Two poems

கவி

சட்டென உடைந்து விடுகிறது
ஏதோவொரு காதல்
ஏதோவொரு நட்பு
ஏதோவொரு ரகசியம்
ஏதோவொரு இறப்பு
ஏதோ சில
சிலவாகிய பல

எவ்வித சமரசமும் இல்லாமல்
கிளையிலிருந்து வீழும் இலை போல்
வானிலிருந்து நழுவும் நட்சத்திரம் போல்
உயர எறிந்த பந்து கீழே விழுவது போல்
காற்றடைந்த குமிழி போல்
இன்னும் போல பல

புதிதாய் முளைவிடும் இலை
காலம் வெளித்தள்ளிய நட்சத்திரம்
பிடித்து இழுத்த விசையுறு பந்து
வெற்றிடம் உருவாக்கும் குமிழ்
மற்றுமொரு காதல்
வெறுப்புமிழ்ந்த நட்பு
விவரித்துவிட வேண்டிய ரகசியம்
வேறொருவருக்கான உயிர்

ஏதேனும் தேவைப்படுகிறது தான்
நிரப்பி விடவும், விட்டு விடுதலையாகவும்..

வீடு

சதுரங்கள் மடித்த
முக்கோணங்களாகவோ
வட்டங்களாகவோ
செவ்வகவமாகவோ தான்
எப்போதும் இருக்கின்றன
வீடுகள்

வெறுப்புக்களும்,
நிராசைகளும்,
சலிப்புக்களும்
புகைந்து வெளியேறிக்கொண்டே
இருக்கின்றன .

தங்கசங்கிலிக்குள்
புதைந்த சம்பிரதாயங்களின்
ரகசியம் அவிழ்க்கப்படுகின்றன

கடமைகள்,பொறுப்புக்கள்
வளர்ந்து அச்செடுக்கப்படுகின்றன
அசல் பிரதிகளை போல

எப்போதாவது தான்

பசியாற வைக்கும்
உணர்வுகள் சங்கமிக்கும்
அன்பை மட்டுமே
போதிக்கும்
உள்ளாழ்ந்து பக்தி
செலுத்தும் இடமாக
இருக்கின்றன வீடுகள்.

நான், பிரமிள், விசிறி சாமியார்………….17

அழகியசிங்கர்
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தேவைப்படுவது. உணவு, உடை, இருப்பிடம்.  இந்த மூன்றுமே பிரமிளுக்குச் சிக்கலாக இருப்பதாகவே எனக்குப்படும்.  இருப்பிடம் என்பதை எடுத்துக்கொண்டால், வேறு வழியில்லாமல் இருக்க வேண்டுமென்று இருப்பதாக எனக்குப்படும். 
க்ரியா அலுவலகத்திற்கு எதிரில் உள்ள தெருவில் உள்ள இடத்தில் ஒரு அறையில் அவர் ரொம்ப வருடங்கள் குடியிருந்தார்.  அது வெறும் அறை.  பொது எதிரில் உள்ள ஒரு அறையில் அவர் ரொம்ப வருடங்கள் குடியிருந்தார்.  அது வெறும் அறை.  பொது கழிவறை, குளியலறை. அந்த இடத்திற்கான வாடகையைக்கூட யாரோ சில நண்பர்கள் அவருக்கு உதவினார்கள். 
பின் அங்கிருந்து திருவான்மியூரில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்றார்.  அங்கிருந்து அவர் அயோத்தியா குப்பம் என்ற இடத்திற்கு வந்தார்.  உள்ளே நுழையக்கூடிய அறை மட்டும்தான்.  பொதுவாக அயோத்தியா குப்பத்திலுள்ள எல்லோரும் பயன்படுத்தும்படி பொது கழிவறை.  போதுமான வசதிகள் இல்லாமல் எத்தனையோ ஏழை மக்கள் இப்படியெல்லாம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.  மயிலாடுதுறையில் நான் இருந்த இடத்திலுள்ள தெருவில் பாய் முடைபவர்கள், பாயெல்லாம் முடைந்து தெருவில்தான் படுத்துக்கொள்வார்கள்.  அவர்கள் இருப்பிடம் தெருதான்.
சைதாப்பேட்டையில் என் உறவினர் ஒருவர், காற்று சூரியவெளிச்சம் இல்லாத வீட்டில் குடியிருந்தது இப்போதுகூட ஞாபகம் வருகிறது.  அனல் கக்கும் இந்த வெயில் காலத்தில், உறுதியான மனம் படைத்தவர்கள்கூட பேதலித்துப்போக வேண்டிய சூழ்நிலைதான் ஏற்படும். 
பிரமிள் நுங்கம்பாக்கம் வந்தபோது, அவர் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்தில் பன்றிகளை வெட்டி விற்பனை செய்துகொண்டிருப்பார்கள்.  பன்றி அலறலுடன், அந்த இடத்தில் நாற்றம் குடலைப் புடுங்கும். பிரமிளைப் பார்க்க அவர் அறைக்குப் போகவே எனக்கு நடுக்கமாக இருக்கும். 

சரி, பிரமிள் என்னமாதிரியான உடை உடுத்திக்கொள்வார்.  எத்தனை எண்ணிக்கை உள்ள சட்டைகள் வைத்திருந்தார்.  எத்தனை பாண்ட் அவர் வைத்திருந்தார்.  அதெல்லாம் அவருடன் பழகும்போது நான் கவனித்ததே இல்லை.  அவருடன் விசிறி சாமியாரைப் பாரக்கச் சென்றபோது, அழுக்கான உடையுடன் விசிறி சாமியார் காட்சி அளித்தார்.  அழுக்கான உடையில் இருந்தாலும் அவர் முகத்தில் காணப்படும் தேஜஸ் ஆச்சரியமாக இருக்கும். 
தெருவில் நடமாடும் பிச்சைக்காரர்கள், பைத்தியக்காரர்கள் அழுக்கான உடையில் பார்க்கும்போது, நாம் ஏனோ முகம் சுளிக்காமல் இருப்பதில்லை.  வசதியாக இருந்தும், பலர் உடைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 

முழுமையாக மூன்று வேளை சாப்பாடு அவருக்குக் கிடைத்ததில்லை.  இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பெரிய விஷயங்களைப் பற்றி அவர் பேசியிருக்கிறார்.  ஒரு நல்ல புத்தகம் படித்தாலும் சரி, ஒரு நல்ல சினிமா பார்த்தாலும் அதைப் பற்றியெல்லாம் சொல்லாமல் இருக்க மாட்டார்.  இதோ அவரைப் பற்றி இன்னும் என்ன சொல்ல வேண்டும் என்பதை சொல்ல முயற்சி   செய்கிறேன்.
                                                            
                                                                                                                         (இன்னும் வளரும்)

