நான்கு உயிர்களும்

றக்கவே முடியாதபடி மனதில் ஆழப் பதிந்து போனது அந்த வருஷ ‘ஹோலிப் பண்டிகை’. ஹோலி; ஹோலி என்று ஜாலியாய்க் கூவியபடி ஆண்களும் பெண்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை வாரி இறைத்தும், சித்தாள்ப் பெண்கள் ஹோலிப் பாடல்கள் பாடி என்ஜீனியர்களிடமும் ஆபிஸர்களிடமும் காசு கேட்டுக் கலாய்த்துக் கொண்டும் சந்தோஷமாய் அலைந்து கொண்டிருந்த போது, விதி எல்லோருடைய முகங்களிலும் கரியைப் பூசி அழகு பார்த்த கறுப்பு தினமானது அன்றைக்கு.
ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டங்களும் மகிழ்ச்சி ஆரவாரங்களும் ஒரு பக்கம் உற்சாகமாக அரங்கேறிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பால்ராஜும், நரேந்திரனும் மறுநாள் போட வேண்டிய சிலாப் கான்கிரிட்டுக்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாய் இருந்தார்கள். அப்போது திடீரென்று வேலை ஆட்களின் கூடரங்களிலிருந்து அழுகையும் கூச்சலுமாய் சத்தம் கேட்கத் தொடங்கவும் ஏதோ விபரீதம் என்று புரிந்து இருவரும் கூடாரம் நோக்கி ஓடினார்கள்.
வேலை ஆட்களின் உபயோகத்திற்காகக் கட்டப் பட்டிருந்த தண்ணீர் தொட்டியின் இரண்டு சுவர்கள் அப்படியே சரிந்து அப்போது குளித்துக் கொண்டும் தண்ணீர் பிடித்துக் கொண்டு மிருந்தவர்களின் மீது விழுந்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் விழுந்த சுவற்றிற்கு அடியில் மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். பார்த்த மாத்திரத்திலேயே எல்லோருக்கும் நெஞ்சு பதறியது. தண்ணீர்த் தொட்டியில் நீர் நிரப்பிய டேங்க்கர் லாரி ஒன்று அவசர அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்தது.
சூழல் முழுக்க பதட்டமும் அழுகையும் அவசர ஓட்டங்களுமாய் இருந்தது. எல்லோரும் தங்கள் தங்கள் குழந்தை குட்டிகளும், உறவினர்களும் பத்திரமாய் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டார்கள். தைரியமான சிலர், இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை வெளி யில் இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். விழாது நின்று கொண்டிருந்த மற்ற இரண்டு சுவர்களும் எப்போதும் விழுந்து விடலாம் என்பது போல் நிறைய விரிசல்களுடன் பயமுறுத்திக் கொண்டிருந்தன.
“பத்துப் பேர்ருக்கு மேல செத்துட்டாங்க போலருக்கு….”
“இன்னும் கூட இருக்கும்கிறாங்க; குறைஞ்சது இருபது பேர் காலின்னு பேசிக்கிறாங்க”
“அதெல்லாம் சும்மா யாரோ பீதியக் கெளப்பி விடுறாங்க; உயிர்ச் சேதமெல்லாம் ஒண்ணுமில்ல; கொஞ்சப் பேருக்கு அடி பட்டுருக்கு அவ்வளவு தான்….”
பலரும் பலவிதமாய்க் கூடிக்கூடிப் பேசினார்கள். உண்மை நிலவரம் யாருக்கும் தெரிய வில்லை. எல்லாம் அனுமானங்கள், கைகால் முளைத்து கதைகளாகி உலவத் தொடங்கின.
அரசு அலுவலர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணி அது.
ஹைதராபாத் கம்பெனிக்கு டெண்டர் கிடைத்து அப்போது தான் வேலைகள் தொடங்கி இருந்தன.பெரும்பாலான கட்டிடத் தொழிலாளர்கள் ஹைதராபாத்திலிருருந்தே வரவழைக்கப்பட்டு, அவர்களும் வேலைத்தளத்தி லேயே கூடாரங்கள் அமைத்துத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அந்தத் தொழிலாளர்களின் உபயோகத்திற்காகக் கட்டப் பட்டிருந்த தண்ணீர்த் தொட்டிதான், டேங்க்கர் லாரி மூலம் தண்ணீர் நிரப்பப் பட்டுக் கொண்டிருந்தபோது இடிந்து விழுந்து விட்டது. செய்தி கேள்விப் பட்டதும் கம்பெனியின் முக்கியப் பொறுப்பிலிருந்தவர்கள் எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்தார்கள்.
“ஏதாவது வண்டி ஏற்பாடு பண்ணுங்க; அடிபட்டவங்கள ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போகலாம்…..” யாரோ ஒருத்தர் சத்தம் போடவும், சிலர் ரோட்டை வழிமறித்து அப்போது அந்த வழியாய்ப் போன சரக்குகள் ஏற்றும் மினிவேன் ஒன்றை நிறுத்தினார்கள். கைகால் நசுங்கிய, மண்டையில் அடிபட்ட மற்றும் பயத்திலேயே மயக்கமாகி விட்ட என்று மொத்தம் பதினெட்டு உடல்களை வேனில் வரிசையாகப் படுக்க வைத்தார்கள்.
வேனின் டிரைவர் முனகிக் கொண்டிருந்தான். “இதென்ன அக்கிரமமா இருக்கு? வண்டி யெல்லாம் ஒரே இரத்தமா வேற ஆக்குறாங்களே! எங்க ஓனருக்கு யாரு பதில் சொல்றது?”
“கொஞ்சம் உதவி பண்ணுப்பா, உன் வேனுக்கு உண்டான வாடகைய செட்டில் பண்ணீடு றோம்; உன் வண்டியையும் அப்புறம் மேல நாங்களே கழுவிக் கொடுத்துடுறோம்…” என்று அவனை சமாதானப் படுத்தினார் திவாகர் ராவ் – கம்பெனியின் அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜர்.
அப்புறம் அவனிடம் “இது விபத்துக் கேஸா இருக்குறதால பிரைவேட் ஆஸ்பத்திரியில எடுத்துக்க மாட்டாங்க….அதால நேரா ஜி.ஹெச்சுக்கே கொண்டு போயிரு….” என்றார்.
“ஏன் செலவாகும்னு பாக்குறீங்களாக்கும்! அவ்வளவு தூரம் ஜி.ஹெச்சுக்குக் கொண்டு போனா, போற வழியிலேயே பாதி உயிர் போயிடும்; அதால பக்கத்துல இருக்குற தனியார் ஆஸ்பத்திரிக்கே கொண்டு போகச் சொல்லுங்க…” உண்ர்ச்சி மேலிட உரிமையாய்ச் சொன்னார் அடிபட்டுக் கிடப்பவர்களின் உறவினர் ஒருவர்.
அவர் சொன்னதைக் கேட்டதும் திவாகரின் முகம் சட்டென்று விழுந்து விட்டது. ”பணம் பெரிசில்ல; எத்தனை கோடி செலவானாலும் கம்பெனி மூலம் நான் ஏற்பாடு பண்றேன்; எங்க வேனுமின்னாலும் கொண்டு போங்க , நமக்கு உயிர் பிழைக்குறது தான் முக்கியம்…” என்றார்.
தேறும் என்று நிச்சயமாய்த் தெரிந்தவர்களை மட்டும் தங்களின் மருத்துவமனையில் அனுமதித்துக் கொண்டு, மற்ற இழுபறி கேஸ்களை தங்களின் ஆம்புலன்ஸ் வண்டியிலேயே ஜி.ஹெச். அனுப்பிவைத்தது அருகிலிருந்த தனியார் மருத்துவமனை.
”அதுவும் சரிதான்; எல்லோரையும் ஒரே எடத்துல வச்சு சிகிச்சை குடுத்தா என்னமோ ஏதோன்னு பார்க்குறவங்களுக்கெல்லாம் பதட்ட மாயிடாதா….” என்று தங்களுக்குள்ளாகவே சமாதானம் சொல்லிக் கொண்டார்கள்.
விபத்து நடந்த இடத்தில் உடைந்த வளையல் துண்டுகளும், அறுந்த செருப்புகளும், நசுங்கிக் கிடந்த பாத்திரங்களும், சிதறிக் கிடந்த பொம்மைகளும், அங்கங்கே திட்டுத் திட்டாய் உறைந்து கிடந்த இரத்தத் துளிகளும் பார்க்கும் யாருக்கும் சிலீரென்ற ஓர் உணர்வை ஊட்டி
வாழ்தலின் நிச்சயமின்மையை உணர்த்திக் கொண்டிருந்தன.
போலீஸ் வந்து கூட்டத்தைக் கலைத்தது. தீயணைப்புப் படையினர் வந்து விழுந்து கிடந்த சுவர்களுக்கடியில் இன்னும் வேறு யாரேனும் மீட்கப்படாமல் மாட்டிக் கொண்டிருக்கிறார்களா என்று பரிசோதித்தார்கள். மேலும் விரிசல் விழுந்திருந்த சுவர்களுக்கருகில் பொதுஜனம் யாரும் போகாமல் பார்த்துக் கொண்டார்கள்.
“தண்ணித் தொட்டி கட்டியிருக்கிற இலட்சணத்தப் பாருங்க; அஸ்திவாரமே தோண்டாம தரைக்கு மேல அப்படியே ஏனோதானோன்னு கட்டியிருக்குறாங்க…. “
“உடைஞ்சு கிடக்குற சுவர் எதுலயாவது உயிரோட்டமிருக்கா பாருங்க…. காஃபிக்கு சர்க்கரை போடுறது மாதிரி, சிமெண்ட்ட ஸ்பூன்ல அளந்து போட்டுல்ல கட்டிருப்பாங்க போலருக்கு; இப்படிக் கெட்டுனா சுவர் எப்படி ஸ்ட்ராங்கா இருக்கும்? அதான் வாயப் பொழந்துருச்சு….”
