யோகிராம் சுரத்குமார் – ஓர் நினைவு

விசிறி சாமியார் யோகிராம் சுரத்குமார் குறித்த என் அனுபவம் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்ள விருப்பம்.

பாலகுமாரன் புத்தகங்களில் (ஆசைக்கடல், குரு) இடம்பெற்ற விசிறி சாமியார் பற்றிய சம்பவங்களைப் படித்த பின், ஒரு சனிக்கிழமை கிளம்பி திருவண்ணாமலை போய் இருந்தேன்.

தியான மண்டபத்தில் (அப்போது பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்தது) நெடுநேரம் காத்திருந்த பலரோடு நானும் சேர்ந்து கொண்டேன். இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் அன்று விசிறி சாமியார் தியான மண்டபத்திற்கு வரவில்லை.

சாமியார் தன் குடிலுக்கு கிளம்புவதாக,யாரோ ஒருவர் சொல்லிப்போனார்.குழுமியிருந்த மற்ற எல்லோரோடு நானும் வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.

ஒரு வெள்ளை நிற அம்பாசடர் காரில், கண்களில் குளிர் கண்ணாடியோடு விசிறி சாமியார் வெளிவந்து கொண்டிருந்தார்.

அப்போது நேரம் மதியம் மூன்று மணி இருக்கும். நல்ல சூட்டுடன் கூடிய சித்திரை வெயில்.

வலது கையை உயர்த்தி ஆசீர்வதித்தபடி வந்து கொண்டிருந்தார் விசிறி சாமியார்.

திடீரென்று கரு மேகங்கள் சூழ்ந்து தடதடவென மழை கொட்ட ஆரம்பித்தது. எல்லாம் ஒரு பத்து நிமிடமே. கார் அவர் குடிலைப் போய் சேர்ந்த அடுத்த நிமிடம், மழை நின்று மீண்டும் பளிச்சென்ற வானத்துடன் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது.

எப்பொழுதும் பசுமையாய் என்னுள் இருக்கும் இந்த சம்பவம், விசிறி சாமியார் குறித்த அழகியசிங்கரின் பதிவைக் கண்டபோது இன்னொரு முறை எட்டிப் பார்த்தது.
0

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….3

பிரமிள்தான் அடிக்கடி சாமியார்களைப் பற்றி குறிப்பிடுவார். விசிறி சாமியார் பற்றி பலமுறை தெரிவித்திருக்கிறார். அதனால் எனக்கும் விசிறி சாமியாரைப் பார்க்க ஆர்வம் ஏற்பட்டது. முதலில் நான், பிரமிள், லயம் சுப்பிரமணியன் (அவர் கோவையிலிருந்து வந்தார்) மூவரும் விசிறி சாமியார் அப்போது வசித்து வந்த ஒரு ஓட்டு வீட்டிற்கு முன் வந்து நின்றோம். ஏன்என்றால் அந்த வீட்டிற்குள் நுழையும்போது ஆணிகளில் மாலைகள் தொங்கிக்கொண்டிருந்தன. அவை எல்லாம் ஒட்டடைப் படிந்து அழுக்காக இருந்தன. எந்தக் காலத்திலோ யாரோ போட்ட மாலைகள் யாவும் தூக்கி எறியாமல் மாட்டியிருந்தன.

உள்ளேயிருந்து விசிறி சாமியார் வந்தார். அவரைப் பார்த்தவுடன், ”உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்…வரலாமா” என்று பிரமிள் கேட்டார். உள்ளே வரச் சொன்னார் விசிறி சாமியார். முதன் முதலில் அவரைப் பார்க்கும்போது எனக்கு திகைப்பாக இருந்தது. அவர் ஒரு அழுக்கு வேஷ்டியைக் கட்டிக்கொண்டிருந்தார். அவர் உடலே அழுக்காக இருக்கும்போல் தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் பயங்கர தேஜஸ். தாடி வைத்திருந்தார். அந்த தேஜஸைப் பார்த்து எனக்கு ஆச்சிரியமான ஆச்சரியம்.

உள்ளே நுழையும்போது நான் உட்கார அவசரமாக ஓடினேன். அப்போது அவர் என்னைத் தடுத்து நிறுத்தினார்.

முதலில் பிரமிளையும், பின் சுப்பிரமணியனையும், அதன் பின் என்னையும் உட்காரும்படி சொன்னார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. ஏன் உட்கார கூட அவர் விருப்பப்படி சொல்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை.

