பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……14

வித்தியாசமான மியாவ்

சுந்தர ராமசாமி

எனக்குத் தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது.
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்.
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்.
குழந்தைகள் அழுதன.
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்.
நான் பேசத் தொடங்கினேன்:
இந்தப் பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது மேலும்…

ஒரே நாளில்

“முறுக்கு மாமி வீட்டுக்குப் போகட்டுமா அம்மா?” என்று கேட்டான் கிரி.
ஸ்டவ்வையே வெறித்துப் பார்த்தவாறு அம்மா சமையலறையில் உட்கார்ந்திருந்தாள். அங்கே ஒரே மண்ணெண்ணை வாசனை.
“என்னமோ பண்ணு” என்று அவன் பக்கம் திரும்பாமலே சொன்னாள்.
கிரி குஷியாக வெளியே வந்தான். ஞாயிற்றுக்கிழமை. ஐந்தாம் வகுப்பு பரிட்சை முடிந்து விடுமுறை விட்டாயிற்று. முறுக்கு மாமி வீட்டில் லாரன்ஸ் அண்ணன் இருந்தால் ஊர் சுற்றப் போகலாம். அப்போதுதான் மழை பெய்து நின்றிருந்தது. வீட்டு வாசலில் சாத்தி வைத்திருந்த கற்பனை புல்லட் வண்டியை காலால் உதைத்தான். “டட்டடட்” என்று வாயால் சத்தம் எழுப்பி இரண்டு கைகளையும் ஹாண்டில் பாரைப் பிடித்துக்கொள்வதுபோல் முன் நீட்டி ஓடினான். ஏகப்பட்ட மழைக் குட்டைகள் இருந்த தெருவில் அவன் கவனத்துடன் புல்லட்டை வளைத்து வளைத்து ஓட்டவேண்டி வந்தது. தெரு ஓரமாய் சாக்கடைப் பள்ளத்தில் மழைநீர் ஓடும் சத்தம் கேட்டது. அந்தத் தண்ணீரில் நீளமான வேட்டியின் இரு நுனிகளையும் பிடித்து மீன்பிடி விளையாடிக் கொண்டிருந்த எதிர்வீட்டுக் குமாரும் மகேஷும் இவனைப் பார்த்து கத்தியதைப் பொருட்படுத்தாமல் ஓடினான்.

தெருமுக்கில் வாசன் குருக்கள் அப்போதுதான் பிள்ளையார் கோவில் சன்னதிக்குள் நுழைந்துக் கொண்டிருந்தார். சட்டென்று ப்ரேக் அடித்து கோவில் முன்னால் நின்றான். “மாமா நான் இன்னிக்கு குளிச்சாச்சு!” என்றான் ஆவலுடன்.

“குளிச்சா என்ன! விழுப்புப் படாம இருக்கணுமே” என்றார்.
“ப்ளீஸ் மாமா. குளிச்ச உடனே எது மேலையும் படாமல் புதுத்துணி போட்டுண்டு நேரே இங்கத்தான் வர்ரேன்.”
வாசன் அவனை மேலும் கீழும் பார்த்தார்.
“பொய் மட்டும் சொன்னியோ அப்புறம் என்ன ஆகும்னு எனக்குத் தெரியாது!” என்றார் கண்டிப்புடன். அவருடைய ஒரு கையில் நீர் நிரம்பிய செம்புக் குடம் இருந்தது. இன்னொரு கையில் குடலையில் பூக்கள். செம்பருத்தி, நந்தியாவட்டை.
‘இல்லை மாமா. மடியா வந்திருக்கேன்”

அவர் பதில்பேசாது சன்னதிக்குள் போனார். குறுகுறுப்புடன் பின் தொடர்ந்தான் கிரி. சன்னதியின் இருட்டாக இருந்து பிள்ளையார் எங்கே என்று தேடவேண்டி வந்தது. குளித்தபின் துடைத்துக்கொண்ட துண்டு விழுப்பா மடியா என்ற சந்தேகத்தை அவரிடம் கேட்கவேண்டாம் என்று தீர்மானித்துக்கொண்டான். பிள்ளையார் அவனுடைய விருப்பத்திற்குரியக் கடவுள் அல்லவா. ஒன்றிரண்டு பிழைகள் இருந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டாரா என்ன! என்னதான் இருந்தாலும் அவனுக்கு அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது.

அவன் கூட சன்னதிக்குள் வந்துவிட்டதைப் பார்த்து திகைப்பதுபோல நடித்தார் வாசன். அவன் மளுக்கென்று எழுந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு நின்றான்.

“சரி கையை அலம்பிண்டு சுவாமி மேலேயிருந்து பழையப் பூவையெல்லாம் எடுத்துப் போடு” என்றார்.

பிள்ளையாரைத் தொடும்போது கிரியின் கை நடுங்கிற்று. தன்னைக் கிள்ளிக்கொண்டு வலிக்கிறதா என்று பார்த்தான். நிஜமாகவே கிள்ளிய இடம் வலித்தது. தலையைத் திருப்பி சன்னதிக்கு வெளியில் ஒரு கணம் பார்த்தான். வெயில் வெள்ளையாய் கண் கூசியது. இதை மட்டும் பார்த்தால் குமார், மகேஷ், பாஸ்கர் எல்லோரும் வயிறெரிந்துப் போவார்கள். டேய் டேய் என்னையும் சேர்த்துக்கோ என்று கெஞ்சுவார்கள்.

பிள்ளையாரைத் தொட்ட விரல் ஷாக் அடித்தாற் போல இருந்தது. எத்தனை குளுமை. கிரியின் உடம்புக்குள் ஒரு புது சக்தி பாய்ந்தாற் போல இருந்தது. இனி அவனால் லாரன்ஸ் அண்ணனைப் போல பெரிய பெரிய உடற்பயிற்சிகளை எளிதாக செய்ய முடியும். குச்சிக் கத்தி சண்டையில் விவேக்கை எளிதாக வென்று விட முடியும்.

வாசன் குருக்கள் ஒல்லியாக இருந்தாலும் பிள்ளையாரைத் தினம் தொட்டுத் தொட்டு எத்தனை சக்தியை பெற்றிருப்பார்? யாராலும் அவரை சண்டையில் வென்று விட முடியாது.

எண்ணெய் மினுக்குடன் இருக்கும் பிள்ளையாருக்கு வாசன் குருக்களைப் போல அபிஷேகம் செய்யவேண்டும் என்று அவரிடம் கெஞ்சிக் கெஞ்சி கடைசியில் இன்று சித்தித்துவிட்டது. வாசன் குருக்கள் சொல்லும் காரியங்களை மிகுந்த கவனத்துடன் செய்தான். முதலில் பிள்ளையாருக்கு பால் குளியல். பிறகு தயிர். அப்புறம் எலுமிச்சை சாறு. கடைசியாக சந்தனக் காப்பு. வாசன் குருக்கள் அவனையே எல்லாமும் செய்யவிட்டார். அபிஷேகத் திரவியங்களை பிள்ளையார் உடம்பிலிருந்து வழித்தெடுப்பது கூட. பிள்ளையாரையுடைய தொப்பையிலும் தும்பிக்கையிலும் காலடியில் கிடக்கும் சுண்டெலி மீதும் கை பட்ட போது கிரிக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது. எல்லாம் குழம்பாக வழிந்து சன்னதிப் பீடத்தில் சேர்ந்து ஓடும்போது மூச்சை அடைக்கும் வாசனை வந்தது. தலையெல்லாம் கிறுகிறுத்தது. பூக்களை சார்த்தி விடடு கற்பூரம் காண்பித்த வாசன் குருக்கள் கிரியின் நெற்றியில் விபூதி இட்டுவிட்டார். இனிமேல் அவருக்கு வேலை ஒன்றுமில்லை. வரும் ஜனங்களுக்காகக் காத்திருக்கவேண்டும். இந்தப் புறநகர்ப் பகுதியில் காலையில் வருபவர்கள் அலுவலகம் போகும் அவசரத்தில் தூரத்திலிருந்தே ஒரு கும்பிடும் மனதுக்குள்ளேயே தோப்புக்கரணமும் போட்டுவிட்டு போய்விடுவார்கள். ஞாயிற்றுக் கிழமையென்றால் சாப்பாடுக்கடை முடித்த பிறகு தான் பெண்கள் வருவார்கள். அவர்களும் பக்கத்திலிருக்கும் துர்க்கை சன்னதிக்குதான் முக்கியத்துவம் தருவார்கள்.

