ஒரு தமிழ் அறிஞர்: சுவாமி சித்பவானந்தர்

ஒரு தமிழ் அறிஞர்:
சுவாமி சித்பவானந்தர்
பிரபு மயிலாடுதுறை


சில ஆண்டுகளுக்கு
முன்னால்,நவீன விருட்சம் ஆசிரியர் திரு.அழகியசிங்கருடன் திருமறைக்காடு பகுதியில் பயணித்துக்
கொண்டிருந்தேன்.கடற்காற்றின் உப்பு முகத்தில் வீசும் மதியப் பொழுதில் கோயக்கரை நோக்கி
செல்லும் சாலையில் ஒரு உப்பளத்தில் நின்றிருந்தோம்.உப்பு படிகமாகி குவித்து வைக்கப்பட்டிருந்தது.அக்குவியல்
கதிரொளியில் ஒளிர்ந்து ஒளியை பிரதிபலித்து அடர் வெண்நிறம் கொண்டிருந்தது.வாகனத்தை நிறுத்தி
விட்டு உப்பளத்துக்குள் சென்றோம்.கரங்களில் உப்பை ஏந்தினோம்.மெல்லிய எடை கொண்டு கரத்துக்கு
குளிர் ஸ்பரிசத்தை அளித்தது பிடி உப்பு.அதன் கரடுமுரடான மேற்புறம் அழுத்தினால் அமுங்கித்
தூளாகியது.லூயி ஃபிஷரின் காந்தி வாழ்க்கை நூலின் உப்பு சத்தியாக்கிரகம் குறித்த அத்தியாயம்
பற்றி சொன்னேன்.உப்பளப் பணியாளர்களான பெண்கள் நாங்கள் ஆர்வத்துடன் உப்பளச் செயல்பாடுகளை
கவனிப்பதைப் பார்த்து விட்டு உப்பு பாக்கெட்டுகளை கொண்டு வந்து கொடுத்து வீட்டுக்கு
எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறினர்.உப்பு சாரமற்றுப் போனால் வேறு எதில் சாரம் இருக்கும்
என்பது விவிலிய வாக்கியம்.
அப்போது ஓர் ஐரோப்பிய
தம்பதி சைக்கிளில் வந்தனர்.ஃபிரான்ஸ் நாட்டுக் குடிமக்கள் அவர்கள்.பாரிஸில் புறப்பட்டு
துருக்கி,அரேபியா,ஈராக்,ஈரான்,ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தேசங்களில் சைக்கிளிலேயே
பயணித்து வாகா எல்லைச் சாவடி வழியே இந்தியாவுக்குள் வந்துள்ளனர்.அமிர்தசரஸிலிருந்து
மும்பை.அங்கிருந்து சென்னை.புதுச்சேரி,காரைக்கால் வழியே கோடிக்கரை.சரளமாக ஆங்கிலம்
பேசினர்.உலகெங்கும் உலவும் நீங்கள் இப்போது பயணிக்கும் நிலம் தமிழ் என்ற உயர்தனிச்செம்மொழியை
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உச்சரிக்கும் பெருமை கொண்டது என தமிழையும் தமிழ் நிலத்தையும்
அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.உலகின் மிகச் சில நிலப்பகுதிகளுக்கு மட்டுமே
உரிய பெருமை இது.
நாம் நமது மொழி
பெருமை மிக்கது;சிறப்பு மிக்கது என்பதையே திரும்பத் திரும்ப கூறுகிறோம்.ஆனால் ஒரு செம்மொழியை
உடையவர்களாய் நமது செயல்பாடுகள் அமையவில்லை.தமிழ் நூல்கள் 2000 பிரதி விற்பனையாவது
என்பதே மாபெரும் சாதனையாக பேசப்படுகிறது.உலகெங்கும் 7 கோடி தமிழ் பேசும் மக்கள் இருக்கும்
நிலையில் இவ்வளவு குறைவான நூல் விற்பனை என்பதே சூழலை உணர்த்தும் உரைகல்.தமிழ்நாட்டின்,பத்தாம்
வகுப்பு மாணவனின் பாடப்புத்தகத்தையும் விடைத்தாளையும் பார்த்தால் நம் மொழி எவ்வளவு
மழுங்கடிக்கப்பட்டுள்ளது என அறிய முடியும்.நம்மில் எத்தனை பேர் வாழ்வில் ஒரு முறையாவது
1330 குறளையும் வாசித்திருப்போம்?சிலப்பதிகாரத்தை கதையாக அல்லாமல் இளங்கோ அடிகளின்
பிரதியாக படித்திருப்போம்?கம்ப ராமாயணம் எத்தனை பேர் வீட்டில் உள்ளது?
செய்யுள் இயற்றும்
பண்டிதர்களுக்கு உரியதாயிருந்த மொழியை உரைநடைக்கு கொண்டு வந்த முதன்மையான பணியை ஆற்றியவர்களில்
முக்கியமானவர் சுவாமி சித்பவானந்தர்.ஆன்மீகத் துறையிலும் சமூக முன்னேற்றச் செயல்பாடுகளிலும்
அவர் பங்களிப்பு எவ்வளவு பெரியதோ அதை விடப் பெரியது தமிழ் உரைநடையில் அவரது பங்களிப்பு.தமிழ்நாட்டில்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் அத்வைதமும் சுவாமி விவேகானந்தரின் வேதாந்தமும் மக்களைச்
சென்றடைந்த போது விவேகானந்த இலக்கியத்தை தமிழுக்கு கொண்டு வந்தவர்களில் ஒப்பாரும் மிக்காரும்
இல்லாதவர் சுவாமி சித்பவானந்தர்.மொழியில் நீண்ட காலம் செயல்பட்ட வரலாற்றினை உடையவர்.இதழியல்,சிறுவர்
நூல்,அபுனைவு,சரிதம்,புனைவு,நாடகம் மற்றும் உரைநூல் ஆகியவற்றில் படைப்பூக்கத்துடன்
ஈடுபட்டவர் சுவாமி சித்பவானந்தர்.
நான் ஐந்தாம் வகுப்பு
மாணவனாயிருந்த போது, சுவாமி சித்பவானந்தரின் ‘ஸ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்’ என்ற நூலை
எனது தந்தை வாங்கித் தந்தார்.வீட்டுக்கு வந்தவுடனே வாசிக்கத் தொடங்கினேன்.அன்று இரவுக்குள்
பாதி புத்தகத்தை வாசித்தேன்.மீதியை மறுநாள் காலை வாசித்து முடித்தேன்.சுவாமி விவேகானந்தரை
மிகச் சரியாக அறிமுகப்படுத்தும் தமிழ் நூல் அது.அன்று வாசித்த பல பகுதிகள் இன்னும்
நினைவில் உள்ளன.’ஆளுடைய அண்ணலை அடைதல்’,’தேச சஞ்சாரம்’,’பாரதத் தாயின் திருவடியில்’,’அலைகடல்
தாண்டுதல்’,’நானாவித அலுவல்கள்’ ஆகிய அந்நூலின் அத்தியாயத் தலைப்புகளே கவித்துவமாக
இருக்கும்.
பகவான் புத்தரைப்
பற்றி அவர் எழுதிய நூல் ‘உலகை உய்வித்த உத்தமன்’.சித்தார்த்தன் ஒரு கடைவீதியை காணும்
காட்சியை சித்பவானந்தர் கீழ்க்கண்டவாறு சித்தரித்திருப்பார்:
‘’வழக்கமான வீதிகளில்
நிகழ்ந்துவந்த நடமாட்டங்களை அரசகுமாரன் காண்கின்றான்.ஆடம்பரமான ஆடைஆபரணங்கள் உலகில்
உள்ள எல்லா மக்களிடத்தும் கிடையாது.எளிய வாழ்க்கைவாழ்கின்றவர்களே உலகில் பெரும்பான்மையோர்
ஆகின்றனர்.கடைவீதியில் பண்டங்களை விற்பதும் வாங்குவதும் விரைவாக நடைபெறுகிறது.விற்பவன்
விலையைச் சிறிது கூட்டிச் சொல்வதும் வாங்குபவன் அதைச் சிறிது குறைத்துக் கேட்பதும்
யாண்டும் நிகழ்கிற காட்சியாகும்.கன்னான் பாத்திரங்களைத் தட்டி உருவாக்கிக் கொண்டிருக்கிறான்.கொல்லன்
இரும்பைக் காய்ச்சி அடித்துக்கொண்டிருக்கிறான்.மளிகைக்கடைக்காரன் தானியங்களை அளந்து
கொட்டி பணத்தை வாங்கிச் சுண்டிப்பார்த்துப் பையில்போடுகிறான்.பழவகைகளைக் கூடையில் வைத்து
விற்றுக்கொண்டு வருகிறான் ஒருவன்.நன்றாகத் துலக்கி மினுக்கெடுத்த நீர்க்குடங்களைத்
தலையில் வைத்துக்கொண்டு உல்லாசமாகப் போகின்றனர் பெண்பாலர் பலர்.ஒட்டகத்தின் மீது உட்கார்ந்துகொண்டு
ஒய்யாரமாக அசைந்து அசைந்து போகிறான் ஒரு வழிப்போக்கன்.வீதியில் தூசைக் கிளப்பும் வண்ணம்
வண்டியோட்டுகிறான் வண்டிக்காரன்.வண்டிக்கு முன்னே நடப்பவர்களை வழிவிடும்படி இடையிடையே
அவன் கத்துகிறான்.பள்ளியில் பிள்ளைகளில் சிலர் உற்சாகத்துடன் படிக்கின்றனர்.இன்னும்
சிலர் அரைமனதுடன் படிக்கின்றனர்.நெற்றி வியர்வை நிலத்தில் விழ மூட்டை சுமைக்கிறான்
ஒருவன்.உழைக்க மறுதலித்துக் கொண்டு மற்றொருவன் வெறுமனே சோம்பேறியாக உட்கார்ந்திருக்கிறான்.மாறுவேடம்
பூண்டு வந்துள்ள சித்தார்த்தனுக்கு வாழ்க்கையைப் பற்றிய சில உண்மைகள் விளங்குகின்றன.வாழ்க்கையில்
ஊக்கம் படைத்தவர்கள் இருக்கிறார்கள்;சலிப்படைந்தவர்கள் இருக்கிறார்கள்.இன்பப்படுபவர்கள்
உலகில் இருக்கிறார்கள்;துன்பப்படுபவர்களும் இருக்கிறார்கள்.வாழ்வில் வெற்றியடைபவர்களும்
இருக்கிறார்கள்;தோல்வியடைபவர்களும் இருக்கிறார்கள்.”
படைப்பூக்கம் கொண்ட
மொழியில் இச்சித்தரிப்பு உள்ளதைக் காணலாம்.
திருவாசகத்துக்கு
சுவாமி சித்பவானந்தர் எழுதியுள்ள உரை சிறப்பானது.இந்து ஞான மரபை விளக்கி ஒரு விரிவான
குறிப்பை அதன் முன்னுரையில் எழுதியிருப்பார்.ஷண்மதங்கள் எவை?ஆறு தரிசனங்களைப் பற்றிய
விளக்கம்.புராணங்களின் உருவாக்கம்.இதிகாசங்கள்.அவற்றின் மேன்மைகள் ஆகியவற்றைப் பற்றிய
குறிப்பை வழங்கியிருப்பார்.பகவத் கீதைக்கு அவர் எழுதிய உரை மிகப் பிரபலமானது.சுவாமிகள்
வாழ்ந்த காலத்தில் அரசியல் காரணங்களுக்காக,பகவத் கீதை மீது முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு
நிதானமான அறிவார்ந்த முறையில் சுவாமிகள் அளித்துள்ள விளக்கமாக அம்முன்னுரை அமைந்துள்ளது.கீதை
கொலை நூலா?என்ற வினாவை எதிர்கொண்டு அவர் அளித்துள்ள விடை கீதையைப் புரிந்து கொள்ள மிகவும்
முக்கியமானது.
கல்வி என்றொரு
சிறுநூலை சுவாமிகள் இயற்றியுள்ளனர்.பள்ளிக்கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என தன் அபிப்ராயங்களை
அதில் தெரிவித்திருப்பார்.மாணவர்களின் கல்விக்காக ஆகும் செலவை கல்வி நிலையம் அமைந்துள்ள
ஊரின் செல்வந்தர்களும் பொதுமக்களுமே ஏற்க வேண்டும்.மாணாக்கருக்கு உணவு தயாரித்து வழங்கும்
பணியை ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டும்.ஆண்டுக்கொரு முறை பத்து நாட்கள் கடற்பயணம் மேற்கொள்ளும்
வாய்ப்பு மாணாக்கருக்கு வழங்கப்பட வேண்டும்,இது போன்ற பல விஷயங்களை அந்நூலில் பேசியிருப்பார்.
சுவாமி சித்பவானந்தர்
தேசத்துக்காகவும் தர்மத்துக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர்.குருதேவர் ராமகிருஷ்ணர்,சுவாமி
விவேகானந்தர் மரபில் வந்தவர்.ராமகிருஷ்ணரின் செய்தியை தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும்
கொண்டு செல்வதை தன் வாழ்நாள் பணியாக மேற்கொண்டவர்.அவர் உருவாக்கிய கல்வி அமைப்புகள்
சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.தனது பல்வேறு விதமான அலுவல்களைத் தாண்டி துடிப்பான
மொழி கொண்ட படைப்பாளியாகவும் அறிஞராகவும் அவர் இருந்துள்ளார்.ஸ்ரீ விவேகானந்த ஜீவிதம்,ஸ்ரீ
ராமகிருஷ்ண சரிதம்,ஸ்ரீ சாரதா தேவியாரது சரிதம்,விவேகானந்த உபநிஷதம்,இராமாயணம்,மகாபாரதம்,திருவாசகம்
உரை,பகவத் கீதை உரை ஆகிய அவரது ஆக்கங்கள் முக்கியமானவை.

ஒரு தமிழ் அறிஞரான
சுவாமி சித்பவானந்தரிடமிருந்து தமிழ்ச் சமூகம் பெற்றுக் கொள்ள வேண்டியவை பல உள்ளன. 

ஏழு வரிக் கதை

ஏழு வரிக் கதை
நேதாஜிதாசன்

1) சிசிபஸ் 
அந்த கிராமத்திற்கு அருகே ஒரு பெரிய மலை உண்டு.அதன் அடிவாரத்தில்  அவன் வசித்து வந்தான்.அவனுக்கு திருமணம் முடிந்திருந்தது.ஒரு ஆண் குழந்தையும் இருந்தது.இப்போது அந்த குழந்தை சுயமாக முடிவெடுக்கும் வயதில்.யாரின் உபதேசமோ தெரியவில்லை.அவன் மனதில் கடும் உக்கிரம் குடிகொண்டது.தன் ரத்தமே நீர்த்து போகும் படி பிராந்தி.தன் முகமே மறைந்து போகும்படி கஞ்சா அடைத்த சுருட்டின் புகை.ஒவ்வொரு இரவுக்கும் ஒவ்வொரு பெண்கள் என மாறிப்போனான்.நாள்கள் செல்ல செல்ல நிலைமை மோசமாகி கிராமமே இவனால் அழியக்கூடிய நிலைக்கு வந்தது.ஆனாலும் அவனுடைய குடும்பத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை.ஒரு நாள் கடவுள் வந்து அவனுக்கு ஒரு தண்டனை கொடுத்தார். அது தன் ஆயுள் காலம் முழுவதும் அங்கு உள்ள மலையடிவாரத்திற்கு சென்று  கீழே உள்ள பெரிய வட்டக்கல்லை மேலேயும் கீழேயும் உருட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பது.அவனால் இந்த அர்த்தமில்லா தண்டனையை சில மாதங்கள் கூட செய்ய முடியவில்லை.கடவுள் அவனுக்கு பசி,தாகம்,வியாதிகள் என அனைத்திலும் இருந்து விலக்கு அளித்திருந்தார் இருப்பினும் அவன் இந்த தண்டனையை எதிர்க்க எண்ணி மலை உச்சியில் இருந்து குதித்து உயிர் விட்டான்.
எம்.ரிஷான் ஷெரீப்
2. கல்லறையூர் ஒற்றைக் கிழவியின் கதை
‘சின்ன வயசுலருந்தே வீட்டைச் சுற்றி பிணங்கள் புதைக்கப்பட்டிருந்ததால எந்தப் பயமுமே இருக்கல. இந்த ஊர்ல எல்லா வீடுகள்லையுமே அப்படித்தான். அவங்கவங்க வீடுகள்ல செத்தவங்கள, அவங்கவங்க வீடுகளுக்குப் பக்கத்துலேயே புதைச்சு, பெயர் குறிச்சு, கல்லறை கட்டிடுவாங்க. அப்படிக் கட்டிக் கட்டியே, புதுசா பிணங்களைப் புதைக்க வீட்டைச் சுற்றி இடமில்லைன்னு ஆனதுக்கப்புறம், ஒவ்வொரு குடும்பமா அவங்கவங்க பரம்பரை வீடுகளை விட்டுட்டு, வேற ஊர்களுக்குக் கிளம்பிப் போயிட்டாங்க. இத்தனை வருஷமா யாருமே திரும்பி வரல்ல. இந்த ஊர்ல, யாருமேயில்லாத பழங்கால பங்களாக்களோட இப்படியொரு கிழவி தனிச்சிருக்கா. நிலங்களைச் சுற்றி வளைச்சிடலாங்குற எண்ணத்தோட நகரத்துல இருந்து நீ வந்திருக்கிறாய். வந்ததுக்கு ஒரு உபகாரம் பண்ணிட்டுப் போ. இப்படிப் பக்கத்துல ஒரு கல்லறை தோண்டி என்னை அடக்கம் பண்ணிட்டுப் போ. செத்து ரெண்டு வருஷமாகியும் கல்லறை இல்லாம ஆன்மாவா அலைஞ்சுட்டிருக்கேன். அடக்கம் பண்ணலைன்னா உன்னை விட மாட்டேன்.’

