அன்புடையீர்,

வணக்கம்.

க.நா.சு நூற்றாண்டை முன்னிட்டு ‘சில க.நா.சு கவிதைகள்’ என்ற 24 பக்கம் புத்தகம் ஒன்றை தயாரித்துள்ளேன். அப் புத்தகத்தை இலவசமாக அளித்து வருகிறேன். வேண்டுவோர் முகவரியுடன் ஒரு கார்டு நவீன விருட்சம், 6/5 போஸ்டல் காலனி முதல் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33 என்ற முகவரிக்கு அனுப்பினால் போதும். புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

அன்புடன்
அழகியசிங்கர்

எதையாவது சொல்லட்டுமா……..37

உங்களுக்கு எதாவது சந்தேகம் வந்துள்ளதா கடவுளைப் பற்றி. பலர் கோயிலுக்குப் போவார்கள். சாமியைக் கும்பிடுவார்கள். அவ்வளவுதான். சாமியைப் பெரிய சக்தியாக நினைத்து கோயில் கோயிலாகச் செல்பவர்களும் உண்டு. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராய்ச்சியெல்லாம் இப்போதெல்லாம் யாரும் பண்ணுவது இல்லை. ஏனென்றால் அது தேவையில்லாத ஒன்று.

அன்று சனிக்கிழமை. சீர்காழியிலிருந்து மயிலாடுதுறைக்கு நான் டூ வீலரில் வந்து கொண்டிருந்தேன். என் பின்னால் கிளை மேலாளரும் வந்து கொண்டிருந்தார். அவருக்குக் கோயில் போவது, கடவுளை எதற்காவது வேண்டிக்கொள்வது என்பதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. நம்பவும் நம்ப மாட்டார். ஆனால் இது ஒரு பிரச்சினையே இல்லை. ஆனால் அவர் ஒரு கேள்வி கேட்கிறார். ‘இப்போதெல்லாம் கடவுள் நம்பிக்கை மக்களிடம் அதிகமாகிவிட்டது போலிருக்கிறதே’ என்று.

எனக்கு இதைப் பற்றியெல்லாம் அதிகமாக யோசித்து விட்டுவிட்டேன். இப்போதெல்லாம் அதிகமாக யோசிப்பது இல்லை. ஆனாலும் அவர் கேட்டார் என்பதற்கு பதில் சொல்லத் தோன்றியது. ‘ஆமாம். கடவுள் நம்பிக்கை அதிகமாகி விட்டது,’ என்றேன். பின் காரணமும் சொன்னேன். ‘பல மக்கள் அளவிடமுடியாத துன்பங்களை சுமந்து கொண்டிருக்கிறார்கள். அதைச் சரிசெய்யும் வழி தெரியவில்லை. குறைகளைக் கேட்க கடவுள் ஒருவன்தான் இருக்கிறான். அதனால் கடவுளை நாடுகிறார்கள்,’ என்றேன்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் PAIN ஐ சுமப்பது என்பது சாதாரண விஷயமில்லை. ஒரு சிறுவயது உடையவர் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர். சென்னையிலிரூந்து அவர் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தார். ”15வயதிலிருந்து இந்தத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். தீராத வலி. கைகால் முட்டிக்கு முட்டி. தாங்க முடியாத வலி. தற்கொலை செய்துகொள்ள தோன்றும். மகமாயிதான் என்னைக் காப்பாற்றி இருக்கிறாள்…” என்றான். அவன் சொன்னதை கிளை மேலாளரிடம் சொன்னேன். அவர் சிரித்தார். ”தானாகவே அந்த வலி போய்விடும்…மகமாயி என்று அவன் சொல்கிறான்….இப்படித்தான் எல்லோரும்…?” என்றார்.

”உங்களுக்கு துன்பமே வந்ததில்லையா? அப்படி வந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டேன். ”நடப்பது நடக்கட்டும்,” என்று இருப்பேன் என்று சொன்னார். அவரிடம் வாதாட முடியாது என்று தோன்றியது. நானும் பெரிய கடவுள் நம்பிக்கை உடையவன் என்றெல்லாம் சொல்ல முடியாது. நம் தமிழ் நாடு முழுவதும் எத்தனையோ கோயில்கள் இருப்பது குறித்து ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். இந்தக் கோயில்களுக்கெல்லாம் மக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்து, முகமதையர், கிருத்துவர் என்று எல்லோரும் கடவுளை வணங்காமல் இல்லை.

பெரும்பாலான மக்களுக்கு துன்பம் வரும்போது அதை எதிர்கொள்ள திராணி இல்லை. நான் சென்னையைவிட்டு இங்கே வந்துவிட்டேன். திரும்பவும் சென்னைக்கே போக வேண்டுமென்று நான் கடவுளிடம்தான் வேண்டிக்கொள்ள முடியும். Top Executiveஐப் பார்த்து கெஞ்சிக்கொண்டிருக்க முடியாது. ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளாக நான் ஒன்றை செய்யவில்லை. என் மூதாதையார் வாழ்ந்த பூமியைப் போய்ப் பார்க்காமலிருந்தது. பள்ளிக்கூட வயதில் நான் போயிருக்கிறேன். பிறகு சில நிகழ்ச்சிகளின் போது அங்கு போயிருக்கிறேன். இப்போது அந்தக் கிராமம் மட்டும்தான் இருக்கிறது. அங்கு போய் தங்க என் மூதாதையார் வீடு, நிலம் என்றெல்லாம் எதுவுமில்லை. ஆனாலும் சென்னையை விட்டு வந்த எனக்கு இவ்வளவு கிட்ட அந்த இடம் இருந்தும், போய்ப் பார்க்க தங்க ஒன்றுமில்லை. அங்குள்ள வீரன் கோயிலைத் தவிர.

அந்தக் கோயிலை ஏன் போய்ப் பார்க்கக் கூடாது என்று தோன்றியது. அதனால் வாரம் ஒருமுறை போய்க் கொண்டிருக்கிறேன். இங்கெல்லாம் நிலம் இருந்தது. இங்கெல்லாம் வீடு இருந்தது என்று சொல்லிக்கொண்டே போவேன். வீரனைப் பார்த்துவிட்டு வந்து விடுவேன். இதெல்லாம் கடவுள் நம்பிக்கையா இல்லையா என்பது தெரியாது. அங்குள்ள சிவன் கோயிலுக்குப் போனேன். அதை பராமரிக்கவே யாரும் இல்லை. அதைப் பார்த்துக்கொள்பவர் கோயிலுக்குப் போய் பூஜை செய்து. புத்தம் புதிய மாலையை இட்டு மந்திரம் சொல்கிறார். அந்தக் கோயிலில் எங்கள் குடும்பம் அவரைத் தவிர யாருமில்லை. சிவனை அவ்வளவு நெருக்கமாகப் பார்க்க முடிகிறது. கோயில் ஒரு பக்கத்தில் அந்தக் கோயிலைப் பற்றிய தல வரலாறு எழுதப் பட்டிருக்கிறது. சிவனும் விஷ்ணுவும் சொக்கட்டான் விளையாடும்போது, பார்வதி நடுவராக இருக்கிறாள். விஷ்ணு ஜெயித்து விடுகிறார். அதைச் சொன்ன பார்வதிக்கும் விஷ்ணுவிற்கும் சாபம் கொடுக்கிறார் சிவன். அந்த சாப விமோசனம் பெற அகில்காடு என்கிற அந்த இடத்தில் பார்வதி சிவனை தன் ஆபாரணங்களை எல்லாம் கழற்றி பூஜை செய்கிறாள். சாப விமோசனம் பெறுகிறாள். அகில்காடு அசிக்காடு என்று மாறி விடுகிறது. கோயில் அமைதியாக இருக்கிறது. வெளியே வருகிறேன். கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா? கடவுள் என்பதே நம்முடைய மனசாட்சி என்று தோன்றுகிறது. நம் மனசாட்சியைப் பார்க்கத்தான் கடவுளை தொழுகிறோம். Taste of temples என்ற ஒன்று இருக்கிறது. கோயில் அமைந்த இடம். அதைச் சுற்றிய புராணக் கதை என்றெல்லாம் இருக்கிறது. ஒவ்வொரு கோயிலாகச் சென்று கோயிலையும் சாமியும் பார்த்துவிட்டு வரலாம். நம் மனசாட்சியையும் தேடுவோம்.
(இன்னும் வரும்)