நான், பிரமிள், விசிறி சாமியார்………….16

அழகியசிங்கர்
இந்தத் தொடரை எழுதவே தோன்றாமல் நிறுத்திவிட்டேன்.  பிரமிளைப் பற்றி இன்னும் என்ன எழுதுவது என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கிறேன். பிரமிளின் கடைசித் தினங்களைப்பற்றி எழுத எனக்கு விருப்பமில்லை.  நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, பாரதியார் பற்றி புத்தகம் தூரன் எழுதியதைப் படித்துக்கொண்டிருப்பேன்.  பாரதியாரின் மரணம் எனக்குப் படித்தபிறகு பெரிய துக்கமாக இருக்கும்.  அவர் வாழ்ந்த இடத்தையும், பார்த்தசாரதிக்கோயிலையும் இப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். 
நோபல் பரிசு பெற பாரதியார் தாகூருடன் போட்டிப்போடுகிறார்.  அந்தத் திறமை பாரதியாருக்கு உண்டு.  ஆனால் பாரதியார் வாழ்ந்த வாழ்க்கை மிகக் கொடூரமானது.  அதிக ஆயுளுடன் அவர் இருந்திருந்தால், அவர் நோபல் பரிசுகூட வாங்கியிருப்பார். 
பிரமிளை எடுத்துக்கொள்ளுங்கள்.  56வயது சாகக்கூடிய வயதே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது.  வறுமை அவரைப் பற்றிக்கொண்டு விடவில்லை என்பது உண்மை.  ஆனால் அவரிடம் எந்தக் கெட்டப் பழக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆரம்ப காலத்தில் அவர் கஞ்சா புகைப்பார் என்று எனக்கு சில நண்பர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  அவர் குடிப்பாரா என்பதுகூட எனக்குத் தெரியாது.  என் எதிரில் அவர் குடித்தது இல்லை.
அவருக்கு எப்போதும் இருப்பது.  பசி.  பசி.  அந்தப் பசி ஒரு ஏழையின் பசி.  தீவிரமான பசி.  அவர் சாப்பிடும்போது ரசித்து சாப்பிடுவார். சாப்பிட்டப்பிறகு சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்.  ஒரு சாப்பபாடு சாப்பிட்டதற்கே தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மனிதர் பிரமிள்.  எனக்கு இன்னும்கூட அவருக்கு சாப்பாடு வாங்கித் தரவேண்டும் என்று தோன்றும். 
நான் இன்னும் குறிப்பிட வேண்டியது அவருடைய நடை.  எந்த இடத்திற்கும் அவர் நடந்தே சென்றுவிடுவார்.  வேகமாக நடப்பார்.  எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  அவருக்கு சர்க்கரை நோயும், ரத்த அழுத்த நோயும் வர வாய்ப்பே இல்லை. 
ஆனால் வயிற்றில் வந்துவிட்டது.  மஞ்சள்காமாலை நோய் அவரை வாட்டி எடுத்துவிட்டது.  இதுகூட அவர் கண்ட இடங்களில் கண்ட நேரத்தில் சாப்பிடுவதால் தொற்றிக்கொண்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.  ஆரோக்கியமற்ற இடங்களில்தான் அவர் குடியிருந்தார். இன்னும்கூட எத்தனையோ பேர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.  பிரமிள் உழைக்க விரும்பவில்லை.  என் நண்பர் ஒருவர் அவரைப் பற்றி குறிப்பிடும்போது, பிரமிளுக்கு ஒரு இடம் கொடுத்து, சாப்பிட வசதியும் செய்து கொடுத்தால், அவர் இன்னும் பல சாதனைகளைப் புரிந்திருப்பார் என்று. ஆனால் அவர் குறைந்த அளவுகூட உழைக்கத் தயாராய் இல்லை. 
நான் பலபேர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பவர் ஒரு டூவீலருடன் வந்து உழைத்துவிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்.  கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவர்கள், டூவீலரில் எல்லா இடங்களுக்கும் சென்று பணம் சம்பாதிக்கிறார்கள்.  தினசரி தாள்களைப் போடுபவர்கள் கூட ஒரு வண்டியைப் பயன்படுத்தி வாழக்கைக்குத் தேவையானதைச் சம்பாதித்து சந்தோஷமாக வாழ்கிறார்கள். 
ஆனால் பிரமிள் சம்பாதிக்கவே இல்லை. மிக நெருங்கிய நண்பர்கள் அவருக்கு பலவிதங்களில் உதவி செய்தார்கள்.  டேவிட் சந்திரசேகர் என்ற நண்பர்.  சிண்டிக்கேட் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்.  பிரமிளுக்கு உதவி செய்திருக்கிறார்.  அவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டார்.  அவர் இறந்தது இருக்கட்டும்.  பிரமிள் என்ன சொல்வாரென்றால், அவர் இதுவரை இருந்ததே எனக்கு உதவி செய்வதற்காகத்தான் என்று.  பிரமிள் இப்படிச் சொல்வதை நான் ரசிக்க மாட்டேன்.
ராமானுஜம் என்ற நண்பர் பிரமிள் பணம் கேட்காமலயே அவர் பாக்கெட்டில் பணம் வைப்பார்.  அந்த ராமானுஜத்தை ஓவராக கஞ்சா அடிப்பதிலிருந்து காப்பாற்றி இருக்கிறேன் என்று பிரமிள் என்னிடம் கூறுவார்.  ஜே கிருஷ்ணமூர்த்திதான் ராமானுஜத்தைக் காப்பாற்றியதாகவும் மேலும் பிரமிள் குறிப்பிடுவார்.  வங்கியில் சம்பாதித்துக்கொண்டிருந்த ராமானுஜம் இருக்கிற வேலையும் விட்டுவிட்டு எல்லாரிடம் பணம் கேட்டு பிச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டார்.  என்ன சோகம் என்று எனக்குத் தோன்றும்.
                                                                                                                              (இன்னும் வரும்)
a

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு

….
அழகியசிங்கர்
முன்கதைச் சுருக்கம்
அழகியசிங்கரின் கதாபாத்திரமான பத்மநாபன் 50வது வயதில் பதவி உயர்வு பெற்று கும்பகோணம் செல்வதை அழகியசிங்கரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் பத்மநாபனை விட்டுப் பிரிவது என்பதை அழகியசிங்கரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
4.
கும்பகோணத்தில் வட்டார மேலாளரை பத்மநாபனுக்குத் தெரியும்.  நேரிடையாக அவரிடம் பேசினார்.  ”சார், நான் கும்பகோணத்திற்கு வருகிறேன்.  மயிலாடுதுறையில் என் உறவினர்கள் இருக்கிறார்கள்.  அஙகுள்ள பிராஞ்சில் எனக்கு போஸ்டிங் தரமுடியுமா?”
”அது முடியாது.  எதாவது நல்ல பிராஞ்சா பாத்துப்போடறேன்.”
”அப்படி இல்லாவிட்டால், மயிலாடுதுறையிலிருந்து போகும்படி எதாவது பிராஞ்ச் தர முடியுமா?”
”பார்க்கிறேன்.”
அவர் பார்க்கிறேன் என்று சொன்னது.  பந்தநல்லூர் என்ற கிளையை.  மயிலாடுதுறை கும்பகோணம் இடையில் உள்ள இடம் இந்த பந்தநல்லூர்.  மயிலாடுதுறையிலிருந்து 28கிலோமீட்டர்.  கும்பகோணத்திலிருந்து 30 கிலோமீட்டர்.
என்னடா இது ஏதோ ஒரு கிராமத்தில் போய் மாட்டிக்கொள்கிறோம் என்று தோன்றியது.  கிராமத்திற்குப் போய் பணிபுரியும்   வாய்ப்பு எனக்கு இருந்ததில்லை.  அதுவும் 50வயதிற்குப் பிறகு. மடமடவென்று சேரும்படி உத்தரவு வந்தது. 
நான் டாக்டர் செல்வாவைப் போய்ப் பார்த்தேன்.  ”என்ன டாக்டர், பதவி உயர்வு என்ற பெயரில் பந்தநல்லூர் போகலாமா?” என்று கேட்டேன். 
”தாராளமாகப் போகலாம்..”
”நான் பிராப்பர்டிஸ் வச்சிருக்கிறேனே?”
”எல்லோருக்கும் அதெல்லாம் உண்டு.  மருந்து சாப்பிட்டி சரி பண்ணலாம்…” என்றார்.  பின் அவர் எழுதிக்கொடுத்த மருந்துகளை வாங்கிக்கொண்டேன்.
இந்த இடத்தில் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.  உடம்பு நினைத்து நான் பயப்படுவேன்.  அபிராமன் குறித்து நான் சொன்ன நிகழ்ச்சியைத்தான் அழகியசிங்கர் ஒரு கதையாக எழுதியிருந்தார்.  நேற்றிருந்தவன் என்பது அந்தக் கதையின் பெயர். 
முதல்நாள் என்னைப் பார்க்க வந்த அபிராமன், அடுத்தநாள் இறந்து கிடக்கிறான். இது என் 20 வயதில் நடந்த கதை.  அபிராமன் படித்தும் வேலை கிடைக்கவில்லை.  அவனுடைய இதயத்தில் ஒரு ஓட்டை.  அதைச் சரிசெய்ய அறுவைசச் சிகிச்சைச் செய்ய வேண்டும்.  பணம் தர யாரும் தயாராய் இல்லை.  அபிராமன் ஒரு சனிக்கிழமை கக்ககூஸில் மார்பில் ஏற்பட்ட எதிர்பாராத வலியுடன் இறந்து கிடந்தான்.  முதல் நாள் காலையில் என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தான்.  அவனிடமிருந்து பேனா வாங்கிக்கொண்டேன்.  பேனா வியாபாரம் செய்வதாகச் சொன்னான்.  அவனுக்காக இரக்கப்பட்டு பேனா வாங்கிக்கொண்டேன்.  பாட்டி போட்டுக்கொடுத்த கசப்பான காப்பியைக் குடித்தான். என்னுடன் அலுவலகம் போகும் வழி வரை வந்துகொண்டிருந்தான்.  நானும் அவனும் தெரு முக்கில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு எப்போதும் பேசிக்கொண்டிருப்போம்.  அந்த இடம் வரை வெள்ளிக்கிழமை அவனைப் பார்த்தேன். 
சனிக்கிழமை அவன் வீட்டு வழியாக மாலை வந்துகொண்டிருந்தபோதுதான் தெரிந்தது அவன் இறந்தது.  வீடு முழுக்க தண்ணீரால் அலம்பி விட்டிருந்தார்கள்.  அவன் சாப்பிட வேண்டுமென்று நினைத்த காப்பி சாப்பிடாமல் கருத்த நிறத்தில் அப்படியே இருந்தது.  அன்று அவன் சடலத்தைக்கூட பார்க்கமுடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது.
எனக்கு துக்கம் தாங்கமுடியவில்லை.  இதுதான் கதை. நிஜ நிகழ்ச்சி எப்படி பிரமையாக மாறி பயத்திற்குத் தாவி விடுகிறது என்பதுதான் கதை.  அழகியசிங்கர் அந்தக் கதையைச் சிறப்பாக எழுதியிருந்தார்.  வழக்கம்போல் ஒரு சிறுபத்திரிகையில்தான் அந்தக் கதை பிரசுரமானது.