தினமணி மருத்துவமலர் 2016

அழகியசிங்கர்

தினமும் நானும் ஒரு இலக்கிய நண்பரும் அசோக்நகரில் உள்ள ஒரு பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வோம். அவருடன் பேசிக்கொண்டே செல்வதால் என் அறிவு விருத்தி ஆவதாக நினைத்துக்கொள்வேன். நான் அவரை ஒரு அறிவாளியாகவே கருதுகிறேன். நாங்கள் நடந்தபிறகு சரவணபவன் ஓட்டலுக்குச் சென்று ஒரு சாம்பார் வடை ஒரு காப்பி வாங்கி இருவரும் பகிர்ந்து உண்போம்.  சரவணபவன் பக்கத்தில் உள்ள பத்திரிகைக் கடையில் எதாவது ஒரு பத்திரிகை வாங்குவதற்கு பார்த்துக் கொண்டிருப்பேன்.
அன்று என் கண்ணில் பட்டது தினமணியின் மருத்துவ மலர் 2016 என்ற புத்தகம்.  அதன் விலை ரூ.30 தான்.  192 பக்கங்கள் கொண்ட மலர்.  தொடர்ந்து 19 வருடங்களாக இந்த மலர் வந்து கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு முறையும் வெளிவரும் இந்த மருத்துவ மலரைப் பார்க்கும்போதெல்லாம் வாங்கி விடுவேன்.  வாங்குவதோடல்லாம் சேகரித்தும் வைத்திருப்பேன்.  
இந்த மலர் சிரத்தையுடன் சிறந்த முறையில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.  ஒரு முறை இந்த மலர் வாங்க தவறி விட்டால் பின்னால் வாங்கவே முடியாது.  விற்று தீர்ந்து விடும்.   இந்த முறை இந்த மலரை வழவழப்பான தாளில் சிறப்பான முறையில் அச்சடித்துள்ளார்கள்.  ஒவ்வொரு முறையும் இந்த மலர் எதாவது ஒன்றில் கவனம் செலுத்துவார்கள்.  கண்பொறையால் நான் ஒரு முறை அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு தினமணி மலர் முழுவதிலும் கண்பொறையைப் பற்றிய தகவல்களை அதிகமாக தெரிந்து கொள்ள முடிந்தது.  
இந்த மருத்துவ மலர்களை ஏன் படிக்க வேண்டும்?  ஒரு சாதாரண மனிதன் நோய்களைப் பற்றி எளிய தமிழ் மொழியில் அறிந்து கொள்ள இந்த மருத்துவ மலர்கள் வாய்ப்பளிக்கின்றன.
நான் இந்த மலர்களை எல்லாம் சேகரித்துக் கொள்வதற்குக் காரணம் இதை ஒரு கெயிட் புத்தகமாக நான் கருதுகிறேன்.  இன்றைய சூழ்நிலையில் ஒரு மருத்துவரைப் பார்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல.  மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.   சர்வசாதாரணமாக பல நோயாளிகள் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் அமரும் வரிசையில் நாமும் அமர்ந்தால், நம்ம நோய் அவர்களுக்குப் போவதற்குப் பதிலாக அவர்களுடைய நோய் நமக்கு தொற்றிக் கொண்டு விடும் என்ற பயம் வரும். 
மருத்துவர்களையும் குறை சொல்ல முடியாது.  அதிகமாக வரும் நோயாளிகளைப் பார்த்து பார்த்து அவர்களும் சோர்வு அடைந்து விடுவார்கள். நம் நாட்டு மக்கள் தொகையைக் கணக்கிடும்போது மருத்துவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும்போல் தோன்றுகிறது.
மருத்துவமலரைத் தவிர பல பத்திரிகைகள் மருத்துவ பத்திரிகைகள் கொண்டு வருகின்றன.  மாதம் இருமுறை குங்குமம் என்ற பத்திரிகை டாக்டர் என்ற பத்திரிகையைக் கொண்டு வருகிறது. அதேபோல் ஆனந்தவிகடன், குமுதம் பத்திரிகைகளும் கொண்டு வரகின்றன.  ஆனால் அதிகப் பக்கங்கள் கொண்ட தினமணி மருத்துவ மலர் நாம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.  ஆண்டுக்கு ஒரு முறை வரும் மருத்துவ மலரை வாங்கினால் போதும், மற்றப் பத்திரிகைகள் தேவை இல்லை. 
நாம் எப்படி ஒரு அகராதியை அடிக்கடி படிப்பதில்லையோ அதேபோல் மருத்துவ மலர்களையும் அடிக்கடி படிக்க மாட்டோம்.  ஆனால் நமக்கு எதாவது பிரச்சினை என்றால், எந்த மருத்துவ மனைக்குச் செல்வது, எந்த மருத்துவரைப் பார்ப்பது என்பதை இதுமாதிரியான மருத்துவ மலர் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த மருத்துவ மலர்களில் எழுதுபவர்களும், அனுபவமிக்க டாக்டர்களே எழுதுகிறார்கள்.  மூட்டு அழற்சியைப் பற்றி இந்த மருத்துவ மலர் அதிகமாக கவனம் செலுத்தி எழுதியிருக்கிறது.   
இந்த மலரில் பல உபயோகமான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.  இறுதி நாள்களின் வேதனையை நீக்கும் அரவணைப்பு மருத்துவம் பற்றி ஒரு கட்டுரை விவரிக்கிறது.  அந்திம காலத்தில் பல உடல் உபாதைகளில் அவதிப்படுவர்களை எப்படிப் பார்த்துக் கொள்வது என்பதை அக் கட்டுரை தெரிவிக்கிறது.  குழந்தைகள் ஆரோக்கியம் பற்றி இம் மலரில் பல கட்டுரைகள் அலசுகின்றன.  புற்று நோய் பற்றியும், சர்க்கரை நோய் பற்றியும் பல கட்டுரைகள் அலசுகின்றன.   
இந்த மருத்துவமலர் என்னதான் நோய்களைப் பற்றி சொன்னாலும், இன்னும் சில நோய்களின் தன்மைகளைப் பற்றி தீவிரமாக அலச வேண்டுமென்று தோன்றுகிறது.  குறிப்பாக முதியோர்கள் நலனைப் பற்றி எந்தக் கட்டுரையும் இல்லை.  ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிலிருந்து மீள என்ன வழி என்பதைப் பற்றி தீவிரமாக ஆராயவில்லை.
சர்க்கரை நோயும், ரத்த அழுத்த நோயும் இன்றைய உலகத்தில் பலரை ஆட்டிப் படைக்கின்றன.  அவற்றைப் பற்றி இன்னும் நீண்ட கட்டுரைகள் அவசியம்.  ஆனால் 19 வருடங்களாகக் கொண்டு வரப்படும் தினமணி மருத்துவ மலரில் பழைய இதழ்களில் இவற்றைப் பற்றி குறிப்பிட்டிருக்கலாம்.  
முதியோரைப் பாதுகாபபது எப்படி?  ஏன் முதியோர்களை அலட்சியப் படுத்துகிறோம் என்பதைப் பற்றியெல்லாம் கட்டுரைகள் வந்தால் நன்றாக இருக்கும்.  
94 வயதாகும் என் அப்பா இதுவரை பெரிய அளவில் எந்த மருத்துவரையும் பார்த்ததில்லை.  இப்போது முதுமையின் பிடிப்பில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். அறையை விட்டு வெளியே வர முடியவில்லை.  படுக்கையில் படுத்தபடி இருக்கிறார் அவரை நினைத்தால் எனக்கு இரவெல்லாம் தூக்கம் வருவதில்லை.
அவர் வாழ்நாள் முழுவதும் ஹோமியோபதி மருந்துகளே உட்கொண்டிருக்கிறார்.  கடந்த ஓராண்டாக ஹோமியோபதி மருந்துகளையும் அவர் சாப்பிடவில்லை. இப்போது கூட  என் கை நாடியைப் பிடித்து ஏன் படபடப்பாய் இருக்கிறது என்பார்.
தினமணி மருத்துவ மலரி 2016 – ஆசிரியர் : வைத்தியநாதன் – பக்கம் 192 – விலை ரூ.30

ஏழு வரிகளில் கதை….


தொகுப்பாசிரியர் : அழகியசிங்கர்






1.  என் செல்வராஜ் 




விவாகரத்து


      

     நண்பனின் மனைவி அவன்  தந்தை வீட்டிற்கு போய்  தங்கி  இருந்த போது  அவன் மனைவிக்கும் அவ்ள் மாமனாருக்கும் பிரச்சினையாகி விட்டது. பெரும்பாலும் மாமனார்கள் மருமகள் கட்சியில் இருப்பார்கள். ஆனால் அவள் விஷயத்தில் மாமனாரும்  மாமியாரும் ஒரே கட்சியாகி  வீடு ரெண்டு பட்டு பஞ்சாயத்து வரை போய் விட்டது. வெளியூரில் இருந்த நண்பன் ஊருக்கு போய் தன் பெற்றோர்களுடன் சேர்ந்து கொள்ள அவள் வீட்டை விட்டு வெளியேறி பக்கத்து ஊரில் உள்ள தன் தாய் வீட்டுக்கு  செல்லவேண்டியதாகி விட்டது. அப்போது அவள் நிறைமாத கர்ப்பிணி. குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்து  தன் கணவன் வீட்டுக்கு வந்தவளை வாசலிலேயே நிறுத்தி திருப்பி அனுப்பி விட்டான் நண்பன். அதை அறிந்த எனக்கு மிகவும் மனம் வருத்தமாகிவிட்டது. வாழவேண்டிய வயதில் வாழ்க்கையை தொலைக்க முயலும் நண்பனைப் பார்க்க சென்றேன். அவன் மனைவி அனுப்பி இருந்த விவாகரத்து நோட்டீசையும் அதற்கு வக்கீல் மூலம் அளித்த பதிலையும் காட்டினான்.  எனக்கு அவன் நிலை பரிதாபமாக இருந்தது. அவன் தந்தை உடனே ஊருக்கு வருமாறும் கோர்ட்டில் வழக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று சொன்னதாக சொன்னான். அவ்னிடம் “உனக்கு அவளுடன் வாழ விருப்பமா ?” என்றேன். “ஆம்” என்றான் அவன்.
அப்படியானால் நோட்டீசை தூக்கிக்  குப்பையில் போடு என்றேன். அப்பா விட மாட்டார் என்றான் அவன். 


2.  கலாவதி பாஸ்கரன்


ஊனம் 




பிரதோஷ அபிஷேகம் பார்த்துவிட்டு கோவில் வாசலுக்கு வந்த சீதாவின் கண்ணில் அந்த நொண்டி பிச்சைக்காரன் தென்பட்டான். மிகவும் பாவமாக இருந்தது அவளுக்கு. சும்மா காசு கொடுக்காமல் ஏதாவது பயனுள்ளதாக செய்யவேண்டும் என்று நினைத்தாள். ஒரு வாரத்திற்குள் அவளுக்கு தெரிந்த நண்பர்களிடம் உதவி பெற்று ஒரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்து, ‘இனி பிச்சை எடுக்காமல் ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்’ என்றாள்! அந்த பிச்சைக்காரன் ‘எத்தனை பேர் இப்படி என் பிழைப்பை கெடுக்க வராங்க பாரு’ என்று பக்கத்தில் இருந்தவனிடம் அலுத்து கொண்டு, ‘இந்த வண்டியை  விற்க ஆள் பாரு’ என்றான்.

.

ஒரு கூட்டத்தை ஏன் சொதப்பி விட்டார்கள்?

ஒரு கூட்டத்தை ஏன் சொதப்பி விட்டார்கள்?
அழகியசிங்கர்

நான் பார்த்துவிட்டேன்.  நாம் எதாவது முயற்சி செய்யும்போது எதாவது பிரச்சினை ஏற்பட்டு விடும்.  இது எதிர்பாராத இடத்திலிருந்து நமக்கு ஏற்பட்டு விடும். இப்படி வாழ்க்கையில் நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். 
 வங்கியில் இருக்கும்போது பெரிய அதிகாரிகள் வந்திருந்து வாடிக்கையாளர்களைச் சந்திக்க கூட்டம் ஏற்பாடாகியிருக்கும். அப்போதுதான் மின்சாரம் போயிருக்கும்.  ஒருமுறை கூட்டம் நடத்தும் சரியான நேரத்தில் ஒரு வாடிக்கையாளர் தலையில் இரும்பு கதவு இடித்து ரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டிவிட்டது.
ஒரு நண்பரின் பெண் கல்யாணத்தின் போது, நாங்கள் சாப்பிட உட்காரந்திருந்தோம்.  மேல் கூரையிலிருந்து பூனை மூத்திரம் ஒழுதி இலலை மீது விழுந்து, எழுந்து ஓடும்படி செய்து விட்டது.
என் கவிதைத் தொகுதிக்கு ஒரு கூட்டம் நடத்தினேன்.  யாருடனும் இல்லை என்பது கவிதைத் தொகுதியின் பெயர்.  பெயருக்கு ஏற்றபடி பேச வருபவர்கள் யாரும் வரவில்லை.  ஞானக்கூத்தன்தான் அன்று இருந்து கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.  இத்தனைக்கும் பேச ஒப்புக்கொண்டவர்கள் எல்லோரும் என் நண்பர்கள்.  ஏன் அப்படி செய்தார்கள் என்பதை அவர்களிடம் கேட்கவில்லை.  அவர்களும் சொல்லவில்லை.  அப்போது எனக்கு தாங்க முடியாத துயரமாக இருந்தது அந்த நிகழ்ச்சி.  ஆனால் இப்போது அதுமாதிரி நடந்தால் நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஒரு சிரிப்பு சிரித்துவிட்டுப் போய்விடுவேன்.  ஏன் கூட்டம் நடத்துவது பெரிய விஷயம் இல்லை.  புத்தகம் போட்டு யாரும் வாங்கவில்லை என்றால் கவலைப்பட ஒன்றுமில்லை.  
நேற்றைய ஒரு கதை ஒரு கவிதைக் கூட்டத்திற்கு சில நண்பர்கள் வந்தார்கள்.  குறிப்பாக கிருபானந்தன், சுந்தர்ராஜன் வந்தார்கள்.  ஸ்ரீதரன் என்ற இன்னொரு நண்பர் வந்தார்.  சுந்தர்ராஜன் பெசன்ட் நகரிலிருந்து வந்தார்.  அவ்வளவு தூரத்திலிருந்து வருவது கொஞ்சம் கஷ்டம். 
இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்த விடாமல், தேர்தல் அலறல் அலறிக்கொண்டே இருந்தது.  நாங்கள் படிக்கும் இடத்தில் பின்னால் சில சிறுவர்கள் சத்தம்போட்டபடியே விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  முதல் முறையாக நான் ஒரு விதமாக உணர்ந்தேன்.  இருந்தாலும் ஒரு மணி நேரம் நாங்கள் கவிதைகள், கதைகள் வாசித்தோம்.  நீண்ட கதையைப் படிக்க அலுப்பாக இருக்கும்போல் தோன்றியது.  கேட்பதிலும் கவனம் இல்லாமல் இருந்தது.  நாங்கள் ஒவ்வொரும் கதையையும் கவிதையையும் வாசிக்க பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்  
அடுத்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தை வேறு பூங்காவில் எங்காவது நடத்தத் திட்டம்.  கொஞ்சம் சந்தடி இல்லாத பூங்காவாகப் பார்க்க வேண்டும்.
ஏன் நம்ம கூட்டத்தை தேர்தல் இப்படி சொதப்பி விட்டது?
 

ஏழு வரிகளில் ஒரு கதை…


1. சத்தியப்பிரியன்.

வாரிசு.





தலைவர் மகனுக்குப் பிறந்தநாள் என்று கபாலி காலையிலிருந்தே பரபரப்பாக இருந்தான். அந்தப் பிறந்தநாளில் தலைவர் தனது மகனை அவருடைய அரசியல் வாரிசாக அறிவிக்கப்போவதாக பேச்சு. இதுநாள் வரையில் தலைவருக்கு அடிதடியில் ஒரு கவசமாக விளங்கிய கபாலி தன் மகன் மன்னாரையும் அழைத்துக் கொண்டு போனான்.  
“ தலைவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்க.” 
மன்னார் முனகியபடி விழுந்தான். தலைவர் அவனைத் தூக்கி “ தம்பி என்ன பண்றீங்க? ” என்றார்.
“ நாந்தான் அவனுக்கு குரு “என்று கபாலி சிரித்தான்.
“நல்லதா போச்சு இனிமே என் மகனுக்கு உன் மகனையே அடியாளா அனுப்பிடு கபாலி.” என்றார்
.கபாலி சந்தோஷமாகத் தலையாட்டினான். அறிவிப்பு இல்லாமலே ஒரு வாரிசு உருவானது.
          

ஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 4

அழகியசிங்கர்


சென்னையில் சனி ஞாயிறுகளில் இனி கூட்டம் நடத்துவது சிரமமாக இருக்கும் போல் தோன்றுகிறது.  கூட்டம் ஏற்பாடு செய்தாலும் யாரும் வர மாட்டார்கள் என்று தோன்றுகிறது.  நாம் அரசியல் கட்சி நடத்தினால் பணம் கொடுத்து கூட்டத்திற்கு வரச் சொல்லிவிடாலாம்.  நாம் சாதாரணத்திலும் சாதராணம்.
எனக்கு வழக்கம்போல் கூட்டத்திற்கு வந்திருந்து சிறப்பு செய்யும் ஆடிட்டர் கோவிந்தராஜன் திருவனந்தபுரம் போய்விட்டார்.  அதனால் அவர் வர முடியாது.  எப்போதும் குவிகம் என்ற இலக்கிய அமைப்பு உள்ளது.  கடந்த ஓராண்டாக இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வருகிறது.  விருட்சம் கூட்டம் பார்த்து ஆரம்பித்தார்கள்.  நம்மைப் போல் ஏதோ ஆர்வக் கோளாறு என்று நினைத்தேன்.  ஆனால் அப்படி இல்லை.  ஓராண்டாக 12 கூட்டங்கள் நடத்தி அசத்தி விட்டார்கள்.  12வது கூட்டத்தில் ஒரு நாடகத்தையே அரங்கேற்றி விட்டார்கள்.  
நமக்கு உறுதுணையாக அவர்கள் எப்போதும் இருப்பார்கள்.  ஆனால் நாளைக்கு அவர்கள் வேறு ஒரு இலககியக் கூட்டத்திற்குப் போய்த்தான் தீர்வார்கள்.
விஜய் மகேந்திரன், வேடியப்பன், வினாயக முருகன் போன்ற நண்பர்கள் நாளைக்கு நடக்கவிருக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்குக் கலந்து கொள்ளப் போகிறார்கள்.  
அதனால் நான் நடத்தும் கூட்டத்திற்கு யாராவது வருவார்களா என்ற சந்தேகம் வந்து விட்டது.  ஆனால் நான் முடிவுக்கு வந்து விட்டேன்.  கூட்டம் நடத்துவது என்று.  சரியாக 5 மணிக்கு வெங்கட நாராயண ரோடில் இருக்கும் நடேசன் பூங்காவில் கூட்டம் இருக்கும. பூங்கா நுழையும் இடத்தில் உள்ள மேடையில் நான் அமர்ந்திருப்பேன்.  ஒரு தடியான புத்தகம் ஒன்றை வைத்துக்கொண்டு கதைகளை வாசிப்பேன்.  சத்தமாக இல்லை.  மௌனமாக.  கூட்டத்தின் தலைப்பை இப்படி மாற்றலாம் என்று நினைக்கிறேன்.
ஒரு கதை ஒரு கவிதை ஒரு மனிதன் வாசிப்புக் கூட்டமென்று.

நீங்களும் படிக்கலாம்….21

அபத்த உலகத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறாரா?

அழகியசிங்கர்


சமீபத்தில் நான் இரண்டு சிறுகதைத் தொகுதிகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  ஒன்று இத்தாலிய எழுத்தாளர் மொரவியா எழுதிய மதர் லவ் என்ற புத்தகம்.  இன்னொன்று தமிழவனின் நடனக்காரியான 34 வயது எழுத்தாளர்.  பெண்களின் உணர்வுகளைச் சித்திரிக்கும் ஆல்பெர்ட் மொரவியா ஒரு ஆண் எழுத்தாளர்.  அவருடைய புத்தகத்தில் காணப்படும் பெண்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.  அவற்றை துல்லியமாக வடித்துக் கொடுத்திருக்கிறார் மொரவியா.  இன்னும் இந்தப் புத்தகத்தை நான் முடிக்கவில்லை. படிக்க படிக்க இன்னும் இன்னும் படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.  சமீபத்தில் வந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று.  இப் புத்தகத்தை மாடியில் உள்ள வெயிலில் உலர்த்தி படிக்க ஆரம்பித்தேன்.  படிக்க படிக்க இந்தப் புத்தகத்தை கண்டு கொள்ளாமல் இத்தனை நாட்கள் ஏன் விட்டோம் என்று தோன்றியது.  இப்படி கண்டுகொள்ளமல் விடுப்பட்ட நூல்கள் அதிகமாகவே என்னிடம் இருப்பதாக தோன்றுகிறது.
ஏற்கனவே நான் தமிழவனின் நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகளைப் படித்திருக்கிறேன்.  அவர் கவிதைகள் எழுதி இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது.  தமிழில் பின் நவீனத்துவ பாணியை அறிமுகப்படுத்திய பங்கு அவருக்குண்டு.  சோதனை ரீதியாக அவர் பல நாவல்களை எழுதி இருக்கிறார். தற்போது தீராநதியில் அவர் எழுதிக் கொண்டு வருகிற கட்டுரைகள் முக்கியத்துவம் உள்ள கட்டுரைகள். 
முன்பே காவ்யா வெளியீடாக வந்த தமிழவன் கதைகள் என்ற தொகுதி 1992-ல் வெளிவந்தது.  இத் தொகுதிக்குப் பிறகு 2015ல்தான் இவருடைய இன்னொரு சிறுகதைத்தொகுதியான நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் என்ற பெயரில் வெளி வருகிறது.  
2015 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளில் முக்கியமான தொகுதியாக இதைக் கருதுகிறேன். காலம் மாற மாற எழுத்துக்கள் மாறிக்கொண்டிருக்கின்றன.  பெரிய பத்திரிகைகள் சிறுகதைகளை துறந்து விடுகின்றன.  அதேபோல் சிறுகதைகளும் இறுகலாக இருந்தால் படிப்பவர்களும் காணாமல் போய்விடுவார்கள்.  தமிழவன் கதைகள் என்ற இவருடைய முந்தைய தொகுப்பு இதற்கு உதாரணம்.  அதனால் புதுமாதிரியான வடிவத்தை கதை எழுதுவதற்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்.  132 பக்கங்கள் கொண்ட இத் தொகுதியில் மொத்தம் 22 கதைகள் உள்ளன.  நிச்சயம் படிப்பவர்களை இக் கதைகள் வசீகரிக்காமல் இருக்காது.
ஹர்ஷவர்த்தனர் அறிவு என்ற கதை இந்தத் தொகுதியில் உள்ளது.  அது மொத்தமே ஒரு பக்கத்தில் முடிந்து விடுகிறது.  பேராசிரியர் ஹர்ஷவர்த்தனர் சாமான்யரைப் போல் வேடமிட்டு  அரண்மனையை விட்டு வெளியே வருகிறார்.  அறிவைத் தேடிப் பயணம் மேற்கொள்கிறார்.  அப்படிப் பயணம் மேற்கொள்ளும்போது அவர் பலரை சந்திக்கிறார்.  அந்தச் சந்திப்பைப் பற்றிய குறிப்புதான் இக்கதை.    மேலும் இவருடைய ஒவ்வொரு கதையாக எடுத்துப் படிக்க படிக்க வாசிக்கிற அலுப்பு இந்தத் தொகுதியில் ஏற்படுவதில்லை.  பலருடைய கதைத் தொகுதியில் காணப்படுவது இந்த வாசிப்பு அலுப்பு.  அதை உடைத்திருக்கிறது இந்தத் தொகுதி.  
நம்முடைய முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பலருடைய கதைத் தொகுதிகளில் வாசிப்பு அலுப்பு இருப்பதில்லை.  உதாரணமாக உமைச்சியின் காதல் என்ற றாலி கதையை இப்போதும் எடுத்துப் படிக்கலாம்.  வாசிப்பு அலுப்பே இருக்காது.  ஆனால் மௌனி கதையைப் படிக்கும்போது, வாசிப்பவரை சிறைப் பிடித்து விடுகின்றது எழுத்து.  இப்போதைய சிறுபத்திரிகைகளில் பக்கம் பக்கமாக வருகிற கதைகளைக் கூட என்னால் ரசிக்க முடியவில்லை.  எப்போது கதை முடியும் என்று அவசரம் அவசரமாகப் படிக்க வேண்டி உள்ளது.  பொது ஜன வாசிப்புப் பழக்கம் உள்ளவனுக்கு வாசிப்பு அலுப்பு ஏற்படுவதில்லை.  கதைகளை நகர்த்திச் செல்வதில் ஜன ரஞ்சக கதாசிரியர்கள் திறமையானவர்கள்.  ஆனால் ஒரு குறிக்கோளுடன் கதையை ஆரம்பித்து கதையை முடிப்பார்கள். ஜாலம் இருக்கும். ஆழம் இருக்காது.  
தீவிரமான இலக்கியப் பத்திரிகையில் கதையை வாசிக்க வருபவன், கதையைப் படிக்க படிக்க அவனுக்கு தலை சுற்ற ஆரம்பித்துவிடும்.  இதை தமிழவன் உடைத்திருக்கிறார்.  ஆரம்பத்தில் அதைச் செய்ய தவறி விட்டார் என்பதை தமிழவன் கதைகள் என்ற புத்தகத்தைப் படித்தால் புரியும். அது அந்தக காலத்தில் எழுதப்பட்ட கதைகள்.  
இத் தொகுதியில் உள்ள  கதைகளின் முக்கியத் தன்மை என்ன?  விபரம். அதை உடைத்திருக்கிறார்.  விவரணையில் நம் எழுத்தாளர்கள் குறிப்பாக சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் மாட்டிக்கொள்வதுபோல் தமிழவன் மாட்டிக்கொள்ளவில்லை.  எல்லாக் கதைகளிலுமிருந்து விவரணையைக் கழட்டி விடுகிறார். சிலர் சிலரை சந்திக்கிறார்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படியே போகிறது கதைகள். விவரங்களை உடைத்தவர்களில் நம் முன்னோடி அசோகமித்திரன்.  அவருடைய கதைகள் பெரும் பத்திரிகைகக்கும் சிறுபத்திரிகைக்கும் பாலமாக அமைந்திருக்கின்றன.  1958 ஆம் ஆண்டு மழை என்ற பெயரில் அசோகமித்திரன் ஒரு கதை எழுதி இருக்கிறார்.  அதை இன்றும் வாசிக்க முடியும்.   இத் தொகுதிகளில் உள்ள தமிழவனின் கதைகளில் எந்தக் கதையை எடுத்துப் படித்தாலும் இன்னும் இன்னும் படிக்க வேண்டுமென்கிற உணர்வை ஏற்படுத்தும். 
இத் தொகுப்பின் சிறப்பென்ன?  கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று தலையிடாமல் பார்த்துக் கொள்வது..அதீத உணர்ச்சியை வெளிப்படுத்தாமல் இருப்பது, அனாவசிய விவரணையை அழிப்பது. அதேபோல் காலத்தையும் இடத்தையும் ஒழிப்பது இக் கதையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்தக் காலத்தில் இக் கதைகள் நடந்தன என்பதை நம்மால் படிக்கும்போது தெரிந்து கொள்ள முடியவில்லை. நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் என்ற கதையில் பிரகதி ரை என்ற எழுத்தாளர் 17 கதைகளை மட்டும் எழுதியிருக்கும் ஒரு எழுத்தாளரை சந்திக்கிறார்.  அவர் முன்பு ஒரு நடனக்காரியாக இருந்திருக்கிறார்.  பின் எழுத்தாளராக மாறி விட்டிருக்கிறார். மகிமா பவர் என்ற இன்னொரு எழுத்தாளரும் அவர்களுடன் இருக்கிறார். இவர்கள் மூவரும் பேசுவதுதான் கதை.  இப்படி பெரும்பாலான கதைகளில் ஒருவருடன் ஒருவர் பேசுவதாக அமைகிறது.  அப்படிப் பேசுவது கூட அசாதாரணமாக இருக்கிறது.  இதுமாதிரியான கதைகள் மூலம் தமிழவன் ஒருவித அபத்த உலகத்தை படம் பிடித்துக் காட்டுவது போல் தோன்றுகிறது.
கதைகளை எப்படியெல்லாம் எழுதலாம் என்பதற்கு இத் தொகுதி உதாரணமாகத் திகழ்கிறது.  வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம்.

நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் – தமிழவன் – சிறுகதைகள் – வெளியீடு : புது எழுத்து, 2/205 அண்ணா நகர், காவேரிப்பட்டினம் – 635 112, கிருஷ்ணகிரி மாவடடம் -பக்கம் : 132 – விலை : ரூ.120 – தொலை பேசி : 98426 47101

ஏழு வரிகளில் கதை கதையாம்…காரணமாம்.

அழகியசிங்கர்


இன்னும் கொஞ்ச நாட்களில் முகநூலில் ஏழு வரிகளில் கதைகளை அள்ளி நிரப்பி விடுவார்கள் எல்லோரும்.  கதை என்பது வேறு; கவிதை என்பது வேறு.  மிகக் குறைவான வரிகளில் ஒரு கதையைப் படிப்பதுபோல் ஒரு திரில் வேற எதிலும் கிடைக்கப் போவதில்லை. இதில் கொஞ்சம் யோசித்தால் போதும் ஒரு கதை எழுத வந்துவிடும்.  தொடர்ந்து எழுதுங்கள். முகநூலிலும், பிளாகிலும் பதிவு செய்கிறேன். புத்தகமாகப் போடுவதற்கும் முயற்சி செய்கிறேன்.
படிக்கட்டில் ஏறிவந்த கர்ப்பணி பெண்ணிடம் கேட்டேன்.  ‘ஏழு வரிகளில் ஒரு கதை சொல்லேன்,’ என்று.  ‘எனக்குக் கதையே சொல்ல வராது,’ என்றாள்.  ஆனால் வயிற்றில் உள்ள குழந்தை, ‘நான் பிறந்த பிறகு கதை சொல்கிறேன்,’ என்றது.
1.  என் செல்வராஜ் , சிதம்பரம்

பிரிந்து செல்லும் உயிர்

          மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அவனுக்கு மனைவி வரமாக வந்தவள் இல்லை. அவனோடு வாழாமல் போனவள். இருந்தாலும் மனம் நினைக்கும் போது  கைப்பேசியில் அவளோடு பேசுவான். பல தடவை அது சண்டையில் முடிவதுண்டு. சமாதானம் செய்ய கடவுளா வரமுடியும்? ஒரு நாள் அவள் சொன்னாள் , ” செத்துத் தொலையேன்”  என்று. அவனுக்கு தெரிந்ததெல்லாம் டாஸ்மாக் கடை மட்டுமே. வாங்கினான் மதுவை . ஒரே மூச்சில் ஒரு பாட்டிலைக் குடித்தான்.  செத்துப்போ என்று சொன்ன மனைவி ஞாபகம் வந்தது. வாழச் சொல்லி கெஞ்சும் அவன் தங்கைகள் ஞாபகம் வரவில்லை.
அவனுக்காகவே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழும் அம்மா ஞாபகம் வரவில்லை. வயலுக்கு அடிப்பதற்காக என்று சொல்லி வாங்கிய பூச்சி மருந்து அவன் வயிற்றுக்குள் போனது. வீட்டின் அருகில் வரும்போது அவன் உயிர் அவனை விட்டு  பிரிந்து சென்றது. 
2. பாஸ்கரன் ஜெயராமன்

ஆசீர்வாதம் !
ஆசையாய் வளர்த்த ஒரே பெயர்த்திக்குத் திருமணம். பாட்டிக்கு வர முடியவில்லை. கழுத்தில் தாலி ஏறியவுடன் பெற்றோருக்குக் கண்ணீர் –பாசமாக வளர்த்த பெண்ணென்றாலும் ஒருநாள் திருமணமாகிப் போக வேண்டியது தானே முறை என்றனர் விருந்தினர். சாப்பாடு முடிந்தகையோடு மணமக்கள் பாட்டியைக் காணச் சென்றனர். அருகிலிருந்த மருத்துவ மனையில், நினைவின்றி வெண்டிலேடர் சுவாசத்தில் பாட்டி – இரண்டு நாள் முன்பு ஸ்ட்ரோக் – ஆசீர்வாதம் செய்தவுடன் வெண்டிலேடரிலிருந்தும் விடுதலை !
காதல் !
”எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. திருமணம் செய்து கொள்ளலாமா?” என்றாள் லதா. “எனக்கும் உன்னைப் பிடிக்கும், ஆனால் நான் உமாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்றான் விஷால். உமாவோ, விஷாலை எனக்குப் பிடிக்கும், ஆனால் என் திருமணம் ரவியுடன்தான் – எங்கள் இருவருக்கும் காதல்” என்றாள். விஷால் லதாவை எண்ணியபடி திரும்ப வந்தான். அதற்குள் லதா, அவளை விரும்பும் கணேஷிடம்  திருமணத்துக்குத்  தலையாட்டிவிட்டாள் ! காத்திருக்கிறான் விஷால் ! 

