ஏழு வரிகளில் ஒரு கதை…


1. சத்தியப்பிரியன்.

வாரிசு.





தலைவர் மகனுக்குப் பிறந்தநாள் என்று கபாலி காலையிலிருந்தே பரபரப்பாக இருந்தான். அந்தப் பிறந்தநாளில் தலைவர் தனது மகனை அவருடைய அரசியல் வாரிசாக அறிவிக்கப்போவதாக பேச்சு. இதுநாள் வரையில் தலைவருக்கு அடிதடியில் ஒரு கவசமாக விளங்கிய கபாலி தன் மகன் மன்னாரையும் அழைத்துக் கொண்டு போனான்.  
“ தலைவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்க.” 
மன்னார் முனகியபடி விழுந்தான். தலைவர் அவனைத் தூக்கி “ தம்பி என்ன பண்றீங்க? ” என்றார்.
“ நாந்தான் அவனுக்கு குரு “என்று கபாலி சிரித்தான்.
“நல்லதா போச்சு இனிமே என் மகனுக்கு உன் மகனையே அடியாளா அனுப்பிடு கபாலி.” என்றார்
.கபாலி சந்தோஷமாகத் தலையாட்டினான். அறிவிப்பு இல்லாமலே ஒரு வாரிசு உருவானது.
          

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன