ராணித் தேனீ

தேனீக்கள் பற்றிய புதியபாடம்
நாளைக்கு

ஆசிரியர் நடத்தும் முன்
வாசித்துச் செல்லும் பழக்கம்
செல்வராணிக்கு

‘குடும்பமாய் வாழும் தேனீக்கள்..
குடும்பத்தின் தலைவி ராணீத்தேனீ ‘

படத்தில் கம்பீரமாகத் தெரிந்தது
ராணீத் தேனீ

“எப்போடி வந்தே, சாப்பிட்டியா?”
உழைத்த களைப்பைக்
குரலில் காட்டாமல் கேட்டாள்
வீட்டுக்குள் நுழைந்த அம்மா.

‘ராணியாக வளரவேண்டிய
புழுவுக்கான அறை
பிரத்தியேகமானது
நிலக்கடலை வடிவில்
அழகிய கிண்ணம் போன்றது’

“எந்திரிடி போயீ திண்ணயில
உக்காந்து படி”
உதைத்துத் துரத்தினார்
போதையில் வந்த அப்பா.

‘ராஜாக்களின் வேலை
உண்பது உறங்குவது
இனம் பெருக உதவுவது..
இவற்றுக்குக்
கொடுக்குகள் கிடையாது’

“அய்யோ விடு
புள்ளை பரீச்சைக்கி கட்ட
வச்சிருக்கம்யா”
உள்ளே பாத்திரங்களின் உருளல்
அம்மாவின் அலறல்

“சம்பாதிக்க திமிராடி
பொட்டக்குட்டி படிச்சு
என்னாத்தக் கிழிக்கப் போவுது”
அப்பாவின் உறுமல்
மீண்டும் டாஸ்மாக் நோக்கி
நகர்ந்தன அவர் கால்கள்

‘பஞ்சகாலத்தில் வெளியே
தள்ளப் படுவார்கள்
சோம்பேறி ராஜாக்கள்’

எத்தனை முறை வாசித்தாலும்
இதுமட்டும் மனதில் ஏறாமல்

கேட்கத் தொடங்கியிருந்தது
அம்மாவின் கேவல்

மேலே படிக்க இயலாத
செல்வராணியின் கண்களிலிருந்து
மெல்ல வழிந்திறங்கிய நீர்த்துளிகள்
புத்தகத்தில் விழுந்து நிற்க

முதன் முறையாய்
உப்புக் கரித்தத் திரவத்தை
உறிஞ்சிச் சுவைத்த ராணீத்தேனீ..

நன்றி சொல்லியது கடவுளுக்கு
ராஜாத் தேனீக்களுக்குக்
கொடுக்குகள் தராததற்கு.
***

சந்திப்பு

என்னை சந்திக்க வரும்
நீங்கள்
என்னைப் பற்றிய எந்த
யூகத்திற்கும் செல்லாமல்
நீங்கள் நீங்களாகவே
வாருங்கள்
நானும் நானாகவே
வருகிறேன்
உங்களைப் பற்றிய எந்த
எதிர்பார்ப்பும் இல்லாமல்.

பழைய காதலிகள்

பழைய காதலிகளை
பார்க்க நேர்கையில்
நான்
பழைய காதலனாக
இருப்பதில்லை.

கோபுரம் தாங்கி

பழுத்த இலைகளை
உதிர்த்துச் சென்றது
காற்று
நரகல் தின்னும்
பன்றியின் மீது
ஒன்றுக்கிருக்கும் சிறுவன்
அடுக்களையில்
பாத்திரத்தை உருட்டும்
திருட்டுப் பூனை
விசேஷ நாட்களில்
காகங்களுக்கு ஏற்படும்
கிராக்கி
வண்ணத்துப்பூச்சி
பறக்கும் பாதைகளில்
உதிர்த்துச் செல்லும்
வண்ணங்களை
தங்கப் பரிதி
யாரும் களவாட முடியாத
உயரத்தில்
வெள்ளி நிலவு
ரசிக்க யாருமின்றி
காய்கிறது
திண்ணைகள்
ஒட்டுக் கேட்கின்றன
தெருவின் ரகசியங்களை
கோபுரம் தாங்கிகள்
கோபுரங்களை தாங்குவதில்லை.