சிபாரிசு
அவருக்கு அரசியல் செல்வாக்கு அதிகம். பையனுக்கு எல்கேஜி அட்மிஷன் மந்திரி பிஏ மூலம் பெரிய பள்ளியில் கிடைத்தது. பையன் காலேஜ் வந்தபோது, சிபாரிசில் மந்திரியின் கல்லூரியிலேயே சீட் கிடைத்தது. பையனின் திருமணம், ஊரில் அரசியல் தொடர்புடைய பெரிய செல்வந்தரின் மகளுடன் கட்சித் தலைமை சிபாரிசில் சிறப்பாக நடந்தது. மாமனாரின் சிபாரிசில், பெரிய தொழிற்சாலையில் வேலையும் கிடைத்தது. சிபாரிசின்றிப் பிறந்த தன் குழந்தைக்கு வைத்தான் பெயர் – ’வெற்றி’ என !
3.  எம் ரிஷான் ஷெரீப் 

மியாவ் மொழி

பூனைகள் மனித பாஷையில் பேசக்கூடும் என்பதாக, üஅசோகனின் வைத்தியசாலைý என்ற நாவலில்தான் படித்திருக்கிறேன்.  துளசி டீச்சரிடமும் ஒரு பூனை இருக்கிறது.  ராஜலஷ்மி என்று அதற்குப் பெயர்.  எனது பூனை பெர்சியாப் பூனை.  பஞ்சுப் பொதி போல அடர் மயிர் நிறைந்தது.  சத்தமே எழுப்பாமல் அங்குமிங்கும் ஓடித் திரியும்.  எனவே எங்கிருந்தாலும் ஓசையெழுப்பும்படி கழுத்தில் மணியொன்றைக் கட்டி வைத்திருக்கிறேன்.
பூனைகளுக்கென்றே வரும் விலையுயர்ந்த, பெட்டியிலடைக்கப்பட்ட உணவைக் கொடுத்தால் கண்ணை மூடிக் கொண்டு விழுங்கும்.  இன்று அது பேசியதுதான் ஆச்சரியமான சங்கதி. üநீ ஃபிரிட்ஜில் அடைச்சு வச்சிருக்குற மீன்கள் கடல்ல வாழ்ந்த காலத்தைவிட அதிகமா உன் ஃபிரிட்ஜ்லதான் கிடக்கு.  üமியாவ்ý என்றது.

ஏழு வரி கதைகளின் தொகுதி

அழகியசிங்கர் 



ஏழு வரிகளில் கதை என்றால் ஏழு வரிகளில்தான் முடிய வேண்டுமென்பதில்லை, எட்டு வரிகள், ஒன்பது வரிகள், பத்து வரிகள் என்றெல்லாம் கூட எழுதலாம்.  தயவுசெய்து எழுதுபவர்கள் என் இ மெயிலில் அனுப்பவும்.  நான் பார்த்து விட்டு அடுத்த நாளே பதிவு செய்கிறேன்.  ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். என் நோக்கம் 100 பக்கங்களில் இது மாதிரியான கதைகளை அச்சடித்துக் கொண்டு வரலாமா என்பதுதான்.  அதனால் தயவுசெய்து  navina.virutcham@gmail.com இ மெயிலில் அனுப்புங்கள்.
1.  வைதீஸ்வரன்   
 இட ஒதுக்கீடு
                      
பிளாட்பாரத்தில்  முக்கால்  மணி நேரமாக  உட்கார்ந்திருந்தோம்.  இரவு பத்து மணிக்கு புறப்படுகிற  ரயில்  அங்சு நிமிஷம் கழித்துத் தான் பிளாட்பாரத்துக்கு வந்து நின்றது.  வெளியே ஒட்டியிருந்த  பெயர் பக்கத்தை சரி பார்த்து கைப்பெட்டியுடன்  உள்ளே தள்ளாடி  முட்டி மோதி நகர்ந்து  என் ஸீட்டை ஒரு வழியாய்க் கண்டு பிடித்து விட்டேன்.  அதில்  ஏற்கனவே ஒரு  மாது  தடிக் கண்ணாடி போட்டுக் கொண்டு  உட்கார்ந்திருந்தாள்… சற்று வயதானவர்.
   “அம்மா….இது  என் ஸீட்டு   A 9.  …”
அந்த மாது என்னை   ஏறிட்டுப் பார்த்த வண்ணம்  சற்றும் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
    “ அம்மா….  இதோ பாருங்கள்…என்  டிக்கட்டு……இது  என்  ஸீட்டு.. A9 நீங்கள்  தவறாக  உட்காந்திருக்கிறீர்கள்….”
   “இது  என்  ஸீட்டு  ஸார்..  நீங்கள்  தான்  தப்பாக  சொல்லுகிறீர்கள்.  நான்  பார்த்து  விட்டுத் தான்  உட்கார்ந்திருக்கிறேன்…”  அந்த  அம்மாள் மிக நிச்சயமாக  அழுத்தமாக  சொல்லி விட்டு  சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். மேலும் என்னுடன் பேச விரும்பாதவள்  போல்.
  “இல்லை..மேடம்… இதோ பாருங்கள்  என்  ஸீட்டு நம்பர்  A 9 ..”
 “  நீங்கள்  என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.  A 9  என்  ஸீட்டுத் தான்.. கம்பார்ட்மெண்ட் நம்பர்  பி2……….உங்களுடையது  வேறாக  இருக்கலாம். “
  நான்  சொன்னேன் மீண்டும்  டிக்கட்டைப் பார்த்து விட்டு..
 “இல்லை மேடம்…என்  டிக்கட்டு  இதோ… எனக்கும்  கம்பார்ட்மென்ட்  பி2 தான்.. நீங்கள்  தப்பாக  வந்து விட்டீர்கள்.””
“இல்லை  இது  என்  ஸீட்டுத் தான்  ..டி டி ஆரிடம்  போய் சொல்லுங்கள்…”
  “ இல்லை  மேடம்  நீங்கள்  தான்  தவறாக,,,,”
அந்த  மாது  உரத்த குரலில்  பேசினாள்
.. Don’t disturb me…Go away. I cannot    vacate.     This  is  my  Seat…”  ”    அவள்   ஒரு வேளை  ஓய்வு பெற்ற  கல்லூரி பிரின்ஸிபாலாக  இருக்கலாமோ!!
    நகராமல்  வழியை  அடைத்துக் கொண்டு  நான்  அந்த  மாதுவிடம்  வாதாடிக் கொண்டிருந்ததை  மேலும்  பொறுத்துக் கொள்ளா முடியாமல்  உள்ளே வர முடியாத  பயணிகள்  கத்தினார்கள்.
  “மிஸ்டர்  வழியை  விட்டுட்டு  சண்டை போடுங்க….நாங்க  உள்ளே போக  வேண்டாமா? “
   “ஸார்  என் ஸீட்டு  A9     பாருஙக…இவங்களும்  அதே நம்பர்னு  சொல்றாங்க..  பாருங்க.. “   நான்  என்  டிக்கட்டை  அவர்களிடம்  காட்டினேன்
  பயணிகளில் ஒரு  இளைஞன்.  கம்ப்யூடர்  பையனாக  இருப்பான் போலும். 
   “ஸார்… உங்க  டிக்கட்டை  கொடுங்க….”    கொடுத்தேன்….
 ”சரியா  இருக்கு….அம்மா…ஒங்க  டிக்கட்டைக் கொடுங்க…”
 தயக்கத்துடன்  சற்றுக் கோபமாக  அவள்  டிக்கட்டைக் கொடுத்தாள்
  “ அம்மா  ஒங்க  ஸிட்  நம்பர்  கம்பார்மென்ட்  நம்பர்  எல்லாம்  சரியாத் தான்…இருக்கு……..”
 அந்த அம்மாள்   கோபத்தோடு  குறுக்கே பேசினாள்
“  Tell  this  bloke   I  have  the  correct   Seating…Bloody  nuisance   ”….”
அந்தப்  பையன்  அவளைக் கையமர்த்தி விட்டு  சொன்னான்..
  Wait  Madam..  நான்  சொlல்றதை  கேட்டுட்டு  பேசுங்க… .நீங்க  உக்காந்த  ஸீட்  சரியானது  கம்பார்ட்மெண்ட்   சரி.தான்.  ஆனா.  ஒக்காந்த  ரயில்  தான்  வேறெ!  இது  25630.   நீங்க  ஏற வேண்டிய  வண்டி  25360.  அதோ  அந்த  நாலாவது  பிளாட்பார்த்திலே  நிக்குது….இந்தாங்க  டிக்கட்…”
  அந்த  அம்மாளின்  முகம்  சிவந்து  பதறியது.  தலையைக் குனிந்த  வாறு  “ What  a  confusion…Oh!  Hell…”  அவள்  எழ முடியாமல்  எழுந்து தடுமாறி  நின்றாள்.
  அவள் பெட்டியையும்  பைகளையும்  அவசரமாக   சிலர் தூக்கி  வெளியே    இறக்கி  வைத்தார்கள்.
    அவளையும்  ஒருவன்  கைத்தாங்கலாக  இறக்கி  விட்டான்.
அவள் நிலைமையப்  பார்க்க  எனக்கு பரிதாபமாக  இருந்தது.  அவளைப் கண்ணாடி வழியாகப் பார்த்து  “SORRY “ என்றேன்  அவள்  என்னைப் பார்க்க விரும்பாமல்  கோபமாகத்   தலையைத் திருப்பிக் கொண்டாள். அவள்  யார் மீது  கோபப் பட வேண்டுமோ!…………….. 
  நாலாவது  பிளாட்பாரத்தில்  அவள்  ஏற வேண்டிய  ரயில்  ஒரு குலுக்கலுடன்    நகர்ந்து  கொண்டிருந்தது……………
2.  எம் ரிஷான் ஷெரீப் 
குறிப்புகள் 
குறிப்பேதும் எழுதி வைக்காமல் இன்று தூக்குப் போட்டுக்ச் செத்திருந்த பவித்ரம் அக்கா, சஞ்சிகையொன்றுக்குத் தபாலில் அனுப்பிவிடச் சொல்லி என்னிடம் நேற்றுத் தந்திருந்த தபாலுறையைக் கையில் வைத்திருக்கிறேன்.  அக்காவின் கணவரிடம் கொடுத்து விடலாமா?  அவரிடம் தபாலைக் கொடுக்காமல் என்னிடம் ஏன் தர வேண்டும்?  அக்கா இறுதியாக அதில் என்ன எழுதி இருக்கக்கூடும்ட?  பிரித்துப் பார்த்து, எதுவும் விளங்கவில்லையானின், சஞ்சிகைக்கே அனுப்பி விடலாம்.  பிரித்துப் பார்த்தேன்.  அதை சஞ்சிகைக்கே அனுப்பி விடலாம்.  எதற்கு வீண் வம்பு?

3.  பெருந்தேவியின் மூன்று கதைகள்
1. பக்கத்து வீடு
எப்போதும் ஒரே இரைச்சல்.  இரவு முழுக்க பொருட்களை நகர்த்தும் அல்லது உருட்டும் சத்தம்.  பகலிலோ சில நேரங்களில் திடீர் ஓலம்.  சிலசமயம் சிங்கம் வீட்டுக்குள் நுழைந்து விட்டதுபோல் அலறல் இல்லாவிட்டால் கூர்ந்து கேட்க வைக்கும் ஏறியிறங்குகிற ராட்சசக் கிசுகிசுப்பு குரல்.  சொல்லியும் கேட்பதாக இல்லை.  
அபார்ட்மெண்ட் நிர்வாகத்தில் குற்றஞ்சாட்டியாயிற்று இன்று.
உறுதியாக சொல்லிவிட்டார்கள் போலீசுக்குப் போவார்களாம் நான் காலி செய்யாவிட்டால்.
2. உள்ளர்த்தம்
வானதிக்கு எதிலும் பிடிப்பில்லை.  பெற்றோர் அவள் பிறந்தவுடனேயே எப்படியோ இறந்து விட்டார்கள்.  வளர்த்த அத்தை இவள் வளர்ந்தவுடன் எப்படியோ போய்ச் சேர்ந்துவிட்டாள்.  எப்படியோ தேற்றிக்கொண்டு காதலிக்கலாùம்றால் சுற்றுவட்டாரத்தில் ஒருவனுமில்லை.  அட. அழகாகக் கூட வேண்டாம்.  
காலம் வாணலியில் அவளை வறுத்து தன் வாயில் போட்டுக் கொள்கிறது.  இந்த உவமானத்தால் வறுத்த கடலைக்கு என் மனம் அவாவுவது நல்லதொரு வாசகருக்கு எப்படியோ தெரிந்து விடும்.
3. ஒரு ஷøவின் கதை
இங்கே ஒவ்வொரு குளிர் காலத்திலும் பனியில் சறுக்கி விழுதல் என் வாடிக்கை.  மாணவியாக இருந்த ஆறு வருடமும் சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்க வேண்டியிருந்தது.  அடியில் முட்கள் வைத்த ஷø வாங்க வேண்டுமென்கிற பலநாள் கனவு வேலை கிடைத்த இவ் வாரம்தான் நிறைவேறியது.  எல் எல் பீன் இணையதளத்தில் “டோஸ் டி ஷø” என்று விளம்பரம் செய்திருந்தான். சுளையாக நூத்துப் பத்து டாலர். 
இன்று காலை அணிந்த முதல்மணி நேரத்தில் என் பாதம் சுடச்சுட வெங்பாய பஜ்ஜி.  அலுவலகத்துக்குச் சென்றவுடன் முதல் வேலையாக ஷø வைக் கழட்டிப் பிய்த்துத் தின்றேன்
4.  நேதாஜிதாசன்   2  கதைகள்

1)  தீர்ப்பு சொன்ன குற்றவாளி


நீதிபதி : குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா 


குற்றவாளி: குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா


நீதிபதி : நான் என்ன செய்தேன்?


குற்றவாளி : நான் என்ன செய்தேன் ?


நீதிபதி : நீ கொலை செய்தாய் .இதனால் உனக்கு மரண தண்டனை அளிக்கிறேன்.


குற்றவாளி : நீயும் இப்போது கொலை செய்தாய். இதனால் உனக்கும் மரண தண்டனை அளிக்கிறேன்.


நீதிபதி வெளியே நின்றுகொண்டிருந்த முதலாளியை பார்த்து சிரிக்கிறார்.
ஒரு முதியவர் ” மரண தண்டனை கொடுத்த சந்தோஷமா நீதியரசரே, அது எல்லோருக்கும் வரத்தான் போகிறது. ” என முனகி கொண்டே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறுகிறார்.


2)   நீ தான்


எல்லாம் முடிந்தது அவனுக்கு அவனுடைய உயிரை தவிர.அதையும் முடித்துக்கொள்ள வெள்ளை நிற கயிற்றில் கழுத்து அளவு எடுத்து முடிச்சு போட்டிருந்தான்.திடீரென கதவை தட்டும் சத்தம்.அங்கு போய் பார்த்தான் யாரும் இல்லை.மீண்டும் முடிச்சு போட்டுக்கொண்டு நாற்காலியில் ஏறி நின்றான்.மீண்டும் கதவு தட்டும் சத்தம்.இந்த முறை அவனும் இல்லை.உயிர் தொங்கி கொண்டிருந்தது.
கதவை திறக்காமலே வெளியே போக முடிந்தது.எங்கும் இருள்.


அவன்: யார் கதவை தட்டியது ?


கதவை தட்டியவன்: நீ தான்
5. சுந்தர்ராஜன் சுப்பிரமணியன் ஒரு கதை
சந்தி காலத்திலே
‘சந்தி காலத்திலே ஏண்டா இப்படி தூங்கறே? நல்லா சாப்பிட்டுத்தான் தூங்கேன். அம்மா எப்பொழுதும் அடித்துக்கொள்வாள். சாப்பாடு.- சாப்பாடு தான் எப்போதும். சின்ன வயசிலேர்ந்து அவள் அப்படித்தான். தூங்கிற அவனை எழுப்பி பாலு சோறு கொடுத்து தூங்கச் செய்வாள். காலையில் எழுந்து அவன் முதல் நாள் சாப்பிடவே இல்லை என்று சாதிப்பான்.

இன்னிக்கும் அப்படித்தான். சாயங்காலம் ஆறு மணிக்கே அடிச்சுப் போட்டாப் போல தூங்கறான் . – பெத்த அம்மாவுக்கு கொள்ளி வைத்துவிட்டு! ஆவியாய் இருக்கும் . அம்மா துடிக்கிறாள் – ‘பையன் இன்னும் சாப்பிடவே இல்லையே!’ என்று!

6.  உமா மஹேஸ்வரியின் ஒரு கதை

காலச் சக்கரம்



1996_ 8வதுபடித்துக்கொண்டு இருந்த என் பெண் அன்று. சொன்னாள்.அம்மா பேரன்ட்ஸ் டீச்சர் மீட்டிங்கு அப்பாவை அனுப்பு.நீவந்து மானத்தை வாங்காதே.உன் அக்காவா என்கிறாள் டீச்சர்.நானும் கொண்டை போட்டு பெரிய பொட்டு வைத்து புடவைத்தலைப்பைப் போர்த்திய படி போனேன்.

2016_நேற்று அவள் சொன்னாள்.அம்மா தம்பியின் காலேஜ் நன்பர்கள் வரும் போது நரைத்த தலையோட வயசான கிழவி மாதிரி யல்லாமல் டை அடித்து சுடிதார் போட்டு ஸ்மார்டா இரு ! சரி பெண்ணே!

ஒரு தவறுக்கு வருந்துகிறேன்….
போன பதிவில் தெரியாமல் மும்பையில் உள்ள என் நண்பர் எ தியாகராஜன் எழுதிய 3 கதைகளை அசோகமித்திரன்தான் அனுப்பி உள்ளார் என்று பதிவு செய்து விட்டேன்.  அக் கதைகளை மும்பை எ தியாகராஜன் என்று வாசிக்கவும்.