Category: கவிதை
மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 2
மனதுக்குப் பிடித்த கவிதைகள் 1
புத்தர் அழுதார்
வெய்யில்
யாரோ தினமும்
ஒரு பூவைக் கொன்று
புத்தரின் கையில் வைத்துவிடுகிறார்கள்
விரல்கள் நடுங்க…
பூ அதிர்வதாய் சொன்னேன்
காற்றென்று காரணம் சொன்னார்கள்
கடந்த வாரத்திலோர் நாள்
புத்தர் அழுததாய் சொன்னபோது
மழை என்று மறுத்தார்கள்
நேற்று அதிகாலையிலும் கூட
கண்ணீர் கசிவதாய் பதறினேன்
பனித்துளிகள் என்று சிரித்தார்கள்
மாலை நேரத்து
மந்திர உச்சாடனத்தில்
புத்தரின் விசும்பல் யாருக்கும்
கேட்காமல் போக
இன்றும் கூட யாரோ
ஒர பூவைக் கொன்று.
நன்றி : குற்றத்தின் நறுமணம் – வெய்யில் – கவிதைகள் – விலை : ரூ.80 – வெளியீடு : புது எழுத்து, 2/205 அண்ணா நகர். காவேரிப்பட்டினம் 635 112
தொலை பேசி : 98426 47101
விருட்சம் இலக்கியச் சந்திப்பு 22
இந்தக் கூட்டம் விருட்சம் நடத்தும் 22வது கூட்டம். ஏன் இதுமாதிரி கூட்டங்கள் நடத்த வேண்டுமென்ற கேள்வியை நானே கேட்டுக்கொண்டேன். கீழ்க்கண்டவாறு அதற்கான பதில்களை சொல்ல விரும்புகிறேன் :
1. எழுத்தாளர்கள் அவர்களுடைய நண்பர்களை சந்திப்பதற்கு. நான் வாசகர்கள் என்று சொல்வதைத் தவிர்க்கிறேன்;
2. ஒரு படைப்பாளியின் படைப்புகளைப் பற்றிப் பேச;
3. ஒரு படைப்பாளி அவர்களுடைய படைப்புகளைப் பற்றி அவர்களே அறிமுகப் படுத்திக்கொள்ள;
4. இதுமாதிரியான கூட்டங்களை எப்படி எதிர்கொள்வது என்று பார்வையாளர்கள் தங்களுக்குள் பயிற்சி எடுததுக்கொள்ள
கடந்த 22 கூட்டங்களாக இதை ஓரளவுக்கு நடைமுறையில் சாத்தியப் படுத்த முயற்சி செய்துள்ளோம் என்று நினைக்கிறேன். இப்போது நடைபெறுவது பெருந்தேவியின் கவிதைகள் குறித்த கூட்டம். கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஞானக்கூத்தன் இனி இல்லை
படித்ததில் பிடித்தது…..1
புதுமைப் பித்தன்
புதுமைப் பித்தன் இருந்த
வீட்டைத் தாண்டிச் செல்லும் போது
இந்த வீட்டு முன் கூடத்தில் வெற்றிலைச்
செல்லமும் உற்சாகமுமாக எத்தனையோ கதைத்து
எத்தனையோ நாட்கள் போக்கியாகி
விட்டது. எத்தனையோ கதைகள் சொல்லி
புஸ்தகங்கள் படித்து முடித்தாகி விட்டது
ரெண்டு கப் காபிக்கு காசு இருக்கிறதா
என்று பார்த்துக்கொண்டு காபியும்
சாப்பிட்டுவிட்டு மீதி கையில் காசிருந்தால்
வீட்டுக்கும் எதாவது வாங்கிக்கொண்டு
பேசிக்கொண்டே திரும்பி வந்து உட்கார்ந்து
பேசிப்பேசி பொழுதைத் தீர்த்த இடம் இது
இரவாகியும் வீடு திரும்பாமல் பேச்சின்
சுவாரஸ்யத்திலே இரவு பூரா தங்கிவிட்டு
காலையில் காபி சாப்பிட்டு விட்டுத்
திரும்புவதுண்டு !
‘
இப்போது இந்த
வீட்டுக்குள்ளே போனால் எங்கள் பேச்சை
கேட்டிருந்த அந்த சாஷி பூதமான சுவர்கள்
எங்கள் பேச்சை எனக்குத் திருப்பி
சொல்லுமா…? சொல்வதாக வேண்டுமானால்
நான் கதை யெழுதலாம் சுவர்கள் பேசாது.
நன்றி கெட்ட சுவர்கள் – அவை வீட்டுக்
காரன் கட்சி தான் – எழுத்தின் அருமை
தெரியாதவை, உலகமே எழுத்துக்கு – நல்ல
எழுத்துக்கு எதிரியாய் இருக்கும்பொழுது –
வேறு சொல்ல என்ன இருக்கிறது ..?
எழுதாதே எழுதாதே என்று உலகம் கூடி
சொல்ல நன்றாக எழுதினால் ஆபத்துதான்
அதற்கு நானே உதாரணம் என்று
புதுமைப் பித்தன் சொல்லிப் போனாரோ
என் சிந்தனை எங்கேயோ தொடர்கிறது.








