மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 140

அழகியசிங்கர்

அப்பாவின் முகம்

இரா.மதிபாலா 

அப்பாவின் காதலி 

வந்திருந்தார் 

இங்கு 

முன்னாள் என 

எழுதுவதில் உடன்பாடு இல்லை 

பருவத்திற்கேற்ப மனசில் 

உடன் பயணிக்கவே 

செய்தவள் 

நேற்று வரை.. 

எழுத்திலும் தொடாதபடி 

காதலும் நட்புமாய் 

மனமூச்சில் இருந்தவள்.

அப்பா தன் துக்கப்பொழுதிலும் 

மகிழ் பொழுதிலும் 

சில நொடிகள் யாரும் 

அறியாதபடி 

அவளை உச்சரிப்பார் 

அவள் 

அருகிருந்த வாசமுணர் உயிர்ப்போடு…

இதோ

வந்திருக்கிறாள்

அம்மாவிற்கு அவள் 

புதுமுகம்.

எனக்கு அவள் 

அப்பாவின் 

இன்னொரு முகம்.

அப்பாவின் 

இளமை வாசம் 

அவளிடம் இன்னும் 

வீசுகிறது

அப்பா படத்தின் 

சம்பங்கி மாலை போல

நான் 

அவரை வரச்சொல்லி 

கைப்பிடித்து அமர்த்தினேன் 

அப்பாவை அமர்த்தியது 

போலவே  

நன்றி :  அசைந்தபடியே இருக்கிறது தூண்டில் – இரா.மதிபாலா – வெளியீடு : தேநீர் பதிப்பகம், 24/1 மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர், ஜோலார்பேட்டை 635851 தொடர்புக்கு : 9080909600 – மொ.பக்: 72 – விலை : ரூ.80

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2/139

அழகியசிங்கர்  

ஒரு போதும்

பவித்ரன் தீக்குன்னி 

மொழிபெயர்ப்பு : என்.டி.ராஜ்குமார்

அம்மாவும் அக்காவும் குடிசையும் 

தூக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது 

மண்ணெண்ணை மணக்கின்ற 

இருட்டிலிருந்து 

எழுந்துவந்த குழந்தை 

இறைவனிடம் கேட்டது 

ஒருபோதும் தேயாத ஒரு பென்சில் 

வேண்டுமென்று 

இறைவனும் நல்ல ஒரு பென்சிலை 

கொடுத்துவிட்டுச் 

சொன்னான் 

பத்திரமாக வைத்துக்கொள் 

ஒருபோதும் எழுதக்கூடாது.

நன்றி :  பவித்ரன் தீக்குன்னி கவிதைகள் – மொழிபெயர்ப்பு என்.டி.ராஜ்குமார் – வெளியீடு : புது எழுத்து – 3/167 ஸ்ரீராமுலு நகர், காவேரிப்பட்டிணம் 636 112, கிருஷ்ணகிரி மாவட்டம் – பின்கோடு : 9842647101 – பக் : 80 – விலை : 75 – வெளியான ஆண்டு : 2010

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 138

அழகியசிங்கர்

எனக்கான காலம்

ஆசு

எல்லாருக்கும் உண்டு

ஒரு காலம்

நடை பழக

ஒரு வண்டி

அரவணைக்க

ஓர் அம்மா

இளைப்பாற

ஓர் அப்பா

தாங்கி நிற்க

ஓர் அன்புத் துணைவி

எல்லாருக்கும் வாய்த்திருக்கும்

இப்படியாக காலம்

எனக்கும் வாய்த்திருக்கிறது

என் கைபிடித்தவள்

வாழ்வின் தணலில் உருக

தோள் சுமக்கும்

என் மழலைகள்

நாளும் பசி உண்ண

எனக்கும்

இப்படியாகத்தான் உண்டு

எனக்கான காலம்

நன்றி : என்றொரு மௌனம் – ஆசு – தவம் வெளியீடு, 4 கந்தப்பன் குடியிருப்பு, சூளை மேடு, சென்னை -94 – வெளியான ஆண்டு : 1999 – விலை : ரூ.15 – பக்கம் : 112