 

ழ 6வது இதழ்


பிப்ரவரி / மே 1979

 பலமுறை
 பஸ்ஸிலும் நடந்தும் சைக்கிளிலும்
 போகுமிடம் போகையில்
 இரண்டு பக்கமும் வயல்களைப் பார்த்துப்
 போனதுதான் இந்த ரோடு;
 சும்மா உலாவ வருகையில்

 இன்று தெரிந்தது

 வயலுக்கு நடுவேதான் ரோடு போகிறது.

 பிரதீபன்.

எதையாவது சொல்லட்டுமா………72

அழகியசிங்கர்



நான் இன்னும் சீர்காழியிலிருந்து சென்னைக்கு வரவே இல்லை என்றே நினைக்கிறேன்.  நான் முன்பு பார்த்த சென்னை மாதிரி இது தெரியவில்லை.  மிகச் சாதாரணமாக நடக்கும் சாலையில் கூட கூட்டம் அதிகமாகத் தெரிகிறது. வண்டியை அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் கொண்டு வர முடியவில்லை.
போன மாதம் முழுவதும் என் புதல்வனின் திருமணத்தில் மூழ்கியிருந்தேன்.  முதலில் நான் என் பையனுக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறேனென்பதை நம்பவில்லை.
8 ஆண்டுகளுக்குமுன் என் பெண்ணிற்குத் திருமணம் செய்து முடித்திருந்தேன்.  வயது கூடிக்கொண்டே போகிறது.  என்னால் என்னை நம்பமுடியவில்லை.  காரணம் நான் வயதானவன் மாதிரி தோன்றவில்லை என்று நம்பிக்கொண்டிருந்தேன். என்னுடைய பல நண்பர்கள் தளர்ந்து போயிருந்தார்கள்.  திருமணத்திற்கு நான் பலரைக் கூப்பிடவே இல்லை.  காரணம் முகவரிகளைத் தொலைத்துவிட்டேன்.  கிட்டத்தட்ட 55 பேர்களுக்குமேல் பல எழுத்தாள நண்பர்களைப் கூப்பிட்டேன். இப்போது அப்படி இல்லை.  8 ஆண்டுகளுக்கு முன், நான் தலையை டை அடித்திருந்தேன்.  முதன் முறையாக அப்போது டை அடித்திருந்ததால் வினோதமாகக் காட்சி அளித்தேன்.
பெண் திருமணத்தின்போது தெரிந்த என் வினோதமான புகைப்படங்கள் என்னை நகைப்புடன் பார்த்து  சிரித்துக்கொண்டிருந்தன.  முன்பு பலரை நேரில் போய்ப் கூப்பிட்டேன்.  இப்போது முடியவில்லை
என் வயது 58.  59 வயதை முடிக்க உள்ளேன். ஆனால், 60 மாதிரி தெரிந்தேன். கழுத்தில் தெரிந்த சுருக்கங்களை மறைக்க முடியவில்லை.  இந்த முறை டை அடிக்கவில்லை  என் பல நண்பர்கள் வந்தார்கள்.  எல்லோரிடமும் போட்டோ  எடுத்துக்கொண்டேன்.  ஒவ்வொருவரும் அவரவர் பெண் அல்லது புதல்வன் திருமணம் செய்து கொடுத்ததைப் பற்றி சொன்னார்கள்.  ஒரு நண்பர் சொன்னார்.  உன் கடமை முடிந்துவிட்டது.  இனி நீ சுதந்திரமானவன்.  நான் சிரித்தேன்.  சுதந்திரமானவன் என்று எப்படி சொல்லமுடியும்? 
இன்னொரு நண்பர் அவர் பையனை அழைத்துக்கொண்டு வந்தார்.  எனக்கு அடையாளமே தெரியவில்லை.  வேகமாக வந்த அவர் போட்டோ வில் நின்று போட்டோ  எடுத்துக்கொண்டார்.  அப்போது யார் என்று யோசித்துக்கொண்டேன்.  பின் அவர்  விருந்து சாப்பிட்டு வந்து நான் யாரென்று தெரியவில்லையா என்று கேட்டார்.  எனக்கு அவர் நீலகண்டன் என்று அப்போதுதான் புரிந்தது. 
உறவினர் ஒருவர் மேடையில் வந்து, நான் கிருஷ்ணன் என்றார்.  யார் இவர் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.  அவர் என் உறவினர் என்று மெதுவாகத்தான் புரிந்தது.
திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன், ஒரு பெண் புதிதாக எங்கள் வீட்டிற்குள் நுழைந்ததுபோல் தெரிந்தது. எனக்கு என் திருமணம் ஞாபகம் வந்தது.  அதனுடைய ரிகர்சல்தான் இந்தத் திருமணம் என்று தோன்றியது.

லீலை

பூதக்கண்ணாடியை வைத்து
நாளிதழ் படித்துக் கொண்டிருந்தேன்
வர வர நாளிதழ்கள்
உத்திரகிரியை பத்திரிகை போலாகிவிட்டது
பருவத்தில் ரதி போன்று
இருந்தவர்கள் எல்லாம்
காலச்சக்கரத்தில் சிக்கி
கண்ணாடி பார்த்து அழுகிறார்கள்
மறதியும், தூக்கமும்
இல்லையென்றால்
எல்லோரும் எப்பொழுதோ
தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்
பார்க்க சகிக்காதவற்றையெல்லாம்
மூலவர் பார்த்துக் கொண்டு
சிவனே என்று இருந்ததால்
சுடலை சுடுகாட்டுச் சாம்பலை
பூசிக் கொண்டு எங்கோ
அலைகின்றான்
உறக்கத்தை யார்
கடன் தருவார்கள்
உன்மத்தக் கூத்தனே
நெறிகெட்டவர்களை உச்சத்திலும்
அப்பாவிகளை பராரிகளாகவும்
ஏன் வைத்திருக்கிறாய்
பசிக்குச் சாம்பலையும்
மானத்தை மறைக்க கையையும்
கொடுத்ததற்கு நன்றி
சொல்ல முடியுமா
தீயில் தின்னப்படும் உடலை
போகக் கடலில் மூழ்கடித்து
முற்பிறவிகளை மறக்கடித்து
விளையாடுவது தான்
உன் திருவிளையாடலோ?

ப.மதியழகன்

ஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு … !

 
1
ள்ளூர இருக்கிறது அந்த வலி
தாய்வீடு பற்றி –
பெண்களைப்போல ஆண்களுக்கும்;
என்னதான் உயிரோடு ஒன்றினாலும்
தேனில் கலக்கும் கசப்புபோல்
கலந்துதான் போகிறது அந்த விஷம்,
என் அப்பா என் அம்மா
என் வீடென – என்னதான் பார்த்தாலும்
தன் வீட்டின் அக்கறை எப்படியோ அவளுக்கு
முன்னதாகியே விடுகிறது;
அதுசரி, அக்கறைதானே என்றுதான்
விட்டுவிட்டேன் நானும், அதனாலோ என்னவோ
என் வீட்டு உறவுகளின்னும்
பிரிந்தேக் கிடக்கின்றன!!
————————————————————————————–
2
நீ
செருப்பு வாங்கிக் கொண்டாய்
உன் தங்கைக்கும்
சேர்த்து நான் வாங்கினேன்,
உனக்கென ஒரு
புடவை எடுத்துக் கொண்டாய்
உன் அம்மாவிற்கும் ஒரு புடவை எடுத்தேன்,
அப்பாவிற்கு வேட்டியும் சட்டையும்
வேண்டுமென்றார், உன் அப்பாவிற்கும் ஒன்றைச்
சேர்த்தே வாங்கினேன்,
எதிலும் எனக்குப் பாகுபாடில்லை – உனக்கு
எல்லாவற்றிலும் இருக்கிறதென்பதை – நீ அந்த
சட்டையை பிரித்து
திருப்பி திருப்பிப் பார்க்கையில்
புரிந்துக் கொண்டேன்!
————————————————————————————–
3
ப்பாவிற்கு நீயென்றால்
கொல்லைப் பாசம்,
ஆனால் ஒரு குரல்போட்டு அழைத்ததும்
நீ ஓடிச்சென்று நின்ற இடம்; உன்
அப்பா அழைத்த
இடமாகவே இருந்தது!
————————————————————————————–
4
ருக்குப் போகையில்
எல்லோருக்கும் என்னென்னவோ
வாங்கத் தோணும்,
எனக்குப் போலவே உனக்கும்
கனவுகள் கூடும்..,
ஆனாலும்,
அதிலும் அடிப்பட்டுப் போயிருக்கும்
என் கனவுகள்..
————————————————————————————–
5
ன் பொண்ணு
என் பொண்ணுன்னு சொல்ற
என் அம்மாவைவிட –
உனைப் பெற்றவளாக உன்
முன்வந்து நிற்கும் நம் அம்மாவிடம்
எனக்கெந்த வேறுபாடுமில்லை,
ஆனாலும்,
என்னம்மா பாவம் என்பதான ஒரு
வருத்தமெனக்கு!!
————————————————————————————–
6
வே
ளைவேளைக்கு
சோறு போட்டாய்,
தண்ணீர் சுடவைத்து காலாற
ஊற்றினாய்,
உடம்பு வலித்தால் தைலம் தடவி
சுலுக்கெடுத்துவிட்டாய்,
வீடுவாசல் பெருக்கி கோலமிட்டு
அழகுபடுத்தினாய் –
ஆனாலும்
உன் வியர்வையால் நனைந்த நம் வீடு
பாசத்தால் அத்தனை
நிறையவேயில்லை..
————————————————————————————–
7
நீ
மூச்சுக்கு முன்னூறுமுறை காட்டினாய் – நீ
வீட்டிலிருந்து கொண்டுவந்தப்
பொருட்களை,
நான் ஒருமுறையேனும்
கேட்டுவிட நினைக்கிறேன் – அம்மா
வாங்கித் தந்த அந்த புடவைப் பற்றி,
உனக்குப் பிடித்த நிறம்தான் என்றாலும்
உனக்குப் பிடித்த புடவைதான் என்றாலும்
அதில் வேறு ஏதோ ஒன்று உனக்கு
ஒட்டவேயில்லை,
உண்மையில்,
நீ உடுத்தாத அந்த புடவையிலிருந்துதான்
கிழிகிறது –
அந்த அம்மாவின் பிள்ளைக்கான மனசு!!
————————————————————————————–
8
ன்னதான் சிரித்து சிரித்துப்
பேசினாலும்
பழகினாலும்
உன் அன்பின் உயிர்ப்பு நிறைந்த அந்த
ஒரு சொட்டுக் கண்ணீர் –
அவர்களின் காலடியிலேயேச் சொட்டியது,
நான் –
அதையும் இயல்பென்று கடந்துசெல்கிறேன்..
————————————————————————————–
9
போதும் போதும்மா
பொழுதுபோயி தலையில தண்ணி ஊத்தாதன்னு
எத்தனை முறைம்மா உனக்குச் சொல்றது’ன்னு வருந்தி
துண்டெடுத்து உன் தலை துவட்டிவிட்ட என்
அம்மாவின் வார்த்தைகள் உன்
தூக்கத்தைக் கெடுத்தன;
‘என்னடி மணியிப்போ…., வா வா
உடம்பொன்னும் ஊசிப் போகாது
நாளைக்குக் குளி’ என்று சொல்லி
அதட்டிக் கதவடைத்துவிட்டுப் போன
உன் அம்மாவின் வார்த்தைகள் உனக்கு
அக்கறை யாயின’ எனும்
மனப்போக்கில்தான் –
ஒரு காலபெருவெள்ளம் பிளவு பட்டிருக்கவேண்டும்!
————————————————————————————–
10
ண்டவாளத்தின் இரு தடம்போல
சேர்ந்தே பிரிந்தும்
பிரிந்தே சேர்ந்தும் தானிருக்கிறது – நம்மிரு
குடும்பத்திற்கான மனசு;
என் வீட்டுத் தோட்டத்தைக்
காட்டிலும், அழகான பூக்கள் உனக்கு
உன் வீட்டு வாசலிலில் மட்டுமேப்
பூத்துக்கிடந்தன;
என் வீட்டு மாடியில் தெரியும்
சூரியனை விட – உனக்கு
உன் வீட்டு ஜன்னல் வழியேத் தெரியும் வெளிச்சம்
மிக பிரகாசமாக இருந்தது;
இங்கே தேனில் அரிசி வேகவைத்து
சமைத்தாலும், அதைவிட
உன் வீட்டுச் சமையலிலிருந்து சிந்தும்
சோற்றுப் பருக்கைகூட உனக்கு இனிப்பாகவே பட்டன;
எதற்குத் தான் இப்படி இழுத்து
ஒரு பக்கமாக கட்டப்பட்டதோ – இக்
குடும்பத்தின் மூலச் சங்கிலி…’ என்று அழாமல்
உடையும் மனசை விதியென்று
தேற்றிக்கொள்ள முடியவில்லை என்னால்
எங்கேனும் அறுபட்டு
எங்கேனும் போய்த்தொலையட்டும் அதற்கான
அதன் புள்ளியில்’ என விட்டேவிட்டேன்;
அது சாய்ந்து
அதன் விளக்கு சாய்ந்து
ஒரு பக்கமாகவே எரிகிறது திரி
எங்கோ ஒரு பக்கம் இருட்டாகவே
மூடியும் திறந்தும் கிடக்கிறது வீடுகள்..

வித்யாசாகர்

ழ கவிதைகள்

ழ என்ற சிற்றேடு ஆத்மாநாம் மூலம் 1978 ஆம் ஆண்டு உருவானது.  அவருக்கு பக்கபலமாக ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த், காளி-தாஸ் போன்ற பல நண்பர்கள் செயல்பட்டார்கள். ழ ஒரு சிற்றேடு.  மிகக் குறைவான பேர்களே வாசித்திருப்பார்கள்.  1978 லிருந்து 10 ஆண்டுகள் செயல்பட்ட ழ பத்திரிகை, ஆத்மாநாமின் தற்கொலையால் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. தமிழ் கவிதைக்கு ஒரு மாற்றத்தை எளிய வழியில் ஏற்படுத்திக் கொடுத்தது. இக் கவிதைகளைப் படிக்கும்போது கவிதை எழுதுவதற்கான ஒருவித ஒழுக்கத்தை பலரும் கற்றுக்கொள்ள முடியும்.

அழகியசிங்கர்

ழ 6வது இதழ்

பிப்ரவரி / மே 1979

ஒரு கவிதை

 இந்தக் காலத்தில்
 பிரும்மத்தை
 கள்ளச் சந்தையில்
 வீடீயில்
 மந்திரிகளின் பொய்களில்
 எதிலும் (மே) குறைபிரசவத்தில்,
  அவசரத்தில்
 தன்மைகள் எல்லாம் தோற்ற தந்திரத்தில்
      -தான்
 காணமுடியும் போலிருக்கிறது.
   -மீண்டும்-
 இந்தக் காலங்களில்
 தெய்வத்திற்கும் (கூட) ஊர்
 சுற்றும் ஆசை ஏற்பட்டுவிட்டது
 என நினைத்தேன்-
 சினிமாவெறும் கோவிலில்
 நேற்று இரவு அவள் வந்தாள்
 சிரித்தாள்
 சொல்லறுற்றாள்
 ”எப்போதுமே அவன்ஊர்களிலிருந்ததில்லை”

      s. சம்பத்

தூக்கம் நிறைந்த கனவுகள்.. (சிறுகதை)

