எதையாவது சொல்லட்டுமா……..44

உங்களுக்கு கல்யாண சுந்தரம் தெரியுமா? எப்படி தெரியும்? நான் சொன்னால்தான் தெரியும். இது கணனி யுகம். எல்லாத் துறைகளிலும் பெரிய மாற்றம் நடந்தவண்ணம் உள்ளது. வங்கியிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்கள் வங்கியின் கணனியின் Intranet மூலம் ஒருநாள் வங்கியின் சர்குலர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரிய அதிர்ச்சி எனக்கு. கல்யாணசுந்தரம் இறந்துவிட்ட செய்தி தெரிந்தது. நான் பார்த்த சமயம் ஏப்ரல் மாதம். கல்யாணசுந்தரம் மரணம் அடைந்த மாதம் மார்ச்சு மாதம்.

இந்தக் கல்யாணசுந்தரம் எனக்கு தூரத்து உறவு. அவர் இறந்த விஷயத்தை என் பெரியப்பா குடும்பத்தைச் சார்ந்த யாரும் தெரிவிக்கவில்லை. கல்யாணசுந்தரத்தை மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து பீச் வரை வரும் மின்சார வண்டியில் தினமும் சந்திப்பேன். அப்படி இல்லாவிட்டாலும் ஹார்பர் கிளையில் கீழே வரும்போதெல்லாம் சந்திப்பேன். அப்போது நான் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அதிகமாகப் பேச மாட்டோ ம். எதாவது ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை பேசுவோம். அவ்வளவுதான். கிளார்க்காக இருக்கும்வரை அவருக்குப் பிரச்சினை எதுவுமில்லை. ரொம்ப ஆண்டுகளாக அவர் எந்தப் பதவி உயர்வும் பெறாமல் கிளார்க்காகத்தான் இருந்தார். பின் ஒரு தவறான முடிவு எடுத்தார். அதிகாரியாகப் போக வேண்டுமென்று. அந்த முடிவுதான் அவருக்கு வினையாகப் போயிற்று.

சென்னையைத் தாண்டி காஞ்சிபுரம் வட்டாரத்தில் பதவி உயர்வு கொடுத்து அவரைத் தூக்கிப் போட்டார்கள். அங்கிருந்து அவர் சென்னைக்கே வந்து விட்டார். ஆனால் அதிகாரியாக அவரால் உழைக்க முடியவில்லை. வயது அதிகரித்து விட்டதால், உடல்நிலை பாதிப்பும் வந்துவிட்டது. உஸ்மான் சாலையில் உள்ள ஒரு கிளையில் அவர் நின்றுகொண்டே இருப்பார். உட்கார முடியாது. நான் அவரைப் பார்த்துக் கேட்கும்போது, உடல் உபாதைகள் பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார்.

சென்னையில் அவர் அதிகாரியாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரை திருச்சி வட்டாரத்திற்கு அனுப்பி விட்டார்கள். அங்குதான் அவருக்குப் பிரச்சினை இன்னும் அதிகம் கூடிவிட்டது. அவரால் அலுவலகத்தில் பணி புரிவது அசாத்தியமாகி விட்டது. உடல்நிலை அவரை விட்டு வைக்கவில்லை. திரும்பவும் அவர் உடல்நிலை பொருட்டு சென்னைக்கு வரவேண்டுமென்று சொன்னாலும் முரட்டுத்தனமான தலைமை அலுவலகம் செவி சாய்க்கவில்லை. அதிகாரியாக இருந்ததால், அலுவலகத்திற்குக் காலையில் சென்றால், இரவுதான் திரும்பி வரவேண்டும். கடுமையான வேலை. அவருக்கு குழந்தை எதுவுமில்லை. அதனால் அவர் வேலையை விட்டுவிடலாமென்ற முடிவுக்கு வந்திருந்தார்.

தன் உடல்நிலையைக் குறித்து மருத்துவச் சான்றிதழ்களுடன், அவர் மனைவியை அழைத்துக்கொண்டு
தலைமை அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளைப் போய்ப் பார்த்தார். தானாகவே விடுதலை செய்யும் திட்டத்தில் (VRS) இவரை விடுவிக்கவில்லை. வேலை வேண்டாமென்று எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. உடல்நிலை சரியில்லாத கல்யாணசுந்தரத்தை திருச்சியில் உள்ள வட்டாரத்தைச் சார்ந்தவர்கள் கடுமையாக வேலை வாங்கினார்கள். முன்பு அரசாங்கத்தில் பணிபுரிபவர்களைப் பற்றி ஒரு ஜோக் சொல்வார்கள். அவர்களுடைய குழந்தைகளுக்கு அப்பாவின் முகமே தெரியாது என்று. அதாவது அவர் காலையில் பிள்ளைகள் தூங்கி எழுவதற்கு முன்பே அலுவலகம் போய்விடுவார்கள். பின் அவர்கள் வரும்போது, பிள்ளைகள் தூங்கி விடுவார்கள் என்று. அதேபோல் இன்றைய வங்கியும் மோசமாகி விட்டது. அதுவும் அலுவலராக யாரும் போய் மாட்டிக் கொள்ளக்கூடாது.

காது பிரச்சினை காரணமாக திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனை ஒன்றில் உடல் பரிசோதனை எடுத்துக்கொண்டார்.அதுவும் மருத்துவமனைக்குச் சென்றால் உடனே அலுவலகத்திலிருந்து போன் வரும் எப்போது வரப்போகிறீர்கள் என்று. அரைகுறையாக அவசரம் அவசரமாக அலுவலக ஓடி வரும். திரும்பவும் கடுமையான வேலை. காது பிரச்சினை போய் மூக்கில் அவருக்குப் பிரச்சினை. ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும்போதே அவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அவர் நிலை மோசமாகிவிட்டது. எல்லாவிதமான பிரச்சினைகளும் சேர்ந்து விட்டன. சென்னையில் அப்போல்லா மருத்துவமனையிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மரணம் அவரைத் தழுவி விட்டது. என் பெரியப்பா ஸ்ரீபையனிடம் கேட்டேன். ஏன் கல்யாணசுந்தரம் மரணமடைந்த விஷயத்தைக் கேட்டேன். ”எல்லாம் குழப்பமாக இருக்கிறதுப்பா..உனக்குத் தெரியும் என்று நினைத்தேன்” என்று அவன் சொல்வதைக் கேட்டு எனக்கு ஒன்றும் புரியவில்லை. கல்யாணசுந்தரம் என்னை விட வயதில் சிறியவர். கல்யாணசுந்தரம் மனைவியிடம் போன் பண்ணி விஜாரித்தேன். அவர் திருச்சியில் வீடை காலி செய்யாமல் இருக்கிறார். கல்யாண சுந்தரத்திற்கு வரவேண்டியதைப் பெறுவதற்கு. அதுவும் தாமதமாகிக் கொண்டே போகிறது. இதோ நானும் கல்யாணசுந்தரம் மாதிரி சீர்காழியில் அலுவலராக மாட்டிக்கொண்டு விழிக்கிறேன். அப்பாவிற்கு 90 வயது நான் இங்கே வந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் மாற்றல் கிடைக்கவில்லை. டம்மியாய் ஒரு யூனியன். கையில் சாட்டையுடன் ஒரு பூதம் மாதிரி தலைமை அலுவலகம் வீற்றிருக்கிறது. பணிபுரிபவர்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல்.

பசுவும் நிலாவும்

பௌர்ணமி இரவின்

பரந்த வெளியில்

கொட்டகைத் தொட்டியில்

கொட்டிய கழனியை

சப்பி சப்பி

குடித்தது பசு.

நிலா மிதந்த

கழனியை மென்று

மென்று சுவைத்தது.

மிகுந்த சுவையாய்

இருந்ததாய் சிலாகித்தது.

மெல்ல மெல்ல

வாய்க்கு பிடிபடாமல்

தொட்டியில் எஞ்சிய

கழனியிலேயே கொஞ்சி

விளையாடியது நிலா.

கன்று வாய் வைத்ததும்

காணாமல் நிலா போக

பசு கன்றைப்

பார்த்தது சந்தேகமாக

சுயநலம்

அதிகமாய் பேசுகிறேனோ
அடிக்கடி
சந்தேகம் வருகிறது

பேசாமல் இருப்பதே உசிதம்
சமயத்தில்
தோன்றதான் செய்கிறது

கேட்பவர் முகங்களில்
தெரிகிற சோர்வைக் கண்டு கொள்ளாமல்
தொடர விழைகிற மனதின் மேல்
கோபம் கூட வருகிறது

பேசுவதை நிறுத்தி விடலாமெனப்
பொறுப்புணர்வுடன்
தீர்மானிக்கப் போகையில்..
யாருக்காகப் பேசுகிறேன் எனும்
கேள்வி எழ,

புரிய வந்தது
இதுகாலமும் பேசிய யாவும்
எனக்காகவே என்று.

ஒத்தி வைக்கப்பட்டது
காலவரையரையின்றி தீர்மானம்.
*** ***

வினோதமான பறவை

ஒன்று
வினோதமான பறவை
சப்தம் இட்டப்படி
இங்கும் அங்கும்
சென்று கொண்டிருந்தது
மண்ணில் எதைத்
தேடிக் கொண்டிருக்கிறது
கோட்டான் பூனை
மதிற்சுவரில் சோம்பலாய்
சயனித்துக்கொண்டிருக்கிறது
கீழே
குடியிருப்பவர்
துருப்பிடித்த சைக்கிளை
எங்கே எடுத்துச் செல்கிறார்
வெயில் கொளுத்துகிறது
மரங்கள் அசையவில்லை
கதவைச் சாற்றிவிட்டு
வெளியில் அமர்ந்திருந்தேன்
ஆமாம்..
என் நேரமும்
உங்கள் நேரமும் ஒன்றல்ல..

27.05.2011
மதியம் : 1.50

அதிர்வு தாங்கா அறைகள்

அறையை விட்டு வெளியேறுகிறேன்
விதிக்கப்பட்ட பொருட்களை
எடுத்துக்கொண்டு
வந்து நின்ற மரத்தின்
நிழலில் ஆசுவாசமடையத் தொடங்குகிறேன்

நான் வெளியேறிய
அறை
முன்னிலும் பிரகாசிக்கிறது
அடைசலாயிருந்த
புத்தக அலமாரியின் சுண்ணாம்புகள்
மீண்டும் பூசப்படுகின்றன

முட்டைகளின் நாற்றம் போக
பளிங்குக்கற்களில் சோப்புகளை
பிரயோகிக்கிறார்கள்

இவன் வெளியேற்றம்
இன்னொருவனுக்கான வழி
என யாரும்
சொல்லிவிடாதீர்கள்.
என் அறைகள்
அதிர்வுகளைத் தாங்குவதில்லை

சில நேரங்களில்

சில நேரங்களில் ஒரு கவிதையில்

சொல்லப் பட்டதுடன் சொல்ல விழையாதது

நுழைந்து விடுகிறது ஒரு எடுப்பான நிறத்தோடு

ஒளிந்து விளையாடும் விளையாட்டு
மறைந்திருப்பவரைக் கண்டுபிடித்ததும்

முற்றுப் பெறுகிறது – சிறிது நேரம்.
சீருடையில் ஒரு முகமும்

தனியுடையில் ஒரு முகமுமென
அடையாளமணியும் சொற்கள்…
சிறகென்றெழுதிய கணத்தில் மிதந்தவை

தமிழின் இறகில் இருந்து பிரிந்த சிறகொன்றும்

லெபனானின் முறிந்த சிறகுகளும் மட்டும

பறவை என்றெழுதிய போதே பார்வையில்
அவசர வண்ணங்கள் தீற்றப் பெற்றால்

தாளின் வெண்மையில் கரைந்திருக்கும் பறவைகள்
காணா ஆழத்தில் அமிழ்ந்து தடமறுக்கும்
கருப்பும் வெள்ளையும் தவிர்த்த நிறங்களிலும்
பூக்கத்தான் செய்கின்றன பூக்கள் எங்கும்.

ஆடுகளம்

ராமலக்ஷ்மி

வாழ்க்கை ஏட்டின்
வாசித்த முடித்த பக்கங்கள்
காற்றில் படபடக்கையில்
கண்ணில் மாட்டுகிற
பரம பத ஏற்ற இறக்கங்கள்

தாய உருட்டல்களில்
வாங்கிய வெட்டுக்களாகச்
சில வருத்தங்கள்

இலகுவாய் தாவிக் கடந்த
பாண்டிக் கட்டங்களாகச்
சில சந்தோஷங்கள்

பல்லாங்குழியில்
வெற்றிடம் துடைத்தோ
‘பசு’வெனக் கூவியோ
வெள்ளைச் சோழிகளை
அள்ளிய குதூகலங்கள்

நேர்மைத் திறமற்ற
கண்ணாமூச்சித் துரோகங்கள்

பம்பரத் தலைக்குள்
நுழைகிற ஆணிகளாக
நெஞ்சைத் துளைத்த பிரிவுகள்

விண்ணைத் தொட்ட ஆனந்தமாக
விரல்நுனியில் பிடி இருக்க
உலவ விட்டப் பட்டங்கள்

கணநேரக் களிப்பைத் தந்த
வெற்றிக்காகக்
கட்டம் கட்டமாகக்
காய்நகர்த்திய உறுத்தல்கள்

கல்லா மண்ணா..
வாழ்க்கை பொறிக்கப்படுமா
மண்ணோடு மறையுமா
கேள்வியில் தொடங்கிய வேள்விகள்

காலம் வர்ணனையுடன்
வரைந்து வைத்த குறிப்புகளில்
அடிக்கோடிட்டுப் போற்றியும்
அறவே மறக்க விரும்பியுமாய்
வாழ்க்கை வரிகள்…

எவற்றாலும் எவருக்கும்
வற்றுவதாகத் தெரியவில்லை
ஆட்டத்தைத் தொடரும் ஆர்வமும்
அடுத்த நாளை வாசிக்கும் ஆவலும்

சிறப்பான
அல்லது
இன்னும் சிறப்பான
ஏதோ ஒன்று காத்திருக்கிறது
என்கிறதான எதிர்பார்ப்பில்.
*** ***

அனுமானங்கள்

அனுஜன்யா

ஜன சந்தடி மிகுந்த
தெரு முனையில்
பேசிக்கொண்டிருந்தனர்
புதுக் காதலர்களா?
குறுகுறுப்பைக் காணவில்லை
மணமானவர்களா?
சலிப்பும் தென்படவில்லை
அல்லது…
இல்லை ஒரு வேளை…
பிரிந்து செல்லத் துவங்கி
தயங்கி அவன் பார்த்தபோது
திரும்பவில்லை
அவள்
திரும்பியபோது
பார்க்கவில்லை அவன்
ஹ்ம்ம்.
‘அல்லது’க்கு ஒரு கதையும்
‘ஒரு வேளை’க்கு ஒரு நிறமும்
தானாகவே சேர்கிறது இப்போது

கை பேசி கடவுள்களின் கோட்டோவியங்கள்

கடவுள்களைப் பற்றிக் கவியெழுதும் ஃபேஷனிப்போதெனவே
வாலிப வயோதிக அன்பர்களே வரைகிறேனென் கோட்டோவியத்தை

# வடிவமும் வாழ்வும் தந்த கடவுளுள் முரண்கள் மகா ஆச்சர்யம்
நெஞ்சசகத்து அமிர்தமூட்டி நல்லவை அல்லவை சொல்லி
வாழ்வின் திசைகள் காட்டி வளர்த்த தெய்வத்துள்
வஞ்சகமும் சூதும் வந்ததெப்படி?
புகையிருக்கும் கருவறைக்குள் பகையிருக்குமோ?
தாய்த் தராசும் தடுமாறுமோ?

# கடுங்காய்ச்சலின் களைப்பில் வீடு வந்தவனின்
தலை வருடி மடிகிடத்தி உணவூட்டியப் பரிவின் உன்னதத்தில் சாந்த சொரூபியாய் உயர்வடிவம் கொள்கிறதிக் கடவுள்

# வாரிசாய் வந்த கடவுளின் குழந்தை
கொஞ்சம்(-)ம் கூடுதலாய் (+)ம் கொண்ட தேவகிருபைக்கு
என் மீதான அக்கறையும் தன் மீதான தன்னலமும் அதிகம் அதிகம்

# முரண்களில் முகிழ்த்த முடிச்சு
ஒளிவளையமாய்ப் பின்னியங்கும் இறைமையின்
நேசத்தில் நெக்குருகிப் போகிறது நெஞ்சு

# ஆண்டவம் ஆதிக்கம் செலுத்துமோ ஆடவ உலகம் மறுக்குமோ
சொர்க்கத்துள் சிறை வைக்கும் பிரயத்தனம் தாண்டி தப்பியதென் வரம்

# இச்சை மிகுந்த இறைவியின் காதல் பெரிதா காமம் பெரிதா
உக்கிர அணைப்பின் யானைப்பசிக்க்கு எம்மாத்திரம் சோளப்பொறி

# வரமளித்த தேவதை வாழ்வின் U வளைவு திரும்ப
சாபம் வீசும் எந்திரமாய் மாறியதெங்ஙனம்?
மனம் புரியத் தவமிருக்கிறேன் ஆண்டுகளாய்…

# ‘மிஸ்டுகால்’ கடவுள்களுடனான உரையாடல் சுவையானது;
சுவாரஸ்யமுங்கூட……
சமயங்களில் சலிப்பூட்டி க் களைப்பாக்குபவையுமவைதான்
# ஆண்டவங்கள் ஆறுதலாயிருப்பதோர் அம்சமெனில் கடவுள்களிமன் கண்ணீர்த் துடைத்து ஆற்றுப்படுத்துகையில் தன்யனாகிறேன்

# தான் விரும்பும் தருணங்களில் வாயட யத்தனிக்கும் இறைமைகள் தென்படுவதில்லை
நான் விரும்பும் நேரங்களில்

# கடவுள்களுக்கு செவிகள் உண்டா..
தெய்வதமே தெய்வதமே ஏனெனைக் கைவிட்டீர்?

# கடவுள்களில் ஒன்று கவியெழுத வைக்க
காமத்தால் திணறடிகுமொன்று
நா ருசிக்கு நல்லுணவாய் மற்றொன்று
நடுநிசிநாயாய் உருமும் பிறிதொன்று

# கள்புளிபில் களிக்குமொன்று வோட்கா ருசிக்கும்
பியர் தான் பிடிக்குமொன்றிற்கு
புகைத்து புகைது சாம்பலாக்கும் இன்னொன்று

# ரம்மி ஆடி ஜெயித்த கடவுள் இறந்துபோய் வருஷமாச்சு
லஞ்சம் பின்னோடி வாழ்வைத்தொலைத்துப்
புலம்பும் கடவுளின் திசையெங்கே?

# கடவுள்களைப் பற்றி எழுதும்போதெல்லாம்
ஒலிக்குமோர் விமர்சனம்:”பற்றிய சாத்தான்களையும் எழுதேன்”
அடடே..அடுத்தக் கவிதக் கருவைத் தந்துவிட்டதென் கடவுள்

# கடவுள் குறித்த கோட்டோவியங்களை வரைந்து நீட்டினேன்.
பெருங்குரலெடுத்து சிரித்து ப் பகர்ந்தது தெய்வம்:
”ஆனையைப் பார்த்த அந்தகர் கதை”
ஓயாத நகைப்போசை
எதிரொலித்த்தது இடியாய் அண்டசராசரமெங்கும்
மின்னல் வெளிச்சத்தில் அதிர்ந்தேன்.

– வெறுமையாய்க் கித்தான்

ஒரு நூறு ஒளி வருடங்களுக்கு

உள்ளிழுக்கவும் வெளித்தள்ளவும் செய்யும் தண்ணீரின்

மாய மிதவை கணத்துள் பிரவேசிக்கும் பொழுதில்
எடையற்ற ஒரு வெளியின் வெளிச்ச கணங்களில்
மொழி மென் துகிலென நழுவிச் செல்லும் நளினமாய்

கண்கள் அறியாக் காற்றின் உணர்சித்திரங்களும்
பரவசம் பேசிச் செல்லும் வார்த்தைகளற்று.
வழியற்று வலியுற்று வளி போல் திடமற்று
நெகிழும் மனதை நிலை இருத்த பூக்களைப் பார்க்க
பசிய கிளை நுனிகளில் நீள் விரல் மருதாணியாய்
பூத்திருக்கும் செந்நிற பூக்களின் விகசிப்பில்
நுட்பங்களின் மென்னொளி துலங்கும் அகமொழி

இதழ் இதழாய் ததும்பி சிலிர்க்கிறது

வண்ண வார்த்தைகளாய்.
அசையும் இருப்பே மொழி என்றுணரும் வேளை
மரத்திலிருந்து மிதக்கும் அச் செம்பூக்கள்
மெல்லத் தடம் மாறி கண்களில் உயிர்க்கிறது
ஒரு நூறு ஒளி வருடங்களுக்கு.