என் அம்மா


அவளுக்கு நன்றகவே தெரியும்
மகாபாரதமும் இராமயணமும்-
தினமும் எங்களுக்கு ஏதாவது ஒரு கதை
சொல்லுவாள் அவற்றிலிருந்து
தினமும் ஒரு புதிய கதை உண்டு –

அவற்றில் ஆயிரக்கணக்கில்
கதைகள் உண்டல்லவா?
எப்போதும் அவளுக்கு அவைதான்..
படித்துக்கொண்டிருப்பாள்-
பிரார்த்தனையின்போதும் அவைதான்
சில பகுதிகள் சில காண்டங்களிலிருந்து நிதமும்
ஒரு மண்டலம் ஒரு குறிப்பிட்ட பலனைத்தருமென்று.
நாங்களெல்லாம் பிரசாதத்திற்கெனவே காத்திருப்போம்
அதுவுமல்லவா என்ன எப்படிச் செய்ய
என்று சொல்லப்பட்டுள்ளது….

சீதை மற்றும் இலவகுசர்களின் கட்டங்கள்
அவளுக்குத் தெரிந்திருந்தும்
அவற்றைச் சொல்லும் போது
கண்ணில் நீர் வந்தபோதும்-
இராமனின் மேல்.
சீதையின் மேல் சந்தேகித்து
அக்னிப்பிரவேசம் செய்யவைத்த
இராமனின் மேல்
அவளுக்கு கோபம் வந்ததாக
எங்களுக்குத் தெரிந்ததில்லை-

அந்த வயதில்
நாங்கள் கேட்டதுமில்லை
அது அவளுக்கும் பிடித்திருக்குமாவென்றும்
எங்களுக்குத் தெரியாது..

எங்களுக்குத் தெரிந்ததெல்லாம்
அது பற்றிப் பெரியதாக விவாதித்தவர்களை
அவளுக்குப் பிடித்ததில்லை என்பதே-
அது.
ஒரு மாதிரியான,
பிணம்தின்னிக்கொள்ளிகளைப் பற்றி
நினைக்கையில் வருமே
அது போன்றவொரு
அருவருப்பு….

நான் வயதுக்கு வந்தபின்னர்
ஒருநாள்
அம்மா சொன்னாள்
ஏ அது அப்படித்தான்
பாஞ்ஞாலியை வைத்து
விளையாடியது
இதே கணக்கு தானே?

மற்றதெல்லாம் வெறும் கண்ணாமூச்சி
குழந்தைக்கு நிலா காட்டுவது-
ஒவ்வொரு அம்மாவும்
ஆங்கிலத்தில் சொல்வது போல
சர்ரகேட் மதர் ஒன்லி
(Surrogate mother only)
அவளது கர்ப்பப்பை வாடகை ஊர்தி மட்டுமே
வரும் கிராக்கி
அவளது கணவனேயானாலும் …ஏ

சரி,
புரியவேயில்லை…
ஆனாலும்
மகாபாரதமும் இராமாயணமும்
ஏன் கடைசிவரை
படித்துக்கொண்டேயிருந்தாளென்று.

நவீன விருட்சம் இதழில் சமீபத்தில் வெளிவந்த எ தியாகராஜனின் இன்னொரு கவிதை இது. மிக எளிமையாக எழுதப்பட்ட கவிதை. பொதுவாக ஒரு தொகுப்பை முழுவதுமாக வாசிப்பதைவிட பலருடைய கவிதைகள் அடங்கிய தொகுப்பை வாசிப்பது சிறந்த அனுபவத்தைத் தரும். ஒருவருடைய தொகுப்பபு மட்டுமே நிரம்பிய கவிதைகள் ஒரே விதமாகவும் படிக்க அலுப்பை உண்டாக்குவதாகவும் இருக்கும். எந்தக் கொம்பன் எழுதினாலும் இதுதான் உண்மை நிலை. யாருடைய கவிதை நூல்களாக இருந்தாலும், படிக்க படிக்க ஒரே வித mind process ஐப் படித்து படித்து நமக்குப் போர் அடித்துப் போய்விடும். என் சகோதரனுக்கு ஜே கிருஷ்ணமூர்த்தியின் Education and its significance என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தேன். படித்துவிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் படிக்க இந்த ஒரு புத்தகமே போதும் என்று கூறிவிட்டு அவருடைய வேறு எந்தப் புத்தகத்தையும் படிக்காமல் இருந்துவிட்டான். கவிதையிலும் ஓரளவு சிறுகதைகளிலும் ஒரே மாதிரியான mind process போரடிக்கிறது. படிக்கிறவர்களுக்கு இது ஏற்படாமல் இருப்பதில்லை. அதனால் ஒருவரின் தனிப்பட்ட தொகுதியைவிட பலர் எழுதிய தொகுதி சிறப்பாக இருக்கிறது.
விருட்சம் முழுவதும் பலருடைய கவிதைகள் படைக்கப் பட்டிருப்பதால், வேறு வேறு அலைவரிசையை உண்டாக்குகிறது.
அழகியசிங்கர்
15.07.2008 (செவ்வாய்க்கிழமை)

புரிவதில்லை கவிதை

உன்னுடைய
இந்தக் கவிதைக்கு
என்ன அர்த்தம்
ஒன்றும் புரியவில்லை

ஆச்பிரின்
கடித்துப் பாதியாகக்
கிடக்கும்
ஒரு ஆப்பிள் துண்டு
காபியோ
அல்லது டீயோ
ஏதோ ஒன்றின்
ஒரு காய்ந்துபோன கோப்பை-
ஒரு இளம் பெண்
அரைகுறை ஆடையில்
ஒரு மூலையில்
சிவலிங்கம் சாய்ந்து கிடக்கிறது-
நாற்காலி மீது
ஜென் புத்தகம் பாதி
திறந்த நிலையில் –