——————————————————————————————–
சார் வணக்கம் சார்..”
“ம்ம்.. ம்ம்..”
“எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே?”
“எந்தா வேணும் பர”
“சும்மா உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன் சார்…”
“அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை என்பதால் அவரே மீண்டும் அருகில் சென்று அழைத்தார் –
“சார்….”
“சொல்லுப்பா டண்டா-பாணி எந்தா வேணும், நான் பிசியா இருக்கேன்ல”
“அப்படியே என் சம்பளம் பத்தி..யும்..”
“சம்பளம்தான் போட்டாச்சே பேங்குக்குப் போய்க்காணும், அவ்வட சென்னு நோக்கு”
“வந்துச்சு சார் இரண்டு நாள் குறைவா வந்திருக்கு சார் அதான் என்னன்னுக் கேட்கலாம்னு..”
“அப்படியா, அங்க ஒங்க முதலாளி இருக்கார்ல போயி அவரைக் கேளு”
“என்ன சார்..?”
“சென்னு அவரை நோக்குன்னு..”
“சரி சார்..”
அவர் சரியென்று தலையாட்டிவிட்டு அந்த அறைவிட்டு வெளியேப் போனதும், அவன் துள்ளிக் குதித்துச் சிரித்தான், பக்கத்து அறையிலிருந்து நான் என்ன ரசூல் என்னாச்சு ஏன் இப்படி சிரிக்கிற என்றேன், அவனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. எழுந்து என் அறைக்கு வந்து என்னிடம் –
“சா…ர்.., சம்பளவு குறைவு சார்…” மீண்டும் காலை உதைத்துக்கொண்டு சிரித்தான். அவன் நாங்கள் பணிபுரியும் குவைத்து நாட்டின் தனியார் நிறுவனத்தில் உடன் வேலையாற்றுமொரு கணக்காளன், கேரள நாட்டைச் சேர்ந்தவன், தமிழரைக் கண்டால் தெரிந்தோரிடம் தமிழ்கலந்து மலையாளம் பேசுவான், புதிய தமிழர்கள் எனில் முற்றிலும் மலையாளத்தில் பேசி தன்னை தனித்த தேசத்திற்கு உரியவனாகக் காட்டிக் கொள்பவன்.
ஒரு அறையில் இரு பிரிவு செய்து ஒரு புறத்தை அவனுக்கும் மறுபுறத்தை எனக்கும் கொடுத்துள்ளது எங்கள் நிறுவனம். எனவே யார் இங்கு சம்பளவிவரம் குறித்து அவனிடம் ஏதேனும் கேட்க வந்தாலும் என்னைக் கடந்தே போயாகவேண்டும் என்பதால் இவன் செய்யும் இங்ஙனமான கீழ்த்தரமான செயல்கள் என்னையும் பாதிப்பதுண்டு. ஆனால் யாரைப்பற்றியும் அவனுக்குக் கவலையில்லை, அவனுக்கு இங்ஙனம் விவரம் கேட்க வரும் தொழிலாளிகளை இங்குமங்குமங்குமென அலையவிட்டு துன்புறுத்துவதில் ஒரு மகிழ்ச்சி இருந்தது.
நான் ‘பாவம் ரசூல் ஏன் இப்படி செய்கிறாய்’ என்று கேட்பதற்குள் அந்த அப்பாவிப் பெரியவர் மீண்டும் உள்ளே வந்தார்.
“சா..ர்..”
அவர் அழைத்ததும் இவன் முகத்தை இரும்பு போல் இறுக்கிக் கொண்டான். கால்மீது கால்போட்டுக் கொண்டு –
“ச்சொல்லுங்க டண்டா பாணி, மொதலாளி கிட்ட கேட்டாங்களா? என்ன சொன்னா(ன்) அவரு?”
“உங்க கிட்ட பேசச் சொன்னாரு சார்”
“பின்ன பர.. எந்தா ஆயி”
“ரெண்டு நாளு சம்பளம் குறைவா வந்திருக்கு சார்”
“ஆ..னோ, நான் நோக்கிக் கொள்ளாம், ஈ மாசம் சேர்த்து இட்டுகொடுக்கா(ம்) நீ போய்க்கோ.
“கண்டிப்பா வரும்ல சார்….’
“வரும்ப்பா.. நான் சொல்லியாச்சுல்ல வரும் போ…”
மீண்டும் அவர் வெளியேறிப் போனதும் காலை உதைத்துக்கொண்டு சிரித்தான். எனக்கு கோபம் மண்டை உடைய வந்தது, அதற்குள் அவனே எழுந்து என் பக்கம் வந்தான், வந்து –
“மதி..யே இவ்வட நோக்கு, ஆயாள கண்டா ? கேட்டு முடிப்பதற்குள் சிரித்தும், சிரித்துக்கொண்டே காலை உதைத்துங்கொண்டான்.., அதைத் தொடர்ந்து ‘சார் கண்டிப்பா வரும்ல சார்…’ என்று அவர் சொன்னதை வேறு மீண்டும் சொல்லிக் கிண்டலடித்தான்.
“நீ பண்றது நல்லதுக்கில்ல ரசூல் அவர் பாவம் பெரியவர், வறுமையின் வலி உனக்கு கேலியாகப் படுவது சரியல்ல”
“என்ன சரியல்ல???”
“உனக்கேன் இத்தனைச் சிரிப்பும் ஏளனமும்? விவரம் கேட்டால் அதற்கு பதில் சொல்லிவிட்டுப் போயேன்..”
“அதனைக்கொண்டு நினக்கெந்தா ஆயி, ஆயாளு எந்தா நிண்ட அச்சனானோ?”
“அவசியமில்லாம பேசாத ரசூல்…”
“பின்னே; நீ எந்தன உங்காளுக்கு வக்காலத்து வாங்குதா?”
“பெரியவரை நீ கிண்டல் பண்ணுவ கேட்டுக்குனு சும்மா இருக்கவா?”
“நான் என்ன சொல்லியாச்சு.. அவர் கேட்டதுக்கு பதில் சொல்லியாச்சி?”
“நீ எப்படி சொன்னன்னு எனக்குத் தெரியாதா, அவர் எவ்வளோ மரியாதையா கேட்கிறாரு? அதும் சம்பளம் பற்றிதானே கேட்கிறாரு? உன்னுதுல ரெண்டுநாளு சம்பளம் குறைஞ்சா உனக்கு எப்படி இருக்கும்?”
“அதுக்கெல்லாம் நா(ன்)ஒன்னும் செய்யாம்பற்றில்லா மோனே.., மோல் ல இருக்க ஆள் சொன்னா தரலாம், அதான் மொதலாலியப் போயி பாருன்னு சொன்னேன், ஞான் வேறெந்தா செய்யும், திஸ் இஸ் ஆபிஸ், நானொன்னும் இவ்வடத்து மொதலாளி அல்லல்லோ”
“நீ எதுவான்னா இரு, அவரின் பணிவை ஏன் கிண்டலடிக்கிறாய், நீயும் தொழிலாளி அவரும் தொழிலாளி’
“………………”
“அதும் டண்டா பானி என்று அவரின் பெயரைவேறு ஏளனமாய் அழைக்கிறாய்”
“பின்ன அவன்ட பேரன்தா ?”
டேய் அது தண்டபாணிக்கும் நீ சொல்ற டண்டா பானிக்கும் வித்தியாசமில்ல, அவர் எவ்வளோ பெரியவரு, எப்படி வணங்கி உன்னிடம் பேசுறாரு?”
“ச்சீ.. இதெந்தா டோ…, அவன் பேசினா நானும் பேசனும், அவனும் நானும் ஒன்னானோ ?”
“வேற ? உனக்கு தனியா தலையில என்ன கொம்பா முளைச்சிருக்கு?”
“அவன் ஆபிஸ் கிளின் பண்றவன், வெறும் வொர்கரல்லோ, ஆம் ய அக்கவுண்டன்ட், ஓபிஸ் ஸ்டாஃப், அறியோ?”
என்னால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. கோபம் உச்சிக்கு ஏறியது. கையில் இருந்ததை இருந்தபடியே தூக்கி அவன் முகத்தில் விட்டெறிந்தேன்..
“லுக்.. நான் ஜி.எம் க்கு சொந்த அனியனானு(ம்), நின்னை இன்னு ஞான் கொண்ணுமுறிக்கும்”
“நீ எந்த மயிரான்னா இரு.. எதனா பண்ணிட்டுப் போ.. ஏண்டா என் தமிழன கிண்டல் பண்ற? நான்கன்னா என்ன உங்களுக்கு எளக்காரமா? தமிழன்னா என்ன காருதா? இல்லை தொட்டுக்க இனிக்குதா?” என்று கத்தி கோபத்தில் எழுந்து அவன் ஏதோ சொல்லிமுடிப்பதற்குள் சட்டைப் பிடித்து கத்தி பேச, பதிலுக்கு அவன் பேச, கோபத்தில் ஓங்கி ஒரு அரையே விட்டுவிட்டேன், பல் ஆடி ரத்தம் கொட்டிவிட்டது..