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்

01
கோலாகலம்

சுற்றிவிடப்பட்ட தட்டு
சுழன்று கொண்டிருந்தது
ஒவ்வொரு முறையும்
ஓரோர் மாதிரி.

குழந்தைக் கண்களின்
கோலாகலமோ
ஒவ்வொரு முறைக்கும்
ஒரே மாதிரி.
O
02
கண்ணாமூச்சி

அதற்குள்ளாகவா என்று
அகல விரியும் விழிகளுக்கு
இதற்குள்தான் என்று
இதழ் விரியுமுன்னே
எதற்குள் என்றபடி
எட்டிப் போடும் கால்களுடன்

இப்படித்தானே இருந்து கொண்டிருக்கிறோம்

இரவைத் தொடும் கனவுடன்
இளித்துக் கொண்டிருக்கும் பகல் மாதிரி.

ட்ரோஜனின் உரையாடலொன்று

இது என்ன விசித்திரமான தேசம்

கைக் குழந்தைகள் தவிர்த்து

ஆண் வாடையேதுமில்லை

எல்லோருமே பெண்கள்

வயதானவர்கள்

நடுத்தர வயதுடையோர்

யுவதிகள்

எல்லோருமே பெண்கள்

விழிகளில் வியப்பைத்தேக்கிய நண்ப

பாழ்பட்டுச் சிதைந்து வெறுமையான

இவ் விசித்திர நகரில்

எஞ்சியுள்ள

எல்லோருமே விதவைகள்

எமக்கெனவிருந்த கணவர்களைத் தந்தையரைச்

சகோதரரைப் புத்திரர்களை

சீருடை அணிவித்து

வீரப் பெயர்கள் சூட்டி

மரியாதை வேட்டுக்களின் மத்தியில்

புதைத்திட்டோம்

செத்துப்போனவர்களாக

மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்)

எதையாவது சொல்லட்டுமா……..38

க.நா.சு நூற்றாண்டை ஒட்டி நான் ஒன்று செய்தேன். ஒரு காலத்தில், மையம் ராஜகோபால், ஸ்ரீனிவாஸன், ஆனந்த் மூலம் கொண்டு வந்த க.நா.சு கவிதைகளை திரும்பவும் கொண்டு வந்தேன். 1986 ல் அது வந்தபோது, க.நா.சு நிகழ்த்திய உரை இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. க.நா.சு கவிதை எழுதுவதில் தெளிவாகவே தன் கோட்பாட்டை வகுத்திருந்தார். கவிதையை உரைநடை வழியாகக் கொண்டு வருவதில் புரட்சியே செய்திருந்தார்.

இந்தப் புத்தகம் 1000 பிரதிகள் அச்சிட்டேன். மொத்தம் 32 பக்கம் அட்டையுடன் சேர்த்து. சேகர் ஆப்செட்டில் கொடுத்துவிட்டு 1000 பிரதிகள் வேண்டும் என்றேன். இப்புத்தகத்தை புத்தகக் கண்காட்சி போதே அடிக்க மறந்துவிட்டேன். முடியவில்லை. அச்சடித்திருந்தால், அதை எல்லோருக்கும் கொடுப்பதற்கு கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும்.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை திருவல்லிக்கேணி போய் ஆட்டோ வில் புத்தகக் கட்டை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். பின் வீட்டில் பெஞ்ச் மீது அதை வைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக புத்தகக் கட்டைப் பிரித்து அதில் உள்ள புத்தகங்களை எடுத்துக்கொண்டேன். மகத்தான க.நா.சு போன்ற ஒரு கவிஞரைப் பற்றி இன்னொரு கவிஞருக்குத்தான் தெரியும்போல் தோன்றுகிறது. கடற்கரை என்ற கவிஞரின் புத்தக விழா சென்னை LLA கட்டிடத்தில் மாலை ஆறு மணிக்கு நடக்க இருப்பதை கடற்கரை எனக்குத் தெரிவித்திருந்தார். அதுதான் க.நா.சு கவிதைகளை எல்லோருக்கும் கொடுக்க உகந்த இடம் என்று தோன்றியது.

