13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் படங்கள்

அழகியசிங்கர்


ஒரு வழியாக 13வது சர்வதேச திரைப்பட விழா  13.01.2015 அன்று  முடிவடைந்துள்ளது.  6ஆம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை 12 படங்கள் பார்த்துவிட்டேன். உட்லன்ட் தியேட்டரில் ஐந்து படங்களும், உடலன்ட் சிம்போனியில் 3 படமும், ஆர்கேவியில் 3 படங்களும், ஐநக்ஸில் 1 படமும் பார்த்து முடித்துவிட்டேன்.  ஒரு நாளில் இரண்டு படங்கள் பார்ப்பது எனக்கு இயலாது மாதிரியே தோன்றியது.  
ஒவ்வொரு தியேட்டரிலும் கூட்டம் அதிகம்.  சிலசமயம் தாமதமாக வந்தால் உட்கார இடத்தைக் கண்டுபிடிக்க சற்று சிரமமாக இருக்கும்.  படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது சிலபேர்கள் படத்தை முழுதாகப் பார்க்காமல் தியேட்டரை விட்டுப் போய்க் கொண்டிருப்பார்கள். 
ஒரே இடத்தில் உட்கார்ந்து அசையாமல் தலையைத் தூக்கி வைத்துக் கொண்டு பார்க்கிற அனுபவத்தில் எனக்கு இடுப்பு வலி வந்துவிடும்.  சிறிது நேரம் வலியுடன் படம் பார்க்க வேண்டியிருக்கும்.  எப்போதும் என்னால் நெருக்கமாக ஓரிடத்தில் ரொம்ப நேரம் உட்கார முடிந்ததில்லை.  அப்புறம் தலை. அசையாமல் வைத்திருப்பதால் எழுந்திருந்து நகரும்போது ஜாக்கிரதையாக நடக்க வேண்டி உள்ளது.  
மேலும் சினிமா பார்க்க வரும்போது ஒரு குற்ற உணர்ச்சி இருந்து கொண்டு இருக்கும்.  என் அப்பாதான் அது.  93 வயதான அவரை வீட்டில் விட்டுவிட்டு வரவேண்டும்.  அவர் சில நேரம் தானாகவே சாப்பாடை எடுத்துச் சாப்பிடுவார்.  சில நேரம் சாப்பிட மாட்டார்.  அவரைக் கூப்பிட்டு தொந்தரவு செய்ய வேண்டும்.  அதனால் தொடர்ந்து சினிமா தியேட்டரில் இரண்டு சினிமாக்களைப் பார்ப்பது சற்று சிரமமாக இருக்கும்.
13ஆம் தேதி காலையில் ஆர்க்கேவியில் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  இதுவரை எத்தனைப் படங்கள் பார்த்தீர்கள் என்று கேட்டேன்.  45 என்றார்.  எனக்கு அதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது.  அவருக்கும் என் வயது.  ஆனால் அவருக்கு உபாதைகள் என்னை விட குறைவாக இருக்கும்போல் தோன்றியது.  ஆனால் அவர் சினிமாவில் தொடர்பு உடையவர்.  எடிட்டிங் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  அவர் ஒரு தகவலை சொன்னார்.  ஏதோ ஒரு படத்தில் காமெரா வர பிரச்சினையாகிவிட்டதாம்.  உடனே செல்போனில் அந்தக் காட்சியைப் படம் எடுத்துவிட்டார்களாம்.  அந்த மாதிரி காட்சி நன்றாக வந்ததா என்று நான் கேட்டேன்.  நன்றாகவே வந்துள்ளது. பார்க்கிறவர்களுக்குத் தெரியாது என்றார்.  
உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கில் சினிமாப் படங்கள் எடுக்கிறார்கள்.  அதில் ஒரு துளிதான் சர்வதேசத் திரைப்படம் என்பது.  அந்தத் துளியில் உள்ள அத்தனைப் படங்களையும் பார்க்க முடியவில்லை.  எதாவது சந்தர்ப்பத்தில் இன்னும் சில படங்களைப் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.  
நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள் என்று பலர் இதில் ஈடுபட்டு படத்தைக் கொண்டு வருகிறார்கள்.  ஆனால் யாருக்காக?  பார்வையாளர்களுக்காகத்தான். பார்வையாளன் தனக்கு விருப்பமான நேரத்தில் இந்தச் சினிமாக்களைப் பார்க்கிறான்.  இந்தப் பார்வையாளனை எல்லா சினிமாக்களும் கவர்ந்து விட முடியுமா?  கேள்விகுறிதான். பார்வையாளன்தான் எல்லா விதங்களிலும் சிறந்தவன்.  அவனுக்கு ஒரு படத்தை எடுப்பவரின் வலி என்ன என்று தெரியாது.  அதன் அவதி தெரியாது. அவன் சுதந்திரமானவன். விரும்பினால் அவன் ஒரு படத்தைப் பார்க்க முடியும். அல்லது வேண்டாமென்று விட்டுவிட முடியும்.  படத்தை எடுப்பவர்கள் பணத்தை அதில் போட்டு பணம் கிடைக்குமா என்று எதிர் பார்க்கிறார்கள். பலர் நடித்தாலும் பார்வையாளன்தான் சொல்ல வேண்டும்.  அந்தப் படத்தில் அந்த நடிகர் நன்றாக நடித்துள்ளார் என்று.  திரும்பவும் சொல்கிறேன்  நடிப்பவர்களை விட மிகச் சுதந்திரமானவன் பார்வையாளன்தான்.   எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் அறுபது ஆண்டு இறுதியிலிருந்து சினிமாப் படங்கைளையே பார்க்கவில்லை என்று சொன்னார்.  பெரும்பாலோருக்கு தியேட்டரில் சினிமா பார்ப்பது குறைந்து விட்டது.  குறிப்பாக வயதானவர்களுக்கு தியேட்டரில் சினிமா பார்க்க முடியவில்லை. நேற்று  ஐநாக்ஸ் என்ற தியேட்டரில் ஒரு படம் பார்த்தேன்.  தியேட்டரில் உள்ளே உட்கார முடியவில்லை.  ஒரே ஏசி.  யூரின் போக நடு படத்தில் எழுந்து போக வேண்டியிருந்தது.  படத்தில் நடிப்பவர்களைப் பற்றி யாராவது எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். 
 இல்லாவிட்டால் மறந்து விடுவார்கள்.  இதன் மூலம் சிலருக்கு புகழ் கிடைக்கும்.  அதுவும் மாயை. நடிடத்துக் கொண்டே இருக்க வேண்டும்
.  அப்போதுதான் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். நடிப்பில் சிறந்த பெரிய நகைச்சுவை நடிகர் ஒருவரை பார்த்திருக்கிறேன்.  நேரில் அவர் பேசுவதைக் கேட்கும்போது  அவர் சாதாரண அறிவு கூட இல்லாதவர் என்று தோன்றியது.  
இதுமாதிரியான படங்களைப் பார்ப்பதன் முக்கியமான விஷயம்.  இடம்.   உலகில் வெவ்வேறு இடங்களை நாம் நேரில் பார்க்க முடியாது. இது மாதிரியான படங்கள் மூலமாகத்தான் பார்க்க முடியும்.    மொழி.  அந்த மொழி நமக்குப் புரியாவிட்டாலும், அந்த பேச்சு மொழி மூலம் எதுமாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதைக் கணிக்க முடிகிறது.  மனிதர்கள்.  ஆண்கள் பெண்கள் குழந்தைகள்.  அவர்கள் வாழ்க்கை முறை.  சினிமா மூலம் இன்னொரு வாழ்க்கை முறையை யோசித்துப் பார்க்கலாம்.   
இதுமாதிரியான உலகச் சினிமாக்கள் தமிழில் படம் எடுப்பவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதை நிச்சயமாக சொல்லமுடியும்.  பல படங்களைப் பார்க்கும்போது மிகச் சாதாரண விஷயங்களைக் கூட எப்படி போரடிக்காமல் படம் எடுக்க முடிகிறது என்பதையும் இது காட்டுகிறது.  பல விதங்களில் படம் எடுக்கலாம் என்பதை யோசிக்க வைக்கிறது.  சுவாரசியமாக எந்தக் கதையும் படம் மூலம் சொல்லலாம் என்றும் தோன்றுகிறது.  டாக்ஸி என்ற ஒரு இரானியப் படத்தில் டாக்ஸி ஓட்டிக்கொண்டு போவதிலேயே ஒரு படத்தை எடுக்க முடியும் என்பதை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தேன். 
 அதுவும் போரடிக்காமல் படத்தை எடுத்துள்ளார்கள். டாக்ஸியில் இருப்பவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். 
பெரும்பாலான படங்களில் சாப்பிடுவதையே காட்டுகிறார்கள்.  எதாவது கிளப்பில், அல்லது வீட்டில்.  குடித்துக்கொண்டே இருக்கிறார்கள், அல்லது சிகரெட் பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.  அதெல்லாம் மீறி வசீகரமாகவே இந்தப் படங்கள் எடுக்கப் படுகின்றன.