புத்தகப் பைத்தியம்

எனக்கு புத்தகமென்றால்

பைத்தியம்.

என் மனைவிக்கு

புத்தகத்தைக் கண்டாலே

பைத்தியம்.

என் மாமனார் சொன்னார்

சீ பைத்தியக்காரி

இதையெல்லாம்

பெரிது படுத்தாதே.

புத்தகப் புழுவோடு

புக்ககம் போயிருக்கிறாயென

பெருமைப்படு என்றார்

என் மனைவியிடம்.

அதற்குள் என்

கைப்பிள்ளை

ஊர்ந்து ஊர்ந்து

புத்தகத்தைப் பிய்த்து

கிழித்துக் கொண்டிருந்தான்

நான் படிக்காதப்

பக்கங்களை…

கிழித்து கசக்கிய

பக்கங்களால் ஒரு

பூச்சியைப் பிடித்து

வெளியே எறிந்தார்

என் மாமியார்

புதிதாக ஒரு புத்தகத்தைப்

படித்த திருப்தி எனக்கு.

அழகிய வீரர்கள்

மிகக் கவனமாக
கீழிருந்து ஆரம்பித்து
மெல்லத் தோள் வரைக்கும்
தோழமையாய் தொடர்ந்து
தலை தடவி
சாதுரியமாய் மூளை புகுந்து
அரவணைத்தது சாட்டை
புதுப் பம்பரத்தை
இறுக்கமாக..

அணைப்பின் கதகதப்பில்
கிடைத்த பாதுகாப்பு உணர்வில்
சிலிர்த்துப் பரவசமாகிய
பச்சிளம் பம்பரம்
களத்தில் இறங்கத் தயாரானது
துடிப்பாக..

இலாவகமாய் இழுத்துவிட்ட கயிறு
விலகி நின்று வேடிக்கை பார்க்க
வீரியமாய் சுழலாயிற்று
தன் வசீகரத்தில் தானே மயங்கி
பார்ப்பவர் வியக்கும் வண்ணமாக..

விசை குறைந்து சாயும்முன்
உடனுக்குடன் தூக்கி
உச்சிமுகர்ந்து பாராட்டி
ஒவ்வொரு ஆட்டத்துக்கும்
’அழகியவீரன் நீ’யென ஆர்ப்பரித்து
அனுப்புகின்ற சாட்டையைத்
துதிக்கின்ற விசுவாசியாக..

காலமுள் சிரித்தபடி நகர
கயிற்றின் கணக்குகள்
புரியாமல் ஆடியோடியதில்
கூர்முனை மழுங்கி
வண்ணங்கள் சோபை இழக்க
வனப்பைத் தொலைத்துத்
தோற்கத் தொடங்கியது பம்பரம்
சபையிலே தள்ளாடி..

மழுங்கிய முனைக்கு
மருத்துவம் செய்யும் முனைப்போ
அதுவரையிலும் பெற்ற உழைப்புக்கு
இரங்கும் மனமோ
எப்போதும் கொண்டிராத சாட்டை
வேறு பளபளத்த பம்பரங்கள் தேடி..

இக்கணத்திலும்
வட்டமிடும் பருந்துகளாய்
வான்வெளியை நிறைத்து
பசியோடு கருநாகச் சாட்டைகள்..

