மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 82

400 கவிதைகளைத் தொகுக்கிறேன்…

இன்னும் சில தினங்களில் மனதுக்குப் பிடித்த கவிதைகளின் தொகுதி 1 பிரசுரமாகிவிடும். 100 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக அது இருக்கும். இதுமாதிரி 100 கவிதைகள் விகிதம் 400 கவிதைகளைத் தேர்ந்தெடுக்க உள்ளேன். ஏற்கனவே வெளிவந்த கவிஞர்களின் கவிதைகள் மற்றத் தொகுதிகளில் இடம் பெறாது. எல்லாக் கவிதைகளும் கவிதைப் புத்தகங்களில் வெளியாகி இருக்க வேண்டும். இதுமாதிரி 300 க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளை வைத்திருக்கிறேன். அதிலிருந்து இன்னும் 300 கவிதைகள் எடுக்க உள்ளேன்.

படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பவன்

அனார்

கோடை அந்தி நிழல் சாயும்
சதுக்கமொன்றின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தான்

தொலைவுப் பாலத்தின் மேலே
சூரியனையும்
படிக்கட்டுகளில் கீழே
செவ்விரத்தம் பூக்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்

‘முழுச் சிவப்பேறிய சூரியன் பாலத்தின் மத்திக்கு வந்ததும்
கொலை முயற்சி நடந்து கொண்டிருக்கையில்
எதையும் ரசிக்க முடியாதென’
அன்று எழுந்து சென்றுவிட்டான்

படித்துறையில் அமர்ந்தவாறு
தூண்டிலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில்
சேர்ந்து குளிக்கையிலும்
üசடுதியாக வெடித்து
வித்துக்களை உதிர்க்கின்ற பருத்திகள்ý என உலைந்து
நிலை குலையுமொரு துயரப் பாடலையே
விடாமல் பாடிக்கொண்டிருந்தான்

நேர்ந்த விபத்தொன்றின் பிறகு
கடைசியாகப் பார்த்தபொழுது
மணல் குன்றுகளும் தாழை மரங்களும் தாண்டி
பாழைடைந்த பேய் வீட்டின்
உடைந்த குட்டிச் சுவரருகே
காளான்களும் புற்களும்மண்டிய எட்டாவது படிக்கட்டில்

அவன் அமர்ந்திருந்தான்

நன்றி : பெருங்கடல் போடுகிறேன் – கவிதைகள் – அனார் – பக்கங்கள் : 64 – விலை : ரூ.60 – காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669 கே பி சாû, நாகர்கோவில் 629001 தொலைப்பேசி : 91-4652-278525

கேரளக் கன்னிக்கு

உன் பாதங்கள் உன் கைகளைப்போல
மென்மையானவை. உன் இடை மிக அழகிய
வெள்ளைக்காரப் பெண்ணையும் பொறாமையுறச் செய்யும்
சிந்தனை மிக்க கலைஞனை உன் சரீரம் வசீகரிக்கும்.
வெல்வெட்டுப் போன்ற உன் கண்கள்
உன் மேனியை விடக் கரியவை
நீலமேகங்களும் புழுக்கமும் நிறைந்த
உன் தாய் நாட்டில் உன் முதலாளியின்
புகைபிடிக்கும் குழாயைப் பற்ற வைத்து
பாத்திரங்களில் நீரை நிரப்பி
வாசனைத் திரவியங்கள் கலந்து,
தொல்லை தரும் கொசுக் கூட்டங்களைப்
படுக்கையினின்றும் விரட்டியடித்து,
புலர்ந்து புலராப் பொழுதில்
அத்திமர இலைகளின் வழி
காற்று இசை எழுப்பும் போது
அங்காடியில் அனாசிப் பழமும்
நேத்திர வாழைப்பழமும் வாங்குகிறாய்.
நாள் முழுவதும் நீ விரும்புகிற இடத்துக்கெல்லாம்
வெறுங்காலுடன் சென்று
மறந்துபோன பழம் பாடல்களை
மனதுக்குள்ளேயே முணுமுணுக்கிறாய்.
மேற்கே, சூரியன் தன் சிகப்புச் சட்டையோடு
சாயும்போது கோரைப்பாயில் நீயும்
மெதுவாகத் தலை சாய்க்கிறாய்.
மிதக்கும் உன் கனவுகளில்
குருவிகள் கீச்சிடும், வண்ணப்பூக்கள் மலர்ந்து வழியும்.
களித்துத் திரியும் கன்னியே,
கடலோடிகளின் வன் கரங்களில்
உன் வாழ்க்கையை ஒப்படைத்து,
உனக்குப் பிடிக்கும் புளிய மரங்களிடம்
இறுதி விடை பெற்று,
கும்பல் மிகுந்து அல்லலுறும் எங்கள் நாட்டை
ஃபிரான்ûஸ, நீ ஏன் பார்க்க விரும்புகிறாய்?
மென்துகிலை இடைவரை உடுத்து. இங்கு
நீ வெண்பனியிலும் ஆலங்காட்டி மழையிலும்
குளிரால் நடுங்குவாய் மிகவும் இறுகிய
முலைக்கச்சை அணிந்து.
உன் அரிய வனப்பின் மணமனைத்தையும் விற்று.
எங்கள் ஒழுக்கக்கேடுகளில்
உன் வயிறைக்ட கழுவநேர்ந்தால்
உன் இனிய, எளிய, அமைதியான வாழ்வை
எண்ணி எண்ணி எவ்வாறு நீ ஏங்குவாய்?
எங்கள் நாட்டுக் கனத்த மூடுபனியூடே
மறைந்து போகும் உன் நாட்டுத்
தென்னை மரங்களின் பொய்த்தோற்றங்களை
எப்படித்தேடுவாய்?