“கவர்மெண்ட் என்ஞீனியர்கள் எல்லாம் என்னத்தப் புடுங்குனாங்கன்னே தெரியல….!”
“அதுங்களா, எச்சக்கல நாயிங்க…..கான்ட்ராக்ட்காரன்ட்ட காச வாங்கிக்கிட்டு வாலாட்டிக்கிட்டு எதையும் கண்டுக்காம இருந்துருக்குங்க…..” வேடிக்கை பார்க்கும் பொதுஜனம் போகிறபோக்கில் காண்ட்ராக்டரின் வேலைத்தரத்தை விமர்சித்துப் போனது.
மருத்துவமனை வட்டாரத்திலிருந்து சேதாராங்கள் பற்றிய செய்தி கசியத் தொடங்கியது. ஒரு பதினைந்து வயதுப் பெண், ஐம்பது வயது மூதாட்டி, ஆறு மற்றும் எட்டு வயதில் இரண்டு சிறுவர்கள் இறந்து போயிருந்தார்கள். ஐந்து பேர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் அபாயக் கட்டத்தைத் தாண்டி விட்டிருந்தார்கள்.
“இந்த வேலைக்கு இன்சார்ஸு யாருங்க?” மிடுக்காய் இருந்த இன்ஸ்பெக்டர் லோக நாதன் அதிகாரமாய்க் கேட்டார். நாற்பது வயதிலேயே அறுபது வயதுக்குரிய தளர்வுடனிருந்த நரேந்திரன் “நான் தாங்க …”என்றபடி இன்ஸ்பெக்டரின் அருகில் போனார்.தன்னைக் கைது பண்ணி, ஜெயிலில் அடைத்து சித்ரவதை பண்ணுவார்களோ என்ற பயமும் கலக்கமும் அவரின் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.
“வாங்க ஸ்டேஷனுக்குப் போயிட்டு வந்துடலாம்…” தோளில் கை போட்டபடி இன்ஸ்பெக்டர் மிக மரியாதையாகவே அழைத்துப் போனார். ”பயப்படாதீங்க; நீங்க என்ன கொலையா பண்ணீட்டீங்க! எதிபாராம நடந்த விபத்துக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? ஒரே ஒரு ஸ்டேட்மெண்ட் மட்டும் குடுத்துட்டு திரும்பிடலாம்…. வில்லங்கமில்லாம எப்படி ஸ்டேட்மெண்ட் கொடுக்குறதுன்னும் நானே சொல்லித் தாறேன்….” நரேந்திரனின் காதுகளுக்குள் கிசுகிசுத்த இன்ஸ்பெக்டரின் கண்களுக்குள் கரன்ஸிகள் படபடத்தன. இது அவருக்கு கொழுத்த வாய்ப்பு!
ரீஜினல் டைரக்டர் சேதுராமன் அவசரமாய் அவர்களுக்கு அருகில் வந்து “நீங்க ஸ்டேஷன்ல போயி இருங்க; ஆனா ஸ்டேட்மெண்ட் எதுவும் கொடுக்க வேண்டாம்…. நான் மினிஸ்ட்டர்ட்டப் பேசிட்டு நம்ம வக்கீலையும் அழைச்சுக்கிட்டு ஸ்டேஷனுக்கு வர்றேன்; அப்புறம் மத்ததப் பார்த்துக்கலாம்…” என்றார். நரேந்திரன் பயம் தெளிந்து இன்ஸ்பெக்டரைத் தொடர்ந்தார்.
போலீஸைச் சமாளிப்பது பெரிய விஷயமாய் இருக்கவில்லை. மினிஸ்டரின் போன்காலும் கொஞ்சம் பணமும் போதுமானதாக இருந்தது. ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டங் களில் வேலை ஆட்கள் குடித்துவிட்டு தண்ணீர்த் தொட்டியின் மேலேறி ஆட்டம் போட்டதால் தான் சுவர் விழுந்து விட்டதென்று பதிந்து கொண்டார்கள். மினிஸ்டரின் உத்தரவின் பேரில் அந்தப் பகுதி எம்.எல்.ஏ. ஆச்சரியமாய் அதிகக் கூட்டமும் ஆரவாரமும் இல்லாமல் வந்தார். துக்கம் வழிகிற முகத்துடன் காரிலிருந்து இறங்கி, வேலைஆட்களிடம் போய் ஆறுதலாய் ஏதோ பேசினார். வேலை ஆட்களுக்கும் மௌனமாய்க் கண்ணீருடன் கேட்டுக் கொண்டார்கள். அப்புறம் விபத்து நடந்த பகுதியைச் சுற்றிப் பார்த்து விட்டு விருட்டென்று கிளம்பிப் போய்விட்டார்.
அவர் கிளம்பிப் போன அடுத்த நிமிடமே, அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல, அந்தப் பகுதி சுத்தமாய்த் துடைத்தெடுக்கப்பட்டது. விபத்து நடந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இரத்தம் தோய்ந்த, விரிசல் கண்டிருந்த சுவர்களும் அப்புறப் படுத்தப் பட்டன. ஆஸ்பத்திரியில் அபாயக் கட்டத்திலிருந்தவர்களும் இயல்பு நிலைமைக்குத் திரும்பி விட்டார்களென்ற செய்தி வந்ததும் ரீஜினல் டைரக்டருக்கு மூச்சு சீரானது.
விபத்து பற்றிய செய்தியை பெரிது படுத்தாமலிருக்க, பத்திரிக்கைக் காரர்களிடம் தான் பெரிதும் போராட வேண்டியிருந்தது; பெரும் தொகையும் செலவழிக்க வேண்டியிருந்தது. கடைசியில் செய்தியை இருட்டடிப்ப்பு செய்ய முடியாதென்றும் , முக்கியத்துவ மில்லாமல் மூன்றாம் நான்காம் பக்கங்களில் பொடி எழுத்துக்களில் கம்பெனியின் பெயரின்றி வெளியிடவும் ஒத்துக் கொண்டு அதன் படியே வெளியிட்டார்கள்.பணம் பத்திரிக்கை வரையும் பாயும் என்பது நிரூபணமானது.
அடுத்தநாள் களைப்பும் தூக்கமுமாய் அலுவலக அறையில் திவாகர் ராவும் சேது ராமனும் உட்கார்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, போலீஸின் இன்னொரு பிரிவிலிருந்து தொப்பியும் தொப்பையுமாய் இருவர் வந்து விபத்து பற்றிய விபரங்களை க் கேட்டார்கள். பேச்சில் கறாரான சிடுசிடுப்பு இருந்தது.
“போலீஸுக்குத்தான் ஏற்கெனவே ஸ்டேட்மெண்ட் கொடுத்து பார்மாலிட்டிஸும் பண்ணியாச்சே…..” அலுப்புடன் சொன்னார் திவாகர்ராவ்.
“அது லோக்கல் போலீஸ். நாங்க ….” வந்தவர் முடிப்பதற்குள் சேதுராமன் எழுந்து வந்து அவர்களை பக்கத்து அறைக்குள் அழைத்துப் போனார். கொஞ்ச நேரத்திலேயே சிரித்தபடி அவர்கள் வெளியேறினர். போகிறபோக்கில் “நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க; எல்லாத்தையும் நாங்க பார்த்துக்குறோம்… ஏதாவது உதவி வேணுமின்னா தயங்காமப் போன் பண்ணுங்க…” என்று அசடு வழிந்து போனார்கள். சேதுராமனும் திவாகரும் இலேசாய்ச் சிரித்துக் கொண்டார்கள்.
அவர்கள் கிளம்பிப் போன கொஞ்ச நேரத்தில் தும்பைப் பூப்போல வெள்ளை வெளேரென்று வேஷ்டியும் சட்டையும், மிக நிளமான துண்டும் அணிந்திருந்த ஒருவர் தன் பின்னால் ஆறேழுபேர் புடைசூழ புயல் போல வேகமாய் வந்தார். வந்ததுமே ஏக வசனத்தில் ஆரம்பித்தார்.
“இங்க எவன்டா கான்ட்ராக்டர்?” யாரும் அவருக்கு பதில் சொல்லா திருக்கவும் அவர் பாட்டுக்குப் பேசத் தொடங்கினார். “தொழிலாளி உயிருன்னா உங்களுக்கு மயிருக்குச் சமானமாயி டுச்சா… நாலு பேர் தான் செத்துட்டாங்கன்னு ஏன் பொய்த் தகவல் தர்றீங்க? கை, கால் எழந்து நடைப் பிணமா வாழப் போறவங்களுக்கு உங்களோட பதிலு என்ன? கவர்மெண்ட் தந்த சிமெண்ட்ட எல்லாம் வெளிமார்க்கெட்டுல வித்துட்டு சாம்பலக் கலந்து தண்ணித் தொட்டி கட்டுனதால தான் அது சரிஞ்சிடிச்சுன்னு தெரியாதா எங்களுக்கு! இதை நான் சும்மா விடப் போறதில்ல; சாலை மறியல் பண்ணி இந்த விஷயத்தைக் கோட்டை வரைக்கும் கொண்டுபோவேன்….” தாம்தீமென்று குதித்தார்.
அதே வேகத்தில் தன் பரிவாரங்களுடன் போய் வேலை ஆட்களைச் சந்தித்து, “உங்கள எல்லோரும் ஏமாத்தப் பாக்குறாங்க; உங்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடுவேன்….” என்றபடி நடுவீதியில் நின்றபடி மீட்டீங் போலப் பேசத் தொடங்கினார்.
“இதென்ன ஸார் புதுக் குழப்பம்! சாலை மறியல் அது இதுன்னு பயமுறுத்துறார். கூப்புட்டு ஏதாவது குடுத்து அனுப்பலாமா?” திவாகர் பதறினார்.
“இவனெல்லாம் வெத்து வேட்டு… சும்மா ஃபிலிம் காட்டுறான்….போனதடவை வார்டு எலக்சன்ல நின்னு டெபாஸிட் காலி; இவனுக மாதிரி ஆளுக மிரட்டலுக்கெல்லாம் பயந்து குடுக்க ஆரம்பிச்சா, கம்பெனிய வித்தாலும் குடுத்து மாளாது; ஈசல் மாதிரி வந்துக்கிட்டே இருப்பா னுங்க…. அதனால கண்டுக்காம விட்டுடு; அவனே குதுச்சு அடங்கி காணாமப் போயிடுவான்; அப்படியும் போகலைன்னா, நம்ம போலீஸ் ப்ரண்டுக எதுக்கு இருக்குறாங்க! கூப்பிட்டுச் சொன்னா புடிச்சுட்டுப் போயி பொய்கேசப் போட்டு நாலு தட்டுத் தட்டி அனுப்புனா, அப்புறம் இந்தப் பக்கம் தலை வச்சே படுக்க மாட்டாங்க….” என்றார் சேதுராமன்.
அப்படியே தான் நடந்தது. “தொழிலாளத் தோழர்களே….” என்று ஆரம்பித்து அரை மணிநேரம் பேசினார். அவருடன் வந்த கைத்தடிகள் மட்டும் அவ்வப்போது கைதட்டினார்கள். வேலை ஆட்கள் யாரும் அவர் பேச்சில் ஆர்வம் காட்டாது ஒதுங்கி நிற்க, இங்கு எதுவும் பெயராது என்று தெரிந்து ஆளுக்கொரு பக்கமாய்ச் சிதறிப் போனார்கள்.
லேபர் ஆபிஸிலிருந்து இரண்டு பேர் வந்தார்கள். ஏகப்பட்ட கேள்விகள்! இறந்தவர் களின் பெயர்கள் எதுவும் தினசரி ரோல் ரிஜிஸ்ட்டரிலேயே இல்லை. யாருக்கும் எந்த விதமான விபத்துக் காப்பீடும் எடுக்கப் பட்டிருக்கவில்லை. திவாகர்ராவ் முழிமுழி என்று முழித்தார். சேதுராமன் தான் சாமர்த்தியமாய்ப் பேசிச் சமாளித்து, அலுவலகத்தில் வந்து அவர்களைக் கவனிப் பதாய் உறுதி அளித்து அனுப்பி வைத்தார்.
போஸ்ட்மார்ட்டம் முடிந்து செத்துப் போனவர்களின் உடல்கள் ஜி.ஹெச்.சிலிருந்து வருகிற செய்தி கிடைத்ததும் சேதுராமன் பரபரப்பானார்.
“பாடிய எந்தக் காரணத்துக்காகவும் வேலை ஆட்களின் கூடாரங்களுக்கு கொண்டு வரக் கூடாது.ஆஸ்பத்திரியில் இருந்தபடியே சுடுகாட்டிற்கு கொண்டு போய் இறுதிச் சடங்குகள நிறைவேற்றி விடுங்கள்.பாடிய இங்கு கொண்டு வந்தா பலரும் பலவிதமாய் கிளப்பி விடுவார்கள். அப்புறம் வேறு பிரச்சினைகள் வரலாம்….” சேதுராமன் கண்டிப்பாய் சொல்லி விட்டு அவசர அவ சரமாய் கிளம்பிப் போனார்.
வெட்டியானிடம் சொல்லி குழி எல்லாம் வெட்டி தயாராக வைத்திருந்தார்கள். மாலை 5 மணிக்கெல்லாம் நான்கு உடல்களும் அமரர் ஊர்தி மூலம் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டன. திவாகர் ராவிற்கு அப்பாடா என்று இருந்தது.இன்றைக்காவது சீக்கிரம் வீட்டிற்குப் போய் கொஞ்சம் தூங்கலாம் என்று நினைத்துக் கொண்டார்.ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை என்று
அதற்கப்புறம் நிகழ்ந்தவை உணர்த்தின.
இறுதி சடங்குகள் செய்ய சுடுகாட்டிற்கு வர, வேலை ஆட்கள் மறுத்தார்கள்.தங்களின் பெரிய மேஸ்திரி ஹைதராபாத்திலிருந்து வந்த பின்பு தான் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப் போம் என்று முரண்டு பண்ணினார்கள். சுடுகாட்டிற்கு வெளியே பிணங்களை இறக்கி விட்டு அமரர் ஊர்தி சென்று விட கம்பெனி ஆட்கள் பிணங்களுக்கு காவல் இருந்தனர்.திவாகர் ராவும் மற்றும் சிலரும் வேலை ஆட்களை சமாதானப் படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தனர்.
“காலைலருந்து இவங்க எதைப்பத்தியும் பேசாம அமைதியா இருந்துட்டு இப்பப் போயி பெரிய மேஸ்திரி வரணும்னு சொல்றாங்கன்னா அதனோட உள்ளர்த்தம் வேற. செத்துப் போனவங்களுக்கு நஷ்ட ஈடு பத்தி பேசி தீர்மானிக்க, பிணங்களை அப்புறப் படுத்தும் முன்பேயே நினைக்கிறார்கள்.அதை வெளிப்படையா கேட்க கம்பெனி விசுவாசம் தடுக்குறதால பெரிய மேஸ்திரி வரணும்னு ஜால்சாப்பு சொல்றாங்க…..” நரேந்திரன் திவாகர் ராவிடம் சொல்ல அவர் சேதுராமனை அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டார்.
“நஷ்ட ஈடு பத்தி எல்லாம் நானோ நீயோ தீர்மானிக்க முடியாது.மேனேஜிங் டைரக்டர் தான் தீர்மானிக்கணும். நான் அங்க இருந்தா அவங்க என்கிட்ட நஷ்ட ஈடு பத்தி கேட்பாங்கன்னு தான் நான் அப்பவே ஆபிஸீக்கு வந்துட்டேன்.எப்படியாவது சமாளித்து சுமுகமாய் பிணங்களை அடக்கம் செய்கிற வழியைப் பார்……” என்று சிடுசிடுத்தார் சேதுராமன்.
இருட்டிக் கொண்டு வந்தது. குண்டும் குழியும் மனித நரல்களாயும் கிடக்கிற முள் பாதைக்குள் பிணங்களை எப்படி எடுத்துச் செல்வது என்று எல்லோருக்கும் கவலை மேலிட்டது. பிணங்கள் வேறு சிதைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கி இருந்தன.
இரவு பதினோறு மணியைத் தாண்டியும் வேலை ஆட்கள் மசிவதாய்த் தெரிய வில்லை. பெரிய மேஸ்திரி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.இந்தா இருக்கிற ஹைதராபாத் திலிருந்து வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்? அவருக்கு தகவல் சொல்லப்பட்டதா? ஒருவேளை கம்பெனி அவரைப் போகக் கூடாதென்று ஹைதராபாத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டதா? ஒன்றும் உறுதியாய்த் தெரியவில்லை. மீண்டும் ரீஜினல் டைரக்டர் சேதுராமனைத் தொடர்பு கொள்ள அவர் ஏகப்பட்ட உஷ்ணத்தில் கத்தினார்.
“இதைக் கூட சமாளிக்க துப்பில்லைனா நீ என்ன அட்மினிஸ்ட்ரேஷன் மானேஜர்? எம்.டி. கிட்ட நஷ்ட ஈடு பத்தி பேசிட்டேன்.அவர் தலைக்கு பத்தாயிரமோ பதினைஞ்சாயிரமோ கம்பெனி சார்புல கொடுக்கலாம்ங்கிறார். செத்துப் போனவங்க யாருக்கும் இன்ஸீரன்ஸ் கூட நம்ம பண்ணியிருக்கல. இதை எல்லாம் இப்பவே அவங்களுக்குச் சொன்னா என்னை நாற அடிச்சிடு வானுங்க. மெதுமெதுவாத் தான் சொல்லி சம்மதிக்க வைக்கணும்…..” என்று சிடுசிடுத்தவர் கொஞ்சம் கோபம் தணிந்து சொன்னார்.
“எப்படியாச்சும் அவங்களை சுடுகாட்டிற்குக் கொண்டு போயிடுங்க. நான் அங்க வந்து அவங்க கிட்ட பேசிப் பார்க்கிறேன்…” என்று சொல்லி போனை வைத்தார்.
“பிணம் தனியாக இருக்கிறது; பெரிய மேஸ்திரி வரும்வரை பிணங்களுக்கு அருகி லாவது போய் காத்திருக்கலாம்…..” என்று பேசி ஒரு வழியாய் வேலை ஆட்களை எல்லாம் சமா
தானப் படுத்தி சுடுகாட்டிற்கு கொண்டு வந்தார் திவாகர்ராவ்.
சேதுராமன் வந்ததும் வேலை ஆட்களிடம் “ஏன் இப்படிப் ப்ண்ணுகிறீர்கள்? எங்களுக்கும் துக்கமாகத்தான் இருக்கிறது. போட்டோகிராபரை வைத்து போட்டோ எடுத்துக்
கொள்வோம். உங்கள் பெரிய மேஸ்திரிக்கு காட்டிக் கொள்ளுங்கள்…” என்று கூறி கையோடு
கூட்டி வந்திருந்த போட்டோ கிராபரின் மூலம் போட்டோக்கள் எடுத்துத் தள்ளினார்.
