வெங்கட் சாமிநாதனைப் பற்றி சில தகவல்கள்……

அழகியசிங்கர் 

சமீபத்தில் நான் பங்களுர் சென்றேன்.  கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கழித்து. என் உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லை என்றுதான் சென்றேன்.  எப்போதும் நான் பங்களூர் செல்லும்போதெல்லாம் எழுத்தாளர்கள் சிலரை சந்திக்காமல் இருக்க மாட்டேன்.  அப்படிச் சந்திக்காமல் இருந்து விட்டால் பங்களூர் என்னை ரொம்பவும் தனிமைப் படுத்தி விடுவதாக தோன்றும்.
மல்லேஸ்வரத்தில் உள்ள என் உறவினர் வீடு ரொம்ப பிரமாதமான இடம். ஆனால் நான் விரும்புகிற மாதிரி பேசுகிற நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.  சென்னையில் நான் இருந்தேன் என்றால் எதாவது பேசிக்கொண்டிருப்பேன்.  எழுதிக் கொண்டிருப்பேன்.  ஆனால் பங்களூரில் அதுமாதிரி முடியாது.  வெயிலை அதிகமாகக் காண முடியாத அந்த இடமும் என்னை வெறுப்படைய வைத்துவிடும்.
நான் மதிக்கும வெங்கட் சாமிநாதன் சென்னையிலிருந்து பங்களூர் சென்று விட்டார்.  அவர் மனைவி இறந்த பிறகு.  அவருடைய ஒரே பையன் வீட்டில்தான் அவர் வசித்து வந்தார்.  இந்த முறை பங்களூர் வந்தபோது அவரைக் கட்டாயம் பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். அதுதான் கடைசி முறையாக அவரைப் பார்க்கிறேன் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் நான் அவரைப்  பார்க்கும்போதும் அவருடைய கோபத்தையே பார்ப்பதுபோல் தோன்றும்.  
சென்னையில் அவர் இருக்கும்போது பல தடவைகள் அவரைப் பார்ப்பதுண்டு.  தில்லியை விட்டு அவர் சென்னை வரும்போது ஒருமுறை அவர் மனைவி நகைகள் சிலவற்றை தொலைத்து விட்டார். எதைச் சொல்லும்போதும் வெ சா பதட்டத்துடன் சொல்ல மாட்டார்.  சொல்வதில் வருத்தம் இருக்கும்.  ஆனால் அவர் கோபப்படடடால் அதை வெளிப்படுத்தாமல் இருக்க மாட்டார்.  யார் மீதாவது அவருக்குக் கோபம் இருந்தால அதில் விடாப்படியாக இருப்பார்.
சிறு பத்திரிகைகள் மூலம் அவரைப் பற்றி கேள்விபட்டபோது, ஒரு முறையாவது அவரைச் சந்திக்க வேண்டுமென்று நினைப்பதுண்டு. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் அவர் வீடு தேடி நான் டில்லிக்குச் சென்றேன்.  
நான் இருந்த இடமும் அவர் இருந்த இடமும் எங்கோ இருந்தது.  பாஷை புரியாத அவஸ்தை.  எனக்கோ எல்லார் வாயிலும் அகப்பட்டுக் கொள்கிற இந்த வெங்கட் சாமிநாதனை எப்படியாவது பார்த்து விட வேண்டுமென்று தோன்றியது.  என் முதல் சந்திப்பு அப்போதுதான் நடந்தது.
என்னைப் பற்றியெல்லாம் விஜாரித்து பேசிக் கொண்டே வந்தவர் ஒரு அறையைக் காட்டினார். 
“என்ன?” என்றேன்.
“இதில் உள்ள புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அந்த அறை முழுவதும் சுவரை ஒட்டி புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நான் சில புத்தகங்களை எடுத்துக் கொண்டேன்.  பின், üüஇந்த டில்லியில் பஸ்ஸில் போவது மோசமானது.  நான் உங்களை கொண்டு விடுகிறேன்  சிறிது தூரம்,ýý என்றார். 
எழுத்து மூலம் அவர் பலருடன் சண்டைப் போடுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  குறிப்பாக பிரமிள், அசோகமித்திரன், ஞானக்கூத்தன். ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அதிலேயே உறுதியாக இருப்பார் என்பதையும் நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை.
அன்று தில்லியில் அவருடன் பஸ்ஸில் போனபோது, கண்டக்டருக்கும் ஒரு சில பயணிகளுக்கும் பெரிய கலகலப்பே ஏற்பட்டது.  என்னுடன் என்னை ஒரு இடத்திற்குக் கொண்டு வர இருந்த வெங்கட்சாமிநாதனைப் பார்க்கும்போது, ஒன்றுதான் ஞாபகம் வந்தது. இவர் போகுமிடமெல்லாம் எதாவது சண்டை ஏற்படுகிறதே என்று. வெங்கட் சாமிநாதனுக்குசுச் சிலரைப் பிடிக்கவில்லை என்றால் அவர்களைப் பற்றி மோசமாக சொல்லாமல் இருக்க மாட்டார்.
அவர் தில்லியிலிருந்து சென்னைக்கு  குடி வந்தபோது ஒரு மாசம் காலியாக இருந்த என் வீட்டில்தான் தங்கியிருந்தார்.  மடிப்பாக்கத்தில் அவர் வீடு கட்டிக்கொண்டு போகும்போது, மடிப்பாக்கத்திலேயே ஒரு வீட்டில் குடியிருந்தார்.  
நான் அடிக்கடி அவரைச் சந்திப்பது உண்டு.  எதாவது உதவிகளும் அவருக்குச் செய்வதுண்டு.  அவர் தன் சேமிப்புகளில் சிலவற்றை சில இடங்களில் டெபாசிட் பண்ணி இருந்தார்.  அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுக்கொண்டு.  பங்களூரில் இருந்த என் உறவினர் கூட கிட்டத்தட்ட 10 லட்சம் வரை அப்படி டெபாசிட் செய்து எல்லாவற்றையும் இழந்து விட்டார்.  வெ சாவும் அப்படி இழந்து விட்டார்.
வெங்கட் சாமிநாதன் எப்போதும் பிடிவாதமானவர்.  அவர் சென்னைக்கு வந்தபிறகுதான் அவருடைய எழுத்துக்கள் பல புத்தகங்களாக வெளிவந்தன.  முதன் முதலில் அவர் டில்லியில் இருந்தபோது எழுதாமல் இருந்தார்.  நான் அவரிடமிருந்து கேட்டு விருட்சத்தில் பிரசுரம் செய்தேன்.  இதெல்லாம் ஆரம்பத்தில்.  அதன் பின் அவர் சென்னையில் அதிகமாகவே எழுதினார்.
அவர் யாரைப் பார்த்தாவது விமர்சனம் செய்தார் என்றால் கடூரமாக இருக்கும்.  சில சமயம் அதைக் படிக்குமபோது தாங்க முடியாத சிரிப்பையும் வரவழைத்து விடும்.  உதாரணமாக அவர் வல்லிக் கண்ணனைப் பற்றி ஒன்று சொல்வார்.  üஅவர் ஒரு டெச்பேட்ச் க்ளார்க்ý என்று.  உண்மையில் வல்லிக் கண்ணனும், திகசியும் அவர்களுக்கு அனுப்பும் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் பார்த்து படித்து விட்டு வாழ்த்தி ஒரு கார்டில் கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார்கள்.  பத்திரிகை புத்தகம் போடுபவரை உற்சாகப்படுத்தாமல் இருக்கமாட்டார்கள்.  நான் என் பத்திரிகையை அனுப்பினால் கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார்கள்.  அவர்கள் கடிதம் வந்தபிறகுதான் எனக்கு நிம்மதி மூச்சு வரும்.  ஓ நம் பத்திரிகை எல்லோருக்கும் போய்ச் சேர்ந்து விட்டது என்று.
அவர் சென்னையில் இருந்தபோது அந்த நாட்கள் மறக்க முடியாதது.  பல நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைத்துப் போயிருக்கிறேன்.  அவரைச் சந்திக்கும்போதெல்லாம் அவர் என் மற்ற எழுத்தாள நண்பர்களை எல்லாம் கிண்டல் செய்யாமல் இருக்க மாட்டார்.  ஏன் இவருக்கு இதுமாதரி எல்லார் மீதும் கோபம் என்று தோன்றும்.  
நான் அடிக்கடி எல்லோரிடமும் போன் பண்ணி பேசிக் கொண்டிருக்க மாட்டேன்.  எப்போதாவது போன் பண்ணி பேசும்போது மட்டும், “என்ன உன் குரு சொல்றபடி கேட்கிறியா?” என்பார். 
“நான் யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளமாட்டேன்.  என்னை யாரும் சிஷ்யனாகவும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என்பேன்.
ஆனால் என்னைப் பார்த்தால் நம்ப மாட்டார்.  ந பிச்சமூர்த்திக்கு ஒரு விழா எடுத்தோம்.  நான், ஞானக்கூத்தன், ராஜகோபாலன் என்று பலருடைய முயற்சியில் நடந்தது.  அக் கூட்டத்திற்கு ஜி கே மூப்பனார் தலைமை வகித்தார். வெங்கட் சாமிநாதனும் அக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.  மறக்க முடியாத கூட்டம் அது.
வெங்கட் சாமிநாதன் பங்களூர் சென்ற பிறகு நான் அவரை சந்திப்பது நின்றே போய்விட்டது.  பங்களுரிலிருந்து யாரையாவது பார்த்தால் வெ சாவைப் பற்றி விஜாரிக்காமல் இருக்க மாட்டேன். என் பையன் திருமணத்திற்கு பத்திரிகை அனுப்பினேன். அவர் வாழ்த்தி பதில் எழுதினார். போனில் பேசவே எனக்கு அவரிடம் நடுக்கம்.  கோபத்துடன் பேசுவாரோ என்ற பயம்தான்.
சமீபத்தில் பங்களூர் செல்லும்போது ஜøலை மாதம் அவரைப் பார்க்கச் சென்றேன்.  மகாலிங்கம் என்ற நண்பர்தான் என்னை அழைத்துக் கொண்டு போனார்.  அதே கம்பீரமான தோற்றத்துடன் வெங்கட் சாமிநாதன் இருந்தார்.  ஆனால் அதே கோபத்துடன் அவர் பேசினார்.  அவர் எதையுமே மறக்க வில்லை.  தேவை இல்லாமல் மற்ற இலக்கிய நண்பர்களைத் திட்டாமல் இல்லை.   வேண்டாத விருந்தாளியைப் பார்ப்பதுபோல்தான்ல் என்னைப் பார்த்தார். அவரைப் பார்ப்பது இதுதான் கடைசி முறையாக இருக்குமோ என்று கூட எனக்குத் தோன்றியது.  அவர் வீட்டில் உள்ளவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்.  அவர் ஒன்றே ஒன்றுதான் என்னைப் பார்த்துக் கேட்டார்.  “நீ ஏன் என் புத்தகங்களைப் படித்து விட்டு ஒன்றும் எழுதுவதில்லை,” என்று.
அவர் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அவர்தான் பலருடைய புத்தகங்களைப் படித்துவிட்டு விமர்சனம் எழுதிக் குவிப்பவர்.  பொதுவாக நான் சிலருடைய புத்தகங்களை விமர்சிப்பதில்லை.  அதில் வெங்கட்சாமிநாதனும் ஒருவர்.  நான் எதையாவது எழுதப் போய் அவருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்ற அச்சமதான் காரணம்.  
நான் பங்களூரிலிருந்து திரும்பி வந்தபோது அவர் புத்தகம் எதையாவது விமர்சனம் செய்ய வேண்டுமென்று எடுத்து வைத்துக்கொண்டேன். 
அவருடைய, üஎன் பார்வையில் சில கதைகளும் சில நாவல்களும்ý என்ற புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன்.  ஒரு படைப்பாளியாக மாறாமல விமர்சராகவே கடைசி வரை இருந்துவிட்டாரே என்ற ஆச்சரியம் எனக்கு அவர் மீது உண்டு.  எல்லோரையும் திருப்தி செய்வதுபோல் ஒரு புத்தகத்தை பாராட்டவே முடியாது.  எத்தனைப் புத்தகங்களைப் பற்றி தன் மனதில் பட்டதை எழுதி இருக்கிறாரே என்ற ஆச்சரியம் எனக்கு எப்போதும் உண்டு.
காலையில் அவர் மரணம் அடைந்த செய்தியை அறிந்தேன்.  அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்.  
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன