முத்துசாமியின் நாடக வெளியிட்டு விழா

அழகியசிங்கர்
ந முத்துசாமியின் நாடகங்கள் வெளியீட்டு விழா போதி வனம் என்ற அமைப்பின் மூலம் நேற்று (30.05.2015) மினி ஹால், மியூசிக் அக்கடமியில் நடந்தது.  காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை.  கூட்டத்திற்குச் செல்வதற்கு முன், நான் சில சில்லறை வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு நுழையும் போது, உட்கார இடம் கிடைக்கவில்லை.  நிஜ நாடக இயக்குநர் ராமசாமி என்பவர் பேசிக்கொண்டிருந்தார்.  ஒரு வழியாக இடம் தேடி  உட்கார இடம் கண்டுபிடித்து உட்கார்ந்தேன்.  
 கூத்துப் பட்டறை என்ற அமைப்பை ஆரம்பித்து, அதில் தீவிரமாக இயங்கியவர் முத்துசாமி.  அவர் பல நடிகர்களை கூத்துப் பட்டறை மூலம் உருவாக்கியவர்.  
அவர் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்.  முதன் முதலில் அவருடைய சுவரொட்டிகள் என்ற நாடகத்தை லலித்கலா அகாதெமியில் நடைபெறும்போது பார்த்திருக்கிறேன்.  அப்போது என் அலுவலகத்தில் பணிபுரிந்த ரமணன் என்ற நண்பரையும் சந்தித்திருக்கிறேன்.  எனக்கு இந்த நாடகம் சுத்தமாகப் புரியவில்லை.  அப்போது நான் புரியவில்லை என்பதுபோல் ரமணனைப் பார்த்தேன்.  அவரும் அப்படித்தான் தலையை ஆட்டினார். முதலில் இந்த நாடகம் ஒரு மேடையில் குறுகிய இடத்தில் நடைபெறாமல், வெளியில் நடைப்பெற்றது. எப்படி இதை நாடகம் என்று நம்புகிறார்கள் என்று யோசித்தக் கொண்டிருந்தேன்.  ஆனால் முத்துசாமியின் நாடகம் வேறு தளத்தில் எனக்கு நாடகம் பார்த்து ரசிக்கும் தன்மையை ஏற்படுத்தி விட்டது.
நானும் வித்தியாசமாக நடக்கும் நாடகங்களைப் பார்க்கும் நபராக மாறிவிட்டேன்.  பரீக்ஷா என்ற நாடகக் குழுவுடன் சேர்ந்து மூர்மார்க்கெட் என்ற நாடகத்தில் நடித்திருக்கிறேன்.  பின் அங்கிருந்த எடுத்த ஓட்டம் நாடகப் பக்கம் திரும்பவில்லை.  
பரீக்ஷா முத்துசாமியின் நாற்காலிகாரர் என்ற நாடகத்தை அரங்கேற்றம் செய்திருக்கிறது.  அதில் ஒரு கதா பாத்திரத்தை என்னால் மறக்க முடியாது.  அசோகமித்திரன்தான் அது.  அவர் எந்த வசனமும் பேசாமல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பார்.  
முத்துசாமியின் நாடகங்கள் அவ்வளவு எளிதாகப் புரியாது.  ஆனால் அவர் கூத்துப்பட்டறை என்ற அமைப்பு அமைத்து, அதன் மூலம் பல நாடகங்களை எழுதி அவரே இயக்கியிருக்கிறார். அசாத்தியமான துணிச்சல்காரர். ஏற்கனவே அவர் நாடகங்களை க்ரியா புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கின்றன.  
 

ஒரு நாடகத்தில் வசனம் எப்படி பேச வேண்டும் என்பதற்காக தீவிரமான பயிற்சி கொடுப்பவர் முத்துசாமி.  ஒருமுறை நான் ஏற்பாடு செய்த விருட்சம் கூட்டடத்தில் ஞானக் கூத்தன் கவிதைகள் சிலவற்றை எடுத்து நாடகமாக அவர் நடிகர்களை வைத்து நடித்துக் காட்டினார்.  அவர் சிறுகதை எழுத்தாளரும் கூட.  சிறப்பாக பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவர் பேசுவதும் எழுதுவதும் ஒரே மாதிரியாக இருப்பதுபோல் தோன்றும்.  அவர் பேசும்போது அவரைச் சுற்றி அவருடைய ரசிகர்கள் கூட்டம் இருந்துகொண்டு  இருக்கும்.  21 நாடகங்கள் கொண்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.  பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது.   ரூ700 க்கு இப் புத்தகத்தை  நேற்று போதி வனம் விற்றுக்கொண்டிருந்தது.

கலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்



அழகியசிங்கர்
                                                                                    1. 
சமீபத்தில் நான் கலந்துகொண்ட இலக்கியக் கூட்டங்களைப் பற்றி என் நினைவில் என்ன எழுத முடியுமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  
ஒவ்வொரு மாதமும் கணையாழி நடத்தும் ஒரு கூட்டத்தில் இந்த மாதம் 16.05.2015 சனிக்கிழமை அன்று நானும் பிரமிள் பற்றி பேசியிருக்கிறேன்.  அந்தக் கூட்டத்தில் அமிர்தம் சூர்யா ஒரு சிறப்பான பேச்சை வழங்கி உள்ளார்.  நான் அந்தக் கூட்டத்திற்கு தயாராகும்போது, எழுதி கட்டுரையாக வாசிக்க நினைத்தேன்.  அதன்படி கட்டுரை ஒன்றையும் பத்து அல்லது பதினைந்து பக்ககங்களுக்குள் தயாரித்துக் கொண்டேன்.  ஆனாலும் பிரமிள் பற்றி எழுதிப் படிக்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்றியது.  அதனால் மனதிலிருந்து பேச தீர்மானித்திருந்தேன்.  எதைப் பற்றி பேச வேண்டுமென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.  அவர் படைப்புகளைப் பற்றி பேச வேண்டும் என்றால் இன்னும் நன்றாகத் தயாரிக்க வேண்டுமென்று நினைத்தேன்.  
எழுத்து காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது என்று ஒரு இடத்தில் பிரமிள் குறிப்பிடுகிறார்.  ஆனால் அவர் கவிதைகளை படிம நிலையில் ஒரு நிதான வாசிப்பில் வாசகர்களை ஆழ்த்துகிறார் என்று தோன்றியது. மேலும் அவர் எழுத்து காலத்தில் ஒரு விதமாகவும், அதன் பின் வேறு விதமாகவும் கவிதைத் தன்மையை மாற்றிக் கொண்டு விட்டார் என்று பட்டது.    நான் பிரமிளுடன் என் நட்பைப் பற்றி பேசினேன்.  பொதுவாக எழுத்து மீது உள்ள அபிமானத்தில் பல எழுத்தாளர்களுடன் எனக்கு நட்பு உண்டு.  பிரமிளும் அவர்களில் ஒருவர்.  அவருக்கு ஏற்பட்ட மரணம் என்னை ரொம்பவும் சங்கடப் படுத்தியது.  அவருடைய தீவிரமான மனப் போக்கு  என்னை ஆச்சரியப்படுத்தத் தவறவில்லை.  நான் பிரமிளைப் பற்றி நன்றாகப் பேசியதாக அமிர்தம் சூர்யா அவர் பேச்சில் குறிப்பிட்டவுடன் நிம்மதி அடைந்தேன்.  
அடுத்துப் பேசிய அமிர்தம் சூர்யா, பேசுவதில் கலையைக் கற்றவர் மாதிரி தென்பட்டார்.  எங்கே நிறுத்த வேண்டுமோ அங்கே நிறுத்துகிறார், எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசினார்.  மே மாதத்தில் வெளிவந்த கணையாழியின் சிறந்த கதையையும், கவிதையையும் அவர்தான் தேர்ந்தெடுத்தார்.  இணையத்தின் முன்பும்,பின்பும் என்ற தலைப்பில் அவர் சொல்வதை அலசி இருந்தார். 
எப்போதும் எழுத்து பிரசுரம் ஆவது என்பது இணையத்திற்கு முன்பு பிரச்சினைக்குரிய ஒன்றாக இருந்துள்ளது.  நகுலன் ஒரு நோட்டுப் புத்தகம் வைத்துக்கொண்டு தோன்றுவதை எழுதிக்கொண்டே போவார்.  பின் அவற்றை தேவையான பத்திரிகைகளுக்கு அனுப்புவார்.  பத்திரிகை ஆசிரியருக்கு கடிதம் அனுப்பும் போது, பிடிக்காவிட்டால் பிரசுரம் செய்ய வேண்டாம் என்று எழுதி அனுப்புவார்.   அமிர்தம் சூர்யா அவர் எழுத்துக்களை எந்தந்தப் பத்திரிகைகள் எப்படியெல்லாம்  பிரசுரம் செய்யும் என்ற நுணுக்கத்தை அறிந்து வைத்திருந்தார். சவ ஊர்வலம் என்ற கவிதையை விருட்சம் பத்திரிகைக்கு அனுப்பியதாகவும், அதை பிரச்சார நெடி உள்ள கவிதை என்று நான் நிராகரித்ததையும் குறிப்பிட்டிருந்தார். எனக்க உண்மையில் ஞாபகம் இல்லை. 
அமிர்தம் சூர்யா, ப்ரியம், தமிழ் மணவாளன் கவிதைகளை நான் விருப்பத்துடன் விருட்சத்தில் பிரசுரம் செய்திருக்கிறேன்.  இதெல்லாம் முன்பு.  இது இணையதளம் காலம். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் இணையம் மூலம் பிரசுரம் செய்து கொள்ளலாம்.  எல்லோருக்கும் ஒருவித சுதந்திரம் வந்து விட்டது.  உண்மைதான்.  ஆனால் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.  ஊடகம் மூலம் அபத்தங்கள் அதிகமாகப் பெருகத் தொடங்கி விட்டன.  கூட்டத்தை சிறப்பான முறையில் கணையாழி ஆசிரியர் ம ரா நெறிப்படுத்தினார். வாழ்த்துகள்.
கணையாழி கூட்டத்திலிருந்து நான் அடுத்தக் கூட்டத்திற்கு வந்து விட்டேன்.  பேசுபவனாக இருப்பதைவிட பார்வையாளனாக இருப்பது சால சிறந்தது.  இக் கூட்டம் கிருஷ்ணகான சபாவில் 22ஆம் தேதி அன்று மே மாதம் நடந்த கூட்டம்.  இதை சுப்பு என்பவர் நடத்துகிறார் என்று நினைக்கிறேன்
.  தமிழ் அறிஞர்களைப் பற்றிய கூட்டம் இது. 14வது கூட்டம் என்று நினைக்கிறேன்.   இக் கூட்டத்திற்கு வ.வே.சுப்பிரமணியனும், ஆர் வெங்கடேஷ் அவர்களும் கலந்துகொண்ட கூட்டம்.  அவர்கள் தேர்ந்தெடுத்த தமிழ் அறிஞர் ராஜாஜி.  நான் ராஜாஜியை அரசியல் ராஜ தந்திரியாகத்தான் அறிந்திருக்கிறேன்.  பெரியாரும் ராஜாஜியும் வேறு வேறு கருத்துக்கள் கொண்டிருந்தாலும், நெருங்கிய  நண்பர்கள்.  எளிமையான மனிதர் ராஜாஜி.
  அவருடைய மகாபாரதத்தையும், இராமயணத்தையும் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.  முதன் முதலாக அந்தப் புத்தகங்கள் அச்சில் வெளிவந்தபோது ஒரு லட்சம் பிரதிகள் விற்றதாக சொல்வார்கள்.  வவேசுவும், வெங்கடேஷ÷ம் ஒருவரை ஒருவர் ராஜாஜியைப் பற்றி பேசிக்கொண்டே போனார்கள்.  இது புதுமாதிரியாக இருந்தது.  திக்கற்ற பார்வதி என்ற நாவல் ஒன்றை ராஜாஜி எழுதியிருப்பதாக என் ஞாபகத்தில் இருந்தது.  அதை ராணிமுத்து புத்தகமாகக் கொண்டு வந்ததாகக் கூட நினைப்பு.  அக் கூட்டத்தில் கேட்ட பேச்சிலிருந்து ராஜாஜி தமிழ் மொழிக்கு பல பங்களிப்பை அளித்திருப்பதாக அறிந்தேன்.  கூட்ட முடிவில் ராஜாஜியின் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.  கிருஷ்ணகானசபாவில், காமகோடி அரங்கம் என்ற ஒன்று உள்ளது.  அந்த அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது.  
                                                                  (இன்னும் முடியவில்லை)