அவ்வளவுதான், அடுத்த நொடியே அலுவல் மொத்தமும் எழுந்து என் அறைக்கு ஓடிவந்து நின்றது. மேலாளர் வந்தார். அவுங்க அண்ணனும் வந்தார். இரண்டுபேரையும் ஆங்கிலத்தில் விசாரிக்க, அவன் “நான் ஒன்றுமே செய்யவில்லை ‘தண்டபாணிக்கு சம்பளம் குறைவுன்னு வந்தான், உங்களைப் பார்க்கச்சொல்லி சொன்னேன், நீங்கள் சொன்னதும் இம்மாதம் சேர்த்து இட்டுத்தருவதாகவும் சொன்னேன். உங்கள் அனுமதி இன்றி நான் ஒரு பைசா கூட இங்கு யாருக்கும் தருவதில்லை. அதற்குள் என்னவோ இவனுக்கு இத்தனைக் கோபம் வந்து என்னை அடிக்கிறான். ஐ யாம் ஆனர் இன் மை டியூட்டி” என்று வேடமிட்டுப் பேசினான்.
என்னைக் கேட்டார் மேலாளர், என்ன செய்த என்றார், இங்ஙனம் இங்ஙனம் என்றேன்.
நீதான் முதலில் சட்டியை பிடித்தாயா என்றார் “சட்டையைப் பிடித்தது தப்புதான் சார்” என்றேன்
“அடிச்சிருக்க இது பெரிய தப்பு இல்ல?”
“ஆமா சார்..”
“அது ரத்தம் வர அளவு அடிச்சிருக்க, இது அரபு தேசம், காவல்நிலையத்துல புகார் சொன்னா உடனே உன்னை கைது செய்வாங்க, ம்ம்.. அவன்கிட்ட மன்னிப்பு கேளு” என்றார்.
தப்பு தான் சார், ஆனா இவன் ‘என் ஒட்டுமொத்த இனத்தையே அவதூறாகப் பேசுறான் என்று எப்படி அவரிடம் நான் எடுத்துச் சொல்ல? அதற்கு மாறாக ‘இல்லை இவன் தண்டபாணி போன்ற ஆட்களை கிண்டலடித்துப் பேசுகிறான்’ என்றேன்.
“அதற்கு.. நீ அவனை அடிப்பியா? இது என்ன உன் வீடு உன் வேலையாட்கள் என்று நினைத்தாயா? நீ நினைத்தால் எல்லாம் நடக்கவா நாங்கள் இங்கிருக்கோம்?”
“இல்ல சார்.. தப்பு தான் இனிமே அப்படி..”
“செய்றதை செய்திட்டு இனிமே என்ன இனிமே..”
“அவன்தான் சார் முதல்ல..”
“அவன் முதல்ல உன்னை அடிச்சானா? வாயிலதானே பேசினான்”
“ஆனா அவதூறு பேசினான் சார்”
“ச்ச.. நீ சாதுவானவன்னு நினைத்தேனே, இப்படி செய்திருக்கியே, எப்படி ரத்தம் வரமாதிரி அடிச்சிருக்க?”
“…………………” இனி பேசி பயனில்லை மௌனமாக நின்றேன் நான்.
“இதை சும்மாவிட முடியாது, இதற்கு நீ மன்னிப்பு கேட்டாலும் இல்லை என்றாலும் உனக்கு இது தான் கடைசி எச்சரிக்கை எழுந்து போ இங்கிருந்து” என்றார்.
நான் முகம் வாடி தலைகுனிந்து அங்கிருந்து வெளியேறி கீழறைக்கு வந்தேன். ‘உடனே டிசிப்ளினரி ஆக்சன் எடுங்க’ன்னு அவர் கத்தி சொல்லும் சப்தம் எனக்கு வெளியே வருகையில் கேட்டது.
அடுத்த சில மணித்துளிகளின் நகர்விற்குப் பின், ‘இரண்டு நாள் பணியிலிருந்து எனைத் தள்ளிவைத்திருப்பதாக மெமோ வந்தது. குமுறல் தாங்க முடியவில்லை எனக்கு. அவன் என்னிடம் பேசும்போது சொன்ன ‘டன்டா.. பானி’க்கும் அங்கே அவரிடம் பேசுகையில் சொன்ன தண்டபாணிக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.
ஆனால் இது புதிதல்ல, இது இங்கே தொடர்ந்து நடக்கும் இவர்களின் அட்டூழியம். இப்படி பணியிடத்தில் இவர்கள் செய்யும் கேளிக்கையும் அரசியலும் ஏராளம், அரபு தேசத்தில் வேலை செய்ய வரும் தமிழர்கள் அரபியைவிட இவர்களால் துன்புறுவது கொஞ்சநஞ்சமல்ல. அலுவல் சூழல் என்பது கூட வேறு, அதை தவிர்த்து கட்டுமான பணி நடக்குமிடம் மற்றும் பணிமனைகளில் இவர்கள் ஆடும் ஆட்டம் உச்சம். ஆயினும், சில இடங்களில் இரண்டாம் பட்சமாய் நம்மை நடத்தினாலும் “டேய்.. அவன் நம்மாளுடே” என்று சொல்லி தமிழருக்கு உதவி செய்வதும் சில விதிவிலக்காய் இங்கே நிகழ்வதுண்டு.
என்றாலும், பிறரை மதிக்கவும் அன்பு காட்டவும் இயல்பிலேயே கற்ற தமிழினம் அவர்களின் அரசியலில் படும் அவதிக்கு நிறைய கதைகள் வளைகுடா நாடுகளில் தேடாமலே ஆங்காங்கே கிடைக்கும்.
ஆக, அப்படி அவனின் துள்ளல் நகைப்பினூடே, அவன் வென்றுவிட்ட களிப்பினூடே இதர நாட்களும் கழிந்துப் போக, ஒருவேளை பேசியும் ஒருவேளை பேசாமலும் மாதங்களும் கடந்துப் போக, அந்த பழைய நினைவுகள் எல்லாம் மனதிலிருந்து அழிந்துபோய் அவனின் புதிய சிரிப்பை மட்டுமே பார்த்துச் சிரிக்கும் புதிய மனதினனின் மனநிலையில் இருவரும் சற்று மாறியிருக்க, பின்னொரு நாளில் கடைத்தெரு சென்றிருக்கையில் எதேச்சையாக அவனைக் கண்டேன்.
காலம் எப்பொழுதுமே அப்படித்தான் ‘வடுக்களை இதயத்தில் பதித்துவிட்டு காயங்களை ஆற்றிவிடுகிறது. அப்படித்தான், அவனைப் பற்றிய காயங்களையும் மனது ஆற்றிக்கொண்டுதான் விட்டது. அதோடு; என்னவோ, திடீரென அவனைக் கண்டதும் பழைய கோபமெல்லாம் இல்லாத மனதில் இடைவெளி விட்டுப்பார்த்த ஒரு நட்புணர்வு பீறிட்டது. அருகருகே இரண்டு வருடமாய் அமர்ந்து பணியாற்றிய, ஒன்றாக பேசி சிரித்த, ஒன்றாக அமர்ந்து உணவுண்ட உணர்வு போலது;
‘ஏய் ரசூல்’ கைதூக்கிக் காட்டி எப்படி இருக்கிறாய், இங்கே என்ன குடும்பத்தொடுப் பயணமா’ என்று கேட்டுவிட, அவனும் அவன் மனைவி பிள்ளைகளை விட்டு ஓடி வந்து எனை கட்டிப்பிடித்துக் கொள்ள, ஒரு நொடி உடம்பெல்லாம் ஆடிப்போனது. அடுத்தடுத்து.. எப்படி இருக்க, இன்னைக்கு ஏன் வேலைக்கு வரலை, இங்க யாரிருக்கான்னு இரண்டொரு வார்த்தை பேசி இன்னபிற நலமெல்லாம் கேட்டுவிட்டு,
அவனுடைய மனைவி குழந்தைகளை அருகே அழைத்து ‘இதோ பாரு இதுதான் மதிமாறன், என் அலுவல் சிநேகிதன், என் பக்கத்துக்கு அறை, ரொம்ப நல்லவன், நான் கூட சொல்லுவனே, எனக்கு ரொம்ப பிடிக்கும்னு மதி’ன்னு அவன்தான்’ என்றான்.
உடனே அவனுடைய மனைவியும் “ஆம் அதுசரி ஆயாளானோ; உங்களைக் குறிச்சி ஒருபாடு பரஞ்சுக் கேட்டுட்டுண்டு, எங்ஙன சுகந்தன்னையானோ?’ என்றாள்.
என்ன சொல்ல, ம்ம்.. நலம், நலம்தான் என்று சிலாகித்தேன்.
மற்றபடி பெரிதாகச் சொல்ல வேறில்லை என்னிடம், சும்மா ஓரிரு நிமிட நலம் விசாரிப்புதான். பின் பார்ப்போம் என்று கை குலுக்கி விட்டு அவன் போனான், நானும் வந்தேன்.
ஆனால் மனசு எப்படியோ ஒரு கனமாவும் லேசாவும் இருக்கமாதிரி ரெண்டாங்கட்டானா இருந்தது. ச்ச.. இவனுக்கு என் மேல இவ்வளவு பாசமா என்று ஒரு ஆச்சர்யம் எழுந்தது. அதன்பின் கொஞ்ச நாளில் அவன் எங்கள் நிறுவனத்தை விட்டு நின்று விட்டான். வேறு எங்கோ நல்ல வேலை கிடைத்ததாகச் சொல்லி எங்களைவிட்டுப் போனான்.