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் படங்கள்…2

அழகியசிங்கர்


திரைப்படத் துவக்க விழா அன்று காட்டிய படம் விக்டோரியா என்ற படம்.  இந்தப் படம் பார்க்க ஏகப்பட்ட கூட்டம்.  நான் சற்று தாமதமாகச் சென்றதால் முண்டி அடித்துக்கொண்டு போக வேண்டி உள்ளது.  உள்ளே விட முடியாது என்று சொல்லி விட்டார்கள். பின் ஒரு தள்ளு தள்ளி உள்ளே சென்றேன். ஏற்கனவே சுந்தர்ராஜன் அவர்களிடம் சொன்னதால் அவர் இடம் பிடித்து வைத்திருந்தார்.
மிக எளிமையாக துவக்க விழா நடந்தது.  யாரும் பெரிய வார்த்தைகளையே பேசவில்லை.  மேலும் படம் ஆரம்பிக்க வேண்டுமென்பதால் கொஞ்சமாகப் பேசினார்கள் என்று நினைக்கிறேன்.  தமிழ் வாழ்த்துடன் ஆரம்பித்தது விழா.  குத்துவிளக்கு ஏற்றினார்கள்.  விக்டோரியா படம் எடுத்தவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு அந்தப் படத்தைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னார்.
இந்த விக்டோரியா என்ற படம் பல பரிசுப் போட்டிகளில் சர்வதேச அளவில் கலந்து கொண்டுள்ளது.  பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி உள்ளிட்ட ஆறுவிதமான பரிசுகள் பெற்றுள்ளது. ஒளிப்பதிவாளர் சுடுர்லா பிராண்ட் கோர்விலன் தன் கேமராவில் ஒரே ஷாட்டில் படத்தை எடுத்து சாதனை பண்ணி உள்ளார்.  அதாவது ஒரு நகரம், ஒரு இரவு, ஒரு ஷாட் என்று இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பெர்லின் என்ற இடத்தில் ஒரு இரவில் எடுக்கப்பட்டுள்ளது.  இது ஆச்சரியம்தான்.  லையா கோஸ்டா என்ற நடிகை முதல் காட்சியிலிருந்து கடைசி வரை நடித்திருக்கிறார். ஒரு நடனவிடுதியில்தான் ஆரம்ப காட்சி ஆரம்பமாகிறது.  விக்டோரியா என்ற பாத்திரத்தில் நடிக்கும் அந்த நடிகை அந்த இரவில் அந்த விடுதியில் இருட்டில் பலருடன் நடனமாடிக் கொண்டிருக்கிறாள். 
இந்தக் காட்சியின் முடிவில் விக்டோரியா அந்த இடத்தை விட்டு வெளியில் வருகிறாள்.  வெளியில் நான்கு இளைஞர்கள் குடித்துவிட்டு கலாட்டா செய்தவண்ணம் இருக்கிறார்கள்.  விக்டோரியாவை அவர்கள் பார்த்தவுடன், அவளுடன் பேசுகிறார்கள்.  அவளுக்கு ஜெர்மன் மொழி தெரியாது.  அவர்களுக்கு ஜெர்மனியைத் தவிர வேற மொழி தெரியாது.  அதில் ஒருவனான சோன் அவளுடன் நெருக்கமாகப் பேச்சு கொடுக்கிறான். இது மாதிரி இந்தியா மாதிரியான ஒரு இடத்தில் நடந்தால், அதுவும் அந்தத் தனிமையான இரவு நேரத்தில், பாலியல் பலாத்காரம் தான் நடந்திருக்கும். 
படத்தை வேறுவிதமாக இந்தப் படத்தை இயக்கியவர் எடுத்திருக்க வேண்டி வரும்.  அவர்கள் நால்வரும் சின்ன சின்ன திருட்டுக்களை செய்பவர்கள். ”புதிய கார் வாங்கியிருக்கிறோம், வருகிறாயா?” என்று விக்டோரியாவை கூப்பிடுகிறார்கள்.  அதில் ஒருவன் விக்டோரியா முன் சர்கஸ் மாதிரி உடலை வளைத்து நடித்துக் காட்டுகிறான்.  மேலே என்ன பேசுவது என்று தெரியாதபோது, இன்னொரு கிளப்பில்  அவளை குடிக்க சோன் கூப்பிடுகிறான். அவளும் அவர்களுடன் சென்று கூரை மீது அமர்ந்து குடிக்கிறாள்.
திரும்பவும் சோனை விக்டோரியா அவள் பணிபுரியம் இடத்திற்கு அழைத்து வருகிறாள்.  இந்தப் படத்தில் பாதிவரை அவர்கள் நாவல்வரும் பேசிக் கொண்டே இருப்பதுதான்.  சோனும் விக்டோரியாவும் பேசிக்கொண்டிருப்பதை சிறப்பாக படம் எடுத்திருப்பார்கள்.  சோனிற்கு பியானோ வாசிக்கத் தெரியாது.  மோஸர்ட் என் உறவினன் என்பான். 
 விக்டோரியா அவனுக்கு பியோனாவை வாசித்துக் காண்பிப்பாள்.   ஒரு கட்டத்தில சோன் அவளைப் பிரிந்து செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்தப் படத்தின் அடுத்தக் கட்டம் இப்போது நடக்கிறது.  
சின்ன சின்ன திருட்டுக்களில் ஈடுபட்ட அவர்கள் ஒரு பெரிய திருட்டை நடத்தும்படியான சூழலுக்கு மாறுகிறார்கள்.  கட்டாயத்தின் பேரில் பெரிய கொள்ளைக் கூட்டத்தின் கட்டளைக்காக இதை செய்யுமபடி நேர்கிறது.  சோன் நண்பன் பாக்ஸருக்காகவும் அவன் சிறையில் இருந்தபோது நேர்ந்த நிர்பந்தம் பேரிலும் காலை நேரத்தில் ஒரு வங்கியில் கொள்ளை நடத்த ஒப்புக்கொள்கிறார்கள்.  இந்தத் திருட்டிற்கு விக்டோரியா உடந்தையாகப் பயன்படுத்தப்படுகிறாள். ஏன் எனில் அவர்கள் நால்வரில் ஒருவன் ரொம்பவும் குடித்து விட்டிருப்பான். அவள் அவர்களுக்காக கார் ஓட்டிக்கொண்டு வருகிறாள்.
பணம் கொள்ளை அடித்துக்கொண்டு அந்த இடத்தில் இருந்து அவர்கள் தப்பித்து வரும்போது எல்லாமே குழப்பமாக மாறி விடுகிறது.  அவர்கள் தப்பித்து வந்து  தங்கியிருக்கும் இடத்தில் போலீஸ் சூழ்ந்து விடுகிறது. துப்பாக்கி சூட்டில் சோன் நண்பர்கள் தப்பிக்க முடியவில்லை.  சோனும், விக்டோரியாவும் போலீûஸ ஏமாற்றி அந்த இடத்திலிருந்து தப்பித்து விடுகிறார்கள்.  போலீசுடன் நடந்த கலவரத்தில், அவன் நண்பன் பாக்ஸர் மூலம் சோன் கையில் 50000 யூரோ கிடைக்கிறது.  சோன் வயிற்றில் துப்பாக்கி சூட்டுடன் விக்டோரியாவுடன் வாடகைக் காரில் அந்த இடத்திலிருந்து தப்பித்து ஒரு ஓட்டலுக்குச் செல்கிறான்.  அங்கே அறை எடுத்துக்கொண்டு தங்குகிறார்கள்.  சோனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நினைக்கிறாள் விக்டோரியா.
அங்கே தான் உயிர் பிழைக்க முடியாது என்று நினைத்த சோன் தன் கையில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு விக்டோரியாவை போய்விடும்படி சொல்கிறான்.  விக்டோரியா ஆம்புலன்ஸிற்கு போன் செய்கிறாள்.  விக்úடிôரியாவின் கையைப் பிடித்தபடி சோன் இறந்து விடுகிறான்.  சோனின் மரணத்தைப் பார்த்து விக்டோரியா கண்கலங்குகிறாள். 
 அவள் உடல் முழுவதும் வேர்த்துக் கொட்டுகிறது.  செய்வதறியாது திகைக்கிறாள். இநத இடத்தில் லையா கோஸ்டா என்ற நடிகை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.   வார்த்தைகளை வெளிப்படுத்தாமல் மனக்குமறலை வெளிப்படுத்துகிறார்.  பின் ஓட்டல்அறையிலிருநது பணத்தை எடுத்துக் கொண்டு  ஓட்டலை விட்டே விக்டோரியா போய்விடுகிறாள்
.  அறையில் போன் மணி அடித்துக் கொண்டிருக்கிறது.  அவள்  தெருவில் நடந்து செல்வதுடன் படம் முடிவடைகிறது.  எதிர்பாராத திருப்பத்திற்கு ஆளாகி விக்டோரியா மாட்டிக் கொள்வதுதான் இந்தக் கதை.  பரபரப்புடன் இந்தப் படம் முடிவடைகிறது.   கொஞ்சங்கூட ஆபாசமில்லாமல் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.  
  