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 137

அழகியசிங்கர் 

நதி

கி.தாமரைச்செல்வன்

மலையினிடுக்கில் 

சுனையாய் தோன்றி

போகிற போக்கில்

ஒடுங்கிச் சிறுத்து 

ஓசை காட்டி

அகன்று பெருத்து

அமைதியாய் நடந்து

ஆர்ப்பரித்து

அருவியாய் விழுந்து

நதிக்கரைதோறும்

நாடு வளர்த்து

செம்புலம் பெயர்ந்தால்

செந்நீராக

கடல்மடி நுழைந்தால்

வானிறமாக 

நன்றி : மனதினில் கவிதை பூவெழுத – கி.தாமரைச்செல்வன் – பொதினி பதிப்பகம், 9 சுப்பையா நகர் அனெக்ஸ், அய்யப்பன்தாங்கல், சென்னை 600 056 பக்கங்கள் : 100 – விலை ரூ.120 – தொடர்புக்கு : 9841086696

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 136

அழகியசிங்கர்  

சிமெண்ட் பெஞ்சுகள்

நஞ்சுண்டன்                                                     

வசந்த காலத்தில்

பூத்துக்குலுங்கும் மரங்களின் 

கீழிருக்கும் 

சிமெண்ட் பெஞ்சுகள் 

கடந்து செல்லும் ஒவ்வொருவரையும் 

அழைக்கின்றன 

‘வா. உட்கார். ஓய்வெடுத்துக்கொள். 

கோடை வெயிலிலோ 

விநயமாய் வேண்டுகின்றன

‘மன்னித்துக்கொள். வேறிடம் தேடு.’

சிமெண்ட் பெஞ்சில்

அமரும் யாரும் அறியார் 

தனக்கு முன்னும் பின்னும் 

அமர்கிறவர் யாரென்று.

சிமெண்ட் பெஞ்சுகள் மட்டும் அறியும் 

உட்காரும் மனிதர் யாவரையும்.

நன்றி : சிமெண்ட் பெஞ்சுகள் – நஞ்சுண்டன் – பக்கங்கள் : 52 – விலை : ரூ.25 – ஆண்டு : நவம்பர் 1996

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2>- 135

புத்தரின் படுகொலை


எம்.ஏ.நுஃமான்

நேற்று என் கனவில்

புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார். 

சிவில் உடை அணித்த 

அரச காவலர் அவரைக் கொன்றனர். 

யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே 

அவரது சடலம் குருதியில் கிடந்தது. 

இரவில் இருளில் 

அமைச்சர்கள் வந்தனர்

 ‘எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை

 பின் ஏன் கொன்றீர்?’

 என்று சினந்தனர்.

 ‘இல்லை ஐயா, 

தவறுகள் எதுவும் நிகழவே இல்லை 

இவரைச் சுடாமல்

 ஓர் ஈயினைக் கூடச் 

சுடமுடியாது போயிற்று எம்மால் 

ஆகையினால். 

என்றனர் அவர்கள்.

‘சரி சரி

 உடனே மறையுங்கள் பிணத்தை’

 என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர். 

சிவில் உடையாளர் 

பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.

தொண்ணூறாயிரம் புத்தகங்களினால் 

புத்தரின் மேனியை மூடி மறைத்தனர் 

*சிகாலோகவாத சூத்திரத்தினைக் 

கொழுத்தி எரிந்தனர்.

புத்தரின் சடலம் அஸ்தியானது 

*தம்ம பதமும்தான் சாம்பரானது.

(சிகாலோகவாத சூத்திரம், தம்மபதம் ஆகியன பௌத்தமத அறநூல்கள்.)

நன்றி : மழை நாட்கள் வரும் – எம்.ஏ.நுஃமான் – பக்கங்கள் : 80 – வெளியீடு : அன்னம் வெளியான ஆண்டு : 1983 – விலை : ரூ.5  

பின் குறிப்பு : மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் 100 கவிதைகள் அடங்கிய தொகுதியை ஏற்கனவே கொண்டு வந்துள்ளேன். இது இரண்டாவது தொகுதி.  கவிதைத் தொகுதிகளிலிருந்து மட்டும் கவிதைகள் எடுக்கப்படுகின்றன.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 134

அறிவேனா

சி.சு.செல்லப்பா

கனவுக்குள் கனவு; 

