சிறியதே அழகானது

பிரபு  மயிலாடுதுறை
30.01.2016 அன்று சென்னையில் நடைபெற்ற – எனது நண்பரும் 
எழுத்தாளருமான அழகியசிங்கரின் மனைவி திருமதி. மைதிலி அவர்களின் 
பணி நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன்.  நெகிழ்வான உணர்வு 
பூர்வமான நிகழ்வாக அது அமைந்திருந்த்து.  தமிழ் இலக்கியம், வாழ்வை 
அகம் புறமென பகுத்து வகுத்துக் கொள்கிறது.  குடும்ப உறவுகளை 
அகமென்றும் சமூக உறவுகளை புறமென்றும் கூறமுடியும்.  வீட்டினை 
அகம் என்கிறோம்.  வீட்டிற்கு வெளியே புறம் என குறிக்கிறோம்.  இந்த 
நூற்றாண்டிலும் சென்ற நூற்றாண்டிலும் தமிழர்களின் சமூக 
வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்த்தால், விவசாய வாழ்க்கை 
முறையிலிருந்து பகுதியளவு வியாபார-வணிக வாழ்வுக்கும் பகுதியளவு 
தொழில் சார்ந்த வாழ்வுக்கும் நகர்ந்திருப்பதைக் காண முடியும்.    
இன்றும் பெருமளவு மக்கள் விவசாயம் சார்ந்த வாழ்க்கை முறையிலும், 
மனோபாவத்திலும் நீடித்திருப்பதைக் காண முடியும். சுதந்திர இந்தியாவில், 
இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாட்டை ஆண்ட போது கல்விக்கு 
முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கல்வி பரவலாக்கப்படுவதற்கான 
முயற்சிகள் துவங்கப்பட்டன.  தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் 
திரு. இராஜாஜியும் திரு. காமராஜும் அம்முயற்சிக்காக நன்றியுடன் 
நினைவுகூரத் தக்கவர்கள். பெண் கல்விக்கும் தமிழகத்தில் கல்வி 
பரவலாக்கப்பட்டதற்கும் அவர்களே காரணம். 
அகத்திற்கும் புறத்திற்குமிடையே ஒரு சமநிலையைக் கொண்டு 
வருவது என்பது இன்றைய வாழ்வில் ஒரு முக்கியமான விஷயமாக 
இருக்கிறது.  பல்வேறு விதமான சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் 
கலாச்சார காரணிகள் நமது அக மற்றும் புற வாழ்வை பாதிக்கின்றன.  
அவற்றை எதிர்கொண்டு கடந்து செல்வதையே நாம் வாழ்க்கைப்பாடு 
என்கிறோம்.  சமூகக் கூறுகள் குடும்ப வாழ்விலும், குடும்ப வாழ்வின் 
அம்சங்கள் சமூக உறவுகளிலும் பாதிப்பினைச் செலுத்துவதற்காக உள்ளன.  
தனிமனிதர்களின் ஆற்றலும் ஆளுமைத் திறனுமே அக மற்றும் புற 
வாழ்வில் ஒத்திசைவு ஏற்படுவதைத் தீர்மானிக்கின்றன.  மகாத்மா காந்தி 
பெண் கல்விக்கான தேவையையும் அவசியத்தையும் உணர்ந்தவர்.  அவர் 
காலத்தில் ஊக்கமின்றி தேங்கியிருந்த சமூகத்திடம் பெண்கள் பொது 
வாழ்வில் பங்கெடுக்க வேண்டும் என்ற அறைகூவலை விடுத்தவர்.  
பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட்டாக வேண்டும் என்ற வாதிட்டவர் சமூக 
மாற்றமும் முன்னேற்றமும் பெண்கள் வாழ்வில் மாற்றமின்றி நிகழவே 
இயலாது என நம்பியவர்.  குடும்பங்களின் அவல நிலைக்கும் பெண்களின் 
கண்ணீருக்கும் காரணமாக இருந்ததாலேயே மதுவினை சமரசமின்றி 
எதிர்த்தவர்.  மகாத்மா காந்தியின் தலைமைக்குப் பின்னான இந்திய 
தேசிய காங்கிரஸே இந்தியப் பெண்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனையை 
உருவாக்கியது என்பது மிகையல்ல.  அகத்தில் சிறையுண்டிருந்த பெண்கள் 
நாடு சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்காக – 
ஆயிரக்கணக்காக – இலட்சக்கணக்காக பள்ளி கல்லூரிகளுக்கு சென்றனர்.  
மொழியும், கணிதமும், அறிவியலும், வரலாறும் பயின்றனர்.  அரசுத் 
துறைகளிலும், தனியார் துறையிலும் பணி புரியத் தொடங்கினர்.  சுதந்திர 
இந்தியாவின் பெரும் சாதனைகளில் ஒன்று பெண்கள் படிக்கவும் 
வேலைவாய்ப்பை பெறவும் ஏற்படுத்தித்தரப்பட்ட வாய்ப்பு.  படித்த-
வேலைக்குச் செல்லும் – பெண்களின் வாழ்வு என்பது ஒரு தனிப்பட்ட 
பெண்ணின் உலகியல் மட்டுமல்ல  ; அது ஒரு குறியீடு ; சமூக 
மாற்றத்தின் அடையாளம்.  நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி 
நடக்கக் கூடும் என அனுமானித்திருக்கக் கூட மாட்டார்கள்.  ஐம்பது 
ஆண்டுகளுக்கு முன்னால் இது சாத்தியமா என மலைத்திருப்பார்கள்.  
இன்று பெண்களின் படிப்பும், வேலைவாய்ப்பும் நடைமுறை யதார்த்தமாகி 
உள்ளது. 
எனது தொழில் நிமித்தமாக பல்வேறு அரசு அலுவலகங்களின் 
படிக்கட்டுகளை ஏறி இறங்கியவன் என்ற வகையில் எனது அபிப்ராயம் : 
பெண்கள் அதிகாரிகளாகவும், அலுவலர்களாகவும் உள்ள போது ஒரு 
குறைந்தபட்ச நியாயம் பேணப்படுகிறது.  இழுத்தடிப்புகள் இருப்பதில்லை.  
அரசுத் துறையிலும் தனியார் நிறுவனங்களிலும் ஊக்கத்துடன் பணி 
புரியும் பெண்களே இந்திய சமூக மாற்றத்தின் உண்மையான முகங்கள்.  
வீட்டின் பணிகளை செய்து முடித்து குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து 
அலுவலகத்தின் பணி நெருக்கடிகளை சமாளித்து மீளும் காரியத்தை 
வாழ்நாளின் பெரும்பகுதி மேற்கொள்வது என்பது ஒரு பெரும் சவால், 
இந்தியப் பெண்கள் அதனை எதிர்கொள்கின்றனர் என்பதே அவர்களின் 
பெரும் வெற்றி. 
திருமதி. மைதிலி அவர்கள் 1976ம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் 
வங்கியில் பணியில் இணைந்திருக்கிறார்.  சக ஊழியர்கள் அவரைப் பற்றி 
சொல்லும் போது வங்கி வாடிக்கையாளர்களின் பெயரையும் கணக்கு 
எண்ணையும் துல்லியமாக ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடியவர் என்று 
பாராட்டிச் சொன்னார்கள்.  வாடிக்கையாளர்கள் அவரைப் பற்றி பேசும் 
போது வங்கிச் சேவையை விரைவாக மலர்ந்த முகத்துடன் வழங்கக் 
கூடியவர் என்ற சொன்னார்கள்.  எடுத்துக் கொண்ட பணியை மனதளவில் 
முழுமையாக ஏற்றுக் கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒருவரே 
இத்தகைய பாராட்டைப் பெற முடியும்.  தனது நாற்பதாண்டு கால 
பணியில் அலுவலகத்திலும் வீட்டிலும் நல்ல பெயரெடுத்து பணி நிறைவு 
பெற்றிருக்கிறார்.  நமது சமூகம் அரசியலில் உள்ள பெண்களையே 
முக்கியமாக எண்ணி பழகியிருக்கிறது.  அவர்கள் விரல் விட்டு எண்ணக் 
கூடியவர்கள் ; மிகக் குறைவானவர்கள்.  குடும்பத்தின் கடமைகளையும் 
சமூகப் பொறுப்புகளையும் திறம்படக் கையாண்ட – கையாளும் திருமதி. 
மைதிலி போன்ற நுண்புரட்சியாளர்களான நூற்றுக்கணக்கான – 
ஆயிரக்கணக்கான – இலட்சக்கணக்கான பெண்களே இந்தியப் பெண்களின் – 
இந்திய சமூக மாற்றத்தின் உண்மையான முகங்கள்.  அன்னை பூமிக்காக 
மகாத்மா உயிர் நீத்த ஜனவரி 30 அன்று திருமதி. மைதிலி அவர்கள் 
புகழுடனும் பாராட்டுடனும் பணி நிறைவு பெற்றது குறியீட்டுரீதியில் 
மகாத்மாவுக்கு செலுத்தப்பட்ட ஓர் அஞ்சலியும் கூட!

ஜெயமோகனின் அறம்

டாக்டர் ஜெ.பாஸ்கரன்


அறம் என்பது நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையைக் குறிப்பிடும் சொல் –
ஒரு மனிதக்குழு அல்லது ஒரு தனி மனிதன் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் நெறிகள், இறுதியாக வகுத்துக் கொண்ட நடத்தைகள், செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை, செய்தே ஆக வேண்டியவை அடங்கிய ஒரு வழி காட்டித் தொகை – அதுவே அறம்
2014, ஜனவரி புத்தகக் கண்காட்சியில் எல்லா ஸ்டால்களிலும் அழகாக அடுக்கிவைக்கப் பட்டிருந்தது அந்தப் புத்தகம். இரண்டு முறை கையிலெடுத்து, நானூறு பக்கங்கள் என்றவுடன் கீழே வைத்துவிட்ட புத்தகம் – நண்பர் சந்துரு, எதிர்பாராத ஒரு நொடியில், பரிசாகக் கொடுத்து என்னை வியக்க வைத்த புத்தகம் ஜெயமோகனின் “ அறம் “ ! வம்சி வெளியீட்டில் ‘ சிறுகதைகள் ‘ தொகுப்பு – தனது இணையதளத்தில் தொடர்ச்சியாக எழுதி வாசகர்களைக் கட்டிப்போட்ட உண்மைக் கதைகள். நேரடியாகவும், மறைமுகமாகவும் நம் கண்முன்னே ரத்தமும், சதையுமாக உலவிய பல ஆளுமைகளின் ‘ அறநெறி ‘ சார்ந்த கதைகள். அவற்றில் புனைவு என்பது, ஜெயமோகன் கதை சொல்லும் முறை மட்டுமே! பத்துப் பக்கம் படித்தால், கண்மூடி, இதயத்தினூடே கசியும் ஏதோ ஒன்று – வருத்தம், மகிழ்ச்சி, வெறுப்பு, ஆச்சரியம், பச்சாதாபம் – மனம், உ̀டல் அனைத்திலும் படர்ந்து நம்மை செயலிழக்கச் செய்கிறது ! அட, மானுட வெற்றி தோல்விகளில் இத்தனை அறம் சார்ந்த நிகழ்வுகளா !
கி.ரா., நாஞ்சில் நாடன், பூமணி, சொ.தருமன், பெருமாள் முருகன் – இவர்கள் சொல்லும் வட்டாரக் கதைகள் போன்றே இந்தக் கதைகள், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம் சார்ந்த ( கேரள மணத்துடன் கூடிய தமிழ் நாடு ) மனிதர்களைப் பேசுகின்றன. சாதி, மத பேதமின்றி, அனைத்துத் தரப்பிலும்  – எந்தத் துறையிலிருந்தாலும், வாழ்வின் எந்தத் தட்டிலிருந்தாலும் அறம் சார்ந்த மனித இயல்புகளை நடு நிலையுடன் விவரித்துச் செல்கின்றன. நாட்டார் தமிழ், தமிழ் கலந்த மலையாளம், மலையாளம், பிராமண பாஷை என பிரமிக்க வைக்கிறது கதை மாந்தர்களின் உரையாடல்கள் – அதுவே கதைக் களத்திற்கு வாசகனை கை பிடித்து அழைத்துச் செல்லும் மந்திரக்கோலாகிறது !
புத்தகத்தின் இறுதியில் சுவாரஸ்யமான கதை போல இக்கதைகளில் வரும் சில ஆளுமைகள் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு இருக்கிறது. அதில் குறிப்பிடாமல் விடப்பட்ட சில ஆளுமைகளை ஓரளவுக்கு யூகிக்கலாம் – சமூக, கலாச்சார விதிகள் கருதி, அவை சொல்லாமல் விடப்பட்டிருக்கலாம் ! அது ஜெயமோகன் அவர்களின் அறம்!
“ இலட்சியவாதத்தில் ஊன்றி வாழ்ந்த உண்மை மனிதர்களின் வாழ்க்கை வழியாக, அவர்களை மதிப்பிடும் கண்கள் வழியாக என் வினாக்களை நானே எழுப்பிக் கொள்ளலாம் என்று நினைத்தேன். இந்தக் கதைகள் அனைத்தும் அந்த பொதுத் தன்மையில் அமைந்தவை “. 
“ இலட்சியவாதம் நிற்கும் சுழலின் இருட்டுடனும் குப்பையுடனும் அது கொள்ளும் உரையாடலையே இக்கதைகள் முன்வைக்கின்றன “ என்கிறார் ஜெயமோகன். இலட்சியவாதம் என்னும் பிரம்மாண்டம், சில ஆளுமைகளின் தனித் தன்மையாக ஒளிர்வதையும், அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் ஏமாற்றங்களையும் சார்பின்றி விவரித்துச் செல்வதிலேயே ஜெயமோகனின் அறம் நம்மை முழுமையாக ஆட்கொண்டுவிடுகின்றது !
வாசித்து அனுபவிக்கவேண்டியவை அறம் கூறும் கதைகளும், அவற்றின் வாழ்க்கைப் போராட்டங்களும் – 
‘அறம்’ – பதிப்பாளரின் மனைவி ‘ஆச்சி’ தொடுக்கும் அறப்போராட்டத்தின் வலியையும் அதன் வெற்றியையும் விவரிக்கிறது. “லச்சுமி வருவா போவா… சரஸ்வதி ஏழு சென்மம் பாத்துத்தான் கண்ணு பாப்பான்னு சொல்லுவாங்க.. நீங்க பெரியவரு. என் வீட்டு முற்றத்துலே நிண்ணு கண்ணீர் விட்டுட்டீங்க…அந்தப் பாவம் எங்க மேலே ஒட்டாம உங்க சொல்லுதான் காக்கணும்னு சொன்னா. என்னா ஒரு சொல்லு, தங்கக் காசுகளை எண்ணி எண்ணி வைக்கிறா மாதிரி… முத்துச்சரம் மாதிரி.. “ அறமே அந்த ஆச்சியிடம்தான் இருந்ததாக முடிக்கிறார். 
‘வணங்கான்’ அப்பா வைத்த காரணப் பெயர் – கண்முன்னே பிரிட்டிஷ் ராஜ்ஜியம், ஜமீந்தார்கள் ஆதிக்கம், அரசு அலுவலில் ஒடுக்கப்பட்ட ஒருவர், எழுச்சிமிக்க வழக்கறிஞர் எனக் காட்சிகள் விரிகின்றபோது, நாமும் அந்தக் காலத்திற்கே ஒரு பார்வையாளராகச் சென்றுவிடுகின்றோம். ‘ நாடார்களிலே பல தரங்கள் உண்டு ‘; ‘சொந்தமாகப் பெயர் வைத்துக்கொள்வது கூட ஆடம்பரம் – நாய்க் குட்டிக்குப் பேர் வைப்பதைப் போல ‘ என்கிறார். அதிலும் ‘சாதியுள்ள பண்ணையார்களின் வீட்டு நாய்களைச் சொல்லவில்லை. அவற்றுக்கு நல்ல பெயர்கள் இருக்கும். தெரு நாய்களைச் சொன்னேன்’. அன்றைய சமூக அவலங்களை இப்படி இடித்துரைக்கிறார் ஆசிரியர் !
‘யானை டாக்டர்’ – உலகப் புகழ்பெற்ற விலங்கியல் மருத்துவர், தமிழக வனத்துறையில் பணியாற்றியவர், விலங்குகளின் குணாதிசயங்கள் பற்றி ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளவர் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி. யானைகளுக்கு மயக்க ஊசி போட்டு, விழவைத்து மருத்துவம் செய்வதில் நிபுணர். அதிகமான யானைகளுக்குப் பிரசவம் பார்த்தவர் ! அவரது வாழ்க்கை வனங்களையும், அங்கு வாழும் மிருகங்களையும் சுவாசித்து உயிர்த்த ஒன்று. “ அங்கே வலி உண்டு. நோய் உண்டு. மரணம் உண்டு. ஆனால் கீழ்மை இல்லை. ஒரு துளிகூடக் கீழ்மை இல்லை. உன்னை நன்கறிந்த எவரும் அருவெறுத்து விலகுவர். உயிர் கொண்ட கீழ்தரப் புழுதியே நீ “ என்னும் யானை டாக்டரின் அறம் மனிதர்களினும் மேலான விலங்குகள் சார்ந்தது. ஒருநாள் இரவு, யானை வாசம் அறிந்து, வாசலில் வந்து நிற்கும் யானைக்குட்டியின் வலியறிந்து சிகிச்சை அளிக்கிறார் – வனத்தில் சுற்றுலா வந்த பயணிகள் வீசிய உடைந்த பீர் பாட்டில் காலில் குத்தி, காயப்படுத்தியிருந்தது. சிகிச்சைக்காக டாக்டரைத் தேடிப் பல மைல்கள் வலியுடன் நடந்து வந்திருக்கும் யானைக்குட்டியும், சிகிச்சை முடிந்து நன்றியுடன் திரும்பும் குட்டியை அழைத்துச் செல்லும் இருபதுக்கும் மேற்பட்ட யானைகளின் மகிழ்ச்சியும் வியப்பூட்டுகின்றன! யானைகளுடன் டாக்டர் ஏற்படுத்தியிருக்கும் பந்தம் பிரமிப்பூட்டுகிறது.
‘சோற்றுக்கணக்கு’ – கெத்தேல் சாகிப், மனித உருவில் தெய்வம். வயிற்றுப் பசிக்கு சாதி,மதம்,ஏழை,பணக்காரன் வேற்றுமை கிடையாது என்பதை உணர்ந்தவர். அவரது அன்பு முரட்டுத்தனமானது. அவரைச் சுற்றிச் சுழலும் கதையில் வரும் பாத்திரங்கள் வறுமையின் ருசியறிந்தவை; வறுமை உரசி உரசி மூளை மழுங்கியவை – இவர் தாராளமாய்த் திணிக்கும் சோற்றுக்கும் கறிக்கும்  நன்றியுடன் இருப்பவை. காசு கூட எதிர்பாராமல், வயிறு முட்ட முட்டச் சோறு போடும் கெத்தேல் சாகிப் அறம், மனித நேயத்தில் தோய்ந்தது. 
‘நூறு நாற்காலிகள்’ – தலைமுறைகள் சமுதாய மாற்றத்தை – வீட்டிலும், வெளியிலும் – எப்படி எதிர்கொள்ளத் தயங்கித் துன்புறுகின்றன என்பதை அழுத்தமாகச் சொல்கின்றது. ஜெயமோகனின் சொல்லாமல் புரியவைக்கும் திறமை, எழுதாத எழுத்தின் வலிமை இக்கதை முழுவதும் விரவியிருக்கிறது. காப்பாவுடன் சேர்ந்து நாமும் பதறுகிறோம், வலியறிகிறோம், அழுகிறோம், புகைக்கிறோம், மனதுள் புகைகிறோம்; இறுதியில் அதிகார நாற்காலிகளைக் கண்டு மிரளுகிறோம் !
‘பெருவலி’ – கோமல் சுவாமிநாதன் தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் இதழாளர். அவருக்கு முதுகில் புற்று நோய். அதன் வலி கொடுமையானது. மரண அவஸ்தை – கண்ணெதிரே உடனேயே வந்த மரணத்துடன் பயணித்த அனுபவம். அந்தப் பெருவலியுடன் அவர் சென்றுவந்த கைலாச மலை யாத்திரை. வலியை மீறி அவர் வாழ்க்கை மீது கொண்டிருந்த தத்துவார்த்த நம்பிக்கை, அதன் ஏற்ற இறக்கங்கள் –  கேட்கிறார் கோமல் : “ வலிங்கிறது வாழ்க்கை. வாழ்க்கை மேலே படியற மரணத்தோட அதிர்வு. வாழ்வும், மரணமும் இல்லாத எடத்துலே ஏது வலி ? “  கைலாச மலையைப் பார்த்து சொல்கிறார், ‘ எங்க இருக்கே ? இருக்கியா ? நீ இல்லாம இருந்தா நல்லா இருக்கும்னு வாழ்நாளெல்லாம் ஆசைப்பட்டேனே. நீ இல்லாத எடத்திலே எதுவும் நடக்கலாம். நீ இல்லேன்னா எல்லாத்தையும் நியாயப்படுத்திடலாம். நீ இல்லேன்னா எல்லாத்துக்கும் வேற அர்த்தம் வந்துர்றது ‘.  ஜெயமோகனோடு நாமும் கலங்குகிறோம்.
ஒவ்வொரு கதையும் ஒரு நாவலாகும் அளவுக்கு விபரங்கள். முழு தொகுப்பையும் வாசித்து முடித்தபோது, அதன் ஆளுமைகளின் அறநெறி ஜெயமோகன் அவர்களை முழுமையாக ஆட்கொண்டிருந்ததை உணர முடிந்தது.   டாக்டர் சாமர்வெல் (ஓலைச்சிலுவை), காரிடேவிஸ் (உலகம் யாவையும்), பூமேடை ராமையா (கோட்டி) இவர்களைச் சுற்றிச் சுழலும் கதைகளில் சமூக அக்கறையே முக்கிய அறம் சார்ந்த இழை. தாயார்பாதம், மயில் கழுத்து இரண்டு கதைகளிலும் மறைந்திருக்கும் ஆளுமைகள் இசை, இலக்கியம் சார்ந்தவர்கள் – மத்தறு தயிர் ஒரு பேராசிரியரின் அறம் குறித்தது. அறம், அறத்தை மீறிய வாழ்க்கை என முகத்தில் ஓங்கி அறையும் எழுத்து இந்தக் கதைகளுக்குச் சொந்தம்.
ஜெயமோகன் அவர்கள் சில முக்கிய மனிதர்களின் வாழ்க்கைச் சரிதங்களின் விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருந்தார் – அந்தப் புத்தகம் நாம் அறிந்த ஆளுமைகளின் அறிந்திராத பக்கங்களை, வியக்கும் வகையில் வெளிப்படுத்தியிருந்தது. ‘ அறம் ‘ நாம் அதிகம் அறிந்திராத ஆளுமைகளின் தர்மம் சார்ந்த வாழ்வினை ஒருவித தார்மீகக் கோபத்துடனும், கழிவிரக்கத்துடனும் சொல்கிறது – வாசித்து வெளியே வரும்போது உலகம் வேறு மாதிரியாகவும், உள்ளம் புழுக்கத்துடனும் மாறிவிடுவது, ஜெயமோகனின் வெற்றி ! ( இதை எழுதிய பிறகு படித்துப் பார்த்தேன் – அறம் வாசித்து முடித்தபோது ஏற்பட்ட கடல் அளவு உணர்வுகளின் ஒரு துளியைக் கூட என்னால் வெளியிட முடியவில்லை என்பதே உண்மை – முடியுமா என்பது விடையில்லாத கேள்வி !)
.

மறந்து போன பக்கங்கள்….


அழகியசிங்கர்



தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள நான்காவது கவிதை சிறை.  சில கவிதைகள் வாசித்தால் எளிதாக நம்மை நோக்கி வரும். மிகக் குறைவான வரிகள் கொண்ட இக் கவிதை எதை நோக்கி எழுதப் பட்டிருக்கிறது. கனிக்குள்ளே இருந்து பிரிந்த தரு.  திரும்பவும் கருவாய் உருவாகிறது.  அதேபோல் நமது சிந்தை, சொற்கள், செயல் வாழ்க்கை மூலம் நம் வாழ்க்கையின் தத்துவத்தை நாம் சிலசமயம் தாண்டி வந்து விடுகிறோம். சிலசமயம் தத்தவத்துள் அடங்கி விடுகிறோம்.  ஏதோவிதத்தில் நாம் சிறையில் இருக்கிறோம்.  விரும்பினால் சிறையிலிருந்து விடுபடலாம். 

சிறை

தருவின் பிரிந்த கனிக்குள்ளே
தருவே கருவாய் உருவாச்சு.