ம வே சிவக்குமார் என்ற எழுத்தாளரைப் பற்றி சில பகிர்வுகள்..

அழகியசிங்கர்
 எனக்கு ம வே சிவக்குமார் பற்றி வட்டம் என்ற சிறுகதை கணையாழி இதழிலில் வந்தபோதே தெரியும்.  நான் அக் கதையைப் படித்தபோது என்ன ஜோல்னா பை வைத்திருக்கும அறிவு ஜீவிகளை கிண்டல் செய்திருக்கிறாரே என்று நினைத்தேன். 

 அதன்பின் அவர் பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் பணிபுரிந்தபோது அறிந்திருக்கிறேன். அவர் அலுவலகம் பீச் ரயில் நிலையத்தின் எதிரில் இருந்தது.  என்னுடைய அலுவலகம் அவர் அலுவலகத்திற்குப் பின்னால் இருந்தது.

 கடைசியாக அவரைப் பார்த்தது மயிலாப்பூர் சங்கீத சபாவில் அவருடைய புத்தக வெளியீட்டு விழாவின் போது.  அப்போது அவர் பரபரப்பாகக் காணப்பட்டார்.  சமுத்திரகனி, எஸ் வி சேகர் போன்ற பிரபலங்கள் அக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.  அப்போதுதான் தெரிந்தது அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார் என்று. அந்த முயற்சியை எஸ்வி சேகர்தான் தடுத்தார் என்பதையும் அக் கூடடத்தில் அறிந்து கொண்டேன்.  சிவாஜி மாதிரி நடித்து தானே படம் எடுத்து கொண்டு வரவேண்டும் என்ற அவர் ஆசையை அப்போது வெளியிட்டார். 

 தூர்தர்ஷனில் தான் எழுதியது நாடகமாக வரவேண்டுமென்று போராடியவர் ம வே சிவக்குமார்.  அது நடக்காத கோபத்தில் தூர்தர்ஷன் முன்னால் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.  இப்படி துடிப்பாக பல விஷயங்களில் ஈடுபடுவார் சிவக்குமார்.  என்ன நடக்கிறது பார்க்கலாம் என்ற போக்கு அவரிடம் உண்டு.

 தம் திறமையை யாராவது கவனிக்க வேண்டுமென்ற துடிப்பு அவருக்கு உண்டு.  திறமையாக பல கதைகள் எழுதி இருக்கிறார்.  பாப்கார்ன் கனவுகள்  என்ற பெயரில் கல்கியில் தொடர்கதை எழுதியிருக்கிறார்.  பாப்கார்ன் கனவுகள் என்ற அவர் புத்தகத்தை வங்கியைச் சேர்ந்த அவருடைய  இரண்டு நண்பர்கள் புததகமாகக் கொண்டு வந்தார்கள்.  அந்த அளவிற்கு அவருக்கு வாசகர் வட்டமும்உண்டு.  புத்தகம் விற்கத் தெரியாதவர்கள் அவருடைய பாப்கார்ன் கனவுகள் புத்தகத்தை ஆயிரம் பிரதிகள் அடித்திருந்தார்கள்.

சிவக்குமாருக்கும் புத்தகம் எப்படி விற்பது என்பது தெரியாது. அந்தப் புத்தகத்தை அச்சடித்தவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள அவரது நண்பர் கணேசனும், இன்னொரு நண்பர் மாதவமூர்த்தியும்.

 விற்காமல் பரணில் போடப்பட்டிருந்த அந்தப் புத்தகப் பிரதியை நான்  புத்தகக் கண்காட்சி சாலையில் விற்க முயற்சி செய்தேன்.  எழுத்தாளர்களுக்கு கர்வம் இருக்க வேண்டுமா என்பது எனக்குத் தெரியாது.  ஆனால் சிவக்குமாரிடம் அந்தக் கர்வம் உண்டு.  துணிச்சலாக வெளிப்படையாகவே அவர் வெளிப்படுத்துவார்.


 ஒருமுறை சிவக்குமாரின் நாயகன் என்ற சிறுகதைத் தொகுதியை நான் வேற பெயரில் நவீன விருட்சத்தில் விமர்சனம் செய்திருந்தேன். அதில் ஒ வரி ஒருசில கதைகளைப் பார்த்தாலே போதும் நமக்கு அயர்ச்சி ஏற்பட்டு விடும் என்று எழுதி விட்டேன்.  சிவகுமாருக்கு என் மேல் படுகோபம்.  ஒரு சமயம் பீச் ரயில்வே நிலையத்தில் நானும் சிவக்குமாரும் சந்தித்துக் கொண்டோம். 

 “வாங்க… டீ குடிக்கப் போகலாம்,” என்று ஓட்டல் அமீனுக்கு அழைத்துக் கொண்டு போனார்.
   அந்தச் சமயத்தில் எனக்கு அவர் புத்தகத்தை விமர்சனம் செய்து விருட்சத்தில் வந்த விஷயமே மறந்து போய்விட்டிருந்தது.

 டீ குடிக்க ஆர்டர் செய்துவிட்டு,  “யார் அந்த ஹரிஹரன்?” என்று கேட்டார்.  நான்தான் அந்தப் பெயரில் அவர் சிறுகதைத் தொகுதியை விமர்சனம் செய்திருந்தேன்.  நான்தான் அந்த ஹரிஹரன் என்று அவரிடம் சொல்லவில்லை.

“அந்த ஹரிஹரனைப் பார்த்தால் செருப்பால அடிப்பேன்,” என்றார் கோபத்தோடு.  நான் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தேன். உண்மையில் விருட்சத்தில் அவர் புத்தகத்தைப்பற்றிய விமர்சனத்தை அரைப் பக்கம்தான் எழுதியிருந்தேன். 

“என்ன தெரியும் உங்களுக்கு?  இதோ பாருங்கள்… “என்று அவர் வைத்திருந்த சூட்கேûஸத் திறந்தார்.  அதில் உள்ள சில கடிதங்களைக் காட்டினார்.  “இதோ பாருங்கள்…குமுதத்தில் வந்திருக்கிறது…கல்கியிலிருந்து வந்திருக்கிறது…ஆனந்தவிகடன்ல வந்திருக்கிறது..என்ன எழுதச் சொல்லி, ஹரிஹரனுக்குத் தெரியுமா? யார் படிக்கிறாங்க இந்த விருட்சத்தை. பெரிசா விமர்சனம் பண்ணிட்டான், ” என்று சத்தம் போட ஆரம்பித்தார்.  அவரை நான் சமாதானம்செய்து அழைத்துக் கொண்டு போனேன்.  அவர் வீடு அப்போது க்ரோம்பேட்டையில் இருந்தது.  மாம்பலம் வரை அவர் என்னை மாதிரி சிறுகதை யாருக்கு எழுத வரும் என்று சொல்லிக்கொண்டே வந்தார்.  உண்மையில் சிவக்குமாருக்குத்தான் இப்படி சொல்கிற தைரியம் இருக்கும்.  இந்தச் சம்பவத்தின் போது புத்தக விமர்சனம் செய்யும் ஆபத்தை உணர்ந்து கொண்டேன்.  அதற்குப் பிறகு அவரை சந்தித்தபோது இந்த நிகழ்ச்சியை அவர் மறந்து விட்டிருந்தார். 

அசோகமித்திரன் 82 என்று கூட்டம் நடத்தினேன்.  அந்தக் கூட்டத்தில் ம வே சிவக்குமாரைப் பேசச் சொன்னேன்.  அவர் வந்து பேசினார். மகேஷ் என்ற அவருடைய நெருங்கிய நண்பரையும், ராஜாமணி என்ற நண்பரையும் பார்க்கும்போது சிவக்குமாரைப் பற்றி விஜாரிக்காமல் இருக்க மாட்டேன்.

 எதிர்பாராதவிதமாக இன்று காலை மூன்று மணிக்கு டீ குடித்துக்கொண்டிருக்கும்போது அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்ற செய்தியை அறிந்தேன்.  அவர் மறைவால் துன்பப்படும் அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
   

13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் படங்கள்…

அழகியசிங்கர்


13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் ஆறாம் தேதி ஜனவரி மாதம் துவங்கியது.  காலையில் 10.30 மணிக்கு ஒரு படமும், மாலை 6 மணிக்கு ஒரு படமும் பார்த்தேன்.  உட்லாண்ட்ஸ் தியேட்டரில் காலையில் எக்ஸிக் என்ற துருக்கி படம் பார்த்தேன்.  இதை இயக்கியவர் பாரிஸ் அட்லே.
நான் ஒரு பாமர ரசிகன்.  சினிமாப் படங்கள் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். உலகத் தரம் வாய்ந்த படங்களைப் பார்க்கும்போது, பாமரத் தனமான பார்வை சற்று விசாலமாகிறதாக தோன்றுகிறது.  
மேலேக் என்ற பெண்மணி கர்பமாக இருக்கிறாள்.  அவளுடைய கணவன் ஒரு புரட்சியாளன். இராணுவப் புரட்சியிலிருந்து அவன் தப்ப முடியவில்லை. மனைவியுடன் தரதரவென்று இழுத்துச் சென்று ராணுவத்தினரால் கொல்லப்படுகிறான்.  இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த அவன் மனைவி குறைபாடுள்ள ஒரு குழந்தையைப் பெற்றுவிடுகிறாள்.  
இந்தக் குறையுள்ள பையனுடன் அவள் அவளுடைய மாமனார் வீட்டிலிருந்து துரத்தப் படுகிறாள்.  அவளுடைய மூத்தப் பையன்  டெனிஸ் அவளுடைய மாமனார் வீட்டில் வளர்கிறான்.  
மாமனார் வீட்டில் அவன் வளர்ந்த விதம் சரியில்லை.  30 வயது வரை அவன் அம்மாவைப் பார்க்கக் கூட செல்லவில்லை.  அவன்  எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கிறான். அல்லது சிகரெட் பிடித்துக்கொண்டே இருக்கிறான்.  அவன் காவல் காக்கும் இடத்தில் குடிக்கக் கூடாது என்பது விதி.
.  ஆனால் டெனிஸ் அதை மீறி அங்கேயும் குடித்துக்கொண்டிருக்கிறான். அவனால் குடிப்பதிலிருந்து விடுபட முடியவில்லை. அவனுடைய செய்கை அவனுடைய முதலாளிக்குத் தெரிந்து ஒருநாள் அவனைக் கண்டபடி திட்டி வேலையைவிட்டு துரத்தி விடுகிறான்.  அந்த வேலைக்கு சிபாரிசு செய்த நண்பனை சந்திக்கிறான் டெனிஸ்.  அவனிடம் அன்று இரண்டு பீர்தான் குடித்தேன் என்கிறான்.  நண்பனும் அவனைத் திட்டுகிறான்.  அவனுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்று போய் விடுகிறான்.
இங்கு ஒரு வார்த்தை சொல்லவேண்டும்.  இவர்கள் இங்கே திட்டிக்கொள்வது அசிங்கம் அசிங்கமாக திட்டிக்கொள்கிறார்கள்.  தமிழில் இப்படி திட்டுவதுபோல படம் எடுக்க முடியாது.
 பல ஆண்டுகளாகப் பார்க்க வராத அம்மாவைப் பார்க்க அம்மா வீட்டிற்கு வருகிறான் டெனிஸ்.  அம்மாவிற்கு அவனைப் பார்த்து சந்தோஷம்.  அவள் குறையுள்ள அவனுடைய சகோதரனை வளர்த்து வருகிறாள்.  அவன் வாய் பேசமுடியாமல் நாற்காலியிலே முடவனாக காட்சி அளிக்கிறான்.  எந்த உடல் உபாதைக்கும் அவன் பிறரை நம்பித்தான் இருக்க வேண்டும். கோர்வையாகப் பேசக் கூட முடியாது.  இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் யார் என்று தெரியவில்லை.  தத்ரூபமாக அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தம்பியை முதலில் பார்க்க வரும்போது டெனிஸிற்குப் பிடிக்கவில்லை. அவன் அம்மாவிற்கு உதவி செய்ய ஒரு பெண்ணும் அவன் சகோதரனை  ஆறுதல் படுத்த வருகிறாள்.  அவள் கணவனை இழந்தவள்.  டெனிஸ் அமமா வீட்டிற்கு வந்தாலும் குடிகாரனாக இருக்கிறான். எப்போதும் சிகரெட் பிடிப்பவனாகவும், குடிப்பவனாக தென்படுகிறான். அவனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.   சகோதரனுடன் போராடும் அவன் அம்மாவைப் பார்த்து அவனுக்கு இரக்க உணர்ச்சி எல்லாம் உண்டாகவில்லை. எப்போதோ இறந்து போன அப்பாவையும் அம்மாவையும் வெறுப்பவனாக டெனிஸ் தென்படுகிறான்.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது இந்தப் படத்தில் இன்னும் என்ன இருக்கப் போகிறது என்றுதான் தோன்றும்.  டென்னீஸ் வீட்டிற்குள்ளே எப்போதும் சிகரெட் பிடித்துக்கொண்டும், குடித்துக் கொண்டும் இருப்பவனாகக் காட்சி படுத்தியிருக்கிறார்கள்.  அம்மா இருக்கும் வரை தம்பிக்கு உதவி செய்ய வர மாட்டான்.  அவன் ஒரு முரட்டுத்தனமான மனிதனாக இருக்கிறான்.
அவன் அபார்ட்மெண்டின் பக்கத்தில் வசிக்கும் ஒரு பெண் டென்னீûஸப் பார்த்தவுடன், வேகமாக அவள் வீட்டில் புகுந்து கொள்வாள்.  இதை இரண்டு மூன்று காட்சிகளில் காட்டியிருக்கிறார்கள். அவனைக் கண்டாலே அவளுக்குப் பிடிக்காது.  அவள் அம்மாவிற்கு உதவி செய்ய கணவனை சமீபத்தில் இழந்த விதவைப் பெண் வருகிறாள்.  அவள் மீது அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.  அவள் அம்மா அவளுக்கு டெனீûஸ அறிமுகப்படுத்துகிறாள். டெனீஸிடம் அந்தப் பெண் தன் சோகத்தை வெளிப்படுத்துகிறாள்.  அவளுடன் பழகுவதை உரிமை எடுத்துக்கொண்டு அவள் அலுவலகத்திற்கே சென்று அவளுடன் தகாத உறவில் ஈடுபட விரும்புகிறான்.  எல்லா விஷயங்களிலும் அவன் முரட்டுத் தனமாக நடந்து கொள்கிறான்.   அவனுடைய தகாத செயலைத் தடுக்க நினைக்கிறாள்.  தன் வேலைக்கே உலை வைத்துவிடுவார்கள் என்று அவள் பயப்படுகிறாள். இந்த இடத்தில் அவள் அலுவலகத்தில் யாருமில்லை.  அவள் மட்டும்தான் இருக்கிறாள். வாடிக்கையாளர்களும் யாரும் தென்படவில்லை. 
டெனிûஸப் பார்த்தவுடன் வாழ்க்கையில் தொடர்ந்து  வாழ  விரும்பாமல் அவன் தாய் தற்கொலை செய்து கொள்கிறாள்.  தமிழ் படமாக இருந்தால் இதைப் பெரிய காட்சியாகக் காட்டி ஊரையே கூட்டி விடுவார்கள்.  இந்தப் படம் அவள் தாய் இறந்து விட, அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து விடுகிறது.  டெனிஸ் சகோதரனைப் பார்த்துக்கொள்ளும்படி நிர்பந்திக்கப் படுகிறான். பார்வையாளனுக்கே இந்தக் காட்சியைப் பார்க்கும்போது சரியில்லாத சகோதரன் நிலையை எண்ணி வருத்தம் ஏற்பட்டு விடும்.   
சகோதரனுக்காக எல்லாம் செய்தாலும் டெனிஸ்  ஒருவித முரட்டுத் தனத்தோடு செயல்படுகிறான்.  குடியைப் பற்றி அறியாத சகோதரனை குடிக்க வற்புறுத்துகிறான்.  ஒருமுறை அவன் அப்பா எழுதிய கடிதத்தை சகோதரனுக்காக சத்தமாக படிக்கிறான்.  அந்தச் சமயத்தில் சகோதர்கள் கண் கலங்குகிறார்கள். உண்மையில் அவனுடைய சகோதரனால் அம்மாவின் இழப்பை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  
அவன் சகோதரன் முடமாக இருந்தாலும் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்க மாட்டான்.  ஒரு இரவு டெனிஸ் சரியாக கவனிக்காமல் அந்த விதவைப் பெண்ணுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கிறான்.  அப்போது அவன் சகோதரன் இயற்கை உபாதையால் அவதிப்பட்டு பெரிதாக அழுது சத்தம் போடுகிறான். டெனிஸ் வெறுப்புடன் வந்து தம்பியைப் பார்த்துக் கத்துகிறான்.  அவன் தம்பியோ அழுகையை நிறுத்தாமல் பெரிதாக சத்தம் போட்டபடி இருக்கிறான்.  அவனை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல், டெனிஸ் தன் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு தம்பியைப் பார்த்து அழுகையை நிறுத்தும்படி கத்துகிறான்.  வெறுப்படைந்து டெனிஸ் உடன் இருந்த விதவைப் பெண் அந்த இடத்தை விட்டு ஓடிப் போய்விடுகிறாள்.
இந்தத் தருணத்தில் எனக்கு படம் பார்க்கும்போது திக்கு திக்கு என்றிருந்தது.   இனிமேல் தம்பியை டெனிஸ் என்ன செய்வான் என்ற திக்குதான்.  ஒருமுறை தனக்கு வேலை கிடைத்து விட்டதாக தம்பியிடம் சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் குடித்துக்கொண்டே பேசிக்கொண்டே இருக்கிறான்.  தம்பியும் அவன் மகிழ்ச்சியில் பகிர்ந்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறான்.  குடி வேகம் அதிகமாக டெனிஸ் கீழே விழுந்து விடுகிறான். எழுந்து கொள்ளவே இல்லை.  அந்தக் காட்சியைப் பார்க்கும்போது பார்வையாளனாக இருக்கும் எனக்கு திகைப்பாகவே இருந்தது.
அவன் எழுந்திருக்காததைப் பார்த்து தம்பி பயங்கரமாக கத்தி ஆர்பாட்டம் செய்கிறான்.  உதவிக்கு யாரும் வரவில்லை..  பின் கண்ணாடி ஜன்னலை ஓங்கி ஓங்கி தலையால் முடட்டி உடைக்கிறான்.  அந்தத் தலை முட்டலில் அவன் தலை உடைந்துவிடுகிறது. 
பக்கத்தில் குடி இருக்கும் பெண் மெதுவாக  இதைக் கவனித்து ஏதோ விபரீதம்ஆகி விட்டதாக எண்ணி மருத்துவமனைக்கு போன் செய்கிறாள்.  மருத்துவ மனையிலிருந்து வந்தவர்கள் அவர்கள் இருவரையும் எடுத்துச் சென்று விடுகிறார்கள்.
இந்தத் தருணத்தில் அவர்கள் இருவருக்கும் என்ன ஆயிற்று என்ற துடிப்பு பார்வையாளருக்கு ஏற்படுகிறது. ஆனால் அடுத்த நிமிடமே டெனிஸ் தலையில் கட்டுடன் தெருவில் நடந்து வருகிறான்.  டெனிஸிற்கு ஒன்றும் ஆகவில்லை என்ற ஆறுதல் நமக்கு ஏற்பட்டாலும், அவன் தம்பியின் மரணத்தை வெளிப்படுத்தியபடி இந்தப் படம் முடிகிறது.  தலையால் முட்டி மோதி ஜன்னலின் கண்ணாடிக் கதவை உடைத்த இடத்தில் சுவரில் ரத்தம் ஆறாய் உரைந்து கிடக்கும்.  டெனிஸ் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதாக அந்தக் காட்சி முடியும். 
குடியால் ஒருவன் எல்லாவற்றையும் இழந்து நாசமாகப் போவதைக் இப் படம் காட்டுகிறதா?  பல சமயம் தெருவில் டெனிஸ் நடந்து சென்று கொண்டிருப்பான்.  அதில் ஒருவித வெறுமை வெளிப்படும்.   அப்படி அவன் செல்வது யாரையும் பார்ப்பதற்கு அல்ல.  பெரும்பாலும் குடிப்பதற்குத்தான் அவன் செல்வான்.  குடியைப் பற்றி இப் படம் இருந்தாலும், பிரச்சாரமாக இந்தப் படம் இல்லாமல், கலாபூர்வமாக படம் எடுக்கப் பட்டிருக்கிறது.  