அப்புறமும் வேலை ஆட்கள் விரைத்துக் கொண்டு தான் நின்றார்கள்.சேதுராமனின் சமாளிப்புகளை செவிமடுக்கத் தயாரின்றி திரும்பிக் கொண்டார்கள்.அப்புறம் தான் அவர் காரிலிருந்து அந்த பெட்டியை இறக்கினார்.
எல்லோருடைய கண்களிலும் தூக்கத்தையும் துக்கத்தையும் மீறி ஒரு பிரகாசம் ஒளிர்ந்தது. காரிலிருந்து இறங்கிய பெட்டியில் உயர்ரக மதுவகைகள் பாட்டில் பாட்டிலாய் அடுக்கப்பட்டிருந்தன.
“எல்லோருக்கும் குடுங்கப்பா. குடிச்சு மனசை ஆத்திக்கிட்டு பெரிய மேஸ்திரிக்கு காத்திருப்போம்…..”திவாகரைப் பார்த்து கண்சிமிட்டியபடி சொன்னார்.
ஆளுக்கொரு பாட்டிலுடன் ஒதுங்கினார்கள்.குடித்து முடித்து வட்டமாய் உட்கார்ந்து குழறலாய்ப் பேசினார்கள். இதை எல்லாம் நமுட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சேதுராமன்.
“பிணம் நாத்தமெடுக்கத் தொடங்கியிருச்சு. இன்னும் எதுக்கு இதுங்களை வச்சு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கனும்; குழிக்குள்ள எறக்கி மண்ணத் தள்ளுங்கப்பா….” என்று ஒரு கூட்டம் அபிப்ராயம் சொல்ல, இன்னொரு கூட்டம் அவனுடன் சண்டைக்குப் போனது.
“பெரிய மேஸ்திரி வரணும்; அதுவரைக்கும் எந்தக் காரியமும் பண்ணக் கூடாது…. பேசித் தீர்க்காமப் பிணத்தப் புதைச்சாச்சுன்னா அப்புறம் ஒத்தப் பைசா கூடக் குடுக்காம கம்பெனி நம்மல ஏமாத்திடும்…..”
“பெரிய மேஸ்திரி என்ன பெரிய புடுங்கியா? ஆக்ஸிடெண்ட் நடந்து ரெண்டு நாளாகுது, இன்னும் வந்த பாடில்ல; அவன் வந்து மட்டும் என்ன பண்ணப் போறான்! கம்பெனிக்கு சாதகமாத்தான் பேசப் போறான்……” ஆளாளுக்கு அடித்துக் கொள்ளத் தொடங்கினார்கள். அவர்களை விலக்கி விடப் போன அலுவலக ஆட்களை தடுத்து நிறுத்தினார் சேதுராமன்.
“சண்டை போடட்டும்; அப்புறம் தான் பிரச்னை ஒரு முடிவிற்கு வரும்….” என்றார் குரூரமாய்ச் சிரித்தபடி. சண்டை போட்டபடியே ஒரு கூட்டம் பிணங்களை எல்லாம் ஏற்கெனவே வெட்டி வைத்திருந்த குழிகளுக்குள் தள்ளி மண் பொட்டு மூடினார்கள். காரியங்கள் எல்லாம் போதையிலேயே மளமளவென்று நடந்தேறின.
“எப்படி சுலபமா முடிச்சுட்டேன் பார்த்தியா?” தன் சாமர்த்தியத்தை தானே ரசித்தபடி திவாகரிடம் சொன்னார் சேதுராமன்.திவாகர்ராவிற்குத் தான் தொழிலாளர்களின் மீது பச்சா
தாபமும் கோபமும் ஏற்பட்டது. போதை தெளியாதவர்கள் சுடுகாட்டிலேயே விழுந்து கிடக்க
மற்றவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்.
— முற்றும்.

ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..

சிறுகதை

ஷார்ஜாவின் அதிகாலை 04:30 மணி; முதலில் டைம்பீஸில் அலாரம் அடித்தது. சுரேந்திரன் எழும்பவில்லை. ஏற்கெனவே முழிப்பு வந்து இன்னும் ஏன் அலாரம் அடிக்கவில்லை என்ற கேள்வியுடன் புரண்டு கொண்டிருந்த பியூலாராணி தான் அலாரத்தை நிறுத்தினாள். மீண்டும் 4:40க்கு கைத்தொலை பேசியில் அலாரம் அடித்தது. அப்போதும் அவன் விழிக்க வில்லை.
இம்முறையும் பியூலா தான் எழுந்து அலாரத்தை அணைத்தாள். சரியாக அணைத்திருக் கிறோமா என்று விளக்கைப் போட்டு சரிபார்த்துக் கொண்டாள். ஏனென்றால் கைத்தொலைபேசியில் அலாரம் சரியாக அணைக்கப்படாவிட்டால் ஒவ்வொரு பத்து நிமிஷத்திற்கொரு முறை அலறித் தொலைக்கும். அசந்து தூங்குபவனைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாக இருந்தது. தூக்கம் எத்தனை பெரிய வரம்! அவளுக்குத் தான் எவ்வளவு முயன்றும் அந்த வரம் வசப்படுவதே இல்லை. அவள் ஆழ்ந்து தூங்கி அனேக நாட்களாகி விட்டது.
மசூதியிலிருந்து அதிகாலைத் தொழுகைக்கான ‘பாங்கு’ ஒலிக்கத் தொடங்கிய போது இலேசாய் புரண்டு படுத்தான். இனிமேல் இவனை உறங்க விட்டால் காலதாமதமாகி கம்பெனி வண்டி இவனை விட்டு விட்டுப் போய் விடும் என்பதால் தூங்குபவனைத் தட்டி எழுப்பினாள். “ப்ளீஸ் பியூலா; இன்னொரு அஞ்சு நிமிஷம் மட்டும் தூங்க விடு…..” என்று கெஞ்சினான் கண்களைத் திறக்காமலேயே. “இப்பவே ரொம்ப நேர மாயிருச்சு; உங்க டிரைவர் உங்கள விட்டுட்டுத்தான் போகப் போறான்…..” என்றபடி அவசரப் படுத்தினாள்.
ஷார்ஜாவிலிருந்து துபாயில் இவன் வேலைக்குப் போக வேண்டிய இடம் 20கி.மீ. தூரத்துக்குள் தான் இருக்கும். அங்கங்கே அகாலமாய் குறுக்கிடும் ரவுண்டபட்களைத் தவிர்த்து விட்டால் நேரான, அகல மான, நேர்த்தியான சாலைகள் தான்; எத்தனை மெதுவாய் ஓட்டினாலும் 15 – 20 நிமிட பயண தூரம் தான். ஆனாலும் காலை 7 மணி டூட்டிக்கு இவனுக்கு 5:30 மணிக் கெல்லாம் வண்டி வந்து விடும். அதில் கொஞ்சம் தாமதமானாலும் ஷார்ஜா – துபாய் சாலையில் வாகன நெரிசல் தொடங்கி, உரிய நேரத்திற்கு வேலைக்குப் போக முடியாது.
அடிக்கடி அவன் பியூலாவிடம் சொல்வதுண்டு. “உங்கப்பா நம்ம கல்யாணத்திற்கு மாப்பிள்ளை ஊர்வலம் வைக்காத குறைக்கு இந்த ஊர்ல அப்பப்ப என்னை ஊர்வலம் மாதிரித்தான் கூட்டிட்டுப் போறானுங்க….”
துபாயில் வேலை பார்க்கும் நிறையப் பேர், அங்கு ஏறிக் கொண்டிருக்கும் வீட்டு வாடகையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஷார்ஜாவிற்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டு விட்டதாலும், இங்கு கார் வாங்குவது மிகவும் கட்டுபடி ஆகக்கூடிய செலவு – ஒரு வருஷ வீட்டு வாடகைக்கு ஆகுற காசில் புத்தம் புதிய கார் வாங்கி விடலாம்; அதுவும் வங்கிக் கடனில் மிகச் சுலபமாக வாங்கி, கம்பெனிகள் தருகிற டிரான்ஸ் போர்ட் அலவன்ஸிலேயே மாதத் தவணையும் பெட்ரோல் செலவும் போக கொஞ்சம் மிச்சமும் ஆகும் – என்பதாலும் ஷார்ஜா- துபாய் சாலையில் டிராபிக் ஜாம் எப்போதும் தலையைத் தின்னும் பிரச்னை தான்.
எல்லோரும் ஷார்ஜாவில் வந்து குவிவதால் இங்கும் வீட்டு வாடகை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது. அதனால் இப்போதெல்லாம் ஷார்ஜாவிற்குப் பக்கத்திலுள்ள அஜ்மானுக்குக் குடியேறத் தொடங்கி இருக்கிறார்கள். அஜ்மான் – சென்னைக்குப் பக்கத்திலிருக்கும் பாண்டிச்சேரி மாதிரி; சாராயம் சல்லிசாய்க் கிடைக்கும் இடம். ஷார்ஜாவில் தடை செய்யப் பட்டிருக்கும் மது அஜ்மானில் ஆறாய் ஓடு மென்பது ஒரு விசேஷம். அஜ்மானுக்கப்புறம் போனால் கடலில் தான் விழவேண்டி இருக்கும்.