தண்ணீர் கொட்டி
அது கோடிட்டாற் போல

இதுபோன்ற சில வார்த்தைகள்
வேறொன்றும்
இல்லை –

கேட்டால் –
புரியாது
உனக்கு என்கிறாய்

அது சரி
இது ஒரு
ஓவியமல்லவா
எனக்கு
கவிதைப் புரிவதில்லை தான்

நவீன விருட்சம் 79-80வது இதழில் வெளிவந்த எ தியாகராஜன் கவிதைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். பொதுவாக கவிதைகள் எளிதாகப் புரியவேண்டும். ஆனால் பாமரர்களுக்கு எப்படியாக இருந்தாலும் கவிதைப் புரியாது. ஆனால் கவிதைப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு கவிதை புரியும்படியாக எழுதப்பட்டிருக்க வேண்டும். கவிஞர் எதையாவது எழுதி வாசகர்கள் எதையாவது புரிந்துகொள்ளவது சரியாக இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. பாரதியாரே எளிதாகத்தான் கவிதைகளை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எழுதியிருக்கிறார். க.நா.சு ஒருபடி மேல் போய்விட்டார். கவிதைக்கு படிமம், உவமை போன்ற சமாச்சாரங்கள் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவருடைய கவிதைகளைப் படிப்பவர்கள். ‘என்ன வசனத்தை உடைத்துப் போட்டு எழுதி உள்ளாரே’ என்பார்கள். உண்மையில் அப்படி இல்லை. எழுதும்போது மனதில் என்ன தோன்றுகிறதோ அதேபோல்தான் வரி அமைப்பும் அமைகிறது. அதை அப்படியே வாசிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும். கவிதை முழுதாக மனதில் தோன்றி எழுதப்படுகிறதா? அல்லது எழுதும்போது அதுவே தோன்றுகிறதா என்பதெல்லாம் தெரியாது. கவிதையை எளிதாக வாசித்துவிடலாம். ஆனால் ஒரு கதையையோ நாவலையோ அப்படியெல்லாம் வாசித்துவிடமுடியாது. வாசிக்க அவகாசம் அதிகம் தேவைப்படும். கவிதை வாசிப்புக்க அவகாசம் தேவையில்லை. ஒரு பக்கம் அல்லது அரைப் பக்கம்தான் வரும். ஆனால் அதன் மூலம் சிந்திப்பது என்பது அலாதியான விஷயமாக இருக்கும். பெரும்பாலும் இப்போது எழுதப்படும் கவிதைகள் ஞாபகத்தில் வரிகள் வராது. அதன் தாக்கம்தான் மனதில் அலைகளை எழுப்பும். படிக்கும்போதுதான் அது தோன்றும். சரி, இப்போது எ தியாகராஜன் கவிதைகளுக்கு வருவோம்.
தியாகராஜன் சிதம்பரத்தில் மெளனி வீட்டிற்கு எதிரில் குடியிருந்தவர். விருட்சத்தில் மெளனியைப் பற்றி எழுதுவதாக கூறியுள்ளார். தற்போது மும்பையில் வாசம். ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதுவதில் வல்லவர்.

ஒரு வேண்டுகோள்


சமீபத்தில் 79-80-வது இதழ் கொண்டு வந்துள்ளேன். நவீன விருட்சம் என்ற இதழ் ஜூலை மாதம் 1988 ஆம் ஆண்டு கொண்டு வரும்போது, கவிதைக்கான இதழாக மாறிவிடுமா என்ற கேள்விக்குறி தொக்கி நின்றது. இன்றும் அதிகமாக கவிதைகளைப் பிரசுரம் செய்யும் இதழாக நவீன விருட்சம் திகழ்கிறது. வாசகர்கள் வட்டமும் சரி, இதழுக்காக ஆகும் செலவும் அதிகமில்லைதான். முதல் இதழ் தயாரிக்கும்போது எனக்கு ரூ.500 வரை செலவு ஆனாது. 16 பக்கம். (தபால் செலவு சேர்க்கவில்லை) இப்போது ஒரு இதழ் (100 பக்கம்) தயாரிக்க ரூ10000 மேல் ஆகிறது (தபால் செலவும் சேர்த்து).

இந்த இதழ் 79/80 இதழ்களின் தொகுப்பு. காலாண்டு இதழாகவே இதைக் கொண்டுவர வேண்டும் என்ற என் எண்ணம் இன்னும் பசுமையாக இருக்கிறது. இதழ் தயாரிக்க எனக்கு 6 மாத கால அவகாசம் ஆகிவிடுகிறது. ஆனால் இரண்டு நாட்களில் அச்சாகி விடுகிறது. பின் அதை அனுப்ப 3 வாரம் ஓடிவிடுகிறது. இப்போதுதான் எல்லோருடைய முகவரிகளையும் தயார் செய்து கொண்டு வருகிறேன்.

சந்தா கட்டுங்கள் என்று முன்பு கேட்டு கடிதம் எழுதுவேன். இப்போது ஏனோ முடிவதில்லை? இந்த ஏனோ ஏன் என்பதும் புரியவில்லை. தற்போது கம்புயூட்டரில் அடித்து அதை பிரிண்ட் எடுத்து எல்லோருக்கும் அனுப்பலாம் என்ற எண்ணத்தில் உள்ளேன். முதலில் விருட்சத்தை எல்லோருக்கும் அனுப்பிய பிறகுதான் உடனடியாக அந்தப் பணியைத் துவங்க வேண்டும்.

இந்த வலை மூலம் எல்லோரிடம் ஆண்டுச் சந்தா கேட்கலாம் என்று பலவாறு யோசித்தே இதை எழுதுகிறேன். 21ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ள நவீன விருட்சத்திற்காக ஆண்டுச் சந்தா ரூ 40 ஐ அனுப்புங்கள். இந்த இதழ் ரூ 20 தான். இதைப் பெற விரும்பும் வெளி நாட்டில் உள்ள அன்பர்கள் ரூ50 அனுப்புங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

NAVINA VIRUTCHAM
6/5 POSTAL COLONY FIRST STREET
WEST MAMBALAM
CHENNAI 600 033
INDIA

எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
அழகியசிங்கர்
12.07.2008

துங்கபத்திரை


எனக்கு நினைவு மங்கிக்கொண்டு வருகிறது என்று சொன்னால் சட்டென்று நம்ப மறுக்கிறார்கள். நுண்ணிய தகவல்கள் நினைவுக்கு வராது. ஆனால் அனுபவம் நிலைத்திருக்கிறது.