சாமியாரும், பிரமிளும் ஆங்கிலத்தில் உரையாடினார்கள். பிரமிளுடன்தான் அவர் பேசிக்கொண்டிருந்தார். நானும் சுப்பிரமணியனும் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தோம். வாயைப் பிளந்துகொண்டு என்று கூட சொல்லலாம். நான் என் ஆர்வத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தேன். சுப்பிரமணியன் எதையும் வெளிப்படையாகக் காட்டிக்கக் கூட இல்லை.

அடிக்கடி சாமியார் தன்னை பிச்சைக்காரன் என்று குறிப்பிட்டுக் கொண்டார். ‘எதற்கு இந்தப் பிச்சைக்காரனைப் பார்க்க வந்தீர்கள்?” என்று கூட கேட்டார். இதற்குமுன் ஒரு சாமியார் செய்கையை நான் பார்த்ததில்லை. அவர் திடீரென்று பிரமிள் கையைப் பிடித்துக்கொண்டார். பின் பிரமிள் முதுகில் ஓங்கி தட்டினார். எனக்கு திகைப்பாக இருந்தது. ஓங்கி தட்டுதலை இரண்டு மூன்று முறை செய்தார்.

பொதுவாக சாதாரணமாகப் பேசினாலே சண்டைக்கு வருபவர் பிரமிள். அவருக்குப் பிடிக்காத எழுத்தாளர்களைப் பார்த்தால் போதும், அவர்கள் மிரண்டு ஓடும்படி செய்வார். நான் பலரை பிரமிளுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன். அவர்களுடன் அவர் பேசும்போதே கிண்டல் தொனியுடன் பேசுவார். எனக்கும் ஏண்டா அறிமுகப் படுத்தினோம் என்ற சங்கடம் வரும். ”சார், இவர் பெயர் ரமணன்,” என்று ஒருவரை அறிமுகப் படுத்தினேன்.

”எந்த ரமணன்?”

”சதங்கையில் கவிதை எழுதியிருக்கிறேன்?” என்று அவர் சொன்னால் போதும்,

”சதங்கையா… அதெல்லாம் பத்திரிகையா?” என்று சொன்னவரை கிண்டல் செய்து அனுப்பி விடுவார்.

அதனால் ஆர்வத்தோடு பழக வேண்டும் என்று நினைப்பவர், அவ்வளவு சீக்கிரம் நெருங்கி பழகிவிட முடியாது. அப்படிப்பட்டவர் விசிறி சாமியார் முன் பயப்பக்தியுடன் மரியாதையுடன் அமர்ந்திருந்தார்.
(இன்னும் வரும்)