மறக்க முடியாத 2015………..

அழகியசிங்கர்

கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் கொண்ட வாழ்க்கை சூழ்நிலையில் நான் மறக்க முடியாத ஆண்டு 2015.  அது தொடர்பான பல நிகழ்ச்சிகளை இப்போது நினைக்கும்போதும் கதி கலங்குகிறது.  
சென்னையில் மேற்கு மாம்பலத்தில் இருக்கும் நான், மற்றவர்களுடன் பேசக் கூட முடியாமல் தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்டு போய்விடுவேன் என்பதை கற்பனை செய்து கூட பார்க்கவில்லை.
தீபாவளி அன்று பெய்த மழையில் எங்கள் தெருவில் எந்த மழை நீரும் வரவில்லை.  மழை பெய்து கொண்டே இருந்தது.  ஆனால் சினிமா போவதற்காக என்னுடைய நானோ காரை எடுத்துக்கொண்டு வந்தேன்.  பக்கத்தில் உள்ள உதயம் தியேட்டருக்கு நானே எடுத்துக் கொண்டு போவது மனைவிக்குப் பிடிக்கவில்லை.  மழையில நனையாமல் போகலாம்  என்று எடுத்துக்கொண்டு வந்தேன்.  மேலும் மழை பெய்தாலும் என் கார் ஓட்டும் திறமையை  காட்ட நினைத்தேன். 
நல்லபடியாகத்தான் ஓட்டிக்கொண்டு போனேன்.  ஆனால் தியேட்டரில் கார் வைக்கும்போது பிரச்சினையாகி விட்டது.  இன்னொரு காருக்கு இணையாக என் காரை நிறுத்தச் சொல்லி காரைப் பார்த்துக் கொள்பவன் சொல்ல, நானும் முயற்சி செய்தேன்.  ஆனால் காரை நெருக்கமாக இன்னொரு காருடன் நிற்க வைக்க முடியவில்லை. அப்போது உதயம் தியேட்டர் ஸ்டாலில் இருப்பவன், üகொடுங்கள் சார் நான் காரை நிறுத்துகிறேன்,ý என்று காரை வாங்கிக்கொண்டு, ஓட்டுகிறேன் பேர்வழி என்று என் காருக்கு முன்னால் நிற்கும் காரின் பின் பகுதியில் பயங்கரமாக இடித்து விட்டான்.  அவன் பிரேக் பிடிப்பதற்குப் பதில் ஆக்ஸிலேட்டரை அழுத்தி விட்டான். அந்தக் கார் முன்னால் யாராவது நின்றிருந்தால் பெரிய விபத்து நடந்திருக்கும். என் கார் இதுதான் சாக்கென்று சப்பையாகி விட்டது.  இதுமாதிரியான அதிர்ச்சி சம்பவம் நடந்தால், நான் ஸ்தம்பித்துப் போய்விடுவேன்.  அன்றும் அப்படித்தான் நடந்தது.
பின் கார் இடித்ததால் ஏற்பட்ட சேதத்திற்கு ரூ 5000 எனக்கும், அந்தக் கார் வைத்திருப்பவருக்கும் கிடைத்தது.  எனக்குத்தான் சேதம் அதிகம்.
வண்டியை எடுத்துக்கொண்டு டாடா ரீச்சிற்குப் போனேன்.  வண்டியை சோதித்தவர் ரூ25000 வரை ஆகுமென்றார்.  வேற வழியில்லாமல் வண்டியைக் கொடுத்து விட்டு வந்துவிட்டேன். கார் கிடைக்க ஒரு வாரம் மேல் ஆகும் என்றும் சொல்லி அனுப்பி விட்டார்.
அடுத்தவாரம் டிசம்பர் 1 ஆம்தேதி என் பிறந்தநாள்.  நேர்பக்கம் என்ற பெயரில் அவரசமாக தயாரித்தப் புத்தகத்தை கட்டுக் கட்டாக கீழே உள்ள அறையில் கொண்டு வந்து  பெஞ்சில் வைத்திருந்தேன்.  மழையால் யாரையும் பார்க்க முடியவில்லை.
அன்று இரவு ஒரு கனவு.  பயங்கர கனவு.  ஒரு கருப்பு நாய் என் தொடையைக் கவ்வுவது போல.  அந்த நாய் என்னைக் கடிக்கவிலலை.  கவ்வும்போது நான் கத்துகிறேன்.  யாரும் உதவிக்கு வரவில்லை. ஏன் இதுமாதிரி ஒரு கனவு வந்து தொல்லை செய்தது என்று யோசித்தேன்.  பொதுவாக இது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தால் நான் யாருக்கும் சொல்லமாட்டேன்.  முதலில் கேட்பவர் பயந்து விடலாம்.  அல்லது இன்னொரு முறை நானே சொன்னால் நானே திரும்பவும் பயப்படலாம்.  கனவுக்கு பெரிய அர்த்தம் இல்லை.  அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றுதான் நினைத்தேன்.
ஆனால் நம் நிஜ வாழ்க்கைக்கும் கனவுக்கும் மெல்லிய கோடுபோல் ஏதோ சம்பந்தம் இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் விளக்க முடியாத தொடர்பு அது.  
அடுத்த நாள் மழை வெள்ளம் எங்கள் தெரு வாசலில் எட்டிப் பார்த்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  நான் கீழே இறங்கி என் டிஜிட்டல் காமெராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தேன்.  அப்போது வெள்ள நீர் எதிர் வீட்டில் கீழே குடியிருப்போர் வீட்டிற்குள் சென்று விட்டது.  அப்போதே அவர்கள் வீட்டு டீவி, பிரிட்ஜ், கட்டில் எல்லாம் நாசமாகி விட்டது.  எங்கள் வீடு மேடாக இருப்பதால் தெருவில் உள்ள அத்தனைப் பேர்களும் எங்கள் வீட்டில் டூ வீலர்களையும், கார்களையும் வைத்துக் கொண்டார்கள்.  என் காரோ டாடா ரீச்சிலிருந்து எடுத்துக் கொண்டு வரவில்லை.
அப்புறம் அடித்த வெள்ள நீர் என் வீட்டையும் சூழ்ந்துகொண்டு கீழ் அறையில் உள்ள புத்தகங்கள், பின் கார்கள், டூ வீலர்கள் என்று எல்லாம் மூழ்கி எங்கள் மாடிப்படி வழியாக முதல் மாடிக்கு அழையாத விருந்தாளியாக வர முயற்சி செய்தது.  புத்தகம் கீழே இருந்தாலும், நாங்கள் முதல் மாடியில்தான் குடியிருந்தோம். தண்ணீர் தெரு முழுவதும் ஆறடிக்கு மேல் போய்க் கொண்டிருந்தது.  கோவிநதன் ரோடில் கங்கையில் செல்லும் வெள்ளம் போல் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.  பீதியில் தெருவில் உள்ள எல்லோரும் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தோம்.  எதிர் வீட்டில் குடியிருப்பில் உள்ள சில வீராதி வீரர்கள் ஏதோ ஆற்றில் நீச்சலடிப்பதுபோல் நீச்சல் அடித்துக்கொண்டு தெருவில் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.  சென்னையில் மற்ற பகுதியில் உள்ள எல்லோரிடமும் போன் பேசமுடியாமல் துண்டிக்கப்பட்டு மனதில் பயத்துடன் இருந்தோம்.  என் பையன் அமெரிக்காவிலிருந்து பேசினான். டிரான்சிஸ்டர் என்ற கருவியின் உபயோகத்தை அப்போதுதான் தெரிந்து கொண்டேன். பிலிப்ஸ் டிரான்சிஸ்டரை பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி வைத்திருந்தேன்.  ஆனால் பயன் படுத்தியதே இல்லை.   முன்பு இதை ஏன் வாங்கினேன் என்று கூட யோசிப்பேன். 
உண்மையில் என் வண்டி டாடா ரீச்சில் இருந்ததால் வெள்ளம் பாதிப்பு இல்லாமல் காப்பாற்றப் பட்டு விட்டது. ரிப்பேர் செய்த நிலையில் வெள்ளம் பாதிப்பு இல்லாமல் அங்கு பத்திரமாக இருந்தது.   மறறவர்கள் வண்டிகள் எல்லாம் நாசமாகி விட்டது.  கார் வைத்திருந்தவர்கள் எல்லோருடைய காரும் நாசம்.  டூ வீலர்கள் நாசம். நான் என் புதிய புத்தகமான நேர் பக்கத்தை எடுத்துக்கொண்டு வரும்போது, ஆட்டோ டிரைவர் ஒரு கட்டை எடுத்து உள்ளே வைக்கும்போது, அந்தக் கட்டு கை தவறி உடைந்து புத்தகங்கள் எல்லாம் சிதறி விட்டன.  என்னடா இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறதே என்று அப்போது நினைத்தேன்.  அதன் பலாபலன்தான் வெள்ளத்தால் என் அத்தனை புத்தகக் கட்டுகளும் கீழே விழுந்து விசிறி அடிக்கப்பட்டு விட்டன.
கொஞ்சம் யோசிக்கும்போது அபத்தமான உதயம் தியேட்டர் விபத்து, கருப்பு நாயின் கவ்வின கனவுக் காட்சி, முன் கூட்டியே புததகக் கட்டு விழுந்து நொறுங்கியது என்றெல்லாம் யோசித்துப் பார்க்கிறேன்.  என் கார் வெள்ளத்தில் மாட்டியிருந்தால் நாசமாகிப் போயிருக்கும் காரே காணாமல் போயிருக்கும்.  இந்த அபத்தமான சிறு விபத்துதான் காரை காப்பாற்றி விட்டது.  
கறுப்பு நாயின் கனவுக் காட்சி பெரிய ஆபத்தை சுட்டிக் காட்டி என்னை விட்டு விலகிப் போய்விட்டது.  புத்தகம் விற்பதில்லை என்று நான் அடிக்கடி முணுமுணுப்பதால் புத்தகம் கடுப்பாகி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு விட்டதாக தோன்றுகிறது.  இதில் எந்த சம்பவத்திற்கு எந்தத் தொடர்பு ஏற்படுத்தி விட முடியாது.  ஆனால் நான் சும்மா தொடர்பு பண்ணி பார்க்கிறேன். உண்மையில் நான் சொல்ல வருவது இதுதான். கனவுக்கும் நிஜமான சம்பவத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறதா?  முன்பே இதுமாதிரி நடக்க வாயப்புண்டு என்று சொல்ல முடியுமா?
வெள்ளத்தைப் பற்றி இதுவரை 3 கட்டுரைகளும் ஆறு கவிதைகளும் எழுதி விட்டேன்.   இதைப் பாராட்டி எனக்கு ஒரு இலக்கிய அமைப்பு பரிசு அளிக்க உள்ளது.  இது கனவுமல்ல, நிஜமுமில்லை சும்மா கற்பனை.  எந்த இலக்கிய அமைப்பு அப்படி அல்ல. 
 மொத்தத்தில் என்னால் மறக்க முடியாது ஆண்டு 2015தான்.
 

எனக்கு பிடித்த படங்கள்

பிரபு மயிலாடுதுறை
சில ஆண்டுகளுக்கு முன்னால் தி ஹிண்டு ஃப்ரைடே ரிவியூவில் முக்கியமான தமிழ் இயக்குனர்கள் தங்களுக்குப் பிடித்த தமிழ் படங்களின் பட்டியலை அளித்திருந்தனர்.அதை ஒரு நிமித்தமாகக் கொண்டு நான் எனக்குப் பிடித்த படங்களைப் பட்டியலிட்டுப் பார்த்தேன்.அப்பட்டியலை இங்கே அளிக்கிறேன்.இவை ரசிகனின் பட்டியலே.விமரிசகனின் பட்டியல் அல்ல!
1.தில்லானா மோகனாம்பாள்
ஒவ்வொரு பங்களிப்பாளரின் ஆகச் சிறந்த திறமை முற்றிலும் வெளிப்பட்ட மிக அபூர்வமான தருணம் இத்திரைப்படம் மூலம் தமிழுக்குக் கிடைத்தது என்பது என் எண்ணம்.உலக சினிமா இவ்வாறான தருணத்தையே சினிமாவாக வரையறுத்துக் கொள்கிறது.மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட திரைக்கதை, இயக்குனர் திரு.ஏ.பி.நாகராஜன் அவர்களின் சாதனை.அழகர் கோவில்,மதுரை,தஞ்சாவூர்,திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ஊர்களும் கதாமாந்தரைப் போன்றே முக்கியத்துவம் பெற்றிருப்பது தமிழில் புதுமையானது (அநேகமாக அவை அனைத்தும் ‘செட்’களே).சிவாஜி கணேசன்,பத்மினி,நாகேஷ் மற்றும் மனோரமா ஆகியோரின் ஆகச் சிறப்பான நடிப்புத் திறனுக்கான சான்று இப்படம்.நாதஸ்வரக் கலைஞராக சிவாஜியின் உடல்மொழி அசாத்தியமான ஒன்று.
2.சந்தியா ராகம்
கிராமத்திலிருந்து வந்த முதியவர் தன் வாழ்நாளின் எஞ்சிய பகுதியை சென்னையில் வாழ முற்படுவதின் கதை.நகரில் ’தண்ணீர்’ என்ற வஸ்து அரிதாக இருக்கிறது.ஒரு வாளித் தண்ணீரில் குளிப்பதை குளியலாக எண்ண மறுக்கிறார்.தன் பேத்தியுடன் ஓயாது உரையாடுகிறார்.நடைபாதைக் கடை வடையை அவளுக்கு வாங்கித் தருகிறார்.குழந்தைக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுகிறது.கிழவர் மேல் எல்லோருக்கும் வருத்தம்.அவரும் வருந்தி யாரிடமும் சொல்லாமல் முதியோர் இல்லத்துக்கு செல்கிறார்.காணாமல் போன பெரியவரைத் தேடும் காட்சி சிறப்பானது.சென்னை சாலையொன்றில்-பேருந்து இயங்கும்;தள்ளுவண்டி இயங்கும்;மோட்டார் வாகனம் ஓடும்;மிதிவண்டி ஓடும்;ஒலிப்பான் கேட்கும்-சட்டகத்திற்குள் இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு பணியில்-பூ விற்றவாறு,பழங்களை பேரம் பேசியவாறு,அலுவலகம் சென்றவாறு,பேருந்துக்கு காத்திருந்து- ஈடுபட்டிருப்பார்கள்.அந்நகருக்கு – அம்மக்களின் மனோபாவத்துக்கு அன்னியமாகிப் போன முதியவரைத் தேடும் காட்சி சிறப்பானது.
3.வீடு
ஐ.நா சபையால் வீடு மற்றும் வாழிடம் அற்றவர்களுக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்ட 1989ம் ஆண்டு வெளியான படம்.ஒரு நடுத்தர இந்தியக் குடும்பம் பழகியிருக்கும் தனது பாதையில் எதிர்கொள்ளும் குறுக்கீடுகளை அடையாளம் காட்டியவாறு செல்வது இப்படத்தின் பலம்.பேத்தியை நேசிப்பவனிடம் “துளசியை ஏமாற்றி விட மாட்டாயே” என கலங்குகிறார் பாகவதர்.பெண்ணை நல்ல இடத்தில் கட்டிக் கொடுப்பது ஒன்றே பெரிதாக இருக்கும் அவருக்கு காதல் ஒரு குறுக்கீடாக இருக்கிறது.அலுவலகத்தில் வீட்டுக் கடன் வழங்க மேலாளர் முறையற்று நடக்க முயல்வது அதிகாரவர்க்கத்தின் குறுக்கீடு.”கேவலம்…மொளகா கிலோ பதினாறு ரூபாய் விற்கிறது எனக் கூறும் அரசு அதிகாரி ஊழலின் குறுக்கீடு.
4.முதல் மரியாதை
முல்லையாற்றங்கரையில் அமைந்திருக்கும் கிராமம் ஒரு முக்கியமான கதாபாத்திரம்.மண வாழ்க்கையால் காயம்பட்டுப் போன பண்ணையாருக்கு இரு பிணைப்புகள் இருக்கின்றன.முதலாவது,அவர் பெறாத மகள் மீது கொள்ளும் பரிவு.இரண்டாவது தோணிக்காரியின் நேசம்.’முதல் மரியாதை’ பண்ணையாருக்கும் தோணிக்காரிக்குமான நேசமாகவே பெரும்பாலானோர் எண்ணுகின்றனர்.ஆனால் நான் அதனை பண்ணையாருக்கும் அவரது மகளுக்குமான உறவின் கதையாகவே பார்க்கிறேன்.தனது தாயின் கூற்று மூலம் தான் இதுநாள் வரை தான் தந்தையாகக் கொண்டிருந்தவர் தனது தந்தை இல்லை என அதிர்ச்சிகரமாக அறிய நேரிடும் போது கனத்த இதயத்துடன் அவரிடம் ஒரு வரத்தை யாசிக்க அனுமதி கோருகிறாள்.அவள் கேட்பதற்கு முன்னதாகவே,’’அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அதிலும் நீதான் எனக்கு மகள்.நான் தான் உன் தகப்பன்’’என்று கூறுகிறார் தந்தை.இவ்வளவு ஆழமான உணர்வெழுச்சி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவில் காணக் கிடைக்காதது என்பது என் எண்ணம்.
5.அலைபாயுதே
ஒரு பெண்ணை-பெண்ணின் உணர்வுகளை-அவளது மகிழ்ச்சிகளை-ஏக்கங்களை-துக்கங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் எனது மனச்சாய்வு எப்போதும் அலைபாயுதேவுக்கு உண்டு.வாழ்வின் சாம்பல் படராத இளம் பெண்ணின் வாழ்க்கைச் சித்திரம்.சக்தி கார்த்திக்கிடம்,’’எனக்கு இந்த உலகத்துல பத்து பேர் முக்கியமா இருப்பாங்களா…அதுல உன் கூட பேசணும்னா அவங்க கூட இருக்க முடியாது.அவங்க கூட இருக்கணும்னா உன் கூட பேசக் கூடாதுன்னா எப்படி’’ என கேட்கும் காட்சி இளம் தமிழ்ப்பெண்கள் அகத்தின் வெளிப்பாடு.
6.தில்லுமுல்லு
ஹாஸ்யத்துக்கான படம்.இப்படத்தின் ஒவ்வொரு வசனத்திலும் ஹாஸ்யம் மிளிறுகிறது.ஒவ்வொரு காட்சியிலும் ஹாஸ்யம் இருக்கிறது.கே.பாலசந்தர்,ரஜினிகாந்த் மற்றும் தேங்காய் சீனிவாசனைப் போன்றே இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர் வசனகர்த்தா விசு.
‘’அதிர்ச்சியா இருக்கா?’’
‘’இல்லை சார்!ஆச்சர்யமா இருக்கு.எப்படி சார் நீங்களும் உங்க வீட்டு தோட்டக்காரனும் ஒரே மாதிரி இருக்கீங்க?’’
7.மௌனராகம்
மணிரத்னம் மௌனராகத்தில் துவக்கிய ஒன்று அலை பாயுதேவில் பூர்த்தியானது.இப்படத்தின் டைட்டில் தமிழில் இல்லாத ஒன்று.
8.நாயகன்
தமிழ் வணிகத் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய படம்
9.தேவர் மகன்
தமிழ் திரைக்கதையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பையும் பெரும் பாய்ச்சலையும் நிகழ்த்திய படம்.கமர்ஷியல் சமரசங்கள்(சில பாடல்கள்) தவிர்க்கப்பட்டிருந்தால் முழுமை பெற்றிருக்கும்.
10.இருவர்
படத்தின் முதல் காட்சி:ஒரு குழந்தை தன் கண்களால் ஓடிக் கொண்டிருக்கும் ரெயில் வண்டியின் சன்னல் வழியே உலகைக் காண்கிறது.படத்தின் கடைசி காட்சி:அக்குழந்தை பால்யம் தாண்டி இளமையில் செயல்பட்டு முதுமையில் மரணிக்கிறது.அம்மரண ஊர்வலத்தை உலகமே காண்கிறது.
இவ்விரு காட்சிகளுக்கு இடைப்பட்ட சம்பவங்களே திரைக்கதை.
11.ஆடுகளம்
கடந்த பத்தாண்டுகளில் வெளியான படங்களில் மிக முக்கியமான படம்.சேவல் சண்டையை பின்புலமாக்கி மனித அகத்தின் ஒளியையும் இருளையும் துல்லியமாக சித்தரிப்பதில் இயக்குநர் பெற்ற வெற்றியே இப்படம்.
12.விஸ்வரூபம்
அமெரிக்காவையும் ஆஃப்கானிஸ்தானையும் கதைக்களமாகக் கொண்டு,துல்லியமான திரைக்கதை மற்றும் கூரிய வசனக்கள் மூலம் தீவிரவாதம் உலகலாவிய அளவில் உருவாக்கும் இடர்களைத் துணிச்சலாகப் பேசிய படம்.

ஞானக்கூத்தன் கவிதை வாசிக்கிறார்….


சமஸ்கிருதம்

ஞானக்கூத்தன் சமீபத்தில் எழுதிய கவிதையான சமஸ்கிருதம் என்ற கவிதையும் வாசிக்கிறார்.  கேட்கவும்

ஞானக்கூத்தன் பேட்டி அளிக்கிறார்.

இந்தத் தலைப்பில் இதுவரை மூன்று பேர்களை பேட்டி அளித்துள்ளேன்.  தற்போது நவீன விருட்சம் சார்பாக ஞானக்கூத்தன் பேட்டி வெளியாகிறது.  இதைப் பார்த்து உங்கள் கருத்துகளை நல்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

விஷ்ணுபுர விருதும் தேவதச்சனும்….

விஷ்ணுபுர விருதும் தேவதச்சனும்….
அழகியசிங்கர்
இந்த ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது தேவதச்சனுக்கு அளிக்கபபட்டிருக்கிறது.  கவிதை எழுதுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை தேவதேவன், ஞானக்கூத்தன், தேவதச்சன் என்று மூன்று முக்கிய கவிஞர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.  இந்த விருதில் இன்னும் ஒருவரும் இருக்கிறார்.  எழுத்து காலத்திலிருந்து எழுதிவரும் வைதீஸ்வரன்தான் அவர். 
 இது மாதிரி விருது வழங்குவதன் மூலம் படைப்பாளிகள் உற்சாகமடைவார்கள். பொதுவாக எந்த விருது வழங்கினாலும், அவருக்குக் கொடுத்தது சரியில்லை அல்லது சரி என்று விவாதம் நடக்கும்.  ஆனால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதில் அதுமாதிரி விவாதத்திற்கு வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.  
இந்த விருதை கொடுப்பது மட்டுமல்ல.  அந்த நிகழ்வை ஒரு கொண்டாட்டமாக இந்த விருது கொடுப்பவர்கள் மாற்றி விடுகிறார்கள்.  தற்செயலாக இந்த நிகழ்வைப் கோவையில் பார்க்க   ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தர்ப்பம் கிடைத்தது.  பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.  
ஜெயமோகன் பேசும்போது ஒன்றை குறிப்பிட்டார்.  ‘இந்த விருதை தேவதச்சன் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்,’ என்று. இப்படி சொல்வதற்குப் பெரிய மனது வேண்டும்.  இந்தக்  குழுவினருக்கு அது மாதிரி சொல்கிற தைரியம் இருக்கிறது.  தேவதச்சனுக்கு விருது வழங்கும்போது கிட்டத்தட்ட அந்த ஹால் முழுவதும் நிரம்பி விட்டது.  
அந்த மேடையில் பேசின அத்தனைப் பேர்களும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள்.  அவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் பேசினார்கள்.  அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அங்கு கூடியுள்ள கூட்டம் அமைதியாக இருந்தது.  எனக்கு லட்சுமி மணிவண்ணன் பேசியது ரொம்பப் பிடித்திருந்தது.  அவர் பேசிய விதமும் நன்றாக இருந்தது.  அவர் நம் முன் ஒரு கூட்டம இருக்கிறது.  அதற்காகப் பேசுகிறோம் என்றில்லாமல் அவருக்காக பேசுவதுபோல் பேசினார். முதலில் அவர் ஆரம்பிக்கிறபோது எங்கே தேவதச்சனைப் பற்றி பேசாமல் இருந்து விடுவாரோ என்று கூடத் தோன்றியது. அதேபோல் அவர் எங்கே பேச்சை முடிக்காமல் போய்விடுவாரோ என்று கூடத் தோன்றியது.  
தேவதச்சனைப் பற்றி பேசும்போது யுவன் உணர்ச்சி வசப்பட்டு விடுவார்.  மேடையில் அவர் பேசும்போது அப்படித்தான் இருந்தது.  நான் தேவதச்சனை யுவன் மூலமும் ஆனந்த் மூலமும் பேசிக் கேட்டிருக்கிறேன்.  இரண்டு முறை அவரை ஆனந்த்தைப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.   யுவன் ஒவ்வொரு முறையும் கோவில்பட்டியில் தேவதச்சனைப் பார்த்து பரவசப்பட்டு எங்களிடம் (ஆனந்திடமும் என்னிடமும்) பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.   அது மாதிரி பேச்சைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  இதெல்லாம் முன்பு.  
பொதுவாக தேவதச்சன் தன்னைப் பற்றி விளம்பரப் படுத்திக் கொள்ள மாட்டார்.  தன் கவிதைக்குக் கிடைத்த அங்கிகாரத்தைக் கூட பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்.  ஆனந்த் பையன் திருமணத்தின் போது அவரைப் பார்த்துக் கேட்டேன்.  அந்த சமயத்தில் அவருக்கு விளக்கு பரிசு கிடைத்திருந்தது.  உங்கள் கவிதைக்காக விளக்கு பரிசு கிடைத்திருக்கிறதே என்று.  தன் கவிதைக்காக இது மாதிரி பரிசு கிடைத்திருப்பது பெரிய விஷயமாக நினைத்துதான் அவர் பேசினார். அவர் பேசியதைக் கேட்கும் போது, நான் சாதாரண ஆள். ஏதோ கவிதைகள் எழுதுவேன்.  இந்த அங்கிகாரம் அதிகம்தான் என்பதுபோல்தான் பேசினார்.  எனக்கு அதைக் கேட்கும்போது ஆச்சரியமாகத்தான் இருந்தது.  நான் பேசியது அவ்வளவுதான்.  அதற்குள் தேவதச்சனை வேற யாரோ தேடி வந்து விட்டார்கள்.
குரு ஸ்தானத்தில் அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவரை வைத்திருக்கிறார்கள்.    அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலவிதங்களில் பிரபலமாகி விட்டார்கள்.  அவர்கள் பிரபலம் ஆகும்போது தேவதச்சனும் பிரபலம் ஆகாமல் இருக்க முடியாது.  அதுதான் நிகழ்ந்திருக்கிறது. புதியதாக எழுத வருபவர்கள் கூட தேவதச்சனை தேடிப் போகிறார்கள்.  இப்படி அபூர்வமான ரசிகர் கூட்டம் எந்த எழுத்தாளருக்கும் அதுவும் குறிப்பாக கவிஞருக்குக் கிடைக்காது.   யாரும் அவரைத் தேடி வராமல் இருந்தால்கூட அவர் பேசாமல்தான் இருப்பார்.  அதைப் பற்றி அவர் கவலைப் பட மாட்டார். 
அவர் கவிதைகளையும் ரொம்ப குறைவாகத்தான் எழுதி உள்ளார். அதை உடனடியாக பிரசுரம் செய்ய வேண்டுமென்று நினைக்கவும் மாட்டார். அவருடைய கவிதைப் புத்தகங்கள் பிரசுரமானது கூட மற்றவர்கள் முயற்சியாகத்தான் இருக்கும். யாராவது கவிதைத் தொகுதி கொண்டு வந்தால் தேவதச்சன் பெயரை அதில் தெரியப் படுத்தினால் அந்தத் தொகுதிக்கு ஒரு மதிப்பு கூடத்தான் செய்யும்.  
அவர் எதை எழுதினாலும் ஆயிரம் அர்த்தங்களைக் கொண்டதாக இருக்கும்.   
1988ல் நான் விருட்சம் ஆரம்பித்தபோது, தேவதச்சன் எனக்கு சில கவிதைகளை அனுப்பினார். கவிதை அனுப்பும்படி கேட்டுக் கொண்டதால்தான் அனுப்பினார். அதில் ஒரு கவிதை.  என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது.  அந்தக் கவிதையின் பெயர் : ஒரு நிமிஷம்.  இக் கவிதைவிருட்சம் 2வது இதழில் வெளிவந்தது. அதாவது அக்டோபர் – டிசம்பர் 1988ல்.
உயிர் பிரிவதற்கு
எப்போதும்
ஒரு நிமிடம்தான் இருக்கிறது

மகிழ்ச்சி துண்டிக்கப்பட்டு
துயரத்தில் சாய்வதற்கும்
எப்போதும் ஒரு நிமிஷம்தான் 
இருக்கிறது.

இருட்டு, பயம், திகைப்பு, இவற்றின்
இருண்ட சரிவில் உருள்வதற்கும்
எப்போதும் ஒரு நிமிஷம்தான்
இருக்கிறது.

இவ்வொரு 
நிமிஷத்தில் 
அண்டசராசரம் ஆடி
ஒரு நிமிஷம் 
வளர்ந்து விடுகிறது.
இந்தக் கவிதையை நான் படித்தபோது விருட்சம் இதழையே கொண்டு வரவேண்டாம் என்று அப்போது நினைத்தேன்.  ஏன் கவிதைகள் எல்லாம் இப்படி நம்மை தொந்தரவு செய்கிறது என்று என் சிந்தனை போயிற்று. அதன் பின் அவர் எனக்கு அனுப்பிய கவிதை டினோசரை நெருங்குவது எப்படி?  என்பது.  
விஷ்ணுபுரம் கூட்டம் முடிய இரவு 9 மணி ஆகிவிட்டது.  நான் தேவதச்சனை நேரிடையாகப் பார்த்து வாழ்த்துத் தெரிவிக்க நினைத்தேன்.   ஆனால் அவரைச் சுற்றி கூட்டமாக இருந்தது.  நான் அங்கு போய் அவரைப் பார்த்து வாழ்த்த முடியாது என்று திரும்பிப் போய்விட்டேன்.  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அவரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருந்தது.  அநதப் படத்தில் தேவதச்சன் பேசியது எனக்கு சரியாகப் புரியவில்லை.  அவர் குரல் சரியாக எடுபடாமல் இருந்ததுபோல் தோன்றியது.  நான் தூரத்தில் உட்கார்ந்திருந்ததால் அப்படித் தோன்றியிருக்கும்.  என் பக்கத்தில் அமர்ந்திருந்த சுப்ரபாரதி மணியனைக் கேட்டேன்.  அவரும் ஆமாம் என்றார்.  மேலும் üஅத்துவான வெளியின் கவிதைý என்ற தலைப்பில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார்கள்.  144பக்கங்கள் கொண்ட புத்தகம் அது.  தமிழில் இந்த அளவிற்கு ஒரு கவிஞரை கௌரவப்படுத்தியதை நினைக்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
 

சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம்


                     கலந்து உரையாடல்

பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியனந்தன்
                இவர்களுடன் சொல்வனம் ரவி சங்கரும்,
                அழகியசிங்கரும்

        இடம் :                  பனுவல் விற்பனை நிலையம்
                        112 திருவள்ளுவர் சாலை
                        திருவான்மியூர், சென்னை 600 041

        தேதி            02.01.2016 (சனிக்கிழமை)

        நேரம்           மாலை 5.30 மணிக்கு

                          பேசுவோர் குறிப்பு :

ஜெயந்தி சங்கர் : சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளில்
தன் ஆளுமையைப் பதித்தவர்.

சத்தியனந்தன் :  சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம்
என்று பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்

அனைவரும் வருக,

அன்புடன்
ரவி சங்கர் – அழகியசிங்கர்