எனக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கிளம்புவது சிரமம். சீர்காழியிலிருந்து சனிக்கிழமை வந்து, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் நான் எங்கும் அலையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அடுத்தநாள் அலுவலகம் செல்ல சரியாக இருக்கும். க.நா.சுவின் உத்வேகத்தால் நான் கிளம்பி விட்டேன். LLA கட்டிடத்திற்கு 5.30 மணிக்கே வந்துவிட்டேன். எல்லோருக்கும் கவிதைப் புத்தகத்தை எடுத்து நீட்டினேன். கவிஞர் ஜெயபாலன் அதற்கு பைசா கொடுக்க பாக்கெட்டில் கையைவிட்டார். நான் சொன்னேன். இது இலவசம் என்று. எனக்கும் அப்படி இலவசமாகப் புத்தகத்தைக் கொடுக்க மகிழ்ச்சியாக இருந்தது. பலர் வாங்கிக்கொண்டார்கள். என் நண்பர் இந்திரன் வந்திருந்தார். அவரும் நானும் ஒரே அலுவலகத்தை ஒரு காலத்தில் சேர்ந்தவர்கள். நான் புத்தகம் கொடுக்கும்போது,”உங்கள் புத்தகத்திற்கு பைசா தரமாட்டேன்,”என்றார். நான் பேசாமல் இருந்தேன். அதன் பின் தான் அவருக்குத் தெரிந்தது நான் கொடுத்தப் புத்தகம் இலவசம் என்று. நான் உடனடியாக கடற்கரை கூட்டத்திலிருந்து கிளம்பி வந்து விட்டேன்.

மயிலாடுதுறைக்கு நகூர் வண்டியில் கிளம்பி காலை 5 மணிக்கு வந்தேன். ரயில்வே நிலையத்தில் உள்ள ஒரு பத்திரிகைக் கடையில் கடைக்காரர் பார்த்து க.நா.சு புத்தகத்தை நீட்டி஧ன். ‘புத்தகம் இலவசம். எல்லோரிடமும் கொடுங்கள்,’ என்றேன். வாங்கி வைத்துக் கொண்டார். பின் என்னுடன் வந்த உறவினரிடம் கொடுத்தேன்.

மயிலாடுதுறையில் மயூரா லாட்ஜ் என்ற ஓட்டல் ஒன்று உண்டு. அங்கு சில புத்தகங்களைக் கொடுத்தேன். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. க.நா.சு யார் என்று சொல்ல வேண்டியிருந்தது. எப்போதும் பத்திரிகை வாங்கும் கடைக்குச் சென்று கொடுத்தேன். அந்தக் கடைக்காரர் வாங்க மறுத்துவிட்டார். எனக்கு சற்று வருத்தமாக இருந்தது. பின் வேண்டா வெறுப்பாக வாங்கி வைத்துக் கொண்டார். அவரிடம் க.நா-சுவைப் பற்றி சொன்னாலும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. என் அலுவலகத்தில் உள்ள சிலருக்குக் கொடுத்தேன். வாங்கி வைத்துக்கொண்டாலும் அவர்கள் யாரும் படிக்கப் போவதில்லை.

லட்சிமிபதியை கடற்கரை கவிதைக் கூட்டத்தில் பார்த்தபோது, கூட்டம் போடும் சாத்தியம் குறைவாக இருப்பதுபோல் பட்டது. முன்புபோல் இல்லை. கூட்டம் போட LLA கட்டிடத்தில் லோள் பட வேண்டும் போலீஸ் அனுமதி வாங்க வேண்டும். கூட்டம் போடும் தேதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பின் எல்லோரையும் வரச்சொல்லி போன் மேல் போன் போட்டு கூப்பிட வேண்டும். அப்படியும் வர மாட்டார்கள். எல்லோருக்கும் வயதாகிவிட்டது. பேசுபவர்களுக் வயதாகி விட்டது. கேட்பவர்களுக்கு வயதாகி விட்டது. தினமும் ஜோல்னா பையில் க.நா.சு கவிதைகளை சுமந்துகொண்டு இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் புத்தகம் வழியாக அவருடைய நூற்றாண்டை தொடங்கி விட்டதாக தோன்றுகிறது.