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….2

நான் நேற்று இதை டைப் அடிக்கும்போது இரவு பத்து மணி ஆகிவிட்டது. இப்போதும் 10 மணி. அதனால் கொஞ்சம் அடித்துவிட்டு நிறுத்தி விட்டேன். நானே பல விஷயங்களை இப்படி blogல் அடிப்பது சந்தோஷமாக உள்ளது. இதை சிலபேர்கள் படிக்கிறார்கள். இப்படி அடிப்பது முன்பெல்லாம் கிடையாது. பெரும்பாலும் பத்திரிகையில் பிரசுரம் ஆவது நடக்காது. நான் கவிதைகள் எழுதி அதைப் பிரசுரம் செய்ய சரியான பத்திரிகை இல்லை என்பதால்தான் நவீன விருட்சம் ஆரம்பித்தேன். என்னைப்போல் பல நண்பர்கள் கவிதைகளையும் பிரசுரம் செய்ய வழி தெரியவில்லை. அப்படி ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைதான் நவீன விருட்சம்.
அந்தப் பத்திரிகை ஆரம்பித்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. பெரிய படைப்பாளிகளின் படைப்புகளையும் பிரசுரம் செய்ய வழி இல்லை என்பதுதான். என் பத்திரிகையின் 2 வது இதழின்போது க.நா.சுவை மயிலாப்பூரில் சந்தித்தேன். எனக்கு அவரிடம் அளவுகடந்த மரியாதை உண்டு. அவரிடம் விருட்சத்திற்கு எதாவது விஷயதானம் செய்ய முடியுமா என்று கேட்டேன். உடனே ஒரு கட்டுரையை பையிலிருந்து எடுத்துக்கொடுத்தார். எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம். நான் அந்தக் கட்டுரையைப் பிரசுரம் செய்யவில்லை.
புதுக்கவிதைக்கு முக்கியமானவர்கள் என்று மூன்று பெயர்களை மட்டும் அவர் குறிப்பிட்டிருந்தார். என் நண்பர்கள் பலர், அவர் கட்டுரையில் குறிப்பிட்டது சரியில்லை என்று வாதிட்டார்கள். எனக்கோ க.நா.சு எது எழுதிக்கொடுத்தாலும் பிரசுரம் செய்ய வேண்டுமென்று தோன்றியது. இரண்டாவது இதழில் அந்தக் கட்டுரையைப் பிரசுரம் செய்யவில்லை. ஆனால் அக்கட்டுரை ழ என்ற சிற்றேட்டில் வெளிவந்துவிட்டது. 3வது இதழ் போது க.நா.சு இறந்து விட்டார். அட்டைப் படத்தில் ஆதிமூலம் வரைந்த புகைப்படத்தை பிரசுரம் செய்தேன். (ஆதிமூலம் வரைந்த இன்னொரு படத்தை சு.ராவின் காலச்சுவடிற்குக் கொடுத்துவிட்டேன்).
நான் திரும்பவும் பிரமிள், விசிறி சாமியாருக்கு வருகிறேன். பிரமிளுக்குக் கூட பத்திரிகையில் பிரசுரம் செய்ய பத்திரிகைகள் எதுவுமில்லை. விருட்சம் இதழில் கூட 9வது இதழில்தான் அவர் படைப்புகளைப் பிரசுரம் செய்ய முடிகிறது. சிறுபத்திரிகை சூழலில் படைப்பாளர்களிடையே உள்ள fight பத்திரிகை நடத்துவதே பிரச்சினையாகிவிடும். எந்தப் படைப்பாளியையும் பிரமிள் எளிதாக பாராட்டவே மாட்டார் என்று எனக்குத் தோன்றும். அதனால் நான் எழுதுவதை எதுவும் அவரிடம் காட்ட மாட்டேன். அவரிடம் மட்டுமல்ல பல மூத்த எழுத்தாளர்களிடம் என் படைப்புகளை நான் காட்டியதே இல்லை. மேலும் ஒருவரை பிரமிள் திட்டி எழுத ஆரம்பித்துவிட்டால் யாரும் அவர் முன்னால் நிற்க முடியாது. அப்படி திட்டிவிடுவார். பிரமிளைப் போல நான் பழகிய மற்ற மூத்த படைப்பாளிகளை அவர் திட்டுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரமிளுக்கு புதுமைப்பித்தன் மீதும், மெளனி மீதும் அளவுகடந்த மரியாதை உண்டு.
ஆரம்ப மெளனி கதைத் தொகுதியில் பிரமிள் அவரைப் பாராட்டி எழுதிய கட்டுரை இடம் பெற்றிருந்தது. மறு தொகுப்பாக மெளனி கதைகள் வந்தபோது பிரமிள் கட்டுரை பிரசுரம் ஆகவில்லை. அந்தச் சமயத்தில் பிரமிள் வெளிப்படுத்திய feeling எனக்குத் தெரியும். இது எதில் கொண்டு போய் விட்டது என்றால் மெளனி கெளனி என்று மெளனி கதைகளையே திட்டி எழுதிவிட்டார். இதுதான் அவருடைய பலம். பாராட்டியும் எழுத முடியும், திட்டியும் எழுத முடியும் அவரால். படிப்பவர்களுக்கு அவர் சொல்வதுதான் நியாயம் என்று தோன்றும். யாருக்கும் தலை வணங்காத பிரமிள் ரொம்ப மரியாதையுடன் இருப்பது, ஜே கிருஷ்ணமூர்த்தியிடமும், விசிறி சாமியாரிடமும்தான். விசிறி சாமியாரைப் பார்க்க வேண்டும் என்று பிரமிள் சொன்னபோது, முதலில் எனக்கு தயக்கமாக இருந்தது. சாமியார்களிடம் பழகுவது சாதாரண விஷயமல்ல. நானும் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கப் போவேன். ஆனால் தூரத்திலேயே அவர் பேச்சைக் கேட்டுவிட்டு வந்துவிடுவேன். கூட்டம் முடிந்தவுடன் ஜே கிருஷ்ணமூர்த்தியும் கூட்டத்தோடு கூட்டமாக வேகமாக நடந்து போய்க் கொண்டிருப்பார். (இன்னும் தொடரும்..)

நான், பிரமிள், விசிறி சாமியார்……..1

ஒரு சனிக்கிழமை திருவண்ணாமலையில் இருக்கும் விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்கலாம் என்றார் பிரமிள். அலுவலகத்தில் விடுமுறை எடுக்க வேண்டாமென்பதால் சம்மதித்தேன். லயம் சுப்ரமணியனும் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டார். சாமியார்களைப் பார்ப்பதில் பிரமிளுக்கு அலாதியான பிரியம் உண்டு. சாமியார்களுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொண்டிருந்ததால் அவருக்கும் சாமியார்களின் குணம் இருக்குமென்று சிலசமயம் எனக்குத் தோன்றும். பிரமிளை என்னால் புரிந்துகொள்ளவே முடியாது. சிலசமயம் என்னுடன் நன்றாகப் பேசுபவராகத் தோன்றும். அப்படி நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவர் என்னை விட்டு விலகியும் போயிருக்கிறார். அவருடன் பழகிக்கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக என்னை அடிக்கடி சந்திக்க வந்து கொண்டிருப்பார். சந்திக்காத நாட்களில் கார்டில் கடிதம் போடுவார். ஒருமுறை என் சட்டையைப் பார்த்து, ‘சட்டை நன்றாக இருக்கிறது,’ என்று குறிப்பிட்டார். அன்றே என் சட்டை ஒரு ஆணியில் மாட்டி கிழிந்து விட்டது. ஒரு முறை, ‘என்ன நன்றாக சாப்பிட்டீர்களா?’ என்று வயிற்றைத் தட்டினார். அன்று எனக்கு வயிற்று வலி. பிரமளுடன் நட்புடன் பழகுவது என்பது கடினம். இத்தனைக்கும் பொருளாதார ரீதியில் ஆதரவே இல்லாதவர். பலநாட்கள் அவர் எப்படி வாழ்க்கை நடத்துகிறார் என்பதை யோசித்துக்கொண்டிருப்பேன்.
மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டர் ராமர் கோயிலில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அவருடன் பேசிய பல விஷயங்களை நான் டைரியில் குறித்து வைத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டேன். அவருக்குக் கோபம் வந்தால் கண்டபடி திட்டி விடுவார். ஆனால் பேசும்போது மரியாதையாகத்தான் பேசுவார். அவர் ராயப்பேட்டையில் இருந்தபோது பலமுறை அவர் அறைக்குச் சென்றிருக்கிறேன். க்ரியா இருந்த தெருவிற்கு எதிரில்தான் அவர் வசித்து வந்தார். இலங்கையில் வசிப்பது ஆபத்து என்பதை அவர் முன்பே உணர்ந்திருந்தார். அதனால் அவர் இலங்கையைவிட்டு 60 வாக்கில் சென்னைக்கே வந்துவிட்டார். ஏனோ அவர் திரும்பவும் இலங்கைக்குச் செல்லவில்லை.
ஜே கிருஷ்ணமூர்த்தி மீதும், விசிறி சாமியார் மீதும் அவருக்கு அலாதியான மரியாதை உண்டு. நான் சின்ன வயதில் மருந்துக்கடைகளில் ஒரு சாமியார் படம் பார்ப்பேன். அந்தச் சாமியார் படம் மீது எனக்கு என்னை அறியாமல் பக்தி ஏற்படும். நான் பிரமிளுடன் பழகியபிறகுதான் அந்த சாமியார்தான் ஷீரடி சாய்பாபா என்பதை அறிந்துகொண்டேன்.
ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி யாராவது குறையாகச் சொன்னால் கடுமையாக சண்டைக்கு வந்து விடுவார். ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவம்தான் லேட்டஸ்ட் என்பார். புத்தரை விட முக்கியமானவர் ஜே கிருஷ்ணமூர்த்தி என்பார். கிருஷ்ணமூர்த்தியை அவர் நம்ப தொடங்கியபோது, அவர் ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார். அவருக்குத் தெரிந்த நண்பர்கள இருவரில் ஒருவரை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது காப்பாற்றியிருக்கிறார். ஒருவர் இறந்துவிட, இன்னொருவர் தப்பித்துவிட்டார். அதற்குக் காரணம் கிருஷ்ணமூர்த்தி என்பார் பிரமிள்.
அந்த நண்பர்கள் இருவரும் சகோதரர்கள். தீவிர கஞ்சா அடிப்பவர்கள். அவர்கள் உயிரையே குடிக்கும் அளவிற்கு கஞ்சா அவர்களை இழுத்துச் சென்றுவிட்டது. ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவம்தான் தீவிர கஞ்சா அடித்துக்கொண்டிருந்த ஒருவரை காப்பாற்ற முடிந்தது. அந்த நண்பர் அதன்பின் பிரமிளுடன் ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்திற்கு அடிக்கடி வருவார். பிரமிளுக்கு பல உதவிகளை அவர் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட நண்பர்கள்தான் பிரமிளுக்கு பலதடவை உதவி செய்திருக்கிறார்கள். (இன்னும் தொடரும்..)

நவீன விருட்சம்….நவீன விருட்சம்…..நவீன விருட்சம்…….நவீன விருட்சம்……..நவீன விருட்சம்…….நவீன விருட்சம்……நவீன விருட்சம்…..நவீன

நிதானமாக மாலை 5 மணிக்குமேல் அழகியசிங்கரை ஜெகனும். மோகினியும் சந்திக்கிறார்கள்.
ஜெகன் :
வெயில் கடுமையாக இருக்கிறது.மோகினி : அக்னி நட்சத்திரம் போனபிறகும் வெயில் கொடுமை தணியவில்லை.அழகியசிங்கர் : அலுவகத்திலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டால் தொப்பென்று விழுந்துவிடத் தோன்றுகிறது. எங்கும் போக முடியவில்லை.ஜெகன் : இலங்கைப் பிரச்சினை…மோகினி : எனக்கு ஒன்று புரியவில்லை. இந்தியா போன்ற நாட்டில் பல மொழிகள் பேசுபவர்கள், பல இனத்தவர்கள் வாழ்கிறார்கள். ஆனால் இலங்கையில் இரண்டே இரண்டு மொழி பேசுபவரிடம் ஏன் சுமுகமான நிலை ஏற்படவில்லை?அழகியசிங்கர் : சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு கனவு வந்தது. எல்லோரும் ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மேலே விமானங்கள் சீறிப் பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து குண்டுகள் பொழிந்தவண்ணம் இருக்கின்றன. குண்டுகளுக்கு இரையாகி மக்கள் சரிந்து சரிந்து விழுகிறார்கள்… போர் நடக்கும்போது தமிழர்கள் பட்டப்பாட்டை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஜெகன் : நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். மோகினி : ஏன் பலவீனமானவர்கள் என்று கூட சொல்லலாம்.அழகியசிங்கர் : எழுத்தாளர்கள் என்றால் இன்னும் பலவீனமானவர்கள்.ஜெகன் : நாமெல்லாம் மெளனமாக வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.மோகினி : எந்த விஷயத்திலும் நாம் சாதாரணமானவர்கள்.ஜெகன் : இப்படி சாதாரணமானவர்கள் ஏன் கவிதை எழுத வேண்டும். கதை எழுதவேண்டும்.மோகினி : ஏன் வாசிக்க வேண்டும்?அழகியசிங்கர் : நாம் எழுதுவதால் ஒன்றும் செய்ய முடியாது. உலகத்தில் நடக்கும் மாற்றங்களை சாதாரண மனிதர்கள் போல் பார்த்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்.மோகினி : ஒன்றும் செய்ய முடியாது. ஏன் நமக்கு ஆபத்து ஏற்பட்டால் கூட ஒன்றும் செய்வதற்கில்லை. அழகியசிங்கர் : டூ வீலர் மோதி ராஜ மார்த்தாண்டன் இறந்த செய்தியை அறிந்தபோது என்னால் நம்ப முடியாமல் இருந்தது.மோகினி : ஏன்?அழகியசிங்கர் : டூ வீலர் மோதி இறப்பதா? பலத்த காயம் ஏற்படலாம். மரணம் ஏற்படுகிறது என்றால் ரொம்ப மோசமான விஷயமாக எனக்குத் தோன்றுகிறது.ஜெகன் : விபத்தில் மரணம் அடைவதுபோல் கொடுமை வேறு எதுவுமில்லை.அழகியசிங்கர் : பல ஆண்டுகளுக்குமுன் என் நண்பர் ஒருவருக்கு முதுகு தண்டுவடத்தில் நடந்த விபத்தை இன்னும்கூட என்னால் மறக்க முடியவில்லை. அவரைப்போல் சிலரால்தான் இந்த விபத்தை தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும். எனக்கு எப்போதும் அவர் ஹீரோதான்.ஜெகன் : எழுத்தை யாராவது படிக்கிறார்களா?அழகியசிங்கர் : படிக்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். ஆனால் எழுதுபவர்கள் ஹீரோவாக தங்களை நினைத்துக்கொண்டால் ஆபத்து.மோகினி : எத்தனையோ தொகுப்புநூல்கள் வெளிவருகின்றன. ஆனால் ஏன் உங்கள் கவிதைகளையோ கதைகளையோ யாரும் தொகுப்புநூலில் சேர்ப்பதில்லை.அழகியசிங்கர் : எனக்கும் அது புரிவதில்லை. கிட்டத்தட்ட 200 கவிதைகளுக்கு மேலும், 60 கதைகளுக்கு மேலும் எழுதியிருக்கிறேன். கடந்த 22 ஆண்டுகளாக நவீன விருட்சம் பத்திரிகை நடத்தி வருகிறேன். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறேன். ஆனால் கவிதைத் தொகுதியாக இருந்தாலும், கதைத் தொகுதி இருந்தாலும் சரி என் படைப்புகள் யார் நினைவுக்கும் வருவதில்லை. என்னைப் போல் சில எழுத்தாள நண்பர்கள் பெயர்களும் யாருக்கும் தெரிவதில்லை.ஜெகன் : இது குறித்து நீங்கள் ரொம்ப பேசினால், மற்றவர்களைப் பார்த்து நீங்கள் பொறாமைப் படுவதாக சொல்வார்கள். மோகினி : இதற்காக நீங்கள் வருத்தப் படுகிறீர்களா?அழகியசிங்கர் : இல்லை. ஆனால் என் பெயர் அத் தொகுப்பில் இல்லாவிட்டாலும், விடுப்பட்ட பெயர்களில் ஒவ்வொரு தொகுப்பிலும் நானும் இருந்துகொண்டுதான் இருக்கிறேன். ஜெகன் : நீங்கள் நாவல் மட்டும் எழுதியிருந்தால் இந் நேரம் புகழ் அடைந்திருப்பீர்கள்.அழகியசிங்கர் : நாவல் எழுதுவதற்கு கடுமையான முயற்சியும், பொறுமையும் தேவைப்படுகிறது. மேலும் எல்லா நாவல்களும் எல்லோருடைய கண்களுக்கும் தெரிவதில்லை.மோகினி : சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகம் எது?அழகியசிங்கர் : பாரதிமணி எழுதிய புத்தகம். படித்துக்கொண்டிருக்கும்போது என் கையிலிருந்து எங்கோ நழுவிப் போய்விட்டது. அவர் புத்தகம் மூலம் இன்னொரு சுப்புடுவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். சரளமான நடையில் எல்லாவற்றையும் தொடர்ந்து எழுதிக்கொண்டு போகிறார்.மோகினி : இந்த இதழ் நவீன விருட்சம்?அழகியசிங்கர் : 160 பக்கம் வருகிறது. புதுக்கவிதை மலர்ந்து 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடுகிறோம். ஏகப்பட்ட கவிதைகள், கதைகள் படிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.ஜெகன், மோகினி : உங்களைச் சந்தித்ததிலும் மகிழ்ச்சிஅழகியசிங்கர் : நானும் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அக்காவின் அன்பளிப்பு……….

இடுப்பில் அரவம் சுற்றிய
பிள்ளையார் படம் என்றால்
அதை வீட்டில் வைக்கக்
கூடாது என்பதால்
கோவிலுக்கு அதை தந்து
விடுவதாக முடிவு செய்தாள் அக்கா..

எனினும் அந்தப் படத்தின்
கீழ் எழுதிக் கொடுத்தாள்……..

அன்பளிப்பு : ம.தனலட்சுமி என்று…….

போலிப் பா(ர்)வை

(இதோ ஒரு சிலேடைக் கவிதை. இதில் வேசியையும், கண்ணாடியையும் சிலேடைப் பொருளாக்கி எழுதியிருக்கிறேன். படம் ஒரு பெண் கண்ணாடி அருகில் இருப்பது போல இருந்தால் நலம். இன்றேல் எது பொருத்தமோ அதை இடுங்கள்.)

யாருமற்ற வெளியில்
உன்னைக் கடந்தபோது
ஒரு வினாடி
என்னை பூசிக்கொண்ட
போலி நீ.

என்னை
உள்ளிறக்கிக் கொள்வது போல்
பாசாங்கு காட்டுகிறாய்.

நான்
தள்ளிப்
போனதும்
அடுத்த
பிம்பத்திற்குத்
தயாராய் நீ!

மேகத்திலுன் முகம்

இறுதி நிராகரிப்பின்இறுதிச் சொல்லைச்சொல்லிவிட்டு நீசெல்கையில்உன் முகத்தைக்காட்டியபடியே மேகம்பேய்மழையின் கோரத் துளிகளால்கிழித்தெறிந்தது பெயர் தெரியாதபூவிதழ்களை அவை சேற்றில்கலந்து எங்கோமுகவரியற்ற இடங்களுக்கெல்லாம்இழுத்துச் செல்லப்பட்டபோதுநடை பிணமாய்நடக்கலானேன் நானும்

மூன்று கவிதைகள்

கவிதை : ஒன்று
சிலருடன் பேச விரும்புகிறோம்
ஆனால்பேச முடிவதில்லை
சிலரைப் பார்க்கவே விரும்புவதில்லை
சிலரைத் தேடிப் போகிறோம்
அகப்படுவதில்லை
சிலர்முன்னால்
தேவைப்படாமல் தட்டுப் படுகிறோம்
வானத்தில் கோலம் போடுவதுபோல்
பறவைகள் பறந்து கொண்டிருக்கின்றன
தினமும் அப்படி எதிர்பார்க்க முடியுமா?
ஒருநாள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்
ஒருநாள் துக்கமாக இருக்கிறோம்
காரணம் புரிவதில்லை
உருண்டோடிப் போகும் காலப் பந்து
புரியாத புதிராக எட்டி
உதைக்கப் படுகிறது

கவிதை : இரண்டு

ஹஸ்தினாபுரத்தின் கிளை அலுவலகத்தில்
காலை வைத்ததும் ஒரே இருட்டு
ஜெனரேட்டர் இன்னும் பிக்அப் பண்ணவில்லை
பல்லைக் கடித்தபடி சீட்டில் அமர்ந்திருந்தேன்
கணினியில் எண்களைத் தடவி தடவி தட்டினேன்
விழுந்தனதப்புத் தப்பாய் எண்கள்
வாடிக்கையாளர் முன்னாள்
தலையில் அடித்துக்கொண்டேன்
வாசலில் போய்தனியாக வெயிலின்
புழுக்கத்தைப் போக்கிக்கொள்ள நின்று கொண்டிருந்தேன்
புழுக்கமில்லாத வெளி இதமாய் இருந்தது
இப்போதெல்லாம்
ஏனோ எனக்கு சிரிப்பே வருவதில்லை

கவிதை : மூன்று

கூட்டங்களில் நான்
தூங்குவது வழக்கம்
இலக்கியக் கூட்டங்களில்
நன்றாய் தூக்கம் வருகிறது
வகுப்புகளில் மாட்டிக்கொண்டால்
தூக்கம் தவிர்க்க
வகுப்பு வாசலில் நிற்பேன்
அலுவலகத்தில் நடக்கும்
கூட்டத்தில்தூங்கும்போது
யார் பேசுகிறார்கள்
என்பதை கவனமாய் கவனிப்பேன்
தூக்கத்தில் தலை ஆடுகிறதா என்றும்
ஆடும் தலையை யாராவது கவனிக்கிறார்களா என்றும்
பார்ப்பேன்
அப்படியும்
சற்று தூக்கம் என்னைக் கவர்ந்துவிடும்
தூக்கம் வரும்போது
பேசுபவர்கள் என்னை அத்திரத்தோடு
முறைத்துப் பார்ப்பதாக தோன்றுகிறது
முஷ்டியை மடக்கிக்கொண்டு முகத்தில்
ஓங்கி குத்த வேண்டுமென்று
பேசுபவருக்குத் தோன்றுகிறதோ…
ஆனால்
இரவில் குறைவாக தூங்குவது
என் வழக்கமாயிற்று