பிளந்து 

இமை திருகி- எழ 

விழித்ததுண்டு 

நினைவுக்குள் நினைவு; 

மூழ்கி 

சொரணை தப்பி – விழ 

உறங்கிய துண்டு

வாழ்வுக்குள் வாழ்வு; 

தெளிந்து 

நேர் ரோட்டில் 

நடந்தேனா 

சாவுக்குள் சாவு; 

வற்றி 

ஓயும் பொழுதை 

அறிவேனா

நன்றி : மாற்று இதயம் – சி.சு.செல்லப்பா – எழுத்து பிரசுரம் – முதல் பதிப்பு – மே, 1974 – பக்கங்கள் : 104 – க்ரவுன் அளவு – விலை : ரூ. 4,00

கொரோனா

                 

               அழகியசிங்கர்

 தெருவில் 

நடந்து செல்ல வீட்டுக் கேட்டைத்

திறந்து 

தெருவில் இறங்கினான்

சுற்றிலும் கொரோனா கொரோனா என்ற ஓலம்

காதில் விழ 

யாரும் கண்ணில் படவில்லை தெருவில்

நடந்தவன் 

திரும்பவும் வீட்டிற்குள் சென்று

கட்டிலின் அடியில் போய் 

பதுங்கிக்கொண்டான்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2

அழகியசிங்கர் 

 ஜான்ஸி ராணி கவிதை

முற்பகல் பிற்பகல்

மதியம் முன் அந்தி

ஏதோ ஒரு யாமம்

எதிர்பார்த்த

அல்லது

எதிர்பாரா

ஏதோ ஓர் க்ஷணம்

நீ வரக்கூடும்

தர்மராஜன் உன் நாமம்

எருமையுன் வாகனம்

என்பதென்

கேள்விஞானம்

நீ வருவதில்

ஒன்றுமேயில்லை

சுவாஸ்யமெல்லாம்

இந்த காத்திருப்பில்தான்.

நன்றி : ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் – ஜான்ஸி ராணி – பக் : 70 -விலை : ரூ.80 – முதல் பதிப்பு : டிசம்பர் 2019 – வெளியீடு : வாசகசாலை பதிப்பகம், சென்னை 600073 தொடர்பு

எண்கள் : 9942633833, 9790443979

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 132


அழகியசிங்கர்  




 பகிர்வு




ஆர். ராஜகோபாலன் 

பக்கத்துக் கோயிலில் தமிழ்த்தலைவன்* பற்றிய பொழிவு

ஒரு நூறு பேருக்கும் மேல் வருகை சுவரோரத்தில்

நெகிழி நாற்காலிகள் அடுக்கி வைக்கப்பட்டு ஒவ்வொனறாய்

 வெள்ளை சிகப்பு நீல வண்ணங்களில் எடுத்துப்

போட்டுக்கொள்கிறார் வருபவர் ஒவ்வொருவரும்

ஒன்று மட்டும் கடைசியில் தேறவேயில்லை ஒரு கால்

முறிந்து தள்ளாடுகிறது இப்பக்கமும் அப்பக்கமும்

கடைசி வரிசைக்காரர் எச்சரிக்கிறார் இதைச்சொல்லி

இப்போது வருவோரையெல்லாம் மீண்டும் மீண்டும்

யாரேனும் உடல் பருமனானவர் உட்கார்ந்திருப்பாரோ

கீழே விழுந்திருப்பாரோ மேற்கொண்டு என்ன ஆயிற்றோ

நல்ல வேளை இப்போது அதற்கு தேவையில்லை

உடல் சுருக்கி கண்களை மூடிமூடித்திறந்து

உடைந்த நாற்காலிக்குள் படுத்திருக்கிறது

ஒரு பழுப்புநிறக் குட்டிப்பூனை

*தமிழ்த்தலைவன்: பேயாழ்வார்

நன்றி : கால்நடைக் கவிதைகள் – ஆர்.ராஜகோபாலன்,  வித்யுத் பப்ளிகேஷன்ஸ், மனை எண்.10 மேட்டுத்தெரு, நெமிலிச்சேரி, குரோம்பேட்டை, சென்னை, பேசி : 900 310 76 54  பக். 64 – விலை : ரூ.100