விட்டு விடுதலையாகி….

பரசுவிற்கு இன்று விடுதலை.சட்டம் வழங்கிய மூன்றுமாத தண்டனை இன்று பூர்த்தியாகிறது.

“நாளையிலிருந்து நீ சுதந்திரமனிதன்!” என்று நேற்று படுக்கப்போகும்போது ஆறுமுகம் பரசுவைப் பார்த்து சொன்னான்.

“ஜெயிலு விட்டு போனதும் எங்களை எல்லாம் மறந்துடுவே, இல்லியா பரசு?’ வரதன் வேதனையுடன் அவன் விரலைப்பற்றியபடி கேட்டான்.

மூன்றே மாதத்தில் எல்லாருடைய மனத்திலும் இடம் பிடித்து விட்ட பரசு, சிறைக்குள் நுழைந்த முதல்நாள் நடுங்கித்தான் போனான். இருபத்துமூன்றுவயதில் சிறைவாசம்! படிப்பைமுடித்து வேலை பார்க்க வேண்டிய வயதில் சிறையில் கல்லுடைத்து, களிதின்று என்று நாட்களைக் கழிக்கும்படி விதியாகிவிட்டது. முதல்வாரம் முழுவதும்தூக்கமே வரவில்லை. ஆனால் நாளாவட்டத்தில் பக்கத்தில் இருந்த இதரகைதிகளின் அன்பான பார்வையில், பரிவான பேச்சில் சிறை வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கிகொண்டான். அவன் நினைத்தமாதிரி சிறையில் உள்ளவர்கள் எல்லாருமே கெட்டவர்களாய்த் தெரியவில்லை. அவர்களில் பலர் தனது பிரியமுள்ளவர்களுக்காக ஏங்கி சோகக் கதைகளைச் சொல்லி அழும்போது பரசு நெகிழ்ந்துதான் போனான் .

“பரசு !வெளியே போனதும் உன்கிட்ட எல்லாரும் நல்லா பழகி நெருங்குவாங்களா?”

“நெருங்கணும் வரதா! நாம கவசம் போட்டுக்காம உலகத்தோடப் பழகினா உலகமும் நம்ம கிட்ட உண்மையாப் பழகும் இல்லியா?”:

“பரசு! உன் லட்சியம் கிராம முன்னேற்றம், அதற்குப் பாடுபடுவது இல்லையா? நல்லது,.அது வெற்றி பெறட்டும்! சீக்கிரமாய் ஒரு வேலைகிடைத்து நீ சந்தோஷமாய் வாழ என்மனமார்ந்த வாழ்த்துகள்!”
என்று தங்கராசு வாயார வாழ்த்தினார்

தங்கராசு, ரௌடிகள் ,தாதாக்கள் தொடங்கி சிறை அதிகாரிகள் அனைவருக்கும்யோகா கற்றுத்தரும் யோகா மாஸ்டர். அத்தனைபேருக்கும் அவரிடம் தனிமதிப்பும் மரியாதையும் உண்டு.அவர்தான் அடிக்கடி சொல்வார் ….

‘சிறை வாழ்க்கைதான் ஒருமனிதனை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது? சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றவாளியாகி இளம்வயதில் இங்கே நான் ஆயுள்கைதியாகவந்தேன் .வாழ்க்கையே அஸ்தமிச்சிப் போயிட்டதாய் முதலில் நினைச்சேன். இது நல்லது, இது கெட்டது, இவர் நல்லவர் அவர் கெட்டவர் என்று மனுஷன் போட்டுவரும்கணக்கெல்லாம் மாறிப்போகும். அனுபவம் மனுஷனை மாத்திடும்.ஜெயில்ல நல்லவனா வாழ்ந்துக் காட்டணும்னு எனக்குள்ள வைராக்கியம் வந்தது. ஆனா வாழவிடாமல் மனசுக்குள்ளிருந்து சாத்தான் தடுப்பான் .ஒருமனுஷனுக்கு எதிரி, வெளில யாருமில்ல. அவன் மனசுதான் பரம எதிரி . ஜல்லிக்கட்டு காளையாய் கைக்கு அடங்காமல் அங்குமிங்கும் தறி கெட்டு அலை பாயற மனசை அடக்கப் போனால் அதுவே ஆவேசமும் அகங்காரமுமாய் நம்மைப் புரட்டிஎடுக்கும். அதை அடக்கஆத்மபலம் வேணும்; மிருகமனத்தை அடக்க நாம் மனிதனாய் இருக்கணும்; அதுக்கு மனுஷத்தன்மை பெறணும்,

தங்கராசு நல்ல சிந்தைனையாளர் .அவரது அருகாமையில் பரசுவிற்கு சிறையே போதிமரமாயிற்று.

“ஒவ்வொருமனிதனும் மனதால் செயலால் சிறைப்பட்டிருக்கிறான். பாரதி சொல்வதுபோல,
‘விடுதலையைப் பெறடா-நீ
விண்ணவர் நிலை பெறடா
கெடுதலை ஒன்றுமில்லை-உன்
கீழ்மைகள் உதறிடடா’
என்று வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” என்று தங்கராசு யோகக்கலைக்கு நடுவே வாழ்வியல் கலையையும் போதிப்பார்.

சிறையில் இருப்பவர்கள் ஏதோ சூழலில் குற்றம்புரிந்து உள்ளே இருக்கிறார்கள்; ஆனால் பலபேர் நிரபராதி எனும் போர்வையில் வெளியே திரிகிறார்கள் என்பது பரசுவின் சொந்த அனுபவத்திலேயே
அவனுக்குப் புரிந்து போயிற்று.

மூன்றுமாதம் முன்பு கிராமத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியை அவனால் மறக்கமுடியுமா என்ன?

அன்று ஊர்தோப்பில் ஆலமரத்தின்கீழே உட்கார்ந்து ஆசிரியர் வேலைக்கு மனுப்படிவத்தை பூர்த்தி செய்துகொண்டிருந்தான்பரசு. அங்கு மரத்தின் மேல் கீச்கீச் என்று நிறைய குருவிகள் கத்திக்கொண்டிருந்தன. ஏதோஒருகுருவிமட்டும் சோகமாய் தன்துணைதேடி கத்துவதுபோல பரசுவிற்குப்பட்டது.

அப்போதுதான் அருகாமையிலிருந்த வயல்பக்கம் உரத்தகுரலில் சிலர்விவாதம் செய்வது காதில் விழுந்தது. இடையிடையே தாழ்ந்தகுரல் ஒன்று கெஞ்சுவதுபோலக்கேட்கவும்’சித்தப்பா?’ என்று அலறிக்கொண்டு ஓடினான்.

பரசுவின் சித்தப்பா குமரவேல் கிராமத்துப் பள்ளிக்கூட டீச்சர் .பொதுப்பணி, சமூகசேவைதான் அவருக்கு உயிர்மூச்சு. குடித்துக்குடித்து கடைசியில் வயிறுவெந்து இறந்துபோன தன் அப்பாவைவிடவும் அவரது தம்பியான குமரவேலின் மீது பரசுவிற்கு மதிப்புஅதிகம். ஐந்துவருடம் முன்பு விஷ சாராயம் குடித்து ஊரெல்லாம் கடனை வைத்துவிட்டு அவன் அப்பா போனதும் தன் குடும்பப் பொறுப்பை குமரவேல் ஏற்றார் என்பதால்மட்டுமல்ல ஒரேகுழந்தை ஆதிக்காக அவர் மறுமணமே செய்துகொள்ளாமல் கிராமத்தில் ஜாதி வித்தியாசம் பாராது அனனவருக்கும் எழுத்தறிவிப்பவர். மென்மையான இதயம் , தெளிவான பேச்சு , எல்லார்க்கும் உதவும் நல்லமனம் …இவைகளின் மொத்தக்கலவைதான் தனது சித்தப்பா என்பது பரசுவின் எண்ணம்.

அவரைப்போய் ஒருவன் சீண்டிக்கொண்டிருந்தான். வயலுக்கு யார் முதலில் நீர்விடுவது என்று இரு தரப்பிலும் ஆரம்பித்த பேச்சு பிறகு வாக்குவாதமாகியது .குமரவேல் நியாயத்தின்பக்கம் நின்றார். தர்மமாய்ப் போக வேண்டும் என்றார்.அவ்வளவுதான் அதர்ம அணித்தலைவனுக்கு ஆவேசம் வந்துவிட்டது.

” மாரி!எடுடா அரிவாள?” என்று ஆணையிட்டான். காத்திருந்த அவன் ஆள் ஒருவன், அரிவாளால் குமரவேலை சகட்டுமேனிக்குத் தாக்கினான்.தலைமுகட்டில் ரத்தத்துளி முதலில் தயங்கிப் பிறகு’குபுக்’ என பொங்கிக் கொண்டு வரவும் குமரவேல் தலையைத் தாங்கியபடியே நிலத்தில் சரிந்தார்.

“டேய் மாரீ! என்னடா நீ? இவனப்போயி வெட்டிப் போட்டியா அறிவுகெட்டவனே ?என் பங்காளி தலைய சீவுன்னு சொன்னேன்… அவன் தான் தண்ணீ தன் வயலுக்கு முதல்ல விடச் சொல்லி மல்லு கட்டினான்…அவன் இப்போ கலவரம் பாத்து பயந்து ஓடிட்டான்போல.?. எப்டியோ சரிதான்… தர்மம் நியாயம் பேசினவனுக்கே இப்டீன்னா நம்ம கதி என்னான்னு பங்காளிய யோசிக்கவைக்க நீ சேஞ்சதும் சர்தான்” என்று ஆணையிட்டவன் கெக்கலிக்கவும் பரசு எரிச்சலுடன்,”அடப்பாவி?” என்று வீறிட்டான்

ரத்தவெள்ளத்தில்குற்றுயிராய் கிடக்கும் தன் சித்தப்பாவை கண் கலங்கப் பார்த்தபடியே அரிவாளை வீசினவனின் சட்டையைப்பிடித்தான்.ஆத்திரமாய் குரல்கொடுத்தான். “ட்ட்ட்டேய்..கொலைகாரப்பாவி ஒருநல்ல மனுஷனை தீர்த்துக் கட்டிட்டியேடா? இனி வயலில் தண்ணிபாயுமாடா? அவர் ரத்தம்தான் இப்போவே ஓடுதுடா” என்று உரக்கக் கத்தினான். உடனே மாரி மன்னிப்பு கேட்பதுபோல் தன் இரு கரத்தை கூப்பியபடியே பின்னோக்கி நடக்க, அங்கிருந்த ஒருவன் அவனுக்கு ஏதோ சைகை காட்ட உடனே அவன் அங்கிருந்த பெரிய கல்தடுக்கி அருகிலிருந்த பாறையில் தலையை மோதிக் கொண்டதை பரசு கவனித்தான். இதுதான் நடந்தது

ஆனால்அந்த சதிக்கூட்டம்செய்தசூழ்ச்சியில் ,சட்டம் பரசுவை பிடித்துக்கொண்டது.பங்காளிச்சண்டையை பார்வையிட வந்த குமரவேலை யாரோ அவரிடம் தமக்கு இருந்த வேறு பகை காரணமாய் கொலை செய்துவிட்டதாயும் பரசு அதை நம்பாமல் மாரிதான்கொலை செய்தான் என்றுஅவனை பாறை மீது தள்ளி கொலை செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியது.

போலீஸ், கோர்ட், விசாரணை நடந்து, “குற்றம் ருசுவானதால் மூன்றுமாதம் சிறை தண்டனைவழங்குகிறேன்” என்று நீதிபதியை சொல்ல வைத்தது.

சித்தப்பாவின் பத்துவயதுமகன் ஆதி ஜெயிலுக்கு பரசுவைப் பார்க்க வரும்போதெல்லாம் சொல்வான். “பரசுண்னே அந்தாள் மாரிக்கு பெரிய அடி ஒண்ணுமில்ல. ஆஸ்பித்திரிலிருந்து வந்திட்டான்.நல்லாத்தான் இருக்கான் …சூழ்ச்சி செஞ்சி உங்கள மாட்டிவிட்டுட்டாங்க… இதுல பெரியம்மா -அதான் உங்கம்மா- படுத்தபடுக்கைஆயிட்டாங்க ….மீனாக்கா அழுதுட்டே இருக்குது…எங்கப்பாவும் இல்ல..வழக்கம்போல குடும்பத்துக்கு ஆறுதல்சொல்லிக் காப்பாத்த..”

“வருத்தப்படாதே ஆதி! உப்புதின்னவன் தண்ணிகுடிச்சிதான் தீரணும்..நான் வரவரைக்கும் வீட்டை நீ கவனிச்சிக்கோ..நான் வந்ததும் சித்தப்பா இடத்துல இருந்து உன்னையும் என் அம்மா தங்கச்சியையும் கவனிச்சிக்கறேன் என்ன? “

என்னவோ பதினைந்துநாளாய் ஆதியும் ஜெயில்பக்கம்வரவேஇல்லை .

சிறை சம்பிரதாயங்களைமுடித்துக்கொண்டு ஜெயிலரின் அறையை விட்டு நகர்ந்தான். வாசலில் பெரிய இரும்புக்கேட்டின் வயிற்றுப்பகுதியில் சின்னதாயிருந்த கதவின் வழியே குனிந்து வெளியேவந்தான் கதவின் அருகே துப்பாக்கியை நிமிர்த்திவைத்துக்கொண்டு வீச்சரிவாள் மீசையுடன் நின்ற காவலாளியிடம் “போய்வரேன்” என்றுசொல்லி கைகுவித்தான்

“வராதே, திரும்பி இங்க வரவேவராதே. ஜெயில்லயும்,சாவுவீட்லயும்’போயிட்டுவரேன்’என்கிறவார்த்தை வரவேகூடாது’என்று அதட்டலாய் சொல்லி சிரித்தான் அவன் .தொடர்ந்து “வெளிலபோயி ஒழுங்கா இரு” என்றான் .

‘நான் ஒழுங்காய்தான் இருந்தேன் ஆனால் யாரும் என்னை நம்பவில்லையே?நீதிபதியே நம்பாததால்தான் சிறைதண்டனை கிடைத்தது ‘.பரசு மனசுக்குள் புலம்பிக் கொண்டான்.

இந்தமூன்றுமாதத்தில் அம்மா எப்படி இருக்கிறாளோ? படுத்தபடுக்கைன்னு ஆதி சொல்லிட்டே இருத்தான். தங்கச்சிமீனா டவுன்போயி நாலு பசங்களுக்கு ட்யூஷன் எடுக்குதாம் பாவம்.
வேராய்குடும்பத்தைத் தாங்கிட்டு இருந்த சித்தப்பா திடீர்னு மறைந்ததுல விழுதுகள் எல்லாம் ஆட்டம் கண்டிடிச்சி. ஊருக்குப்போனதும் அம்மா, மீனா ,,ஆதி சுப்ரமணிவாத்தியார். எல்லாரையும்பார்க்கணும் .
.
மனசுக்குள் ஏதேதோ நினைத்தபடி பரசு பஸ்ஸைவிட்டு கீழே இறங்கினான்.

பட்டியலில் கடைசியாய் நின்றவர் பஸ்ஸை விட்டு இறங்கியதுமே முதலில் எதிரில் வந்து நின்றார்

“பரசு? “

குரல் கேட்டு விழி உயர்த்தி அவரைப்பார்த்தான்பரசு. ஆறடி உயரத்தில் நல்ல பருமனும் தக்காளீ நிறமுமாய் இருந்தவர் கருத்து உடல் இளைத்துக்குறுகிப்போயிருந்தார்.

திடுக்கிட்ட பரசு,

“வாத்தியாரய்யா! உங்க நண்பர்- என் சித்தப்பா- போனதுல நீங்க இப்படி உருக்குலைஞ்சி போயிட்டீங்களே ஐயா? ” எண்று நா தழுதழுத்தான் .

“ஆமாப்பா..நல்லவங்களுக்கு இதுகாலமில்ல.. நல்லதுக்கும் காலமில்ல. குமரவேல் போன நேரம் நான் ஊரில் இல்லாமல் என் மகளோட வடக்கே கோயில் யாத்திரை போயிருப்பேனா? அவன் முகத்தைக்கூட கடசில பார்க்காத பாவி நான். எளியாரை வலியார் அடிச்சா, வலியாரை தெய்வம் அடிக்கும் தம்பி! ஆமா நீங்க இன்னிக்குத்தான் விடுதலை ஆகிவரிங்களா என்ன?”

“ஊருக்குள் வரவே வெக்கமா இருக்குது வாத்தியரய்யா …தப்பு செய்யாமல் சந்தர்ப்ப சூழ்நிலைல ஜெயிலுக்கு போன என்னை ஊர்ல எல்லாரும் ஏத்துக்குவாங்களா? இவந்தான் அன்னிக்கு போலீஸ்காரங்க பக்கத்துல வர, தலையக்குனிஞ்சிட்டு வேனில் ஏறின பரசு?”ன்னு தான் என்னை நினனவுபடுத்திப்பாங்க இல்லீங்களா?”

“அதைவிடுங்க தம்பி…’உலகின் வாயைத் தைப்பது கடினம்; உந்தன்செவிகளை மூடுதல் சுலபம்.’.வைரமுத்து வரிகளை ஞாபகம் வச்சிக்குங்க… அதுசரி..பரசு! உங்க அம்மாவும் தங்கச்சியும் டவுனுக்கு வீடுகுடி போயிட்டாங்க தெரியுமா?”

“அப்படியா? ஆதி வாரம் ஒருவாட்டி என்னைப் பார்க்க வருவான் எல்லாம் சொல்லுவான் என்னவோ ரண்டு வாரமா அவன் வரல ..அதான் விஷயம் தெரியல. .ஐயா! டவுன்ல அம்மாவீட்டு அட்ரஸ் சொல்றீங்களா?”

அவரிடம் முகவரி வாங்கிக்கொண்டு டவுனுக்கு பஸ் ஏறினான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் ஆர்வமாய்.” அம்மா!” என்றவனை,”எங்கவந்தே?” என்பதுபோல அவன் அம்மாபார்வதி பார்த்தாள்.

பிறகு, “ஏண்டா பெரியதலைங்க சண்டை போடற இடத்துல உனக்கென்ன வேலல? உங்கசித்தப்பனுக்கும் அறிவுஇல்லை, நியாயம் ,நேர்மை தர்மம்னு கடைசில உயிரை பலி கொடுத்துப் போய்ச் சேர்ந்தாரு…நீ செஞ்ச காரியத்துல எங்களுக்கு எத்தினி அவமானம்? உன் தங்கச்சிக்குக் கல்யாணம் ஆகவேணாமா? நாங்க டவுனு வந்ததே அவளுக்கு வரன் திகயணும்னுதான் இங்கயும் வந்து அதைக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிடாதே..கண் காணாம எங்கனாச்சும் போயிடு ஆமா?”

“அம்மா! நான் தப்புசெய்யல…ஆனா சித்தப்பாவையே புரிஞ்சிக்காம அவரை விமர்சனம் செய்யும் உங்ககிட்ட நான் எப்படி என்னை நிரூபிச்சி காட்டுறது?”

“அண்ணே!”

குரல் கொடுத்தபடி உள்ளீருந்து வந்த மீனாவிடம், “மீனா1 நீ பத்து க்ளாஸ் படிச்சவ நீ சொல்லும்மா நம்ம அம்மாவுக்கு ?”என்றான் தவிப்பான குரலில்.

“அம்மா சொல்றதுல தப்பு இல்ல..ஆளு படை வச்சிருக்கிறவங்ககிட்ட நீ ஏன் மோதணும் அண்ணே?”

‘அப்போ அநியாயம் நடந்தா பாத்துகிட்டு சும்மா நிக்கணுமா?” சிவ்வென்று கோபம் தலைக்கேற வெடித்தான் பரசு.

‘அதெல்லாம் எனக்கு தெரியாது .நான் இப்போ நாலு பசங்களுக்கு ட்யூஷன் எடுக்கணூம்..அதுல
வர்ர காசுலதான் குடித்தனம் செய்யறோம்…அந்த ஆதிப்பய வேற ஆஸ்பித்திரிசெலவு அம்பது ரூபா வச்சிட்டான்..”

“ஐயோ என்னாச்சு ஆதிக்கு?”

‘ஆமாடா…அந்த தண்டச்சோறுக்கு காலராவாம்..நீ கிளம்புடி மீனா. வெட்டிக்கு இங்க பேசி நிக்கவேணாம் ” என்றாள் பார்வதி கடுப்புடன்.

குடையைவிரித்தபடி சாலையிலிறங்கிய தங்கையை ஆற்றாமையாய்பார்த்தான் பரசு .

குடையைவிரிக்குமுன் உன் மனசைவிரிக்கப் பழக்கிக்கொள் பெண்ணே…

“அம்மா, ஆதி எந்த ஆஸ்பித்த்ரில இருக்கான் ?”

“தர்மாஸ்பித்ரிதான்னு நினைக்கறேன் யாருகண்டா?”.
.
“என்னம்மா இப்படி அலட்சியமா சொல்றீங்க? பத்துவயசுப்பையன்மாஆதி… பாவம் ‘

“உன்னைப்பாக்க ஜெயிலுக்கு போவாதடான்னா என்னைமீறிப்போன நாயி “

“அம்மா…?”

வார்த்தைகளை தடித்து வீச இருந்த பரசு, சட்டென தங்கராசுவின் முகம் நினைவிற்குவரவும் அடக்கிக் கொண்டான்.

பரசு வேதனையுடன் வீட்டைவிட்டு வெளியேறி ஆஸ்பித்திரிக்கு வந்து ஆதியை பார்த்தான்.

.இளைத்துத் துரும்பாய் கிடந்தவன் இவனைக்கண்டதும்,” பரசண்ணே1 வந்துட்டிங்களா? சந்தோஷமா இருக்குது. உங்க நினவுல பெரியம்மாவும் மீனாக்காவும் வாடிப் போயிடாங்க…எப்பவும் உங்களையே நினைச்சிட்டே இருக்காங்க” என்றான் ஜெயிலுக்குப் பார்க்க வரும் போது சொல்வதுபோல.

“போதும்ப்பா… பொய் சொன்னதெல்லாம் போதும்…இப்போநான் எல்லாரையும் புரிஞ்சிட்டேன் உடம்பு மோசமாயிருக்கிறேயேப்பா ஆதி…பட்டினி கிடந்தியாப்பா பலநாளூ?”

‘இல்லியே பெரியம்மா வடை பாயாசத்தோட சாப்பாடு போடுவாங்களே?” என்று அப்பாவுக்குப்பிள்ளை தப்பாமல் வெகுளியாய் புன்னகைத்தபடி சொன்னான்.

பரசு கலங்கிய கண்களுடன் அந்த ஆஸ்பித்திரியின் டாக்டரிடம் போய் விவரம் கேட்டான். அவர் நோய் மிகவும் முற்றிப்போனபிறகு வந்து சேர்ந்ததால் ஆதிக்கு உயிர் பிழைக்கும் சாத்தியக்கூறுகள் குறைவென தெரிவித்தார் .பரசு தான் நிலை குலைந்து கீழே விழாமலிருக்கவேண்டுமே என நினைத்தபடி மறுபடி பஸ் ஏறி கிராமத்து தோப்பிற்குள் சென்று ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டான். மனசில் பாறாங்கல்லை கட்டிவைத்தமாதிரி நெஞ்சு கனத்தது.

‘ஆதி உடம்பு தேறிபிழைச்சி வரணும்’ என்று வாய் முணுமுணுத்தது.

வழக்கம் போல மரத்தின் மேலே குருவிகள் ‘கீச்கிச்ச் என்று கத்தின

நீண்ட நேரம் அப்படியே அமர்ந்தவனை”பரசு!” என்ற இனியமென்மையான குரல் நிமிர வைத்தது .

பத்மா!

சுப்ரமணிசாரின் மகள்! கிராமத்துப்பள்ளியில் பத்தாவது வரை ஒன்றாய் படித்தவள்.

“நலமா பத்மா?”

“பரசு, அப்பா சொன்னாரு நீ ஜெயிலிருந்து விடுதலை ஆகி இன்னிக்கு வந்திட்டேன்னு…. எப்படியும் இங்கே ஆலமரத்தடிக்கு நீ வருவேன்னு எனக்குத் தெரியும்..நானும் இங்க தினமும் வந்து ஆலமரத்துக் குருவிகள்கிட்ட உன்னைப் பத்தி விசாரிச்சிட்டுதான் இருப்பேன் .”‘பத்மா நிறுத்திவிட்டு அவனையே ஆழமாய்ப் பார்த்தாள் .

பரசு விழித்தான்.

பத்மா தொடர்ந்தாள். “நினைவிருக்கா பரசு? ஊர்க்குழாயில தண்ணீர் எடுக்க சண்டைவந்தபோது பல எதிர்ப்புகளுக்கு இடையில நீதானே டோக்கன் முறை வச்சி வரிசைல நின்னு எடுத்திட்டுப் போகணும்னு கட்டுப்பாடு கொண்டுவந்தே? உன் சித்தப்பாவுடன் சேர்ந்து கிராம முன்னேற்றத்துக்கு ஏதும் செய்யணும்னு நீ சொல்லிட்டே இருப்பேன்னு அப்பா அடிக்கடி பெருமையா சொல்வார்..அதனாலேயே உன்னை என்மனசில ஏத்துகிட்டேன். ”

“பத்மா! என்ன சொல்றே/ உன் மனசில நான் இருக்கேனா, நிஜமாவா?”

“ஆமாம் பரசு! பொண்ணுங்க சட்டுனு மனசில இருக்கிறதை வெளியே சொல்லமாட்டோம் ஆனா, கண்ணு காமிச்சிக் கொடுத்திடும்….’ விழிகளின் ஒளியில் கண்டு கொள் காதலை , வார்த்தைகள் அர்த்தமற்றவை…’ நான் எழுதின கவிதைதான், நல்லாருக்கா ?”

“அழகு, கவிதையும், அதை எழுதுன நீயும்தான்! சந்தோஷமாயிருக்கு பத்மா! இந்த ஆலமரத்துல அம்பது நூறு குருவிகள் கீச் கீச் னு கத்தறப்போ ஒரு குருவி மட்டும் எனக்காக கத்துதுன்னு நினைச்சிக்குவேன். இப்போ அது நிஜமாயிடிச்சி. ! ஆனா ,பத்மா, உலகத்தின் பார்வையில் நான் சிறுத்துப் போயிருக்கேனே?”

“ஆலம்விதை சின்னதுதான் அதுதான் பெரியவிருட்சத்துக்கே ஆதாரம் பரசு? “

” இனி என்னால் என்ன சாதிக்கமுடியும் பத்மா? “

‘வாழ்க்கையே ஒரு சாதனைதான்.. மெல்லமெல்ல ஆமை முன்னேறுகிற சாதனை ! உனக்கு நான் துணையா வரேன் பரசு”

” என் எதிர்காலத்துக்காக இப்போ நான் உன்கூட சேர்ந்துகொள்வது சுயநலமில்லையா? “

‘சுயநலமாவது தியாகமாவது ? அப்படி எதுவுமே இல்லை.நிறைந்தமனதுடன் செய்யப்படும் காரியம் எதுவும் நம்மீது ஒட்டிகொள்வதில்லைன்னு உன் சித்தப்பா தான் அடிக்கடி சொல்வார். ‘

“ஆனாலும் எனக்கு பயமாயிருக்கு பத்மா. என்லட்சியப்பயணம் வெற்றியடையும் என்கிற நம்பிக்கையே போய்விட்டது. பெத்த தாயே என்னை இன்னமும் கெட்டவனாய்ப் பாக்கறாங்க..இங்கே யாரையும் திருத்தவே முடியாதுபோலிருக்கு?”

“பரசு! கடவுளின் படைப்பில் கோளாறே கிடையாது .பிழை இருப்பதாகத்தோன்றுவதெல்லாம் நமது எண்ணங்களின் நிழலாட்டமே இல்லாது வேறில்லை . நமது எண்ணப்படி இந்த உலகத்தை திருத்தி மாற்றியமைக்க முயல்வது பேதமை. உலகம் எப்படி இருக்கிறதோ அப்படி ஏற்று, நமது இயக்கம் அதில் பொருந்துகிறமாதிரி செய்துகொள்வது அறிவு. ‘மனம் வேண்டியபடி செல்லும் உடலும் நசையறுமனமும் வேண்டு’மென பாரதி வரமாய்கேட்டது கவலை அச்சம் இவற்றை அடிமை கொள்ளும் பொருட்டாகத்தானே? காயிலே புளிப்பதெல்லாம் கனியிலே இனிக்காமல் போகாது..எல்லாத்துக்கும் காத்திருக்கணும்..சரி,நேரமாகிறது, எழுந்திரு பரசு!”

பத்மா நின்றபடிக்குனிந்து அவனை நோக்கி தனது வலது கரத்தை நீட்டினாள்.

பேச்சைவிட மௌனம் வலியது; ஒருநூறுவார்த்தைகளை பார்வை சொல்லிவிடும், ஓராயிரம் விஷயங்களை சின்ன ஸ்பரிசம் தெரிவித்துவிடும்.

பரசு மௌனமாய் பத்மாவின் கரத்தை தன்கரத்தினால் அழுந்தப் பற்றியபடி எழுந்துகொண்டான்.
அடைபட்டிருந்த காற்று மனக்கூண்டிலிருந்து விடுதலையாகி சுவாசமாய் வெளியே வர ஆரம்பித்தது.

காணவில்லை!

தேடி மிகச் சோர்ந்துவிட்டேன்
இனி தெய்வம்தான் எனக்குத்துணை.
நாடி எனை எதுவென்று கேட்போர்க்கு
நான் சொல்வேன் தொலைத்தகதை.

ஐந்து விரல் பதிந்த
அடையாளச்சின்னமாய்
அதற்குக்கன்னம்.
முகமும்அதுவே.

அதைத்தாங்கும்
கைபோல சின்னப்பிடி.

அதன் பெயரின் முதல்பாதியில்

அமைதிக்குப்பெயர்போன

அன்னம் இருக்கிறது.

என் புகுந்தவீட்டு சொத்து.
தொலைத்துவிட்டதால்
என் மாமியாரிடமிருந்து
கிடைக்கலாம் மொத்து!

கல்வைத்த தங்க அட்டிகையாயிருந்தால்
கள்வர் கொண்டுபோயிருக்கமுடியும்
அள்ளி அமுது படைக்கும்
ஆகிவந்த அன்னக்கரண்டியை
தள்ளிக் கொண்டு
போனது யாராயிருக்கும்?

தோழியைப்பிரிந்த ஏக்கத்தில்
குழைந்து கூழாகிவிட்டது சாதம்.

கடத்திச் சென்றவர்களைக்
கண்டுபிடித்து அன்னக்
கரண்டியை மீட்டுத்தருபவர்கள்,
கைத்தொலைபேசியில் எனக்கு
தகவல் தருக!
தக்க பரிசு உண்டு!

நாய் ஜாக்கிரதை!

கடைக்குள் நுழையும்போதே ,”நான் சொன்ன வாசகத்தை எழுதிமுடிச்ச அந்தப்பலகை ரெடியாகலியா இன்னும்?” என்று வள் என்று சீறி விழுந்தபடியே வந்தாள் அந்தப்பெண்மணி.

‘நல்வரவு ‘என்று கொட்டையாய் பெயர்ப்பலகையில் எழுதிமுடித்த சிகாமணி அந்தப்பெண்மணியைக்கண்டதும் பெயிண்டையும் ப்ரஷையும் அப்படியே கீழே வைத்துவிட்டு கடையின் உள்பக்கமாய் ஓடினான்.

“முதலாளீ” என்றான் மூச்சிறைக்க
“என்னடா சிகா?”

மரப்பலகை ஒன்றினைத்தரம் பார்த்துக்கொண்டிருந்த குமரவேல் இப்படிக்கேட்டதும் சிகாமணி,”முதலாளி! அந்தம்மா கடைசில நம்ம கடைக்கே வந்திட்டாங்க இப்ப” என்றான் பதட்டமான குரலில்.

முதலாளி இல்லாத நேரங்களில் எல்லாம் கடையின் டெலிபோன் ரிசிவரை சிகாமணிதான் எடுப்பது வழக்கம், அப்படி இரண்டுமூன்றுதடவைகளில் எடுக்க நேர்ந்தபோது இந்தப்பெண்மணி போனில்
” இன்னுமா நான் சொன்ன போர்டை எழுதி முடிக்கல வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்?” என்றும்,” ரோஸ்வுட்பலகையின் நாலுமூலையிலும் பித்தளைல விளிம்புகட்டி நடுல அழகா எடுப்பா எழுதச்சொல்லி ஒருவாரமாச்சு இன்னும் போர்டை ரெடி பண்ணாம இருக்கீங்கஒரு வேலைகொடுத்தா பொறுப்பா செய்யறதில்லையா? இதே அமெரிக்காவா இருந்தா இதுக்கெல்லாம் நாங்க கோர்ட்ல கேஸ்போடலாம் தெரியுமா? இந்தியா உருப்படாம போகக் காரணமே உங்களமாதிரி சிலபேராலதான்”என்றும் கூச்சல்போட்டிருக்கிறாள்.

அதனால் அவளை நேரில்கண்டதும் சிகாமணி திகைத்துப்போனான். ஐம்பதுவயதிருக்கும் வசதியான வீட்டுப்பெண்மணி என்பதை தோற்றமே காட்டியது. பாப்கட் செய்த தலை. பாண்ட் ஷர்ட் அணிந்து வந்தவள் கூலிங்க்ளாசைக் கழட்டிவிட்டு உஷ்ணப்பார்வையில் கடையை அளந்தாள்.

“வாங்கம்மா வாங்க” முதலாளி பொறுமையாய் வரவேற்கவும் சிகா அதை வியப்பாய் பார்த்தான்.

“பத்துநாளாச்சு நான் ஒரு போர்டு எழுதச்சொல்லி, இன்னும் முடிக்கல நீங்க? கடைக்குபோன்செய்தா நீஙக் மரப்பலகை வாஙக் வெளில்போயிருக்கிறதா இந்தப்பையன் சொல்றான்…ஏய் நீதானேப்பா அது? அதான் நேர்ல நறுக்குனு நாலுவார்த்தை கேக்க வந்தேன் நாளைக்கே ரெடியாகி வீட்டுக்குக்கொண்டுவரணும் சொல்லிட்டேன் ஆமா..”

“சரிங்கமா அந்த குறிப்பிட்ட பலகை கிடைக்க தாமதமாச்சு நாலுமூலையிலும் பளபளன்னு பித்தளைவிளிம்பு பொருத்திட்டோம் கடைசி இழைப்புநடக்குது முடிச்சிட்டா தம்பி வாசகத்தை அரைமணில எழுதிடுவான் சாய்ந்திரமே அவன் கைல வீட்டுக்கொடுத்தனுப்பறேன்,மா..”

”என்னத்த கொடுத்தனுப்பப்போறீங்களோ உங்களையெல்லாம் நம்பிப் பிரயோசனமே இல்லை ….எல்லாம் என் தலையெழுத்து”

சீறிக்கொண்டே போனாள்.

மாலை சொன்னபடிபலகையை இழைத்து முடித்து சிகாமணியிடம் பலகையில் எழுத வேண்டிய வாசகங்களை ஒருதாளில் எழுதிக்கொடுத்தார் குமரவேல்.

சிரத்தையாய் வெள்ளை பெயிண்டில் ப்ரஷைதோய்த்து எழுதிமுடித்தவன் காய்ந்ததும் கையோடு முதலாளி கொடுத்த விலாசத்திற்கு எடுத்துக்கொண்டுபோனான்.

வாசலில் அல்சேஷன் நாய் ஒன்று கன்றுகுட்டி சைசில் இவனைப்பார்த்து வாலைஆட்டிக்கொண்டுவந்தது.சிகா சற்றுமிரண்டு நிற்கையில் ஒருசுற்றிசுற்றி வந்து மோப்பமிட்டுவிட்டு ஒதுங்கிப்போய்விட்டது. சின்ன லொள் கூட இல்லை!

உள்ளே போனில் மும்முரமாய் பேசிக்கொண்ட்ருந்த அந்தபெண்மணி சிகாவைகக்ண்டதும்,

” வந்து தொலைஞ்சியா?ரெடியாச்சா ஒருவழியா? இந்த சின்ன வேலைக்கு ஒருவாரத்துக்கு மேல கேட்குதாக்கும்?யூஸ்லெஸ்பீபிள்! சரிசரி அதை காம்பவுண்ட்கேட்ல கம்பிபோட்டு இறுக்கமாய்க் கட்டி்ட்டுப்போய்ச்சேரு… என்ன தயங்கி நிக்கற?ம்? கம்பி கதவுலயே இருக்குதுபொ,,போ..” என்று சீறி விழுந்தாள்.

சிகா அந்தப்பலகையை கவனமாய் நுழைவுவாசலில் இருந்த க்ரில் கேட்டில் இரும்புக்கம்பியை வளைத்து முறுக்கி இறுக்கக் கட்டினான்.

கதவை மூடிவிட்டு ’தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று பெருமூச்சுவிட்டபடிவெளியே போனவன் சட்டென திரும்பிப்பார்த்தான்.

”நாய் ஜாக்கிரதை” என்ற வாசகம் எழுதிய பலகை வீட்டின் உட்புறம் திரும்பி இருந்தது.

பந்து.

“பாட்டீ! யாரோ ’பத்தி ராஜம்மா’ளாம் , அவங்களப்பத்தி சுவாரஸ்யமா இண்டர்நெட்ல ஒரு தமிழ் க்ரூப்ல விவரம் போட்டுருக்காங்க….உனக்குத்தான் இந்தமாதிரி செய்தின்னா ஆர்வம் ஜாஸ்தியே படிக்கறேன் கேக்கறியா?” என்று கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்த தன் பேத்தி மீனா கூவவும் புளியில் கோதினை நீக்கியபடி கூடத்தில் உட்கார்ந்திருந்த விசாலம் தனது அறுபதுவயதினை மீறி சிறுபெண்ணைப்போல உற்சாகமாய் அறைக்குள் ஓடி,” சொல்லு சொல்லு” என்றாள்.

மீனா திருச்சியில் ஒருபெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். சமீபமாய் கணிணியில் தமிழில் தட்டச்சக் கற்றுக்கொண்டுவிட்டாளாம். தமிழ் இணையதளங்களை எல்லாம் தினமும் எட்டிப்பார்த்துவிடுவாள். இணைய மகாசமுத்திரத்தில் வலைப்பூக்களில் மடலாடற்குழுமங்களில் தமிழ் மொழி ஆற்றும் பெரும் பணியினைக்கண்டு மகிழ்ந்துபோவாள்.
.அதனைப் பெருமை தாங்காமல் முதலில் பாட்டியிடம் தான் அதை சொல்லிக்கொண்டாள். அப்பாவும் அம்மாவும் ,”போதுமே, தமிழாடி உனக்கு பின்னாடி சோறுபோடும்? ஃப்ரெஞ்ச்படி, ஜெர்மன் படி, உன் பாட்டி அந்தகாலத்தில் கிராமத்தில் தமிழில் கவிதை கிறுக்கி பரணில் போட்டுவைச்சிருந்தா…. அந்த பாதிப்பு உனக்கும் வந்து தமிழ்மோகம் பிடிச்சி அலையறே லூசு” என்றதால் பிறகு அவர்களிடம் மீனா சொல்லவேண்டியதை மட்டும் சொல்லுவாள்.பாட்டிதான் மீனாவுக்கு உற்ற தோழி.

“ம்ம் படிக்கிறேன்…யாரோ மோகனரங்கனாம் கவிஞர், நல்ல சிந்தனையாளர் என்று தெரிகிறது அவர் தன் வலைப்பூவில் இப்படி எழுதி இருக்கார் பாட்டி படிக்கறேன் கேளு பாட்டி” என்று கணிணி திரையைப்பார்த்து மீனா உரக்கப் படிக்க ஆரம்பித்தாள்.

’பத்தி யதிராஜம்மாள் !

இவர் கவர்னர் அன்று. அல்லது முதல் முதலில் பாராசூட்டிலிருந்து
கீழே குதித்த பெண்மணியுமன்று. இல்லையென்றால் ஆரம்ப கால தமிழ்
எழுத்துக்களில் நேரடியாக தன் பெயரில் போடாமல் எழுதிப் பின்னர்
பிரசித்தமான எழுத்தாளருமன்று. பின்னர் இவர் யார்?

சில வருஷங்களுக்கு முன் நீங்கள் ஸ்ரீபெரும்பூதூர் போயிருந்தால்
நிச்சயம் தெருவில் இவரை அடையாளம் கண்டிருக்க முடியாது. கையில்
தடியூன்றி உடல் செங்குத்துக் கோணத்தில் குனிந்து, குரல்
ஆற்றின் அலைவரிசையை அடைந்தது போல் வருகின்ற வயதான
மூதாட்டியை எப்படி பார்ப்போம்?

ஐயோ பாவம்! பாட்டி ஓரமாகப் போங்கோ!

ஆம் பெண்சமூகத்தையே வெகுகாலம் ஓரமாகப் போங்கோன்னுதான் சொல்லி
ஏதோ ஆங்கிலம் வந்த முகூர்த்தம் அஷ்ட லக்ஷ்மிகளும் திக்விஜயம்
வருகிறார்கள். வயதான மூதாட்டி ஓரமாகத்தானே போகவேண்டும்.
சரிதான். ஏதாவது வண்டி கிண்டி வந்து மோதிடுத்துன்னா! வண்டி
ஓரமா போனா என்னன்னு யோசிக்க இன்னும் பலகாலம் ஆகும்.
அதுவரையில், பெருசோ, பாட்டியோ ஓரமாகப் போகட்டும். இல்லை
சமுதாயத்தில் சில விஷயங்களை நினைத்தால் தூக்கமே வரமாட்டேன்
என்கிறது. சமுதாயம் கிடக்கட்டும். நாமே மடத்தனத்தில் ஊறி
ஒருகாலத்தில் கொள்கலனாய் இருந்த தவறுகளை நினைத்தால் ‘என்ன
பேச்சு வேண்டி கிடக்கிறது நம்ம பவுசுக்கு? என்றுதான் வெட்கம்
பிடுங்கித் தின்கிறது.

நல்ல வேளை சித்தர் ஒருவர் பாடிவைத்தார். ‘வெட்கம் கெட்டு விதி
கெட்டு வெளிப்பட்ட மூளிக்கு முக்காடு ஏதுக்கடி குதம்பாய்
முக்காடு ஏதுக்கடி’

அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்கிறீர்களா? அதெல்லாம்
பெரியவா சொல்றதுக்கு பலவகையில் அர்த்தம் கொள்ளலாம். ஒரே
அர்த்தம்னு சோனிப்பிச்சான் மாதிரி வாக்கு சொல்வாளான்ன? சித்தர்
இல்லையா? சித்தம் போக்கு என்பதுபோல் நம் சித்தத்துக்கு
ஏற்றாற் போல் பொருள் கொள்ள முடியாமல் போனால் அப்புறம் அவர்கள்
என்ன சித்தர்கள்?

சரி நமது மூதாட்டி விஷயத்துக்கு வருவோம். ஓங்கோலோ நெல்லூரோ
அங்கிருந்து எந்தக் காலத்திலிருந்தோ வந்து ஸ்ரீபெரும்பூதூரே
கதியெனத் தங்கிப் பல தலைமுறைகளைக் கண்ட கண்கள் இப்ப இப்பதான்
டெலஸ்கோப் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அப்பொழுது போயிருக்கும் பொழுது தம்பியின் நண்பருக்குச் சொந்தம்
என்ற வகையில் விவரங்கள் கிடைத்தன. எனக்கு ஒரு கிளரும்
எண்ணம்.
அவர் இவ்வளவு நாள் என்ன கண்டிருப்பார்? போய்ப்
பார்த்தால் பழங்கதைகள் வண்டி வண்டியாய்ச் சொல்லுவார் என்று
தயாராகத்தான்
போயிருந்தேன். ஆனால் முற்றிலும் என்னை அசத்திவிட்டார் மூதாட்டி.

அங்கு இருக்கும் ஸ்ரீராமானுஜரின் வழிவந்தவர்களான ஆசூரி ஸ்வாமி
திருமாளிகையில் பெரிய ஆசூரி ஸ்வாமியிடம் அந்தக் காலத்தில்
பல ஸ்ரீவைஷ்ணவ ரஹஸ்ய கிரந்தங்களைக் காலக்ஷேப முறையில் பாடம்
கேட்டு அப்படியே மூலபாடம் வ்யாக்யானம், அதற்கு பத
அர்த்தங்கள் நுட்பப் பொருட்கள் என்று நினைவில் வைத்தே சொல்லிக்
கொண்டிருந்தார் மூதாட்டி. அந்த ஸ்வாமி என்ன அர்த்தம் சொல்வார்
இந்த ஸ்வாமி என்ன அர்த்தம் சொல்வார் என்று authorwise
catalogueம் போகிறவாக்கில் சொல்லிக்கொண்டு போகிறார்.
இத்தனைக்கும் தமிழ் எழுத படிக்கத் தெரியாது. தெலுங்குதான்.
தெலுங்கு லிபியில் போட்ட மணிப்ரவாள வ்யாக்யானங்களே மூதாடிக்கு
ஜீவாது.

அவருடைய அறை எது தெரியுமோ? வாசலில் நின்று பெல்லை
அழுத்தினால் அதோ அந்தக் கடைசியில் நேர் ரேழி ஓடி
கொல்லையில் முடிகிறதே அந்தக் கதவிற்கு முன்னால் போவோர்
வருவோருக்கு வழிவிட்டு ஓரமாகக் கிடக்கை. வீட்டில் என்ன வண்டி
வந்து போய்க் கொண்டிருக்கப் போகிறது? ஓரமாகத்தான் மூத்த
தலைமுறைகளின் வாசம். நடுவில் அமர்ந்து நாம் என்ன கிழித்துக்
கொண்டிருக்கிறோம் என்று எனக்குப் புரிந்தபாடில்லை.

முதலில்தான் தயக்கம். பிறகு பேசத் தொடங்கியதும், அகண்ட
காவிரியாய் அரட்டை போய்க்கொண்டிருக்கிறது. வடமொழிப் பதங்கள், வ்யாகரண கோட்பாடுகள்,

அவற்றைப் பயன்கொண்டு நிர்வாஹங்கள் எல்லாம் படிக்காத
அந்தக் காலத்துப் பெண்மணி தள்ளாத வயதில் தடுமாட்டம் இல்லாத
நினைவோடு கூறுவது எப்படி முடிந்தது?

முதலில் மாதர்கல்வி என்பது என்ன ? இது என்ன? என்றோ
ஆயிர வருஷங்களுக்கு முன்னால் ஒருவர் அகழ்ந்த ஊருண்கேணி.
காலத்தின் ஒற்றை வழிப்பாதைகளில் வந்து வந்து மொள்ள கொடுத்துக்
கொண்டே இருக்கும் வற்றாத ஏரி. ஸ்ரீராமானுஜரின் இந்தப்
பிரபாவங்களுக்கு ஏதுகல்வெட்டு? கல்வெட்டா? உயிர்க்கட்டாக காலம் தோறும்
தொடர்கிறதே.

இந்த மாதிரி செட்டி குலத்துத் திருவிளக்குகளான பாகவத
அம்மாக்கள்தான். முன்னரே சொன்னேனே தெலுங்கு எழுத்தில் வந்த
சுமார் ஐயாயிரத்துப் பக்க அட்லாஸ் சைஸ் நூற்தொகுதியில் 15
புத்தகங்கள் அடுக்கடுக்காக உரைகள் அரும்பதங்கள் அடக்கம் அதில்
ப்ரூப் திருத்தம் 7 பாகவத மூதாட்டிகள். திருத்தத்தை மீறி
எஞ்சிய தவறுகளும் மொத்தம் 7தான்.
பல சமயம் சந்நிதிக்குக் கூடப் போகாமல் வந்திருக்கிறேன். ஆனால்
போனவுடன் இந்த பாகவத ஆன்மாவைச் சந்திக்காமல் வந்ததில்லை.
இன்றுபோனால் சந்நிதிக்கு மட்டும்தான் போகமுடியும். ஏனென்றால்
அங்குதானே ஆசார்யன் திருவடியில் அந்த மூதாட்டியும் இருப்பார்,
ஓரமாக அன்று; ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி உரிமையோடு நடு
ஓலக்கத்தில், உதிக்கும் உத்தமர்தம் சிந்தையுள் ஒண்கழலோன்
யதிராஜன் உவப்புக்கு இலக்காகி.’’

மீனா நிறுத்தியதும் விசாலம் வியப்புடன்,” அடேயப்பா ! அருமையான தகவல் ஆச்சே இது! நிச்சயம் அந்த அம்மாளை ஸ்ரீ பெரும்புதூருக்குப் போய்ப்பார்க்கவேண்டும் மீனா” என்றாள்
.
“எங்கபாட்டி அதுநடக்கப்போகிறது? உன்னைத்தான் இன்னிக்கு ராத்திரி அப்பா பெங்களூர்க்கு சித்தப்பாஆத்துக்கு அனுப்பப்போறாளாமே? நானும் இன்னிக்கு ஸ்கூல் எக்ஸ்கர்ஷன் டில்லி போறேன் வரதுக்கு ஒரு வாரம் ஆகும் பாட்டி. ஆறுமாசமா நீ இங்க இருக்கறதுல எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா பாட்டி? செத்துப்போன தாத்தா பத்தி, கிராமம் ஊர் திருவிழா இலக்கியம் நம்ம கலாசாரம் பத்தில்லாம் நீ சொல்றப்போ நிஜம்மா எனக்குப்பெருமையா இருக்கும்! இந்த அம்மாவும் அப்பாவும் ஒண்ணும் சொல்லமாட்டா. அப்பாக்கு ஆபீஸ், அம்மாக்கு டிவி சீரியல்தான் முக்கியம். ” மீனா சிணுங்கினாள். வேறு சமயமாயிருந்தால் விசாலம் உடனே போய் பேத்தியை சமாதானம் செய்திருப்பாள் இப்போது அவளது சிந்தனையெல்லாம் தன்னை இன்று ஊருக்கு அனுப்ப இருப்பதாக மகனும் மருமகளும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்பதுதான். எதைத்தான் முன்கூட்டியே சொல்லி இருக்கிறார்கள்? தூரத்துப்பச்சையாய் தெரிவதெல்லாம் அருகில் வந்தவுடன் தூர்வாறாதக் கேணியாக நாறுவதை உணரமுடிகிறதே! இதை முன்னே உணர்ந்துதான் தன் கணவர் சாகும்வரைக்கும் கூழோ கஞ்சியோ குடித்துக்கொண்டு கிராமத்திலேயே இருக்கலாம் என்றார் போலும்!

விசாலம் பெருமூச்சுவிட்டுக்கொண்டாள்

எல்லாம் ஆறுமாதமாய்ப் பழகி விட்டது.

அரவிந்தஅன்னைக்குக் காலையில் வைத்த காகிதப்பூவை கைப்பைக்குள் போட்டுக்கொண்டாள் விசாலம். நல்லபடியாய் தான் பெங்களூர் போய்ச் சேர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கைப்பூ மனசில் பூக்க மகனை நிமிர்ந்துபார்த்தாள்.

பெங்களூரில் தமிழ் புத்தகம் அதிகம் கிடைக்குமோ கிடைக்காதோ? புத்தக வாசிப்பின் நாட்டம் காரணமாய் நாலைந்து நாவலும் கவிதைப் புத்தகமும் வாங்கிதரமுடியுமா என்று பத்ரியிடம் கேட்க வாயெடுப்பதற்குள் அவன் மனைவியைப்பார்த்தபடி,” லதா, பதினோருமணிக்கு அம்மாக்கு பஸ் ,ஆனா ஒன்பதுமணிக்கே அம்மாவை பஸ் ஏத்திவிட்டுட்டு நாம அப்படியே
மனோ வீட்டு பெர்த்டே பார்ட்டிக்குப்போய்ட்லாம் என்ன?” என்றான்.

லதா ,” ஆமா பார்ட்டிமுடியறநேரம் போகணும், வேற வழி? உங்க தம்பிதான் கரெக்ட்டா ஆறுமாசம் முடியற நாளில் தான் அம்மாவை தன்கிட்ட அனுப்பணும்னு கண்டிஷனா சொல்லிட்டாரே. ஒருநாள் ரெண்டுநாள் முன்னே போனால் என்னவோ? வனஜா கெட்டிக்காரி. நான் தான் அசடு. “ என்று அடிக்குரலில் முனகினாள்.

“ வனஜா மட்டுமா? மாதவனும் கெட்டிக்காரன். அம்மா இங்க இருக்கிறாளேன்னு ஒரு பைசா அனுப்பினானா பாரேன்.அப்பா உயிரோ்டு இருந்தவரை அவர்கிட்ட அவனுக்கு ஒரு பயம் இருந்தது மாசாமாசம் கிராமத்துக்கு பணம் அனுப்பிண்டு இருந்தான் அப்பா போயி அம்மாவை நாம பேசிக்கொண்டபடி ஆளுக்கு ஆறுமாசம் வைச்சிக்கணும்னு அம்மாவை முதல்ல மூத்தபையன்னு என்கிட்ட தள்ளிட்டான். ஆறுமாசத்துல ஒருநாள் திருச்சிவந்து எட்டிப்பாக்கல; ஒரு சல்லிப் பைசா அனுப்பல….நானும் இப்போ அம்மா கைல பஸ் டிக்கட் தவிர அம்பதுரூபாய்தான் கொடுத்திருக்கேன் ஜாஸ்தி கொடுத்தால் தம்பி சுருட்டிப்பானோ இல்லையோ வனஜா காய்கறிக்கு காஸ்மெடிக்குக்குன்னு உடனே பிடுங்கிடுவா இந்த அம்மாவும் அசடு கொடுத்துடுவா…..”

பத்ரியின் பேச்சைக்கேட்டு விசாலம் அதிர்ந்துபோக வில்லை ஆறுமாதமாய் இதுவும் பழக்கமாகிவிட்டதால் அதிகம் உறைக்கவில்லை. விருந்தும் மருந்துமல்ல தாயும் தந்தையும்கூட மூன்றுநாளைக்குதான் என்கிற காலகட்டம் உருவாகிவிட்டது எல்லாவீடுகளிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் தனிதனி தீவுகளாய் என்று எங்கோ படித்த கவிதை விசாலத்திற்கு நினவிற்கு வந்தது.

ஜங்ஷனில் வெளியூர்ப்பேருந்து நிலையத்தில் விசாலத்தை விட்டுவிட்டு,” பஸ் இங்கதான் வரும். கேட்டுண்டு ஏறு. டிக்கட்டைக்காமிச்சி எந்தபஸ்ல ஏறணும்னு யாரையாவது கேட்டா கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவா. ஜாக்கிரதையா போய்ட்டுவாம்மா….வனஜா கொஞ்சம் ரஃபா ஓபன்னா பேசுவா லதாமாதிரி இல்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ “ என்றான்.

’உன் பொண்டாட்டி மொழுக்குப்பூனைப்பா. பேசாமயே காரியத்தை சாதிச்சிப்பா ’என்று சொல்லவந்ததை சொல்லமுடியாமல்
’சரி ’என்றாள் விசாலம்.

”லேட் ஆறது பார்ட்டிக்கு நான் கிள்ம்பறேன் பஸ் பத்துக்கு வரும், 11மணிக்கு கிளம்பிடும். ரொம்ப விடியலில் இருட்டுலயும் பனிலயும் போகவேண்டாம்னுதான் லேட்பஸ்ல அனுப்பறேன்… கடசி ஸ்டாப் கலாசிபாளையம்ல இறங்கு, நடுல இறங்கிடாதே மாதவன் வருவான் அழைச்சிண்டுபோக, சரி வரட்டுமா?”

”சரிப்பா பைக்ல பார்த்துப்போ. வேளைக்கு சாப்டு..”

விசாலம் கண்ணில் துளிர்த்த நீரை புடவைதலைப்பில் துடைத்தபடி அங்கிருந்த சிமெண்ட் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்துகொண்டாள். . பேருந்து நிலையத்திற்கே உரிய இரைச்சலும் ஜனநடமாட்டமும் அதிகமாயிருக்க ,அந்த இரவு நேரத்திலும் மல்லிகைப்பந்துடன் ஒரு வயதானவள் ,” ரெண்டுமுழம் பத்தே ருபா வாங்கிக்கம்மா” என்று கெஞ்சினாள். பஸ்டிக்கட் தவிர விசாலத்தின் கைப்பையில் ஐம்பதுரூபாய்தான் இருந்தது .பத்துரூபாய்க்கு மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டுபோய் பெரிய மருமகளை திருப்தி செய்யமுடியாதுஎன்றாலும் தன்னைவிட வயதில் மூத்தவளாய்த் தெரியும் கிழவிக்கு உதவலாம் என்று தோன்ற பூவும் பணமும் கைமாறின. மீதம் நாற்பதுரூபாயை கைப்பையில்போட்டபோதுதான் தண்ணீர்பாட்டிலை எடுதுவர மறந்தது நினைவிற்குவந்தது மீனா மதியமே டில்லி எஸ்கர்ஷனுக்குப்போய்விட்டாள் அவள்மட்டும் இருந்திருந்தால் இப்போது பஸ்ஸில் ஏறுகிற வரைக்கும் கூடவே துணையாக இருந்திருப்பாள். வறடடுஇருமல் மட்டும் இல்லாவிட்டால் தண்ணீர் இரவு நேரப்பயணத்திற்குத்தேவை இல்லை. பெஞ்சில் விசாலம் அருகே ஒரு இளம்பெண் கைகுழந்தையுடன் வந்து உட்கார்ந்துகொண்டாள். “பெங்களூரு பஸ்ஸு எப்போவரும்?” என்றுகேட்டாள் அழுகிற குழந்தையை மடிமீதுகிடத்தி அதன் மார்பில் கைவிரல்களால்தட்டியபடியே.

விசாலம் ,” 11மணிபஸ்சா ?” என்று கேட்டுவிட்டு,”தெரிலைம்மா இன்னும் வரக்காணோம் மணி பத்தேகாலாகுதே?” என்றாள்.

“ஆமாங்கம்மா… ஆம்னிபஸ்ஸுன்னா கரெக்டா வரும் கரெக்டா கெளம்பும் இது ஏதொ லொடக்காணி பஸ்ஸு. எப்போவேணா வரும் எப்போவேணா கெளம்பும். இதுக்கு டிக்கட் சல்லிசுன்னு எம் புருஷன் இதுலதான் என்னை அனுப்பும். என்னா செய்யறது பேய்க்கு வாக்கப்பட்டா முருங்கமரத்துலதான ஏறீயாவணும்?” என்று சலித்துக்கொண்டாள்.

“கொஞ்சம் தண்ணீ பாட்டில் வாங்கிவரேன்.. பஸ்ஸுவந்துடாதே அதுக்குள்ள?”

“வந்தாத்தான் உடனே கெளம்பிடுமா அதெல்லாம் கவலையே இல்ல. நீங்கபோய்வாங்க…இந்த பிளாட்பாரத்துலதான் வருமா இல்ல அதுக்கும் அலையணுமான்னு அப்புறமேட்டுத்தான் தெரியும்..நீங்கபோய்வாங்க நான் இங்கிட்டுதான் உக்காந்துருப்பேன்,இந்த சனியன் நொய்நொய்ன்னு அளுவுறான் அப்படியே அவங்க அப்பனாட்டம் அழிச்சாட்டியம்” என்று குழந்தையின் மார்பில் பட் பட் என்று வேகமாய்த்தட்ட ஆரம்பித்தாள்.

விசாலம் தண்ணீர்பாட்டிலுடன் திரும்பிவந்து உட்கார்ந்தபோது இன்னொரு வயதான தம்பதியர் அங்கே அமர்ந்திருந்தனர். விசாலம் கைப்பையுடன் நிற்கவும் குழந்தையை வைத்திருந்தபெண்,” யெம்மா…நீங்கதானே முதல்ல இங்கபெஞ்சுல ஒக்காந்திருந்தவங்க எதுக்கு இப்போ நிக்கறீங்க? வந்து குந்துங்க ஓரமா” என்று உரக்க கூவினாள்.

“11மணி பெங்களூரு பஸ்சா? நாங்களும் அதுக்குத்தான் வந்துருக்கோம்…. ரெண்டுபேருக்கும் கண்ணு சரியா தெரியறதில்ல….பஸ்ஸுவந்தா சொல்லும்மா பொண்ணு….குழந்தைகுட்டி இல்லாத பாவிங்க நாங்க உன்னை மகளா நினச்சி இந்த உதவியக்கேட்டுக்கறோம்…” என்றார் முதியவர் நடுங்கும் குரலில்.

”இங்கயே கண்ணு தெரில்லங்கறீங்க பெங்களூரு போயி என்ன செய்வீங்க தாத்தா?” குழந்தைக்காரி குறும்பாய் கேட்டாள்.

“அங்க ஒரு பழைய நண்பன் இருக்கான்மா..அவனுக்கு ஒரே ஒரு பொண்ணு உன்னைமாதிரிதான் சிறுவயசு. அவகிட்டதான் அவன் இருக்கிறான் எங்களையும் அங்க வந்து கடைசிகாலத்துக்கு வந்து இருக்கசொல்லி அவன் பொண்ணு சொல்றா, அதான் போறோம்”

“இந்தகாலத்துல பொண்ணைப் பெத்தவங்கதான் அதிர்ஷ்டக்காரங்க…. எனக்குப்பாருங்க அந்த அதிர்ஷ்டமும் இல்ல… மொடாக்குடிப் புருஷனைக்கட்டிக்கிட்டு அவன் வாரிசா ஆம்பிளைதான் பொறந்திருக்கு…..இந்த ஆறுமாசக் குழந்தைக்கு அரைபவுனுல செயின் செய்து தரணுமாம் என் அப்பன், போயிக் கொண்டாடின்னு புருஷன் கழுத்தைப் பிடிச்சி தள்ளிட்டான் , என் அப்பன் அங்க கட்டிட காரைவேலை செய்யுது, ஆத்தா காய்கறி வியாபாரம் செய்யுது. அதும் இப்போ வெங்காயமும் வெள்ளைப்பூண்டும் விக்குற வெலையில் ஆத்தா காய்கறி வியாபாரத்தையே நிப்பாட்டிடிச்சாம். சோத்துக்கெ திண்டாட்டம் சொக்கத்தங்கத்துக்கு எஙக் போவுறது? என்னவோ போங்க…”

’இஞ்சிமொறப்பா… இஞ்சிமொறப்பா’

விற்றுக்கொண்டுபோன சிறுவனை அழைத்த அந்தப்பெண்,” நாலு வில்லை கொடு பஸ்ஸுலபோனா பாளாப்போன வாந்தி வந்து தொலைக்கும் ” என்று முணுமுணுத்தபடி பர்சைத்திறந்தாள்..ஐம்பதுரூபாயை வெளியே எடுத்தாள்

“ஐயே சில்லறை கெடையாதுக்கா …போணி நீதான் “ என்றான் இஞ்சிமுறப்பாவை மரத்தட்டில் வைத்துக்கொண்டிந்ருத அந்த சிறுவன்.

“அடி செருப்பால..போணியாமுல்ல? ராவுல என்னடா போணி?”

“யெக்கா…..என் வியாபாரம ராவுலதான் பகல்ல இஸ்கூல்போவுறேன் இல்ல?”

“பாவம் படிக்கிற பையன்போல்ருக்கு ஏழ்மையில இப்படி வேலை செய்து பொழக்கிறானே !பையா..இந்தாப்பா எவ்ளோ தரணும்?” விசாலம் தனது சிறு பர்சைத்திறந்தபடி கேட்டாள்.

“நாலுரூவா பாட்டிம்மா”

“ஐயோ என்னம்மா நீங்க தரீங்க?” அலறினாள் அந்தப்பெண்.

விசாலம் சில்லறையைக்கொடுத்துவிட்டு,”அதனால் என்னம்மா? கைகுழந்தைக்காரி நீ நல்லபடியா ஊர்போய்ச்சேரவேணாமா? ஆயிரம் ரூபாயா தந்தேன் வெறும் நாலுரூபாதானே பரவால்ல” என்றாள் புன்னகையுடன்.

அப்போது பாம்பாம் என்று ஹார்ன் அடித்துக்கொண்டு ஒரு மஞ்சள் நிற பஸ் வந்து நிற்கவும், அந்தப்பெண் கைகுழந்தையை வாரி தோளில்போட்டுக்கொண்டாள்.”இருங்க நான் போயி இது நம்ம பஸ்சான்னு விசாரிக்றேன்… ” என்று எழுந்திருந்தாள்.

விசாலம் அவள் எழுந்ததும் அங்கே போய் உட்கார்ந்துகொண்டவள்,”குழந்தையை என்கிட்ட கொடேம்மா, பாவம் கைவலிக்கப்போறது?” என்றாள் பரிவுடன்.

அதற்குள் அவள் சிட்டாய்ப்பறந்து பஸ்சை நெருங்கி விஜாரித்துவந்தவள்,” 11மணி பெங்களூர் பஸ்சுதானாம் எப்போவேணா எடுப்பாங்க. வாங்க ஏறுங்க சீட் நம்பர் இருக்குது ஆனா பாருங்க பாசஞ்சர் ரயிலுமாதிரி எல்லா ஊர்லயும் நிப்பாட்டி ஆளுங்களை புளிமூட்டையா ஏத்திக்கிட்டுத்தான் போய்ச்சேருவான்…புறப்படறநேரமும் போய்சேருகிறநேரமும் நிச்சயமே இல்ல ஆனா போய்டுவான் அது நிச்சயம்” என்று சொல்லி சிரித்தாள்.

அவள் சொல்லியதுபோலவே பதினொன்றரைக்கு கிளம்பிய பஸ் வழி நெடுகவும் நிறுத்தி ஆட்களை ஏற்றிக்கொண்டு சேலத்தில் அரைமணிக்குமேல் நடு இரவு நிறுத்திவிட்டது. பிறகு கிருஷ்ணகிரியில் காப்பிக்கு என்று நிறுத்தி அங்கு அரைமணிநேரம் செல்ல விடியற்காலை ஐந்தரைக்கு அங்கிருந்து புறப்பட்டு வழியில் பல இடங்களில் நிறுத்தி ஜனங்களை ஏற்றிக்கொண்டு ஹொசூர் வந்தபோது மணி ஏழரை ஆகிவிட்டிருந்தது. அதற்குள்ளேயே பஸ்ஸில் பலரது செல்போன்கள் இயங்கிக்கொண்டே இருந்தன. விசாலத்திற்கு இரவு பூராவும் வந்த வறட்டு இருமலில் தூக்கம் கெட்டுப்போய் விடிகிறபொழுதில் கண் செருக ஆரம்பித்தது.

அப்போதுதான்,”அம்மா…இறங்குங்க பஸ் பெங்களூர் போவாதாம்..” என்ற குரல்கேட்கவும் சட்டென விழித்தாள்.

அந்தக்கைகுழந்தைக்காரிதான் எதிரில் நின்றுகொண்டிருந்தாள்.

“எ என்னாச்சு?” விசாலம் பதட்டமாய் கேட்டாள்.

“பந்த்தாம்! ஸ்ட்ரைக் மாதிரி. திடீர்னு காலைல பெங்களூர்ல ஆரம்பிச்சிருக்காங்களாம் , பஸ் பெங்களூர் போவாதாம் . கர்னாடகா பஸ்ஸு வேணா ஒண்ணு ரெண்டு போகுமாம் கார் வண்டியெல்லாம் கல்லெடுத்து அடிக்கிறாங்களாம் அங்கிட்டு” என்றாள் கலவரமான குரலில்.

“எதனால இப்படி?” விசாலம் கவலையுடன் கேட்டபடி இருக்கையினின்றும் எழுந்தாள். ஞாபகமாய் காலடியில் வைத்திருந்த தன் கைப்பையை எடுத்துக்கொண்டாள்.

:”என்ன இளவோ எல்லாம் அரசியல்வாதிங்க செய்யுற வேலைம்மா…பந்து மாதிரி அடிப்பாங்க .. கெடந்து திண்டாடுறது நம்ம மாதிரி பொது ஜனங்கதானே?”

“என் பேத்தி டெல்லிக்குப்போறா அங்க எதுவும் இருக்காதே?”

“இப்போதிக்கு பெங்களூர்லதான் டில்லில ஒண்ணுமில்ல. அதும் திடுதிப்புனு காலைல ஆரம்பிச்சி அறிவிப்பு கொடுத்துருக்காங்களாம்… எறங்கி நாம வேற பஸ்சு பிடிச்சி ஊர் போவணும்”

பஸ் கண்டக்டரை பிரயாணிகள் சிலர் சண்டைபிடிக்க ஆரம்பித்தனர்.”அதெப்படிப்பா பெங்களூர் வரை முழு டிக்கட்டுக்கு காசு வாங்கி இருக்குறே? இப்போ ஹொசூர்ல இறக்கிவிட்டா நாங்க திரும்ப டிக்கட் எடுக்கணுமா? அது வேற முப்பது நாப்பது ரூபா ஆகுமே?”

“அதுக்கு நாங்க என்ன செய்யுறது வேணா எங்கபஸ்சு ஏதாச்சும் தெகிரியமா எல்லை தாண்டி ஊருக்குள்ள போகுதுன்னா அதுல ஏறிப்போங்க..இல்லாட்டி கர்னாடகா ஸ்டேட்பஸ்சுலபோங்க ஒரு அபாயமும் இல்ல அதுக்கு” அலுப்புடன் சீறிவிழுந்தார் கண்டக்டர்.

“இப்போ என்னம்மா செய்யுறது? நீங்க யார்வீட்டுக்குப்போறீங்க?”

குழந்தைக்காரி இப்படிக்கேட்கவும் விசாலம்,”மகன் வீட்டுக்கு” என்றாள்.

“போன் போட்டு வெவரம் சொல்லுங்க கார் வச்சிட்டு வந்து கூட்டிப்போவாரா உங்க மகனு?”

“தெரியலையே..மகன் போன் நம்பர் ஏதும் கொடுக்கல…”

“நான் பஸ்சு எதுலயாவது தொத்திக்கிட்டுப்போறேன் பையன் ரொம்பக்கூவுறான் ராவெல்லாம் எடுத்துவிட்டு இப்ப என்கிட்டயும் பாலு இல்ல. பால்பவுடர்வேற தீர்ந்திடிச்சி….சீக்கிரமா ஊருபோயிட்டா தேவல ஆத்தா கையில் இவனக்கிடத்திட்டு அக்கடான்னு பாயில படுக்கணும்போல இருக்குதும்மா வரேன்.பாத்துப்போங்கம்மா…”

அழும் குழந்தையை தோளில்போட்டுக்கொண்டு அந்தப்பெண் ஓடுகிற பஸ்ஸை நோக்கி வேகமாய் நடகக் ஆரம்பித்தாள்.

விசாலம் பர்சினுள் முன்பு எப்போதோ மீனா எழுதிக்கொடுத்த சீட்டை எடுத்து அவளுடைய செல்போன் நம்பருக்கு போன் செய்ய அருகில் தெரிந்த ஒரு பெட்டிக்கடைக்குச்சென்றாள். மீனாவிடம் விவரம் சொன்னாள்.

“ஐயோ பாட்டி ’ பந்த்’தா? இந்த நேரத்துல உங்களைத்தனியா அனுப்பிச்சிருக்காளா உங்க புத்திர சிகாமணிகள் ரெண்டுபேரும்? ச்சே இதயமே இல்ல அவாளுக்கு…சரி பாட்டி சித்தப்பா நம்பர் சொல்றேன் குறிச்சிக்கோ ….. நீ உடனே சித்தப்பாக்கு பேசு நானும் டில்லிலேர்ந்து பேசி நிலமையைத் தெரிவிக்கிறேன் என்ன? கவலைப்படாதே ஜனம் சூழ்ந்திருக்கிற இடத்துல சேர்ந்து உக்காந்துக்கோ…” மீனா வருத்தப்ப்ட்டாள்.

விசாலம் மாதவனுக்கு போன் செய்தபோது அவன் எரிச்சலாய்,” அம்மா ..அந்த மடையனுக்கு உன்னை ரயிலில் வசதியா அனுப்ப துப்பு இல்லை.. இப்போ பாரு நானும் ஆத்தைவிட்டு வெளில் வர முடியாது.டிவில ஒரே கலவரமா இருக்குன்னு காட்றா ..பஸ் பைக் கார் எல்லாத்தியும் எரிக்கிறாளாம் என் காரையும் எரிச்சிட்டா நான் என்ன பண்றது? பேசாம திரும்பி திருச்சி பஸ் ஏறிப்போய்டு. அடுத்தவாரம்புறப்பட்டு வா.அதுக்குள்ள இங்க எல்லாம் அடங்கிடும்” என்று போனை வைத்தான்.

விசாலம் எதிர்முனை துண்டிக்கப்பட்டதை அறியாமல்,” மாதவா மாதவா…’என்று புலம்பிக்கொண்டிருந்தாள்.

பின்எப்போதும்

எண்ணத்திற்கும்
செயலுக்கும்
இடைப்பட்ட தருணத்தில்
வாழ்ந்து கொண்டிருந்தேன்
கண்ணீர் நதியில்
அலுப்பு தீர
குளித்துக் கொண்டிருந்தேன்
மயானத்தில்
சடலம் எரிவதை
பார்த்துக் கொண்டிருந்தேன்
மொட்டுக்கள்
இதழ் விரிப்பதை
ரசித்துக் கொண்டிருந்தேன்
வானம்பாடி
கானம் பாடுவதை
கேட்டுக் கொண்டிருந்தேன்
அதிசயமாக
பெய்த மழையில்
தொப்பலாக
நனைந்து கொண்டிருந்தேன்
கூண்டில் அடைத்து
பறவையின் சுதந்திரத்தை
பறித்தவர் மீது
கோபம் கொண்டிருந்தேன்
அலையோசையில்
மெய்மறந்து
தன்னிலையை
இழந்து கொண்டிருந்தேன்
வெளி மட்டுமே
நிலையானது என
எண்ணிக்கொண்டே
வானத்தில் சிறகின்றி
பறந்து கொண்டிருந்தேன்.

1. சிறகுகள் ஸ்தம்பித்ததன் பின்னான சிறு வெளி

ஒரு தவம் போல் நிகழ்த்தப்பெறும்

பறத்தல் ஸ்தம்பிக்க

திடும்மென பற்றி இறுக்குகிறது

வல்லூறு அதன்

கூர் நகங்களின் பிடி.

படபடத்தினி அடங்கிவிடும்

சாம்பல் நிறப்புறாவின்

சிறகுகளுக்கான

சிறு வெளியை

அந்நொடி,

திரும்பப்பெற்றுக்கொள்கிறது

அண்டப்பெருவெளி.

ரசிகன்

நீண்ட நாள் கழித்து இந்தஅறைக்குள் நுழைகிறேன். மொட்டைமாடியில் காற்றோட்டமான ஜன்னல்கள் கொண்ட மேற்கூரை மேய்ந்த சின்ன அறைதான்.ஆனாலும் என்னுடைய சாம்ராஜ்யம் இங்கேதான் நடந்திருக்கிறது. சுற்றிலும் புத்தக அலமாரிகள் நடுவில் ஒரு மரமேஜை அருகில் நாற்காலி . சின்னதாய் டேபிள்ஃபான் ஒன்று . நண்பர்கள் வந்தால் அவர்களை உட்கார வைக்க நீளமாய் ஒரு மரபெஞ்ச். குடிநீருக்காய் ஒரு பானை அவ்வளவுதான் சாம்ராஜ்ய சொத்துக்கள்!

பதினைந்து வருஷம் முன்பு இந்த அறையைக்கட்டி முடிக்கவே பத்தாயிரம் ரூபாய்க்குமேல் செலவானது. சுமதிகூட,”என்னங்க இவ்ளோ பணம் ஒரு சின்ன ரூமுக்கா செலவழிக்கணும் அதுல ரம்யாக்கு தங்கத்துல நகையாவது வாங்கலாம் அவளுக்கும் வயசு ஏழு ஆகபோகுதில்ல?” என்றாள் கவலையுடன்.

“கீழ்வீட்ல எனக்குன்னு தனி ருமே இல்லை ஒரே சத்தம் வேற. இங்கே தனியா ஏகாந்தமா உக்காந்திட்டு கற்பனை செய்து கதைகதையா எழுதி லட்சலட்சமா சம்பாதிச்சிடுவேன் கவலைப்படாதே”என்று சமாதானம் சொன்னேன்.

கலைஞனுக்கு லட்சங்களில் லட்சியம வந்துவிட்டால் கலைமகளுக்குப்பிடிக்காதுபோலும்…. பணத்திற்காகவே எழுத ஆரம்பித்தேன். நாலைந்துவருஷங்களிலேயே என் புகழ் மங்க ஆரம்பித்து எழுதியபடைப்புகளை தொடர்ந்து பத்திரிகைகள் நிராகரித்தன. அந்தவிரக்தியில் நான் பேனா பிடிப்பதையே நிறுத்தியும் ஏழெட்டுவருஷங்கள் ஆகிவிட்டன.

இன்று மனைவியும் மகளும் சொந்தக்காரர் வீட்டுத்திருமணத்திற்குப்போய்
விட்டார்கள்..ஆபிசிலிருந்து சீக்கிரமாகவே வீடுவந்தவன் அப்படியே கூடத்து சோபாவில் எதையோ பறிகொடுத்தவன் போலப்படுத்திருக்கிறேன். பஸ்ஸில் வரும்போது பத்திரிகை ஒன்றில் படித்த கதையை அசைபோடுகிறேன். எழுதியவர் பெயர் ஒன்றும் பிரபலமாய்த்தெரியவில்லை ஆனால் எழுதிய கருத்தும் கதையின் ஓட்டமும் மனசை அள்ளிச்சென்றன.

இப்படித்தான் நானும் பல கதைகள் எழுதி இருக்கிறேன். ஒரு நிகழ்ச்சி ஓர் அனுபவம் ஓர் உணர்ச்சி படித்த ஓர் செய்தி என்று எதுவேண்டுமானாலும் ஒரு சிறுகதையை உருவாக்கிவிடும்.. அப்படிப்பட்ட கதைகள் எழுதி பரிசுகள் வாங்கி பிரபல எழுத்தாளர் எழிலூர்எதிராஜன் என்று நான் பேரும் புகழுமாய் வாழ்ந்த காலம் கனவுபோல இருக்கிறது. இந்த ஏழெட்டுவருஷங்களில் நான் எழுதுவதையும் எழுத்தாளர்களை சந்திப்பதையும் அடியோடு நிறுத்தியேவிட்டேன். காரணம் விரக்திதான்.

அப்படியே பழைய நினைவுகளை அசைபோட்டு சிந்தித்து உட்கார்ந்திருந்தவனை டீபாய் மீதிருந்த டெலிபோனின் ட்ரிங் ட்ரிங் என்ற சத்தம் சுதாரிக்கவைத்தது.

ரிசீவரை எடுக்கிறேன்.

“ஹலோ எழுத்தாளர் எழிலூர்எதிராஜன் இருக்காரா?”

எதிர்முனை என்னை இப்படிக்கேட்கவும் வியப்பில் கண் விரிக்கிறேன் …எல்லோரும்மறந்துவிட்டிருப்பார்கள் என்று நினைக்கும் நேரத்தில் இப்படி ஒரு குரல் உற்சாகமாய் கேட்கவும்.”ஆமாம்நீங்கயாரு?’ என்கிறேன்

”சார் நான் ரசிகன்…….”

”ஓ என் ரசிகரா? வேடிக்கைதான் நான் கதை எழுதுவதையே நிறுத்தியே பல வருஷமாச்சே?””

”அதைத்தான் கேட்க வருகிறேன் …..எதனால் எழுதுவதே இல்லை? அற்புதமான வளமான எழுத்து உங்களுடையது”

”அப்படியா?”

”ஆமாம் ……உங்களுடைய சிறுகதைகளில் ஆன்மாவைக்கண்டவன் நான்.”

”மகிழ்ச்சி ரசிகன்”

“ஆமாம் ! நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி சார்….உங்களைமாதிரி படைப்பாளிகளால்தான் மனதில்பட்டதை அழகான காட்சியை
உயர்ந்த அல்லது இழிந்த பண்புகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் உள்ளது உள்ளபடி திறந்த மனத்தோடு எத்ற்காகவும் கவலைப்படாமல் உன்னத படைப்பினை உருவாக்கமுடியும்.உள்ளத்தின் உள்ளொளி எழுத்தில் பிரகாசித்துவிடும். படைப்பாளி பயனை எதிர்பார்ப்பதில்லை ஆனால் அவன் படைப்பு சமுதாயத்திற்கு எவ்வளவோ பயன்படுகிறது. சமுதாயத்தின் பண்பாட்டை வளர்ப்பதுதான் கலை. அதன் இலக்கு மனிதனை உயர்த்துவது. அவன் சிந்தனையை விரிவடையச்செய்வது அவன் வாக்கில் ஒளிதுலங்கச்செய்வது அவன் செயலை மேம்படசெய்வது.இந்த அற்புதமான பணியை உங்கள் எழுத்து ஒருகாலத்தில் செய்துகொண்டிருந்தது. அதை முடக்கிவிட்டீர்களா சார், என்னைப்போன்ற ரசிகர்களுக்காக தாங்கள் மீண்டும் எழுதவேண்டும்.இது என் கோரிக்கை அல்ல , கட்டளை!” என்று சொல்லிவிட்டு எதி்ர்முனை ரிசீவரை வைத்துவிட்டது.

சட்டென மனதில் யாரோ விளக்கு ஏற்றியமதிரி அகமும் புறமும் பிரகாசமாகிறது.

இருண்டகிடந்த என் மனத்தின் அறையை யாரோ திறந்துவிட்டமாதிரி இருக்கிறது அதனால்தான் இந்த மாடி அறைக்கதவைத்திறந்து உள்ளே நுழைகிறேன். ஜன்னல்களைத்திறந்துவைக்கிறேன். மாலைநேரத்துக்காற்று ரம்மியமாய் வீசுகிறது.

புத்தக வாசனையை இழக்காத அந்த அறைச்சுவர்களில் படங்களாய் வீற்றிருந்த அரவிந்தரும் அன்னையும் என்னைப்பார்த்துப்புன்னகைக்கிறார்கள். இந்தப்புன்னகையைக்காணவாவது நான் இந்த அறைக்குள் வந்திருக்கலாமோ? எழுதுவதும் ஒரு தவம் தானே ? தவம் செய்ய மறந்தேனோ?’புத்தகத்தில் இல்லாதவற்றைக் கற்றுக்கொடுப்பவர் நல்ல வாத்தியார்; ஆசிரியர் சொல்லிக்கொடுக்காதவற்றையும் கற்றுத்தெரிந்துகொள்ளுபவன் நல்ல மாணவன்’ என்று ஆங்கிலத்தில் ஒரு வசனம் இருக்கிறது. அதுபோல அன்றாட வாழ்விலே ஈடுபட்டுத் தத்தளித்து நீந்திக்கரையேற முயற்சி செய்து கொண்டிருக்கும் நாம், நம் அவசரத்தில் காணாது விட்டுவிட்ட அல்லது கண்டும் இனம் தெரியாது விட்டுவிட்ட அனுபவங்களை நம் கண்ணுக்கு முன் கொண்டுவந்து நிறுத்தி அவற்றுள் புதைந்துகிடக்கும் உண்மைகளை வெளிக்கொண்ர்ந்து நம் கவனத்தைல் நிலைநாட்டுவதுதானே எழுத்துக்கலைஞனின் பணி என்று தோன்றுகிறது. என் பணியை செய்யத்தவறிவிட்ட உணர்வில் உள்ளம் குறுகுறுக்கிறது.மேல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறியதுபோல”நிலையில்லாது கரைந்து மறைந்துகொண்டிருக்கும் கணங்களில் அமரத்துவத்தைக்காட்டுவது தான் கலை” என்ற விமர்சனம் சிறுகதைக்கு மிகவும் பொருந்துவதாகப்படுகிறது.

மேஜையின் அருகே சென்று நாற்காலியில் அமர்ந்து பேனாவை எடுத்து எழுத ஆரம்பிக்கிறேன் .கற்பனை விண்ணாய் விரிகிறது. சொற்கள் இடித்துக்கொண்டு வாக்கியங்கள் மின்னலாய் தெறிக்க காவிய மழை ஒன்று பெய்துவிடுகிறது.

சமைக்கும்போதே வரும் வாசனைகளால் பதார்த்தங்களின் சுவையை அறியமுடிவதுபோல எழுதும்போதே வந்து விழுந்த வார்த்தைக்கலவைகளில் ஆத்மத்ருப்தியான படைப்பு உருவாகி விட்டதை உணர்கிறேன். விரக்தியும் வெறுப்புமாய்சிலவருடங்கள் ஒளிந்திருந்த எதிராஜன் மறைந்து புத்துணர்ச்சியுடன் மீண்டுவந்தவனாய் உற்சாகமாய் கீழே வருகிறேன் .

கல்யாணத்திற்குப்போயிருந்த மனைவியும் மகளும் வருகிறார்கள்.என்னைக் கண்டதும் மனைவி,”எப்போ வந்தீங்க?” என்கிறாள் வியப்புடன்.

“மதியம் சாப்பிட்டதும் வீடு வந்திட்டேன் அப்போ என்னவோ மனசு உற்சாகமாய் இல்லை ரொம்ப டல்லாயிருந்தது ஆனா இப்போ ஒகே”

உஸ்ஸ்ஸ் என்று பெருமூச்சுவீட்டபடியே,” அப்படியா? ஆமா…. காலைல எழுந்ததுமே கவனிச்சேன் நம்ம வீட்டு லாண்ட்லைன் போன் ’டெட்’டா இருந்திச்சி… கம்ப்ளெயிண்டும் போற வழில கொடுத்தேனே யாரும் வந்து ரிப்பேர் செய்தாங்களா?” என்று கேட்டபடியே ரிசீவரை காதில் வைத்தவள்,” ஹ்ம்ம் இன்னமும்டயல்டோன் கேக்கலயே, டெட் ஆகத்தான் இருக்குது” என்கிறாள் சலிப்பான குரலில்

”என்ன! போன் ’டெட்’டா இருக்கிறதா?’்” என்று நான் திகைத்து நிற்கிறேன். மனசுக்குள் ரசிகன் நகைக்கிறான்.

எதையாவது சொல்லட்டுமா……..45

போன வாரம் ஞாயிற்றுக்கிழமை நவீன விருட்சத்தின் 90வது இதழை எடுத்துக்கொண்டு வந்தேன். எப்படியோ வந்து விட்டது. இந்த இதழைக் கொண்டுவர ஏன் இவ்வளவு தாமதம் என்ற கேள்வியை நானே கேட்டுக்கொண்டேன். முன்பு இருந்த ஆர்வம் குறைந்துவிட்டதா என்றால் இல்லை என்று சொல்ல வேண்டும். நேரம் கிடைக்கவில்லை. முனைப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். எழுதுபவர்கள் படிப்பவர்கள் என்ற இரு பிரிவுகளை எடுத்துக்கொண்டால், இரண்டுமே குறைவு என்று ஆரம்பம் முதல்
சொல்லிக்கொண்டிருப்பவன் நான்.

அச்சடித்த இதழைப் பிரித்துப் பார்க்கவே எனக்கு சற்று அச்சமாக இருந்தது. நான் எதிர்பார்த்தபடியே இதழில் அச்சுப் பிழைகள் தாராளமாக இருந்தன. இந்த முறையும் புத்தக விமர்சனம் செய்த எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்.

மின்சாரம் இல்லை என்பதால் இதழை ரொம்பவும் தாமதப் படுத்தி விட்டார்கள். நான் இதோ 12ஆம் தேதி Florida என்ற அமெரிக்காவில் உள்ள ஊருக்குப் போக உள்ளேன். என் புதல்வன் அங்கிருக்கிறார். 1 மாதம் அங்கிருப்பேன். அதற்குள் இதழை எல்லோருக்கும் வினியோகிக்க வேண்டும்.

இந்த இதழ் அட்டைப் படத்தில் பூனையைக் கொண்டு வந்ததால், என் வீட்டில் பூனைக் குட்டிகளின் தொல்லை அதிகமாகி விட்டது. கீழ்க்கண்ட படைப்பாளிகளின் படைப்புகள் 90வது இதழில் இடம் பெற்றுள்ளன.

1. இலக்கியத் தரம் உயர – க.நா.சு
2. உப்பு – லாவண்யா
3. புத்தக விமர்சனம் – ஐராவதம்
4. அழகிய வீரர்கள் – கவிதை – ராமலட்சுமி
5. பழம் புத்தகக் கடை – விட்டல் ராவ்
6. அவலம் – சிறுகதை – உஷா தீபன்
7. குவளைகளில் கொதிக்கும் – கவிதை – மிருணா
8. மிகை – சிறுகதை – எஸ். ஷங்கரநாராயணன்
9. ஜோல்னா பைகள் – கவிதை – அழகியசிங்கர்
10. வெளியே ஒருவன் – சிறுகதை – நா.ஜெயராமன்
11. இரண்டு கவிதைகள் – செல்வராஜ் ஜெகதீசன்
12. இரண்டு கவிதைகள் – ராஜேஷ் நடராஜன்
13. பால்ய பொழுதுகள் – கவிதை – ப மதியழகன்
14. இரண்டு கடிதங்கள் – சிறுகதை – அழகியசிங்கர்
15. அகாலம் – சிறுகதை – பஞ்சாட்சரம் செல்வராஜன்
16. அவனின் தேடல் – கவிதை – குமரி எஸ் நீலகண்டன்
17. முகங்கள் – கவிதை – ஐராவதம்
18. சாய்பாபா – கட்டுரை – அம்ஷன்குமார்
19. அனுமானங்கள் – கவிதை – அனுஜன்யா
20. நிசி – கவிதை – ப மதியழகன்
21. உரையாடல் – அழகியசிங்கர்

பத்திரிகை அனுப்புவதில் விட்டுப் போயிருந்தால், New Booklandsல் வாங்கிக்கொள்ளலாம். அல்லது ஆகஸ்ட் மாதம் வரை பொறுத்துக்கொள்ளவும். கூடிய விரைவில் அடுத்த இதழ் கொண்டுவர முயற்சி செய்கிறேன்.

தற்கொலைக் குறிப்பு

படிக்கட்டின் விளிம்பில்
நின்றவாறு
இடதா,வலதா என
யோசித்தான்
தொப்பலாக
மழையில் நனைந்த பிறகு
குடை பையிலிருப்பது
ஞாபகம் வந்தது அவனுக்கு
கோயிலுக்குள் சென்ற பிறகும்
அவன் மனம்
கழட்டிப் போட்ட
காலணிகளையே
வட்டமிட்டுக் கொண்டிருக்கும்
தினமும்
ஏதாவது ஒரு வரிசையில்
நிற்க நேர்வது
எரிச்சலைத் தந்தது அவனுக்கு
தனது அலைவரிசையை
ஒத்தவர்களை
சந்திக்க நேரும்
தருணங்களிலெல்லாம்
டைரிக் குறிப்பில்
சிவப்பு மையால்
அடிக்கோடிடுவான்
வாழ்க்கை மீது
நம்பிக்கை இழக்கும்
தருணங்களிலெல்லாம்
பர்ஸை திறந்து
அதிலுள்ள புகைப்படத்தை
கண் இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருப்பான்
சில நாட்களாக
தற்கொலைக் குறிப்பை
சட்டைப் பையில்
வைத்துக் கொண்டே
நடமாடி வந்தான்
வலி இல்லாமல் சாக
வழி சொல்லும் புத்தகம்
எங்கேயாவது கிடைக்குமா
எனத் தேடிக்கொண்டிருந்தான்.

சாபங்களைச் சுமப்பவன்

நேர் பார்வைக்குக் குறுக்கீடென

ஒரு வலிய திரை

ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று

பசப்பு வரிகளைக் கொண்ட

பாடல்களை இசைத்தபோதும்

வெறித்த பார்வையோடு தான்

துயருறுவதாகச் சொன்ன போதும்

பொய்யெனத் தோன்றவில்லை

ஏமாறியவளுக்கு

இருள் வனத்திலொரு ஒளியென

அவனைக் கண்டாள்

புகைப்படச் சட்டங்களுக்குள்ளிருந்து நீண்டன

வாழ்வு கொடுப்பதாகச் சொன்ன

அவனது கைகள்

ஒலிக் கோப்புகளிலிருந்து வழிந்தன

தூரத்திலிருந்து அவனளித்த உத்தரவாதங்கள்

அவளது கைகளைப் பிணைத்திருந்தது

அவனிட்ட மாயச் சங்கிலி

விலங்கிடப்பட்ட பறவையென

காலடியில் வீழ்ந்துகிடந்தாள்

சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தெறிந்தன

கூரிய நகங்களைக் கொண்ட

அவனது விரல்கள்

பின்னர் உச்சியில் ஏற்றிவிட்டு

விரைத்த ஒரு பொம்மையென விழச் செய்தான்

நேர்கோடென நட்சத்திரமொன்று வீழ்ந்த இரவில்

இருவரையும் நனைத்தது மழை

அவளது குருதியும் வேதனையின் ஓலமும்

தடயமழிந்து போயிற்று

என்றென்றைக்குமவளது

சாபங்களைச் சுமப்பவனானான் அவன்