பிறகு ஓரிரு வருடங்கள் கழிந்தது. அவனில்லாத அறையில் தமிழருக்கான மரியாதை நிறைந்து இருப்பதாக எனக்கொரு நிறைவு இருந்தது, என்றாலும் அவனின் தனிப்பட்ட நட்பிற்கென்றும் மனதின் ஓரத்தில் ஒரு தனியிடம் இல்லாமலில்லை. அடிக்கடி அவனின் நினைவுகளோடும் நாட்கள் கடந்தன..
சுற்றும் பூமி நிறைய மனிதர்களைப் பிறப்பித்துக் கொண்டும், இருந்த மனிதத்தை மக்கள் அழித்தும் மிச்சப்படுத்தியும் வைத்திருக்க, ஏதோ ஒரு திருப்பத்தில் வெகுண்ட பூமி வெப்பம் தகிக்க நகரும் காலத்தோடு மீண்டும் மீண்டுமாய்ச் சுற்றிக்கொண்டு வருடங்களை விழுங்கிவிட; எங்களுடைய சம்பள ரசீதில் பேச்சுக்குக் கூட ஒரு காசு பணம் ஏறாமல், இதர மலையாளி மேலாளர்களின் சதிக்குட்பட்ட விடுமுறை தொலைபேசி மற்றும் தாமத வருகைக்கான கட்டணம் மட்டும் சம்பளத்தில் பிடித்ததுபோக, ஒரு வஞ்சனையின் வலிகலந்த சொச்ச சம்பளம் மட்டும் எப்பொழுதும்போலென அளவு மாறாமல் கிடைத்துக் கொண்டிருந்தது.
நாங்களும் வேறு வழியின்றி, வளைகுடா நாடுகளில் எங்குப் போனாலும் அவர்களேயிருக்கும்பட்ச்சத்தில் பேயிடமிருந்து தப்பித்து இன்னொரு புதிய பேயிடம் சிக்குவானேனென, ஒரு செக்கில் பூட்டிய மாடுகளாக மலையாள ஆளுமையின் கீழ் கட்டுண்டுக் கிடந்தோம்.
அப்படிக் கிடந்த ஒரு நாளில் –
வேறு பல பணிகளுக்கிடையில் நான் ஆழ்ந்திருக்க திடீரென பக்கவாட்டில் யாரோ உள்நுழைவதாய் உணர்ந்து எதேச்சையாக திரும்பிப் பார்த்தேன் –
ரசூல்….
ரசூல் நின்றிருந்தான்.
பெரிய கோர்ட் சூட் டை என பாந்தமாக அழகாக வந்து என்னெதிரே திடுமென நின்றான்.
தமிழ் மலையாளம் இனம் அடையாளம் என எல்லாவற்றையும் மனது உதறிவிட்டு நட்பின் தொலேறி அமர்ந்துக் கொள்ள, எனக்கு அவனைக் கண்ட சந்தோஷம் பெரிதாக இருந்தது. அதும் இவ்வளவு அழகா அவன் வந்துநிற்க –
ஹேய்… ரசூல்….. என்ன இது ஸ்மார்ட்……….. எப்படி இருக்க என்றேன்.
அவன் ஓடி வந்து எனைக் கட்டிபிடித்து சலாம் சொல்லிவிட்டு ‘நல்லாருக்கேன் மதி..யே. நீ எப்படி இருக்க, நான் ஒரு பெரிய அக்கவுண்ட் ஆபிசரா ஆயிருக்கேன். நம்ம கம்பனி போல பல மடங்கு கூடுதல் சம்பளம் எனக்கிப்போ. இங்க ஒரு ஆடிட் இருந்தது அதான் வர வழியில அப்படியே உன்னையும் பார்க்கலாம்னு வந்தேன்’ என்றான்.
எனக்கு மனது மகிழ்வாள் நிறைந்தது. நம்மோடிருந்தவன் ஒருவன் நல்ல நிலையில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சிப் பொங்கியது. என்னதான் தனக்கான பிடிசோற்றுக்கு பஞ்சம் என்றாலும் தன் நண்பனொருவன் இப்படி குறுகிய காலத்தில் ஒரு பெரிய நிலைக்கு வந்துள்ளான் என்று அறிகையில் அதைக் கண்டு பூரித்து வாழ்வது உயர்வெனப் பட்டது.
மனதார மேலும் வளர்ந்து பெரியாளாக வர வாழ்த்திவிட்டு பின் இருவரும் அருகிலிருந்த சிற்றுண்டி விடுதிக்குச் சென்றோம். அங்கேயே அமர்ந்து இருவரும் தேநீர் அருந்தினோம். வீட்டு விஷயங்கள் பேசினோம். அடுத்த நகர்வு குறித்து, இரு நிறுவனங்கள் குறித்தும் பேசி சில மணித்துளிகள் அரட்டையடித்து வேறு எல்லோரைப் பற்றியும் நலம் விசாரித்துவிட்டு மீண்டும் சந்திப்பதாய் சொல்லி பிரியாவிடை பெற்றோம்.
நான் இங்கு நல்ல பதவியில் இருப்பதாகவும், நிறைய உழைப்பதாகவும், இதை வேறு நிறுவனங்களில் செய்தால், இதே பதவிக்கு இன்னும் நிறைய சம்பாதிக்கலாமென்றும் அதற்கான முயற்சியினைச் உடனே செய்யென்றும் தகவல் சொல்லிவிட்டுப் போனான் ரசூல்.
மிக விலையுயர்ந்த மகிழுந்தில் ஏறி சாலைதிரும்பி மீண்டும் ஜன்னல்திறந்துப் பார்த்து எனக்கு கையசைத்துவிட்டுப் போன அவனின் நட்பு எனை நெகிழத் தான் செய்தது.
அவனை வழியனுப்பிவிட்டு வந்து நான் என் இருக்கையில் அமர்ந்தேன். அமர்ந்து பின்னால் சாய்ந்தேன். ஒரு பெரிய கேள்வி மனதிற்குள் எழுந்தது. என்ன மாதிரியான உலகமிது?
எப்படி இங்கே வாழ்வது?
எனக்குத் தெரிந்து அவனிடம் சொல்லிக் கொள்வது போல் அத்தனைச் சிறப்பென்று ஒன்றுமில்லை. அத்தனை பிறர் பற்றிய பொது நல்லெண்ணம் என்றெல்லாம் அதிகமாக அவனுக்கில்லை. பிறர் துன்புறுவதைக் கூட மகிழ்ச்சியாகப் பார்க்கக் கூடியவன். தோழமை ஏற்பட்டால் நன்றாக பேசுவான் நட்பாக இருப்பான். நட்பாக இருப்பான்.. ஆம் அதுதான், அங்கிருந்து தான் சற்று நூல் பிடித்தேன், அவன் நட்பாக இருந்தான். பழகியோர் உறவுற்றோர் என உற்றார் எல்லோரிடமும் அவன் நட்பாக இருந்தான். கிண்டலடித்தாலும், கோபம் கொண்டாலும் பின் அதை மறந்து புதிதாகப் பிறந்தவனைப் போல் பழகினான். பிடிக்காதவரிடமும் அன்பு பாராட்டினான். அன்பு செய்வது போல் நடிக்கவேனும் செய்தான். அதில் சிலருக்கான அலாதி இருந்தது.
அலுவல் என்றில்லை வீட்டிலும் அவன் மிக்க அன்பு செய்தான். பொதுவாக நாளெல்லாம் அவன் வீட்டிற்கு தொலைபேசியில் அழைப்பதுண்டு. மனைவியைப் பற்றியும் குழந்தைகள் பற்றியும், அவனுடைய அண்ணன் தம்பிகள் அக்காத் தங்கைகள் பற்றியுமெல்லாம் மிக கவனம் செலுத்துவான். அங்குதான் அங்குதான் எனக்கு அந்த அவனுடைய சூழ்சுமம் புரிய வந்தது. ஒன்றுமேயில்லாத ஒருவன் அத்தனை எளிதில் உச்சியை அடைவதில்லை. இறைவன் எல்லோருக்குமே ஒரு சிறப்பைக் கொடுத்தே வைத்துள்ளான். அதைப் புரிபவர்கள் பெரியாளாய் ஆகிறார்கள். அவன் ஆனதன் ரகசியம் கூட அதுதான் குடும்பத்தை’ தனது சுற்றத்தை’ தனைச் சார்ந்தோரை அவன் நன்றாக வைத்திருந்தான். எத்தனைதான் அவன் சுயநலத் தனமாக இருந்தாலும், பிறர் பற்றிய கேளிக்கையான எண்ணங்களைக் கொண்டிருந்தாலும் வீட்டில் அன்பும் அக்கறையோடுமிருந்தான்.
மனிதர்கள் பொதுவாக இரு வேறாக இருக்கிறார்கள்; ஒன்று, வீட்டைப் பார்த்துக் கொள்வது, அல்லது நாட்டைப் பார்த்துக் கொள்வது. இரண்டையும் பார்த்துக் கொள்வதற்குப் பக்குவப் பட்டவர்கள் மிகக் குறைவு. அதிலிருந்து நாம் மாறுபட வேண்டும். வீடும் பெரிது நாடும் பெரிதென்று இரண்டையும் இரு கண்ணினைப் போல் காக்க வேண்டும். நாட்டிற்கு செய்ய நினைக்கும் நல்லவைகளை வீட்டிலிருந்தேத் துவங்கிடல்வேண்டும். அப்படித் துவங்குபவர்களின் கையில்தான் நாளைய உலகின்’ சமதர்ம செழிப்பின்’ பொது அக்கறை நிறைந்த மனிதர்களின் விடிவிற்கான எதிர்காலம் தொக்கி நிற்கிறது. அவர்களில் ஒருவனாக நானிருக்க முயல்வேன், இவனின் வளர்ச்சியைக் கண்டெல்லாம் நாம் நம்மை மாற்றிக் கொள்ளக்கூடாது. நம் வெற்றி மட்டும் பெரிதென்று நம்புதல் நம் பண்பல்ல. எனை நம்பும் எஜமானனை வெறும் பணத்திற்காக விட்டுச் செல்பவனல்ல நான். நான் இருக்குமிடத்தில் நான் சரி. மனதால் எண்ணத்தால் நான் சரி. நமக்கான கதவு திறக்கும். நிச்சயம் திறக்குமென்று எண்ணிக் கொள்கையில் மேலே ஒரு அறையின் ஜன்னல் திறக்கப்பட்டது.