புத்தக விமர்சனம் 4

அழகியசிங்கர்




நடைவெளிப் பயணம் என்ற அசோகமித்திரன் புத்தகத்தைப் படித்து முடித்தேன்.  40 வாரங்கள் குங்குமம் இதழில் தொடராக வந்திருந்த கட்டுரைத் தொகுப்பு இது. பலவிதங்களில் இப் புத்தகம் சிறப்பாக இருப்பதற்குக் காரணம், 83வயதாகும் அசோகமித்திரன் தன் அனுபவங்களைச் சாராகப் பிழிந்து கொடுத்திருப்பதுதான்.
பொதுவாக புத்தகம் படிக்கும் அனுபவம் மகத்தானது.  பெரும்பாலோருக்கு இது பிடிபடுவதில்லை.  புத்தகம் படிக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன்.  ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் அடுத்தப் புத்தகத்திற்கு அவர்களுடைய மனம் தாவிவிடும்.  முதல் புத்தகம் என்ன என்பதுகூட அவர்கள் முழுவதும் மறந்து விடுவார்கள்.
ஒவ்வொரு புத்தகத்தையும் நாம் திரும்பவும் படிக்கும்போது அப் புத்தகத்தின் நுன்ணுணர்வு நம்மிடம் வந்து சேரும்.
  எப்போதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய தொகுதியாகவே எனக்கு இப் புத்தகம் தோன்றுகிறது.  இதில் பலதரப்பட்ட மனிதர்கள், பலதரப்பட்ட இடங்களைப் பற்றி விஸ்தாரமாகச் சொல்லிக்கொண்டே போகிறார் அசோகமித்திரன்.
‘மேலும் படிக்க’ என்ற தலைப்பில் அமி அவர்கள் என்னன்ன புத்தகங்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்கலாம் என்பதையும் குறிப்பிடுகிறார்.  அவர் குறிப்பிடும் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தை படிப்வர்களுக்கு உண்டாக்குகிறார்.
இப்படி படிக்க என்ற பகுதியில் புத்தகங்களின் மேன்மையைப் பற்றிக் கூறும் போது, அசோகமித்திரன் இப்படியும் எழுதுகிறார் :
   `இந்தப் பகுதி வந்ததிலிருந்து நெருங்கிய நண்பர் முதல், என்னைத் துச்சமாகக் கருதுபவர்கள் வரை, அவர்கள் நூல்களைச் சிலாகித்து எழுத வற்புறுத்துகிறார்கள்.  நம்பகத்தன்மை என்று ஒன்று இருக்கிறது.  நான் மட்டுமே பாராட்டினால் போதுமா?  வெறும் புகழ்ச்சி நம்பகத்தன்மை இல்லாதது.  |  அவர் குறிப்பிடுவது எவ்வளவு உண்மை.
பல ஆண்டுகளாக நான் மேற்கு மாம்பலவாசி.  ஆனால் என் வீட்டில்அருகில் இருக்கும் பப்ளிக் ஹெல்த் சென்டரைப் பற்றிய விபரம் எனக்குத் தெரியாது. அதென்ன பழைய மாம்பலம் என்ற கட்டுரையில்  எம் சி சுப்பிரமணியன் மூலம் உருவான மருத்துவமனையைப் பற்றியும் குறிப்பிட்டு அசோகமித்திரன் எழுதி உள்ளார்.
  