(இன்னும் வரும்)

எது கவிதை……..2

ஓய்வுபெற்ற என் அலுவலக மேலதிகாரி ஒருவர் தமிழில் புலமை வாய்ந்தவர். சரளமாக இலக்கணத்துடன் கவிதை எழுதுபவர். ரொம்ப கஷ்டமான அரவிந்தரின் Perseus the Deliverer என்ற நாடகத்தை தமிழில் கவிதை வடிவமாக 286 பக்கங்கள் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். கவிதையாக அந் நாடகம் தமிழில் வெளிவந்துள்ளது. அப்புத்தகத்தைப் பார்க்கும்போது எனக்கு திகைப்பாக இருந்தது. பின் அப்புத்தகத்தைப் படிக்கும்படி கேட்டபோது எனக்குப் பிரச்சினையாகப் போய்விட்டது. எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது ஒரு பக்கம். அதை என்னால் படிக்க முடியவில்லை என்பது சங்கடமாகப் போய்விட்டது. அப்புத்தகத்தை என்னால் படிக்கவே முடியவில்லை. ஏன்?

கவிதையின் புது வடிவம் பிறந்தபிறகு பழைய மரபெல்லாம் போய்விட்டது. ஆனால் இன்னும் பலபேர் பழைய மரபிலேயே கவிதை எழுதிக்கொண்டு போகிறார்கள். அமுதசுரபி என்ற பத்திரிகையில் இன்னும் வெண்பா போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதுமாதிரியான கவிதைகளில் பெரும்பாலும் அதை அமைக்கும் முறையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதால் சாராம்சம் போய்விடும். பின் நீண்ட கவிதை.
என்னால் நீண்ட கவிதைகளைப் படிக்கவே முடியவில்லை. கவிதையை நாடகமாக எழுதிப் படிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

கவிதை என்பது ஒரு பக்கத்தில் நின்று விடவேண்டும். அதன் பின்னும் அதை நீட்டினால், கொஞ்சம் நீர்த்துப்போகக்கூடிய வாய்ப்புண்டு. நகுலனின் நீண்ட கவிதைகள் இரண்டை நான் விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளேன். ஆனால் முழுவதும் ரசித்துப் படிக்க முடியுமா என்பது தெரியவில்லை. கவிதையை அதிகப் பக்கங்கள் கொண்டு வந்தால், படிக்க தடுமாறும் இது என் அனுபவம். பலருடைய நீண்ட கவிதைகளை நான் படிப்பதில்லை. எங்காவது சில வரிகள். பாராக்கள் படிப்பதுண்டு. மனோன்மணியம், சிலப்பதிகாரம் கூட படித்ததில்லை. படிக்க விரும்பியதில்லை. ஏன்என்றால் அந்த அளவிற்கு பொறுமை இருந்ததில்லை. அதேபோல் ஹைகூ கவிதைகளைப் படிக்க விரும்பியதில்லை. கவிதை என்றால் கொஞ்சமாவது 6 வரிகளாவது வரவேண்டும்.

இந்த என் அனுபவத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை.

(இன்னும் வரும்)

அன்புடையீர்,

வணக்கம்.

க.நா.சு நூற்றாண்டை முன்னிட்டு ‘சில க.நா.சு கவிதைகள்’ என்ற 24 பக்கம் புத்தகம் ஒன்றை தயாரித்துள்ளேன். அப் புத்தகத்தை இலவசமாக அளித்து வருகிறேன். வேண்டுவோர் முகவரியுடன் ஒரு கார்டு நவீன விருட்சம், 6/5 போஸ்டல் காலனி முதல் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33 என்ற முகவரிக்கு அனுப்பினால் போதும். புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

அன்புடன்
அழகியசிங்கர்

எதையாவது சொல்லட்டுமா……..37

உங்களுக்கு எதாவது சந்தேகம் வந்துள்ளதா கடவுளைப் பற்றி. பலர் கோயிலுக்குப் போவார்கள். சாமியைக் கும்பிடுவார்கள். அவ்வளவுதான். சாமியைப் பெரிய சக்தியாக நினைத்து கோயில் கோயிலாகச் செல்பவர்களும் உண்டு. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராய்ச்சியெல்லாம் இப்போதெல்லாம் யாரும் பண்ணுவது இல்லை. ஏனென்றால் அது தேவையில்லாத ஒன்று.