பாவண்ணனின் ஆரம்பக் கதை ‘கணையாழி’ யில் வெளியானது. இரு எழுத்துக்களில் தலைப்பு என்ற ஞாபகம். ‘இந்த இளைஞன் எவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறான்! தொடர்ந்து எழுதிப் புகழ் பெற வேண்டும்!’ என்று நினைத்துக் கொண்டேன். வெகு நேர்த்தியான கையெழுத்து. நல்ல கதையொன்று தபாலில் வந்தால் அது எழுதப்பட்ட விதத்திலிருந்து அந்தக் கையெழுத்துக்குரியவர் எப்படி இருப்பார் என்று சில நிமிடங்கள் யோசிப்பேன். நான் அன்று நினைத்தது பொய்த்துப் போகவில்லை.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து அமெரிக்க எழுத்தாளர்களுடன் கலந்து ஒரு படைப்புக்களம் புது டில்லியில் நடந்தது. அதற்குப் பாவண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தமிழ்ப் பிரிவு நடந்தது போல எந்த மொழிப் பிரிவும் நடக்கவில்லை. அவற்றில் இருந்த மூத்த எழுத்தாளார்கள் அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டு மூன்று நாளையும் முடித்தார்கள் என்று கூறினார்கள். ஒரு பயிற்சியாக ஒரு பத்திரிகைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு இரு பக்கங்களில் ஒரு புனைகதை எழுதச் சொன்னேன். ஐந்து பேரும் ஐந்து வெவ்வேறு சிறந்த கதைகளை எழுதியிருந்தார்கள்.

இந்த மாதம் (ஏப்ரல் 2008) பாவண்ணனின் கட்டுரைகள் ஒரு தொகுப்பாக வந்திருப்பதைப் படிக்க நேர்ந்தது. பதினாறு கட்டுரைகள். பல கட்டுரைகள் நேரடியாகக் கர்னாடகத்தைக் களமாகக் கொண்டவை. பாவண்ணன் பயணம் மேற்கொள்ள தயக்கமில்லாதவர் என்றும் தெரிந்தது. ஒவ்வொரு கட்டுரையும் ஆழமான சிந்தனைகளில் வெளியானது. மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. ஓரிடத்தில்கூட அபசுவரம் இல்லாத பக்குவமான தேர்ந்த எழுத்து. நான் சமீபத்தில் பாவண்ணன் வசிக்கும் பெங்களூருக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த இரு நாட்களிலும் உடல் நலமில்லை. நான் தங்கியிருந்த வீட்டினருடன் கூடச் சரியாகப் பேச முடியவில்லை. பாவண்ணனைச் சந்திக்கவில்லை. இன்னும் பல நண்பர்கள், உறவினர்களையும் பார்க்க முடியவில்லை. நான் தொலைபேசியில் கூடப் பேசவில்லை.

இன்று நான் படித்த ‘துங்கபத்திரை’ நூலை அன்று படித்திருந்தால் ஒரு வேளை பாவண்ணனைப் பார்க்க முயற்சி செய்திருக்கக் கூடும். அடுத்த முறை என்பது எனக்கு இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது.
**********

நான் சிறுவனாக இருந்தபோது ஒரு முறை துங்கபத்திரையைக் கடந்தேன். அது 1941-ம் ஆண்டு. நாங்கள் போய்த் தங்கப் போகும் வீடுகளுக்குக் கொடுப்பதற்காகத் துவரம்பருப்பையும் உளுத்தம்பருப்பையும் சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி அவற்றைப் படுக்கைச் சுருளில் எடுத்துச் சென்றோம். அன்று தானியங்கள் ஓசூரிலிருந்து இன்னொரு ஊர் எடுத்துச் செல்வது குற்றம். என்ன சட்டம், என்ன விதி என்று தெரியாது. ஆனால் பிடிபட்டால் நடுவழியில் இறக்கி விட்டுவிடுவார்கள். இரயிலில் படுக்கையையே நாங்கள் பிரிக்க மாட்டோம்.

இரண்டாம் முறை ஹம்பி பார்க்கச் சென்றபோது பாவண்ணன் ஹம்பி பற்றி எழுதியிருப்பாரோ என்று எண்ணினேன். ஹம்பி என்ற விஜயநகரம் மிகப் பெரிய நகரம். குறுக்கே துங்கபத்திரை ஓடுகிறது. செங்கல் சுண்ணாம்புக் கட்டிடங்கள் முன்னூறு நானூறு ஆண்டு இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நிறையக் கட்டிடங்கள் கருங்கல்லால் கட்டப்பட்டவை. கோயில்களும். எவ்வளவு பெரிய நரசிம்மர்! ஆனால் ஒரு சிற்பம் ஒரு சிலை தப்பவில்லை. பாமினிஅரசர்கள் ஆறு மாதங்கள் கல்லுளியும், சுத்தியலும் கட்டப்பாரையும் கொண்டு ஆட்களை விட்டு ஓரங்குலம் விடாதபடி உடைத்திருக்கிறார்கள். அந்தப் பாமினி வம்சத்துக்குப் பெயரே ஒரு ‘பொம்மன்’ (பிராமணன்) ஆசியால் ஏற்பட்டது என்று ஆங்கிலேயர்கள் எழுதிய வரலாறிலேயே இருக்கிறது. விஜயநகர அரசனைத் தோற்கடித்துத் துரத்தியாகிவிட்டது. ஆனால் நகரத்தை வென்றவர்களே பயன்படுத்தியிருக்கலாமே?