`இன்று ஆஸ்பத்திரி என்பது ஓர் வாணிபச் சாதனம்.  ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டில் அதைக் கலப்படமற்ற தொண்டாகச் செய்யலாம் என்பதை எம்.சி நிரூபித்துக் காட்டினார்.  கடைசிவரை கதர் உடுத்தி முதிர்ந்த வயதில் தொண்டனாகவே உயிரைத் துறந்தார்.  என் அனுமானம், அவருடைய புகைப்படம் கூடக் கிடையாது.  அவரைப் பாரத்துநானும் பல ஆண்டுகள் கதரே அணிந்தேன்.’  என்று அவர் விவரித்துக் கொண்டு போகிறார்.  
இப்புத்தகம் இன்னொரு விதத்திலும் கவனம் பெறுகிறது. எந்தக் கட்டுரையை எடுத்துப் படித்தாலும், படிப்பவருக்கு பயனுள்ள கருத்து கிடைக்காமல் இருக்காது.
என்னை நெகிழ வைத்த கட்டுரை ஒன்று உள்ளது.  ‘ஜனதா  அடுப்பு’ என்ற கட்டுரை.  அதை வாங்கி வர டில்லியிலிருந்து ஆதவன் என்ற எழுத்தளரைக் கேட்டுக்கொள்கிறார்.  அவருக்கு சிரமம் தரக் கூடாது என்று சென்னை சென்டரலில் தில்லி ரயிலுக்காக அமி காத்துக் கொண்டிருக்கிறார்.  வண்டி அன்று பார்த்து மூன்று மணிநேரம் தாமதமாக வந்தது.  அதைவிட வருத்தம் ஆதவன் ஜனதா அடுப்பு வாங்கி வரவில்லை என்பதுதான்.  இக் கட்டுரையில் எந்த இடத்திலும் ஆதவனை குறை கூற வில்லை.  தன் விதியை நினைத்து வருந்தவுமில்லை.  
அசோகமித்திரரன் கட்டுரையில் அவ்வப்போது நகைக்சுவை தன்மையும் வெளிப்பட்டுக் கொணடிருக்கும்.  தி.க.சியின் தங்கத் தாமரை நாட்கள் என்ற கட்டுரையில், ‘என் பக்கத்து வீட்டுக்காரர், “உங்களுக்குத் தினம் இவ்வளவு தபால்கள் வருகின்றனவே, என்னிடமும் ஒரு பத்திரிகையைத் தாருங்களேன்,” என்று கேட்டார்.  நான் அவரிடம் ‘சோவியத் பலகனி’ சில இதழ்கள் கொடுத்தேன்.  அவர் என்னோடு பேசுவதையே விட்டுவிட்டார்’  இப்படி எழுதுவதுதான் அசோகமித்திரன்.  
அசோகமித்திரனின் கதைப் புத்தகத்தைப் படித்தாலும், கட்டுரைப் புத்தகத்தைப்படித்தாலும் பெரிதாக வித்தியாசம் தெரியாது. 
கட்டுரைகளைக் கூட கதைகள் மாதிரிதான் அவர் எழுதுவார். வாசகனைக் கவர்ந்திழுக்கும் திறமையை அவர் அறிந்து வைத்திருக்கிறார்.
நடைவெளிப் பயணம் – கட்டுரைத் தொகுதி – அசோகமித்திரன் – பக்கம் : 168 – விலை ரூ. 130 – வெளியீடு : சூரியன் பதிப்பகம், 229 கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை 600 004 
 

நண்பர்களே,

வணக்கம்.

நவீன விருட்சம் என்ற 97வது இதழ் வெளிவந்து விட்டது.  வழக்கம்போல் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று 64பக்கங்கள் கொண்ட இதழ்.
இதழில் பங்கு கொண்ட படைப்பாளிகளின் விபரம்.

1. என் தஙகையைப் புகழ்ந்து – விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா
மொழி பெயர்ப்பு : பிரம்மராஜன்
2. எதிர்பாராத சந்திப்பு – விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா
மொழி பெயர்ப்பு : தேஜøகிருஷ்ணா
3. விபத்தில் சிதைந்த காதல் கதை – சிறுகதை – உஷாதீபன்
4. நான் ஒரு சகாதேவன் – கட்டுரை – வைதீஸ்வரன்
5. ஏன் இப்படி ஆயிற்று – சிறுகதை – அழகியசிங்கர்
6. ம.பொ.சியின் ஆறு கதைகள் – கட்டுரை – பெ சு மணி
7. ஒரு பூவின் சாலை மரணம் – கவிதை – ஜெ பாஸ்கரன்
8. சந்திரா மனோகரன் கவிதை
9. மயிலாடுதுறை பாசஞ்சர் – கவிதை – சபரீஸ்
10. இரு கதைகள் – மா தக்ஷ்ணமூர்த்தி
11. புத்தக விமர்சனம் – அழகியசிங்கர்
12. பூத்துக் குலுங்கும் நித்தியம் –
கவிதை – நா கிருஷ்ணமூர்ல்த்தி
13. ஜன்னவி கவிதைகள்
14. இரண்டு கவிதைகள் – அழகியசிங்கர்
15. அஞ்சுகிறேன் – கவதை – பிரதிபா
16. துரை ஜெயபிரகாஷ் கவிதைகள்
17. அற்புதத்தின் ஒரு துளி – கவிதை – நந்தாகுமாரன்
18. கல்தூண் – கவிதை – எஸ் வி வேணுகோபாலன்
19. முதற்சான்றிதழ் – கவிதை – ஜெ பாஸ்கரன்
20. கடிதங்கள்
21. எனக்குத் தெரிந்த ஜெயகாந்தன்
22. முட்டையினுள் -குந்தர் கிராஸ் – மொ பெ கவிதை

விருட்சம் இலக்கிய சந்திப்பு – 11.

டாக்டர் பாஸ்கரன்’ 


விருட்சம் தனது 11 ஆவது இலக்கிய சந்திப்பு நிகழ்வினை 25- 4 – 2015 அன்று
மாலை, தி நகர் அலமேலுமங்கா திருமண மண்டபத்தில் நடத்தியது. சமீபத்தில்
விஷ்ணுபுரம் பரிசு பெற்ற கவிஞர் திரு ஞானக்கூத்தன் அவர்கள் ‘படைப்பின்
இரக்சியம்’ பற்றிப் பேசினார்.
கொல்லன் பட்டறையில் ஈயாக நானும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்!
முதுபெரும் எழுத்தாளர் திரு அசோகமித்திரன் அவர்களைச் சந்திக்கும் அவா
மேலோங்கியிருந்தது !

சுஜாதா அவர்கள் பல கட்டுரைகளில், பல சந்தர்ப்பங்களில்
ஞானக்கூத்தனைவாசிக்கச் சொல்லுவார்! கவிதையுலகில் தனக்கென ஒருதனியிடம்
உள்ளவர் – அவர் கவிதைகள், காலம் கடந்தும் அவர் புகழ் பாடும். அவரது கவிதை
உள்ளமும், வார்த்தைகளை அலசி ஆராயும் திறனும், தொலை நோக்குப் பார்வையும்,
பரந்துபட்ட இலக்கிய அறிவும், அவரது “கவிதைக்காக” ( கட்டுரைகள்,
மதிப்புரைகள்) – விருட்சம் வெளியீடு – புத்தகத்தை வாசிக்கும்போது
புலப்படும் ! அவரைப் போல்,வரிகளுக்கிடையே, வார்த்தைகளுக்கு நடுவே,
எழுத்துக்களுக்குப் பின்னே என அழகாகப் பொருள் சொல்லமுடியாது – அதற்கு,
அவருள் இருக்கும் கவிஞனின் பார்வையும், தேடலும் தேவை ! ’கவிதைக்காக’
புத்தகம் பற்றி சற்று விரிவாக வேறொரு சமயம் சொல்லவேண்டியிருக்கிறது .

முதலில், ஞானக்கூத்தன் அவர்களைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது.
மிகச் சிறப்பான முறையில் தயாரிக்கப் பட்டிருந்தது. திருவல்லிக்கேணியில்
அவர் வாழும் வீடு, தெரு,பார்த்தசாரதி கோயில், கறவைப் பசு, சைக்கிள்,
மனிதர்கள் எல்லாம் கவிதை பேசின ! இலக்கிய ஆளுமைகள், உறவினர்கள், நண்பர்கள்
மற்றும் ஞானக்கூத்தன் ஆகியோரது கருத்துக்களை அவர்களே சொல்லுவதுபோல் நல்ல
முறையில் தொகுத்திருந்தார்கள். இரயிலின் கடைசீப் பெட்டி மெதுவாக ஊர்ந்து
மறைய, அது மனதில் ஏற்படுத்தும் வெறுமையைக் கூறும் ஞானக்கூத்தனின் கவிதை
வரிகளுடன் படம் முடிவது நல்ல முத்தாய்ப்பான நெகிழ்ச்சி. இப்படத்தினைத்
தயாரித்த அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் !

கணையாழியில் தான் எழுதிய ஞானக்கூத்தன் பற்றிய கட்டுரையை திரு மூர்த்தி
அவர்கள் வாசித்தார் – தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக ஞானக்கூத்தன் பற்றிய
அவர் கட்டுரைகள் வெளியாவதாகக் குறிப்பிட்டார். மூன்று கட்டுரைகள்
போதாதுதான் !

பிறகு பேசிய ஞானக்கூத்தன் அவர்கள், மொழி, சொற்கள், அவை உணர்த்தும் ‘இலை மறை
காய்’ அர்த்தங்கள் எனத் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு
படைப்பாளி எப்படித் தன் தூக்கத்தை இழக்கிறான் என்று விளக்கிய அவர், அந்தக்
காரணத்தாலேயே கூட்டங்களுக்கு அதிகம் பேச வருவதில்லை என்றும் கூறினார்.
நல்லவற்றை எழுத, ஒரு படைப்பாளி நல்ல மனமுடையவனாகவும் இருப்பது அவசியம்
என்றார்.

கேள்வி பதில் நேரத்தில், சில கவிதைகளை அவற்றின் போக்கிலேயே, இடம், காலம்
சார்ந்து பொருள் கொள்ளவேண்டும் என்றார். மற்றொரு கேள்விக்கு பதில்
அளிக்கையில்,” காலைத் தூக்கி நிற்பவர்தான் நடராஜர் – இல்லையேல் அது அவர்
இல்லை “ என்றும், ‘காலைத் தூக்கி’ என்று எழுதுவதற்கும், ’தூக்கிய திருவடி’
என்பதற்குமான இலக்கிய நய வேறுபாட்டை அழகாக எடுத்துரைத்தார்.

திரு அசோகமித்திரன் அவர்கள் எழுத்தாளர்கள் தூக்கம் இழப்பதைப் பற்றியும்,
ஒரு கவிதை எந்த சூழலில் எழுதப்படுகிறது என்பதின் முக்கியத்துவத்தைப்
பற்றியும் அழகாகப் பேசினார். இந்தத் தள்ளாத வயதிலும் அவர் காட்டும் இலக்கிய
ரசனை இன்னும் இளமையாக இருப்பது வியப்புக்குரியது !
நன்றி கூறிய ஆடிட்டர் திரு கோவிந்தராஜன், புதியவர்கள் பலர்
இக்கூட்டங்களுக்கு வருகை தருவது மகிழ்ச்சிக்குரியது என்றார். மார்ச் மாத
சிறந்த சிறுகதைக்கான பரிசினை திரு அசோகமித்திரனுக்கும், சிறப்புரை ஆற்றிய
ஞானக்கூத்தன் அவர்களுக்குப் பரிசினையும் வழங்கியவுடன் கூட்டம்
நிறைவடைந்தது.

நல்ல இலக்கிய சிந்தனையுடனும், மகிழ்ச்சியான மன நிறைவுடனும் விருட்சம் இலக்கியக் கூட்டம் நிறைவடைந்தது !

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் பதினோராவது கூட்டம்

அழகியசிங்கர்
ஆச்சரியமாக இருக்கிறது.  11 கூட்டங்கள் நடந்து முடிந்து விட்டதை எண்ணி.  முதலில் நானும் ஆடிட்டர் கோவிந்தராஜன் அவர்களும் சேர்ந்து நடத்தும் கூட்டம், சில கூட்டங்களில் நின்று விடுமென்று நினைத்தேன்.

ஆனால் கூட்டம் தொடர்ந்து நடத்துவதென்பது சாத்தியமாக எனக்குத் தோன்றவில்லை.  ஒவ்வொரு கூட்டம் முடிவிலும் ஒவ்வொன்றை சரி செய்ய வேண்டுமென்று நான் நினைப்பேன்.  ஸ்ரீ அசோகமித்திரனை வைத்து முதல் கூட்டம் ஆரம்பித்தபோது, மைக் முதலில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்தோம்.  உடனே வாங்கினோம்.  இப்போது மைக் மூலமாகத்தான் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறோம்.

கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருகிறார்கள் என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்பட வில்லை.  எனக்கும் ஆடிட்டருக்கும் இதில் தெளிவான பார்வை உண்டு.  ஆனால் ஒவ்வொரு மாதமும் கூட்டத்திற்காக செலவழிக்கும் நேரத்தை உபயோகமாகக் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு.  அதனால் கூட்டத்தில் பேசுவதை பதிவு செய்ய வாய்ஸ் ரெக்கார்டரை நான் பயன் படுத்துவது வழுக்கம்.  சோனியின் இந்த வாய்ஸ் ரெக்கார்டர் மூலம் பல கூட்டங்களைத் துல்லியமாக பதிவு செய்திருக்கிறேன்.
என் நெடுந்நாளைய நண்பரும், கவிஞருமான ஞானக்கூத்தனை இந்த முறை பேசக் கூப்பிட்டேன்.  அவரும் பெரிய மனது பண்ணி பேச இசைந்தார்.  அவர் என்னைவிட 15 ஆண்டுகளுக்குமேல் மூத்தவர்.  மேலும் திருவல்லிக்கேணியிலிருந்து அவர் கூட்டம் நடக்குமிடத்திற்கு வரவேண்டும்.  எந்தத் தலைப்பில் அவர் பேசப் போகிறார் என்று கேட்டதற்கு அவர் உடனே படைப்பின் ரகசியம் என்ற தலைப்பில் பேச ஒப்புக் கொண்டார்.
முன்னதாக ஸ்ரீ வினோத் என்பவர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில்  ஞானக்கூத்தன் குறித்து ஒரு குறும்படம் எடுத்திருந்தார். அதைச் சிறப்பாகவே அவர் எடுத்திருந்தார்.  ஆரம்பத்தில் எனக்கு ஸ்ரீ வினோத் மீது அவநம்பிக்கையே கூடி இருந்தது.  ஆனால் அந்த குறும்படத்தைப் பார்த்தபோது ஆச்சரியமாகப் போய்விட்டது.  கச்சிதமாகவும் திறமையாகவும் அந்தப் படம் தயாரிக்கப்பட்டிருந்தது.  அந்தக் குறம்படத்தைக் காட்டிவிட்டு பின் கூட்டம் ஏற்பாடு செய்யலாமென்று தோன்றியது.  அதன்படியே குறும்பட நிகழ்ச்சியை முதலில் ஆரம்பித்தோம்.
குறும்படம் முடிய 45 நிமிடங்கள் ஆனது. ஞானக்கூத்தன் பேசுவதற்கு முன் தேவகோட்டை வா மூர்த்தி என்ற எழுத்தாளர் ஞானக்கூத்தன் குறித்து எழுதிய கட்டுரையை வாசிக்க விரும்பினார்.  கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கட்டுரையை வாசித்தார்.  அக் கட்டுரை 1960ல் கணையாழியில் எழுதிய கட்டுரை.  தொடர்ந்து இப்போதும் ஞானக்கூத்தன் கவிதைகள் எழுதி வருகிறார்.  அது குறித்து அவர் என்ன நினைக்கிறார்.  பின் ஞானக்கூத்தன் தன்னுடைய உரையைத் துவக்கினார்.  கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவர் பேசினார்.  கடந்த 11 கூட்டங்களில் நான் கேட்ட  சற்று கனமான உரை வீச்சை அன்றுதான்  உணர்ந்தேன்.  கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் அவர் என்ன பேச வருகிறார் என்பது தெரியாமல் போய்விடும்.   ஆரம்பத்தில் அவர் சொல்வது சற்று புரியாமல்தான் போயிற்று.  
ஞானக்கூத்தன் பேசும்போது குறிப்பிட்டார், ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் பிறர் மேல் விட மாட்டேன்.  இந்தக் கவிதையை எல்லோரும் சொன்னதை நான் கவிதையாக எழுதி உள்ளேன்.  நான் சொல்லலை அது மாதிரி,’ என்றார். 
‘எழுத்தெல்லாம் படிக்கறவங்க மனசுல புகுந்து கொள்கிறது.  அதனால் எழுதறவங்க படிக்கிறவங்க மனசை கெடுக்காமல் எழுத வேண்டும்.’
அசோகமித்திரன் ஞானக்கூத்தனைப் பற்றி எடுத்த குறும்படம் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.  கூட்டம் வழக்கம்போல் எட்டுமணிக்கு முடிந்துவிட்டதுஞி
 

மகளிர் மட்டும் !

