சாவதற்கு
பயமில்லாவிட்டாலும்
வருத்தமாக
இருக்கிறது.
புலன்கள் ஐந்தைக் கொடுத்து
ஒரு புல்லரிக்கும் உலகத்தை
நிரந்தரம் போல் காட்சியாக்கிப்
பின்
கண்களை மூடி விடக்
காத்திருக்கும்
கடவுளிடம் கோபம்
தடுத்தாலும் வருகிறது..
ஒரு வேளை ஆறுக்கும்
மேல் ஏழாவதாக
அறிவொன்றைக்
கொடுக்கமாட்டானா?
இறந்தவுடன் எனக்கே
சொந்தமான
எழிலுலகம் இன்னொன்றைக்
கண்டடைந்து
செத்தாலும் சாகாமல்
அங்கே
சலிக்கும் வரை
வாழ்ந்திருக்க!!! |
எதையாவது சொல்லட்டுமா….74
1984ஆம் ஆண்டு வாக்கில் நான் சம்பத்தைச் சந்தித்திருக்கிறேன். 2 முறைகள் சந்தித்திருப்பேன். ஒருமுறை ஞாநி நடத்திய கூட்டம் ஒன்றில். பாதல்சர்க்கார் பற்றிய கூட்டம் அது என்று நினைக்கிறேன். அப்போது சம்பத் என்பவர் சத்தமாக விவாதம் செய்ததாக நினைப்பு. எதைப் பற்றி பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பதைப் பற்றி ஞாபகம் இல்லை. அடுத்த முறை சம்பத்தை ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தின்போது, கூட்டம் முடிந்து நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பேசிக்கொண்டு வந்தேன். ஆனந்தவிகடன் நடத்த உள்ள நாவல் போட்டியில் நாவல் எழுதப் போவதாக சம்பத் குறிப்பிட்டார். பின் சம்பத்தைப் பார்க்கவில்லை. சம்பத்தைப் பற்றி அவர் நண்பர்கள் பேச பேச ஆச்சரியமாக இருக்கும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் சம்பத்தைப் பற்றி கதை சொல்லியிருக்கிறார்கள். நானும் சம்பத் எழுதியவற்றை தேடிக் கண்டுபிடித்துப் படித்திருக்கிறேன். ழ வில் அவர் கவிதை ஒன்று ஏழு வைடூரியங்களைச் சேர்த்து கோர்த்ததுபோல் மூளையில் இருக்குமென்று எழுதியிருப்பார். தொடர்ந்து அவர் குறுநாவல்களில் மண்டைக்குள் முணுக்கென்று வலிப்பதுபோல் எழுதியிருப்பார். பிறகு மரணத்தைப் பற்றியே எழுதியிருப்பார். அவர் எழுத்தில் பிரிவு பெரும் துயரமாக இருக்கும். ஒரு கதை தி ஜானகிராமனின் அம்மா வந்தாள் கதையை ஞாபகப்படுத்தும்.
சம்பத் எப்படி எழுதினாரோ அப்படியே வாழ்ந்தார். அவருடைய முதல் நாவல் இடைவெளி வரும்போது அவர் இல்லை. திரும்பவும் அந்த நாவல் முழுவதும் மரணத்தைப் பற்றி அவர் தேடியிருக்கிறார். மரணத்தைப் பற்றி எழுதி எழுதி மரணத்தையே தழுவிவிட்டார். சம்பத் மரணம் நடந்தபோது, ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி பரபரப்பாகப் பேசப்பட்டது. அதனால் சம்பத் மரணத்தைப் பற்றி பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அசோகமித்திரன் சம்பத் மரணத்தைப் பற்றி குமுதத்திலோ கணையாழியிலோ குறிப்பிட்டிருக்கிறார்.
கணையாழியில் எழுதும்போது, சுஜாதாவைப்போல் திறமையானவர் சம்பத் என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். ஆனால் சுஜாதாபோல் திறமையானவர் இல்லை சம்பத். பிஎ இக்னாமிக்ஸ் படித்துவிட்டு, கிடைத்த நல்ல வேலையை உதறித் தள்ளியவர். அவர்குடும்பத்தாருக்கு அவரைப் பிடிக்காமல் போனதற்கு குடும்பத்தாரைப் பற்றியே அவர் எழுத ஆரம்பித்துவிட்டார். சம்பத் அவர் குடும்பத்தாருக்கு வேண்டாதவராகிவிட்டார். அவர் எழுத்தையும் அவரையும் அவர் குடும்பத்தார் மதிக்கவில்லை. இன்னும்கூட அவர் கதைகளைப் புத்தகமாகக் கொண்டுவர அவர் குடும்பத்தினர் விரும்பவில்லை. சம்பத் பற்றி பேசக்கூட அவர் தயாராக இல்லை.
ஐராவதம் பணிபுரிந்த ரிசர்வ் வங்கிக்குச் சென்று மணிக்கணக்கில் சம்பத் பேசிக்கொண்டிருப்பார். ஐராவதத்தைச் சுற்றி இருந்தவர்களுக்கு தர்ம சங்கடம் ஆகவிடும்.
இந்திராபார்த்தசாரதியுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் சொன்ன ஒரு விஷயம் என் ஞாபகத்திற்கு வருகிறது. சம்பத் ஒரு நாவலை எழுதிக்கொண்டு, படிக்கும்படி இ.பாவைத் தொந்தரவு செய்தாராம். இ.பாவும் படித்துவிட்டு, எழுதியது சரியில்லை என்று சொல்லிவிட்டாராம். சொல்லிமுடித்து சிறிது நேரத்திற்குள் ஏதோ பேப்பர் பொசுங்கும் வாசனை வர ஆரம்பித்ததாம். இ.பா சமையல் அறைக்குப் போய்ப் பார்த்தபோது, சம்பத் அவர் எழுதிய நாவலை அடுப்பில் பொசுக்கிக் கொண்டிருந்தாராம்.
கொடை
கடல் பார்க்கவும்
அலைகளில் கால் நனைக்கவும்
ஆசைப்படாதவர் உண்டா
அருவியின் முகத்துவாரம்
இன்னும் அருமையாக இருக்கும்
அல்லவா
கங்கை,காவிரி,வைகை
சமுத்ரநாயகனுக்கு
எத்தனை நாயகிகள்
தேங்கிய தண்ணீரை
பார்க்கப் பிடிப்பதில்லை
குளத்தில் நீந்தும் மீனுக்கு
மார்க்கெட்டில் மவுசு அதிகம்
ஏரியில் பறவைகள் கூட்டம்,
மக்களின் தாகத்தை தீர்க்கவும்
பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கவும்
நிறைஞ்ச மனசு வேணும்
தோணி உண்டு ஓடையில் பயணிக்க
நீங்கள் துடுப்பை வலிக்க வலிக்க
உங்கள் ஜாதகத்தையே சொல்லும்
ஓடை
வானத்தின் கொடை தான்
மக்களின் தாகத்தை
தணித்துக் கொண்டிருக்கிறது.
கூர்
பாதசாரிகள் கவனத்துடனேயே
சாலையை கடக்கிறார்கள்
எந்த வாகனத்தில் சென்றாலும்
கோயிலைக் கண்டால்
கன்னத்தில் போட்டுக் கொள்ள
மறப்பதில்லை வெகுஜனங்கள்
சீரூடை அணிந்த
மாணவர்களின் மிதிவண்டி
வேகமெடுக்கிறது
பள்ளியை நோக்கி
மின்வெட்டு,பெட்ரோல் தட்டுப்பாடு
சகலத்தையும்
எப்படி பொறுத்துக் கொள்கிறார்கள்
சாமானியர்கள்
வீட்டின் பெரும்பகுதியை
ஆடம்பரப் பொருட்கள் தான்
அடைத்துக் கொண்டுள்ளது
வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற
ஆங்கிலம் தான்
இன்னும் நம்மை
ஆண்டு கொண்டிருக்கிறது
இதிகாச நாயகர்களை
கார்ட்டூன் பாத்திரமாக்கி
கேலி செய்கிறார்கள்
விட்டேத்தியாய்
இருக்கும் வரை தான்
வீட்டில் இருக்கலாம் போல.
ப.மதியழகன்
துருக்கிப் படை வீரர்களுக்கான மயானம்
A. Thiagarajan
திருமதி சிரிஷ் பை அவர்களை அவரது சிவாஜி பார்க் இல்லத்தில் ஹைஜின் பூஜா மலுஷ்டே அவர்களுடன் ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தேன்.
பூஜாமலுஷ்டே விற்கு நன்றி – இந்த சந்திப்பிற்கும் , உரையாடலில் பல
இடங்களில் பை அவர்களுக்காக இக்விவலேன்ட் ஆங்கில வார்த்தைகளை உடனுக்கு உடன்
எனக்குச் சொல்லியும் உதவியதற்கு.ஹைக்கூ என்பது கவிதை அல்ல ; அது ஒரு கவித்துவமான ஆச்சர்யப் படல் என்று ஆரம்பித்தார் சிரிஷ் பை.மூன்றுவரிப் பாடல்கள் எல்லாம் ஹைக்கூ ஆகி விட முடியாது.ஹைக்கூ ஒரு சிந்தனைத் துளியோ அல்லது ஒரு உணர்வு மட்டுமோ அல்ல.ஆரம்பத்தில் இயற்கை பற்றி மட்டுமே எழுதி வந்தார். அவர் எழுத ஆரம்பித்த
காலத்தில் ஹைக்கூ மராத்திய மொழியில் அறிமுகப்படாது இருந்தது. ஹைக்கூ வை
காய்கூஸ் ( மராத்திய மொழியில் எதற்காக என்று பொருள் வரும் ஏளனத்தில் )
என்றும், இ ஸ் ஸா என்ற மாபெரும் ஜப்பானிய ஹைஜீன் அவர்களை குஸ்ஸா ( கோபம்
என்ற பொருளில்) என்றும் கேலி செய்து சந்தோஷப் பட்ட பெரிய மராத்திய கவிகளும்
எழுத்தாளர்களும் சிரிஷ் பை அவர்களையும் என்ன எழுதுகிறாய் என்று ஏளனமாகக்
கேட்டதுண்டு என்று நினைவு கூர்ந்தார் சிரிஷ் பை.சிரிஷ் பை ஒரு பெரிய பெயர் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர். பத்திரிகை
ஆசிரியாராக வெகு காலம் பணி ஆற்றியவர். இவரது தந்தை ஒரு பெரிய
பொதுநலவாதியாகவும், பத்திரிகையாளராகவும், பேச்சாளராகவும், கவியாகவும்,
மிகவும் மதிக்கப்பட்ட பிரபலமாகவும் இருந்தார். ஜனாதிபதி பரிசு பெற்ற நீண்ட
நாள் ஓடி பெயர் பெற்ற ஷ்யாம்சி ஆச்சி என்ற படம் சிரிஷ் பையின் தந்தையார் தயாரித்ததே.தந்தையின் வழி எழுத்துலகில் வந்த சிரிஷ் பை தனக்கு ஹைக்கூ மூலம் பெயரும் புகழும் வந்த போதுதந்தை இல்லாததை வருத்தத்துடன் நினைவு கூர்ந்தார்.மற்ற கவிதைகள் எழுதுவதை தற்போது முற்றிலும் நிறுத்தி விட்டதாகவும் ஹைக்கூ மட்டுமே எழுதுவதாகவும் சொன்னார்.ஜன்னலின் கதவில் அமர்ந்து கா கா என்று கரையும் அந்த சொற்களிலும் சோகம் இருப்பதை ஹைக்கூ காட்ட முடியும்.ஒருவர் பூக்களை அவ்வளவு வேகமாகப் பறிக்கிறார் – அந்த வேகத்தில் (
வையலன்சில்) , பூக்களுடன் சில மொட்டுகளும் பறிக்கப் பட்டன. தற்போது
நடக்கும் சிறு பெண்களின் கற்பழிப்பு தான் நினைவிற்கு வருகிறது. இதுவே
ஹைக்கூ அல்லாமல் ஒரு கவிதையானால், இந்த விஷயத்தை வெகு ஓபனாகவே
சொல்லியிருக்க முடியும் – என்கிறார் சிரிஷ் பை.விஜய் டெண்டுல்கர் என்ற ஒரு பெரும் எழுத்தாளர் ஜப்பானிய ஹைக்கூ
மொழிபெயர்ப்பு புத்தகம் ஒன்றை தனக்கு அன்பளித்ததே தனது ஹைக்கூ பயணத்தின்
ஆரம்பமாக ஆனது. ” அதை படித்து படித்து அதில் ஒரு பேரானந்தம் கண்டாதாகக்
கூறுகிறார் பை. தானும் எழுத ஆசைப் பட்டு எழுத ஆரம்பித்தார். ஆரம்பத்தில்
தான் எழுதியது எதுவும் ஹைகூவாகவே இல்லை என்று தனக்கே தெரிந்தது.
கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பிறகு ஒரு நாள் தனியாக தோட்டத்தில் ஹைக்கூ எழுத
வரவில்லையே என்று வருத்தத்தில் இருந்த போது, திடீரென அவரது முதல் ஹைக்கூ
பிறந்தது என்கிறார் பை. மேலே சொன்ன காக்கை பற்றியதுவே அது.அதன் பின்னர் ஹைக்கூ தானாகவே சரளமாகவே வந்தது என்கிறார். சுபாவமாகவே எந்த ஒரு அதீத உழைப்பு, முயற்சி இன்றி வந்தது ஹைகூக்கள்.ஹைக்கூ என்பது கஷ்டப்பட்டு “கம்போஸ்” செய்யப் படுவது இல்லை.
சொல்லாட்சி மிகவும் முக்கியமானது. எந்த சொற்களை எவ்வாறு எங்கு பிரயோகம்
செய்கிறோம் என்பது ஒரு ஹைகூவை ஆக்கவோ அழிக்கவோ கூடும். எவ்வாறு முடிப்பது
என்பதும் ஹைகூவில் க்ரிடிகள் ஆனா விஷயம்.ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள், பல விருதுகள், மராத்திய
மாநிலத்தின் எல்லா இடங்களில் இருந்தும் ஹைக்கூ சொல்லவும், அது பற்றி
பேசவும் முடிவில்லா அழைப்புகள்.83 வயதை எட்டிய சிரிஷ் பை வெளியில் அதிகம் செல்வதில்லை; ஹைக்கூ மட்டுமே எழுதிகிறார்.ஹைக்கூ எழுத விரும்பும் ஆர்வலர்கட்கு அவர் சொல்வது-ஜப்பானிய ஹைக்கூ நிறைய படியுங்கள்- ஸ்டடி செய்யுங்கள்.மீண்டும் மீண்டும் படியுங்கள்
சாதாரண கவிதைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று உணருங்கள்.இது இல்லாமல் ஹைக்கூ என்பது என்ன என்று தெரிந்து கொள்ளாமலே போய்விடுவீர்கள்.வார்த்தைப் பிரயோகங்களை கவனியுங்கள். எழுத ஆரம்பியுங்கள்.அனாவசியமாக கூடுதலாக ஒரு வார்த்தை இல்லாமல் எழுதுங்கள். மீண்டும் எழுதுங்கள். எழுதிக்கொண்டே இருங்கள்.இதோ சிரிஷ் பை எழுதிய சில ஹைக்கூ –மாலை சூரியன் மஞ்சளில் தொலைந்த மஞ்சள் பட்டாம் பூச்சி, நான் குனிந்த பார்த்த பொது, நிழலில் தென்பட்டது.வேகமாகச் செல்லும் கார் ஒன்றின் கண்ணாடியில் ( விண்ட்ஸ் க்ரீனில் )
ஒரு சிறிய பட்டாம்பூச்சி மெதுவாக உள்வந்து அமைதியாக உட்கார்ந்தது.
இலைகளற்று பூக்களற்று….
சலவைக்கல்லில் குமித்துக் கிடக்கும்
ஈரத் துணியில்
மடிப்புக் கலையாமல் காத்திருக்கிறது
எனது தனிமை
உலர்த்தும் கணந்தோறும் நெடுகப் படர்கிறது
வான் நோக்கி மௌனக் கொடி
இலைகளற்று, பூக்களற்று
நட்சத்திரங்களைத்
தொட்டுவிடும் வேட்கையோடு
இளங்கோ
இருப்பு
பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்
நாம் பறவை மரம்
கிளைஅதிர
எழும்பிப்பறக்கின்றது பறவை
கிளையிலிருந்து
உதிர்கின்றது ஒரு இலை,
அதன்சிறகிலிருந்து
உதிர்கின்றது ஒரு இறகு
இலை
நமது
இருப்பிற்கான ரசீது
இறகு
நாம்
பறப்பதற்கான பயணச்சீட்டு
ரவிஉதயன்
சுத்தம் சோறு போடும்
வீட்டைச் சுத்தம் பண்ணி நாளாச்சு