சென்ற வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியையே எவ்வளவு விதவிதமாக வெவ்வேறு குழுக்கள் சித்திரிக்கின்றன? ஐம்பது ஆண்டுகள் நூறு ஆண்டுகள் பற்றி எப்படி உறுதியாக இருக்க முடியும்? இரண்டாயிரம் ஆண்டுகளாக வரலாறைக் கூறியே யூதர்களை எல்லாருமே சேர்ந்து வேட்டையாடினார்கள். இரண்டாம் உலக யுத்த நாட்களில் மிகக் கொடூரமாக இயங்கிய யூத அழிப்புச் சாலையாக விளங்கிய ஆஷ்விச் அனுபவத்திலிருந்தும் தப்பியவர் ஒருவரின் செய்தி படித்தேன். அந்த 1944 ஆண்டில் அவருடைய வயது 15. ஆதலால் எல்லாம் தெளிவாகத் தெரியக் கூடிய பருவம். “இன்றும் நினைவுகள் துரத்துகின்றன. ஆனால் இந்த நினைவுகள்தான் எனக்குக் கவசமாகவும் தோன்றுகின்றன,” என்று அந்தக் கிழவர் கூறியிருக்கிறார்.

(நவீன விருட்சம் 79-80 வது இதழில் வெளிவந்த கட்டுரை – July 2008)

பெண்

கனவில் தெரிந்த பெண்ணொருவள்
நேரில் வரவில்லை
பலவாறு கற்பனையை
விரித்து விரித்துப் பார்த்தேன்
அவள் உருவம் மாறி மாறி தெரிந்ததே
தவிர எந்த மாதிரி அவள் என்று யூகிக்க முடியவில்லை
கனவில் தெரிந்தவள் மாதிரி
யாருமில்லை ஒருபோதும்
இன்னும் உற்றுப் பார்த்தேன்
மாறி மாறி அந்தப் பெண்போல
யாரும் தெரியவில்லை என்றாலும்
பெண்கள்
வேறு வேறு மாதிரியாகத்தான்
தெரிந்துகொண்டிருந்தார்கள்

தசாவதாரம்

தமிழ் சினிமாக்களை எப்போது பார்த்தாலும் நான் அது குறித்து எந்தவிதக் கருத்தையும் கூற மாட்டேன். அது நன்றாக இருக்கிறது நன்றாக இல்லை என்று என்னைச் சுற்றியிருப்பவர்கள் வாதிட்டுக் கொண்டிருப்பார்கள். நான் அதற்குள் போவதில்லை. மேலும் ரசிகர்களுக்கேற்ப படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் சமீபத்தில் வெளிவரும் தமிழ்ப் படங்கள் விதிவிலக்காக இருக்கின்றன. ஒவ்வொரு படமும் எதாவது ஒருவித பிரமிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்கள் தயாரிக்க ஆகும் செலவைக் குறித்து. நாமெல்லாம் சாதாரணமானவர்கள். மாதச் சம்பளத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்கள். தமிழ்ப் படங்கள் தயாரிக்கும் செலவைப் பற்றியும், அதற்காக தேவைப்படும் உழைப்பைப் பற்றியும் யாரால் என்ன சொல்ல முடியும்? விளையாட்டுத்துறை என்று எடுத்துக்கொண்டால் சச்சினைவிட, தோனி விளம்பரம் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கிறார். எல்லாம் கோடிதான். என் வாழ்க்கையில் கோடியை நான் பார்க்கவே முடியாது என்று நினைக்கிறேன். வேண்டுமானால் தெருக்கோடியில் போய் நிற்கலாம். ஒருபக்கம் இந்தியா வறுமைக்கோட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விலைவாசி ஏற்றத்தால் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தசாவதாரம் என்ற படத்தைக் குடும்பத்துடன் பார்த்தேன். 60 கோடி ரூபாய்க்குமேல் செலவாம். 33 ரூபாய் விலையுள்ள டிக்கெட்டில் ரூபாய் 60 என்று அச்சிட்டிருந்தார்கள். இரவு பத்துமணி படத்துக்குப் போயிருந்தோம். ஒரே கூட்டம். தியேட்டர் முழுவதும் நிரம்பி வழிந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்றெல்லாம் கூட்டம். இளைஞர்கள், இளைஞிகள் என்று தியேட்டர் முழுவதும் நிரம்பி வழிந்தது. எல்லோர் முகங்களிலும் சினிமா பார்க்கப் போகிற உற்சாகம்.

டெக்னாலஜி என்ற விஷயம் எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதை இப்படத்தைப் பார்த்தால் நமக்குப் புரியும். பல ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த நவராத்திரி என்ற படத்தில் எல்லா வேஷங்களிலும் சிவாஜிதான் தென்படுவார். ஆனால் தசாவதாரத்தில் கமல்ஹாசன் எந்தந்த வேடங்களில் வருகிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. படத்தின் ஆரம்ப காட்சிகளிலிருந்து பல காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. மற்றபடி கதை என்று பெரிதாக இல்லை. இடைவேளை வரை உள்ள விறுவிறுப்பு பின்னால் கொஞ்சம் குறைந்து விடுகிறது. கமல்ஹாசனே கதை, வசனம் என்றெல்லாம் எழுதி உள்ளார். சாதாரண ஜனங்களுக்குக் கதை புரிவது சந்தேகமாக உள்ளது. சென்னை உதயம் தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தேன். முதல் சில காட்சிகளில் ஒலியே இல்லை. வழக்கம்போல ரசிகர்கள் ஊ…ஊ..ன்னு கத்தியபிறகு நிலமை சரியாயிற்று. தெலுங்கு போலீசாக வரும் கமல் பழைய நடிகர் பாலையா மாதிரி பேசுவதாகத் தோன்றியது. வித்தியாசமான நடிப்பு. சுனாமியைக் கொண்டுவருவதும், அமெரிக்க அதிபரை கதாபாத்திரமாக மாற்றுவதும் தமிழில் புதிய முயற்சி. ஆரம்ப காட்சியில் கமல்ஹாசன் பேசுவது சரியாகப் புரிபடவில்லை.