SMALL STORY 
ஜெ.பாஸ்கரன்
‘சே, என்ன டிராஃபிக்; மூணு கிலோமீட்டர் ஊர்ந்து வரதுக்கு மூணு மணி நேரம்’ சலித்துக் கொண்டே வந்தமர்ந்தாள் சுலோசனா – மேல்நாட்டு பெர்ஃப்யூம் அவளைச் சுற்றி மூன்றடிக்கு விரவியிருந்தது !
அன்று அவள் பள்ளித் தோழி காஞ்சனாவின் மகளுக்குத் திருமணம். இது போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் பள்ளித் தோழிகள் சந்தித்துப் பழங்கதைகளையும் புதுச் சுவையோடு பகிர்ந்து கொள்வது அவர்களது பழக்கம் !
காஞ்சனாவின் கணவர் பெரிய தொழிலதிபர் – டெல்லியில் சென்ட்ரல் மினிஸ்டர் வரைக்கும் நல்ல செல்வாக்கு. அவர்களது ஒரே பெண் அனன்யாவுக்கு, ஊரையே கூட்டித் திருமணம். மண்டபம் நிரம்பி வழிந்தது.
எங்கு பார்த்தாலும் பட்டுப் புடவை சர சரக்க, பெரிய்ய ஜன்னலில் இரண்டு நூல் கட்டின முதுகு தெரிய, வைரம் பள பளக்க,நுனி நாக்கு வார்த்தையும், பளிச்சென்ற பற்கள் உதட்டுச் சாயத்தில் படாத சிரிப்புமாய் மண்டபமே களை கட்டியிருந்தது !
‘ காஞ்சனாவுக்குப் பெரிய மனசுடீ – பொண்ணுக்கு  நூறு பவுன் நகையும், பதினைந்து கிலோ வெள்ளியும்னு பிரமாதமா கல்யாணம் பண்றா ‘என்றாள் சுலோசனா.
‘ ஆமாமாம், பட்சண சீரெல்லாம் கூட நூற்றி ஒண்ணு, ஏழு வகை சுவீட்டு, பத்து சுத்து சீர் முறுக்குன்னு சபை நெறைவா பண்றா – இது ஏஜிஎஸ் வந்தனா.
அமெரிக்கா மாப்பிள்ளை, பாத்த உடனேயே பொண்ண புடிச்சுப் போச்சாம் – அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம், அந்தப் பொண்ணுக்கும் அதிர்ஷ்டம்தான்னு வெச்சுக்கோ ‘ என்றாள் மீனா – அவள் வீட்டுக்காரன் பெரிய டிராவல்ஸ் கம்பெனி வெச்சிருக்கான், பெரிய கைதான்.
’அவரையும் சும்மா சொல்லக் கூடாது, காஞ்சனா கிழிச்ச கோட்ட தாண்ட மாட்டார்.- பொண்ணுக்கு என்னென்ன வேணுமோ, கேட்டு நீயே எல்லாத்தையும் செஞ்சுடுன்னுட்டாராம் – பொட்டி நெறையப் பணம், டிரைவரோட காரையும் கொடுத்தார் – இவ சூப்பரா எல்லாத்தையும் ஆர்கனைஸ் பண்ணிட்டா – என்ன இருந்தாலும் காஞ்சனா ஸ்மார்ட் தான்’ என்றாள் சுலோசனா.
அவ ஸ்கூல் நாட்கள்ளேயே அப்படித்தானே – எல்லார்கிட்டேயும் பணம் கலெக்ட் பண்ணி, நல்ல கிஃப்ட்டா செலெக்ட் பண்ணி,க்ளாஸ் டீச்சருக்குப் பள்ளி ஆண்டு விழாவிலெ கொடுத்து அசத்திடுவாளே என்றாள் மீனா.
முகூர்த்தம் முடிஞ்சு, வந்த விருந்தினருக்கெல்லாம் ’மில்க் ஷேக்’ ஓடிக்கொண்டிருந்தது – ஆளுக்கொரு காகிதக் கோப்பையைக் கையில் வைத்துக் கொண்டு, அரட்டை தொடர்ந்தது..
‘ என்னடீ பண்றான் உன் பிள்ளை ,சாய்ரமேஷ் ? என்றாள் மீனா.
‘ ஃபைனல் இயர் – கேம்பஸ்லயே நல்ல வேலை கெடச்சிடுத்து. ஏகப்பட்ட பணத்தைக் கட்டி படிச்ச படிப்பு, வீணாகலை. பங்களூரோ, ஹைதராபாத்தோ, கிளம்பிடுவான். இவருக்கு ஒண்ணும் தெரியாது- எல்லாத்துக்கும் நான்தான் போகணும். சம்பாதிச்சா மட்டும் போதுமா இந்தக் காலத்திலெ – இந்த ஆம்பளைங்களுக்கு எங்கே இதெல்லாம் புரியுது? என்றாள் சுலோசனா.
‘ ஒரு வென்னீர் வெச்சுக்கத் தெரியாது- அது ஏன், அடுப்பே பத்த வெக்கத் தெரியாது ! ஏதோ ஆபீஸ் போய்ட்டு வந்துட்டா எல்லாம் தானா நடந்துடும்னு ஒரு நெனப்பு. வீட்டுக்கு வந்தா, காபி டிபன் ரெடியா இருக்கணும்- நாம்பதான் சமையல்காரியாட்டமா எப்பவும் அடுப்படியிலேயே வேகணும்… எப்போதான் இந்த மேல் சாவனிஸம் ஒழியுமோ’ அலுத்துக்கொண்டாள் வந்தனா.
எங்க வீட்ல கொஞ்சம் பெட்டர் ! காலையில் எழுந்து, பால் காய்ச்சி, டிகாக்‌ஷன் போட்டு, காபி தயார் பண்ணிடுவார்- அவருக்கு காலைல முதல் காபி குடிச்சாகணும், இல்லேன்னா அடுத்த வேலை ஓடாது – இது மீனா.
’ காலங்கார்த்தாலெ அப்படி என்னப்பா வேலை – வாக் போவாரோ?’ என்றபடி மில்க் ஷேக் ஒரு மிடறு விழுங்கினாள் வந்தனா..
‘ம்ஹூம், அதுக்கெல்லாம் அவருக்கு நேரமில்லப்பா; குளிக்கப் போறதுக்குள்ள, காய்கறி கொஞ்சம் நறுக்கி வெச்சிட்டுப் போவார் – குழந்தைகளைக் குளுப்பாட்டி, யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்கு அனுப்புற வேலையெல்லாம் இப்போ இல்லே – பெரிய குழந்தைகள் தானா காலேஜுக்கு போயிடறதுகள் ! என்றாள் மீனா.
இதையெல்லாம் கேட்ட சுலோசனாவுக்கு கொஞ்சம் வருத்தமாயிருந்தது – எல்லா வீட்டுக்காரரும் ஏதாவது உதவி செய்யறாங்க – நம்ம வீட்லேயும் ஒண்ணு இருக்கே, சதா ‘உர்’ ருன்னு மூஞ்சியெ வெச்சுண்டு- ஒரு துரும்ப எடுத்துப் போடாது1 எல்லாம் நம்ப வந்த வழி – கழிவிரக்கம் அவள் கண்ணில் தெரிந்தது.
‘ என்ன சுலோ,ஸைலெண்ட் ஆய்ட்டெ ? வீட்டு ஞாபகம் வந்துருச்சா ? இது எல்லா வீட்டுலேயும் நடக்கறதுதான், கவலைய விடு’ – என்றபடி வந்தனா காகிதக் கோப்பையை அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் வீசினாள்.
’ நாளைக்கு மயிலாப்பூர் சபாவில ஒரு நாட்டிய நாடகம் அரங்கேற்றம் இருக்கு, வரயா போகலாம் ? வீடுதான் எப்பொவும் இருக்கே; யோசிக்காம வந்துடு’ என்றாள் ஆறுதலாய் வந்தனா.
‘ பாக்கலாம் வந்தனா, நாளைக்கு இவர் எங்கேயோ நண்பர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போகணும்னார் ‘
 ’ நீ போகலைன்னா எங்க கூட வாயேன் ‘  என்றாள் வந்தனா “நீயும்தான்”  என்றாள் மீனாவைப் பார்த்து.
தாலி கட்டி முகூர்த்தம் முடிந்த கையோடு மணமேடைக்குச் சென்று மணமக்களை வாழ்த்தினர். பல வண்ணங்களில் சிறிதும் பெரிதுமாய் பரிசுப் பொட்டலங்கள் கை மாறின ! கேமரா பளிச்சிட,புன்னகையுடன், பட்டுப் புடவைக்குள் பூவையரும் பளிச்சென்று கண் மினுக்கினர் !
‘ஏய், எல்லோரும் சாப்பிட்டுட்டுப் போங்க  அப்புறம் கிளப்ல பாக்கலாம் ‘ என்றாள் காஞ்சனா அகமும் முகமும் மலர !( அந்தப் புது வைர மாட்டல் டாலடிக்குது – கண்ணைப் பறிக்குது !)
யூனிஃபார்ம் போட்ட ஆண்களும் பெண்களுமாக பந்திகளைக் கவனித்தனர். தள்ளு வண்டிகளில் வகை வகையாகப் பொடிகளும்,பொறியல் , கூட்டு என எல்லாம் கொண்டு வரப்பட்டு,இலைகளில் அணிவகுத்தன! இந்த விருந்தைப் பார்க்கும் எவனும் காசு கொடுத்தாலும், இந்தியா ஒரு ஏழை நாடு என்று ஒத்துக்கொள்ள மாட்டான்! பந்தி முடிந்து, பாதி இலைக்கு மேல் மீதம் வைத்துக்,காகித டவலில் கை துடைத்து வெளியே வந்தனர். ஐந்து வகை ஐஸ்கிரீம், நேர்த்தியாக வெட்டப் பட்ட பழ வகைகள் மற்றும் வெற்றிலைப் பாக்கு,இஞ்சி முறபா, காய்ந்த நெல்லிக்காய், கிராம்பு, என வாய் மணக்க விருந்து முடிந்தது !
கூப்பிய கையுடன் தாம்பூலப் பை வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.
போன் பண்ணுடீ, கிளப்புல பாக்கலாம் – மீனா காரில் ஏறிக்கொண்டே ‘பார்லருக்குப் போப்பா’ என்றாள் டிரைவரிடம்.
வந்தனா மந்தைவெளியில் உள்ள முன்னணி நடிகையின் தையற்கடைக்குக் கிளம்பினாள் !
காரில் வீட்டுக்குத் திரும்பினள் சுலோசனா !
தெரு முனையில் ஒரு சிறு கும்பல் – நிற்கமுடியாமல் தள்ளாடிய குடிகாரக் கணவனுடன் அவன் மனைவி சண்டை – கிழிந்து, கலைந்த அழுக்குப் புடவையில் தலைவிரி கோலமாய் அவள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள் ‘’ ஐயோ., வூட்லேர்ந்த துட்ட எல்லாம் இப்பிடிக் குடிச்சிட்டு வந்து நிக்கிறியே, நல்லா இருப்பியா நீ, நாசமாப் போவ “
அவிழ்ந்த லுங்கியுடன், கண்கள் சிவக்க, ஏதோ கெட்ட வார்த்தை சொல்லி, கையை ஓங்கி அடிக்க வந்தவன், தட்டுத் தடுமாறி தரையில் விழுந்தான் ! சாராய நெடியில் சிறுநீர் மணந்தது !
‘நாலு வூட்ல வேலெ செஞ்சி சேத்து வெச்ச காசையெல்லாம், குடிச்சி அழிக்கிறியே, அந்த மாரியாத்தா உன்னெ வாரிக்கினு போவாதா?’ அழுது புலம்பினாள் அவள்.
தெருக் கூச்சல் மெல்லக் காற்றில் கரைய, வீடு வந்து சேர்ந்தாள் சுலோசனா.- ‘என்ன மன்ஷனுங்க; இவன்களையெல்லாம்; அப்படியே கட்டிவெச்சி தோலை உரிக்கணும்’ பல்லைக் கடித்தாள் சுலோசனா.. தலை விரி கோலமாய் அலரிய அப்பெண்னின் முகம் மனதில் வந்து போனது.
காரிலிருந்து இறங்கியவள், ஃப்ளாட் வாசலில் வாட்ச்மேன் முனுசாமியின் மனைவி பொன்னாத்தாள் நிற்பதைக் கண்டாள். போன வாரம் அவள் கொடுத்த சில்க் காட்டன் புடவையை மிக நேர்த்தியாகக் கட்டிக்கொண்டு, மஞ்சள் முகம் மலர, பெரிய குங்குமப் பொட்டுடன் சிரித்தாள் பொன்னாத்தா.
‘என்ன பொன்னு, முனுசாமிக்கு சாப்பாடா ?’
‘ஆமாம்மா, வெளீல துண்ணா ஒத்துக்கறதில்லை; வவுத்து வலீன்றாரு. பீடியவு வுட மாட்டேன்றாரு; பொழுதன்னைக்கும் வேல பாக்குறாரு- அதான், வூட்லெயே ஆக்கிக் கொண்டாந்தேன்’  என்றாள். ’இப்படியும் இந்தக் காலத்தில் பெண்கள்’ என்று வியந்தவாறே, லிப்டில் மாடியேறி, காலிங் பெல் பட்டனை ஒற்றினாள்.
கதவு ஒரு ‘கிளிக்’ குடன் திறந்தது !
“ ஹை சுலோ, நல்லா நடந்துதா கல்யாணம் ?” என்றபடி உள்ளே சென்றான் அவள் கணவன். ஹாலில் சோபாவில் சாயுமுன் கேட்டது உள்ளிருந்து சமையல்காரரின் குரல், “ மாமி, காபி ரெடி ! ”

தப்பித்தால் போதுமென..

. ஷைலஜா

கிருஷ்ணராஜபுரம் நெருங்க நெருங்க எனக்கு வயிற்றில் புளியைக்கரைக்க ஆரம்பித்தது.
 
சின்ன  உதறலுடன் டாய்லெட் பக்கம் நழுவினேன். ரயில் அந்த ஸ்டெஷனை விட்டுப்புறப்படுகிறவரை டாய்லட் கண்ணாடியில் வழுக்கைத் தலையை விரல்களால் வாரிக்கொண்டு, பல் வரிசைஅயை அழகு பார்த்துக்கொண்டு , அழகு காட்டிக்கோண்டு இருந்தேன்.
 
‘அம்மாடா தப்பினோம்’ என்று வெளியே வந்தால்….
 
 
“ஹலோ ஸார்!” ரதனசாமி நிற்கிறார்!
 
அசடு வழிகிறது எனக்கு.
 
யாரிடமிருந்து தப்பவேண்டும் என்று நினைத்தேனோ அவரிடமே மாட்டிக்கொண்டுவிட்டேன்.
 
“ஸார்! வண்டி இன்னிக்கு மூணு நிமிஷம் லேட். நல்ல காலம் முப்பது நிமிஷம் லேட்டாக்காமல் விட்டானே! அதுகூடப்பெரிதில்லை வண்டி தண்டவாளத்துமேல போகிற வரை புண்ணியம். அதெல்லாம் லால்பகதூரோட போச்சு. என்னைக்கேட்டால் இந்த ரயில்வே போர்டு, ரயில்வே மந்திரி எல்லாமே…..”
 
ரத்னசாமி ஆரம்பித்துவிட்டார். இனிமேல் சிடி ஸ்டேஷன் போகிறவரைக்கும் மனுஷர் நிறுத்தமாட்டார். பேச்சு பேச்சு வாய் ஓயாமல் பேச்சு.
 
“கையில என்ன ஹிண்டுவா?”’
 
“ஆமா  படிங்கோ” என் பேப்பரை நீட்டினேன். ஆளைவிட்டால்  போதும்..
 
“நோ ஸார் பேப்பரை எவன் படிப்பான்? நான் பேப்பர் படிக்கறதை நிறுத்திப் பல வருஷம் ஆச்சு. மௌனமா பேப்பர் படிக்கறது என்கிறது கொடிய தண்டனைன்னு நினைக்கிறேன்! வாய்விட்டுப்பேசினாலே உலகவிஷயம் எல்லாம் வெளில வந்துடுமே  என்ன சொல்றீங்க?”
 
நான் ஒன்றும் சொல்லவில்லை.
 
“கட்லேக்காய் கட்லேக்காய்” என்ற வியாபாரக்குரல்ரத்னசாமியின் காதருகே வரவும், கடலைக்கூடையை  சுமந்து வந்த இளைஞனை ஏறிட்டார். பிறகு,”தமிழ்தான நீ? மூஞ்சிசிலயே தெரியுதே அது? எங்களைப்போல கர்னாடகாக்கு பொழைக்கவந்தவனாக்கும்?சரி சரி….கடலைஅஞ்சுரூபாக்குக்கொடு” என்று வாங்கிக்கொண்டு பொட்டலத்தைப்பிரித்தவர்,”முன்னெல்லாம் அம்பது பைசாக்கு கிடச்ச கடலை இப்போ அஞ்சுரூபா பாருங்க சார்!” என்றார்.
 
நாலுகடலைமணிகளை எடுத்த தன்கையில் வைத்துக்கொண்டு பொட்டலத்தை அப்படியே என்னிடம் நீட்டினார்.”எடுத்துக்குங்க..மல்லாட்டை என்பா சௌத் ஆர்காட்ல. நம்மூர்ல..இங்க பெங்கலூர்ல கடலக்காய்! கடவுள்மாதிரி உருவம் ஒன்று பெயர்கள் பல  ஹஹ்ஹா!” தனக்குத்தானே ரசித்து சிரித்துக்கொண்டார்.
 
எனக்குத்  தலையைப்   பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது. இனிமேல் இந்த பங்கார்பேட் பாசஞ்சரில் பயணமே செய்யக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தேன்.
 
ஒருமாதமா இரண்டுமாதமா ஒன்பதுமாதமாய் இந்த ரத்னசாமியுடன் இதே தொல்லை. தினமும் பெஙகளூர் சிடி ரயில்நிலையத்திலிருந்து பங்கார்பேட் பாசஞ்சரில் ஏறி ஒருமணீநேரப்பயணத்தில்  அந்த ஊருக்குபோய் அலுவலகப்பணி முடித்து  பெங்கலூர் திரும்போது சரியாய் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் ரத்னசாமியும்
நான் இருக்கும் பெட்டியாகப்பார்த்து  வந்துவிடுவது வழக்கமாகிவிட்டது. பதினைந்துநிமிடங்கள்- சிடி ரயில்நிலையம் -வருகிறவரை பேசிப்பேசியே அறுத்துவிடுவார்.
 
