன் மாதம் பாரதியின் கல்யாணம் நடந்தது என்கிறார் சோ.சு. பாரதியார். அவர் தனது கையில் பாரதியின் கல்யாணப் பத்திரிகையே உள்ளது போல் பேசுகிறார். ஏனெனில் எட்டயபுரத்தில் பாரதியாருக்குப் பக்கத்துவீட்டுக்காரராக வளர்ந்தவர் சோ.சு. பாரதியார். இதைக் கி.ஆ.பெ. விசுவநாதம் குறிப்பிட்டிருக்கிறார் (தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டு மலர் 1947). எந்தப் பாரதியார் சொல்வது சரி? பாரதியின் கல்யாணம் 1892ல் நடந்ததா அல்லது 1897ல் நடந்ததா? தன்னுடைய கல்யாணம் தனக்கொரு சோகம் என்ற குரலில் பாரதி செய்யுள் செய்கிறார். சோமசுந்தர பாரதியோ சுப்பிரமணிய பாரதி கல்யாணத்தின்போது உற்சாகமாக இருந்தார் என்கிறார். எது சரி?
 
 சமீப காலத்தில் தனது கல்யாணத் தேதி பற்றிய உறுதியற்ற நிலையைக் கூறியவர் சுந்தர ராமசாமி. ‘என் மூளை பற்றிச் சில தகவல்கள்’ என்ற கட்டுரை அமுதசுரபி நவம்பர் 2004 இதழில் வெளிவந்துள்ளது. அதில் அவர் எழுதியிருக்கிறார்:
 
 “எனது மூத்த மகனின் திருமண நாளோ அல்லது மாதமோ மட்டுமல்ல, வருடத்தைக்கூட நினைவுகூர எனக்குச் சிறிது தடுமாற்றம்தான். ஒரு முக்கியமான அலுவலகத்தில் என்னுடைய திருமண நாளைச் சரிவரத் தெரியாது போனதால் உத்தேசமாக எனது எழுபதாவது வயதில் நான் என் மனைவியை மீண்டும் திருமணம் செய்துகொண்டு அதற்குரிய தஸ்தாவேஜுகளைச் சமர்ப்பிக்க நேர்ந்தது.”
 
 இந்தக் கட்டுரை வெளியானது 2004ம் ஆண்டு நவம்பரில். அப்போது சுந்தர ராமசாமிக்கு வயது 73. அவர் குறிப்பிட்ட தஸ்தாவேஜ் திருமணம் நடந்தது வெறும் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான். அதாவது அவருக்கு 70ஆக இருக்கும்போது. மூன்று ஆண்டுகளுக்குள் மறந்துவிட முடியுமா சில தகவல்களை? பெரும்பாலான தந்தைகள் தங்கள் மகன், மகள் திருமண வருஷம், மாதம், தேதி விவரங்களை மறந்துவிடுகிறார்கள். என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். கிருஷ்ணன் நம்பி என்ற எழுத்தாளர் – இவர் சு.ரா.வுக்கு மிக நெருங்கிய நண்பர் – இறந்த நாளன்று அங்கு (அந்த வீட்டில்…) சுந்தர ராமசாமி இருந்தார் என்கிறார் வெங்கடாசலம். ஆனால் சுந்தர ராமசாமியோ ‘என் நினைவில் அது தெளிவாக இல்லை’ என்கிறார். இந்தக் கட்டுரைக்குப் பீடிகையாக ‘மனித மனம் சிக்கலானது’ என்றும் சொல்லியிருக்கிறார் சுந்தர ராமசாமி. மறுக்க முடியுமா?