ஆனால் இப்படத்திற்கு ஆரம்ப முதல் இவ்வளவு எதிர்ப்பு ஏன்? வைணவத்திற்கும், சைவத்திற்கும் உள்ள எதிர்ப்பெல்லாம் இப்போது பெரிய விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் ஏன் இதை எதிர்க்க வேண்டும். என்ன இருந்தாலும் இது ஒருபடம் தானே என்று பார்க்க ஏன் முடியவில்லை.
தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய நடிகர்கள் தோன்றிகொண்டே இருப்பார்கள். ஒரு காலத்தில், சிவாஜி, எம்ஜியார். இப்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த். எனக்குத் தெரிந்து ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜியின் சிவந்தமண் என்ற படம். அப் படம் வெளிநாடுகளில் போய் எடுத்து அதிகமாக
ஸ்ரீதர் செலவு செய்தார். அந்தப் படத்தைவிட எம்ஜியார் நடித்த நம்நாடு என்ற படம் அதிகமாகப் பணம் சம்பாதித்துக் கொடுத்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சுந்தரமூர்த்தி என்ற என் பள்ளிக்கூட நண்பன் ஒருவன், சிவாஜி ரசிகன். பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வின் போது வந்த சிவந்தமண் படத்தை 8 அல்லது 9 தடவைகள் பார்த்து, குறைந்த மதிப்பெண்கள் பெற்று பார்டரில் வெற்றி பெற்றான். அவன் கையெழுத்து பார்க்க அழகாய் இருக்கும். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரியாது.

22.06.2008
9.30மணியளவில்

இன்று உலகப் புத்தக தினம்

எல்லாக் குப்பைகளையும் தூக்கி
தெருவிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டாள்
என் புத்தகங்களைப் பார்த்து
மலைத்து நின்றாள்
என்ன செய்வதென்று அறியாமல்
பின் ஆத்திரத்துடன்
தெருவில் வீசியெறிந்தாள்
போவார் வருவார் காலிடற
புத்தகங்கள் சிதறிக் கிடந்தன தெருவெல்லாம்
ஒரு புத்தகம் திறந்தபடியே இருந்தது
அதிலுள்ள வரிகள் எல்லார் கண்களிலும்
படித்தவர்கள் சிரித்தபடியே சென்றனர்
எல்லார் முகங்களிலும் புன்னகை
நானும் ஆவலுடன்
மாடிப்படிக்கட்டிலிருந்து
தடதடவென்று இறங்கி
புத்தகத்தின் வரியை
ஒழுங்காய் நிலைகொள்ளாத
வேஷ்டியுடன் படித்தேன்
‘இன்று உலகப் புத்தக தினம்
இன்றாவது புத்தகம் படிக்க
அவகாசம் தேடுங்கள்’
நானும் சிரித்தபடியே
புத்தகத்தில் விட்டுச் சென்ற
வரிகளை நினைத்துக்கொண்டேன்
இடுப்பை விட்டு நழுவத் தயாராய் இருக்கும்
வேஷ்டியைப் பிடித்தபடி…..

விருட்சம் 80வது இதழ்

வணக்கம்.
இன்னும் சில தினங்களில், 80வது நவீன விருட்சம் வெளிவந்துவிடும். கிட்டத்தட்ட 100 பக்கங்கள். நவீனவிருட்சம் வெளிவந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் நவீனவிருட்சம் இதழை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொண்டுவர நினைப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை. எப்படியோ ஆறு மாதங்கள் ஓடிவிடுகின்றன. ஏன் இதழ் வந்து அதை எல்லோருக்கும் அனுப்புவதற்கு ஒரு மாதம் மேல் ஆகிவிடுகிறது. யாருக்கும் சந்தா கேட்டுக்கூட கடிதம் எழுதமுடிவதில்லை. பத்திரிகை போய்ச் சேர்ந்தால் போதும். அவர்களே பார்த்து அனுப்பினால் சரி என்ற நிலைக்கு வந்துவிட்டேன். ஒருசிலரைத் தவிர பெரும்பாலோர் பத்திரிகை சந்தா அனுப்புவதில்லை. சந்தா பெரிய தொகை இல்லை. ஆனால் அதை அனுப்புவதுதான் பெரிய விஷயமாக அவர்களுக்கு இருக்கும். தபால் அலுவலகத்திற்குப் போய் மணிஆர்டர் மூலம் 40 ரூபாய் அனுப்புவது என்பது பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது. ஏன்என்றால் நான் நவீனவிருட்சம் பத்திரிகையை தபால் அலுவலகத்தில் கொண்டு செல்ல பாடாதபாடு படுகிறேன். சரி, யார் மூலமாவது இந்தப் பணியைச் செய்ய சொல்லலாம். ஆனால் யாரும் இதுமாதிரி பணியைச் செய்யத் தயாராய் இல்லை. ஒரு முறை என் நண்பா மூலமாக நவீனவிருட்சம் இதழை அனுப்ப ஏற்பாடு செய்தேன். அவரும் கட்டுக்கட்டாக நவீன இதழை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அனுப்ப வேண்டிய முகவரிப் பட்டியலைக் கொடுத்தேன். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பியவர் ஒரு வாரமாக வரவில்லை. எனக்கோ பதைப்பு. அனுப்பி விட்டாரா என்பதை அறிய ஆவலாக இருந்தேன். ஆனால் நண்பரோ என்னைப் பார்க்கக் கூட வரவில்லை. பின் ஒரு நாள் வந்தார். வேறு எதோ பேசிக்கொண்டிருந்தோம். நானோ எப்படியாவது விருட்சம் பற்றி அவரிடம் கேட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் பேசிக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட நண்பர் பேசி முடித்துவிட்டார். வீட்டிற்குப் போக வேண்டிய தருணம் வந்து விட்டது. ஆவலை அடக்க முடியாமல் கேட்டுவிட்டேன். நண்பரோ சர்வ சாதாரணமாக, ” இன்னும் இல்லை. விருட்சம் அனுப்ப எனக்குத் தெரிந்த பசங்களை ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்…” என்றார. அந்த இதழை அனுப்புவதற்கும் ஒரு மாதம் மேல் ஆகிவிட்டது.
இப்படி ஒரு பத்திரிகையை அடித்து அனுப்பிக்கொண்டிருந்தால், யார் பத்திரிகைக்கு சந்தா அனுப்புவார்கள், யார் பத்திரிகைக்கு படைப்புகள் அனுப்புவார்கள். இந்த இதழுக்கு அசோகமித்திரனை கேட்டுக்கொண்டதன் பேரில் கட்டுரை எழுதி அனுப்பி உள்ளார். கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் ஆகியிருக்கும். நாகார்ஜுனன் எழுதி அனுப்பிய கட்டுரை 6 மாதம் மேல் ஆகியிருக்கும். யாரும் கடிதம் கூட அனுப்ப மாட்டார்கள். போன போகிறதென்று வல்லிக்கண்ணன், தி.க.சி போன்றவர்கள் அனுப்புவார்கள். இதழை அனுப்பியவுடன் கடிதம் எழுதி அனுப்பி விடுவார்கள். எனக்கோ அவர்கள் எழுதிய கடிதங்களை பத்திரமாக வைத்துக்கொண்டு அடுத்த இதழ் வரும்போது கடிதம் பகுதியில் சேர்க்க வேண்டுமென்று தோன்றும். சில சமயம் தொலைந்து கூட போய்விடும். இப்போது வல்லிக்கண்ணன் இல்லை. எனக்கு சில சமயம் என் பத்திரிகை யாருக்காவது போய்ச் சேர்ந்ததா என்பதை அறிய அவரிடம் வரும் கடிதம் மூலம் தெரியும். இனி வல்லிக்கண்ணன் இடத்தை யார் நிரப்புவார்கள்.
அழகியசிங்கர்இரவு 10.57 மணிஅளவில்