எங்களுக்கு தேநீர் மற்றும் குடிநீர் கொண்டுவரும் தம்பி அந்த ஜன்னலருகே வந்து ஒரு பிடி சோறள்ளி அந்த சுவற்றின் மீது எட்டி வைத்தான். சோற்றின் வாசம் காற்றில் கலக்கும் முன்னே காகங்கள் பறந்து வருவதுபோல்; இங்கே புறாக்கள் கூட்டமாக பறந்துவந்து அமர்ந்தன. ஒன்றின் முகம்பார்த்து ஒன்றென சோறு கொத்தித் தின்றன..
அந்த தம்பி வெறும் சொற்ப சம்பளம் வாங்குபன்தான் என்றாலும் அவன்மீது ஒரு தனி மதிப்பே வந்தது. அதற்குள் இன்னொரு தட்டில் சோறுகொண்டு படிவழியே இறங்கி என் அறையின் வாசல் கடந்து அலுவலுக்கு வெளியே போய் வாசலில் நின்றிருந்த நாயொன்றிற்கு தட்டோடு சோறு வைத்தான். அந்த நாய் எகுறிகுதித்து ஓடிவந்து வாளை ஆட்டிக்கொண்டு அவசர அவசரமாக பசியில் உணவை கவ்வி கவ்வி விழுங்கியது..
எனக்கு உள்ளூர ஒரு வெப்பம் பரவ சரசரவென மேஜைக்கு வந்து என் அலுவல் பைக்குள்ளிருந்த என் வங்கிக் கணக்கட்டையை எடுத்து அதிலிருந்த வங்கியின் தொலைபேசி எண்ணிற்கு அழுத்தி வங்கியில் எனதான பணம் எவ்வளவு இருக்கிறது என்றுக் கேட்டேன். கணிசமான தொகை இருப்பதாகச் சொல்ல, அதில் கொஞ்சம் வீட்டிற்கு அனுப்பி விட்டு, மீதியை நண்பர்களுக்கு அனுப்பி பசியில் அவதிப்படும் ஏழ்மைக் குடும்பங்களுக்கு ஏதேனும் வாழ்வாதாரம் அமைத்துத் தரச் சொல்லியும், எஞ்சினால் அதை ஏழை மாணவர்களுக்கு படிக்கவேண்டி கொடுத்து உதவவும், அதேநேரம் அனாதை குழந்தைகளுக்கும் ஆதரவற்ற பெரியோர்களுக்கும் தந்துதவுமாறு கேட்டு அதற்குத் தக்க ஏற்பாட்டினை உடனடியாகச் செய்தேன்.
அதற்குள் தண்டபாணி வந்து நின்றார், சார்.. என் சம்பளம் எட்டு வருஷமா ஏறவே இல்லை சார், என்றார். நான் எப்படிச் சொல்வேன் எனக்கும் தானென்று. இருந்தாலும் அது போகட்டும், அது ஒரு சதி, அது ஒரு இனத்தின் மீதுத் திணிக்கப்படும் நெடுநாளைய சதி; அதிலிருந்து வெளியேற இன்னும் நாம் எத்தனை இழப்போமா என்று வலிக்க, ஒரு பெருமூச்சினையிழுத்து விட்டுவிட்டு, சொல்லுங்கள் ஐயா, நான் என்ன செய்ய வேண்டும் என்றேன்.
என் பொண்ணுக்குக் கல்யாணம் வேற வெச்சிருக்கேன் சார், நீங்கதான் ஒரு தமிழ் ஆளு இங்க பெரிய பொறுப்புல இருக்கீங்க, நீங்க சொல்லி ஒரு ரெண்டு லட்சம் லோன் வாங்கி கொடுங்க சார், நான் மாசாமாசம் தவறாம கட்டுவேன் சார், நான் கண்ணியம் தவரமாட்டேன் சார் என்றார். அவர் பேச்சு என் அப்பா வந்து என்னிடம் என் தங்கைக்கு கல்யாணம் நடத்திக் கொடேண்டா என்று கேட்டதுபோலவேயிருந்தது. பேசும்போதே அவரின் முதுமை வேறு ஒரு புறம் வலிக்க’ ஏழ்மை கண்களின் ஓரம் கண்ணீரின் ஈரமாக அவருக்குப் படிந்துப் போயிருந்தது.
நான் ஒரு நொடி யோசித்துவிட்டு என் மேலாளரை அழைத்து என் தங்கைக்கு திருமணம் உடனே ஒரு இரண்டு லட்சம் கடனாக தர இயலுமா என்று கேட்டேன், அவர் தவிர்க்கமுடியாத அவசரமெனில் உதவலாம் வங்கிக் கணக்கினுடைய எண்ணினைத் தா என்றார். நான் பெரியவர் தண்டபாணியிடம் திரும்பி அவருடைய வங்கிக்கணக்கு எண்ணினை எழுதித் தரச்சொல்லி வாங்கி என் மேலாளருக்குக் கொடுத்தேன். அவர் கண்ணீர் மல்க என் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதார். அதற்குள் சுனாமி சுனாமி சுனாமியாம் ஊர்ல சுனாமியாம், நிறைய கடலோரப் பகுதிகள் பாதிப்பாம், மக்கள் குடிசை கூட இல்லாம பள்ளிக்கூடங்களில் தங்கியுள்ளார்களாம் என்று நண்பர்கள் பதறி ஓடிவந்தனர்.
பதறாதீர்கள், ஆளுக்கொரு கைபிடித்து சுனாமியை நம்மால் நிறுத்திவிட முடியுமா என்றேன். அதெப்படி முடியுமென்றார்கள். சரி, ஆளுக்கொரு பங்கிட்டு பணம் அனுப்பினால் அது அவர்களின் சொச்சக் கண்ணீரையேனும் துடைக்க உதவுமில்லையா என்றுகேட்க எல்லோரும் ஆமென்று சொல்லி வாரி வாரிக் கொடுத்தார்கள். தன்னால் இயன்றளவில் மதம் இனம் என ஒன்றும் பாராது இங்குமங்குமென வாங்கிச் சேகரித்துக் கொடுத்தனர். உடனே அதை ஊரில் ஒரு நண்பர்கள் குழு வைத்து பாதிக்கப்பட்டோருக்கு இயன்றளவில் உதவி செய்ய ஏற்பாடு செய்தோம்.
சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் தொலைக்காட்சியில் ஒரு செய்தி வந்தது. சுனாமி இங்கும் வரும், பெரிய பாதிப்பு இருக்கலாம் எச்சரிக்கை என்றார்கள். நான் இனி எது வந்தாலென்ன என்று எண்ணிக்கொண்டு தொலைக்காட்சியை அணைத்துவிட்டு மல்லாக்கப் படுத்து கண்களை மூடிக்கொண்டேன். கண்களுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்து பறந்து ஒவ்வொரு மலரிலாய் அமர்ந்து அமர்ந்து தேன் குடித்தன.
ஒரு பட்டாம்பூச்சி ஒரு மலருக்கருகில் போக இன்னொரு பட்டாம்பூச்சி அந்த மலருக்கு அருகில் வர’ அந்த மலரை விட்டுவிட்டு அந்த பட்டாம்பூச்சி பறந்து நகர்ந்து வேறொரு மலரில் அமரப்போக’ அங்கே இன்னொரு பட்டாம்பூச்சி பறந்துவர, அது அந்த மலரையும் விட்டுவிட்டு நகர்ந்து அருகிலிருந்த வேறொரு புதிய மலரினைத் தேடிப் போனது. மலர்கள் வனமெங்கும் பூத்துக் கிடந்தன, அதை வாரி தனதென்று வைத்துக் கொள்ளத்தெரியாத பட்டாம்பூச்சிகளுக்கு எந்த மலரிலும் தனதான உரிமையே இருந்திருக்கவில்லை. எல்லாமே எல்லோருக்குமாய் உள்ளதென நம்பி அவைகள் இங்குமங்கும் மாறி மாறி பறந்து தனக்குக் கிடைத்த இடத்தில் தேன்குடித்தன… நானும் எனைமறந்த ஒரு நிம்மதி வானில் நிம்மதியாய் பறக்குமொரு நிறைவின் உச்சத்தில் உறங்கிபோனேன்!!
என் உறக்கம் என்னிடம் மட்டுமில்லை, பிறரின் கனவுகளுக்குள்ளும் கால்நீட்டிக் கொண்டிருப்பது காலையின் விடியலில் மெல்ல உணரப்பட்டது…

வித்யாசாகர்