ஆரம்பத்தில் பியூலாவும் சுரேந்திரனும் கூட துபாயில் தான் தங்கி இருந்தார்கள். மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஒரு அபார்ட்மெண்ட்டில் ஷேரிங் முறையில், ஒரு படுக்கை அறையை இவர்கள் பகிர்ந்து கொள்ள, இன்னொரு படுக்கை அறையில் ஒரு மலையாளத் தம்பதி அவர்களின் இரண்டு வயதுப் பெண் குழந்தையுடனும், மூன்றாவது படுக்கை அறையில் இரண்டு பிலிப்பினோ ஆண்களும் தங்கி இருந்தார்கள். இங்கெல்லாம் ஷேரிங் குடியிருப்புகள் சகஜம் தானென்றாலும் நிறைய சகிப்புத் தன்மையும் மற்றவர்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாத மனநிலையும் வேண்டும்.
ஒவ்வொரு படுக்கை அறைக்கும் தனித்தனி கழிவறைகள் இருந்ததால் அதன் சுத்தம் அத்தனை கவலைப் படும்படி இல்லை. ஆனால் எல்லோருக்கும் பொதுவான வரவேற்பறை மற்றும் சமையலறைப் பராமரிப்புத் தான் பியூலாவால் கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியாததாய் இருந்தது. அதுவும் சமையலறைக்குள் போனாலே அவளுக்கு குமட்டிக் கொண்டு வரும். “தனி வீடு பார்த்துப் போயிடலாங்க…..” என்ற அவளின் நச்சரிப்புக்கு ஆற்றமாட்டாமல், அவள் சமையலறைப் பக்கமே அதிகம் போகாதபடிக்கு சுரேந்திரன் ஹோட்டலிலிருந்து உணவை வரவழைத்து கொடுத்து விடுவான்.
ஒரு இரண்டு மாதங்கள் ஓடி இருக்கும். பிலிப்பினோ ஆண்கள் தங்களுடன் வசிக்க ஒரு பெண்ணைக் கொண்டு வந்தார்கள். “இந்த கண்றாவிகளை எல்லாம் பார்த்துக்கிட்டு என்னால இருக்க முடியாது. ஒண்ணு தனி வீடு பாருங்க; இல்லையின்னா என்னை ஊருக்கு அனுப்பி வச்சுருங்க…..” பியூலா சுரேந்திரனுடன் சண்டைக்குப் போனாள். “பியூலா ஒரு விஷயம் நீ புரிஞ்சுக்கணும்; துபாயில தனி வீடு பார்த்தா என்னோட மொத்த சம்பளமும் வீட்டு வாடகைக்கே சரியாப் போயிரும்; அதால தான் இந்த ஏற்பாடு. அப்புறம் அவங்க வாழ்க்கையில எது சரி? எது தப்புன்னு நாம யாரு தீர்மானிக்குறது! நம்ம புராணங்கள்லேயே அஞ்சு பேரோட மனைவியா வாழ்ந்த பாஞ்சாலிய, நம்ம நாட்டுல இப்பவும் தெய்வமா வணங்குறதில்லையா?
“அதோட அவங்களோட வாழ்க்கை, ஒழுக்கம் பற்றி எல்லாம் நாம ஏன் அலட்டிக் கணும்…..அவங்களுக்கு இது சாதாரணமா இருக்கலாம். அவங்களும் நம்மைப் போலவே பொழைக்க வந்துருக்கிறாங்க. அவங்க வருமானத்துக்கு தனியறைங்கிறது கட்டுபடியாகாத கனவா இருக்கலாம்… அவங்களுக்குள்ள செக்ஸ¤வல் ரிலேஷன் இருந்தாகனுமின்னு கட்டாயம் கூட இல்ல! அப்படியே இருந்தாலும் அதனால நமக்கென்ன போச்சு….” என்று ஏதேதோ சமாதானம் சொல்லி பியூலாவை அந்த அறையிலேயே தொடர்ந்து தங்க சம்மதிக்க வைத்தான்.
அந்த மூன்று பேருக்குமான உறவுகள் பற்றிய நிறைய கற்பனைகளுடனும் கதையாடல்களுடனும் நாட்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே நகர்ந்தது. சில நாட்களில் பிலிப்பினோக்கள் மூன்று பேருமே ஒரே அறையில் உறங்கினார்கள். சில நாட்களில் ஒரு ஆண் வரவேற்பறையிலும் மற்ற இருவரும் படுக்கை அறையிலுமாகப் படுத்துக் கொண்டார்கள். வரவேற்பறையில் படுக்கிற ஆண் அவ்வப்போது மாறினான் என்பது இதில் விஷேசம்.
அவர்களுக்குள்ளான உறவுகள் சீர்கெடுவதை வரவேற்பரை வாக்குவாதங்களிலிருந்து – அவர்களின் பேச்சு மொழி புரியாவிட்டாலும் – கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது. ஆண்கள் இருவரும் கடுமையாய் சண்டைபோட அந்தப் பெண் எந்தச் சலனமுமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு வெள்ளிக்கிழமை விடுமுறை தினத்தின் அதிகாலை அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பவர்களை போலீஸ் வந்து எழுப்பி அந்த பிலிப்பினோக்களில் ஒரு ஆண் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததைச் சொன்னபோது சிலீரென்றிரிந்தது.
மிச்சமிருக்கிற இரண்டு பேரையும் போலீஸ் கைது பண்ணிக் கொண்டு போக, கடைசி வரை அந்த மரணம் இவர்களுக்கு புதிராகவே இருந்து விட்டது. அவர்களுக்குள் இருந்த எந்த சிக்கல் ஒருத்தனை தற்கொலை வரைக் கொண்டு போனது என்கிற உண்மை இவர்களுக்குத் தெரியவே இல்லை. அந்தப் பெண்ணை இருவருமே காதலித்ததாகவும் அவளை யார் மனைவியாக்கிக் கொள்வது என்கிற தீராத பிரச்னையில் தான் அந்த தற்கொலையோ கொலையோ நடந்திருக்கு மென்பது மாதிரி நிறைய யூகங்களே அந்த பிராந்தியம் முழுவதும் உலவிற்று. அதற்கப்புறம் பியூலாவும் சுரேந்திரனும் ஷார்ஜாவில் தனிவீடு பார்த்து குடிபோய் விட்டார்கள்.
பியூலாராணியின் தொடர்ந்த உலுப்பலில் எழும்பி உட்கார்ந்து கஷ்டப்பட்டு இமைகளைப் பிரித்தான் சுரேந்திரன். ஒவ்வொரு நாள் காலையிலும் இப்படி அதிகாலை எழும்பி வேலைக்காக ஓட வேண்டி இருப்பதை நினைக்கும் போதும் அவனுக்கு இந்தியாவிற்கே திரும்பிப் போய் விட வேண்டு மென்று வெறி கிளம்பும். கொஞ்ச நேரம் தான். அப்புறம் எதிர்காலத் தேவைகளும் கடன் அட்டைகளும் கழுத்தில் கத்தி வைக்க நிதர்சனத்திற்குத் திரும்பி மறு பேச்சின்றி பாத்ரூமிற்கு எழுந்து போவது அவனுக்கு வாடிக்கை.
“இராத்திரி நேரத்தோட தூங்காம லேப் டாப்ல பாட்டும் விளையாட்டுமாய் பொழுதைப் போக்கி லேட்டாப் படுக்கப் போக வேண்டியது; அப்புறம் காலையில கண் விழிக்க கஷ்டப்பட்டு வாழ்க்கையை வெறுத்து வேதாந்தம் பேச வேண்டியது; தேவையா இது?” பியூலாவின் விமர்சனத்தை சட்டை செய்யாமல் குளியலறைக்கு எழுந்து போனான் அவன்.
“என்ன பியூலா இது? நேத்து நீ குளிச்சுட்டுத் தண்ணி புடுச்சு வைக்கலியா! நான் இப்ப எப்படிக் குளிக்கிறது?” குளியலறையிலிருந்து அவன் குரல் கொடுத்த பின்பு தான் அவளுக்கு நேற்று சாயங்காலம் குளித்து முடித்து விட்டு தண்ணீர் பிடித்து வைக்கத் தவறியது ஞாபகத்திற்கு வந்தது. இந்த ஊரில் கோடை காலத்தில் பெரிய பிரச்னை எப்போதுமே தண்ணீர் பிடித்ததும் உடனே குளித்துவிட முடியாது. பைப்பிலிருந்து வெளியாகும் நீர் சருமம் கருகும் கொதிநிலையில் இருக்கும். தண்ணீர் பிடித்து ஆறேழு மணி நேரமாவது ஆற வைத்த பின்புதான் குளிக்க முடியும். எதைத் தொட்டாலும் சுடும். ஏ.சி. இல்லாமல் ஒரு நிமிஷம் கூட வீட்டிலிருக்க முடியாது. இரவு பதினோரு மணிக்கு வெளியில் போனாலும் வெக்கை முகத்தில் அறையும். வேர்த்து ஒழுகும்.
அவசர அவசரமாய் ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ் கட்டிகளை அள்ளிக் கொண்டு போய் பக்கெட் தண்ணீரில் போட்டு அவை கரைந்ததும் அவனைக் குளிக்கச் சொன்னாள். ஷார்ஜாவிலும் துபாயிலும் பேச்சிலர்களாக அறைக்கு எட்டுப்பேர், பத்துப் பேர் என்று அடைந்து கிடப்பவர்களும், லேபர் கேம்ப்புகளில் தங்கியிருப்பவர்களும் எப்படிக் குளிப்பார்கள்? இப்படி பக்கெட்டுகளில் தண்ணீர் பிடித்து ஆறவைத்து குளிக்க வசதிப்படுமா அவர்களுக்கு? இந்த கொதி தண்ணீரீல் குளித்து விட்டுத் தானே வேலைகளுக்கு ஓடவேண்டும் என்று நினைத்தபோது நெஞ்சின் ஓரத்தில் அவர்களுக்காக ஒரு சிறு பரிதாபம் சுரந்தது.