மூலம் : பிரெஞ்சு

ஆங்கிலம் வழி தமிழில் : அமுதன்

சார்லஸ் போதலேர் (1821-1867) ஃபிரென்சு நாட்டுக் கவிஞர்களில் சிறந்த ஒருவர். வறுமை, பிணி, மனக் கசப்பு எல்லாம் அவர் வாழ்க்கையைப் பாழடித்தன. அவரது கவிதைத் தொகுதி தீயது எனத் தீர்ப்புக்கூறப்பட்டது. ஆனால் அவரைக் குற்றமற்றவர்கள் என்றார்கள். 1946-ல் ஒரு பிரத்யேகச் சட்டத்தை இயற்றி, அவரது கவிதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டு மத்தியில் போதலேர் இந்தியாவுக்கு வந்தார். அப்போது இக் கவிதை எழுதப்பட்டிருக்கலாம்.

(நவீன விருட்சம் ஏப்ரல் – ஜ÷ன் 1989)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 81

கண்ணாடி

குட்டி ரேவதி

இறுகி மௌனித்துக் கிடக்கிறது
குளம்

ஒரு கல்லாய் நிழலை எறிந்து போகிறது
பறவை

இப்பொழுதும் குளம்
இறுகிய முகத்துடன்

நன்றி : யானுமிட்ட தீ – கவிதைகள் – குட்டி ரேவதி – பக்கங்கள் : 78 – வெளியீடு : அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621 310, திருச்சி மாவட்டம் – விலை : ரூ.60.

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள் – 3

ஆற்றங்கரை வணிகனின் மனைவி

ஒரு கடிதம்

என் தலைமயிற் வருடாக நெற்றியில் வெட்டியிருக்கும் போதே
வாசல் முற்றத்தில் பூ பறித்து, நான் விளையாடியிருக்க
நீர் வந்தீர். மூங்கில் பொய்கால் ஏறி குதிரை விளையாடி வந்தீர்.

நீலக் கொடிமுந்திரிகளை வைத்து விளையாடிக்
கொண்டு நான் இருக்கும் இடத்தைச் சுற்றி நடந்தீர்.
நாம் சொக்கான் கிராமத்திலேயே வாழ்ந்து வந்தோம்.
இரு சிறுவர்கள் வெறுப்பும் சந்தேகமும் இன்றி

பதினாலு வயதில் ஐயனே உம்மை மணம் புரிந்தேன்
நான் ஒரு போதும் சிரிக்கவில்லை, நாணத்தினால்
தலை குனிந்து சுவரைப் பார்த்து நின்றேன்.
ஆயிரம் தடவை அழைத்தும் ஒரு பொழுதாவது நான் திரும்பிப்
பார்க்கவில்லை.
பதினைந்து வயதில் முகம் சுளிப்பதை நிறுத்தினேன்
என் தூசு உங்கள் தூசுடன் கலக்க விரும்பினேன்
என்றைக்கும் என்றைக்கும் என்றென்றைக்குமாக
ஏன் நான் வெளியைப் பார்க்க ஏறிவர வேண்டும்?

பதினாறில் நீங்கள் பிரிந்தீர்கள்
குமரி மறையும் நீர்ச் சுழிகள் நிறைந்த நதி வழியாக
தொலைவிலுள்ள கோடு யென்னுக்கு சென்றீர்கள்
நீங்கள் போய் மாதங்கள் ஐந்தாகி விட்டன.
மேலே குரங்குகள் சோகமாய் கரைகின்றன.
நீங்கள் போகும்போது
மனதில்லா மனதுடன் கால்களை இழுத்துச் சென்றீர்கள்
வாசலில் பாசி படர்ந்திருக்கிறது
பலவிதமான பாசிகள் அகற்ற முடியாத அடர்த்தியுடன்.
இந்த இளவேனிலில் காற்றில் இலைகள் உதிர்கின்றன
இந்த ஆகஸ்டிலேயே வண்ணத்தி ஜோடிகள் மஞ்சளித்து விட்டன.

மேற்கு தோட்டத்து புல் தரைகளில்
அவை எனக்கு úவெதனை தருகின்றன
எனக்க வயது ஆகிறது.
சியாங் நதியின் இடுக்கன் வழியாக நீங்கள் வருகிறீர்கள் என்றால்
என்னை முன்னமே தெரிவியுங்கள்
நான் உங்களைப் பார்க்க வருகிறேன்

லி போ வின் சீனக் கவிதை. எஸ்ரா பவுண்டின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து – காசியபன்

(நவீன விருட்சம் ஜனவரி – மார்ச்சு 1989)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 80

பிரதீபன் கவிதை

திருவோடு ஏந்தி
தெருவழியே போனால்
சோறுதான் விழும்;
வேட்டி விழலாம்;
ஒதுங்கிக் கொள்ள
திண்ணையில் இடமும் தருவார்கள்;
நீ கேட்பதுபோல்
ஒருபோதும் மலர் விழுவதில்லை

நன்றி : கண்மறை துணி – கவிதைகள் – பிரதீபன் – வெளியீட்டாளர் : பிரதீபன், 25கே, ஜோதிநகர் 4வது தெரு, காமராஜ் மீட்டிங் ஹால் எதிரில், கோவில்பட்டி – 628 501 – விலை : ரூ.125 – பக்கங்கள் : 240

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 6

1. 41வது சென்னை புத்தகக் காட்சி எப்படிப் போயிற்று?

41வது சென்னை புத்தகக் காட்சியும், நானும், மூன்று இளைஞர்களும் என்று கட்டுரை எழுத உள்ளேன்.

2. யார் அந்த மூன்று இளைஞர்கள்?

எல்லாம் என் நண்பர்கள். கிருபானந்தன், சுந்தர்ராஜன், கல்லூரி நண்பர் சுரேஷ்.

3. எல்லோரும் இளைஞர்களா?

எனக்கு 64. என்னை விட சில மாதங்கள் பெரியவர் சுந்தர்ராஜன், என்னை விட சில மாதங்கள் சின்னவர் கிருபானந்தனும், சுரேஷ÷ம். அவர்கள் மூவரும் என்னை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு புத்தகக் காட்சியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள்.

4. 15 கோடிக்குப் புத்தகங்கள் விற்றதாக செய்தி வந்துள்ளதே?

உண்மைதான். ஆனால் எதுமாதிரியான புத்தகங்கள் விற்றன என்பது தெரியாது. அதை நம்பி புத்தகங்களை அதிகமாக அச்சடித்து விடாதீர்கள்.

5. புத்தகக் காட்சியில் நடந்த சோகமான நிகழ்ச்சி எது?
ஞாநியின் மரணம். முதன்முதலாக நானும் ஞாநியும்தான் புத்தக ஸ்டாலில் நுழைந்தோம். அது எந்த ஆண்டு என்ற ஞாபகம் இல்லை.

6. ஒருநாளில் அதிகமாக எழுதுவது ஜெயமோகனா பா ராகவனா?

இந்தக் கேள்வியை நான் ராகவனிடம் கேட்டேன். ஜெயமோகன்தான் என்கிறார் அவர்.

7. இந்தப் புத்தகக் காட்சியில் நீங்கள் செய்த புதுமை என்ன?

கிருபானந்தன் செய்த புதுமை என்று சொல்லுங்கள். ஒரு அட்டைப் பெட்டியில் படித்தப் புத்தகத்தைப் போட்டுவிட்டு படிக்காதப் புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாரகள்.

8. யாரையெல்லாம் புத்தகக் காட்சியில் சந்தித்தீர்கள்?

சந்திக்கவே முடியாது என்று எண்ணிய ஒரு நண்பரைச் சந்தித்தேன். என்னால் நம்ப முடியவில்லை. அவர் எப்படி இருக்கிறார் என்பதை அடிக்கடி யோசித்துக்கொண்டிருப்பேன். புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். முடியாது என்று மறுத்துவிட்டார். சில நிமிடங்கள் பேசிவிட்டு எப்போது நான் செய்த உதவிக்கு கைமாறாக என் பையில் பணத்தைத் திணித்துவிட்டுப் போய்விட்டார். திரும்பவும் வந்து பார்க்க வருகிறேன் என்று சொன்னவர் வரவில்லை.

9. இந்தப் புத்தகக் காட்சியில் உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி எது,

என் முழு சிறுகதைத் தொகுதியைக் கொண்டு வந்ததுதான் மறக்க முடியாத நிகழ்ச்சி.

10. அடுத்தது என்ன செய்வதாக உத்தேசம்.

சி சு செல்லப்பா தனி மனிதராக எழுத்து பத்திரிகையை 120 இதழ்கள் வரை கொண்டு வந்ததாக நினைக்கிறேன். நான் விருட்சம் இதழை 121 இதழ்கள் வரை கொண்டு வர எண்ணி உள்ளேன். சாத்தியமா என்பது தெரியவில்லை.

கவிதைப் புத்தகங்களும் சில உண்மைகளும்….

விருட்சம் பதிப்பகத்தின் ஆரம்பத்தில் கவிதைப் புத்தகம் ஒன்றை கொண்டு வந்தேன். அது முதல் புத்தகமும் கூட. 500 பிரதிகள் அச்சடித்து வைத்திருந்தேன். அந்தத் தொகுதியைப் பார்த்தவர்கள் அதை எழுதிய கவிஞரை எல்லோரும் பாராட்டினார்கள். இன்னும் கூட பாராட்டுகிறார்கள். ஆனால் அந்தப் புத்தகத்தை 10 ஆண்டுகளாக முயற்சி செய்து ஒருவாறு விற்றேன். பெரும்பாலும் இலவசமாகக் கொடுத்தேன். விற்கிற இடத்தில் கொடுத்தப் புத்தகப் பிரதிகளை அவர்கள் விற்று பணம் கொடுப்பதில்லை. நானும் கண்டுகொள்வதில்லை.

அதன்பிறகு நான் கொண்டு வந்த பல கவிதைத் தொகுதிகளின் நிலை இன்னும் மோசம். எல்லோரும் கவிதைப் புத்தகங்களை வாங்காமல் சாட்டையால் அடிப்பதுபோல் அடித்தார்கள். நானும் திருந்த வேண்டுமே திருந்தவில்லை. இன்னும் இன்னும் கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். இப்போது ஒரு உண்மை தெரிந்து விட்டது. கவிதைப் புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு கையளவு புத்தகங்களையே காட்டுங்கள் என்பதுதான் அந்த உண்மை.

நான் திரும்பவும் உமாபதி புத்தகத்தையும் நகுலனின் புத்தகத்தையும் அப்படித்தான் கொண்டு வந்துள்ளேன். விரல்களை சொடுக்கிற அளவு எட்டிவிட்டேன். தொகுப்பு கவிதை நூல்களையும் கொண்டு சேர்ப்பது சிரமமாக இருக்கிறது. ஆனால் ஞானக்கூத்தனின் கவிதைத் தொகுதியும், பெருந்தேவியின் கவிதைத் தொகுப்புகளும் என்னுடைய விருட்சம் ஸ்டாலில் விற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் கையளவு கவிதைத் திட்டம் என்னளவில் உண்மை என்றுதான் நினைக்கிறேன்.

விளையாட்டு

தம்ளர் காப்பியில் ஓர் எறும்பு நீந்திச் செல்கிறது
கடவுளைப் போல் நான் சக்தியோடிருக்கிற
அபூர்வத் தருணம்
எறும்பே இன்னும் படபடத்து நீந்தேன்
உன் ஆறு கால்களில் ஏதாவது இரண்டைத்
தூக்கித்தான் கும்பிடேன்

(பெருந்தேவியின் ‘பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்’)

என்னுடைய ‘திறந்த புத்தகத்திற்கான’ அறிமுக உரை பகுதி 4

என் ‘திறந்த புத்தகம்’ பற்றிய அறிமுக உரையை 14.11.2017 அன்று ராஜேஷ் சுப்பிரமணியன் என்பவர் பேசி துவக்கி வைத்தார். எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அதன்பின் வ வே சுப்ரமணியன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசியதையும் கேட்டிருப்பீர்கள். இன்னும் பலர் பேச உள்ளார்கள். எல்லோரும் 5 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களுக்குள் பேச உள்ளார்கள. மூன்றாவதாக ஆர் கே ராமனாதன் என்கிற என் நண்பர் 20.12.2017 அன்று பேசி உள்ளார். இப்போது மருத்துவர் ஜெ பாஸ்கரன் அவர்கள் பேசி உள்ளார். புத்தகக் காட்சியால் இதை ஒளிபரப்பத் தாமதமாகிவிட்டது. என் புத்தகத்தைக் குறித்துப் பேசுவதை கேட்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆனந்தின் பவளமல்லிகை

ஆனந்த் என் நெடுநாளைய நண்பர். நான் அலுவலகத்தில் அவரைப் பார்க்கப் போவேன். ‘ஆனந்த், ஒரு கவிதை எழுதிக் கொடுங்கள்,’ என்று கேட்பேன். உடனே ஒரு கவிதை எழுதித் தருவார். அந்தக் கவிதை நன்றாகவும் இருக்கும். பிரசுரிக்கும்படியாக சிறப்பாகவும் இருக்கும். ஆனந்த் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார். ஆனால் எல்லா விஷயங்களிலும் சுறுசுறுப்பானவர். அவருடைய நீண்ட கதைதான் ‘இரண்டு சிகரங்களின் கீழ்’ என்ற நீண்ட கதை. அதை கையெழுத்துப் பிரதியாகவே எல்லோரிடமும் படிக்கக் கொடுத்திருக்கிறார். அதை ஒரு பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும். பிரசுரிக்க வேண்டும் என்ற முயற்சி எடுத்துக்கொள்ள மாட்டார். ஒவ்வொருவரும் அந்த நீண்ட கதையைப் படிக்க வேண்டும். வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ளும் கதைதான் அந்தக் கதை. விருட்சம் வெளியீடாக அவருடைய கதைகளை முழுவதும் தொகுத்துள்ளேன். முதலில் வேர் நுனிகள் என்ற பெயரில் இத் தொகுப்பை கொண்டு வந்திருக்கிறேன் இப்போது பெயரை மாற்றி üபவளமல்லிகைý என்ற பெயரில் கொண்டு வந்துள்ளேன்.

110 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.100தான். சிறுகதைகளும், குறுநாவல்களும் கொண்ட 6 கதைகள் அடங்கிய நூல் இது.

பரீக்ஷா ஞாநியும் நானும்

கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன். ஞாநியை முதன் முதலாக எங்கே சந்தித்தேன் என்று. கிருத்துவ கல்லூரியில் சங்கரன் என்ற மாணவர் யாருடனோ பேசுவதிலிருந்து தெரிந்துகொண்டேன். அவர்தான் பின்னாளில் பரீக்ஷா ஞாநியாக வரப் போகிறார். அப்போது எனக்கு அவருடன் அறிமுகம் கிடையாது. ஆனால் அவர் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தது மட்டும் காதில் விழுந்தது. ‘கசடதபற நின்று விட்டது. இனிமேல் வராது.’ üகசடதபறý ஒரு சிறு பத்திரிகை. அது நின்று விட்டதை அவர் விவரித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் üகசடதபறý என்ற சிற்றேட்டின் அறிமுகம் எனக்குக் கிடைத்திருந்தது. அது எங்கே விற்கும் என்ற விபரம் தெரியவில்லை.
திரும்பவும் ஞாநியாக சங்கரன்தான் எனக்கு அறிமுகம் ஆனார். அப்போது சில சபா நாடகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கும் நாடகங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை. ஒரு நாடகக் குழுவுடன் இணைந்து கொண்டேன். அதில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். முதல் நாள் நாடக ஒத்திகையின்போது ஒரு வசனத்தைக் கொடுத்து பேசச் சொன்னார்கள். ஒரு பெண் நடிகையைப் பார்த்து காதல் வசனம் பேச வேண்டும். நாடக இயக்குநர் நான் நடிப்பதைப் பார்த்து üநீங்கள் சத்தமாக வசனம் பேச வேண்டும்,ý என்றார். திரும்பவும் நாடக ஒத்திகை நடந்தது. இந்த முறை சத்தமாக வசனம் பேசினேன்.
திரும்பவும் அந்த நாடக இயக்குநர் சொன்னார்: “நீங்கள் ஏன் இப்படி காதல் வசனம் பேசும்போது, மார்பில் கை வைத்துக்கொண்டு பேசுகிறீர்க,.” எனக்கு வாய்ப்பு போய்விட்டது. நாடகத்தில் கூட என்னால் காதல் வசனம் பேசி காதிலிக்க முடியாது என்று தோன்றியது.
அந்தத் தருணத்தில்தான் பரீக்ஷா என்ற நாடகக் குழு எனக்கு அறிமுகம் ஆனது. அவர்கள் நாடகங்களை சென்னை மியூசியம் தியேட்டரில் பார்த்து முதலில் ஆச்சரியப்பட்டேன். பின் ஏன் இப்படி என்று யோசிப்பேன். எனக்கும் நாடகத்தில் நடிக்க வேண்டுமென்ற ஆசை விடவில்லை. ஞாநியைப் போய்ப் பார்த்தேன். என்னை அவர்களில் ஒருவனாக சேர்த்துக்கொண்டார்.
எனக்கும் ஒரு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அறந்தை நாராயணனின் ‘மூர் மார்க்கெட்’ என்ற நாடகம். அப்பாவி இளைஞன் வேஷம். மேடையில் பாதி தூரம் வரை வந்திருந்து நடிக்க வேண்டும்.. ஞாநியின் எளிமையும், எல்லோரையும் நடிக்க வைக்கலாமென்ற தன்மையும் எனக்குப் பிடித்திருந்தது. பீட்டர்ஸ் காலனியில் உள்ள ஞாநியின் வீட்டிற்கு நான் மேட் இன் இங்கிலாந்து சைக்கிளில்தான் போவேன். நாடகம் அன்று அலுவலகம் போகாமல் சைக்கிளை அவர்கள் வீட்டின் வெளியே வைத்துவிட்டு அவர்களுடன் ஆர் ஆர் சபாவிற்குச் சென்றேன். அங்கு முன் மாதிரியாக நாடக ஒத்திகை நடந்தது. எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். எனக்கு படக் படக்கென் நெஞ்சு துடிப்பது போலிருந்தது.
அந்தத் தருணம் வந்தது. நாடக மேடையில் பாதி தூரம் வந்து நான் வசனம் பேச வேண்டும். நான் பேசுவதற்குள் என் கூட இருந்தவர்கள் அவர்களாகவே இட்டுக்கட்டி வசனம் பேசி என்னை டிஸ்டர்ப் செய்து விட்டார்கள். எனக்கு இப்போது கூட ஒரு வசனம் ஞாபகத்திற்கு வருகிறது. ‘என்னம்மா குறியில்லாமல் இருக்கியே,’ என்று. அந்த வசனம். நாடகத்தில் நடித்த அன்று இரவு தூக்கமே வரவில்லை. மேடையில் நடித்த அப்பாவி இளைஞன் பாதி தூரம் மேடையில் நடந்து நடந்து வசனம் பேசுவது போல் கனவு. எனக்கு இனிமேல் நாடகத்திலேயே நடிக்க வராது என்று தோன்றியது. அடுத்த நாள் காலையில் ஞாநி வீட்டு வாசலில் வைத்திருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு ஞாநியிடம் சொல்லாமல் ஓட்டமாய் ஓடி விட்டேன்.
ஞாநி என் தூர நண்பராகிவிட்டார். அவரைப் பற்றிய செய்திகள் எல்லாம் எனக்கு வந்துகொண்டிருக்கும். அவருடைய திருமணம் கூட சென்னை மியூசியம் தியேட்டரில்தான் ஒரு நாடகத்துடன் நடந்தது. அவர் திருமண வைபத்தில் கலந்து கொண்டேன். ‘நானும் பத்மாவும் சேர்ந்து வாழப்போகிறோம்,’ என்று அவர் சொன்னதாக ஞாபகம்.
நாடகத்தில் நடிக்கும் ஆசை போய்விட்டதால் என் நட்பு வட்டமும் மாறிவிட்டது. ஞானக்கூத்தன், ஆர் ராஜகோபாலன், ஆனந்த், ஸ்டெல்லா புரூஸ், வைத்தியநாதன், ஸ்ரீனிவாஸன், பிரமிள், அசோபமித்திரன், வெங்கட்சாமிநாதன் என்றெல்லாம் என் நட்பு வட்டம் பெரிதாகிவிட்டது. ஆரம்பத்தில் தொடர்ந்த எழுத்து முயற்சி விருட்சம் என்ற பத்திரிகை கொண்டு வரும் அளவிற்கு மாறியது. இந்தத் தருணத்தில் ஞாநியை சந்திக்காவிட்டாலும் ஞாநியைக் குறித்த செய்திகளை அறியாமல் இருக்க மாட்டேன். தன் கருத்துக்களைத் தெரிவிப்பதில் ஞாநி துணிச்சலானவர். சோ ராமசாமிக்கு அடுத்ததாக ஞாநி ஒருவர்தான் தன் மனதில் தோன்றுவதை தைரியமாக வெளிப்படுத்தக் கூடியவர். அதே சமயத்தில் அவர் சொல்வதில் சிலவற்றை ஏற்றுக்கொள்வேன். சிலவற்றை ஏற்க மாட்டேன். பாரதியார் மீது அவருக்குப் பற்று அதிகமாக இருக்கும். அவர் ஒரு ஓவியர். பாரதியார் படம் ஒன்றை மீசையுடன் அவர் வரைந்திருப்பார். அதைப் பார்க்கும்போது நாமும் அதை நம் வீட்டில் வைத்திருக்கலாமென்று தோன்றும். தீம்தரிகிட என்ற பத்திரிகை ஒன்றை அவர் ஆரம்பித்தார். அப் பத்திரிகை மூலம் தன் மனதில் தோன்றுவதெல்லாம் எழுதுவார். ஆனால் அவரால் அப் பத்திரிகையைத் தொடர்ந்து கொண்டு வர முடியவில்லை. பத்திரிகையைக் கொண்டு வருவதில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், நிறுத்தி விட்டார்.
இருந்தாலும் அவர் பல பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தார். முரசொலி, ஆனந்தவிகடன், தினமணி, தினமலர் என்று பல பத்திரிகைளில் பல பொறுப்புகளில் பணி புரிந்தவர். டிவிகளிலும் அவர் பங்குபெற்று தொடர்கள் இயக்கிக்கொண்டிருந்தார். பெரியார் பற்றி அவர் எடுத்தது குறிப்பிடத்தகுந்தது. அதிகம் செலவாகாமல் ஒரு ஆவணப்படத்தை எடுக்க முடியும் என்று நிரூபித்தவர். ‘எப்படி விருட்சத்தை இவ்வளவு தூரம் நடத்துகிறீர்கள்?’ என்று ஒரு முறை ஞாநி என்னிடம் கேட்டார்.
விருட்சம் போன்ற பத்திரிகை நடத்துவதற்கான வழிமுறையைக் அவரிடம் தெரிவித்தேன். எங்கே அச்சடிக்கிறேனோ அந்த இடத்தைக் குறிப்பிட்டேன். அவர் திரும்பவும் தீம்தரிகிட பத்திரிகையைக் கொண்டு வந்தார். ஆனால் தொடர முடியவில்லை. தீம்தரிகிட திரும்பவும் நின்று விட்டது. அந்த அச்சகத்தில் புத்தகங்களை கொண்டு வந்தார். அவர் வட்டம் பெரிதாகி விட்டது. பல அரசியல் நண்பர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். இவ்வளவு இருந்தும் ஞாநியை எல்லோரும் பார்க்க முடியும். பேச முடியும். நான் பத்து கேள்வி பத்து பதில்கள் என்ற தலைப்பில் பல எழுத்தாளர்களைப் பேட்டி எடுத்தேன். ஞாநியையும் எடுத்தேன். அவர் வீட்டுப் பின்பக்கத்தில்.
(15.01.2018 அன்று மறைந்த ஞாநியின் நினைவாக..)