திருவனந்தபுரம்

கடந்த வாரம் முடிவில் (29 மே மாதத்திலிருந்து 2ஆம் தேதி ஜூன் வரை) சென்னையைவிட்டு, குடும்பம் சகிதமாக கொச்சின் சென்றோம். சனிக்கிழமை (30.05.2008)அன்று திருவனந்தபுரம் ஒருநாள் மட்டும் தங்கியிருந்தோம். ரயில்வே நிலையத்திற்கு அருகில் ஒரு ஓட்டலில் அறை எடுத்திருந்தோம். சுற்றிப் பார்ப்பதோடல்லாமல், நீல பத்மனாபனை பார்க்க நினைத்தேன். கூடவே அவரை அழைத்துக்கொண்டு நகுலன் வீட்டிற்கும் போக உத்தேசம் இருந்தது. அவருக்கு நான் வந்திருப்பதைச் சொன்னவுடன், என் உற்சாகம் ரொம்பவும் குறைந்துவிட்டது. அவரும் free ஆக இருக்கவில்லை.
அவரைப் பார்த்துவிட்டு, நகுலன் வீட்டைப் பார்க்கும் எண்ணத்தில், நான் மட்டும் ஒரு ஆட்டோ வில் நகுலன் வீடை மட்டும் போய்ப் பார்த்தேன்.
பொதுவாக ஒரு இடத்திற்கு வரும்போது, அங்கு எழுத்தாளர்கள் என்று யாராவது இருந்தால், பார்க்க வருகிறேன் என்று சொன்னால்,உற்சாகம் குறைந்த உணர்வே ஏற்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, நகுலனிடம், ‘உங்களைப் பார்க்க திருவனந்தபுரம் வருகிறேன்,’ என்று குறிப்பிட்டேன். கேட்டவுடன், ‘ஐய்யயோ..என் வீட்டில் தங்க முடியாது,’ என்று பதறினா஡. எனக்கோ என்னடா இது என்று தோன்றியது. நான் அவரைப் பார்க்க திருவனந்தபுரம் வருகிறேன் என்று சொன்னேனே தவிர, அவர் வீட்டில் தங்க வருவதாகச் சொல்லவில்லை. அப்படியே வந்தாலும், ஊரையும், அவரையும்தான் பார்க்க வருவதாகத்தான் அர்த்தம் ஆகும். ஒரு ஓட்டலில் அறை எடுத்துக்கொண்டுதான் அவரைப் பார்க்க முடியும். அதுவும் ஒருசில மணி நேரங்கள் மட்டும்தான் பேசவும் முடியும்.அவருடனே பேசிக்கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் போரடிக்கத் தொடங்கிவிடும்.அவர் அப்படிச் சொன்னதாலோ என்னவோ நகுலனைப் பார்க்க திருவனந்தபுரமே வரவில்லை.
நானே எதிர்பார்க்காதபடிக்கு இந்த முறை வந்தபோது நகுலன் இல்லை.இறந்து விட்டார். எனக்கோ அவர் வீட்டையாவது போய்ப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் இருந்து கொண்டிருந்தது.
நீல பத்மநாபன் சொன்னபடி அந்தத் தெருவின் முனையில் உள்ள கடையில் டி கே துரைசாமி வீடு எங்கே என்று கேட்டவுடன், அந்த இடத்தைச் சுட்டிக் காட்டினார் கடையில் இருந்த பெண்மணி.
நான் அவர் வீட்டிற்கு ஆட்டோ வில் போய்ப் பார்த்தபோது, இருட்டி விட்டது.இறங்கியவுடன் மழை. நனைந்தபடி அவர் வீட்டு கேட்டைப் பிடித்தபடி அவர் வீட்டைப் பார்த்தேன். ஓட்டு வீடாக இருந்தது. ஆனால் பிரமாதமான இடத்தில் இருந்தது. நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். ஆனால் இருட்டில் அது சரியாக விழவில்லை.
கேரளம் முழுவதும் சுற்றிப் பார்த்த அனுபவம் சந்தோஷமாக இருந்தது. மழை. சுற்றிலும் தண்ணீர். தண்ணீர். பல வீடுகள் தண்ணீர் ஓடும் கரையோரமாக இருந்தன.
சென்னையில் குழாயைத் திறக்கும்போது, போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகத்துடன் திறக்க வேண்டியிருக்கிறது.
அங்கேயும் பரபரப்பு இருக்கிறது. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் எல்லாக் கடைகளையும் மூடி விடுகிறார்கள். காலையில் மெதுவாகத்தான் கடைகள் எல்லாம் திறக்கப்படுகின்றன.
சென்னையோ இரவு முழுவதும் விழித்துக்கொண்டே இருக்கும். சந்தோஷமான பயணம்.
03.06.2008 at 8.15 PM

நீத்தார் பெருமை

கவிதை என்பது சாந்தமான நிலையில் திரட்டப்படுகிற உணர்வு (Emotion recollected in tranquility) என்று வேர்ட்ஸ்வோர்த் தானும் கோல்ரிட்ஜீம் இணைந்து உருவாக்கிய கவிதைத் தொகுப்பிற்கான முன்னுரையில் எழுதினார். அது புகழ் பெற்ற வாசகம். கவிதை உருவாகிற மன நிலைக்கும் அவகாசத்திற்கு பின் அதை எழுதுகிற நிலைக்குமிடையே இடைவெளி இருப்பதால் பல கவிதைகளுக்கும் இந்த வரையறை பொருந்திவிடுகிறது. வேர்ட்ஸ்வோர்த் கவிதைகளுக்கு அது முற்றாகப் பொருந்தும். சங்ககாலக் கவிதைகள் பல சாந்தமானவை. ஆரவாரமற்றவை. இதுவேதான் எல்லாக் கவிதைளுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை. ஆரவாரமான, ஆக்ரோஷமான மன உணர்வுகள் அடங்கு முன்னரேயே பல கவிதைகள் எழுதப்பட்டு விடுகின்றன. பாரதி, பாரதிதாசன் ஆகியோர் உலக மாண்புகள் பற்றி எழுதிய பல கவிதைகளில் சாந்தம் வௌதப்படுகிறது. அரசியல், சமூகச் சிறுமைகளைக் கண்டு வெகுளும் போது அவர்கள் ஆக்ரோஷமாக அவற்றை முன் வைக்கின்றனர். ஆனால் ஆக்ரோஷம் கூட ஒரு வடிவமைதியுடன் வௌதப்படுவதால் மீண்டும் வேர்ட்ஸ்வோர்த் சொல்வதுதான் சரியோ என்றும் தோன்றுகிறது.
Tranquil என்பதைத் தமிழில் சாந்தம், ஆரவாரமின்மை மற்றும் கலக்கமின்மை என்றும் கூட அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். நமக்கு தெரிந்தவர்கள் இறந்துவிட்டால் நாம் உடனே கலக்கமுற்று விடுகிறோம். இறந்தவர்களுக்கு நாம் உடனடியாக செலுத்துகிற அஞ்சலி கலக்கத்திலிருந்து பிறக்கிறதா தௌதவான மன நிலையிலிருந்து பிறக்கிறதா என்பதை சுலபமாகக் கூறிவிடமுடியாது.
சமீபத்தில்கே.ஆதிமூலம், சுஜாதா ஆகியோரின் இறப்பு பலரை துக்கத்தில் ஆழ்த்தியது. பொதுவாகவே எல்லோரும் இறந்தவர்களைப் பற்றி நல்லவிதமாகப் பேசுவார்கள். இது உலக மரபு. ‘The good is oft interred with their bones’ என்று ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரமான ஆண்டனி மட்டுமே பேசுவான். அது சாகஸம் நிறைந்த பேச்சு.
ஆதிமூலத்திடம் நிறைகள் மட்டுமே இருந்தனவோ என்று அவரிடம் பழகியவர்களின் அனுபவங்கள் நம்மை எண்ண வைக்கின்றன.கிழக்கு கடற்கரைச் சாலையில் இருவரது வீடுகளும் சில கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் என்னையும் ஆதிமூலத்தையும் தூரத்து வீட்டுக்காரர்கள் என்றும் சொல்லலாம். தேர்ட் தியேட்டர் என்னும் ஆங்கில டாகுமெண்டரி படத்தை முடித்தவுடன் அதன் பெயர் அட்டைகளை அவருடைய கையெழுத்தில் எழுதி அதில் சேர்க்கவேண்டும் என்று நினைத்தேன். தமிழ் எழுத்துகளுக்கு சிறப்பான கையெழுத்து வடிவம் கொடுத்த அவர் அதேபோல் ஆங்கில எழுத்துகளையும் எழுதினால் அதுவும் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். குறித்த காலத்தில் பதினாலு அட்டைகளில் பெயர்களை எழுதிக் கொடுத்தார். படத்திற்கு அவற்றால் பெருமை விளைந்தது. ஒரு ஆயிரம் ரூபாய் செக்குடன் படம் முடிந்தவுடன் அதைப் போட்டுக் காட்ட அவர் வீடு சென்றேன்.
‘நீங்கள் உங்கள் சொந்த பணத்தில் கல்கத்தாவிற்குப் போய் இந்த டாகுமெண்டரியை எடுத்திருக்கிறீர்கள். இது சாதாரணமானவிஷயமல்ல. நான் உங்களிடம் பணம் வாங்க மாட்டேன்’ என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
இருப்பிடங்கள் தவிர வேறு ஒரு விஷயத்திலும் எங்களுக்குள் ஒற்றுமை இருத்தது. நாங்கள் இருவருமே டாபர்மேன் நாய்களை வளர்த்தோம். எப்போழுது சந்தித்தாலும் ஏனைய சமாசாரங்களை சுருக்கமாகப் பேசிவிட்டு நாய்களைப் பற்றி மட்டும் விரிவாகப்பேசுவோம். தான் வரைந்த ஓவியங்களை அறையில் அவர் இறைத்து போட்டிருப்பார். அவருடைய நாய் சாமர்த்தியமாக அவற்றின் மேல் படாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து செல்லும். ஏனோ அவரது ஓவியங்களில் அந்த நாய் எங்கேயும் இடம் பெறவில்லை.