பகலில் பொதுவாய் தெருவில் அதிகம் நடமாட்டமிருக்காது. ஆனால் இராத்திரியில் பனிரெண்டு ஒரு மணிக்குக் கூட ஆட்கள் சர்வசாதாரணமாக அலைந்து கொண்டிருப்பதை பியூலா அவளுக்குத் தூக்கம் வராத இரவுகளில் ஜன்னலின் வழியே பார்த்து வியந்திருக்கிறாள். இது தூங்காதவர்களின் நகரம் என்று நினைத்துக் கொள்வாள். அரபு நாடுகள் அனைத்தும் ஆண்களின் தேசமாயிருந்தது. எங்கு பார்த்தாலும் ஆண்கள்: ஆண் கள்; ஆண்கள் தான் நீக்கிமற நிறைந்திருக்கிறார்கள். அபூர்வமாய்த்தான் பெண்கள் தென்படுவார்கள். அதுவும் வியாழக்கிழமை சாயங்காலங்களிலும், விடுமுறை தினங்களிலும் கடைவீதிகளுக்குப் போனால் விலக இடமிருக்காது. புற்றிலிருந்து புறப்பட்டு வருகிற மழை ஈசல்கள் மாதிரி ஒவ்வொரு சந்திலிருந்தும் ஆண்கள் வந்துகொண்டே இருப்பார்கள். ஷார்ஜாவின் ரோலா ஸ்கொயர் முழுவதும் ஆண்களின் தலையாக நிரம்பி இந்த தேசமே மிகப்பெரிய சேவல் பண்ணையாய் தோற்றங் கொள்ளும் அவளுக்கு.
அரபு நாடுகளில் திருட்டுப் பயமென்பதே துளியும் இருக்காது என்று சொல்லக் கேட்டிருக்கிறாள். அதை உறுதிப் படுத்துவது போல் இங்குள்ள வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களுக்கு இரும்பு கிராதிகள் வைக்கப்படாததைப் பார்த்து இங்கு வந்த புதிதில் பியூலா பெரிதும் ஆச்சர்யப்பட்டிருக்கிறாள். ஆனால் அப்படியெல்லாம் ஒரேயடியாக சந்தோஷப்படவும் முடியாது என்று சமகால நிகழ்வுகள் சொல்கின்றன். வீடுகளில் நடக்கும் சின்னச் சின்ன திருட்டுக்கள் பற்றி இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப் படுகிறாள் அவள். துபாயில் சமீபத்தில் பூட்டியிருந்த ஒரு நகைக் கடையை காரால் மோதி உடைத்து உள்ளே புகுந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்களை கொள்ளைக்காரர்கள் அள்ளிப் போனதை தினசரிகளில் வாசித்து திகிலடைந்திருக்கிறாள்.
திருட்டு மட்டுமல்லாது பிச்சை எடுப்பதும் இங்கு சகஜமாகியிருக்கிறது. அவள் ஷார்ஜாவிற்கு வந்த புதிதில் பிச்சை எடுப்பவர்கள் யாரையும் பார்த்ததே இல்லை. ஆனால் இப்போதெல்லாம் கடை வீதிகளிலும் ஸப்-வேக்களிலும் குழந்தைகளும் முழுக்க கறுப்பு அங்கி அணிந்த பெண்களும் கையை நீட்டி பிச்சை கேட்பதை நிறையவே பார்க்கிறாள்.
ஒரு வழியாய் சுரேந்திரன் புறப்படத் தயாரானபோது அவனுடைய கைத்தொலைபேசிக்கு கம்பெனி டிரைவரிடமிருந்து மிஸ்ஸ¤டு கால் வந்துவிட்டது. போனில் பேசியபடி வேகமாய்ப் புறப்பட்டுப் போனான். அவ்வளவு தான். இப்போது கிளம்பிப் போகிறவன், இனி இரவு எட்டு எட்டரைக்கு மேல் தான் வீடு திரும்புவான். அதுவரைக்கும் அவளும் அவளின் தனிமையும் மட்டுமே! இந்த அறையே அவளுக்குச் சிறையாகத் தோன்றும். இரவே மூன்று வேளைக்குமான உணவையும் தயாரித்து முடித்து விடுவதால் பகலில் சமையல் வேலை கூட இருக்காது. துபாயில் இருக்கும் வரை இந்தப் பிரச்னை இல்லை. உடன் தங்கியிருந்த மலையாளப் பெண்ணிடம் அரட்டை அடிப்பதிலும் அவளின் குழந்தையுடன் விளையாடுவதிலும் நேரம் போவதே தெரியாது.
ஷார்ஜாவிற்கு வந்தபின்பு தான் தொலைக்காட்சி ஒன்றே ஒரே பொழுது போக்காய் மனசுக்குக் கொஞ்சமும் பிடிக்காத மலட்டு நிகழ்ச்சிகளையும், கட்சிச் சாயம் பூசிய செய்திகளையும், மில்லிமீட்டர் மில்லிமீட்டராய் நகரும் சீரியல்களையும் பார்த்துப் பார்த்து ஒரு கட்டத்தில் அதற்கே அடிமையாகிப் போனதை உணர்ந்தாள். ஒரு பதினைந்து இருபது நாட்களைப் போல் தமிழ்ச் சேனல் எதுவும் இவர்கள் வீட்டுத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகாதபோது பொழுதைக் கழிக்க திணறிப் போனாள்.
தமிழின் முக்கியத் தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் தங்களின் ஒளிபரப்பு அலைவரிசைகளிலும் திசைகளிலும் சிற்சில மாற்றங்கள் செய்தபோது இவர்களின் அடுக்குமாடிக் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த டிஷ் ஆண்ட்டனாக்கள் அதற்குத் தகுந்தாற் போல் டியூன் பண்ணப் படாததால் இவர்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் தமிழ்ச் சேனல்கள் எதுவுமே ஒளிபரப்பாகவில்லை. அந்த நாட்களில் சுரேந்திரனுடன் தினசரி சண்டைதான். அவனும் குடியிருப்பு அலுவலகத்தில் எவ்வளவோ முறையிட்டும் புகார் பண்ணியும் – கொஞ்சம் செலவு பிடிக்குமென்பதாலும், குடியிருப்பில் தமிழ்க் குடும்பங்கள் அதிகம் வசிக்காததாலும் – அவர்கள் எந்த முயற்சியும் செய்யாமல் சால்ஜாப்புகள் மட்டும் சொல்லி தட்டிக் கழித்ததில் நிறைய நாட்கள் ஓடிவிட்டன.
பியூலாவிற்கு பைத்தியம் பிடித்தது போலாகி விட்டது. புருஷனுடன் பேசுவதை சுத்தமாய் நிறுத்தி விட்டாள். அவன் மாற்று ஏற்பாடாக தமிழ்ப் பத்திரிக்கைகள் சிலதும் வாங்கிப் போட்டான். அவையும் அவளின் மீந்த பொழுதுகளைக் கடத்த போதுமானதாக இல்லை. அப்புறம் தான் பொழுதைப் போக்குவதற்கு பியூலா நல்ல வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்தாள். அவன் புறப்பட்டுப் போனதும் ஜன்னலுக்குப் பக்கத்தில் ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து வீதியில் நடப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.அற்புதமாய் பொழுது போனது. ஒவ்வொரு நிமிஷமும் வீதி புத்தம் புதிதாய் பல சுவாரஸ்யங்களை நிகழ்த்தியபடி நீண்டு கிடக்கிறது என்பது அவளுக்குப் புரிந்தது.
அவள் தங்கி இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு மிகவும் பரபரப்பான நாற்சந்திப்பின் ஒரு மூலையில் அமைந்திருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்புக்கு எதிர்த்தாற் போல் ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல். டை யும் கோட்டும் அணிந்த பெரிய பெரிய கனவான்கள் – பெரும்பாலும் அமெரிக்கா, ஆஸ்திரிலியா, ஐரோப்பா நாடுகளிலிருந்து – வந்து கொண்டும் போய்க் கொண்டும் எப்போதும் பரபரப்பாய் இருக்கும். ஹோட்டலுக்கருகில் இந்தியாவின் கிளை நிறுவனம் ஒன்றின் பிர மாண்டமான புத்தம் புதிய நகைக்கடை அமைக்கப்பட்டு அந்த இடத்திற்கே அழகும் பொலிவுமாய் ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது.
அபார்ட்மெண்ட்டை ஒட்டிய விசாலமான பிளாட்பாரத்தில் லேபர்கள் குவிந்து கிடப்பார்கள். அவர்களின் காலை நேரமென்பது அதிகாலை மூன்றரை நான்கு மணிக்கெல்லாம் தொடங்கி விடும். அதுவும் அவர்களில் ‘கல்லிவெல்லி’ ஆட்கள் என்றொரு பிரிவினர் இருக்கிறார்கள். இந்த தேசத்தில் வேலை செய்ய முறையான விசா இல்லாதவர்கள், விசா காலம் முடிந்து போனவர்கள், ஏஜெண்ட் களால் வேலை என்று விசிட் விசாவில் அழைத்து வரப்பட்டு அப்புறம் ஏமாற்றப்பட்டவர்கள், முறையான கம்பெனி விசாவில் வேலைக்கு வந்தும் ஒழுங்காய் சம்பளம் தரப்படாததாலோ, அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டோ அல்லது வேறு பிரச்னைகளாலோ அங்கிருந்து வெளியேறி காணாமல் போயி அப்புறம் ‘இந்த’ கூட்டத்தில் கலந்தவர்கள் எல்லோரையும் ‘கல்லிவெல்லி’ ஆட்கள் என்றுதான் அழைப்பார்கள்.