வெங்கட் சாமிநாதனைப் பற்றி சில தகவல்கள்……

அழகியசிங்கர் 

சமீபத்தில் நான் பங்களுர் சென்றேன்.  கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கழித்து. என் உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லை என்றுதான் சென்றேன்.  எப்போதும் நான் பங்களூர் செல்லும்போதெல்லாம் எழுத்தாளர்கள் சிலரை சந்திக்காமல் இருக்க மாட்டேன்.  அப்படிச் சந்திக்காமல் இருந்து விட்டால் பங்களூர் என்னை ரொம்பவும் தனிமைப் படுத்தி விடுவதாக தோன்றும்.
மல்லேஸ்வரத்தில் உள்ள என் உறவினர் வீடு ரொம்ப பிரமாதமான இடம். ஆனால் நான் விரும்புகிற மாதிரி பேசுகிற நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.  சென்னையில் நான் இருந்தேன் என்றால் எதாவது பேசிக்கொண்டிருப்பேன்.  எழுதிக் கொண்டிருப்பேன்.  ஆனால் பங்களூரில் அதுமாதிரி முடியாது.  வெயிலை அதிகமாகக் காண முடியாத அந்த இடமும் என்னை வெறுப்படைய வைத்துவிடும்.
நான் மதிக்கும வெங்கட் சாமிநாதன் சென்னையிலிருந்து பங்களூர் சென்று விட்டார்.  அவர் மனைவி இறந்த பிறகு.  அவருடைய ஒரே பையன் வீட்டில்தான் அவர் வசித்து வந்தார்.  இந்த முறை பங்களூர் வந்தபோது அவரைக் கட்டாயம் பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். அதுதான் கடைசி முறையாக அவரைப் பார்க்கிறேன் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் நான் அவரைப்  பார்க்கும்போதும் அவருடைய கோபத்தையே பார்ப்பதுபோல் தோன்றும்.  
சென்னையில் அவர் இருக்கும்போது பல தடவைகள் அவரைப் பார்ப்பதுண்டு.  தில்லியை விட்டு அவர் சென்னை வரும்போது ஒருமுறை அவர் மனைவி நகைகள் சிலவற்றை தொலைத்து விட்டார். எதைச் சொல்லும்போதும் வெ சா பதட்டத்துடன் சொல்ல மாட்டார்.  சொல்வதில் வருத்தம் இருக்கும்.  ஆனால் அவர் கோபப்படடடால் அதை வெளிப்படுத்தாமல் இருக்க மாட்டார்.  யார் மீதாவது அவருக்குக் கோபம் இருந்தால அதில் விடாப்படியாக இருப்பார்.
சிறு பத்திரிகைகள் மூலம் அவரைப் பற்றி கேள்விபட்டபோது, ஒரு முறையாவது அவரைச் சந்திக்க வேண்டுமென்று நினைப்பதுண்டு. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் அவர் வீடு தேடி நான் டில்லிக்குச் சென்றேன்.  
நான் இருந்த இடமும் அவர் இருந்த இடமும் எங்கோ இருந்தது.  பாஷை புரியாத அவஸ்தை.  எனக்கோ எல்லார் வாயிலும் அகப்பட்டுக் கொள்கிற இந்த வெங்கட் சாமிநாதனை எப்படியாவது பார்த்து விட வேண்டுமென்று தோன்றியது.  என் முதல் சந்திப்பு அப்போதுதான் நடந்தது.
என்னைப் பற்றியெல்லாம் விஜாரித்து பேசிக் கொண்டே வந்தவர் ஒரு அறையைக் காட்டினார். 
“என்ன?” என்றேன்.
“இதில் உள்ள புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அந்த அறை முழுவதும் சுவரை ஒட்டி புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நான் சில புத்தகங்களை எடுத்துக் கொண்டேன்.  பின், üüஇந்த டில்லியில் பஸ்ஸில் போவது மோசமானது.  நான் உங்களை கொண்டு விடுகிறேன்  சிறிது தூரம்,ýý என்றார். 
எழுத்து மூலம் அவர் பலருடன் சண்டைப் போடுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  குறிப்பாக பிரமிள், அசோகமித்திரன், ஞானக்கூத்தன். ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அதிலேயே உறுதியாக இருப்பார் என்பதையும் நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை.
அன்று தில்லியில் அவருடன் பஸ்ஸில் போனபோது, கண்டக்டருக்கும் ஒரு சில பயணிகளுக்கும் பெரிய கலகலப்பே ஏற்பட்டது.  என்னுடன் என்னை ஒரு இடத்திற்குக் கொண்டு வர இருந்த வெங்கட்சாமிநாதனைப் பார்க்கும்போது, ஒன்றுதான் ஞாபகம் வந்தது. இவர் போகுமிடமெல்லாம் எதாவது சண்டை ஏற்படுகிறதே என்று. வெங்கட் சாமிநாதனுக்குசுச் சிலரைப் பிடிக்கவில்லை என்றால் அவர்களைப் பற்றி மோசமாக சொல்லாமல் இருக்க மாட்டார்.
அவர் தில்லியிலிருந்து சென்னைக்கு  குடி வந்தபோது ஒரு மாசம் காலியாக இருந்த என் வீட்டில்தான் தங்கியிருந்தார்.  மடிப்பாக்கத்தில் அவர் வீடு கட்டிக்கொண்டு போகும்போது, மடிப்பாக்கத்திலேயே ஒரு வீட்டில் குடியிருந்தார்.  
நான் அடிக்கடி அவரைச் சந்திப்பது உண்டு.  எதாவது உதவிகளும் அவருக்குச் செய்வதுண்டு.  அவர் தன் சேமிப்புகளில் சிலவற்றை சில இடங்களில் டெபாசிட் பண்ணி இருந்தார்.  அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுக்கொண்டு.  பங்களூரில் இருந்த என் உறவினர் கூட கிட்டத்தட்ட 10 லட்சம் வரை அப்படி டெபாசிட் செய்து எல்லாவற்றையும் இழந்து விட்டார்.  வெ சாவும் அப்படி இழந்து விட்டார்.
வெங்கட் சாமிநாதன் எப்போதும் பிடிவாதமானவர்.  அவர் சென்னைக்கு வந்தபிறகுதான் அவருடைய எழுத்துக்கள் பல புத்தகங்களாக வெளிவந்தன.  முதன் முதலில் அவர் டில்லியில் இருந்தபோது எழுதாமல் இருந்தார்.  நான் அவரிடமிருந்து கேட்டு விருட்சத்தில் பிரசுரம் செய்தேன்.  இதெல்லாம் ஆரம்பத்தில்.  அதன் பின் அவர் சென்னையில் அதிகமாகவே எழுதினார்.
அவர் யாரைப் பார்த்தாவது விமர்சனம் செய்தார் என்றால் கடூரமாக இருக்கும்.  சில சமயம் அதைக் படிக்குமபோது தாங்க முடியாத சிரிப்பையும் வரவழைத்து விடும்.  உதாரணமாக அவர் வல்லிக் கண்ணனைப் பற்றி ஒன்று சொல்வார்.  üஅவர் ஒரு டெச்பேட்ச் க்ளார்க்ý என்று.  உண்மையில் வல்லிக் கண்ணனும், திகசியும் அவர்களுக்கு அனுப்பும் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் பார்த்து படித்து விட்டு வாழ்த்தி ஒரு கார்டில் கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார்கள்.  பத்திரிகை புத்தகம் போடுபவரை உற்சாகப்படுத்தாமல் இருக்கமாட்டார்கள்.  நான் என் பத்திரிகையை அனுப்பினால் கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார்கள்.  அவர்கள் கடிதம் வந்தபிறகுதான் எனக்கு நிம்மதி மூச்சு வரும்.  ஓ நம் பத்திரிகை எல்லோருக்கும் போய்ச் சேர்ந்து விட்டது என்று.
அவர் சென்னையில் இருந்தபோது அந்த நாட்கள் மறக்க முடியாதது.  பல நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைத்துப் போயிருக்கிறேன்.  அவரைச் சந்திக்கும்போதெல்லாம் அவர் என் மற்ற எழுத்தாள நண்பர்களை எல்லாம் கிண்டல் செய்யாமல் இருக்க மாட்டார்.  ஏன் இவருக்கு இதுமாதரி எல்லார் மீதும் கோபம் என்று தோன்றும்.  
நான் அடிக்கடி எல்லோரிடமும் போன் பண்ணி பேசிக் கொண்டிருக்க மாட்டேன்.  எப்போதாவது போன் பண்ணி பேசும்போது மட்டும், “என்ன உன் குரு சொல்றபடி கேட்கிறியா?” என்பார். 
“நான் யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளமாட்டேன்.  என்னை யாரும் சிஷ்யனாகவும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என்பேன்.
ஆனால் என்னைப் பார்த்தால் நம்ப மாட்டார்.  ந பிச்சமூர்த்திக்கு ஒரு விழா எடுத்தோம்.  நான், ஞானக்கூத்தன், ராஜகோபாலன் என்று பலருடைய முயற்சியில் நடந்தது.  அக் கூட்டத்திற்கு ஜி கே மூப்பனார் தலைமை வகித்தார். வெங்கட் சாமிநாதனும் அக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.  மறக்க முடியாத கூட்டம் அது.
வெங்கட் சாமிநாதன் பங்களூர் சென்ற பிறகு நான் அவரை சந்திப்பது நின்றே போய்விட்டது.  பங்களுரிலிருந்து யாரையாவது பார்த்தால் வெ சாவைப் பற்றி விஜாரிக்காமல் இருக்க மாட்டேன். என் பையன் திருமணத்திற்கு பத்திரிகை அனுப்பினேன். அவர் வாழ்த்தி பதில் எழுதினார். போனில் பேசவே எனக்கு அவரிடம் நடுக்கம்.  கோபத்துடன் பேசுவாரோ என்ற பயம்தான்.
சமீபத்தில் பங்களூர் செல்லும்போது ஜøலை மாதம் அவரைப் பார்க்கச் சென்றேன்.  மகாலிங்கம் என்ற நண்பர்தான் என்னை அழைத்துக் கொண்டு போனார்.  அதே கம்பீரமான தோற்றத்துடன் வெங்கட் சாமிநாதன் இருந்தார்.  ஆனால் அதே கோபத்துடன் அவர் பேசினார்.  அவர் எதையுமே மறக்க வில்லை.  தேவை இல்லாமல் மற்ற இலக்கிய நண்பர்களைத் திட்டாமல் இல்லை.   வேண்டாத விருந்தாளியைப் பார்ப்பதுபோல்தான்ல் என்னைப் பார்த்தார். அவரைப் பார்ப்பது இதுதான் கடைசி முறையாக இருக்குமோ என்று கூட எனக்குத் தோன்றியது.  அவர் வீட்டில் உள்ளவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்.  அவர் ஒன்றே ஒன்றுதான் என்னைப் பார்த்துக் கேட்டார்.  “நீ ஏன் என் புத்தகங்களைப் படித்து விட்டு ஒன்றும் எழுதுவதில்லை,” என்று.
அவர் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அவர்தான் பலருடைய புத்தகங்களைப் படித்துவிட்டு விமர்சனம் எழுதிக் குவிப்பவர்.  பொதுவாக நான் சிலருடைய புத்தகங்களை விமர்சிப்பதில்லை.  அதில் வெங்கட்சாமிநாதனும் ஒருவர்.  நான் எதையாவது எழுதப் போய் அவருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்ற அச்சமதான் காரணம்.  
நான் பங்களூரிலிருந்து திரும்பி வந்தபோது அவர் புத்தகம் எதையாவது விமர்சனம் செய்ய வேண்டுமென்று எடுத்து வைத்துக்கொண்டேன். 
அவருடைய, üஎன் பார்வையில் சில கதைகளும் சில நாவல்களும்ý என்ற புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன்.  ஒரு படைப்பாளியாக மாறாமல விமர்சராகவே கடைசி வரை இருந்துவிட்டாரே என்ற ஆச்சரியம் எனக்கு அவர் மீது உண்டு.  எல்லோரையும் திருப்தி செய்வதுபோல் ஒரு புத்தகத்தை பாராட்டவே முடியாது.  எத்தனைப் புத்தகங்களைப் பற்றி தன் மனதில் பட்டதை எழுதி இருக்கிறாரே என்ற ஆச்சரியம் எனக்கு எப்போதும் உண்டு.
காலையில் அவர் மரணம் அடைந்த செய்தியை அறிந்தேன்.  அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்.  
 

கிராமீயப் பாடல்கள்

       1. பிள்ளையார் பிறந்தார்                    


        வடக்கே தெற்கே ஓட்டி
        வலது புறம் மூரி வச்சு
        மூரி ஒழவிலே
        முச்சாணி புழுதி பண்ணி
        சப்பாணி பிள்ளையார்க்கு
        என்ன என்ன ஒப்பதமாம்.

        முசிறி உழவிலே
        மொளச்சாராம் பிள்ளையாரு
        ஒடு முத்தும் தேங்காயை
        ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு
        குலை நிறைஞ்ச வாழைப்பழம்
        கொடுக்கறமாம் பிள்ளையாரக்கு
        இத்தனையும் ஒப்பதமாம்
        எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு

குறிப்பு : பிள்ளையார் பிறப்பில் அவருடைய தாய் தந்தையார்கள்  யார் என்று சொல்லப்படவில்லை.  விநாயகர் சிவ குமாரனென்றோ, உமையாள் மகனென்றோ அழைக்கப்படவில்லை.  உழவன் உழும்போது புழுதியிலிருந்து தோன்றுகிறார் பிள்ளையார்.

சேகரித்தவர் :  கவிஞர் சடையப்பன்                  இடம் : சேலம் மாவட்டம்

       
       

   

பத்து கேள்விகள் பத்து பதில்கள்

பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில்  படைப்பாளிகளைப் பேட்டி எடுத்து என்னுடைய இணையதளத்திலும் முகநூலிலும் கொண்டு வருகிறேன்.
    முதல் பேட்டி அசோகமித்தரனை வைத்து எடுத்தது.  அடுத்தது எஸ் வைதீஸ்வரனின் பேட்டியை வெளியிட்டேன். 
    மூன்றாவதாக சாருநிவேதிதாவைப் பேட்டி எடுத்துள்ளேன். 
    சமீபத்தில் சாருநிவேதிதாவின் இரண்டு நாவல்களைப் பார்த்து அசந்துவிட்டேன்.  ஒரு நாவல் ராஸ லீலா, இன்னொரு நாவல் புதிய எக்ûஸல்.  புதிய எக்ûஸல் நாவலை இப்போதுதான் படிக்கத் தொடங்கி உள்ளேன்.  867 பக்கங்கள் கொண்ட நாவல் இது.  எனக்குப் படித்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகுமென்பது தெரியாது.  ஏற்கனவே அவருடைய புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.  படித்து முடித்தப்பின் என் கருத்துகளை வெளியிடுவேன்.
எழுத்தாளர் சாருநிவேதிதா

புத்தக விமர்சனம் 11

அழகியசிங்கர்

 

    துளசிங்கப் பெருமாள் கோயில் வழியாக நான் டூ வீலரில் போய்க் கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு வீட்டின் முன் வாசலில் மின்சார விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.  கொஞ்சம் நின்று பார்த்தேன். அது பாரதியார் நினைவு இல்லம்.  எனக்கு உடனே புரிந்தது.  செப்டம்பர் 11 ஆம் தேதி பாரதியார் நினைவு தினம்.  அதைக் கொண்டாட விளக்கு வெளிச்சம் ஒளிர்ந்து கொண்டிருந்தது.


    நான் அன்று ஞானக்கூத்தன் வீட்டிற்குத்தான் போய்க் கொண்டிருந்தேன்.  அவர் சொன்ன ஒரு தகவல் எனக்கு சற்று திகைப்பாக இருந்தது.  கோவில் யானை என்ற தலைப்பில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.  அவர் என்னிடம் என்ன சொன்னார் என்றால் பார்த்தசாரதி கோயில் யானை பாரதியாரை ஒன்றும் செய்யவிலலை என்று.  பாரதியார் கோவில் யானை என்ற பெயரில் ஒரு நாடகம் எழுதியிருக்கிறார்,  அந்த நாடகத்தில் வஜ்ரி என்ற அரசக் குமாரனைத்தான் காளி கோயிலில் உள்ள யானை துதிக்கையால் தள்ளி விட்டது.  அதைத்தான் பாரதியாருக்கு ஏற்பட்டதாக எல்லோரும் கதை விட்டிருக்கிறார்கள் என்கிற மாதிரி சொன்னார்.  

    இது குறித்து அவர் ஒரு கட்டுரையும் எழுதி இருக்கிறார்.  என்னால் இதை நம்ப முடியவில்லை.  உண்மையில் பாரதியாருக்கு நடந்த ஒரு சம்பவத்தை அவர் நாடகத்தில் ஒரு கதா பாத்திரத்திற்கு ஏற்பட்டதாக எழுதியிருக்க வேண்டுமென்று தோன்றியது.

    வீட்டிற்கு வந்தவுடன் என்னிடம் உள்ள பாரதியார் புத்தகங்களை எல்லாம் அடுக்கி வைத்துக்கொண்டேன்.  நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது தூரன் அவர்கள் எழுதிய பாரதியார் கட்டுரைகள், அவருடைய வாழ்க்கை வரலாறை எல்லாம் படித்திருக்கிறேன்.  என் கல்லூரி நூல்நிலையத்திலிருந்து நான் எடுத்துக் கொண்டு படிப்பேன்.  மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் போகும்வரை மின்சார வண்டியில் படித்துக்கொண்டு வருவேன்.

    பாரதியார் வரலாறை பெ தூரன் அவர்கள் எழுதியதைப் படிக்கும்போது பாரதியார் மரணம்அடைந்த விதத்தைப் படிக்கும்போது, என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ஏதோ ஆகிவிட்டதுபோல் வருத்தம் ஏற்பட்டது உண்மை. 

    சமீபத்தில் நான் டிஸ்கவரி புக் பேலஸ் சென்றபோது, பாரதியாரின் ஒரு புத்தகம் என்னைக் கவர்ந்தது.  அப் புத்தகம் üபாரதியாரின் இறுதிக் காலம்ý என்ற பெயரில் ஆய்வும் பதிப்பும் ய மணிகண்டன் என்பவர் எழுதியிருக்கும் புத்தகம்.  அப் புத்தகத்தை வாங்கி விட்டேன்.  வீட்டிற்கு வந்தவுடன் அதை முதலில் எடுத்துப் படித்தேன்.  கிட்டத்தட்ட 64 பக்கம் கொண்ட அப் புத்தகத்தை உடனே படித்து முடித்து விட்டேன். என் வாழ்க்கையில் ஒரு புத்தகத்தை வாங்கிய அன்றே படித்து முடித்தப் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.

    பாரதியார் எப்படி தன் இறுதிக் காலத்தில் இருந்தார் என்பதை இந்தப் புத்தகம் தெளிவாக விவரித்துக் கொண்டுபோகிறது.  பல உப நூல்களை வைத்துக் கொண்டு மணிகண்டன் ஒரு ஆராய்ச்சி நூலை எழுதியிருக்கிறார்.  மேலும் இப் புத்தகத்தில் கோவில் யானை என்ற நாடகத்தையும் சேர்த்திருக்கிறார்.  பாரதியார் எழுதிய இந்த நாடகத்தை யாரும் இதுவரை கொண்டு வரவில்லை.  1951ல் ஜனவரி மாதத்தில் கலைமகள் இதழில் வெளிவந்த இந்த நாடகத்தை திரும்பவும் இந்தப் புத்தகத்தில் கொண்டு வருகிறார்.

    பல பக்கங்களில் பாரதியாரைப் பற்றிய பிம்பத்தை எழுத்து மூலம் கொண்டு வருகிறார்.  உண்மையில் பாரதியார் என்பவர் யார்? அவர் எப்படி வாழ்ந்தார் என்றெல்லாம் பலர் அவரைப் பற்றி எழுதியதைக் கொண்டு படிக்க படு சுவாரசியமாய் மணிகண்டன் கொண்டு வருகிறார்.  

    புதுவையிலிருந்து பாரதியார் சென்னைக்கு திரும்புகிறார்.  அதாவது அவருடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை கடப்பதற்காக அவர் சென்னை வருகிறார்.  சென்னையில் பாரதியாரை சந்தித்த சுதேசமித்திரனின் ஸி ஆர் ஸ்ரீநிவாஸன் இறுதிக்காலப் பாரதியாரை இப்படி சித்தரிக்கிறார் .