அன்று சனிக்கிழமை. சீர்காழியிலிருந்து மயிலாடுதுறைக்கு நான் டூ வீலரில் வந்து கொண்டிருந்தேன். என் பின்னால் கிளை மேலாளரும் வந்து கொண்டிருந்தார். அவருக்குக் கோயில் போவது, கடவுளை எதற்காவது வேண்டிக்கொள்வது என்பதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. நம்பவும் நம்ப மாட்டார். ஆனால் இது ஒரு பிரச்சினையே இல்லை. ஆனால் அவர் ஒரு கேள்வி கேட்கிறார். ‘இப்போதெல்லாம் கடவுள் நம்பிக்கை மக்களிடம் அதிகமாகிவிட்டது போலிருக்கிறதே’ என்று.

எனக்கு இதைப் பற்றியெல்லாம் அதிகமாக யோசித்து விட்டுவிட்டேன். இப்போதெல்லாம் அதிகமாக யோசிப்பது இல்லை. ஆனாலும் அவர் கேட்டார் என்பதற்கு பதில் சொல்லத் தோன்றியது. ‘ஆமாம். கடவுள் நம்பிக்கை அதிகமாகி விட்டது,’ என்றேன். பின் காரணமும் சொன்னேன். ‘பல மக்கள் அளவிடமுடியாத துன்பங்களை சுமந்து கொண்டிருக்கிறார்கள். அதைச் சரிசெய்யும் வழி தெரியவில்லை. குறைகளைக் கேட்க கடவுள் ஒருவன்தான் இருக்கிறான். அதனால் கடவுளை நாடுகிறார்கள்,’ என்றேன்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் PAIN ஐ சுமப்பது என்பது சாதாரண விஷயமில்லை. ஒரு சிறுவயது உடையவர் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர். சென்னையிலிரூந்து அவர் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தார். ”15வயதிலிருந்து இந்தத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். தீராத வலி. கைகால் முட்டிக்கு முட்டி. தாங்க முடியாத வலி. தற்கொலை செய்துகொள்ள தோன்றும். மகமாயிதான் என்னைக் காப்பாற்றி இருக்கிறாள்…” என்றான். அவன் சொன்னதை கிளை மேலாளரிடம் சொன்னேன். அவர் சிரித்தார். ”தானாகவே அந்த வலி போய்விடும்…மகமாயி என்று அவன் சொல்கிறான்….இப்படித்தான் எல்லோரும்…?” என்றார்.

”உங்களுக்கு துன்பமே வந்ததில்லையா? அப்படி வந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டேன். ”நடப்பது நடக்கட்டும்,” என்று இருப்பேன் என்று சொன்னார். அவரிடம் வாதாட முடியாது என்று தோன்றியது. நானும் பெரிய கடவுள் நம்பிக்கை உடையவன் என்றெல்லாம் சொல்ல முடியாது. நம் தமிழ் நாடு முழுவதும் எத்தனையோ கோயில்கள் இருப்பது குறித்து ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். இந்தக் கோயில்களுக்கெல்லாம் மக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்து, முகமதையர், கிருத்துவர் என்று எல்லோரும் கடவுளை வணங்காமல் இல்லை.

பெரும்பாலான மக்களுக்கு துன்பம் வரும்போது அதை எதிர்கொள்ள திராணி இல்லை. நான் சென்னையைவிட்டு இங்கே வந்துவிட்டேன். திரும்பவும் சென்னைக்கே போக வேண்டுமென்று நான் கடவுளிடம்தான் வேண்டிக்கொள்ள முடியும். Top Executiveஐப் பார்த்து கெஞ்சிக்கொண்டிருக்க முடியாது. ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளாக நான் ஒன்றை செய்யவில்லை. என் மூதாதையார் வாழ்ந்த பூமியைப் போய்ப் பார்க்காமலிருந்தது. பள்ளிக்கூட வயதில் நான் போயிருக்கிறேன். பிறகு சில நிகழ்ச்சிகளின் போது அங்கு போயிருக்கிறேன். இப்போது அந்தக் கிராமம் மட்டும்தான் இருக்கிறது. அங்கு போய் தங்க என் மூதாதையார் வீடு, நிலம் என்றெல்லாம் எதுவுமில்லை. ஆனாலும் சென்னையை விட்டு வந்த எனக்கு இவ்வளவு கிட்ட அந்த இடம் இருந்தும், போய்ப் பார்க்க தங்க ஒன்றுமில்லை. அங்குள்ள வீரன் கோயிலைத் தவிர.

