பின்னற்தூக்கு




சிறுகதை

ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடியவேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.

செல்விக்கு நீண்ட பின்னல். முழங்கால் வரை நீண்ட பின்னல். எப்பொழுதும் பின்னிவிட்டு அதன் நுனியில் கறுப்பு றப்பர்பேண்டால் முடிச்சுப்போட்டு விட்டிருப்பாள். மருத்துவத்தாதிப் பயிற்சிக்கென வந்திருந்த பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ஒரு பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அந்த மழைக்காலக் காலைப்பொழுதில் அவள் செய்திகொண்டு வந்தபொழுது அப்பின்னலும் முடிச்சும் தூக்குக் கயிறு போலத்தான் தோன்றியது.

எந்தப் பெண் எனத் தெரியவில்லை. வெளியூர்ப் பெண். ஆனாலும் இந்த வீதியில் பழக்கப்பட்ட ஒரு பெண்ணாகவே இருப்பாள். அருகிலிருந்த நகரத்தின் மையத்திலிருந்த மருத்துவத் தாதிகள் பயிற்சி நிலையத்தில் பயிலச் சேர்பவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த விடுதியில் இறுதி ஆண்டுகளில் தங்கிப் பயிலவேண்டுமென்பது ஒரு விதிமுறை. அந்த விதிக்கமையவோ, அல்லது தங்கிப்படிக்க வேறு வசதியான இடம் அந்த நகரத்தில் அமையாததாலோ பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த எல்லா இறுதியாண்டு மாணவிகளும் அங்குவந்து தங்கியிருந்தனர்.

அம்மாவுக்கு எல்லாப் பெண்களையும் பரிச்சயம். வீட்டின் முன்னால் அம்மா ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தாள். சின்ன ஷாம்பூ பக்கெட், சவர்க்காரம், கடித உறைகள், கூந்தல் பின்கள், ஊக்குகள் எனப் பெண்கள் வந்து வாங்கிப் போவார்கள். சில சமயங்களில் அவர்கள் விடுதியின் வயதான காவல்காரனுக்கு வெற்றிலையும் சுண்ணாம்பும் கூட வாங்கிப் போவார்கள். அம்மாவுடனான இந்தச் சிறிய வியாபாரங்களின் பொழுது அவர்கள் சிந்தும் புன்னகைகள் இடையில் ஒரு பாலம் போலப் பரவி அம்மாவுக்கு அவர்களுடனான பரிச்சயத்தை இலகுவாக ஏற்படுத்திவிட்டிருந்தது.

மருத்துவத்தாதிகள் என்றால் அவர்களுக்கே உரிய வெள்ளைச் சீருடையையும் , தொப்பியையும் கற்பனை பண்ணக் கூடாது. இவர்கள் எல்லாவற்றையும் பயின்று பின் வேலை பார்க்கச் செல்லும்பொழுதே அவற்றை அணிபவர்களாக இருக்கக் கூடும். இப்பொழுதைக்கு வெள்ளைச் சேலைதான் அவர்கள் சீருடை. வீதியில் காலை ஏழு மணிக்கே அவர்கள் சோடி சோடியாய் பஸ் நிலையம் நோக்கி நடப்பதைப் பார்க்க வெள்ளைக் கொக்குகளின் அணிவகுப்பைப் போல அழகாக இருக்கும்.

செல்வி இப்பொழுது எழுந்துகொண்டாள். செய்தியை இன்னொருவரிடம் எத்திவைத்த திருப்தியோடு ஏதோ வர்ணிக்கமுடியாத சோகமொன்றும் அவள் முகத்தில் படிந்திருந்ததைப் பார்க்கமுடிந்தது. அவள் எழுந்துகொண்டதோடு அம்மாவும் எழுந்துகொண்டாள். செல்வி கொண்டுவந்த பாலைப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சத் தொடங்கினாள். செல்விதான் அந்த விடுதிக்கும் பால் விற்பவள். முக்கால்வாசிப் பால் சுமந்த பெரிய பாத்திரத்தைத் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு அடுத்தவீட்டுக்கு நகர்ந்தாள். அங்கேயும் அந்தத் தற்கொலைச் செய்தியை முதலில் இவள்தான் சொல்லவேண்டியிருக்கும். இல்லாவிடில் அந்த வீட்டிலிருந்து விடுதிப்பக்கம் யாரேனும் போய் வந்திருந்தால் அவர்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும்.

அம்மாவுக்குத்தான் ஒரே யோசனையாக இருந்தது. எந்தப்பெண்ணாக இருக்கும் ? நேற்று மாலையில் மழைக்கு ஒரு மஞ்சள் பூப்போட்ட குடையை எடுத்து வந்து பேனையும், பிஸ்கட்டும், வாழைப்பழமும் வாங்கிப் போனதே ஒரு சிவந்த ஒல்லிப்பெண். அதுவாக இருக்குமோ ? சாக நினைத்த பெண் பிஸ்கெட்டெல்லாம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டுச் சாகுமா என்ன ? அதுவும் முழுதாக எழுதித் தீராதவரைக்கும் வாழ நினைக்காத பெண் கொஞ்சம் கூடுதல் விலைகொடுத்து அழகான பேனை வாங்கிப் போக மாட்டாளே ? அதுவும் நட்ட நடுஇரவில் அறைத் தோழியருக்கு எந்த அரவமும் ஏற்படா வண்ணம் எழுந்து விடுதியின் முன் சாலைக்கு வந்து தன்னை முழுதும் நிர்வாணமாக்கி, தனது வெள்ளைச் சேலையில் தூக்குப் போட்டுச் சாக ஒரு பெண்ணுக்கு எந்தளவுக்கு தைரியம் இருக்கவேண்டும் ? அந்தச் சிவந்தபெண் அந்தளவுக்கு தைரியமானவளா என்ன ?

நிச்சயமாக அந்தப் பெண்ணாக இருக்கமாட்டாள் எனத் தோன்றியது. அவ்வாறெனில் இறந்த பெண் யார்? செத்தவள் இறுதியாக வந்து என்ன வாங்கிப் போனாள் ? அம்மா கடைக்கு வந்த பெண்களின் ஒவ்வொரு முகமாகத் தன் நினைவுக்குக் கொண்டுவர முயன்று தோற்றாள். நேற்றுவந்த பெண்ணின் மஞ்சள் கலரில் அழகான பூப்போட்ட குடை ஞாபகத்திலிருந்த காரணம் அதே மாதிரியான குடை அம்மாவிடமும் இருந்ததுதான். அந்தக் குடையை யாருக்கோ இரவல் கொடுத்துப் பின் வாங்க மறந்துவிட்டதாகத் தோன்றிய கணம் பொங்கிய பாலை இறக்கிவைத்துவிட்டு எழுந்துபோய் அலமாரியின் மேலே பார்த்தாள். குடை அதன் பாட்டில் இருந்தது. ஆனால் எப்பொழுதோ, எதுபோன்றோ குடை அல்லது வெயில் சுமந்துபோன பெண்ணொருத்தி இன்று உயிருடன் இல்லை. நிச்சயமாக இந்தக் கடையில் சின்னச் சின்னதாகக் குவிந்திருக்கும் பொருட்களில் ஏதோ ஒரு பொருளை வாங்கிப் போனவளாகத்தானே இருப்பாள். அப்பொழுது சிந்திய புன்னகையும், சிதறவிட்ட மூச்சுக்காற்றுகளும் இந்த பெட்டிக் கடையின் மூலைகளைத் தேடி ஓடியிருந்திருக்குமே ?

வாசல் வீதியினூடாகப் போலிஸ் வண்டி விடுதியை நோக்கிப் போவது தெரிந்தது. இனி விசாரணை தொடங்கக்கூடும். அவளது பிணம் அறுக்கப்பட்டுப் பரிசோதனைகள் நடக்கும். தற்கொலைக்கான காரணம் பலவிதங்களில் அலசப்படும். அந்தப் பெண் குறித்தான ஒழுக்கமும், அந்தரங்கமும் கூடப் பரிசீலிக்கப்படும். இனி வண்டி,வண்டியாக அவளது உறவினர்கள் வந்து கதறலோடு விடுதியை நிறைக்கக்கூடும். காலை நேரங்களில் வீதியில் அணிவகுக்கும் கொக்குச் சோடிகளில் ஒன்று குறையும்.அம்மா தன் கடையை அன்று மட்டும் மூடப்போவதாக உத்தேசித்துக் கொண்டாள். இன்றைய துக்கத்தில் எப்படியேனும் பங்குகொள்ள வேண்டும்போல இருந்தது அவளுக்கு.

தானாகச் சாவதை விடவும் அகால மரணங்கள் என்பவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவைதான். ஒவ்வொரு நாளும் சிரிக்க நினைப்பதைப் போல, அழ நினைப்பதைப் போல, பசியை நினைப்பதைப் போல, குளியலை நினைப்பதைப் போல மரணத்தை தினமும் நினைப்பவர்கள் இல்லை. ஒருவரைச் சார்ந்தே வாழப்பழகியவர்கள் அல்லது அவரோடு நெருக்கமாகப் பழகியவர்கள் அல்லது தெரிந்தவர்கள் அவரது அகாலமரணத்தின் போது பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பின்னொருநாளில் யாரிடமோ ஏமாந்து செல்வியும் தற்கொலை செய்துகொண்ட பொழுது அவளிடம் பாலை இழப்பதற்காகக் காத்திருந்த அவளது பிரியத்திற்குரிய மாடுகளும், அவள் கொண்டுவரும் பாலைப் பெறுவதற்காகக் காத்திருந்த அம்மாவும் மீண்டும் சோகத்தில் மூழ்கினர். அம்மா தனது துயரத்தை வெளிக்காட்ட அன்றும் முன்போலக் கடையைப் பூட்டினாள்.

தனது தாவணியில் தூக்குப்போட்டுச் செல்வியின் தலை துவண்டு தொங்கிக் கொண்டிருந்த பொழுது அவளது நீண்ட பின்னல் அவளது முழங்காலை முன்புறமாகத் தொட்டபடி தனியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுதும் அப்பின்னலும் கறுப்பு றப்பர்பேண்ட் முடிச்சும் தூக்குக் கயிர் போலத்தான் தோன்றியது.

நட்சத்திரங்கள் – தொகுதி 1

எப்பொழுதும் இருக்கும் யுத்தம்கண்ணீரும் நினைவுகளும்கோபத்தின் மறுபிறவி

உன்னிடம் பேசுவதற்குவார்த்தைகளை சேமித்துக் கொண்டிருக்கிறேன்உன்னிடம் மட்டும் பேசுவதற்கு
பொய்யின் தூய்மைதோல்வியுற்ற மனம்நிலவின் வசியம்
உலகையே அழித்த துப்பாக்கிமிச்சம் இருக்கின்றதுஇன்னும் ஒரு தோட்டா
பிரியும் பொழுதுநினைவுப் பரிசு கேட்ட என் தோழியேஅப்படியெனில் நம் நினைவுகள் … ?

புளிய மரத்திற்கு அடியில்சித்தார்த்தன் சிகரெட்பிடிக்கிறான்தேவதையின் நிழலுடன் ஒரு குரல்என்னை நோக்கி வருகிறதுநான் இறந்துவிட்டேன்
எங்கே என் மனைவிமின்னலுக்கு ஒரு கவிதை இடிக்கு ஒரு கவிதை மழைக்கு ஒரு கவிதைபுழுதி பார்த்தோம்எழுதிப் பார்த்தோம்இன்னும் எழுதுவோம்எழுதிக் கொண்டே இருப்போம்

எஸ். வைதீஸ்வரனும் மெளனி கதைகளும்….

நேற்று என்று நினைக்கிறேன். இல்லை இல்லை முந்தாநாள் இரவு (06.04.2009) வைதீஸ்வரனிடமிருந்து ஒரு போன் மெளனி கதைகள் புத்தகம் கேட்டு. வைதீஸ்வரன் என்னிடம் புத்தகம் கேட்டு எப்போதும் போன் செய்ததில்லை. அதுவும் மெளனி புத்தகம் ஏன் கேட்கிறார் என்ற ஆச்சரியம் எனக்கு. என்னைப் போன்ற பல படைப்பாளிகளுக்கு மெளனி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன் போன்ற படைப்பாளிகள் கைடு மாதிரி. வைதீஸ்வரன் இல்லாமல் வேறு யாராவது அந்தப் புத்தகத்தை கேட்டிருந்தால், இல்லை என்று சொல்லியிருப்பேன். கேட்டது வைதீஸ்வரன் என்பதால் என் புத்தக அலமாரியில் போய்த் தேடினேன். மெளனி புத்தகம் கிடைத்ததோடல்லாமல் வேறு ஒருபுத்தகம் ஒன்றை புரட்டிப் பார்க்கும்போது இரு கடிதங்கள் கீழே விழுந்தன. எடுத்துப் புரட்டிப் பார்த்தால் சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்கள். எனக்கு ஆச்சரியம். அக்டோபர் மாதம் 2001ஆம் ஆண்டு எழுதிய அக் கடிதத்தை ஏன் விருட்சத்தில் பிரசுரம் செய்யவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எந்தக் கடிதம் எழுதினாலும் சுந்தர ராமசாமி பதில் எழுதி விடுவார். அழகாக டைப் செய்து கீழே சுரா என்று கையெழுத்திடுவார். விருட்சம் வெளியீடாக நான் சில புத்தகங்களை அவருக்கு அனுப்பி இருந்தேன். அதற்குத்தான் அவர் பதில் எழுதியிருந்தார். தொடர்ந்து அவருக்கு நான் பதில் எழுத, எனக்கு அவர் இன்னொரு கடிதமும் எழுதியிருந்தார்.

திரும்பவும் அக் கடிதங்களைப் படித்த எனக்கு உடனே விருட்சம் இதழில்வெளியிட வேண்டுமென்ற பரபரப்பு கூடியது. அதற்குமுன் பிளாகில் அக் கடிதங்களைப் பிரசுரம் செய்யலாமென்று தோன்றியதால் இங்கு அவற்றைப் பிரசுரம் செய்கிறேன்.

முதல் கடிதம் 20.10.2001

அன்புள்ள அழகியசிங்கர் அவர்களுக்கு,

உங்கள் 04.10.2001 கடிதமும் நீங்கள் அனுப்பியிருந்த நான்கு கவிதைத் தொகுதிகளும் கிடைத்தன.

பா.வெங்கடேசன் தொகுப்பை அவர் அனுப்பி வைத்திருக்கிறார். அதைத்தான் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அத்தொகுப்பைப்பற்றி ஒரு மதிப்புரை எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது.

நீங்கள் அனுப்பிய தொகுப்புகளைப் படித்துவிட்டு என் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறேன். திட்டம் போட்டு வேலை செய்ய முடியவில்லை. தேதியில் முடித்துத் தரவேண்டிய வேலைக்கு முன்னுரிமை போய்விடுகிறது.

இப்போது நீங்கள் அனுப்பித் தந்திருக்கும் தொகுப்புகளை நான் இலவசமாகப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. உங்கள் வெளியீடுகளுக்கு நான் உரிய விலை தந்து வாங்குவதே நியாயமானது. அனுப்பித் தரவேண்டிய தொகையை கணக்கிட்டு எழுதுங்கள். தபால் செலவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எதிர்காலத்தில் நீங்கள் காலச்சுவடு மதிப்புரைக்கு அனுப்பும் புத்தகங்களை தனியாக எனக்கு அனுப்ப வேண்டியதில்லை.

விருட்சத்தில் நீங்கள் வெளியிடும் அசோகமித்திரனின் வரைபடத்தை என்னால் சகிக்க முடியவில்லை. சமீபத்தில் அவர் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த நிமிஷத்தில் வேண்டுமென்றால் அவர் முகம் உங்கள் வரைபடம்போல் இருந்திருக்கலாம். இப்போது நல்ல குணம் பெற்றுவிட்டார். நீங்கள் விரும்பினால் நான் ஒரு வரைபடத்தை வரைந்து அனுப்புகிறேன். நீங்கள் வெளியிடுவதைவிட அது நன்றாக இருக்கும்.

என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,

சுரா

பின் குறிப்பு : உங்கள் 16.10.2001 கடிதம் இப்போது கிடைத்தது. நீங்கள் புத்தக விலையைத் தெரிவித்ததும் அதனுடன் சந்தா நாற்பது ரூபாய் சேர்த்து அனுப்பிவிடுகிறேன்.

(சுரா அசோகமித்திரன் வரைபடத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். ஓவியர் விஸ்வம் வரைந்த ஓவியம் அது. எனக்குப் பிடித்த அசோகமித்தரன் படம் அது. எப்போதும் விருட்சத்தில் அவருடைய அந்த ஓவியத்தையே வெளியிடுவேன். அசோகமித்திரனுக்கும் அந்த ஓவியம் பிடிக்கும் – அழகியசிங்கர்)

இரண்டாவது கடிதம் 15.11.2001
அன்புள்ள அழகியசிங்கர்,

வணக்கம். உங்கள் 06.11.2001 கடிதம் கிடைத்தது. வேலை நெருக்கடியால் உடனடியாகப் பதில்போட இயலவில்லை. மன்னியுங்கள்.

அசோகமித்திரன் வரைபடத்தைப்** பற்றி நான் எழுதியிருந்த விமர்சனத்திற்கு அழுத்தம் தருவதற்காகவே ‘நான் வரைந்தால்கூட இதைவிட நன்றாக இருக்கும்’ என்ற அர்த்தத்தில் எழுதினேன். நான் எழுதிய முறை யதார்த்தமாக நீங்கள் எடுத்துக்கொள்ளும்படி இருந்ததோ என்னவோ.

யோகா* வகுப்புக்கு வந்தவர்களுக்க என் பெயர் தெரியாமல் இருப்பதில் என்ன அதிசயம்? என் பக்கத்து வீட்டு டாக்டருக்குத் தெரியாதே! நேற்று தொலைபேசியில் அழைத்து தினமணி தீபாவளி மலரில் கமலஹாசன் சுந்தர ராமசாமி என்று ஒரு பெயரைக் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் இன்னொரு சுந்தர ராமசாமி யார் என்று கேட்டார். கமலஹாசன் என் பெயரைச் சொல்லியிருக்க முடியாது என்பதில்தான் அவருக்கு என்ன தீர்மானம்! இதற்குத்தான் பெரிய பத்திரிகைகளில் எழுதவேண்டுமென்று புத்திசாலிகள் சொல்கிறார்கள். உண்மைதானே அவர்கள் சொல்வது?

இன்று ரூ.155 திரு என் சுப்பிரமணியன் பெயருக்கு அனுப்பி வைக்க இருக்கிறேன்.

என் அன்பார்ந்த வாழ்த்துக்களுடன்,

சுரா

*வெள்ளியங்கிரி நடைப்பெற்ற ஈசா யோகா வகுப்பில் கலந்துகொண்ட நாகர்கோவிலைச் சேர்ந்த சிலரிடம் சுந்தர ராமசாமியைப் பற்றி விஜாரித்தேன். அவர்கள் யாருக்கும் அவருடைய பெயர் தெரியவில்லை. சுந்தர ராமசாமியிடம் ஏன் உங்கள் பெயர் தெரியவில்லை என்று எழுதிக் கேட்டிருந்தேன். அதற்கான பதில்தான் மேலே வந்துள்ளது.

** சுந்தர ராமசாமி பிடிக்கவில்லை என்று கூறிய அசோகமித்திரன் வரைபடத்தை திரும்பவும் இங்கு பிரசுரம் செய்துள்ளேன்.

புத்தக விமர்சனங்கள்

நவீன விருட்சம் ஆரம்பித்த (1988ஆம் ஆண்டு) ஆண்டிலிருந்து அதில் புத்தக விமர்சனங்கள் பல எழுதியுள்ளேன். நினைத்துப் பார்த்தால் இப்போது என்னால் அதுமாதிரி புத்தக விமர்சனங்கள் எழுத முடியவில்லை. இருந்தும் நான் எழுதிய புத்தக விமர்சனங்களைத் தொகுத்து உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

த பழமலயின் ‘சனங்களின் கதை’
த பழமலயின் ‘சனங்களின் கதை’ என்கிற கவிதைத் தொகுதியில் இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிக்கலாம்.
மிக எளிமையான வார்த்தைகள் மூலம் ஊரையும் சுற்றத்தையும் வெளிப்படுத்துவது.
உள்ளது உள்ளபடியே கூறுவது.
எடுத்தவுடன் எதிர்படும் ‘அம்மா’ என்கிற கவிதையில் ‘முற்றத்துப் பவழமல்லி நீ மறந்தும் நினைத்தும் அழும் என்கிறபோது, மிகைப்படுத்தப்பட்ட உணர்வு நிலையில் கவிதை வெளிப்பட்டிருப்பதுபோல் தோன்றினாலும், கூடவே நயம் செறிந்த வார்த்தைகளையும் எந்தவித பகட்டுமின்றி வெளிப்படுத்துகிறது.
அப்பா என்கிற கவிதை
‘கடாவை வெட்டுகையில் கண்ணீரும் வடிப்பார்? கருப்பனார் சாமிக்குப் பன்றியும் வளர்ப்பார்? படைக்காமல் உண்பது ‘பழையது’ மட்டும்என்கிற தொடக்க வரிகளுடன் அபாரமாக ஆரம்பமாகிறது. இக் கவிதையில் அறிமுகமாகும் ந. தங்கவேல் படையாச்சி எந்தவித ஒளிவு மறைவுமில்லாமல், அவருடைய தற்பெருமையுடன் சேர்த்தே அறிமுகப் படுத்தப்படுகிறார். ‘அப்பாவின் கொடுவாள்’ என்கிற கவிதையில் கொடுவாள் இறுதியில்
ஒனக்கு எனக்குன்னு ஒடம் பிரிக்கிற ஒன்னு இருக்கு அத எதுத்துத்தான் நீ என்ன எடுக்கணும்’என்று புத்தி புகட்டுவது புதுமாதிரியாகத் தோன்றுகிறது.
‘உழுதவன் கணக்கில்’ துண்டை தொலைத்துவிட்டு எதையோ சுற்றிக்கொண்டு, பள்ளிக்கு ஓடுவதிலிருந்து ஆரம்பிக்கிற கவதை ஒரு கசப்பான அனுபவத்தை அங்கதத் தொனியுடன் விளக்குகிறது. ‘முருங்கை மரம்’ என்கிற கவிதையில் உறவு முறைகளில் நமக்கிருக்கும் நம்பிக்கையை ஆழப்படுத்துகிறார். ‘இனி எனக்குக் கொல்லை வெளிக்குறுக்கு வழிகள் திருகு கள்ளிகளின் செவிகளில் என்வரவு சொல்லும் ஓணான்கள்
என்கிற வரிகள் மூலம் ‘த பழமலை ‘புத்தரை மறந்த ஊர்’ கவிதையில் ஒரு ஊரை நயத்துடன் அறிமுகப்படுத்துகிறார். ஊரிலுள்ள ஏரிக்கரைப் பிள்ளையார் நாத்திகனையும் நலம் விசாரிப்பார்.
………………………………. இடாத முத்தத்திற்கு எப்படியெல்லாம் வருணனை
‘தப்புக் கணக்கு’ என்கிற கவிதையில், சிறுவயது முதற்கொண்டு உறவுகொண்ட ஒரு பெண்ணின் நினைவுகள், அவளுக்குத் திருமணம் ஆகி, இடுப்புக் குழந்தையுடன் பார்க்க வந்தும் ஞாபகத்திலிருந்து அகலாமலிருப்பதைக் குறிப்பிடுகிறார். ‘சனங்களின் கதை’ என்கிற இந்தத் தொகுதியில் உள்ள பல கவிதைகள் படிக்கிற உணர்வை ஏற்படுத்துகின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்வது அவசியமாகப் படுகிறது.

மீண்டும் வாசிக்கிறேன் 1

நிமல விஸ்வநாதனின் மூன்று கவிதைகள்

1. நட்பு

நானுன்னை வெறுக்கவில்லை
நானுன்னோடு சண்டை போட
விரும்புகிறேன் – நன்றாக கவனி நண்பா,
விரும்புகிறேன் உன்னோடு சண்டை போட.
எனினும் இதிலிருந்து இன்னொன்றும்
நீ சுலபமாய் புரிந்து கொள்ளலாம் –
நான் சண்டை போடாத எல்லோரையும்
நான் விரும்புகிறேன் என்றர்த்தமில்லை.

2. நிலை

மத்தியானம் தூங்கினால் மாலையில் என் மனம் குற்றமுணரும்
தெரிந்தும் வேலைதேடும் நான் எப்படியோ
இன்று மத்தியானம் தூங்கிவிட்டிருக்கிறேன்….
திடீரென காறிக் கமறிய காகங்களின் ஒப்பாரி.
கிழித்தெறிந்து விட்டது அதையும் இப்போது…
கனவுக்கு வேலி கட்டிய கைசலிப்பில்
மளாரென எழுந்திருக்க முடியவில்லை என்னால்
வாசலுக்கு வருகிறேன் தெரிகிறது –
இன்றேனோ கருணை காட்டாத மின் கம்பிகள் –
விழுந்து கிடக்குமொரு கறுப்பைச் சுற்றும்
கறுப்பு நிறங்களின் தாறுமாறில்
பல்லிளிக்கும் மேலை வானின் வெள்ளைச் சூரியன்.
அங்கே நிற்கின்ற நிலையில்
எனக் கொன்றும் புரிகிறது –
நடுத் தெருவில் அப்போது தான்
புணர்ந்திறங்குகிற ஆண் கழுதையின்
கண்ணில் கசியும் சோகம்.

3. விடுதலை

மாசு மறுவின்றி வெம்பரப்பாய் விரிந்து கிடக்கும்
மத்தியான வெளியில்
படபடத்துப் போகும்
வசீகரமாயொரு வண்ணத்துப் பூச்சி.
திடீரெனப் பாய்ந்தறையும் காற்று, கூடவே
திடீரெனத் துடிக்கும் ஒரு எண்ணம் –
வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து ‘விட’லாம்.
ஆனால் ஏனோ நல்ல வேளை
காற்று போய் எங்கோ மீண்டும்
பழையபடி பதுங்குவதற்குள்
வண்ணத்துப் பூச்சி பிடிக்கும் எண்ணத்தை நான்
காற்றில் விட்டு விட்டேன்…………………….

(ழ அக்டோபர் 1980 / 11வது இதழ்)

அபார்ட்மெண்ட் பித்ருக்கள்

சற்று முன்தான்
சொத்தென்று விழுந்தது
மின்சாரம் தாக்கி

அடிக்கடி பார்க்கும் சாவுதான்

இரண்டு நாளுக்குப் பிறகு

மீண்டும் ஒரு பெரிய காக்கை

இறந்துக் கொண்டிருக்கிறது

அலகு திறப்பதும் மூடுவதுமாக

இறுதி கணங்களின் துடிப்பு

குச்சி கால்களிலும் இறக்கைகளும்

குறுக்கும் நெடுக்குமாய்

படபடத்துப் பறந்தபடி

அபார்ட்மெண்ட் டிரான்ஸ்பார்மர் மேல்

சக காக்கைகள் ஓலமிட்டு

பார்த்துக்கொண்டிருக்கிறது

ஒரு காக்கை காக்கையாக சாவதை

இவர்களுடன்

ஏழு மாடி ஜன்னல்களிலும்

பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

பித்ருக்களின் உறவினர்களும்

காக்கை காக்கையாக

சாவதை

இரங்கல்கள்

வைதீஸ்வரனின் தாயார் இறந்த தினத்தன்று அவர் வீட்டுக்குச் சென்றபோது நிறைய ஐம்பதாண்டு கால நண்பர்களைச் சந்திக்க நேர்ந்தது. எஸ் வி சகஸ்ரநாமம் என்பவர் போன்றோரின் விடாமுயற்சியில்தான் எம்.கே தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் சிறை மீட்புக்கு வெற்றி கிடைத்தது. அப்போது இந்தியா சுதந்திரம் அடையவில்லை. கடைசி சரணாலயம் இங்கிலாந்திலுள்ள பிரிவி கவுன்சில் என்பது. வி.எல் எதிராஜ் என்பவர்தான் அதற்குரிய வக்கீல். ஏராளமான செலவு. எஸ் எஸ் வாசனிடமிருந்து கைப்பட ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை சிறை மீட்பு நிதிக்காகப் பெற்றார் என்று கூறுவார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்தபோது அவருடைய நாடகக் குழு செயலிழந்து போகக்கூடாது என்று எஸ் வி சகஸ்ராமம் அக் குழு நாடகங்களைத் தினசரி அரங்கேற்ற வழி செய்தார். அப்படி நடிக்கப் பட்டதுதான் ‘மனோகரா’ நாடகம். அதில் மனோகரனாக நடித்தது. கே. ஆர் ராமசாமி. நாடகத்தில் வரும் ‘செயின்’ சீன் மிகவும் புகழ் பெற்றது. இது திரைப்படத்திலும் வரும். மேடையில் பொருந்தி போவது, திரைப்படத்தில் அபத்தமாகத் தோன்றும். அதில் இந்த ‘செயின்’ சீனும் ஒன்று. சிறைப் பிடித்து வரும் காவலாளிகள் கைதியின் பேருரைக்கு வசதியாக சங்கிலியோடு முன்னும் பின்னுமாக நகர்வார்கள். எஸ் வி சகஸ்ராமின் ‘பைத்தியக்காரன்’ நாடகமும் என்.எஸ். கிருஷ்ணன் சார்பில் நடத்தப்பட்டது. மேடையில் வெற்றிகரமாக இருந்த இந்த நாடகம் திரைப்படமாக அதிகம் சோபிக்கவில்லை.
ஆனால் எஸ் வி சகஸ்ராமம் யாருக்கும் நிழல் தரும் ஆலமரமாக வாழ்ந்தார். அவர் வீடு ஒரு சத்திரமாக இருந்தது. அவருடைய சகோதரர்கள், உறவினர்கள் நன்கு படித்த, பண்பாளர்களாக இருந்தார்கள். அவருடைய ஒரு சகோதரியின் மகன் என்.வி.ராஜாமணி என்னும் ராமநரசு. இன்னொரு சகோதரி மகன் வைதீஸ்வரன். ராமநரசு ஏன் ஜெமினி ஸ்டுடியோவைப் பணிபுரிய தேர்ந்தெடுத்தார்? அவர் கணக்கில் எம்.ஏ பட்டம் பெற்றவர். அப்போதே ஏதாவது கல்லூரியில் எளிதாகச் சேர்ந்திருக்கலாம். ஆனால் எனக்காகவென்று ஜெமினி தேர்ந்தெடுத்தார் என்று தோன்றுகிறது. அந்த நாளில் நான் யாருக்காக நண்பனானால் என்னை அப்படியே அவர்கள் குடும்பத்திலேயே சேர்த்துக் கொண்டு விடுவார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு 21 வயது முடிந்திருக்கவில்லை. என்னுடன் ராமநரசுவின் தந்தையும் இதர உறவினர்களும் உலக விவகாரங்களை விவாதிப்பார்கள். நானும் இன்னொரு நண்பரும் எஸ் வி சகஸ்ராமத்துக்கும் ஒரு புனைபெயர் வைத்திருந்தோம். ‘மெளனி’. அவர் வீட்டில் எல்லோரும் ஏதேதோ பேசி, விவாதித்துக் கொண்டிருக்க, அவர் மட்டும் வாயே திறக்காது இருப்பார். அவருடைய தூண்டுதலில்தான் புதிய நாடகாசிரியர்கள் தோன்றினார்கள். அவர் மூன்றுமாத நாடகப் பள்ளி ஒன்று நடத்தினார். அதில் உருவானவர்தான் கோமல் சுவாமிநாதன். அவர் எழுதிய, தயாரித்த நாடகங்கள் எல்லாம் காலப்போக்கில் மறைந்து போய்விட்டன. ஆனால் அவருடைய வாழ்க்கையின் இறுதி நாட்களில் நடத்திய ‘சுபமங்களா’ பத்திரிகை இன்னும் பலருக்கு ஆதரிசமாக இருக்கிறது. அவரும் எனக்கு நண்பராகத்தான் இருந்தார். ‘நாம் முதலிலிருந்தே முற்போக்குத்தான். நாம் எதற்காகக் கட்சி கட்டும் கட்சிகளுடன் உறவு கொள்ள வேண்டும்,’ என்று என் வாதம். ஆனால் கோமலுக்கு அது வேண்டியிருந்தது.
ராஜாமணி, சகஸ்ரநாமம் இருந்த தாண்டவராயன் தெரு வீட்டில்தான் வைதீஸ்வரன் சில நாட்கள் இருந்தார். அவர் சில ஆண்டுகள் திருவல்லிக்கேணி திருவெட்டீசுவரன் பேட்டையில் இருந்தார். அவர் வீட்டருகில்தான் சி சு செல்லப்பாவோடு அமரத்துவம் அடைந்த 19 பிள்ளையார் கோயில் தெரு. கநாசுவும் பல ஆண்டுகள் 48 வாலாஜா சாலையில் இருந்தார். ஆனால் வீடு விஷயத்தில் பிரசுர விஷயத்திலும் செல்லப்பா அடைந்த வெற்றிகளை அவர் அடையமுடியவில்லை.
வைதீஸ்வரன் மூலம் நான் பரிச்சயம் பெற்ற உலகம் மிகவும் அகன்றது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் 21, 22 வயதுக்கு முன்பு. வைதீஸ்வரன் போலவே ஆர. கே ராமச்சந்திரன் மூவரும் அந்தக் குடும்பப் பரிவாரங்களே எனக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்றே தேவையில்லை. அங்கே இருப்பவர்களோடு பேசிக்கொண்டே இருப்பேன். சாப்பிடச் சொல்வார்கள். சாப்பிடுவேன். ஐந்தாறு முறை நேரமாகிவிட்டது, தூங்கி விட்டுக் காலையில் போ என்பார்கள். அப்படியே எந்த முன்னேற்பாடும் இல்லாமல்தான் அவர்கள் வீட்டிலேயே நிம்மதியாகத் தூங்கி விட்டுக் காலையில் வீட்டுக்குப் போவேன். என் தாயாருக்கும் இதெல்லாம் பழக்கப்பட்டு விட்டது. அப்போது தேடுவது, விசாரிப்பது என்றால் நேரே ஒருவர் போகவேண்டும்.
இதெல்லாம் வைதீஸ்வரன் வீட்டுத் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளச் சென்றபோது நினைக்கத் தோன்றியது. அவர்கள் குடும்பத்தில் அநேகமாக அனைவருக்கும் சதுர வடிவ முகம். அவர்கள் அறிமுகம்தான் என்னை எழுதத் தூண்டியது என்றால் அது தவறாகாது.
என்னுடைய முதல் இரு சிறுகதைத் தொகுப்புகளுக்கும் ஞானக்கூத்தனும், வைதீஸ்வரனும்தான் முன்னுரை எழுதினார்கள். அதன் பிறகுதான் நான் முன்னுரைகள் எழுத வற்புறுத்தப்பட்டு இப்போது நான் முன்னுரைகளே படிப்பதில்லை. நல்ல வாசகர்கள் முன்னுரைக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்.
இவ்வளவு நீண்ட வரலாறுக்குச் சாட்சியாக நான் இருந்து கொண்டிருக்கிறேன். இரு மாதங்கள் முன்பு கூட என்னுடைய 50 ஆண்டு நண்பர் மெலட்டூர் விசுவநாதன் நொடிப்போதில் காலமானார். வைதீஸ்வரனின் தாயார் போல அவரும் மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே மெளனமடைந்தார். ‘கொடுத்து வைத்தவர்கள்’ என்று சொல்வதற்குச் சில அடையாளங்கள் உண்டு. அதில் ஒன்று மரணம். அது பகலில், வீட்டில் நடக்க வேண்டும். உற்றார் உறவினர் இருக்கும்போது நிகழ வேண்டும். மிக முக்கியமாக, நினைவுடன் உயிரை விட வேண்டும். தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. மஞ்ச்சி மனுஷீக்கு மரணமே சாட்சி. நல்லவனுக்கு அவன் மரணம் அடையாளம்.
வைதீஸ்வரன் ஒரு குறும்புப் பார்வையுடன் ‘இந்த உடம்பை வைத்துக்கொண்டு இரங்கல் கூட்டங்களுக்குப் போகிறீர்கள்,’ என்றார். அவர் குறிப்பிட்ட கூட்டம் கிருத்திகா – சுகந்தி சுப்பிரமணியத்துக்காக நடத்தப்பட்ட கூட்டம். அன்று பேசிய ‘சிட்டி’யின் மகன் திரு வேணுகோபால் கிருத்திகாவின் இரு நாவல்களைப் படித்திருந்தார். நான் மூன்று படித்திருந்தேன். அந்தக் கூட்டத்திற்கு வந்த கூட்டம், பார்வையாளர்கள் எனக்கு ஆச்சரியமளித்தது. கூட்டத்திற்குச் சென்று வீடு திரும்பியவுடன் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சகஸ்ரநாமம் எழுத்தாளர்களை நாடகம் எழுதச் சொன்னார். வேண்டாம். இரங்கல் கூட்டங்கள் நடத்துங்கள் என்று கூறியிருந்தால் போதுமானது. (தயாராகிக் கொண்டிருக்கிற நவீன விருட்சம் 84வது இதழில் வெளியாகும்)

ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..

சிறுகதை

ஷார்ஜாவின் அதிகாலை 04:30 மணி; முதலில் டைம்பீஸில் அலாரம் அடித்தது. சுரேந்திரன் எழும்பவில்லை. ஏற்கெனவே முழிப்பு வந்து இன்னும் ஏன் அலாரம் அடிக்கவில்லை என்ற கேள்வியுடன் புரண்டு கொண்டிருந்த பியூலாராணி தான் அலாரத்தை நிறுத்தினாள். மீண்டும் 4:40க்கு கைத்தொலை பேசியில் அலாரம் அடித்தது. அப்போதும் அவன் விழிக்க வில்லை.
இம்முறையும் பியூலா தான் எழுந்து அலாரத்தை அணைத்தாள். சரியாக அணைத்திருக் கிறோமா என்று விளக்கைப் போட்டு சரிபார்த்துக் கொண்டாள். ஏனென்றால் கைத்தொலைபேசியில் அலாரம் சரியாக அணைக்கப்படாவிட்டால் ஒவ்வொரு பத்து நிமிஷத்திற்கொரு முறை அலறித் தொலைக்கும். அசந்து தூங்குபவனைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாக இருந்தது. தூக்கம் எத்தனை பெரிய வரம்! அவளுக்குத் தான் எவ்வளவு முயன்றும் அந்த வரம் வசப்படுவதே இல்லை. அவள் ஆழ்ந்து தூங்கி அனேக நாட்களாகி விட்டது.
மசூதியிலிருந்து அதிகாலைத் தொழுகைக்கான ‘பாங்கு’ ஒலிக்கத் தொடங்கிய போது இலேசாய் புரண்டு படுத்தான். இனிமேல் இவனை உறங்க விட்டால் காலதாமதமாகி கம்பெனி வண்டி இவனை விட்டு விட்டுப் போய் விடும் என்பதால் தூங்குபவனைத் தட்டி எழுப்பினாள். “ப்ளீஸ் பியூலா; இன்னொரு அஞ்சு நிமிஷம் மட்டும் தூங்க விடு…..” என்று கெஞ்சினான் கண்களைத் திறக்காமலேயே. “இப்பவே ரொம்ப நேர மாயிருச்சு; உங்க டிரைவர் உங்கள விட்டுட்டுத்தான் போகப் போறான்…..” என்றபடி அவசரப் படுத்தினாள்.
ஷார்ஜாவிலிருந்து துபாயில் இவன் வேலைக்குப் போக வேண்டிய இடம் 20கி.மீ. தூரத்துக்குள் தான் இருக்கும். அங்கங்கே அகாலமாய் குறுக்கிடும் ரவுண்டபட்களைத் தவிர்த்து விட்டால் நேரான, அகல மான, நேர்த்தியான சாலைகள் தான்; எத்தனை மெதுவாய் ஓட்டினாலும் 15 – 20 நிமிட பயண தூரம் தான். ஆனாலும் காலை 7 மணி டூட்டிக்கு இவனுக்கு 5:30 மணிக் கெல்லாம் வண்டி வந்து விடும். அதில் கொஞ்சம் தாமதமானாலும் ஷார்ஜா – துபாய் சாலையில் வாகன நெரிசல் தொடங்கி, உரிய நேரத்திற்கு வேலைக்குப் போக முடியாது.
அடிக்கடி அவன் பியூலாவிடம் சொல்வதுண்டு. “உங்கப்பா நம்ம கல்யாணத்திற்கு மாப்பிள்ளை ஊர்வலம் வைக்காத குறைக்கு இந்த ஊர்ல அப்பப்ப என்னை ஊர்வலம் மாதிரித்தான் கூட்டிட்டுப் போறானுங்க….”
துபாயில் வேலை பார்க்கும் நிறையப் பேர், அங்கு ஏறிக் கொண்டிருக்கும் வீட்டு வாடகையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஷார்ஜாவிற்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டு விட்டதாலும், இங்கு கார் வாங்குவது மிகவும் கட்டுபடி ஆகக்கூடிய செலவு – ஒரு வருஷ வீட்டு வாடகைக்கு ஆகுற காசில் புத்தம் புதிய கார் வாங்கி விடலாம்; அதுவும் வங்கிக் கடனில் மிகச் சுலபமாக வாங்கி, கம்பெனிகள் தருகிற டிரான்ஸ் போர்ட் அலவன்ஸிலேயே மாதத் தவணையும் பெட்ரோல் செலவும் போக கொஞ்சம் மிச்சமும் ஆகும் – என்பதாலும் ஷார்ஜா- துபாய் சாலையில் டிராபிக் ஜாம் எப்போதும் தலையைத் தின்னும் பிரச்னை தான்.
எல்லோரும் ஷார்ஜாவில் வந்து குவிவதால் இங்கும் வீட்டு வாடகை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது. அதனால் இப்போதெல்லாம் ஷார்ஜாவிற்குப் பக்கத்திலுள்ள அஜ்மானுக்குக் குடியேறத் தொடங்கி இருக்கிறார்கள். அஜ்மான் – சென்னைக்குப் பக்கத்திலிருக்கும் பாண்டிச்சேரி மாதிரி; சாராயம் சல்லிசாய்க் கிடைக்கும் இடம். ஷார்ஜாவில் தடை செய்யப் பட்டிருக்கும் மது அஜ்மானில் ஆறாய் ஓடு மென்பது ஒரு விசேஷம். அஜ்மானுக்கப்புறம் போனால் கடலில் தான் விழவேண்டி இருக்கும்.
ஆரம்பத்தில் பியூலாவும் சுரேந்திரனும் கூட துபாயில் தான் தங்கி இருந்தார்கள். மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஒரு அபார்ட்மெண்ட்டில் ஷேரிங் முறையில், ஒரு படுக்கை அறையை இவர்கள் பகிர்ந்து கொள்ள, இன்னொரு படுக்கை அறையில் ஒரு மலையாளத் தம்பதி அவர்களின் இரண்டு வயதுப் பெண் குழந்தையுடனும், மூன்றாவது படுக்கை அறையில் இரண்டு பிலிப்பினோ ஆண்களும் தங்கி இருந்தார்கள். இங்கெல்லாம் ஷேரிங் குடியிருப்புகள் சகஜம் தானென்றாலும் நிறைய சகிப்புத் தன்மையும் மற்றவர்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாத மனநிலையும் வேண்டும்.
ஒவ்வொரு படுக்கை அறைக்கும் தனித்தனி கழிவறைகள் இருந்ததால் அதன் சுத்தம் அத்தனை கவலைப் படும்படி இல்லை. ஆனால் எல்லோருக்கும் பொதுவான வரவேற்பறை மற்றும் சமையலறைப் பராமரிப்புத் தான் பியூலாவால் கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியாததாய் இருந்தது. அதுவும் சமையலறைக்குள் போனாலே அவளுக்கு குமட்டிக் கொண்டு வரும். “தனி வீடு பார்த்துப் போயிடலாங்க…..” என்ற அவளின் நச்சரிப்புக்கு ஆற்றமாட்டாமல், அவள் சமையலறைப் பக்கமே அதிகம் போகாதபடிக்கு சுரேந்திரன் ஹோட்டலிலிருந்து உணவை வரவழைத்து கொடுத்து விடுவான்.
ஒரு இரண்டு மாதங்கள் ஓடி இருக்கும். பிலிப்பினோ ஆண்கள் தங்களுடன் வசிக்க ஒரு பெண்ணைக் கொண்டு வந்தார்கள். “இந்த கண்றாவிகளை எல்லாம் பார்த்துக்கிட்டு என்னால இருக்க முடியாது. ஒண்ணு தனி வீடு பாருங்க; இல்லையின்னா என்னை ஊருக்கு அனுப்பி வச்சுருங்க…..” பியூலா சுரேந்திரனுடன் சண்டைக்குப் போனாள். “பியூலா ஒரு விஷயம் நீ புரிஞ்சுக்கணும்; துபாயில தனி வீடு பார்த்தா என்னோட மொத்த சம்பளமும் வீட்டு வாடகைக்கே சரியாப் போயிரும்; அதால தான் இந்த ஏற்பாடு. அப்புறம் அவங்க வாழ்க்கையில எது சரி? எது தப்புன்னு நாம யாரு தீர்மானிக்குறது! நம்ம புராணங்கள்லேயே அஞ்சு பேரோட மனைவியா வாழ்ந்த பாஞ்சாலிய, நம்ம நாட்டுல இப்பவும் தெய்வமா வணங்குறதில்லையா?
“அதோட அவங்களோட வாழ்க்கை, ஒழுக்கம் பற்றி எல்லாம் நாம ஏன் அலட்டிக் கணும்…..அவங்களுக்கு இது சாதாரணமா இருக்கலாம். அவங்களும் நம்மைப் போலவே பொழைக்க வந்துருக்கிறாங்க. அவங்க வருமானத்துக்கு தனியறைங்கிறது கட்டுபடியாகாத கனவா இருக்கலாம்… அவங்களுக்குள்ள செக்ஸ¤வல் ரிலேஷன் இருந்தாகனுமின்னு கட்டாயம் கூட இல்ல! அப்படியே இருந்தாலும் அதனால நமக்கென்ன போச்சு….” என்று ஏதேதோ சமாதானம் சொல்லி பியூலாவை அந்த அறையிலேயே தொடர்ந்து தங்க சம்மதிக்க வைத்தான்.
அந்த மூன்று பேருக்குமான உறவுகள் பற்றிய நிறைய கற்பனைகளுடனும் கதையாடல்களுடனும் நாட்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே நகர்ந்தது. சில நாட்களில் பிலிப்பினோக்கள் மூன்று பேருமே ஒரே அறையில் உறங்கினார்கள். சில நாட்களில் ஒரு ஆண் வரவேற்பறையிலும் மற்ற இருவரும் படுக்கை அறையிலுமாகப் படுத்துக் கொண்டார்கள். வரவேற்பறையில் படுக்கிற ஆண் அவ்வப்போது மாறினான் என்பது இதில் விஷேசம்.
அவர்களுக்குள்ளான உறவுகள் சீர்கெடுவதை வரவேற்பரை வாக்குவாதங்களிலிருந்து – அவர்களின் பேச்சு மொழி புரியாவிட்டாலும் – கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது. ஆண்கள் இருவரும் கடுமையாய் சண்டைபோட அந்தப் பெண் எந்தச் சலனமுமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு வெள்ளிக்கிழமை விடுமுறை தினத்தின் அதிகாலை அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பவர்களை போலீஸ் வந்து எழுப்பி அந்த பிலிப்பினோக்களில் ஒரு ஆண் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததைச் சொன்னபோது சிலீரென்றிரிந்தது.
மிச்சமிருக்கிற இரண்டு பேரையும் போலீஸ் கைது பண்ணிக் கொண்டு போக, கடைசி வரை அந்த மரணம் இவர்களுக்கு புதிராகவே இருந்து விட்டது. அவர்களுக்குள் இருந்த எந்த சிக்கல் ஒருத்தனை தற்கொலை வரைக் கொண்டு போனது என்கிற உண்மை இவர்களுக்குத் தெரியவே இல்லை. அந்தப் பெண்ணை இருவருமே காதலித்ததாகவும் அவளை யார் மனைவியாக்கிக் கொள்வது என்கிற தீராத பிரச்னையில் தான் அந்த தற்கொலையோ கொலையோ நடந்திருக்கு மென்பது மாதிரி நிறைய யூகங்களே அந்த பிராந்தியம் முழுவதும் உலவிற்று. அதற்கப்புறம் பியூலாவும் சுரேந்திரனும் ஷார்ஜாவில் தனிவீடு பார்த்து குடிபோய் விட்டார்கள்.
பியூலாராணியின் தொடர்ந்த உலுப்பலில் எழும்பி உட்கார்ந்து கஷ்டப்பட்டு இமைகளைப் பிரித்தான் சுரேந்திரன். ஒவ்வொரு நாள் காலையிலும் இப்படி அதிகாலை எழும்பி வேலைக்காக ஓட வேண்டி இருப்பதை நினைக்கும் போதும் அவனுக்கு இந்தியாவிற்கே திரும்பிப் போய் விட வேண்டு மென்று வெறி கிளம்பும். கொஞ்ச நேரம் தான். அப்புறம் எதிர்காலத் தேவைகளும் கடன் அட்டைகளும் கழுத்தில் கத்தி வைக்க நிதர்சனத்திற்குத் திரும்பி மறு பேச்சின்றி பாத்ரூமிற்கு எழுந்து போவது அவனுக்கு வாடிக்கை.
“இராத்திரி நேரத்தோட தூங்காம லேப் டாப்ல பாட்டும் விளையாட்டுமாய் பொழுதைப் போக்கி லேட்டாப் படுக்கப் போக வேண்டியது; அப்புறம் காலையில கண் விழிக்க கஷ்டப்பட்டு வாழ்க்கையை வெறுத்து வேதாந்தம் பேச வேண்டியது; தேவையா இது?” பியூலாவின் விமர்சனத்தை சட்டை செய்யாமல் குளியலறைக்கு எழுந்து போனான் அவன்.
“என்ன பியூலா இது? நேத்து நீ குளிச்சுட்டுத் தண்ணி புடுச்சு வைக்கலியா! நான் இப்ப எப்படிக் குளிக்கிறது?” குளியலறையிலிருந்து அவன் குரல் கொடுத்த பின்பு தான் அவளுக்கு நேற்று சாயங்காலம் குளித்து முடித்து விட்டு தண்ணீர் பிடித்து வைக்கத் தவறியது ஞாபகத்திற்கு வந்தது. இந்த ஊரில் கோடை காலத்தில் பெரிய பிரச்னை எப்போதுமே தண்ணீர் பிடித்ததும் உடனே குளித்துவிட முடியாது. பைப்பிலிருந்து வெளியாகும் நீர் சருமம் கருகும் கொதிநிலையில் இருக்கும். தண்ணீர் பிடித்து ஆறேழு மணி நேரமாவது ஆற வைத்த பின்புதான் குளிக்க முடியும். எதைத் தொட்டாலும் சுடும். ஏ.சி. இல்லாமல் ஒரு நிமிஷம் கூட வீட்டிலிருக்க முடியாது. இரவு பதினோரு மணிக்கு வெளியில் போனாலும் வெக்கை முகத்தில் அறையும். வேர்த்து ஒழுகும்.
அவசர அவசரமாய் ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ் கட்டிகளை அள்ளிக் கொண்டு போய் பக்கெட் தண்ணீரில் போட்டு அவை கரைந்ததும் அவனைக் குளிக்கச் சொன்னாள். ஷார்ஜாவிலும் துபாயிலும் பேச்சிலர்களாக அறைக்கு எட்டுப்பேர், பத்துப் பேர் என்று அடைந்து கிடப்பவர்களும், லேபர் கேம்ப்புகளில் தங்கியிருப்பவர்களும் எப்படிக் குளிப்பார்கள்? இப்படி பக்கெட்டுகளில் தண்ணீர் பிடித்து ஆறவைத்து குளிக்க வசதிப்படுமா அவர்களுக்கு? இந்த கொதி தண்ணீரீல் குளித்து விட்டுத் தானே வேலைகளுக்கு ஓடவேண்டும் என்று நினைத்தபோது நெஞ்சின் ஓரத்தில் அவர்களுக்காக ஒரு சிறு பரிதாபம் சுரந்தது.
பகலில் பொதுவாய் தெருவில் அதிகம் நடமாட்டமிருக்காது. ஆனால் இராத்திரியில் பனிரெண்டு ஒரு மணிக்குக் கூட ஆட்கள் சர்வசாதாரணமாக அலைந்து கொண்டிருப்பதை பியூலா அவளுக்குத் தூக்கம் வராத இரவுகளில் ஜன்னலின் வழியே பார்த்து வியந்திருக்கிறாள். இது தூங்காதவர்களின் நகரம் என்று நினைத்துக் கொள்வாள். அரபு நாடுகள் அனைத்தும் ஆண்களின் தேசமாயிருந்தது. எங்கு பார்த்தாலும் ஆண்கள்: ஆண் கள்; ஆண்கள் தான் நீக்கிமற நிறைந்திருக்கிறார்கள். அபூர்வமாய்த்தான் பெண்கள் தென்படுவார்கள். அதுவும் வியாழக்கிழமை சாயங்காலங்களிலும், விடுமுறை தினங்களிலும் கடைவீதிகளுக்குப் போனால் விலக இடமிருக்காது. புற்றிலிருந்து புறப்பட்டு வருகிற மழை ஈசல்கள் மாதிரி ஒவ்வொரு சந்திலிருந்தும் ஆண்கள் வந்துகொண்டே இருப்பார்கள். ஷார்ஜாவின் ரோலா ஸ்கொயர் முழுவதும் ஆண்களின் தலையாக நிரம்பி இந்த தேசமே மிகப்பெரிய சேவல் பண்ணையாய் தோற்றங் கொள்ளும் அவளுக்கு.
அரபு நாடுகளில் திருட்டுப் பயமென்பதே துளியும் இருக்காது என்று சொல்லக் கேட்டிருக்கிறாள். அதை உறுதிப் படுத்துவது போல் இங்குள்ள வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களுக்கு இரும்பு கிராதிகள் வைக்கப்படாததைப் பார்த்து இங்கு வந்த புதிதில் பியூலா பெரிதும் ஆச்சர்யப்பட்டிருக்கிறாள். ஆனால் அப்படியெல்லாம் ஒரேயடியாக சந்தோஷப்படவும் முடியாது என்று சமகால நிகழ்வுகள் சொல்கின்றன். வீடுகளில் நடக்கும் சின்னச் சின்ன திருட்டுக்கள் பற்றி இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப் படுகிறாள் அவள். துபாயில் சமீபத்தில் பூட்டியிருந்த ஒரு நகைக் கடையை காரால் மோதி உடைத்து உள்ளே புகுந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்களை கொள்ளைக்காரர்கள் அள்ளிப் போனதை தினசரிகளில் வாசித்து திகிலடைந்திருக்கிறாள்.
திருட்டு மட்டுமல்லாது பிச்சை எடுப்பதும் இங்கு சகஜமாகியிருக்கிறது. அவள் ஷார்ஜாவிற்கு வந்த புதிதில் பிச்சை எடுப்பவர்கள் யாரையும் பார்த்ததே இல்லை. ஆனால் இப்போதெல்லாம் கடை வீதிகளிலும் ஸப்-வேக்களிலும் குழந்தைகளும் முழுக்க கறுப்பு அங்கி அணிந்த பெண்களும் கையை நீட்டி பிச்சை கேட்பதை நிறையவே பார்க்கிறாள்.
ஒரு வழியாய் சுரேந்திரன் புறப்படத் தயாரானபோது அவனுடைய கைத்தொலைபேசிக்கு கம்பெனி டிரைவரிடமிருந்து மிஸ்ஸ¤டு கால் வந்துவிட்டது. போனில் பேசியபடி வேகமாய்ப் புறப்பட்டுப் போனான். அவ்வளவு தான். இப்போது கிளம்பிப் போகிறவன், இனி இரவு எட்டு எட்டரைக்கு மேல் தான் வீடு திரும்புவான். அதுவரைக்கும் அவளும் அவளின் தனிமையும் மட்டுமே! இந்த அறையே அவளுக்குச் சிறையாகத் தோன்றும். இரவே மூன்று வேளைக்குமான உணவையும் தயாரித்து முடித்து விடுவதால் பகலில் சமையல் வேலை கூட இருக்காது. துபாயில் இருக்கும் வரை இந்தப் பிரச்னை இல்லை. உடன் தங்கியிருந்த மலையாளப் பெண்ணிடம் அரட்டை அடிப்பதிலும் அவளின் குழந்தையுடன் விளையாடுவதிலும் நேரம் போவதே தெரியாது.
ஷார்ஜாவிற்கு வந்தபின்பு தான் தொலைக்காட்சி ஒன்றே ஒரே பொழுது போக்காய் மனசுக்குக் கொஞ்சமும் பிடிக்காத மலட்டு நிகழ்ச்சிகளையும், கட்சிச் சாயம் பூசிய செய்திகளையும், மில்லிமீட்டர் மில்லிமீட்டராய் நகரும் சீரியல்களையும் பார்த்துப் பார்த்து ஒரு கட்டத்தில் அதற்கே அடிமையாகிப் போனதை உணர்ந்தாள். ஒரு பதினைந்து இருபது நாட்களைப் போல் தமிழ்ச் சேனல் எதுவும் இவர்கள் வீட்டுத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகாதபோது பொழுதைக் கழிக்க திணறிப் போனாள்.
தமிழின் முக்கியத் தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் தங்களின் ஒளிபரப்பு அலைவரிசைகளிலும் திசைகளிலும் சிற்சில மாற்றங்கள் செய்தபோது இவர்களின் அடுக்குமாடிக் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த டிஷ் ஆண்ட்டனாக்கள் அதற்குத் தகுந்தாற் போல் டியூன் பண்ணப் படாததால் இவர்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் தமிழ்ச் சேனல்கள் எதுவுமே ஒளிபரப்பாகவில்லை. அந்த நாட்களில் சுரேந்திரனுடன் தினசரி சண்டைதான். அவனும் குடியிருப்பு அலுவலகத்தில் எவ்வளவோ முறையிட்டும் புகார் பண்ணியும் – கொஞ்சம் செலவு பிடிக்குமென்பதாலும், குடியிருப்பில் தமிழ்க் குடும்பங்கள் அதிகம் வசிக்காததாலும் – அவர்கள் எந்த முயற்சியும் செய்யாமல் சால்ஜாப்புகள் மட்டும் சொல்லி தட்டிக் கழித்ததில் நிறைய நாட்கள் ஓடிவிட்டன.
பியூலாவிற்கு பைத்தியம் பிடித்தது போலாகி விட்டது. புருஷனுடன் பேசுவதை சுத்தமாய் நிறுத்தி விட்டாள். அவன் மாற்று ஏற்பாடாக தமிழ்ப் பத்திரிக்கைகள் சிலதும் வாங்கிப் போட்டான். அவையும் அவளின் மீந்த பொழுதுகளைக் கடத்த போதுமானதாக இல்லை. அப்புறம் தான் பொழுதைப் போக்குவதற்கு பியூலா நல்ல வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்தாள். அவன் புறப்பட்டுப் போனதும் ஜன்னலுக்குப் பக்கத்தில் ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து வீதியில் நடப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.அற்புதமாய் பொழுது போனது. ஒவ்வொரு நிமிஷமும் வீதி புத்தம் புதிதாய் பல சுவாரஸ்யங்களை நிகழ்த்தியபடி நீண்டு கிடக்கிறது என்பது அவளுக்குப் புரிந்தது.
அவள் தங்கி இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு மிகவும் பரபரப்பான நாற்சந்திப்பின் ஒரு மூலையில் அமைந்திருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்புக்கு எதிர்த்தாற் போல் ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல். டை யும் கோட்டும் அணிந்த பெரிய பெரிய கனவான்கள் – பெரும்பாலும் அமெரிக்கா, ஆஸ்திரிலியா, ஐரோப்பா நாடுகளிலிருந்து – வந்து கொண்டும் போய்க் கொண்டும் எப்போதும் பரபரப்பாய் இருக்கும். ஹோட்டலுக்கருகில் இந்தியாவின் கிளை நிறுவனம் ஒன்றின் பிர மாண்டமான புத்தம் புதிய நகைக்கடை அமைக்கப்பட்டு அந்த இடத்திற்கே அழகும் பொலிவுமாய் ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது.
அபார்ட்மெண்ட்டை ஒட்டிய விசாலமான பிளாட்பாரத்தில் லேபர்கள் குவிந்து கிடப்பார்கள். அவர்களின் காலை நேரமென்பது அதிகாலை மூன்றரை நான்கு மணிக்கெல்லாம் தொடங்கி விடும். அதுவும் அவர்களில் ‘கல்லிவெல்லி’ ஆட்கள் என்றொரு பிரிவினர் இருக்கிறார்கள். இந்த தேசத்தில் வேலை செய்ய முறையான விசா இல்லாதவர்கள், விசா காலம் முடிந்து போனவர்கள், ஏஜெண்ட் களால் வேலை என்று விசிட் விசாவில் அழைத்து வரப்பட்டு அப்புறம் ஏமாற்றப்பட்டவர்கள், முறையான கம்பெனி விசாவில் வேலைக்கு வந்தும் ஒழுங்காய் சம்பளம் தரப்படாததாலோ, அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டோ அல்லது வேறு பிரச்னைகளாலோ அங்கிருந்து வெளியேறி காணாமல் போயி அப்புறம் ‘இந்த’ கூட்டத்தில் கலந்தவர்கள் எல்லோரையும் ‘கல்லிவெல்லி’ ஆட்கள் என்றுதான் அழைப்பார்கள்.
தினசரி போலீசுக்குப் பயந்தபடி, நிரந்தர வேலை ஏதுமின்றி கிடைக்கிற வேலைகளைச் செய்து வயிற்றைக் கழுவி, ஒன்றிரண்டு மிச்சம் பண்ணி ஊருக்கும் அனுப்பிவைத்து…என்று அவர்களின் தினப்பாடு மிகமிகத் திண்டாட்டமானது. காலை நேரத்தில் பியூலாராணி தங்கியிருக்கும் வீட்டின் முதல்மாடி ஜன்னலிலிருந்து பார்த்தால் அப்படிப் பட்ட ஆட்கள் நிறைய அலைந்து கொண்டிருப்பது தெரியும். சாப்பாட்டுப் பொட்டலத்தைக் கையிலும், கண்களில் ஏக்கத்தையும் சுமந்தபடி தரகர்களுக்குப் பின்னாலும், வந்து நிற்கும் வாகனங்களுக்குப் பின்னாலும் ஓடிஓடிப் போய் வேலை கேட்டுக் கொண்டிருப்பார்கள். காலை பதினோறு பனிரெண்டு மணி வரை அலைந்தும் வேலை கிடைக்காத வேதனையோடு சிலர் திரும்பிப் போவதையும் அவள் பார்த்திருக்கிறாள்.
விசாலமான பிளாட்பாரத்தை ஒட்டி வரிசையாய் சிறுசிறு கடைகளும், சூப்பர் மார்க்கெட்டும், கம்யூட்டர் உதிரி பாகங்கள் விற்கிற கடையும், மருத்துவ கிளினிக்குகளும் அமைந்திருக்கின்றன. அதுவும் எதை எடுத்தாலும் ஒரு திர்ஹாம் அல்லது இரண்டு திர்ஹாம் மட்டுமே விலையுள்ள பொருட்கள் விற்கும் கடையில் எப்போதும் கூட்டம் அப்பிக் கொண்டிருக்கும்.
சூப்பர் மார்க்கெட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய பெரிய குப்பைத் தொட்டிகளிலிருந்து சிலர் பேப்பர், அட்டைகள், குளிர்பான போத்தல்கள், பால்கவர், பிளாஸ்டிக் பொருட்கள் என்று மற்றவர்கள் பயன்படுத்தித் தூக்கி எறிந்தவைகளை பொறுக்கி சேகரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சர்யப் பட்டிருக்கிறாள். அதைவிட ஓடி ஓடி சம்பாதிக்கும் இவர்கள் காலையில் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை கண்ணுற நேர்ந்தபோது அப்படியே உறைந்து போனாள். எல்லோரும் ஆளுக்கொரு புரோட்டாவை வாங்கி அதை டீயில் முக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். புரோட்டாவை டீயில் முக்கிக் கூடவா சாப்பிட முடியும்? அதிர்ச்சியிலிருந்து மீள அனேக நாட்களானது அவளுக்கு. ஏழ்மையும் வறுமையும் எல்லா தேசங்களுக்கும் பொது போலிருக்கிறது.
அடுக்குமாடிக் குடியிருப்பின் இன்னொரு பக்கம் ஒரு மேம்பாலமும் அதை அடுத்து ஒரு அழகான மசூதியும் இருக்கின்றன. மசூதியில் வெள்ளிக் கிழமை நண்பகல் தொழுகை பார்க்க கோலாகோலமாய் இருக்கும். யாரும் முறைப்படுத்தாமலேயே ஒவ்வொருவரும் வரிசை வரிசையாய் தாங்கள் கையோடு கொண்டு வந்திருக்கும் பாயை விரித்து அமர்ந்து, தொழுகை தொடங்கியதும் எல்லோரும் ஒரே சமயத்தில் எழுவதும் குனிவதும் மடங்கி அமர்வதும் நெற்றிப் பொட்டு தரையில் பட விழுந்து வணங்கி எழுவதுமாய்……பார்க்கவே பரவசமாய் இருக்கும். மசூதி நிறைந்து அதன் சுற்றுவெளிகளும் நிரம்பி அதுவும் போதாமல் சாலைகளை ஒட்டிய பிளாட்பார்ம்களையும் ஆக்ரமித்து, அந்த நேரம், இடம் எல்லாம் ஆசீர்வதிக்கப் பட்டதாய்த் தோன்றும்.
கண்களைக் கொஞ்சம் எட்ட ஓட்டினால் அங்கங்கே நிறைய கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து கொண்டிருப்பது தெரியும். பார்த்திருக்க வளர்ந்து ஆளாகி விடும் பெண் பிள்ளைகள் மாதிரி எத்தனை வேகமாய் கட்டிடங்கள் வளர்கின்றன? தீப்பெட்டிகளை அடுக்கி வைப்பது போல் படபடவென்று மாடிகளை அடுக்கிக் கொண்டே போவதைப் பார்க்க பார்க்க இவளுக்கு ஆச்சர்யமாய் இருக்கும். ஊரிலெல்லாம் தளம் கான்கிரீட் போடுவதென்றால் சாரம் கட்டி, அதில் ஆட்கள் வரிசையாய் நின்றபடி, சட்டி சட்டியாய் கான்கிரீட் கலவையை மேலே அனுப்பி காலையிலிருந்து இரவு வரை போடுவதைப் பார்த்திருக்கிறாள்.
ஆனால் இங்கேயானால் இராட்சஷ மிஷின்களைக் கொண்டு வந்து – அதன் உயரமான ஒருமுனை யானையின் தும்பிக்கை மாதிரியே இருக்கிறது; நீரள்ளி ஆசீர் வதிக்கும் கோயில் யானை மாதிரி கண்மூடி கண் திறப்பதற்குள் அது, ட்ரக்குகளில் வரும் கான்கிரீட் கலவையை உறிஞ்சி மேல் தளத்தில் துப்பி விட – சில மணி நேரங்களிலேயே தளவேலை முடிந்து அடுத்த வேலைக்கு நகர்ந்து விடுகிறார்கள். கட்டிடம் கட்டும் பணியில் தான் எத்தனை விதமான இயந்திரங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன நாள்தோறும்.
சாலையில் ஓடும் வாகனங்களைக் கவனிப்பது அவளின் அடுத்த சுவாரஸ்யம்! எத்தனை எத்தனை விதவிதமான அழகழகான வாகனங்கள்! ஒருநாள் வெள்ளை வெளேரென்று பனிக்கரடி மாதிரி பளபளவென்று நீ…ள…மா…ன…காரொன்றைப் பார்த்தாள். அரபு ஷேக்குகள் பெரும்பாலும் அவர்களைப் போலவே ஓங்கு தாங்கென்றிருக்கும் பெரிய அளவிலான வாகனங்களிலேயே பயணிக்கிறார்கள். காரணம் பெரும்பாலும் அரபு ஷேக்குகளின் குடும்பம் பெரிதாக இருக்கும். பூங்காக்களிலும் ஷாப்பிங் செண்டர்களிலும் ஒவ்வொரு அரபி ஆணுக்குப் பின்னாலும் சம வயதுள்ள மூன்று நான்கு பெண்களும் துறுதுறுவென்ற குழந்தைகளும் போவதை அவளே பார்த்திருக்கிறாள்.அரபிக்களின் உடை பார்க்க அழகாய் இருக்கும்.
ஆண்கள் கழுத்து முதல் பாதம் வரைக்குமான தொளதொளவென்ற பளீரென்ற வெள்ளையில் அங்கி அணிந்து, தலையில் சிவப்புப் பூக்கள் போட்ட துண்டை விரித்து அதன் மேல் கறுப்பு வண்ணத்தில் இரண்டடுக்கு பிரிமனை மாதிரியான வட்ட வடிவ பின்னலும் அதிலிருந்து தொங்கும் அழகான குஞ்சங்களுமாய் காட்சி அளிப்பார்கள். அரபிக்களின் அந்த உடை சுரேந்திரனுக்கும் ரொம்பப் பிடிக்கும். துபாய் பெஸ்டிவல் சமயத்தில் நடந்த பொருட்காட்சியில் அரபி உடை அணிந்து போட்டோ எல்லாம் எடுத்து வைத்திருக்கிறான். பெண்களும் கறுப்பு அங்கியும் தலையில் கண்கள் மட்டும் வெளித் தெரியும் படியான கறுப்பு பர்தாவும் அணிந்திருப்பார்கள்.
அவ்வப்போது ஆம்புலன்சுகள் அலறலோடு ஓடும் போது அவளுக்கு பதட்டமாய் இருக்கும். இந்த ஊரில் விபத்துக்களும் நோயாளிகளும் அதிகம் என்றும் மருத்துவம் ரொம்பக் காஸ்ட்லி என்றும் அப்படியும் அத்தனை சிறப்பான சிகிச்சை கிடைக்காது என்றும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறாள். சுரேந்திரன் அடிக்கடி சொல்வதுண்டு – அவன் வேலை பார்க்கும் இடத்தில் யாருக்காவது சிறு நோயென்றாலும் உடனே ஊருக்குத்தான் கிளம்பி விடுவார்கள் என்றும் ஆஸ்பத்திரிக்கு அதுவும் அரசு மருத்துவமனைகளுக்குப் போகச் சொன்னாலே அலறி விடுகிறார்கள் என்றும்.
அடுத்து அவள் சாலையில் அதிகம் சந்திப்பது தீயனைப்பு வண்டிகளை. இந்த ஊரில் அடிக்கடி எங்காவது எப்படி என்று தெரியாமலே தீப்பற்றிக் கொள்கிறது. பியூலாவே பலதடவைகள் அவள் வீட்டு ஜன்னலிலிருந்து அடுக்குமாடிக் கட்டிடங்களில் கரும்புகை சூழ மஞ்சளும் சிவப்பும் கலந்த ஜுவாலையுடன் தீ கொழுந்து விட்டெரிவதைப் பார்த்து பதறி, கொஞ்ச நேரத்திலேயே ஆம்புலன்ஸ¤ம் தீ அணைப்பு வண்டியும் விரைவதைப் பார்த்து ஆறுதலடைந்திருக்கிறாள்.
பத்து நாட்களுக்கு முன்னால் தான், அவள் தங்கியிருக்கும் கட்டிடத்திலிருந்து பதினைந்து கட்டிடங்கள் தள்ளி இருக்கும் ஒரு கட்டிடத்தில் ஒரு மோசமான தீ விபத்து நடந்து, அந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட வீடு நடுஇரவில் தீப்பற்றிக் கொண்டதில் ஒரு புருஷனும் மனைவியும் அவர்களின் இரண்டு சிறுவயதுக் குழந்தைகளும் கருகிப் போயினர்.
இவளும் போய் அந்தக் கோரக் காட்சியைப் பார்த்து வந்தாள். அன்றைக்கு முழுவதும் பொட்டுத் தூக்கமில்லை. எத்தனை கனவுகளோடு பிழைக்க வந்திருப்பார்கள்? இப்படி கரிக்கட்டை யாய் திரும்பிப் போனால் அதைப் பார்த்து அவர்களின் குடும்பம் என்ன பாடுபடும்? நினைக்க நினைக்க வாழ்வின் நிச்சயமின்மை முகத்திலறைய “நாம இப்பவே இந்திவாவுக்குத் திரும்பப் போயிடலாங்க…..” என்று பியூலா புலம்பத் தொடங்கி விட்டாள்.அவளை சமாதானப் படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்குள் சுரேந்திரனுக்கு போதும் போது மென்றாகிவிட்டது.
மேம்பாலத்திற்கு அடியில் அதன் நிழலில் சிலர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள் எப்போதும். அவர்களில் ஒருத்தனை அவள் அடிக்கடி அங்கு பார்ப்பாள்.அவனுக்கு முப்பது முப்பத்திரெண்டு வயதிருக்கும்.மிக நேர்த்தியாக உடை அணிந்திருப்பான். மற்றவர்கள் மாதிரி அவன் நிழலுக்கு ஒதுங்கிப் போபவனாகத் தெரிவதில்லை.
நண்பகல் தொழுகை முடிந்த நேரத்திலிருந்து சாயங்காலம் நான்கு அல்லது ஐந்து மணி வரை அங்கேயே தான் உட்கார்ந்திருப்பான். எதுவும் செய்யாமல் ஒரே இடத்தில் தொடர்ந்து மணிக்கணக்கில் எப்படி அவனால் உட்கார்ந்திருக்க முடிகிறது என்று அவளுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஒரு வேளை அவளைப் போலவே அவனும் பொழுது போகாமல் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறானோ என்று நினைத்துக் கொள்வாள்..
அவனைப் பற்றிய நிறைய கேள்விகளுக்கு அவளுக்கு விடை தெரியவில்லை. அவன் யார்? எங்கு வேலை பார்க்கிறான்? வேலைவெட்டி எதுவுமில்லையா அவனுக்கு? வேலைக்காக அழைத்து வரப்பட்டு ஏமாற்றப்பட்டு விட்டவனா? சொந்த நாட்டிற்கும் திரும்பிப் போக முடியாமல் இங்கும் போக்கிடமில்லாமல் அலைகிறவனா?கிடைத்த வேலையைச் செய்கிற கல்லிவெல்லி ஆசாமியா? இங்கெல்லாம் கோடைக் காலங்களில் சில அலுவலகங்களும் வணிக நிறுவனங்களும் நண் பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இயங்குவதில்லை. அந்த மாதிரி ஓரிடத்தில் வேலை செய்பவனாக இருக்குமோ? ஆனால் இவனை அந்த நேரம் கடந்தும் சில தினங்களில் பார்த்திருக்கிறாளே! மேலும் அப்படிப்பட்டவகள் தாங்கள் தங்கி இருக்கும் அறைகளுக்குப் போய்த் தானே ஓய்வெடுப்பார்கள்! இவனுக்கு அப்படி ஒரு அறையே இல்லாமல் ஒருவேளை காரில் வசிப்பவனோ?
யு.ஏ.இ.யில் சில பேச்சிலர்கள் தங்களின் காரையே வசிப்பிடமாகக் கொண்டு அதிலேயே தங்கி, உண்டு, உறங்கி வாழ்கிறார்கள் என்று பத்திரிக்கைகளில் படித்து அதிர்ந்து போயிருக்கிறாள். டார்மென்ட்றி மாதிரி வசதியுள்ள இடங்களில் குளித்து, மற்ற கடன்களை முடித்துக் கொண்டு பகல் நேரங்களிலெல்லாம் காரிலேயே சுற்றிக் கொண்டிருந்து விட்டு இரவு ஏதாவது இலவச பார்க்கிங்கில் காரை நிறுத்தி காருக்குள்ளேயே உறங்கி விடுவார்களாம்.
இந்தியாவில் இதேபோல வெகு நேரம் காருக்குள் இருந்த சிலர் ஏ.சி.யிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடால் செயலிழந்து மூச்சுத் திணறி இறந்து போன செய்தியை அறிந்ததும் இங்கு காரில் வாழ்பவர்கள் முக்கியமாக அந்த மேம்பால இளைஞன் தான் ஞாபகத் திற்கு வந்தான். கோடைகாலத்தில் இங்கு இரவிலும் வெக்கை இருக்கும். ஏ.சி. இல்லாமல் தூங்கவே முடியாது. அவர்கள் கார்பன் மோனாக்சைடிலிருந்து எப்படி சமாளிக்கிறார்கள்? கடவுளே! சில பேருக்கு ஏன் இத்தனை மோசமான வாழ்வனுபவம்!
`தினசரி பார்க்கிற மேம்பால நிழல் இளைஞனைக் கடந்த சில தினங்களாக அந்த இடத்தில் பார்க்க முடியவில்லை. எங்கு போனான் என்றும் தெரியவில்லை. பொதுவாய் கல்லிவெல்லி ஆட்கள் ஊருக்குப் போவதென்று முடிவெடுத்தால் விமானப் பயணத்திற்கான பணம் சேர்ந்ததும் போலிசில் சரணடைந்து விடுவார்களாம். போலீஸ் அவர்களை ஓரிரு மாதங்கள் சிறையில் வைத்திருந்து விட்டு அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்து விடுமாம்.
இவனும் அப்படி கிளம்பிப் போயிருப்பானோ? தினசரி அவனைப் பார்த்துப் பார்த்து கண்கள் பழகி விட்டதால் அவன் மேல் ஒரு இனம் புரியாத பாசம் ஏற்பட்டு விட்டது. அவன் இல்லாமல் அந்த இடம் வெறுமையாய் வெறிச் சோடிக் கிடப்பது போலிருந்தது. அவன் எங்கு போனான் என்பதற்கான விடை சில தினங்களுக்கு முந்தைய செய்தித்தாளில் அவளுக்குக் கிடைத்தது.
ஆங்கிலச் செய்தித் தாளெல்லாம் அவள் வாசிப்பதில்லை. சாயங்காலம் சப்பாத்திக்கு மாவு உருட்டிப் போடுவதற்காக பழைய பேப்பரை எடுத்து விரித்தபோது அதிலிருந்த ஒரு செய்தி வசீகரிக்க அதை வாசித்தவள் அப்படியே அதிர்ந்து போய் விட்டாள். செய்தி இது தான்:
துபாயிலிருக்கிற ஒரு இடுகாட்டில் பிணங்களை அடக்கம் செய்வதற்கு முன்னால் ‘அதுகளை’ப் போட்டுக் கழுவுவதற்காக ஒரு அறை இருக்கிறதாம். அன்றைக்கு இராத்திரி அந்தப் பக்கமாய் ரோந்து சுற்றிய போலீஸ்காரனுக்கு அந்த பிணவறையில் ஏதோ நடமாட்டமிருப்பதாய் சந்தேகம் வர, உள்ளே போய் கையிலிருந்த சிகரெட் லைட்டரை எரியவிட்டுப் பார்த்திருக்கிறான். பிணங்களைப் போட்டுக் கழுவும் பிளாட்பாரத்தின் மேல் நிர்வாணமாக ஓர் ஆணும் பெண்ணும் ஆலிங்கனம் செய்து கொண்டிருந்தார்களாம். அவர்களிருவரும் கைது செய்யப் பட்டிருந்தார்கள்.அவர்களை அங்கு அனுமதித்த பிணவறைக் காவலாளி தப்பித்து ஓடிவிட்டானாம். கைதானவர்களின் போட்டோக்களும் போட்டிருந்தார்கள்.
அந்த ஆணும் பெண்ணும் தங்கள் அந்தரங்கம் கேவலப் படுத்தப்பட்ட அதிர்ச்சியில் குமுறி அழுதபடி யிருந்தார்கள். அதிலிருந்த ஆணின் முகம் பியூலாவிற்கு பரிச்சயமானதாயிருக்க கொஞ்சம் உற்றுக் கவனித்தவள் உறைந்து போனாள். அது மேம்பாலத்து நிழலில் ஓய்வெடுக்கும் இளைஞன்.

(தயாராகிக் கொண்டிருக்கிற நவீன விருட்சம் 84வது இதழில் வெளியாகும் சிறுகதை)

இரு கவிதைகள்

அவசரக் கூட்டம்

உறுப்பினர் வருகை
சந்தேகமே
நாளை நடத்தலாம்
அவசரக் கூட்டம்
நாளை என்ன
நடந்திடுமோ
மறுநாள் ஒருநாள்
கணக்கில் வை
பிறிதொரு நாளும்
காரியம் ரத்து
நானும் நீயும்
கூடிடலாம்
இருவர் சூழலும்
இணைய மறுப்பின்
ஏண்டா இப்படி அபசகுனம்?
தீர்மானங்கள் நிறைவேறும்
கவலை வேண்டாம் மாவீரா
கூட்டம் நடந்ததாய்க் கணக்கில் வை.
அன்னம், கிளி, மயில், மேகம்…….ஆனந்த்
நாய்க்குட்டியைத்
தூதுவிட்டுநித்யாவைக் கவர்ந்தவன் யார்
நம்ம சிவலிங்கம்

ஜோடிக் கிளியைப் பரிசளித்து
ராமகிருஷ்ணன் கவர்ந்துவிட்டது யாரை
நம்ம மீனாட்சியை
புத்திசாலிப் பசங்க

இந்த மதன்தான் தப்பு செய்து விட்டான்
கீர்த்தியைக் கவர்ந்திழுக்க
ஆனந்த்தைத் தூதுவிட்டான்
அபாயத்தில் குரைக்கவும் தெரியாத
நெல்மணிகளைக் கொத்தவும் பயனிலாத
அசட்டு ஆனந்தைக் கண்டவுடன்

செருப்பைக் காடடினாள் கீர்த்தி
செருப்பு விடு தூது பற்றி
ஆனந்த் படித்த இலக்கியம்
வாழ்வோடியைந்து போனதே மதன்.

என் இனிய இளம்கவி நண்பரே

அன்றைக்குநீங்களும் நானும் சேர்ந்துகுடித்தோம் வழக்கம்போலஎப்பொழுதுமேநம் சந்திப்புஇப்படித்தான் தொடங்கும்(அனேகமாகஇன்றைய தினம்குடிக்காத இளம்கவிஞர்களே இல்லைதான்)
நிறைபோதையில்கட்டற்ற சுதந்திரவெளியில்மிதந்து கொண்டிருந்தோம்
இதுதான்பிரச்னையேஇல்லையா
உங்களுக்குஏன்தான்அந்த யோசனை தோன்றியதோஅந்தத் தோழரின் வீட்டுக்குகூட்டிக்கொண்டு போனதில்அரசியல் இல்லையென்று நம்பமுடியவில்லை
ஒரு காலத்தில்நீங்கள் எல்லோரும்ஒன்றாக இருந்தவர்கள்தாம்
உங்களை வைத்துத்தான்அவரைத் தெரியும்ஏற்கனவேதோழரும் குடித்திருந்தார்
மேலும்நாம் குடித்தோம்ஏதோ ஒரு புள்ளியில்பேச்சுத் தொடங்கியது
பிறகுஅது சர்ச்சையாக மாறியது
உங்களைவிடவும் அமைப்பு சார்ந்தஅந்த இளம்கவிஞருக்குத் தரப்படும்முக்கியத்துவத்தைகேள்வி கேட்டிருக்கக் கூடாது நான்
இது இயல்புதானே அவர்களுக்கு(கள்ளின் இன்னொருபெயர்உண்மைவிளம்பி தெரியுமாகுடித்திருக்கையில்ஒளிவு மறைவு கிடையாது)
தோழருக்குநியாயம் பேசமுடியவில்லை
தவிரவும் அவர்நிதானத்தில் இல்லை
உங்களிடம் காட்டமுடியாத கோபத்தைஎன்னிடம் பிரயோகித்தார்புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டைஎன்மேல் விட்டெறிந்தார்
வேட்டிதீப்பிடித்ததுகையை முறுக்கியிருக்கிறார்இப்படியெல்லாம் நடத்தஎப்படி மனம் வந்ததோ
எவ்வளவுஇனிய மனிதர்
குடிதான்இதுபோல மாற்றியிருக்க வேண்டும்
நீங்கள் எழுந்துவந்துவேட்டியை மாற்றியிருக்கிறீர்கள்
தோழரிடம் காட்டமுடியாத எரிச்சலைஎன்னிடம் காட்டினீர்கள்
சொத்துசொத்து என்றுசாத்தினீர்கள்நீங்கள் வந்த வேகத்தில்காலை மிதித்திருக்கிறீர்கள் போல
வலது பாதத்தில்பெருவிரலிலிருந்து மூன்று விரல்பூமியில் ஊன்ற முடியவில்லை
இடது கையை தோழர் முறுக்கியதில்நடு/மோதிர/சுண்டுவிரல் மூன்றும்மடக்க முடியவில்லைசுளுக்கெடுப்பவர் தடவிவிட்டும்சரியாகவில்லை இன்னும்
உங்கள் மன்னிப்புக் கடிதத்துக்குஎன்ன பதில் எழுத
உள்ளபடியே எவ்வளவுநல்லபிள்ளை நீங்கள்
என்ன அருமையானகவிஞன்
குடிக்கிற ஒவ்வொரு சமயத்தில்ஏன் இந்த மூர்க்கம்தோழரைப் பார்க்கப் போயிருக்கதேவையே இல்லை
அவருக்கும் உங்களுக்கும் வழக்கென்றால்நீங்கள்தாம் தீர்த்துக்கொள்ள வேண்டும்
என்னைக் கருவியாக்கயாருக்கும் உரிமையில்லை
உங்கள் இருவரின் வன்முறையும்ஒருவகை மனநோய்தான்
புரிந்து கொள்ளலாம்பொறுத்துக்கொள்ள முடியாது
தயவுசெய்துசரிப்படுத்திக் கொள்ளுங்கள்
குடியை கேவலப்படுத்தாதீர்கள்
உங்களையாவது கவிஞனென்றுஉலகம் மன்னிக்கும்
தோழர் ஒருநாள்மாட்டிக்கொள்ளத்தான் போகிறார்
உங்கள் பிரச்னையேனும்பழுதில்லைதோழர் பாடுதான்திண்டாட்டம்
தேவி பகவதிஉங்கள் இருவர் பைத்தியத்தையும்தீர்த்துவைக்கட்டும்
மண்டைக்காட்டு பகவதிமனசுவைத்துத் தெளிவிக்கட்டும்
எனக்குஎங்கள் சோட்டாணிக்கரை பகவதி இருக்கிறாள்