மாட்டுவதற்கென்றே
முட்டை ஓடு விட்டு வரும்
அறியாக் குஞ்சுகளாய்
பூமியெங்கும் அழகிய வீரர்கள்..!
***

கவியோகி

சின்ன விஷயங்களுக்கெல்லாம்
அமிதமாய் உணர்ச்சிகளை
விரையம் செய்வதைக் கண்டு
கவிதை எழுதத்தூண்டினார்
எழுத்தை ஆள்கிறவர்
கவிதைகள் எழுத எழுத
உணர்வுகள் உணர்ச்சிகள்
மேலும் கூர்மைபெற்றன
முறுக்கேறின
உக்கிரம் கொண்டன
உணர்ச்சிகளின் உளறல்கள்
என்றுரைத்து
யோகத்தில் சித்தத்தைச்செலுத்த
பணித்தார் யோகி
யோகத்தில் முழுக முழுக
உரம் பெற்ற ஆன்ம பலத்துடன்
உணர்வுகளும் ஊக்கம் பெற்றன
மிச்ச நாட்களின்
நகர்தலில்
முற்றிலும் சமனம் அடையா
உணர்ச்சிகள் உணர்தல்களின் கூட
சேர்ந்துகொண்ட
கவிதையும்
யோகமும்

பால்ய பொழுதுகள்

பட்டம் விடுவது
பம்பரம் சுற்றுவது
விடியும் பொழுதெல்லாம்
விளையாட்டுக்களிலும்
அதைப் பற்றிய நினைவுகளிலும்
கழியும்
பள்ளிக் கூட வாத்தியாருக்கு
இடது கையால்
வணக்கம் வைத்து
வாங்கிக் கட்டிக் கொள்வது
சிதறுதேங்காய்க்காக
சண்டையிடுவது
தோட்டத்து மாமரத்தில்
கல்லெறிவது
குளத்தில் பனங்காயை
தூக்கி எறிந்து
அதைத் தொட
சகாக்களுடன்
போட்டியிட்டு நீச்சலடிப்பது
இளவட்ட பசங்களின்
சேஷ்டைகளை ரசிப்பது
அவர்களின் காதலுக்கு
தூதுவனாக இருப்பது
விரக்தி ஏற்படும் தருணங்களில்
பால்யத்தின் கனவுகளை
அசைபோட்டவாறு இருப்பது
அம்புப்படுக்கையில் இருக்கும்
பீஷ்மரைப் போல்
வாழ்க்கை கொடிய கணைகளால்
எனது நெஞ்சத்தைத் தைத்தது
ஓர் நாள்
விடாது பெய்த மழையில்
நனைய யோசித்த பொழுதே
எனது பால்யம் தொலைந்தது.

குவளைகளில் கொதிக்கும் பானம்

வரிசையாய் இருக்கும் மண் குவளைகளில்
ஒழுங்கு தவறாது ஊற்றுகிறேன் கோபங்களை.
நகர்த்த இயலாத சுடு வெயில் போல
அறையெங்கும் பரவி இருக்கிறது மௌனம்.
கேள்விகளின் பிடிவாத நகர்த்தலில்
வட்டங்களில் சுழல ஆரம்பிக்கிறது
குவளைகளில் கொதிக்கும் பானம்.
காணாத காட்சி என கண்கள் சொல்ல
கிடைக்கும் தாள்களில் வரையத் துவங்குகிறேன்
ஒழுங்கற்றுப் பரவும் வண்ணங்களைத் தீட்டி.
தூரிகையின் வேகம் உச்சத்தில் ஏற ஏற
தாளில் துலங்கும் காட்சிகளும்
துரித நடனம் ஆடும் குவளைகளும்
ஒன்றின் மேல் ஒன்றாய் மிகச் சரியாய்.
வெந்து தணிகிறது வெப்பம்.
முடிந்த ஓவியத்தை மேசையில் வைக்கிறேன்
நிதானமாய் – பிறிதொரு வேளை
நின்று யோசிக்கவும், கடந்து செல்லவும்.

எது கவிதை……..1

ஒரு ஞாயிற்றுக்கிழமை காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, என் உறவினர் ஒருவர் ஒரு சினிமாப் பாடலாசிரியர் பெயரைக் குறிப்பிட்டு அவர் கவிஞர்தானே என்றார். சினிமா பாடலாசிரியர் ஒவ்வொருவரும் சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களை கவிஞர்கள் என்று கூறிவிட முடியாது. கவிதை வேறு சினிமாப் பாடல் வேறு. சினிமா பாடல் எழுதுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். புகழ் அடையலாம். கவிதை அப்படி அல்ல. இன்னும் கேட்டால் கவிதை எழுதுபவர்கள் யாரும் தன்னை கவிஞர் என்று சொல்லிக்கொள்ள விருப்பப் படமாட்டார்கள். நிஜமாக கவிதை எழுதுபவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

பாரதியின் வசன கவிதையிலிருந்து ஒரு மாற்றம் இருந்தாலும், கவிதை பலவிதப் போக்கில் செல்ல ஆரம்பித்து விட்டது. ந.பிச்சமூர்த்தி கூட கொஞ்சம் மரபு கொஞ்சம் புதுக்கவிதை என்று தாவிக்கொண்டிருந்தார். க.நா.சுதான் கவிதையின் புதிய பாதையை இன்னும் திறந்து வைத்தார். இன்று கவிதை பலவிதப் போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. என் நண்பர் லாவண்யா அவருடைய மூன்றாவது கவிதைத் தொகுதியைக் கொண்டுவர யோசனை செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

கவிதைப் புத்தகம் கொண்டு வருவது எளிது. அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி விற்பது மிக மிகக் கடினம். ஒரு நூறு உண்மையான கவிதை எழுதுபவர்கள் (கவிஞர்கள் என்று சொல்ல விரும்பவில்லை) இருந்தாலும், ஆயிரம் பொய்யான கவிதை எழுதுபவர்கள் உருவாகி இருப்பார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் என்னை ஒருவர் அவர் மனைவியுடன் பார்க்க வந்தார். அவரிடமுள்ள கவிதைப் புத்தகத்தை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். ‘ஆயிரம் புத்தகங்கள் அச்சடித்துள்ளேன்,’ என்றார். எனக்கு திகைப்பாக இருந்தது. ‘எப்படி விற்கப் போகிறீர்கள்? யார் கண்ணிலும் படாமல் வைத்துக் கொள்ளுங்கள்,’ என்றேன். அந்தப் புத்தகம் கொண்டு வந்ததில் அவருடைய மனைவிக்கு விருப்பமில்லை என்பதும் தெரிந்தது.

உண்மையில் கவிதை எழுதுபவர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு நூறு பேர்களாவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அந்த நூறு பேர்களும் கவிதை என்று சொல்லும்படி ஒரு கவிதையாவது எழுதியிருப்பார்கள். ஆனால் எழுத முடியாதவர்கள் கவிதை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கவிதை நூல்களை வெளியிட்டு உண்மையாகவே கவிதை எழுத வேண்டுமென்று உந்துதல் உடையவர்களை காணாமல் ஆக்கி விடுகிறார்கள். சினிமா பாடலாசிரியர்களின் பங்கு இதில் முக்கியமானது.

புதியதாக கவிதை எழுதுபவர்கள் வர வர ஏற்கனவே கவிதை எழுதி அலுத்துப் போனவர்கள் dropout ஆகி விலகிப் போய்விடுவார்கள். இன்று ஏராளமான கவிதைகள் சந்தையில் வெளி வர ஆரம்பித்து விட்டன. நிஜக் கவிதைகளை இவை மலினப்படுத்தி விடுகின்றன.

திரும்பத் திரும்ப சொல்லப்படுகிற விஷயங்களே அதிகம் என்பதால் எந்தக் கவிதைப் புத்தகத்தையும் முழுதாகப் படிக்க முடியவில்லை. கவிதை என்று எழுதி புத்தகமாகக் கொண்டு வந்தபின் கவிதை படிப்பவர் பக்கம் தாவி விடுகிறது. அவ்வளவுதான் படிப்பவர்கள் மனது வைத்தால்தான் கவிதையை உருவாக்க முடியும். ஒரு தேர்ந்த வாசகன் சிறந்த கவிதைகளை அடையாளம் கண்டு விடுவான். அப்படிப்பட்ட தேர்ந்த வாசகனை விரல்விட்டு எண்ணி விடலாம்.

கவிதை எழுதும் ஒவ்வொருவரும் கவிதையை ரசிப்பவர்களாக இருக்கிறார்கள். பின் கவிதை எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள். எழுதி புத்தகமாகக் கொண்டு வந்தபிறகு அவர் எழுதுவதுதான் கவிதை என்று நம்பி விடுகிறார்கள். நவீன விருட்சம் பத்திரிகையை ஆரம்பித்து 23 ஆண்டுகளில் நான் கவிதை எழுதுபவர்களிடம் உள்ள போட்டியையும் பொறாமையும் பார்த்து வியந்திருக்கிறேன். எழுதுபவர்கள் குறைவு. படிப்பவர்கள் அதைவிட குறைவு. ஆனால் சண்டை வலுவானது.

பசுவய்யா, ஞானக்கூத்தன், பிரமிள் போன்ற படைப்பாளிகள் விருட்சத்தில் பங்கு அளித்திருக்கிறார்கள் என்று என் பத்திரிகையில் எழுதியிருந்தேன். ‘அது எப்படி அவர்கள் இருவர் பெயர்களுடன் என் பெயரை சேர்க்கலாம்,’ என்று பிரமிள் என்னிடம் சண்டைக்கே வந்துவிட்டார்.

அதேபோல் ஒரு காலத்தில் எழுதப்பட்ட கவிதைகளை இன்னொரு காலத்தில் படிக்கும்போது ஏற்கனவே எழுதியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கவிதையைக் குறித்து இன்னும் யோசித்துப் பார்க்கலாம்.

(இன்னும் வரும்)

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்…..2

க.நாசுவின் இலக்கிய முதிர்ச்சியும் விமர்சனப் பாங்கும் 2

நகுலன்

இலக்கிய வட்டம் 22.05.1964 இதழில் ”விமர்சனத்தின் நோக்கம்” என்ற தலையங்கக் கட்டுரையில் வருமாறு எழுதுகிறார். ”இலக்கிய விமர்சன ரீதியாகக் கவனிக்கும்போது கூட இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட விஷய கனத்தினால்தான் ஒரு இலக்கியம், ஒரு நூல் நிலைக்கிறது என்று டி.எஸ் எலியட் போன்ற கவிஞர் விமர்சகர்கள் உணர்ந்து சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்…. இந்த விஷய கனத்தை உணர்ந்துகொள்ள இந்திய சிந்தனை இந்திய விமர்சனுக்கு உதவக் கூடும் என்பது என் நம்பிக்கை.

மேலும் சொல்கிறார்: எனது அனுபவமும், அந்த அனுபவத்தில் ஆனந்தமும் எப்படி ஏற்படுகிறது என்று அறிந்து கொள்ளச் செய்யப்படுகிற முயற்சியை இலக்கியத்திலானால் விமர்சனம் என்றும், வாழ்க்கையிலானால் தத்துவ தரிசனம் என்றும் சொல்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ கடைபிடிக்கிற தத்துவம் மனிதனாய்ப் பிறந்துவிட்ட ஒவ்வொருவனுக்கும் அவசியமாகிறது. இங்கு குறிப்பிட்ட இவ்விரு அடிப்படைகளும் க.நா.சுவின் படைப்பை நாம் சரிவர புரிந்துகொள்ள நமக்கு உதவும் என்றுதான் நினைக்கிறேன்.

இன்னும் ஒரு மேற்கோள். அவர் இலக்கிய விசாரம் என்ற நூலிலிருந்து… ”ஆனால் ஆழம் மனுஷ்யத்துவம் என்பது இலக்கியத்தின் ஆதார அடிப்படை. அது காணப்படாத இலக்கியம் எந்த அழகிய உருவம் பெற்றாலும் போதாது என்றுதான் சொல்ல வேண்டும்.”

க.நா.சுவை ஒரு அளவு ஈடுபாடுடன் படித்தவர்கள் அவர் திரும்பத் திரும்பக் கீழ்வரும் வார்த்தைகளை இலக்கிய தராசு மந்திரங்களாக உபயோகிப்பது தெரிந்திருக்கும் – ரஸனை, பூரணத்துவம், தனித்வம்.

இனி நான் அவர் நாவல் – சிறுகதை – கவிதைகளைப் பற்றி எனக்குத் தெரிந்தவரை என் அனுபவத்தை வைத்துக்கொண்டு சில சொல்ல விரும்புகிறேன். ஒரு கல்லூரி ஆசிரியர் என்ற வகையில் நான் எனக்குப் பிடித்த மாணவர்களிடம் அடிக்கடி இவ்வாறு சொல்வதுண்டு. ”நீங்கள் கூடியவரை என மன ஓட்டத்தை, என் மனம் செயல்படுவதை அனுபவ பூர்வமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.” இதை புரிந்து கொள்வது என்பது வெறும் வார்த்தை மூலம் ஏற்படுவதில்லை.

க.நா.சு மதிக்கும் எழுத்தாளரான ராஜாராவ் என்பவர், ”எழுத்தாளனும் வார்த்தையும்” என்ற ஒரு கட்டுரையில் வருமாறு எழுதுகிறார். ”இன்னொருவருடன்” ”பேச வேண்டும்” என்ற ஒரு நிர்பந்தத்திலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொண்டாலன்றி, நாம் நம்மை மற்றொருவருக்கு சுயரூபத்தில் காண்பித்துக் கொள்ள முடியாது.”

”ஒரு உபாசகனாக இருந்துகொண்டு என்னையே நான் அனுபவிக்க முடிந்தாலன்றி (இது ரசனை) சப்தத்தின் நித்தியம் பலிப்பதில்லை. இது இல்லாவிட்டால் அனுபவமும் சரி, சொல்லும் சரி, ஒருவித உறவை ஏற்படுத்துவதில்லை. இந்த சாதனை இல்லாத இடத்தில் வார்த்தை வெறும் ஒலிக் குப்பை மாத்திரம்.”

”வார்த்தை என்பதே அடிப்படையில் சப்தம் என்பது நிசப்தத்தின் மூலமாக விளைவது,” மேலும் அவர் வார்த்தை நம்மை மீண்டும் நிசப்தத்திற்குக் கொண்டு செல்கிறது என்கிறார். (இலக்கிய பூர்வமாக நான் இதை எழுத்தாளன் – வாசகன் இருவரையும் உறவுபடுத்துவது என்பது ஒரு மக்களின் பண்பாடு மூலம் மனம் – மனத்துடன் ஐக்கியமாவது தான் என்று நினைக்கிறேன்.)

(இன்னும் வரும்….)

எதையாவது சொல்லட்டுமா……..36

மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி பஸ்ஸில் செல்லும்போதெல்லாம் என் கண்ணில் அடிக்கடி தட்டுப்படுவது திருக்குறள். பெரும்பாலான குறலுடன் நான் ஒத்துப் போயிருக்கிறேன். சில குறள்களை நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனாலும் போதனை செய்வது எனக்குப்பிடிக்காத ஒன்று. உலகத்தில் ஒவ்வொருவரும் இன்னொருவருக்குப் போதனை செய்வதைத்தான் விரும்புவார்கள். பதவி மமதைப் பிடித்தவர்களுக்குத் தன்னடக்கம் என்பது தெரியாது. அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் மாதிரி சுற்றித் திரிவார்கள். ரோடில் நடந்துசென்றால் எல்லோரும் ஒன்றுதான்.