“என்ன சார் டல் ஆகிட்டீங்க? ”
 
“ஒண்ணுமில்ல லேசா தலைவலி” என்று ஜன்னல்பக்கம் முகத்தைத்திருப்பிக்கொண்டேன். ரயிலைவேறு க்ராசிங் என்று நட்டநடுவழியில் நிறுத்திவிட்டார்கள். இன்றைக்கு பதினைந்து நிமிஷம்  என்பது முப்பது நிமிஷமாகவும் ஆகலாம்.
 
“தலைவலிக்கு நான் ஒரு வைத்தியம் சொல்றேன் கேளுங்கோ…மிளகு இருக்கோல்லியோ அதை எடுத்து,லேசா அதை..” அவர் என்னவோ சொல்லிக்கொண்டிருக்க நான் ஜன்னலுக்கு வெளியே கண்ணோடு மனத்தையும் செலுத்த ஆரம்பித்தேன். தலை மட்டும் ஒப்புக்கு ஆடிக்கொண்டிருந்தது.
 
ரயில்மறுபடி ஓட ஆரம்பித்தது.
 
“பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்தாச்சு  அடுத்து சிடி ஸ்டேஷன் தான்” வீறிட்டார் திடீரென.
 
பிறகு என்னிடம்” தினம் பங்கார்பேட் பயணம்பண்றது சிரமமாயில்லையோ ஸார்? ஆங் ,,,ஆனாஅதான் சொன்னேளே அன்னிக்கே இன்னும்  ஒரேவருஷம் தான் அப்றோம் ரிடையர் ஆகிடுவேன்னு… மேலும் சொந்தவீடு  பெங்களூர்ல கட்டிண்டதும் இப்படி திடீர்னு பாங்குல வேலை மாத்திட்டான்னும் சொன்னீங்க….நினைவுக்கு வந்துட்டது இப்போ…. என்னவோ போங்க  வயசு எனக்கு அம்பதுதான் ஆறது ஆனா வர வர அசாத்திய ஞாபகமறதி. எங்கப்பா மைசூர்ல எழுபத்திஎட்டுவயசுக்கு கிண்ணுனு  இருக்கார்.
சாம்ராஜ் உடையார்கிட்ட சின்னவயசுல வேலைபார்த்தப்பொ ந்டந்ததையெல்லாம்  மறக்காம் சொல்வார்….”
 
சிடிஸ்டேஷன் வருகிறவரைதன் அப்பாவின் பெருமையை இழுத்துக்கொண்டே வந்தார்.
 
அப்பாடா பெஙக்ளூர் சிடி ஸ்டேஷன் வந்துவிட்டது.
 
நான் வேகமாய் இறங்க கதவருகில் வந்தவர்,”பாத்து ஸார்…. வண்டி இன்னும் நி8க்கவே இல்லை…. நிதானமாய் இறங்கணும் ..ஒருதடவை இப்படித்தான் என் மச்சினன அனுமந்து…..” ரத்னசாமியை அப்படியே வெட்டிக்கொண்டு  கூட்டத்தில்  கலந்துவிட்டேன்.சப்வேயில் நடந்து எதிரே ஃப்ளைஓவரில் வேகமாய் நடந்து எனது பஸ்ஸிற்காக  மெஜஸ்டிக் பஸ்நிலயத்தில் காத்திருக்கையில் அங்கும் வந்துவிட்டார்.
 
“ஸார்! உங்க ஏரியா ஜெய்நகர் ஒன்பதாவது ப்ளாக்தானே அதுக்கு 18ஆம் நம்பர் பஸ் தானே? ”
 
வெறுப்பைவெளிக்காட்டாமல் தலை ஆட்டினேன்.
 
“அங்கபாருங்க வந்திட்டுருக்கு! எனக்கு ராம்மூர்த்திநகர்போகணும் அங்க வாஸ்து சாஸ்திரம் சொல்ல  என்னை அழைச்சிருக்கார் மிஸ்டர் பூவராகவன்னு ஒருத்தர். என்ன பண்றது  சிட்ஃப்ண்ட் கம்பெனியை இழுத்துமூடினதும் எனக்கும் வேலைபோயி இப்படி வாஸ்துலதான் பிழைப்பேநடக்கறது. இன்ஃபாக்ட் வாஸ்து சாஸ்திரம்ல என் அண்ணன் கில்லாடி. பேரு வாசுதேவன்.சென்னைல வியாசர்பாடில  இருக்கான் . வாஸ்துதேவன்னு தான் அவனை எல்லாரும் சொல்வா…..” ரத்னசாமி சொல்லிக்கொண்டே இருக்க..
 
நல்லவேளை பஸ் வந்துவிட்டது.
 
வாழ்க பதினெட்டு எனக்கூவிக்கொண்டே பஸ்ஸிலேறிக்கொண்டுவிட்டேன்.
 
மறுநாள் காலை எழுந்ததுமே என் மனைவி,” இன்னிக்கு நீங்க கிருஷ்ணராஜபுரம் போயி நம்ம ரேகாக்கு தரகர் சொன்ன வரனை  நேர்ல போய் பார்த்துவாங்க” என்றாள்.
 
தலையாட்டினேன்
 
“பைய்னைமட்டும் பார்த்துட்டுவந்துடாதீஙக்  வீடு வாசல் அங்கே இருக்கிற சூழ்நிலை பையனோட அம்மா அப்பா கூடப்பொறந்தவங்க எல்லாரும் எப்படீன்னும் நோட்டமிட்டு வாங்க..”
 
”சரிடி எனக்கு எல்லாம் தெரியும்”
 
“என்ன தெரியும்? யார் எது சொன்னாலும் ஒருவார்த்தை பேசாமல் தலையாட்டத்தெரியும் குரும்பாடுமாதிரி”
 
ஹா! ரத்னசாமிக்கு நான் தலையாட்டுவது இவளுக்கு எப்படித்தெரியும்?
 
க்ருஷ்ணராஜபுரத்திற்கு ஆட்டோவில் வந்துசேர்ந்தேன்.மனைவி சொன்ன விலாசத்தில் தெருமுனையிலேயே இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.
 
”ஹலோ! ரயில் ஃப்ரண்ட்! எங்க இத்தனைதூரம் அதுவும்  ஞாயித்துக்கிழமைல?  ஹார்ட்டி வெல்கம் டு கிருஷ்ணராஜபுரம் ஸார்! இது என் ஹோம் டவுன்!”
 
 
பின் பக்கமிருந்து குரல்கொடுத்தபடி ரத்னசாமி ஓடிவந்து எனக்கு முன்வந்து கைகுவித்து நின்றார். வாயெல்லாம் சிரிப்பு!
 
நான் கடுப்பை மறைத்தபடி,” ஹிஹி..இங்க ஒருத்தரைப்பார்க்கவந்தேன் அர்ஜண்டா போயிட்டுருக்கேன்” என்று ஓரடி எடுத்துவைத்தவனை குறுக்கே வந்து தடுத்தார்.
 
,” மூச் விடக்கூடாது…என்னோட பேட்டை இது. இங்க நுழைந்தவர்களை என் வீட்டுக்கு அழைக்காமல் நான் விடமாட்டேன். …”
 
”ர.. ரத்னசாமி?”
 
“பேசப்படாது வாங்கோ”
 
வேறுவழியின்றி அவரைத்தொடர்ந்தேன்
 
குரும்பாடுதானோ நான்? இருக்கட்டும் இருக்கட்டும் இன்றோடு இந்த ரத்னசாமிக்கு முழுக்கு போட்டுவிடவேண்டியதுதான். நடுத்தெருவில் எதற்கு ரசாபாசம்? சிஙக்த்தை அதன் குகையிலேயே சந்திப்போம். ரத்னசாமி வழியெல்லாம் பேசிக்கொண்டே வந்தார். தெருவைப்பற்றி தார்சாலையைப்பற்றி லாந்தக்கம்பத்தைப்பற்றி கம்பத்தில் கட்டி இருந்த பசுமாட்டைப்பற்றி….
 
“இதான் ஸார் என் வசந்த மாளிகை வாங்கோ  உள்ள வாங்கோ”
 
உள்ளே அழைத்துப்போனவர் கூடத்தில் நாற்காலியைத்தட்டிப்போட்டார்.
 
பரபரவென் உள்ளே போனவர் ஐந்துநிமிடத்தில் காபிடம்ப்ளருடன் வந்துவிட்டார்.
 
”சார்! இந்தக்காபியை  குடிங்கோ…இதைக்குடிச்சா ஜன்மத்துக்கும்மறக்கமாட்டீங்கோ.. ஒருதடவை இப்படித்தான்  ஜான்சன்னு ஒருத்தர்-என்-பேனாநண்பர்- இங்கிலாந்துலேந்து இங்கவந்தவர் இந்தக் காபியைக்குடிச்சிக்குடிச்சி  பைத்தியமே பிடிச்சிட்டதுன்னா பாத்துக்குங்களேன்”
 
“அப்போ எனக்கும் பைத்தியம் பிடிக்கணுமா ரத்னசாமீ?” சீறினேன் நான்.
 
“ஸார்! என்ன  திடீர்னு இப்படி..என்ன ஆச்சு ஸார்? பதட்டமுடன் ரத்னசாமி கேட்க நான் கோபமாய்  அந்த காபிடம்ளரை சமையலறை நோக்கி வீசி எறிகிறேன். அப்போது அவர் மனைவிபோலிருக்கிறது  நாற்பத்திஏழு வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி  சமையற்கட்டு வாசலுக்கு பதறிப்போய் வந்துநின்றாள்.
 
அவளைகக்ண்டதும் ரத்னசாமி,”நீ ஏன் வந்தே போ போ “ என்றுவிரட்டினார் பதிலுக்கு அவள்,”பே பேபே..” என்று விழித்தாள்.
 
“ போயேன் உள்ள..சாரெல்லாம் நமம் வீட்டுக்கு வரக்கூடியவர் இல்ல நான்  ரொம்பக்கேட்டுட்டு வந்திருக்கார் அவர் முன்னாடி உன் ஊமை வாயை திறக்காதே போ” என்றார் ரத்னசாமி எரிச்சலுடன்.
 
தலைப்பொட்டில் அடித்தமாதிரி இருந்தது எனக்கு.
 
 
“ரத்னசாமீ?’ என்கிறேன் திடுக்கிட்டகுரலில்.
 
அவர் குரலைத்தழைத்து,”ஸார்! மன்னிச்சிடுங்க..வீட்ல நான் சுவரோடதான் பேசணும்…குழந்தைகுட்டியும் கிடையாது..பெண்டாட்டிக்கும் பத்துவருஷம் முன்னாடி எனக்கு சிட்ஃப்ண்ட் கம்பெனில திடீர்னு வேலைபோன சேதிகேட்ட அதிர்ச்சில  வாய் ஊமையாகிட்டது…….” என்று தயக்கமாய் சொல்லி முடித்தாலும் அவரிடமிருந்து நான் நகரவில்லை   இல்லை இல்லை நகரமுடியவில்லை.
*****************************************************************************
 

எனக்குத் தெரிந்த ஜெயகாந்தன்……..

அழகியசிங்கர் 


இன்றைய செய்தித்தாளில் (09.04.2015) பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது 80வது வயதில் மரணமடைந்ததை வெளியிட்டிருந்தார்கள்.   கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயகாந்தன் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.  பல தமிழ் எழுத்தாளர்களுக்கு அவர் முன் மாதிரியாகச் செயல்பட்டவர்.  தமிழ் எழுத்தாளர்கள் பலரும் வேஷ்டிக் கட்டிக்கொண்டுதான் ஆனந்தவிகடன் பத்திரிகை அலுவலகத்திற்குப் படை எடுப்பார்களாம்.  அப்போது பேன்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு மிடுக்காக வருபவர் ஜெயகாந்தன் என்று கூற  கேள்விப்பட்டிருக்கிறேன்.  
1970 ஆண்டு வாக்கில் கிருத்துவக் கல்லூரியில்  நான் படித்தக் காலத்தில் ஒருமுறை பேச ஜெயகாந்தான் வந்திருந்தார்.  அன்று மாணவர்களைப் பார்த்து கோபமாக கூட்டத்தில் பேசினார்.  மாணவர்களும் அவரை எதிர்த்துப் பேசினார்கள்.  சமாதானம் செய்யவே முடியாது போலிருந்தது.  ரொம்பவும் துணிச்சல்காரர்.  அந்தச் சமயத்தில் அவர் பேச்சு எனக்குப் பிடித்திருந்தது.  ஒருமுறை பரங்கிமலையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அவர் பேச வந்திருந்தார்.  அவர் பேசுவதைக் கேட்க நானும் சென்றிருந்தேன்.       அன்று அவர் வைத்திருந்த துண்டை தலையில் முண்டாசு மாதிரி (பாரதியார் ஸ்டைலில்) கட்டி இருந்தார்.  பின் கூட்டம் ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகிகளையே  தாக்கிப் பேச ஆரம்பித்தார்.  அதைக் கேட்க வந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அந்த மாதிரி காலக் கட்டத்தில் அப்படிப் பேசுவது அவர் இயல்பு என்று எனக்குப் பின்னால் பட்டது.
             அவர் பேச்சைக் கேட்ட எனக்கும், அவர்  மாதிரி பேச வேண்டுமென்ற  ஆசை ஏற்பட்டது.  அதே மாதிரி நானும்  மாம்பலத்தில் நாங்கள் ஏற்பாடு செய்த இலக்கியக் கூட்டத்தில் நானும் சத்தமாகக் கத்திப் பேசி கேட்க வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினேன்.  உண்மையில் என் இயல்புக்கு அதுமாதிரி பேசுவது  ஒத்து வராததால்,  அப்படிப் பேசுவதையே விட்டுவிட்டேன்.  அதேபோல் ஜெயகாந்தன் பேசுவதையும் கேட்கப் போவதை நிறுத்திக் கொண்டேன். 
நான் ஜெயகாந்தன் புத்தகங்கள் பலவற்றைப் படித்திருக்கிறேன்.  இன்னும் கூட எனக்கு ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன் என்ற நாவல் படித்த ஞாபகம் இருக்கிறது.  பெண் பாத்திரமே வராமல் நாவல் எழுதியிருப்பார்.  அவர் சிறுகதைகளில் கதாபாத்திரங்கள்   அறிவி ஜீவிகளைப் போல் சத்தமாக உரையாடிக் கொண்டிருப்பார்கள். பின்னாளில் அவர் பேசும் தன்மை மாறிவிட்டது.  அவர் எதைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அந்தப் பேச்சில் ஒரு நியாயம் இருப்பதுபோல் படும்.  
ஏகப்பட்ட சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று எழுதிக் குவித்த ஜெயகாந்தன் எழுதுவதை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டார்.  ஆனால் எழுத்தாளர்களில் அவருக்குக் கிடைத்த மரியாதை வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.  எழுதியே சம்பாதித்தவர் அவர் ஒருவர்தான்.  ஞானப்பீட பரிசிலிருந்து எல்லாப் பரிசுகளும்  அவரைத் தேடி வந்தன.
எனக்குத் தெரிந்து அவர் எழுத்து கூட பல எழுத்தாளர்களைப் பாதித்திருக்கிறது.     அவர்  கதைகளை சினிமாப் படங்களாகவும் எடுத்திருந்தார்கள்.  சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.       அதேபோல் நானும் என் சகோதரரும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தைப் பார்த்துவிட்டு பாதியிலே எழுந்து வந்திருக்கிறேன். நடிகை லட்சுமி அப்படத்தில் புகையிலையைத் துப்பி துப்பியே நம் மீதும் துப்பி விடுவார்களோ என்ற பயம் வந்துவிடும். 
1999ஆம் ஆண்டு விருட்சம் சார்பாக முப்பெரும் கூட்டம் ஒன்றை நடத்தினேன்.  ஆதிமூலம், ஞானக்கூத்தன், சா கந்தசாமி மூவருக்கும். நடிகர் கமல்ஹாசன் அக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஞானக்கூத்தன் கவிதைகள் புத்தகத்தை வெளியிட்டார்.  அவர் முதல் முதலாக கலந்துகொண்ட இலக்கியக் கூட்டம் அதுதான் என்று நினைக்கிறேன்.
அக் கூட்டத்திற்கு எதிர்பாராமல் எழுத்தாளர் ஜெயகாந்தன் கலந்து கொண்டார்.  எனக்கு இது ரொம்ப ஆச்சரியமான விஷயம். ஜெயகாந்தனுடன் சேர்ந்து கூட்டமாக ஒரு புகைப்படம எடுத்துக்கொண்டோம்.
கடைசியாக அவருடைய சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டு விழா மியூசிக் அகாடெமியில் ஆனந்தவிகடன் நடத்தியது. அதில் கலந்து கொண்டேன்.  ஏகப்பட்ட கூட்டம்.  ஜெயகாந்தனால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. 
அவர் மறைவைக் குறித்து விருட்சம் தன் ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறது.

கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ்

சி சத்திய மூர்த்தி

நான்

எடுத்த நாள் தொட்டு
எத்தனையோ ஆண்டாக
இந்த உடற்பாரம்
இறக்காது தூக்கிவரும் நான்
ஓர் üவெயிற் லிப்ரிங் சாம்பியன்ý

விடலைகள்


பாலகுமாரன்

துள்ளித் துவண்டு
தென்றல் கடக்க
விஸில் அடித்தன
மூங்கில் மரங்கள்