    ‘அன்று கண்ட பாரதி இன்றளவும் என் அகக் கண் முன் நின்று கொண்டே இருக்கிறார். நடத்தர உயரம், ஒற்றை நாடி மாநிறம் படைத்த மேனி.  பிரிபிரியாய்ச் சுற்றிய வால்விட்ட தலைப்பாகை.  அகன்ற நெற்றி.அதன் மத்தியில் காலணா அளவு குங்குமப் பொட்டு….’

    அமிர்தகுண போதினியின் ஆசிரியர் எஸ் ஜி இராமாநுஜலு நாயுடு பாரதியாரைப் பற்றி இப்படி விவரிக்கிறார் :

    ‘ஸ்ரீ பாரதியார் புதுச்சேரியினின்றும் வந்த பின்பு பழைய பாரதியின் உருவமே இல்லை.  ஒரு வங்காளி போன்ற உருவுடனும் காணப்பட்டார்.  அதற்கானபடி தலைப்பாகையும் பிளவும் பொருந்தியிரந்தது.  அவரது நடையும் கோலமும் யாவுமே மாறின.  எல்லாமே புதுவிதமாக இருந்தது.  ஒரு பிரம்ம ஞானி போன்றும் காணப்பட்டார்.’

    இறுதிக் காலத்தின் முதற் கட்டத்தில் கானாடுகாத்தானுக்கும் காரைக்குடிக்கும் பாரதி சென்று வந்தபோது அவரைச் சந்தித்த ராய.சொக்கலிங்கம் இப்படிப் பதிவு செய்திருக்கிறார்.

    இருபத்தெட்டு ஆண்டுகட்குமுன் திடீரென ஓர்நாள், சிவந்த உடம்பு – மொட்டைத் தலை,  முறுக்கிய எதிர் மீசை – குறுகுறுத்த கண்கள் இவற்றோடு கையில் தடியுடன் ஒரு கம்பீர உருவம் காரைக்குடியில் தோன்றியது – பாரதி, கூட ஒருவரை அழைத்து வந்திருந்தார். அவரும் ஒரு அரைப் பயித்தியம் மாதிரியே காணப்பட்டார்.  பாரதியாரோ ஒரு ஞானக் கிறுக்கர்.

    இவருடைய விபரத்தைப் படிக்கும்போது பாரதியாரை மொட்டைஅடித்து விடுகிறார்.  பாரதியாருடன் வந்தவரை அரைக் கிறுக்கும் என்றும், பாரதியாரை ஞானக்கிறுக்கு என்று கூறிப்பிடுகிறார்.

    பாரதியாரின் நெருங்கிய நண்பர் வ.உ.சி வருந்தும்படி ஒரு நிகழ்வு நேர்ந்தது.  பாரதியாரும், குள்ளச்சாமியாரும் பிரம்பூரிலிருநத வ உ சி வீடு சென்றனர்.  குள்ளச்சாமி அங்கயே எண்ணெய் தேய்த்துக் குளிக்க, இருவரும் பின்னர் அபின் தின்று களி கொண்டனர்.  பாரதியாரைச் சிதைத்த இந்தப் பழக்கத்தையும் அதற்குத் துணை நின்ற குள்ளச்சாமியையும் வ உ சி வருத்தத்தோடு எண்ணிப் பதிவு செய்திருக்கிறார்.  

    பாரதியார் சொற்பொழிவு ஆற்றும்போது பல இடங்களில் மேள தாளங்களோடு பெரிய ஜனக் கூட்டம் கூடிப் பாரதியை வரவேற்றுக் கொண்டாடியதாக பதிவு செயதிருக்கிறார் மணிகண்டன்.

    பாரதியார் அவருடைய இறுதிக் காலத்தில் பலவித தொந்தரவுகளுக்கு அளாகியிருக்கிறார்.  அவர் கருத்துக்கு மாறாக மனைவி நடந்துகொண்டதால் ஏற்பட்ட கசப்பும், வெறுப்பும் போதை வஸ்துப் பழக்கம், கடலூரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்த நாள்களில் மனநலம் குன்றியமை, எழுதிக்கொடுத்துவிட்டு  விடுதலை பெற்றமைக்காக அவருடைய மைத்துனரின் கோபத்திற்கு ஆளானதால்பலவித குழப்பங்களுக்கும் பாரதியார் உள்ளாகி இருந்தார். 

    இதுமாதிரியான குழப்பங்கள் பாரதி வாழ்வில் இருந்தாலும் பல சுவையான நிகழ்ச்சிகளும் அவர் வாழ்வில் நடக்காமல் இல்லை.
கழுதைக் குட்டியைக் கட்டித் தழுவிக்கொண்ட நிகழ்ச்சி கடைய வாழ்வில் நிகழ்ந்தது.  சிங்கத்தோடு உறவாடி உரையாடிய  நிகழ்வு திருவனந்தபுரத்தில் நிகழ்ந்தது.  யானையோடு உறவாடிய நிகழ்ச்சி திருவல்லிக்கேணியில் நிகழ்ந்தது. பாரதியார் புதுவையில் இருந்தபோது கொலை செய்யப்படுவதற்காக இழுத்துச் செல்லப்பட்ட ஆடு ஒன்றினை விலை கொடுத்து வாங்கிக் காத்த நிகழ்வும் நேர்ந்தது.

    இதில் உருக்கமான ஒரு நிகழ்ச்சியாக பாரதிதாசனைப் பற்றி குறிப்பிடுகிறார்.  பாரதிதாசன் ஒரு கதை உரையாடலில் பாரதியின் இறுதிக் காட்சியில் யானை தாக்கி கீழே தள்ளி விடுவதாகவும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் எழுதி உள்ளார்.  யானையால் தாக்குண்ட பாரதியை மருத்துவமனைக்கு சுமந்து செல்கிறது வண்டி என்று எழுதி முடித்த பாரதிதாசனும் உடன் ஒரு வண்டியிலேற்றிச் சென்னைப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.  பின்னர்ப் பாரதிதாசன் உயிரோடு திரும்பவில்லை என்று மணிகண்டன் ஒரு தகவலைக் குறிபபிடுகிறார். இதைப் படிக்க சற்று வருத்தமாகவே இருக்கிறது.