நான் சமீபத்தில் படித்த ஒரு குறள்.

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

எனக்கு என்னமோ இந்தக் குறளைப் படிக்கும்போது வள்ளூவர் தெரியாமல் எதையோ சொல்கிறார் என்றே எனக்குத் தோன்றியது. வள்ளுவரை இழிவுப் படுத்துவதாக யாரும் நினைக்கக் கூடாது. எனக்கு அந்தத் தகுதியும் கிடையாது. ஆனால் இந்தக் குறளைப் படித்ததிலிருந்து எனக்கு என்னமோ உறுத்திக்கொண்டே இருக்கிறது.

முதலில் இந்த உலகத்தில் தோன்றுவது என்பதே நம் கையில் இல்லை. ஒரு அணும் பெண்ணும் உள்ள இச்சையில் ஒவ்வொருவரும் பூமியில் அவதரிக்கிறோம். அதேபோல் நம் பிள்ளைகளும் அப்படித்தான் பிறக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எப்படி புகழோடு தோன்ற முடியும்? புகழ் என்பதே அபத்தமானது.

கொஞ்ச நாட்கள் முன் டிவியில் பல நிகழ்ச்சிகளில் ஒருவர் அடிக்கடி தோன்றிகொண்டே இருப்பார். அவர்தான் ஒரு தேசிய வங்கியில் தலைவர் பதவியில் இருந்தவர். எல்லா விழாக்களுக்கும் வங்கியிலிருந்து பணத்தை வாரி இழைப்பார். அதைப் பார்த்து அவரை எல்லோரும் கூப்பிடுவார்கள்.

ஒரு முறை நகுலன் என்ற படைப்பாளிக்கு விருது வழங்கினார்கள். சாந்தோம் விருது. நகுலனுக்கு கூச்சமான கூச்சம். அவர் உடல் நடுங்கத் தொடங்கியது. எப்படி மேடையில் போய் அமர்ந்து விருது வாங்கப் போகிறோம் என்ற அச்சமும் அவரிடம் இருந்தது. ஆனால் அவர் பக்கத்தில் நம் வங்கித் தலைவர். அவருக்கு நகுலனைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவர் புத்தகத்தை அவர் எழுத்துக் கூட்டிக்கூட படித்திருக்க மாட்டார். அப்படிப்பட்டவர் கையிலிருந்துதான் நகுலன் விருது வாங்கப் போகிறார்.

விருது வழங்கும் தருணம் வந்தபோது நகுலன் தடுமாறி எப்படியோ போய் நின்று விருதை வாங்க நின்றுவிட்டார். நம்முடைய வங்கித் தலைவரோ அந்தத் தருணத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். டிவியில் அவர் முகம் பளிச்சென்று விழ சிரித்தபடியே நகுலனுக்கு விருதை வழங்குகிறார். இப்படி புகழோடு தோன்றிய வங்கித் தலைவர் இறுதியில் சிறையில் கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டார். சில ஆண்டுகளுக்குள்ளாகவே எப்படி நிலைமை மாறி விட்டது.

இப்போது சொல்லுங்கள் திருவள்ளுவர் எந்தத் தோன்றலைச் சொல்கிறார். இது மாதிரி அர்த்தமே சரியாக வராத குறளை நான் படித்ததே இல்லை. புகழ் என்பது ஒன்றுமில்லை. அதே போல் தோன்றுதலும் ஒன்றுமில்லை.

ஒருவர் புகழோடுதான் தோன்ற வேண்டும் என்பதில்லை. அதேபோல் புகழ் என்பதும் ஒருவித அபத்தம்தான். ஏன் வள்ளுவர் இதுமாதிரி ஒரு குறளை படைத்தார்? இந்தக் கேள்வி அடிக்கடி என்னிடம் தோன்றி கொண்டே இருக்கிறது.