நான் சுஜாதாவின் ரசிகனாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் சுஜாதாவை 1976ல் திருச்சிக்கு நானும் எனது நண்பர்களும் ஒரு வாசக சந்திப்பிற்காக அழைத்திருந்தோம். சுஜாதா அப்போதே பிரபலமான எழுத்தாளர் என்பதால் தேவர் ஹாலில் பலரும் பங்கேற்கும் வகையில் அது நடைபெற்றது. மறு நாள் திருச்சி வானொலியில் நாங்கள் அவரைப் பேட்டி கண்டோம். விஞ்ஞானக் கதைகள் பற்றிதான் அவர் அதிகம் பேசினார்.பழகுவதற்கு இனிமையானவராக இருந்தார். சென்னைக்கு குடியேறிய பிறகும் சில சந்தர்ப்பங்களில் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மீடியா ட்ரீம்ஸ் அலுவலகத்திற்கு வருமாறு ஒருமுறை அழைத்தார். என்னால் போக இயலவில்லை. மாற்றுப் படங்களை மிகவும் பரிகசித்து அவர் ஒருமுறை எழுதியதால் அதற்கு எதிர்வினையாக காலச்சுவட்டில் ஒரு பகிரங்கக் கடிதத்தை அவருக்கு எழுதினேன். ஏற்கனவே தமிழில் குற்றுயிராகக் கிடக்கும் மாற்றுப் படங்களைப் பற்றி சுஜாதா போன்று பெரும் வாசக வட்டத்தை எட்டும் எழுத்தாளர் எள்ளி நகையாடினால் அதன் விளைவுகள் எத்தகையதாக இருக்குமோ என்பதால் அக்கடிதம் சற்றுக் காரமாகவே இருந்தது. என் பெயரைக் குறிப்பிடாமல் அதற்கு பதிலளிப்பதுபோல் ஒரு கட்டுரையை ஆனந்த விகடனில் எழுதினார். மாற்றுப் படங்களைப் பற்றியெல்லாம் அக்கறையுடன் தான் எழுதியவற்றை அதில் பட்டியலிட்டிருந்தார். அத்தோடு அந்த விஷயம் முடிந்து போயிற்று.
ஒருவர் இறந்தால் அவருடைய இறுதி ஊர்வலத்திற்கு எவ்வளவு பேர்கள் வருகிறார்கள் என்பதை வைத்து அவர் பொருட்படுத்தப்பட்டாரா இல்லையா என்று கணிக்கப்படுகிறது. ஆதிமூலம் சுஜாதா இருவருக்கும் அந்தக் குறையில்லை. ஆனால் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் இறந்த போது டைம் பத்திரிகை அவருடைய கல்லறையில் ஆறு பேர்கள் மட்டுமே இருந்தாக எழுதியது. இவ்வளவிற்கும் அவர் உலகம் நன்கு அறியப்பட்ட அறிஞர். எலிசபெத் அரசி அவரை ‘இங்கிலாந்தின் வால்டேர்’ என்று தன் இரங்கலில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு மாறாக,அநாமதேயமாக வாழ்ந்து மறைந்து போகும் பேற்றினைத் தான் இழந்துவிட்டதாகக் கருதிய சார்த்தின் இறுதி ஊர்வலம் திருவிழாக் கூட்டம் போல் இருந்ததைப் புகைப்படங்களில் காணமுடிந்தது.
பாரதியின் இறுதி ஊர்வலத்தில் இருபது பேர்களுக்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர் என்று பரலி.சு. நெல்லையப்பர் குறித்திருந்தார். எப்பொழுதுமே பிராமணர்கள் பிரேதத்தை உடனடியாக எரித்துவிடுவார்கள். நள்ளிரவில் இறந்த அவரது உடலுக்கு காலை எட்டு மணிக்கே சிதையூட்டப்பட்டது. அவர் இறந்தது உடனே நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி அன்றைய தினத்தில் பாரதி பலரால் அறியப்பட்ட ஒரு சென்னைப் பிரமுகர்தான். அவரது ஈமச் சடங்குகளில் கலந்து கொள்ளவே மற்றவர்கள் பயப்பட்டார்கள் என்றெல்லாம் கருதுவதற்கும் இடமில்லை. அவரது இறுதிக் காலத்தில் அவர்மீது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிடி தளர்ந்துதான் இருந்தது. எழுதுவதில் கட்டுப்பாடுகள் இருந்ததேயொழிய மற்றபடி அவர் சுதேசமித்திரனில் பணியாற்றிக்கொண்டு எல்லா இடங்களுக்கும் சென்றுகொண்டிருந்தார். ஆனால் பெரிய கூட்டம் இன்றி பாரதியின் உடல் மயானம் சென்றதை மட்டும் தமிழர்களால் இன்று வரை சாதாரணமாக பாவிக்கமுடியவில்லை.

படத்தின் பிற வேலைகள் எல்லாம் முடிந்து கடைசியில் வௌதயீட்டு விழாவின் போது எல்லோருடனும் அதை ஒரு முறை,மொத்தத்தில் எத்தனையாவது முறையாகவோ பார்த்தேன். படம் இறுதியை நெருங்கியது. ‘சுமார் இருபது பேர்கள் மட்டுமே’. அங்கேதிடீரென்று குரல் கம்மியது. படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை அந்த ‘இருபது’ எண்ணிக்கை மிகவும் பாதித்ததை என்னால் உணர முடிந்தது. எத்தனையோ கவனத்துடன் பல டேக்குகளுக்குப் பிறகும் சுரம் குறைந்த குரலில் அது படிக்கப்பட்டிருந்ததை அப்போதே உணர இயலாமல் போனது என்னையும் ரொம்பவே பாதித்தது.