    பாரதியாரை யானைத் தாக்கிய சம்பவம் பலவாறு பொய்யும் புனைவுமாக இந்திய அளவில் ஓர் இதழில் எழுதப் பட்டதை பாரதியாரின் தம்பி சி விசுவநாதன் எடுத்துரைத்திருக்கிறார்.  மாடர்ன் ரெவ்யூ என்ற பத்திரிகையில் பாரதியார், யானை முன் பயத்துடன் நின்று கொண்டிருந்த ஒரு சிறுமியைக் காப்பாற்ற தன் உயிரையே மாய்த்துக் கொண்டதாக எழுதியிருந்ததாம்.    இப்படி தப்பான தகவல்கள் பாரதியாரைப் பற்றி பரவப்பட்டுள்ளது.  

    பாரதியார் எந்தக் காலத்தில் யானையால் தாக்கப்பட்டார் என்ற தகவலை யாராலும் சரியாக கணிக்க முடியவில்லை.  உண்மையில் பாரதியார் யானையால் தாக்குண்ட பிறகு மூன்று மாதம் கழித்து இறந்தார் என்ற செய்தி தவறானதாக இப் புத்தகம் மூலம் தெரிகிறது. யானையால் தாக்குண்ட சம்பவம் 9 மாதங்களுக்கு முன்பே நடந்திருக்குமென்று தனக்கு நடந்த சம்பவத்தை வைத்துத்தான் கோவில் யானை என்ற நாடகத்தை எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது.  இந்த நாடகம் டிசம்பர் மாதம் 1920 ஆண்டோ ஜனவரி 1921ஆம் ஆண்டோ சுதேசமித்திரன் இதழில் பிரசுரமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
    மணிகண்டன் கோவில் யானை நாடகம் மூலம் பாரதியாரின் இறுதிக்கட்டத்தை இப்படிக் கூற முற்படுகிறார்.  கோவில் யானை என்ற நாடகம் சுதேசமித்திரன் இதழில் ஜனவரி மாதம் 1921ல் பிரசுரமாகி இருப்பதால், பாரதியார் இந்த நிகழ்ச்சி நடநது 9 மாதங்கள் கழித்துதான் இறந்திருக்கிறார் என்று குறிப்பிடுகிறார்.  சில வரலாற்று ஆசிரியர்கள் தவறாக யானைத் தாக்கிய பிறகு மூன்று மாதங்களில் பாரதியார் இறந்து விட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். அது தவறு என்றும் குறிப்பிடுகிறார். வயிற்றுக் கடுப்பு நோயாலதான் பாரதியார் இறந்திருக்கிறார்.

    ஆனால் என் நண்பர் ஞானக்கூத்தனோ கோவில்யானை என்ற நாடகத்தில் நடந்த கட்டுக் கதையை உண்மைச் சம்பவமாக மாற்றி விட்டதாக குறிப்பிடுகிறார். பாரதியாரை யானை தாக்கவிலலை என்கிறார்.

    உண்மையில் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது ஒரு வித்தியாசமான வரலாற்றுக் கதைப் புத்தகத்தைப் படித்த உணர்வு ஏற்பட்டது.  கோவில் யானை என்ற பெயரில பாரதியார் எழுதிய நாடகமும் பிரமாதம்.

பாரதியாரின் இறுதிக் காலம் – ஆய்வும் பதிப்பும் ய மணிகண்டன் – பக்கம் 64 – விலை : ரு,60 – வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பி லிட், 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001 – தொலைபேசி எண் : 04652-278525
   
   

      
   

வேறொரு கோணத்தில்…….

     

அழகியசிங்கர்

    செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி உலக இதய நாள்.  பல மருத்துவர்கள், பல மருத்துவ மனைகள் பலவித அறிவுரைகள்.  ஒருவர் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று படித்தால் சற்று பயம்தான் வரும்.


    ஆனாலும் இதயத்தைக் காப்பது அவசியமான ஒன்றாகத்தான் இருக்கிறது.  நோய் என்று வந்துவிட்டால் அதை எதிர்த்துப் போராட முடியுமா?  அல்லது பணிந்துதான் போய் விட வேண்டுமா? தெரியவில்லை.  

    ஆரம்பத்தில் நான் வங்கியில் சேர்ந்தபோது எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.  துள்ளும் உடலுடன் கூடிய துள்ளும் மனது.  பரபரவென்று  இருந்தேன். வங்கியிலும் சாதாரண வேலை.  பெரிய பொறுப்பெல்லாம் கிடையாது.  வங்கியும் ஆரம்பத்தில் என்னை பயமுறுத்தவில்லை.  வீடு பக்கத்தில் அலுவலகம்.  காலை பத்துமணிக்குச் சென்றால் மாலை ஓடி வந்து விடலாம்.  பத்து மணி அலுவலகத்திற்கு 9 மணிக்குக் கிளம்பினால் போதும்.  அலுவலகம் போவது ஒரு பிக்னிக் போவதுபோல் ஜாலியாக இருந்தது.

    ஆனால் போக போக ஒரே மாதிரியான வேலை போர் அடித்தது.  இன்னும் கொஞ்சம் மேலே போக வேண்டுமென்று தோன்றியது.  வங்கியில் சட்ட திட்டங்கள் மாறின.  கிளார்க் இருந்தாலும் தொடர்ந்து ஒரே இடத்தில் இருக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தார்கள்.  அந்தச் சட்டத்திற்குப் பயந்து ஒருசிலர் வங்கியை விட்டு ஓடிவிட்டார்கள்.

    நான் சுருக்கெழுத்தாளனாக இருந்ததால் எனக்கு அந்தச் சட்டம் பலிக்கவில்லை.  ஆனால் போரடிக்கும்படி தலைமை அலுவலகத்தில் வலம் வந்து கொண்டிருந்தேன்.  சரி என்று முடிவு பண்ணினேன்.  பதவி உயர்வு பெறுவது என்று.  என்ன முட்டாள்தனமான முடிவு.  

    நான் வீட்டைவிட்டு ஓட வேண்டியதாயிற்று.  என்னுடன் யாரும் வரவில்லை.  என்னை ஒரு கிராமத்தில் பணி செய்ய கட்டளை இட்டார்கள்.  பதறி விட்டேன்.  சென்னையைத் தவிர எங்கும் போகத் தெரியாதவன் நான்.  கிராமத்தில் போய் எப்படி இருப்பது?  இது ஒரு மன அழுத்தம்.  நான் தைரியமாக அங்கு போனேன்.  என் வங்கி இருந்த கிராமம் கும்பகோணத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திலும், மையிலாடுதுறையிலிருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது.  மயிலாடுதுறை எனக்குப் பிடித்த ஊர்.  என் உறவினர்கள் இருக்கும் ஊர்.  அங்கிருந்து ஒரு டூ வீலரைப் பிடித்துக்கொண்டு கிராமத்திற்குச் சென்றேன்.  

    காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குப் போவதற்கும், மாலையில் (உண்மையில் இரவு) திரும்பி வீடு வருவதற்கும் போதும் போதுமென்று ஆகிவிடும்.  நான் தலைமை ஆபிஸில் சுருக்கெழுத்தாளனாக இருந்தபோது ராஜா மாதிரி இருந்தேன்.  பெரிய அதிகாரியிலிருந்து சின்ன அதிகாரி வரை மரியாதையாக இருந்தார்கள்.  கீழ்நிலை ஊழியர்கள் சொன்ன பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.  

    ஆனால் கிராமத்து பிராஞ்ச் அலுவலகத்தில் எல்லாம் தலைகீழ்.  யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள்.  கீழ் மட்ட வேலையிலிருந்து எல்லா வேலைகளையும் என் தலையில்தான் வந்து விடியும்.  வாடிக்கையாளர்களும் மிரட்டல் தொனியுடன் பேசுவார்கள்.  நான் சேர்ந்த அடுத்த நாளே என் வட்டார அலுவலகத்திற்குப் போன் செய்தேன்.  ‘என்னை மாற்றும்படி,’ வந்தது பதில் கோபமாய்.  ‘இன்னும் தள்ளி போடட்டுமா?’ என்று.  மன அழுத்தம் தாங்க முடியாமல் இருந்தது.  லீவு கேட்டால் லீவு கிடைக்காது.  சரியான ஓட்டல் இருக்காது.  சாப்பாடு இருக்காது.  அலுவலகத்தில் வேலை கசக்கிப் பிழியும்படி இருக்கும்.  

    திரும்பவும் சுருக்கெழுத்தாளனாகப் போய்விடுகிறேன் என்றால் ‘அதெல்லாம் முடியாது.  உன்னை தூக்கி திருவண்ணாமலக்கு அடிப்போம் என்றார்கள்.’  நான் என்ன ரமண மகரிஷியா திருவண்ணாமலைக்குப் போவதற்கு.  மன அழுத்தம்.  அந்தச் சமயத்தில் ரத்தக் கொதிப்பு நோயுக்கும் சர்க்கரை நோயுக்கும் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  டென்ஷன் இருந்தாலும் அமைதியாக இருக்கக் கற்றுக்கொண்டேன்.  எனக்கு அப்போதெல்லாம் உதவியது புத்தகங்கள்.  

    நான் ஒரு விஷயம் தெரிந்து கொண்டேன்.  என்னுடன் பணிபுரியும் பலர், இந்த மன அழுத்தம் தாங்காமல் மருத்துவமனைகில் போய் தஞ்சம் அடைந்தார்கள்.  ஒரு சிலர் உயிரையே விட்டுவிட்டார்கள்.

    ஆனால் இதற்கெல்லாம் இரக்கப்பட்டு அலுவலகம் ஒன்றும் செய்யவில்லை.  அது கருணையே இல்லாமல் இருந்தது.  50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலையை விட்டு ஓடிவிட்டார்கள்.  அல்லது பொட்டு பொட்டென்று உயிரை விட்டார்கள்.

    என்னைப்போல் பதவி உயர்வுப் பெற்று மாட்டிக்கொண்ட ஒரு அதிகாரிக்கு பைல்ஸ் பிரச்சினை.  இருக்கையில் அமரவே முடியாது.  யாராவது உதவி செய்ய வேண்டும்.  அவர் மருத்துவ சான்றிதழ்களுடன் அவர் எங்கேயிருந்து வந்தாரோ அங்கு மாற்றும்படி கெஞ்சிக் கேட்டு விண்ணப்பித்தார்.  யாரும் கண்டு கொள்ளவில்லை.  அவர் வேறு வழியில்லாமல், üநான் திரும்பவும் க்ளார்க்காகப் போகிறேன்ý என்று எழுதிக் கொடுத்தார்.  அவரை அவர் விரும்பிய இடத்திற்கு மாற்றாமல் இன்னும் தூக்கி அடித்தது இரக்கமற்ற நிர்வாகம்.

    நான் இருந்த கிளை அலுவலகத்தில்தான் கும்பகோணத்திலிருந்து ஒரு தலைமை காசாளர் வந்து கொண்டிருந்தார்.  50க்கும் மேல் வயது.  ஒருநாள் அவருக்கு உடம்பு சரியில்லை.  ‘என்னமோ செய்கிறது,’ என்றார் எங்களிடம்.  ‘என்ன என்ன தெளிவாக சொல்லுங்கள்..’ என்று கேட்டேன்.  ‘தலையைச் சுற்றுவது போல் இருக்கிறது… வாந்தி எடுக்கும்படி தோன்றுகிறது,’ என்றார்.  ‘இது பித்தமாக இருக்கும்…’ என்றேன்.  ஆனாலும் அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு மருத்துவரை அழைத்துக்கொண்டு வந்து காட்டினோம்.  அந்த மருத்துவர் அவரை கும்பகோணத்திற்கு அழைத்துக்கொண்டு போய் காட்டும்படி சொன்னார்.

    நான் அவரை அழைத்துக்கொண்டு இன்னும் இரண்டு தற்காலிக ஊழியர்களை அழைத்துக்கொண்டு காரில் கும்பகோணம் சென்றேன்.  போகும்போது அவரிடம் பேச்சுக்கொடுத்தபடி வந்தேன்.  ‘சில சமயம் நாம் சாப்பிடுவது ஒத்துக்காது..நீங்கள் காலையில் தக்காளி சாதம் சாப்பிட்டு வந்துள்ளீர்கள்..அதில் உள்ள எண்ணெய் கோளாறு செய்யும்..’ என்றேன்.  அவரும் நான் சொன்னதைக் கேட்டுக்கொண்டே வந்தார். 

    30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கும்பகோணம் அடைய அரைமணிக்கு மேல் ஆகிவிட்டது.  கும்பகோணத்தில் உள்ள சுகம் என்ற மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போனோம்.  அங்குள்ள மருத்துவர் அவரை தனியாக அழைத்துக்கொண்டு போய் பரிசோதனை செய்தார்.  பின் அவரை அங்கயே படுத்திருக்கும்படி சொல்லிவிட்டு எங்களிடம் வந்தார்.  

    ”அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு  உடனே சொல்லிவிடுங்கள்.  அவருக்கு வந்திருப்பது மாஸிவ் ஹார்ட் அட்டாக்…24 மணி நேரத்திற்கு ஒன்றும் சொல்ல முடியாது…”என்றார்.

    அதைக்கேட்டு நான் பதறி விட்டேன்.  என் உடம்பு வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்து விட்டது.  அவர் வீட்டில் போய் சொன்னோம்.  அவர் அந்த ஆபத்திலிருந்து தப்பித்து விட்டார்.  1 மாதத்திற்கு மேல் அவர் அலுவலகம் வரவில்லை.  

    ஆனால் திரும்பவும் அவர் 30 கிலோமீட்டர் உள்ள கிராம வங்கிக்கு வருவதற்கே பயப்பட்டார்.  மாற்றல் கேட்டு விண்ணப்பித்தார்.  இரக்கமற்ற நிர்வாகம் அவருக்கு மாற்றல் கொடுக்க வில்லை.  அவர் வேலை வேண்டாமென்று விடும்படி நேர்ந்தது.  இரக்கமற்ற நிர்வாகம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

   
   
     
   

மனோரமா என்கிற மகத்தான நடிகை

அழகியசிங்கர்


   
    சனிக்கிழமை இரவு மனோரமா என்ற நடிகை இறந்த செய்தி கேள்விப்பட்டேன்.  அது முதல் மனோரமா என்ற நடிகையைப் பற்றி யோஜனை செய்து கொண்டு வருகிறேன்.  உலக அளவில் இவ்வளவு அதிகமான படங்களில் நடித்த நடிகை யாராவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.  தன் நடிப்பாற்றலால் எல்லார் மனதையும் கவர்ந்தவர் நடிகை மனோரமா.  

    ஒரு காலத்தில் தமிழ்ச் சினிமாவின் பெரும் பகுதியை மனோரமாவும் நாகேஷ÷ம் தங்களுடைய நடிப்பாற்றலால் கலகலக்க வைத்தவர்கள்.  தமிழ் சினிமாவில் ஒரு நடிகரோ நடிகையோ நீண்ட ஆண்டுகள் நடித்துக் கொண்டிருப்பது திறமை மட்டும் இருந்தால்தான் முடியும்.  அதுவும் ஆபாசம் எதுவும் இல்லாமல் நகைச்சுவைக்காகவும் குணச்சித்திர நடிப்புக்காகவும் பெயர் பெற்றவர் நடிகை மனோரமா.

    பொதுவாக ஒரு நடிகை நடித்துக்கொண்டிருக்கும் போது அந்த நடிகையை அப்புறப்படுத்த வேற சில நடிகைகளும் முன் வருவார்கள்.  மனோரமாவுக்கு மாற்றாக இன்னும் சில நகைச்சுவை நடிகைகள் தோன்றாமல் இல்லை.  ஆனால் மனோரமாவை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    எல்லா நடிகர்களின் அன்புக்கும் பாத்திரமானவர் அவர்.  நாகேஷ் போன்ற நடிகருடன் போட்டிப் போட்டுக்கொண்டு நடிப்பதில் மனோரமாவைப் போல் வல்லவர் யாருமில்லை.  ஏன் நாகேஷ் என்று குறிப்பிடுகிறேன் என்றால், தமிழ் சினிமாவில் நாகேஷின் பங்கும் முக்கியமானது என்பதால்தான்.  

    எந்தத் துறையாக இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் எல்லோரும் அந்தத் துறையை விட்டு விலகித்தான் போகவேண்டும்.  ஆனால் மனோரமா விஷயத்தில் நீண்ட காலம் அவர் அந்தத் துறையில் நீடித்திருப்பதற்குக்  காரணம் அவருடைய திறமை மட்டுமே.

    உலக சினிமா சரித்திரத்தில் மனோரமா மாதிரி யாராவது நடிகை இருந்திருப்பாரா என்பது எனக்குத் தெரியவில்லை.  இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.  யாராவது சினிமா வல்லுநர்கள்தான் என் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க வேண்டும்.    

    சரி, மனோரமா என்ற நடிகைக்கு எதுமாதிரியான கௌரவம் நாம் அளித்திருக்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள நடிகைகளில் முன்மாதிரி மனோரமா என்று நான் நினைக்கிறேன்.  நான் சொல்வதில் எதாவது தவறு இருக்கிறதா என்பதை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். இன்னும் கூட குழந்தைத்தனமான  அவர் முக பாவமும், அலட்சியமாக உதிர்க்கும் வாசன உச்சரிப்பும் யாராலும் மறக்க முடியாது.

    எந்த ஒருவருக்கும் அவர்கள் செய்து கொண்டு வரும் செயல் முற்றுப்பெற்றுவிட்டால், உடனே அவர்களுடைய மரணமும் தொடர்ந்து வந்துவிட்டது என்றுதான் அர்த்தம்.  தொடர்ந்து நடித்து வந்த மனோரமாவால் நடிக்காமல் போனபின் அவர் மரணம் நிகழ்ந்து விட்டது.   

    நான் அறிந்தவரை அவர் ஆயிரம் படங்கள் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.  அவர் இன்று இல்லை என்றாலும் நீங்காத நினைவாக அவர் படங்கள் முழுவதும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.   இனி யாராலும் அவர் இடத்தைப் பிடிக்க முடியாது.  அவரை மாதிரி யாராலும் உருவாகவும் முடியாது என்றே தோன்றுகிறது. 

    அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.