“உனக்கு பள்ளிக்கூடம் இல்லியா?” என்று கேட்டார் வாசன் குருக்கள்.
“பரீட்சை முடிஞ்சு லீவு விட்டாச்சே மாமா,” என்றான் கிரி.
“சரி கழுதையை அவிழ்த்து விட்டாச்சா,” என்று சிரித்தார்.
“உன்னோட அடுத்தக் காரியம் என்ன?”
“முறுக்கு மாமி வீட்டுக்குப் போறேன்”
“யாரு முறுக்கு மாமி?”
“டெய்சின்னு இருக்காங்களே ஆண்டாள் தெருவில். அவங்கத்தான் இப்போ முறுக்கு செஞ்சு விக்கறாங்க!”
“அடக் கடவுளே! அவளையா முறுக்கு மாமின்னு சொல்லற” வாசன் குருக்கள் தலையில் அடித்துக்கொண்டார்.
“சரி அங்கே ஒரு பையன் இருக்கானே.. அவன் பேர் என்ன?”
“லாரன்ஸ் அண்ணா!”
“அவனுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்காமே..?”

கிரி விழித்தான். என்ன லாரன்ஸ் அண்ணனுக்கு பைத்தியமா?

“அட.. நேத்திக்கு நடுத்தெருல ட்ரெஸ் எல்லாத்தையும் அவித்துப் போட்டுண்டு போனான்னு சொல்றாளே!”

முந்தைய தினம் கூட லாரன்ஸ் அண்ணனுடன் விளையாடிக்கொண்டிருந்தானே. நேற்று ஒரு நாள்தான் கிரி அங்கே போகவில்லை.

“நம்பளவான்னா துர்க்கை சன்னதில வைச்சு வேப்பிலை அடிப்பா. அவாள்ளாம் சர்ச்சுக்குத் தானே போவா”

டெய்ஸி ஆண்ட்டி வீட்டு வாசலில் கிரி நின்றான். யாரையும் வெளியில் காணோம். வீட்டுக்கு முன்னால் எப்போதும் பயல்கள் கூடியிருப்பார்கள். இருந்தாலும் லாரன்ஸ் அண்ணனுக்கு கிரி மீது தனிப் பிரியம்தான். கிரியை மட்டும்தானே சர்ச்சுக்கெல்லாம் கூட்டிப் போயிருக்கிறான். முன் திண்ணையில் காரம்போர்டு ஆட்டம் நடக்கும். சில சமயம் செஸ். முன்வாசலுக்கும் காம்பவுண்டு கேட்டுக்கு இடையில் வண்டி விடும் இடத்தில் குறுக்குவாட்டில் கிரிக்கெட் கூட. டென்னிஸ் பந்துடன். லாரன்ஸ் அண்ணன் கமெண்டரி எல்லாம் சொல்லுவான். அவன் சொல்லும் தமிழ் கமெண்டரி வேடிக்கையாக இருக்கும். மட்டையாடி முட்டை போட்டார் என்றெல்லாம் சொல்லுவான். கபகபவென எல்லோரும் சிரிப்பார்கள். லாரன்ஸ் அண்ணன் வீட்டில் தான் முதன்முதலாக கேஸட் ப்ளேயரை கிரி பார்த்திருந்தான். பிலிப்ஸ் பெட்டி அது. நீளம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் இருக்கும் அதில் கேட்ட “வாடி என் கப்பக் கிழங்கே பாட்டு”
எத்தனை வேடிக்கையாயிருந்தது! கிரி வீட்டில் வெறும் ட்ரான்ஸிஸ்டர் ரேடியோதான். மர்ப்பி பிராண்ட். கொஞ்ச நாளைக்கு முன்னால் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று அப்பா அதையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்.

வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. கதவைத் தள்ளித் திறந்தான். உள்ளேயிருந்து எப்போதும் வரும் முறுக்கு வாசனை இப்போதும் வருவது ஆறுதலாக இருந்தது. டெய்ஸி ஆண்ட்டி முறுக்கு பண்ணி விற்கத் துவங்கியதெல்லாம் கொஞ்ச நாட்களாகத்தான்.

பாலித்தீன் பையில் அடைத்த முறுக்குகளை போட்டு பலசரக்குக் கடைகளுக்கு ஆண்ட்டி எடுத்துபோகும் கூடை கூட நேர்த்தியாக இருக்கும்.
கிரிக்கு இலவசமாக ஓன்று இரண்டு முறுக்குகளை, உடைந்துப்போன சில்லுகளைத் தருவாள். முறுக்கு நன்றாக நாக்கில் கரையும் வண்ணம் இருக்கும். அம்மாவிடமும் கிரி வாங்கச் சொல்லிக் கேட்டிருக்கிறான். அம்மாவோ பாட்டிக்காக மடி என்று வாங்கமாட்டேன் என்கிறாள். கிரியைக் கூட அவர்கள் வீட்டுக்கு அடிக்கடிப் போகாதே என்று திட்டுகிறாள்.

லாரன்ஸுடைய அப்பாவைக் கொஞ்ச நாட்களாகவே காணவில்லை. டெய்ஸி ஆண்ட்டி முறுக்கு விற்பது அதனால்தான் என்று பின் வீட்டு ராஜம் மாமி போகிற போக்கில் ஒரு நாள் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தாள். லாரன்ஸ் அண்ணனிடம் அதையெல்லாம் கேட்க கிரிக்கு பயமாகத்தான் இருந்தது.

டெய்ஸி ஆண்ட்டியை வீட்டுக்குள் காணோம். பின்பக்கம் தோட்ட்த்தில் இருக்கலாம். துணி உலர்த்திக்கொண்டிருப்பாள். நேரே லாரன்ஸ் அண்ணனைத் தேடிக்கொண்டு போனான் கிரி. டெய்ஸி ஆண்ட்டி வீட்டை அழகாக வைத்துக்கொண்டிருந்தாள். ஹாலில் பிரதானமாக இருக்கும் ஏசு ஒரு ஆட்டுக்குட்டியை அணைத்துக் கொண்டிருக்கும் படம் கிரிக்கு மிகவும் பிடிக்கும். அதற்கடியில் மெழுகுவர்த்திப் வடிவத்தில் சிறிய எலக்ட்ரிக் லைட் ஒன்று எப்போதும் எரிந்துக்கொண்டிருக்கும். மூலையில் மீன் தொட்டிக்குள் நீந்தும் தங்கக் கீற்றுகளாக மீன்கள்.

ஹாலையொட்டியிருக்கும் அறையில் சுவற்றில் சாய்ந்தவாறு இரும்புக் கட்டிலில் உட்கார்ந்திருந்தான் லாரன்ஸ் அண்ணன். கிரி வருவதையெல்லாம் பார்க்காதது போலவே நேர்க்கோட்டில் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். வெளியே ஒருவன் எதையோ உரக்க விற்றுக்கொண்டு போகும் சத்தம் மட்டும் கேட்டது.

லாரன்ஸ் அண்ணனின் தலை சுவரில் சாய்ந்திருந்தது. முகம் கருமையடித்து இருந்தது. எந்த அசைவுமின்றி இருந்தான். அண்ணா என்று கூப்பிடலாமா என்று தயங்கி நின்றான் கிரி.

குருக்கள் அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றாரே. பைத்தியமென்றால் சினிமாவில் காட்டும் பைத்தியம் போலவா? லாரன்ஸ் அண்ணனைப் பார்த்தால் அப்படியெல்லாம் இருக்கவில்லையே. ஒரு சிலையாக மாற்றிவிட்டாற்ப் போலத் தானே உட்கார்ந்திருக்கிறான்!
லாரன்ஸ் அண்ணனை நேற்று மட்டும் தான் கிரி பார்க்கவில்லை. முந்தா நாள் கூட கிரியை லாரன்ஸ் அண்ணன் வழக்கம் போல சாயந்திரமாக சர்ச்சுக்குக் கூட்டிப் போயிருந்தான். அவனுடன் சர்ச்சுக்குப் போவது கிரி வீட்டில் யாருக்கும் தெரியாது. பாட்டிக்கு மட்டும் தெரிந்தால் கிரியை வீட்டிலேயே சேர்க்க மாட்டாள். கிரிக்கு சர்ச் நிறைய பிடித்திருந்தது. அங்கே நடந்த ஒரு கல்யாணத்தைப் பார்க்க நேரிட்டது. அந்தப் பாதிரியார் தான் எவ்வளவு கம்பீரமாக இருந்தார்! பார்க்கப் பார்க்க அவனுக்கும் அது போல நீண்ட அங்கியணிந்து நிற்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டதே. பெஞ்சில் உட்கார்ந்துத் தொழும் பெண்கள் கண்னத்தில் நீர் வழிந்தது. அவர்கள் எல்லோருமே அற்புதமான ஆடைகளை அணிந்திருந்தார்கள். மிக அழகாக இருந்தார்கள். லாரன்ஸ் அண்ணன் கூட நேர்த்தியாக உடையணிந்துதானே போவான்.

சில நாட்கள் லாரன்ஸ் அண்ணனும் அவனும் மட்டும் தனியாக சர்ச்சுக்குப் போவார்கள். உயர்ந்த கூரைக்கடியில் வெளிச்சம் விழும் கலர் கண்ணாடி சன்னல் பக்கத்தில் நின்று தன்னை பாதிரியாராக கற்பனை செய்தபடி லாரன்ஸ் அண்ணன் தொழுவதைப் பார்த்துக்கொண்டிருப்பான். அவனுக்கும் அது மாதிரி செய்ய வேண்டும் என்று விருப்பம் தான். ஆனால் பயமாக இருந்தது. லாரன்ஸ் அண்ணன் எங்கே கிண்டல் செய்வானோ என்ற வெட்கம்.
லாரன்ஸ் அண்ணன் சர்ச்சுக்கு எதிரே உள்ள பூங்காவில் மேல் சட்டையை அவிழ்த்துவிட்டு உடற்பயிற்ச்சிக்கென போட்டிருக்கும் இரும்புக் கம்பிகளில் இரு கைகளை ஊன்றி ஊசலாடி மேலும் கீழும் ஏறி இறங்குவான். அவனுடைய தோள்களில் உருளும் தசைநார்களைப் பார்க்கப் பிரமிப்பாகவே இருக்கும். கிரியால் அந்தக் கம்பி ஒன்றில் குரங்குபோல ஊசலாட மட்டும் முடியும். லாரன்ஸ் அண்ணன் கிரியின் சேஷ்டைகளைப் பார்த்துச் சிரிக்கும்போது கரிய முகத்தில் வெள்ளைப் பல்வரிசை பளிச்சென்று மின்னும்.

அப்புறம் குலாரன்ஸ் அண்ணனின் நண்பர்கள் அங்கே வந்து உடற்பயிற்சி செய்வார்கள். சாயங்காலம் பொழுது சாயும்போது எல்லோரும் கும்பலாக பக்கத்தில் டீக்கடைக்குப் போய் டீயும் முட்டை போண்டாவும் சாப்பிடுவார்கள். முட்டை சாப்பிடமாட்டியா என்று கிண்டலடிப்பான் லாரன்ஸ் அண்ணன். கிரி முறுக்கோ கடலைமிட்டாயும் தின்பான். கிறிஸ்த்துவப் பொண்ணு உன்னைத் தள்ளிக்கிட்டுப் போப்போறா அப்ப நீ சிக்கனும் மட்டனும் தான் சாப்பிடணும் என்று லாரன்ஸின் நண்பர்கள் கிரியை கேலி செய்வார்கள். கிரிக்கு உள்ளூர பெருமையாகக்கூட இருக்கும். டெய்ஸி ஆண்ட்டியும் சில சமயம் கிரியை கேலி பண்ணுவாள் நீ பெரியவனாகி யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போற என்று.

லாரன்ஸ் அண்ணன் கொஞ்ச நாள் வேலைப் பார்த்துவந்தான். கார் டிரைவர் வேலை. என்ன காரணமோ திடீரென்று வேலையை விட்டுவிட்டான். டெய்ஸி ஆண்ட்டி அப்போதெல்லாம் கடுகடுவென்று இருந்தாள். லாரன்ஸ் அண்ணனும் அவளைப் பார்த்துக் கத்தியிருக்கிறான். கிரி முன்னாலேயே. டெய்ஸி ஆண்ட்டி கர்த்தரே என்று கையில் ஜப மணிகளை உருட்டித் தொழத் தொடங்கிவிடுவாள்.

டெய்ஸி ஆண்ட்டி தான் ஈரக் கையுடன் பின்னாலிருந்து வந்தாள். அவள் முகத்தைப் பார்க்க வருத்தமாகத் தான் இருந்தது. கிரி கிட்டே வந்து குனிந்து கிசுகிசுப்பாகக் கூறினாள்.
”போய் பேசு..!”
லாரன்ஸ் அண்ணனோ கொஞ்சமும் அசைவில்லாமல்தான் இருந்தான்.
டெய்ஸி ஆண்ட்டியிடம் எவ்வளவோ கேட்கவிருந்தது கிரிக்கு. நாக்கு ஒட்டிக்கொண்டு அப்படியே நின்றான். அவன் கண்களில் இருந்த திகைப்பைப் பார்த்து டெய்ஸி ஆண்ட்டி பெருமூச்சுவிட்டாள்.

லாரன்ஸிடம் போய் “ராஜா, கிரி வந்திருக்கான் பாருப்பா..” என்றாள். அவள் அழுகிறாளோ என்று சந்தேகமாக இருந்தது கிரிக்கு.

லாரன்ஸ் திரும்பி இருவரையும் பார்த்தான். ஆனால் அவன் முகத்தைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

வாசலில் இருந்து ‘கிரி’ என்று அம்மாவின் குரல் கேட்டது. கிரி வாசலுக்கு ஓடி வந்தான். அம்மாதான் வந்திருந்தாள். அடிக்குரலில் “வாடா முதல்ல” என்று அவனை இழுத்தாள். கிரி பேசாமல் அவள் கூட போனான்.

பிள்ளையார் கோவில் அருகே அம்மாவைக் கேட்டான்.

“லாரன்ஸ் அண்ணனுக்கு என்னம்மா ஆயிடுத்து?”

அம்மா துர்க்கை சன்னதியில் குங்குமம் இட்டுக்கொண்டாள். பதில் பேசாது கையைக் கூப்பிக்கொண்டாள். கண்கள் மூடிய அம்மாவின் முகத்தைப் பார்க்கக் கூட அவனுக்குக் கஷ்டமாக இருந்தது.
@@@
கிரி பாயில் புரண்டு புரண்டு படுத்தான். அவன் முதுகுக்கடியில் எதோ உறுத்துவது போலிருந்தது. கழுத்துக்கடியில் வியர்த்தது.பக்கத்தில் சுருண்டிருந்த ராஜூ தூக்கத்தில் திடிரென தூக்கத்திலேயே என்னவோ உளறினான். எண்ணை சீக்குப் பிடித்திருந்த தலையணையைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. ராஜு எப்போதும் கிரியை சுற்றி சுற்றி வருகிறான். பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது புத்தகப்பையை தூக்கி வரமாட்டேன் என்று பாதி வழியில் தரையில் போட்டுவிட்டு அழுவான். கிரிதான் அதையும் தூக்கிவரவேண்டும். அம்மா சதா இறுக்கமாகவே இருக்கிறாள். அப்பாவிற்கு எப்பொழுதும் தலைவலி வந்துவிடுகிறது. பெரியவர்கள் தாங்களும் கஷ்டப்பட்டுக் கொண்டு குழந்தைகளையும் கஷ்டப்படுத்துவது ஏன் என்று கிரிக்கு புரியவில்லை. தங்கள் கஷ்டங்களையே அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள்.. அப்பா ஒற்றை வெற்றிலையை நெற்றியில் ஓட்டிக்கொண்டு இருட்டறையில் ஈசிச்சேரில் படுத்துக்கொள்வார். அம்மா சமையலறையில் சாதப் பாத்திரங்களை உருட்டுவாள் பாத்திரங்கள் ஒவ்வொன்றாக குறைந்துக்கொண்டே வருவது அவளுக்கு மிகவும் துன்பத்தை அளிக்கிறது. ஒவ்வொரு வாரமும் மிகுந்த சண்டைக்குப் பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போகிறார் அப்பா. திரும்பி வரும்பொழுது வெறும் கையுடனும் வசையுடனும் தான் வருகிறார்.

கூடத்திலிருந்த கடிகாரம் பதினொன்றைக் காட்டியது. அப்பா இன்னமும் வரவில்லை. அம்மா இன்னமும் வாசலில்தான் நின்றுக்கொண்டிருக்கிறாள். வெறும் நிழலாக தெரிந்தாள். ஞாயிற்றுக்கிழமையில் அப்பா இவ்வளவு நேரம் எங்கே இருப்பார் என்று புரியவில்லை. அவன் பார்க்காத பொழுது எல்லோரும் என்ன செய்கிறார்கள்? அம்மா சமையலறையில் என்ன செய்கிறாள் எப்போதும்? இப்போது லாரன்ஸ் அண்ணன் என்ன செய்துகொண்டிருப்பான்? வெற்றுப் பார்வையுடன் கட்டிலில் கிடப்பானோ?

எவ்வளவு நேரம்தான் அம்மா வெளியில் காத்துக்கொண்டிருப்பாள்? இரவு முழுவதுமா? ஒருவேளை அப்பா வராதுபோனால்? அங்கேயே நின்றுகொண்டிருப்பாளா? கிரி வெளியே போனான். அம்மா அவனைப் பார்த்தாள். ஒன்றும் கேட்கவில்லை. அவன் ராஜுவைப் போல சிறியவனாக இருந்தால்அழுகையுடன் அவளைப் போய் அணைத்துக்கொள்ள முடியும். இன்னும் பெரியவனாக இருந்தால் அவனால் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியும்.

‘அம்மா..’ என்றான்.
‘உம்..’
‘அம்மா’ என்று மீண்டும் கூப்பிட்டான்.
‘இந்த மனுஷன் எப்போ வருவார்னு தெரிலை. எங்கே போய் தொலைஞ்சாரோ!’ அம்மா பொதுவாக அலுத்துக்கொண்டாள். கிரியின் முகத்தை பார்க்காமல். அப்பா வந்தால் அம்மா அவரை எந்த கேள்வியும் கேட்க மாட்டாள்.

கிரியும் அவள் பக்கத்தில் நின்று அவள் பார்க்கும் திசையில் சிறிது நேரம் பார்த்தான். அவன் முழங்காலில் கொசு ஒன்று கடித்தது. தெருவில் தூரத்தில் மின்விளக்கு அவ்வப்போது அணைந்து அணைந்து எரிந்தது.
‘கண்ணா.. நீ போய் ஸ்டேஷன் வரை பார்த்துவிட்டு வரியா.. நானே போவேன் ஆனா ராஜு எழுந்து அழுதானா?..’

கிரி பதில் சொல்லாது நின்று தெருவையே பார்த்தான். தினம் ராத்திரி தள்ளு வண்டியில் வறுக்கும் வேர்க்கடலையை விற்றுப் போகும் ஆளும் அவர்கள் தெருவை எப்பொழுதோ கடந்து போய்விட்டான்.

‘சரி அம்மா’ என்று கிளம்பினான்.
‘ஜாக்கிரதையா போ. டார்ச்சு தரட்டுமா?’

அம்மா கேட்டதற்கு பதில் சொல்லாது போனான்.

சிறிது தூரம் போன பிறகு தான் காலில் செருப்பில்லை என்பது ஞாபகம் வந்தது. அம்மாவும் அதைக் கவனித்திருக்கவில்லை. காலில் கற்களும் வேறு எதோவும் குத்தத் துவங்கின. பின்னால் திரும்பி பார்த்தான். அம்மா மங்கலாகத் தெரிந்தாள். இடது பக்கம் நடந்தான். வாடகை சைக்கிள் கடை மூடியிருந்தது. வாசலில் பெஞ்சில் கடை முதலாளி ஆறுமுகம் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான். டீக்கடையில் பாய்லரை அலம்பிக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன். கடைவாசலில் இருந்து வழிந்தோடும் நீர்அரிக்கன் விளக்கொளியில் ரிப்பன் போல பளபளத்தது. அந்தப் பையன் எப்போது தூங்குவான்? அந்தப் பையனின் அம்மாவும் அவன் வருவதற்காக காத்திருப்பாளா?

தெருவைக் கடந்ததும் மைதானம் வந்தது. மைதானத்தின் பக்கத்தை ஒட்டிப்போகும் தெரு வழியாக செல்லுவது சுற்றுவழி. மைதானத்தை வெட்டி குறுக்காகப் போனால் ஆட்டுத்தொட்டியும் ஆட்டுத்தொட்டியின் பக்கத்தில் சர்ச்சும் வரும். அதைத் தாண்டினால் ரயிலடியைத் தொடும் பஜாருக்குள் நுழைந்துவிடலாம்.

இந்த மைதானம் வழிதானே லாரன்ஸ் அண்ணன் கிரியை சர்ச்சுக்குக் கூட்டிப் போவான். எத்தனை முறை அவனுடன் போயாகிவிட்டது. இனி லாரன்ஸ் அண்ணனால் சர்ச்சுக்கு எல்லாம் போக முடியுமா? அந்தக் கட்டிலிலே கட்டிப்போட்டது போலக் கிடக்கிறானே!

மைதானம் இருட்டு வெளியாக கிடந்தது. தன்னிச்சையாக மைதானத்தில் நுழைந்து நடந்தான். இங்கேதான் எல்லோரும் கிரிக்கெட், பாட்மிண்டன் விளையாடுவார்கள். எதுவோ காலடியில் நழுவியது. பாம்பா..பூரானா. கிரி சட்டென நடுங்கி ஓடினான். ஓட ஓட மைதானத்தின் இருள் கூடிக்கொண்டே வந்தது. எங்கோ ஒரு நாய் ஊளையிட்டது. ஆளற்ற மைதானம் இரவில் எத்தனை பயத்தை உருவாக்குகிறது. கிரிக்கு போகும் திசை குறித்து சந்தேகம் வந்தது. அவன் தொலைந்துப் போனால் அம்மா இரண்டு பேருக்காகவும் வீட்டில் காத்திருக்க வேண்டும்.

அம்மா இவன் மீது நம்பிக்கை வைத்து அனுப்பியிருக்கிறாள். ரெயிலடி காலியாகத் தான் கிடக்கும். பதினொரு மணிக்கு மேல் எந்த ரயில் வரப்போகிறது? அம்மாவிடம் அவனால் எப்படி சொல்ல முடியும்?

இன்று இரவு அவர் வரவில்லையென்றால் அவர்கள் மூன்று பேரும் தாத்தா வீட்டுக்கு போகவேண்டியதுதான். விடுமுறை நாட்களில் பாண்டிச்சேரிக்குப் போய் தாத்தா வீட்டில் இருந்தபொழுதெல்லாம் எத்தனை சந்தோஷமாக பொழுது கழிந்திருக்கிறது. ஆனால் அப்பா வந்தாலும் வராவிட்டாலும் அம்மா நிம்மதியற்றுத் தான் இருப்பாள். ராஜுவின் அழுகையும் குறையாது. பாதத்தில் ஈரமாய் எதுவோ ஒட்டி அறுவெறுப்பாயிருந்தது. அதைக் கையால் தொட்டுப் என்னவென்றுப் பார்க்கக் கூசி காலை தரையில் அழுத்தித் தேய்த்து நடந்தான். இப்போது புழுதி ஓட்டிக்கொண்டது.

ஆட்டுத்தொட்டியைக் கடந்தவுடன் சர்ச் பக்கத்தில் முளைத்தது. அவன் இதுவரை தனியாக உள்ளே போனதில்லை. எப்போதும் கூடவே லாரன்ஸ் அண்ணன் இருந்திருக்கிறான். லாரன்ஸ் மண்டியிட்டுத் தொழுவதை எத்தனை முறை பார்த்திருக்கிறான்.

சர்ச் கதவு ஒரு தள்ளலில் முனகித் திறந்தது. உள்ளே மூலையிலிருந்து வெளிச்சம் துளிப்போல இருந்தது. எப்போதும் அணையாத மெழுகுவர்த்தியிலிருந்துதான் அந்த வெளிச்சம் வந்தது. மெழுகுவர்த்தியின் துடிக்கும் ஒளியால் நீளமான நிழல்கள் அலைந்தன. உள்ளே இருப்பதை அவன் பார்க்கவேண்டுமா? அவனுக்குத் தெரியாதா? மனதுக்குள் சர்ச்சின் ஒவ்வொரு மூலையும் அவனுக்குத் தெளிவாக தெரிகிறதே! உயரமான கூரைக்குக் கீழே மேடை மீது மேரி மாதாவும் குழந்தை ஏசுவும் சிலையாக. பக்கத்து சுவரில் சிலுவையும் ஏசுவும் ஓவியமாய். கோடியில் பெரிய மீன் தொட்டி போல கண்ணாடி பெட்டிக்குள் படுத்திருக்கும் ஏசுவின் பொம்மை.

ஏசுவின் முகத்திலும் மேரி மாதாவின் முகத்திலும் ஏன் இத்தனை வருத்தக் களை என்று முதன்முறையாக யோசித்தான். சர்ச்சுக்குள் மண்டியிட்டுத் தொழும் லாரன்ஸ் அண்ணனின் முகத்திலும் அதே துயரக் களைதானே! டெய்ஸி ஆண்ட்டி முகத்தில் கூட. ஏன் இருட்டில் நின்ற அம்மாவின் முகத்திலும் அதுதான் இருந்திருக்க வேண்டும்.

இன்று காலை பிள்ளையாரைப் பாலால் குளிப்பாட்டும் பொழுது சன்னதியில் வந்த வாசனை மீண்டும் வருவது போல் இருந்தது. ஏசுவிற்கும் அபிஷேகம் எல்லாம் செய்வார்களா என்ன? பிள்ளையார் மேல் வழிந்த பால் ஊடாக அவருடைய கருத்த உருவம் பளபளவென மின்னியிருந்தது. பிள்ளையாரின் உடலைத் தொடும்போது கை சில்லென்று இருந்தது. பிள்ளையாரைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளுக்குள் தோன்றும் முறுவல் ஆனந்தம் எல்லாவற்றுக்கும் நேர் எதிராய் ஏசுவையும் மேரியையும் பார்க்கப் பார்க்க உள்ளுக்குள் குமுறல் ஏன் எழுகிறது?

லாரன்ஸ் அண்ணனின் கண்களும் இன்று காலை ஏசுவின் கண்களைப் போல இப்படித்தானே எங்கேயோ நிலைத்திருந்தன. கிரி ஒருக்களித்துத் திறந்தக் கதவை சட்டென மூடினான். அடிவயிற்றில் புதிதாகத் துடிக்க ஆரம்பித்த பயத்துடன் படிகளில் சரசரவென இறங்கி இருட்டுக்குள் ஓடினான்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் 13 ……

சுகுமாரன்

பூனை…

மனிதர்கள் தவிரமற்ற பிராணிகளுடன்பழக்கமில்லை எனக்கு
எனினும்
உள்ளங்கைச் சூடுபோலமாறாத வெதுவெதுப்புள்ளபூனைகளின் சகவாசம்சமீப காலமாய்ப் பழக்கமாச்சு
மயிலிறகை அடை வைத்த பருவத்தில்கால் குலுக்கக் கை நீட்டிவிரல் கிழித்த பூனையால்’மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்
இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்வடுவாக மிஞ்சிய இப்போதுபூனைப்பயம் பொய்த்துப் போச்சு

வீடு மாற்றியபோது புரிந்தது -நன்றியின் சொரூபம்நாய்களல்ல பூனைகள்நாய்கள்

மாநிதரைச் சார்ந்தவைசுதந்திரமற்றவை
எப்போதோசிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவைஇன்னும் உறிஞ்சியபடிகாலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது
பூனைகள்வீடுகளைச் சார்ந்தவைசுதந்திரமானவை
நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவுபூனையின் பார்வையில் நட்பின் கர்வம்
உலர்ந்த துணியில் தெறித்தசொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்பூனைகளுடன் இப்போதுபகையில்லை எனக்கு உடல் சுத்தம்சூழ்நிலைப் பராமரிப்புரசனையுள்ள திருட்டுகாதல்காலக் கதறல்பொது இடங்களில் நாசூக்கு – என்றுபூனைகளைப் புகழக் காரணங்கள் பலப்பல

எனினும்என்னைக் கவரக்காரணங்கள் இரண்டு
ஒன்று:எனக்குத் கடவுளுக்கும்வாகனமாய்ப் பூனை இல்லை

இரண்டு:பூனை கண் மூடினால்இருண்டுவிடும் உலகம்

நானும்கண்மூடுகிறேன் “மியாவ்”

o

மீண்டும் வாசிக்கிறேன் 2

மலையோ மனிதன் வார்த்த………

எஸ்.வைத்தியநாதன்

மலையோ

மனிதன்

வார்த்த

கட்டிடமோ –

எங்கும்

நிறைந்து

இருக்கும்

வெளி.

உயர –

அழகும்கூட –

எங்கும்

விரிந்தேன் –

வெளியோடு

சேர.

சேர்ந்தேன் –

எங்கும்

நிறைந்தேன்.

மலையோ

வார்த்த

கட்டிடமோ –

எங்கும்

நிறைந்து

இருக்கும்

வெளி.

வாக்காளர் பட்டியலில் என் பெயரும் இல்லை, கமலஹாசன் பெயரும் இல்லை…

நான் இந்த முறை ஓட்டுப் போடலாமென்றிருந்தேன். யாருக்கு என்பதிலும் தீர்மானமாக இருந்தேன். என் பெயர் பட்டியலில் இல்லை என்பது இன்று 4 மணிக்குத்தான் தெரிந்தது. என் குடும்பத்தில் அப்பாவிற்கு (87 வயது), மனைவிக்கு, என் புதல்வனுக்கு, மாமியாருக்கு என்று எல்லோருக்கும் ஓட்டுப்போட பெயர்கள் வாக்காளர் பட்டியில் இருந்தன. ஆனால் என் பெயர் மாத்திரம் இல்லை. ஆனால் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. இதற்கு முன் பல முறைகள் நான் ஓட்டுப் போட்டிருக்கிறேன். காலையில் தினத்தந்தி பேப்பரைப் படித்தப்பின்தான் தெரிந்தது கமலஹாசன் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது. எனக்கு இது ரொம்ப ஆச்சரியத்தைத் தந்தது. நான் சாதாரண நபர். ஆனால் கமலஹாசன் உலகம் புகழும் நடிகர். ஆனால் அவர் தன்னை சாதாரணன், பாமரன் என்று குறிப்பிட்டுள்ளார். ஓட்டு போடுவதற்காக ஐதாரபாத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வந்திருக்கிறார். இதனால் அவருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டம். கமலஹாசனும் என் வயதை ஒத்தவர்தான். ஆனால் சிறந்த நடிகர். நடித்தே புகழ் பெற்றவர். அவருக்கு பிறந்தநாள் கொண்டாட என்றெல்லாம் ரசிகர் மன்றம் உண்டு. அவர் பெயர் எப்படி வாக்காளர் பட்டியலில் இல்லாமல் போய்விட்டது. தேர்தல் ஊழியர்கள் எதற்காக அவரைத் தேடி வீட்டிற்கு வர வேண்டும். கமலஹாசன் பெயர் பத்திரிகைகளில் வந்துகொண்டிருக்கிறது. அவர் படங்கள் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்டவரை வீட்டில் இருக்கின்றாரா என்று ஏன் தேர்தல் ஊழியர்கள் போய்ப் பார்க்க வேண்டும்.உண்மையில் கமலஹாசன் போன்ற ஒரு நடிகரை வீட்டில் போய்ப் பார்ப்பது என்பது சுலபமான விஷயமுமில்லை. அவர் யாரைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறாரோ அவர்கள் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் சுலபமாக அவரைப் போய் பார்த்துவிட முடியாது. என் இலக்கிய நண்பர் ஒருவர் கமலஹாசனைப் பார்க்க போய்விட்டு, பார்க்க முடியாமல் வெறுத்துப் போய்விட்டார். என்னிடம் இதைச் சொல்லி குமைந்தபோது, ‘நீங்கள் ஏன் அவரைப் போய்ப் பார்க்கப் போகிறீர்?’ என்றேன். அவரைப் போய்ப் பார்த்து அவர் மூலம் சினிமாவிற்குள் பாட்டு எழுத நுழைந்து விடலாமென்று அவர் நினைத்திருப்பார். இப்படித்தான் கவிதை எழுதும் என் நண்பர்கள் பலர் அவஸ்தைப் படுவதை எண்ணி வருத்தமாக இருக்கிறது. எல்லோருக்கும் எல்லா வெற்றியும் கிடைத்துவிடாது. கவிதை எழுதுவதில் வெற்றி, சினிமா பாடல்கள் எழுதுவதில் வெற்றி என்றெல்லாம் கிடைத்து விடாது. தேர்தல் ஊழியர்கள் கமலஹாசனை அவர் வீடு தேடி வந்து, கமலஹாசனைப் பார்க்காமல் போனதால் வாக்காளர் பட்டியலில் பெயரை எடுத்திருப்பார்கள். என் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அதற்குக் காரணம் நான் காலையில் 7.30 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் திரும்பவும் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வர இரவு 8 மணி ஆகிவிடும். என்னை தேர்தல் ஊழியர்கள் பார்க்க வாய்ப்பே இல்லை. மேலும் நான் முன்பு இருந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்குக் குடிப்போய்விட்டதால், முன்பு இருந்த வீட்டில் உள்ளவர்கள், ‘நான் இல்லை’ என்று சொல்லியிருப்பார்கள். உண்மையில் தேர்தல் ஊழியர்கள் பாடு திண்டாட்டம். எப்படி என் குடும்பத்தில் மற்றவர்கள் பெயர்கள் தப்பித்தது என்பது தெரியவில்லை. என் அப்பா பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் ஏன்எனில் அவர் வீட்டில்தான் சதாசர்வகாலமும் இருக்கக் கூடியவர். வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் தப்பித்து சேர்ந்தது என் மனைவியின் பெயரும், புதல்வனின் பெயரும்தான்.

சரி, ஓட்டுப் போடவில்லை என்பதில் வருத்தமா? அதெல்லாம் ஒன்றுமில்லை. கமலஹாசன் மாதிரி நான் ஒருநாளைக்கு 10 லட்சம் இழக்கவில்லை. உண்மையில் எனக்கு சந்தோஷம் தரக்கூடிய நாள் இந்தத் தேர்தல் தினம்தான். தேர்தல் தினத்தன்று அலுவலகம் விடுமுறை விட்டதால், அப்பாடா என்றிருந்தது. ஞாயிற்றுக்கிழமையைத் தவிர extra லீவ். வீட்டில் எல்லோரிடனும் ஒருநாள் முழுவதும் இருந்தேன். காலை 7.30 மணியிலிருந்து அவசரம் அவசரமாக அலுவலகம் ஓடவில்லை. நிம்மதியாக இருந்தேன். காலையில் நிதானமாக எழுந்து சலூன் போய் தலை முடித் திருத்தி, கம்ப்யூட்டரில் (கணினி என்று சொல்ல தோன்றவில்லை) அமர்ந்து 160 பக்கம் நவீன விருட்சம் தயாரித்துக்கொண்டிருந்தேன். காலையில் ஒரு போன் வந்தது. என் எழுத்தாள நண்பர். ‘என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை’ என்றார். ‘என் பெயரும் இல்லை,’ என்றேன். மாலையில் சேலத்திலிருந்து இன்னொரு இலக்கிய நண்பரிடமிருந்து போன் வந்தது. ‘என் குடும்பப் பெயர்களே வாக்காளப் பட்டியலில் இல்லை,’ என்றார். ‘மகிழ்ச்சி’ என்றேன்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……

12

பூனைகள்

அழகியசிங்கர்

மியாவ்வென்று ஸ்நேகமாய்க் கத்தாமல்

குட்டிகளைப் பெற்றுக்கொண்ட பூனையொன்று

என் வீட்டில் அதிகம் உபயோகப்படுத்த முடியாத அறையொன்றில்

போய்க் குடியிருக்க அனுமதி கேட்கத் தவற

குட்டிகளோ தாய்ப் பூனையுடன்

சாமர்த்தியமாய்ச் சேர்ந்தடித்தன லூட்டி

ஆளைக் கண்டால் பதுங்கும் பாவனை

போனால் போகிறதென்று

ஓட்டைக்கொட்டாங் குச்சியில் பாலை வைத்தால்

நம்மெதிரில் குடிக்க வராமல்

பதுங்கிப் பதுங்கி

ஆளில்லா நேரமாய்த் தொட்டு

கவிழ்க்கும் அவசரமாய்

முகமெல்லாம் பால் துடிக்கும்

இரவில் பூனைகளின் புணர்ச்சியின் சத்தம்

குழந்தையின் அழுகையாய்க் காதிலறையும்

கேட்டுத் தூக்கி வாரிப்போடும் தேகம்

என்றோ ஒருநாள் நடந்தது

குட்டிகளுடன் தாய்ப் பூனை வெளியேற்றம்

வெள்ளை நிறத்தில் பூனையொன்று

இன்னொரு நாள் வரக்கண்டேன்

படுக்கை அறையில் சம்சாரக் கட்டிலில்

பகல் பொழுதொன்றில்

சொகுசாய்ப் புரளும் காட்சியைக் கண்டு

பதறிப்போனேன்.

பார்ப்பதற்குப் பிடிக்காத

குண்டுப் பூனையொன்று

மாமிசம் விரும்பாத என் வீட்டில்

மீன்களைக் கடித்துத் துப்ப

அண்டை வீட்டாரின்

தேவை இல்லாத மனவிரிசல்களுடன்

நாற்றம் குடலைப் புடுங்கியது.

அட்டகாசம் பண்ணும் பூனைகளே

போய் வாருங்களென்று மிரட்ட

எடுத்தேன் கையில் கிடைத்ததை

அவை பல தெருக்கள்

தாண்டி ஓடட்டுமென்று

பின்னற்தூக்கு




சிறுகதை

ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடியவேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.

செல்விக்கு நீண்ட பின்னல். முழங்கால் வரை நீண்ட பின்னல். எப்பொழுதும் பின்னிவிட்டு அதன் நுனியில் கறுப்பு றப்பர்பேண்டால் முடிச்சுப்போட்டு விட்டிருப்பாள். மருத்துவத்தாதிப் பயிற்சிக்கென வந்திருந்த பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ஒரு பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அந்த மழைக்காலக் காலைப்பொழுதில் அவள் செய்திகொண்டு வந்தபொழுது அப்பின்னலும் முடிச்சும் தூக்குக் கயிறு போலத்தான் தோன்றியது.

எந்தப் பெண் எனத் தெரியவில்லை. வெளியூர்ப் பெண். ஆனாலும் இந்த வீதியில் பழக்கப்பட்ட ஒரு பெண்ணாகவே இருப்பாள். அருகிலிருந்த நகரத்தின் மையத்திலிருந்த மருத்துவத் தாதிகள் பயிற்சி நிலையத்தில் பயிலச் சேர்பவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த விடுதியில் இறுதி ஆண்டுகளில் தங்கிப் பயிலவேண்டுமென்பது ஒரு விதிமுறை. அந்த விதிக்கமையவோ, அல்லது தங்கிப்படிக்க வேறு வசதியான இடம் அந்த நகரத்தில் அமையாததாலோ பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த எல்லா இறுதியாண்டு மாணவிகளும் அங்குவந்து தங்கியிருந்தனர்.

அம்மாவுக்கு எல்லாப் பெண்களையும் பரிச்சயம். வீட்டின் முன்னால் அம்மா ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தாள். சின்ன ஷாம்பூ பக்கெட், சவர்க்காரம், கடித உறைகள், கூந்தல் பின்கள், ஊக்குகள் எனப் பெண்கள் வந்து வாங்கிப் போவார்கள். சில சமயங்களில் அவர்கள் விடுதியின் வயதான காவல்காரனுக்கு வெற்றிலையும் சுண்ணாம்பும் கூட வாங்கிப் போவார்கள். அம்மாவுடனான இந்தச் சிறிய வியாபாரங்களின் பொழுது அவர்கள் சிந்தும் புன்னகைகள் இடையில் ஒரு பாலம் போலப் பரவி அம்மாவுக்கு அவர்களுடனான பரிச்சயத்தை இலகுவாக ஏற்படுத்திவிட்டிருந்தது.

மருத்துவத்தாதிகள் என்றால் அவர்களுக்கே உரிய வெள்ளைச் சீருடையையும் , தொப்பியையும் கற்பனை பண்ணக் கூடாது. இவர்கள் எல்லாவற்றையும் பயின்று பின் வேலை பார்க்கச் செல்லும்பொழுதே அவற்றை அணிபவர்களாக இருக்கக் கூடும். இப்பொழுதைக்கு வெள்ளைச் சேலைதான் அவர்கள் சீருடை. வீதியில் காலை ஏழு மணிக்கே அவர்கள் சோடி சோடியாய் பஸ் நிலையம் நோக்கி நடப்பதைப் பார்க்க வெள்ளைக் கொக்குகளின் அணிவகுப்பைப் போல அழகாக இருக்கும்.

செல்வி இப்பொழுது எழுந்துகொண்டாள். செய்தியை இன்னொருவரிடம் எத்திவைத்த திருப்தியோடு ஏதோ வர்ணிக்கமுடியாத சோகமொன்றும் அவள் முகத்தில் படிந்திருந்ததைப் பார்க்கமுடிந்தது. அவள் எழுந்துகொண்டதோடு அம்மாவும் எழுந்துகொண்டாள். செல்வி கொண்டுவந்த பாலைப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சத் தொடங்கினாள். செல்விதான் அந்த விடுதிக்கும் பால் விற்பவள். முக்கால்வாசிப் பால் சுமந்த பெரிய பாத்திரத்தைத் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு அடுத்தவீட்டுக்கு நகர்ந்தாள். அங்கேயும் அந்தத் தற்கொலைச் செய்தியை முதலில் இவள்தான் சொல்லவேண்டியிருக்கும். இல்லாவிடில் அந்த வீட்டிலிருந்து விடுதிப்பக்கம் யாரேனும் போய் வந்திருந்தால் அவர்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும்.

அம்மாவுக்குத்தான் ஒரே யோசனையாக இருந்தது. எந்தப்பெண்ணாக இருக்கும் ? நேற்று மாலையில் மழைக்கு ஒரு மஞ்சள் பூப்போட்ட குடையை எடுத்து வந்து பேனையும், பிஸ்கட்டும், வாழைப்பழமும் வாங்கிப் போனதே ஒரு சிவந்த ஒல்லிப்பெண். அதுவாக இருக்குமோ ? சாக நினைத்த பெண் பிஸ்கெட்டெல்லாம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டுச் சாகுமா என்ன ? அதுவும் முழுதாக எழுதித் தீராதவரைக்கும் வாழ நினைக்காத பெண் கொஞ்சம் கூடுதல் விலைகொடுத்து அழகான பேனை வாங்கிப் போக மாட்டாளே ? அதுவும் நட்ட நடுஇரவில் அறைத் தோழியருக்கு எந்த அரவமும் ஏற்படா வண்ணம் எழுந்து விடுதியின் முன் சாலைக்கு வந்து தன்னை முழுதும் நிர்வாணமாக்கி, தனது வெள்ளைச் சேலையில் தூக்குப் போட்டுச் சாக ஒரு பெண்ணுக்கு எந்தளவுக்கு தைரியம் இருக்கவேண்டும் ? அந்தச் சிவந்தபெண் அந்தளவுக்கு தைரியமானவளா என்ன ?

நிச்சயமாக அந்தப் பெண்ணாக இருக்கமாட்டாள் எனத் தோன்றியது. அவ்வாறெனில் இறந்த பெண் யார்? செத்தவள் இறுதியாக வந்து என்ன வாங்கிப் போனாள் ? அம்மா கடைக்கு வந்த பெண்களின் ஒவ்வொரு முகமாகத் தன் நினைவுக்குக் கொண்டுவர முயன்று தோற்றாள். நேற்றுவந்த பெண்ணின் மஞ்சள் கலரில் அழகான பூப்போட்ட குடை ஞாபகத்திலிருந்த காரணம் அதே மாதிரியான குடை அம்மாவிடமும் இருந்ததுதான். அந்தக் குடையை யாருக்கோ இரவல் கொடுத்துப் பின் வாங்க மறந்துவிட்டதாகத் தோன்றிய கணம் பொங்கிய பாலை இறக்கிவைத்துவிட்டு எழுந்துபோய் அலமாரியின் மேலே பார்த்தாள். குடை அதன் பாட்டில் இருந்தது. ஆனால் எப்பொழுதோ, எதுபோன்றோ குடை அல்லது வெயில் சுமந்துபோன பெண்ணொருத்தி இன்று உயிருடன் இல்லை. நிச்சயமாக இந்தக் கடையில் சின்னச் சின்னதாகக் குவிந்திருக்கும் பொருட்களில் ஏதோ ஒரு பொருளை வாங்கிப் போனவளாகத்தானே இருப்பாள். அப்பொழுது சிந்திய புன்னகையும், சிதறவிட்ட மூச்சுக்காற்றுகளும் இந்த பெட்டிக் கடையின் மூலைகளைத் தேடி ஓடியிருந்திருக்குமே ?

வாசல் வீதியினூடாகப் போலிஸ் வண்டி விடுதியை நோக்கிப் போவது தெரிந்தது. இனி விசாரணை தொடங்கக்கூடும். அவளது பிணம் அறுக்கப்பட்டுப் பரிசோதனைகள் நடக்கும். தற்கொலைக்கான காரணம் பலவிதங்களில் அலசப்படும். அந்தப் பெண் குறித்தான ஒழுக்கமும், அந்தரங்கமும் கூடப் பரிசீலிக்கப்படும். இனி வண்டி,வண்டியாக அவளது உறவினர்கள் வந்து கதறலோடு விடுதியை நிறைக்கக்கூடும். காலை நேரங்களில் வீதியில் அணிவகுக்கும் கொக்குச் சோடிகளில் ஒன்று குறையும்.அம்மா தன் கடையை அன்று மட்டும் மூடப்போவதாக உத்தேசித்துக் கொண்டாள். இன்றைய துக்கத்தில் எப்படியேனும் பங்குகொள்ள வேண்டும்போல இருந்தது அவளுக்கு.

தானாகச் சாவதை விடவும் அகால மரணங்கள் என்பவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவைதான். ஒவ்வொரு நாளும் சிரிக்க நினைப்பதைப் போல, அழ நினைப்பதைப் போல, பசியை நினைப்பதைப் போல, குளியலை நினைப்பதைப் போல மரணத்தை தினமும் நினைப்பவர்கள் இல்லை. ஒருவரைச் சார்ந்தே வாழப்பழகியவர்கள் அல்லது அவரோடு நெருக்கமாகப் பழகியவர்கள் அல்லது தெரிந்தவர்கள் அவரது அகாலமரணத்தின் போது பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பின்னொருநாளில் யாரிடமோ ஏமாந்து செல்வியும் தற்கொலை செய்துகொண்ட பொழுது அவளிடம் பாலை இழப்பதற்காகக் காத்திருந்த அவளது பிரியத்திற்குரிய மாடுகளும், அவள் கொண்டுவரும் பாலைப் பெறுவதற்காகக் காத்திருந்த அம்மாவும் மீண்டும் சோகத்தில் மூழ்கினர். அம்மா தனது துயரத்தை வெளிக்காட்ட அன்றும் முன்போலக் கடையைப் பூட்டினாள்.

தனது தாவணியில் தூக்குப்போட்டுச் செல்வியின் தலை துவண்டு தொங்கிக் கொண்டிருந்த பொழுது அவளது நீண்ட பின்னல் அவளது முழங்காலை முன்புறமாகத் தொட்டபடி தனியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுதும் அப்பின்னலும் கறுப்பு றப்பர்பேண்ட் முடிச்சும் தூக்குக் கயிர் போலத்தான் தோன்றியது.

நட்சத்திரங்கள் – தொகுதி 1

எப்பொழுதும் இருக்கும் யுத்தம்கண்ணீரும் நினைவுகளும்கோபத்தின் மறுபிறவி

உன்னிடம் பேசுவதற்குவார்த்தைகளை சேமித்துக் கொண்டிருக்கிறேன்உன்னிடம் மட்டும் பேசுவதற்கு
பொய்யின் தூய்மைதோல்வியுற்ற மனம்நிலவின் வசியம்
உலகையே அழித்த துப்பாக்கிமிச்சம் இருக்கின்றதுஇன்னும் ஒரு தோட்டா
பிரியும் பொழுதுநினைவுப் பரிசு கேட்ட என் தோழியேஅப்படியெனில் நம் நினைவுகள் … ?

புளிய மரத்திற்கு அடியில்சித்தார்த்தன் சிகரெட்பிடிக்கிறான்தேவதையின் நிழலுடன் ஒரு குரல்என்னை நோக்கி வருகிறதுநான் இறந்துவிட்டேன்
எங்கே என் மனைவிமின்னலுக்கு ஒரு கவிதை இடிக்கு ஒரு கவிதை மழைக்கு ஒரு கவிதைபுழுதி பார்த்தோம்எழுதிப் பார்த்தோம்இன்னும் எழுதுவோம்எழுதிக் கொண்டே இருப்போம்

எஸ். வைதீஸ்வரனும் மெளனி கதைகளும்….

நேற்று என்று நினைக்கிறேன். இல்லை இல்லை முந்தாநாள் இரவு (06.04.2009) வைதீஸ்வரனிடமிருந்து ஒரு போன் மெளனி கதைகள் புத்தகம் கேட்டு. வைதீஸ்வரன் என்னிடம் புத்தகம் கேட்டு எப்போதும் போன் செய்ததில்லை. அதுவும் மெளனி புத்தகம் ஏன் கேட்கிறார் என்ற ஆச்சரியம் எனக்கு. என்னைப் போன்ற பல படைப்பாளிகளுக்கு மெளனி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன் போன்ற படைப்பாளிகள் கைடு மாதிரி. வைதீஸ்வரன் இல்லாமல் வேறு யாராவது அந்தப் புத்தகத்தை கேட்டிருந்தால், இல்லை என்று சொல்லியிருப்பேன். கேட்டது வைதீஸ்வரன் என்பதால் என் புத்தக அலமாரியில் போய்த் தேடினேன். மெளனி புத்தகம் கிடைத்ததோடல்லாமல் வேறு ஒருபுத்தகம் ஒன்றை புரட்டிப் பார்க்கும்போது இரு கடிதங்கள் கீழே விழுந்தன. எடுத்துப் புரட்டிப் பார்த்தால் சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்கள். எனக்கு ஆச்சரியம். அக்டோபர் மாதம் 2001ஆம் ஆண்டு எழுதிய அக் கடிதத்தை ஏன் விருட்சத்தில் பிரசுரம் செய்யவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எந்தக் கடிதம் எழுதினாலும் சுந்தர ராமசாமி பதில் எழுதி விடுவார். அழகாக டைப் செய்து கீழே சுரா என்று கையெழுத்திடுவார். விருட்சம் வெளியீடாக நான் சில புத்தகங்களை அவருக்கு அனுப்பி இருந்தேன். அதற்குத்தான் அவர் பதில் எழுதியிருந்தார். தொடர்ந்து அவருக்கு நான் பதில் எழுத, எனக்கு அவர் இன்னொரு கடிதமும் எழுதியிருந்தார்.

திரும்பவும் அக் கடிதங்களைப் படித்த எனக்கு உடனே விருட்சம் இதழில்வெளியிட வேண்டுமென்ற பரபரப்பு கூடியது. அதற்குமுன் பிளாகில் அக் கடிதங்களைப் பிரசுரம் செய்யலாமென்று தோன்றியதால் இங்கு அவற்றைப் பிரசுரம் செய்கிறேன்.

முதல் கடிதம் 20.10.2001

அன்புள்ள அழகியசிங்கர் அவர்களுக்கு,

உங்கள் 04.10.2001 கடிதமும் நீங்கள் அனுப்பியிருந்த நான்கு கவிதைத் தொகுதிகளும் கிடைத்தன.

பா.வெங்கடேசன் தொகுப்பை அவர் அனுப்பி வைத்திருக்கிறார். அதைத்தான் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அத்தொகுப்பைப்பற்றி ஒரு மதிப்புரை எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது.

நீங்கள் அனுப்பிய தொகுப்புகளைப் படித்துவிட்டு என் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறேன். திட்டம் போட்டு வேலை செய்ய முடியவில்லை. தேதியில் முடித்துத் தரவேண்டிய வேலைக்கு முன்னுரிமை போய்விடுகிறது.

இப்போது நீங்கள் அனுப்பித் தந்திருக்கும் தொகுப்புகளை நான் இலவசமாகப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. உங்கள் வெளியீடுகளுக்கு நான் உரிய விலை தந்து வாங்குவதே நியாயமானது. அனுப்பித் தரவேண்டிய தொகையை கணக்கிட்டு எழுதுங்கள். தபால் செலவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எதிர்காலத்தில் நீங்கள் காலச்சுவடு மதிப்புரைக்கு அனுப்பும் புத்தகங்களை தனியாக எனக்கு அனுப்ப வேண்டியதில்லை.

விருட்சத்தில் நீங்கள் வெளியிடும் அசோகமித்திரனின் வரைபடத்தை என்னால் சகிக்க முடியவில்லை. சமீபத்தில் அவர் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த நிமிஷத்தில் வேண்டுமென்றால் அவர் முகம் உங்கள் வரைபடம்போல் இருந்திருக்கலாம். இப்போது நல்ல குணம் பெற்றுவிட்டார். நீங்கள் விரும்பினால் நான் ஒரு வரைபடத்தை வரைந்து அனுப்புகிறேன். நீங்கள் வெளியிடுவதைவிட அது நன்றாக இருக்கும்.

என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,

சுரா

பின் குறிப்பு : உங்கள் 16.10.2001 கடிதம் இப்போது கிடைத்தது. நீங்கள் புத்தக விலையைத் தெரிவித்ததும் அதனுடன் சந்தா நாற்பது ரூபாய் சேர்த்து அனுப்பிவிடுகிறேன்.

(சுரா அசோகமித்திரன் வரைபடத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். ஓவியர் விஸ்வம் வரைந்த ஓவியம் அது. எனக்குப் பிடித்த அசோகமித்தரன் படம் அது. எப்போதும் விருட்சத்தில் அவருடைய அந்த ஓவியத்தையே வெளியிடுவேன். அசோகமித்திரனுக்கும் அந்த ஓவியம் பிடிக்கும் – அழகியசிங்கர்)

இரண்டாவது கடிதம் 15.11.2001
அன்புள்ள அழகியசிங்கர்,

வணக்கம். உங்கள் 06.11.2001 கடிதம் கிடைத்தது. வேலை நெருக்கடியால் உடனடியாகப் பதில்போட இயலவில்லை. மன்னியுங்கள்.

அசோகமித்திரன் வரைபடத்தைப்** பற்றி நான் எழுதியிருந்த விமர்சனத்திற்கு அழுத்தம் தருவதற்காகவே ‘நான் வரைந்தால்கூட இதைவிட நன்றாக இருக்கும்’ என்ற அர்த்தத்தில் எழுதினேன். நான் எழுதிய முறை யதார்த்தமாக நீங்கள் எடுத்துக்கொள்ளும்படி இருந்ததோ என்னவோ.

யோகா* வகுப்புக்கு வந்தவர்களுக்க என் பெயர் தெரியாமல் இருப்பதில் என்ன அதிசயம்? என் பக்கத்து வீட்டு டாக்டருக்குத் தெரியாதே! நேற்று தொலைபேசியில் அழைத்து தினமணி தீபாவளி மலரில் கமலஹாசன் சுந்தர ராமசாமி என்று ஒரு பெயரைக் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் இன்னொரு சுந்தர ராமசாமி யார் என்று கேட்டார். கமலஹாசன் என் பெயரைச் சொல்லியிருக்க முடியாது என்பதில்தான் அவருக்கு என்ன தீர்மானம்! இதற்குத்தான் பெரிய பத்திரிகைகளில் எழுதவேண்டுமென்று புத்திசாலிகள் சொல்கிறார்கள். உண்மைதானே அவர்கள் சொல்வது?

இன்று ரூ.155 திரு என் சுப்பிரமணியன் பெயருக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன்.

என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,

சுரா

*வெள்ளியங்கிரி நடைப்பெற்ற ஈசா யோகா வகுப்பில் கலந்துகொண்ட நாகர்கோவிலைச் சேர்ந்த சிலரிடம் சுந்தர ராமசாமியைப் பற்றி விஜாரித்தேன். அவர்கள் யாருக்கும் அவருடைய பெயர் தெரியவில்லை. சுந்தர ராமசாமியிடம் ஏன் உங்கள் பெயர் தெரியவில்லை என்று எழுதிக் கேட்டிருந்தேன். அதற்கான பதில்தான் மேலே வந்துள்ளது.

** சுந்தர ராமசாமி பிடிக்கவில்லை என்று கூறிய அசோகமித்திரன் வரைபடத்தை திரும்பவும் இங்கு பிரசுரம் செய்துள்ளேன்.

புத்தக விமர்சனங்கள்

நவீன விருட்சம் ஆரம்பித்த (1988ஆம் ஆண்டு) ஆண்டிலிருந்து அதில் புத்தக விமர்சனங்கள் பல எழுதியுள்ளேன். நினைத்துப் பார்த்தால் இப்போது என்னால் அதுமாதிரி புத்தக விமர்சனங்கள் எழுத முடியவில்லை. இருந்தும் நான் எழுதிய புத்தக விமர்சனங்களைத் தொகுத்து உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

த பழமலயின் ‘சனங்களின் கதை’
த பழமலயின் ‘சனங்களின் கதை’ என்கிற கவிதைத் தொகுதியில் இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிக்கலாம்.
மிக எளிமையான வார்த்தைகள் மூலம் ஊரையும் சுற்றத்தையும் வெளிப்படுத்துவது.
உள்ளது உள்ளபடியே கூறுவது.
எடுத்தவுடன் எதிர்படும் ‘அம்மா’ என்கிற கவிதையில் ‘முற்றத்துப் பவழமல்லி நீ மறந்தும் நினைத்தும் அழும் என்கிறபோது, மிகைப்படுத்தப்பட்ட உணர்வு நிலையில் கவிதை வெளிப்பட்டிருப்பதுபோல் தோன்றினாலும், கூடவே நயம் செறிந்த வார்த்தைகளையும் எந்தவித பகட்டுமின்றி வெளிப்படுத்துகிறது.
அப்பா என்கிற கவிதை
‘கடாவை வெட்டுகையில் கண்ணீரும் வடிப்பார்? கருப்பனார் சாமிக்குப் பன்றியும் வளர்ப்பார்? படைக்காமல் உண்பது ‘பழையது’ மட்டும்என்கிற தொடக்க வரிகளுடன் அபாரமாக ஆரம்பமாகிறது. இக் கவிதையில் அறிமுகமாகும் ந. தங்கவேல் படையாச்சி எந்தவித ஒளிவு மறைவுமில்லாமல், அவருடைய தற்பெருமையுடன் சேர்த்தே அறிமுகப் படுத்தப்படுகிறார். ‘அப்பாவின் கொடுவாள்’ என்கிற கவிதையில் கொடுவாள் இறுதியில்
ஒனக்கு எனக்குன்னு ஒடம் பிரிக்கிற ஒன்னு இருக்கு அத எதுத்துத்தான் நீ என்ன எடுக்கணும்’என்று புத்தி புகட்டுவது புதுமாதிரியாகத் தோன்றுகிறது.
‘உழுதவன் கணக்கில்’ துண்டை தொலைத்துவிட்டு எதையோ சுற்றிக்கொண்டு, பள்ளிக்கு ஓடுவதிலிருந்து ஆரம்பிக்கிற கவதை ஒரு கசப்பான அனுபவத்தை அங்கதத் தொனியுடன் விளக்குகிறது. ‘முருங்கை மரம்’ என்கிற கவிதையில் உறவு முறைகளில் நமக்கிருக்கும் நம்பிக்கையை ஆழப்படுத்துகிறார். ‘இனி எனக்குக் கொல்லை வெளிக்குறுக்கு வழிகள் திருகு கள்ளிகளின் செவிகளில் என்வரவு சொல்லும் ஓணான்கள்
என்கிற வரிகள் மூலம் ‘த பழமலை ‘புத்தரை மறந்த ஊர்’ கவிதையில் ஒரு ஊரை நயத்துடன் அறிமுகப்படுத்துகிறார். ஊரிலுள்ள ஏரிக்கரைப் பிள்ளையார் நாத்திகனையும் நலம் விசாரிப்பார்.
………………………………. இடாத முத்தத்திற்கு எப்படியெல்லாம் வருணனை
‘தப்புக் கணக்கு’ என்கிற கவிதையில், சிறுவயது முதற்கொண்டு உறவுகொண்ட ஒரு பெண்ணின் நினைவுகள், அவளுக்குத் திருமணம் ஆகி, இடுப்புக் குழந்தையுடன் பார்க்க வந்தும் ஞாபகத்திலிருந்து அகலாமலிருப்பதைக் குறிப்பிடுகிறார். ‘சனங்களின் கதை’ என்கிற இந்தத் தொகுதியில் உள்ள பல கவிதைகள் படிக்கிற உணர்வை ஏற்படுத்துகின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்வது அவசியமாகப் படுகிறது.