தினசரி போலீசுக்குப் பயந்தபடி, நிரந்தர வேலை ஏதுமின்றி கிடைக்கிற வேலைகளைச் செய்து வயிற்றைக் கழுவி, ஒன்றிரண்டு மிச்சம் பண்ணி ஊருக்கும் அனுப்பிவைத்து…என்று அவர்களின் தினப்பாடு மிகமிகத் திண்டாட்டமானது. காலை நேரத்தில் பியூலாராணி தங்கியிருக்கும் வீட்டின் முதல்மாடி ஜன்னலிலிருந்து பார்த்தால் அப்படிப் பட்ட ஆட்கள் நிறைய அலைந்து கொண்டிருப்பது தெரியும். சாப்பாட்டுப் பொட்டலத்தைக் கையிலும், கண்களில் ஏக்கத்தையும் சுமந்தபடி தரகர்களுக்குப் பின்னாலும், வந்து நிற்கும் வாகனங்களுக்குப் பின்னாலும் ஓடிஓடிப் போய் வேலை கேட்டுக் கொண்டிருப்பார்கள். காலை பதினோறு பனிரெண்டு மணி வரை அலைந்தும் வேலை கிடைக்காத வேதனையோடு சிலர் திரும்பிப் போவதையும் அவள் பார்த்திருக்கிறாள்.
விசாலமான பிளாட்பாரத்தை ஒட்டி வரிசையாய் சிறுசிறு கடைகளும், சூப்பர் மார்க்கெட்டும், கம்யூட்டர் உதிரி பாகங்கள் விற்கிற கடையும், மருத்துவ கிளினிக்குகளும் அமைந்திருக்கின்றன. அதுவும் எதை எடுத்தாலும் ஒரு திர்ஹாம் அல்லது இரண்டு திர்ஹாம் மட்டுமே விலையுள்ள பொருட்கள் விற்கும் கடையில் எப்போதும் கூட்டம் அப்பிக் கொண்டிருக்கும்.
சூப்பர் மார்க்கெட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய பெரிய குப்பைத் தொட்டிகளிலிருந்து சிலர் பேப்பர், அட்டைகள், குளிர்பான போத்தல்கள், பால்கவர், பிளாஸ்டிக் பொருட்கள் என்று மற்றவர்கள் பயன்படுத்தித் தூக்கி எறிந்தவைகளை பொறுக்கி சேகரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சர்யப் பட்டிருக்கிறாள். அதைவிட ஓடி ஓடி சம்பாதிக்கும் இவர்கள் காலையில் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை கண்ணுற நேர்ந்தபோது அப்படியே உறைந்து போனாள். எல்லோரும் ஆளுக்கொரு புரோட்டாவை வாங்கி அதை டீயில் முக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். புரோட்டாவை டீயில் முக்கிக் கூடவா சாப்பிட முடியும்? அதிர்ச்சியிலிருந்து மீள அனேக நாட்களானது அவளுக்கு. ஏழ்மையும் வறுமையும் எல்லா தேசங்களுக்கும் பொது போலிருக்கிறது.
அடுக்குமாடிக் குடியிருப்பின் இன்னொரு பக்கம் ஒரு மேம்பாலமும் அதை அடுத்து ஒரு அழகான மசூதியும் இருக்கின்றன. மசூதியில் வெள்ளிக் கிழமை நண்பகல் தொழுகை பார்க்க கோலாகோலமாய் இருக்கும். யாரும் முறைப்படுத்தாமலேயே ஒவ்வொருவரும் வரிசை வரிசையாய் தாங்கள் கையோடு கொண்டு வந்திருக்கும் பாயை விரித்து அமர்ந்து, தொழுகை தொடங்கியதும் எல்லோரும் ஒரே சமயத்தில் எழுவதும் குனிவதும் மடங்கி அமர்வதும் நெற்றிப் பொட்டு தரையில் பட விழுந்து வணங்கி எழுவதுமாய்……பார்க்கவே பரவசமாய் இருக்கும். மசூதி நிறைந்து அதன் சுற்றுவெளிகளும் நிரம்பி அதுவும் போதாமல் சாலைகளை ஒட்டிய பிளாட்பார்ம்களையும் ஆக்ரமித்து, அந்த நேரம், இடம் எல்லாம் ஆசீர்வதிக்கப் பட்டதாய்த் தோன்றும்.
கண்களைக் கொஞ்சம் எட்ட ஓட்டினால் அங்கங்கே நிறைய கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து கொண்டிருப்பது தெரியும். பார்த்திருக்க வளர்ந்து ஆளாகி விடும் பெண் பிள்ளைகள் மாதிரி எத்தனை வேகமாய் கட்டிடங்கள் வளர்கின்றன? தீப்பெட்டிகளை அடுக்கி வைப்பது போல் படபடவென்று மாடிகளை அடுக்கிக் கொண்டே போவதைப் பார்க்க பார்க்க இவளுக்கு ஆச்சர்யமாய் இருக்கும். ஊரிலெல்லாம் தளம் கான்கிரீட் போடுவதென்றால் சாரம் கட்டி, அதில் ஆட்கள் வரிசையாய் நின்றபடி, சட்டி சட்டியாய் கான்கிரீட் கலவையை மேலே அனுப்பி காலையிலிருந்து இரவு வரை போடுவதைப் பார்த்திருக்கிறாள்.
ஆனால் இங்கேயானால் இராட்சஷ மிஷின்களைக் கொண்டு வந்து – அதன் உயரமான ஒருமுனை யானையின் தும்பிக்கை மாதிரியே இருக்கிறது; நீரள்ளி ஆசீர் வதிக்கும் கோயில் யானை மாதிரி கண்மூடி கண் திறப்பதற்குள் அது, ட்ரக்குகளில் வரும் கான்கிரீட் கலவையை உறிஞ்சி மேல் தளத்தில் துப்பி விட – சில மணி நேரங்களிலேயே தளவேலை முடிந்து அடுத்த வேலைக்கு நகர்ந்து விடுகிறார்கள். கட்டிடம் கட்டும் பணியில் தான் எத்தனை விதமான இயந்திரங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன நாள்தோறும்.
சாலையில் ஓடும் வாகனங்களைக் கவனிப்பது அவளின் அடுத்த சுவாரஸ்யம்! எத்தனை எத்தனை விதவிதமான அழகழகான வாகனங்கள்! ஒருநாள் வெள்ளை வெளேரென்று பனிக்கரடி மாதிரி பளபளவென்று நீ…ள…மா…ன…காரொன்றைப் பார்த்தாள். அரபு ஷேக்குகள் பெரும்பாலும் அவர்களைப் போலவே ஓங்கு தாங்கென்றிருக்கும் பெரிய அளவிலான வாகனங்களிலேயே பயணிக்கிறார்கள். காரணம் பெரும்பாலும் அரபு ஷேக்குகளின் குடும்பம் பெரிதாக இருக்கும். பூங்காக்களிலும் ஷாப்பிங் செண்டர்களிலும் ஒவ்வொரு அரபி ஆணுக்குப் பின்னாலும் சம வயதுள்ள மூன்று நான்கு பெண்களும் துறுதுறுவென்ற குழந்தைகளும் போவதை அவளே பார்த்திருக்கிறாள்.அரபிக்களின் உடை பார்க்க அழகாய் இருக்கும்.
ஆண்கள் கழுத்து முதல் பாதம் வரைக்குமான தொளதொளவென்ற பளீரென்ற வெள்ளையில் அங்கி அணிந்து, தலையில் சிவப்புப் பூக்கள் போட்ட துண்டை விரித்து அதன் மேல் கறுப்பு வண்ணத்தில் இரண்டடுக்கு பிரிமனை மாதிரியான வட்ட வடிவ பின்னலும் அதிலிருந்து தொங்கும் அழகான குஞ்சங்களுமாய் காட்சி அளிப்பார்கள். அரபிக்களின் அந்த உடை சுரேந்திரனுக்கும் ரொம்பப் பிடிக்கும். துபாய் பெஸ்டிவல் சமயத்தில் நடந்த பொருட்காட்சியில் அரபி உடை அணிந்து போட்டோ எல்லாம் எடுத்து வைத்திருக்கிறான். பெண்களும் கறுப்பு அங்கியும் தலையில் கண்கள் மட்டும் வெளித் தெரியும் படியான கறுப்பு பர்தாவும் அணிந்திருப்பார்கள்.
அவ்வப்போது ஆம்புலன்சுகள் அலறலோடு ஓடும் போது அவளுக்கு பதட்டமாய் இருக்கும். இந்த ஊரில் விபத்துக்களும் நோயாளிகளும் அதிகம் என்றும் மருத்துவம் ரொம்பக் காஸ்ட்லி என்றும் அப்படியும் அத்தனை சிறப்பான சிகிச்சை கிடைக்காது என்றும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறாள். சுரேந்திரன் அடிக்கடி சொல்வதுண்டு – அவன் வேலை பார்க்கும் இடத்தில் யாருக்காவது சிறு நோயென்றாலும் உடனே ஊருக்குத்தான் கிளம்பி விடுவார்கள் என்றும் ஆஸ்பத்திரிக்கு அதுவும் அரசு மருத்துவமனைகளுக்குப் போகச் சொன்னாலே அலறி விடுகிறார்கள் என்றும்.
அடுத்து அவள் சாலையில் அதிகம் சந்திப்பது தீயனைப்பு வண்டிகளை. இந்த ஊரில் அடிக்கடி எங்காவது எப்படி என்று தெரியாமலே தீப்பற்றிக் கொள்கிறது. பியூலாவே பலதடவைகள் அவள் வீட்டு ஜன்னலிலிருந்து அடுக்குமாடிக் கட்டிடங்களில் கரும்புகை சூழ மஞ்சளும் சிவப்பும் கலந்த ஜுவாலையுடன் தீ கொழுந்து விட்டெரிவதைப் பார்த்து பதறி, கொஞ்ச நேரத்திலேயே ஆம்புலன்ஸ¤ம் தீ அணைப்பு வண்டியும் விரைவதைப் பார்த்து ஆறுதலடைந்திருக்கிறாள்.
பத்து நாட்களுக்கு முன்னால் தான், அவள் தங்கியிருக்கும் கட்டிடத்திலிருந்து பதினைந்து கட்டிடங்கள் தள்ளி இருக்கும் ஒரு கட்டிடத்தில் ஒரு மோசமான தீ விபத்து நடந்து, அந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட வீடு நடுஇரவில் தீப்பற்றிக் கொண்டதில் ஒரு புருஷனும் மனைவியும் அவர்களின் இரண்டு சிறுவயதுக் குழந்தைகளும் கருகிப் போயினர்.
இவளும் போய் அந்தக் கோரக் காட்சியைப் பார்த்து வந்தாள். அன்றைக்கு முழுவதும் பொட்டுத் தூக்கமில்லை. எத்தனை கனவுகளோடு பிழைக்க வந்திருப்பார்கள்? இப்படி கரிக்கட்டை யாய் திரும்பிப் போனால் அதைப் பார்த்து அவர்களின் குடும்பம் என்ன பாடுபடும்? நினைக்க நினைக்க வாழ்வின் நிச்சயமின்மை முகத்திலறைய “நாம இப்பவே இந்திவாவுக்குத் திரும்பப் போயிடலாங்க…..” என்று பியூலா புலம்பத் தொடங்கி விட்டாள்.அவளை சமாதானப் படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்குள் சுரேந்திரனுக்கு போதும் போது மென்றாகிவிட்டது.
மேம்பாலத்திற்கு அடியில் அதன் நிழலில் சிலர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள் எப்போதும். அவர்களில் ஒருத்தனை அவள் அடிக்கடி அங்கு பார்ப்பாள்.அவனுக்கு முப்பது முப்பத்திரெண்டு வயதிருக்கும்.மிக நேர்த்தியாக உடை அணிந்திருப்பான். மற்றவர்கள் மாதிரி அவன் நிழலுக்கு ஒதுங்கிப் போபவனாகத் தெரிவதில்லை.
நண்பகல் தொழுகை முடிந்த நேரத்திலிருந்து சாயங்காலம் நான்கு அல்லது ஐந்து மணி வரை அங்கேயே தான் உட்கார்ந்திருப்பான். எதுவும் செய்யாமல் ஒரே இடத்தில் தொடர்ந்து மணிக்கணக்கில் எப்படி அவனால் உட்கார்ந்திருக்க முடிகிறது என்று அவளுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஒரு வேளை அவளைப் போலவே அவனும் பொழுது போகாமல் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறானோ என்று நினைத்துக் கொள்வாள்..
அவனைப் பற்றிய நிறைய கேள்விகளுக்கு அவளுக்கு விடை தெரியவில்லை. அவன் யார்? எங்கு வேலை பார்க்கிறான்? வேலைவெட்டி எதுவுமில்லையா அவனுக்கு? வேலைக்காக அழைத்து வரப்பட்டு ஏமாற்றப்பட்டு விட்டவனா? சொந்த நாட்டிற்கும் திரும்பிப் போக முடியாமல் இங்கும் போக்கிடமில்லாமல் அலைகிறவனா?கிடைத்த வேலையைச் செய்கிற கல்லிவெல்லி ஆசாமியா? இங்கெல்லாம் கோடைக் காலங்களில் சில அலுவலகங்களும் வணிக நிறுவனங்களும் நண் பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இயங்குவதில்லை. அந்த மாதிரி ஓரிடத்தில் வேலை செய்பவனாக இருக்குமோ? ஆனால் இவனை அந்த நேரம் கடந்தும் சில தினங்களில் பார்த்திருக்கிறாளே! மேலும் அப்படிப்பட்டவகள் தாங்கள் தங்கி இருக்கும் அறைகளுக்குப் போய்த் தானே ஓய்வெடுப்பார்கள்! இவனுக்கு அப்படி ஒரு அறையே இல்லாமல் ஒருவேளை காரில் வசிப்பவனோ?
யு.ஏ.இ.யில் சில பேச்சிலர்கள் தங்களின் காரையே வசிப்பிடமாகக் கொண்டு அதிலேயே தங்கி, உண்டு, உறங்கி வாழ்கிறார்கள் என்று பத்திரிக்கைகளில் படித்து அதிர்ந்து போயிருக்கிறாள். டார்மென்ட்றி மாதிரி வசதியுள்ள இடங்களில் குளித்து, மற்ற கடன்களை முடித்துக் கொண்டு பகல் நேரங்களிலெல்லாம் காரிலேயே சுற்றிக் கொண்டிருந்து விட்டு இரவு ஏதாவது இலவச பார்க்கிங்கில் காரை நிறுத்தி காருக்குள்ளேயே உறங்கி விடுவார்களாம்.
இந்தியாவில் இதேபோல வெகு நேரம் காருக்குள் இருந்த சிலர் ஏ.சி.யிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடால் செயலிழந்து மூச்சுத் திணறி இறந்து போன செய்தியை அறிந்ததும் இங்கு காரில் வாழ்பவர்கள் முக்கியமாக அந்த மேம்பால இளைஞன் தான் ஞாபகத் திற்கு வந்தான். கோடைகாலத்தில் இங்கு இரவிலும் வெக்கை இருக்கும். ஏ.சி. இல்லாமல் தூங்கவே முடியாது. அவர்கள் கார்பன் மோனாக்சைடிலிருந்து எப்படி சமாளிக்கிறார்கள்? கடவுளே! சில பேருக்கு ஏன் இத்தனை மோசமான வாழ்வனுபவம்!
`தினசரி பார்க்கிற மேம்பால நிழல் இளைஞனைக் கடந்த சில தினங்களாக அந்த இடத்தில் பார்க்க முடியவில்லை. எங்கு போனான் என்றும் தெரியவில்லை. பொதுவாய் கல்லிவெல்லி ஆட்கள் ஊருக்குப் போவதென்று முடிவெடுத்தால் விமானப் பயணத்திற்கான பணம் சேர்ந்ததும் போலிசில் சரணடைந்து விடுவார்களாம். போலீஸ் அவர்களை ஓரிரு மாதங்கள் சிறையில் வைத்திருந்து விட்டு அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்து விடுமாம்.
இவனும் அப்படி கிளம்பிப் போயிருப்பானோ? தினசரி அவனைப் பார்த்துப் பார்த்து கண்கள் பழகி விட்டதால் அவன் மேல் ஒரு இனம் புரியாத பாசம் ஏற்பட்டு விட்டது. அவன் இல்லாமல் அந்த இடம் வெறுமையாய் வெறிச் சோடிக் கிடப்பது போலிருந்தது. அவன் எங்கு போனான் என்பதற்கான விடை சில தினங்களுக்கு முந்தைய செய்தித்தாளில் அவளுக்குக் கிடைத்தது.
ஆங்கிலச் செய்தித் தாளெல்லாம் அவள் வாசிப்பதில்லை. சாயங்காலம் சப்பாத்திக்கு மாவு உருட்டிப் போடுவதற்காக பழைய பேப்பரை எடுத்து விரித்தபோது அதிலிருந்த ஒரு செய்தி வசீகரிக்க அதை வாசித்தவள் அப்படியே அதிர்ந்து போய் விட்டாள். செய்தி இது தான்:
துபாயிலிருக்கிற ஒரு இடுகாட்டில் பிணங்களை அடக்கம் செய்வதற்கு முன்னால் ‘அதுகளை’ப் போட்டுக் கழுவுவதற்காக ஒரு அறை இருக்கிறதாம். அன்றைக்கு இராத்திரி அந்தப் பக்கமாய் ரோந்து சுற்றிய போலீஸ்காரனுக்கு அந்த பிணவறையில் ஏதோ நடமாட்டமிருப்பதாய் சந்தேகம் வர, உள்ளே போய் கையிலிருந்த சிகரெட் லைட்டரை எரியவிட்டுப் பார்த்திருக்கிறான். பிணங்களைப் போட்டுக் கழுவும் பிளாட்பாரத்தின் மேல் நிர்வாணமாக ஓர் ஆணும் பெண்ணும் ஆலிங்கனம் செய்து கொண்டிருந்தார்களாம். அவர்களிருவரும் கைது செய்யப் பட்டிருந்தார்கள்.அவர்களை அங்கு அனுமதித்த பிணவறைக் காவலாளி தப்பித்து ஓடிவிட்டானாம். கைதானவர்களின் போட்டோக்களும் போட்டிருந்தார்கள்.
அந்த ஆணும் பெண்ணும் தங்கள் அந்தரங்கம் கேவலப் படுத்தப்பட்ட அதிர்ச்சியில் குமுறி அழுதபடி யிருந்தார்கள். அதிலிருந்த ஆணின் முகம் பியூலாவிற்கு பரிச்சயமானதாயிருக்க கொஞ்சம் உற்றுக் கவனித்தவள் உறைந்து போனாள். அது மேம்பாலத்து நிழலில் ஓய்வெடுக்கும் இளைஞன்.

(தயாராகிக் கொண்டிருக்கிற நவீன விருட்சம் 84வது இதழில் வெளியாகும் சிறுகதை)