அந்தக் கோயிலை ஏன் போய்ப் பார்க்கக் கூடாது என்று தோன்றியது. அதனால் வாரம் ஒருமுறை போய்க் கொண்டிருக்கிறேன். இங்கெல்லாம் நிலம் இருந்தது. இங்கெல்லாம் வீடு இருந்தது என்று சொல்லிக்கொண்டே போவேன். வீரனைப் பார்த்துவிட்டு வந்து விடுவேன். இதெல்லாம் கடவுள் நம்பிக்கையா இல்லையா என்பது தெரியாது. அங்குள்ள சிவன் கோயிலுக்குப் போனேன். அதை பராமரிக்கவே யாரும் இல்லை. அதைப் பார்த்துக்கொள்பவர் கோயிலுக்குப் போய் பூஜை செய்து. புத்தம் புதிய மாலையை இட்டு மந்திரம் சொல்கிறார். அந்தக் கோயிலில் எங்கள் குடும்பம் அவரைத் தவிர யாருமில்லை. சிவனை அவ்வளவு நெருக்கமாகப் பார்க்க முடிகிறது. கோயில் ஒரு பக்கத்தில் அந்தக் கோயிலைப் பற்றிய தல வரலாறு எழுதப் பட்டிருக்கிறது. சிவனும் விஷ்ணுவும் சொக்கட்டான் விளையாடும்போது, பார்வதி நடுவராக இருக்கிறாள். விஷ்ணு ஜெயித்து விடுகிறார். அதைச் சொன்ன பார்வதிக்கும் விஷ்ணுவிற்கும் சாபம் கொடுக்கிறார் சிவன். அந்த சாப விமோசனம் பெற அகில்காடு என்கிற அந்த இடத்தில் பார்வதி சிவனை தன் ஆபாரணங்களை எல்லாம் கழற்றி பூஜை செய்கிறாள். சாப விமோசனம் பெறுகிறாள். அகில்காடு அசிக்காடு என்று மாறி விடுகிறது. கோயில் அமைதியாக இருக்கிறது. வெளியே வருகிறேன். கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா? கடவுள் என்பதே நம்முடைய மனசாட்சி என்று தோன்றுகிறது. நம் மனசாட்சியைப் பார்க்கத்தான் கடவுளை தொழுகிறோம். Taste of temples என்ற ஒன்று இருக்கிறது. கோயில் அமைந்த இடம். அதைச் சுற்றிய புராணக் கதை என்றெல்லாம் இருக்கிறது. ஒவ்வொரு கோயிலாகச் சென்று கோயிலையும் சாமியும் பார்த்துவிட்டு வரலாம். நம் மனசாட்சியையும் தேடுவோம்.
(இன்னும் வரும்)

புத்தகப் பைத்தியம்

எனக்கு புத்தகமென்றால்

பைத்தியம்.

என் மனைவிக்கு

புத்தகத்தைக் கண்டாலே

பைத்தியம்.

என் மாமனார் சொன்னார்

சீ பைத்தியக்காரி

இதையெல்லாம்

பெரிது படுத்தாதே.

புத்தகப் புழுவோடு

புக்ககம் போயிருக்கிறாயென

பெருமைப்படு என்றார்

என் மனைவியிடம்.

அதற்குள் என்

கைப்பிள்ளை

ஊர்ந்து ஊர்ந்து

புத்தகத்தைப் பிய்த்து

கிழித்துக் கொண்டிருந்தான்

நான் படிக்காதப்

பக்கங்களை…

கிழித்து கசக்கிய

பக்கங்களால் ஒரு

பூச்சியைப் பிடித்து

வெளியே எறிந்தார்

என் மாமியார்

புதிதாக ஒரு புத்தகத்தைப்

படித்த திருப்தி எனக்கு.