தத்துவத்தைத் தாண்டிவந்தோம்;
தத்துவத்துள் தடைப்பட்டோம்
ஆம், நமது சிந்தை,
சொற்கள், செயல், வாழ்க்கை
எல்லாம் தான்!

புத்தக விமர்சனம் 16

அழகியசிங்கர்
சுருதி என்கிற நகுலனின் கவிதைத் தொகுதி ஏனோ என் புத்தகக் குவியலில் கண்ணில் பட்டது.  எடுத்து வைத்துக் கொண்டேன்.  தாரணி பதிப்பகமாக இப் புத்தகம் 1987ஆம் ஆண்டு வந்துள்ளது.  அப்போது இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 10/-.  உடனே இப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.  மொத்தம் 42 பக்கங்கள். 
ஆரம்பத்திலிருந்து நகுலனின் என்ற எழுத்துகளின் வாசகன் நான். தொடர்ந்து நகுலன் நாவல்களைப் படித்து வந்தால், ஒருவித குழப்பம் ஏற்படும். எல்லா நாவல்களிலும் ஒருவிதத் தொடர்ச்சி இருப்பதுபோல் படும்.  அவருடைய எழுத்து எளிமையான எழுத்து.  நினைவோடை தன்மை கொண்ட எழுத்து.  அவருடைய படைப்புகளைப் படிக்கத் தொடங்கும்போது நம்மிடம் நகுலன் நேரிடையாகவே பேசுவதுபோல் தோன்றும்.  நகுலன் எழுத்தில் காணப்படும் குழப்பம் அல்லது படிப்பவர்களுக்கு ஏற்படும் மன சஞ்சலம் அசோகமித்திரன் எழுத்தில் காணப்படுவதில்லை.  அசோகமித்திரன் எல்லாவற்றையும் தெளிவாக சொல்ல வல்லவர்.  
சுருதி என்ற இக் கவிதைத் தொகுதியைப் படிக்கும் போது, திரும்பவும் இன்னொரு முறை இன்னொரு முறை என்று படிக்கத் தூண்டுகிறது. பத்திரமாக இப் புத்தகத்தை வைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது.
இக் கவிதைத் தொகுதி பற்றி…பின்னால் நகுலன் எழுதியிருக்கிறார்.  இந்தத் தொகுதியில் மொத்தம் 36 கவிதைகள்.  நகுலன் இப்படி எழுதுகிறார் :
‘சமீபத்தில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் காரணமாக கவிதை, கதை, நாவல் இவைகளை எழுதுவது முக்கியமன்றி, அவைகளைப் பிரசுரிக்க வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன்,’ என்று எழுதுகிறார்.
பொதுவாக நகுலன் புத்தகத்தை யாரும் வாங்கிப் படிக்க மாட்டார்கள்.  இதைக் குறித்து அவர் பேசும்போது üஎன் புததகத்தை 50 பிரதிகள் அடியுங்கள்.  50 பேர்கள் தான் இருப்பார்கள் படிக்க.  அவர்களிடம் கொடுத்து விடுங்கள்,ýý  என்பார்.
நகுலனின் கவிதைகளை வாசிப்பவர்கள் தரமான வாசகர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் இத் தொகுதியைப் பற்றி பேசும்போது, வாசகர்கள் படித்துத் தெரிந்து கொள்வார்கள் என்கிறார்.
உண்மைதான் நகுலனைப் படிக்க அலாதியான மனநிலை வேண்டும்.  
மேலும் அவர் கவிதைகளைப் படிக்கும்போது எளிமையான அனுபவம் நமக்குக் கிட்டினாலும், நம்மை அவருடைய வரிகள் திரும்ப திரும்ப யோசிக்க வைக்கும்.
உதாரணமாக,
தேடல் என்ற தலைப்பிட்ட கவிதையைப் படிக்கவும்.
எதைத் திறந்தால்
என்ன கிடைக்கும்
என்று 
எதை எதையோ
திறந்துகொண்டே 
இருக்கிறார்கள்.
மிகச் சில வரிகளைக் கொண்ட இக் கவிதை, படிக்க சுலபமாக இருப்பதோடல்லாமல், நம் மனதை விட்டு இக் கவிதை அவ்வளவு எளிதாக போக விரும்புவதில்லை.  இக் கவிதையை நாம் படித்தது ஒரு முறை என்றாலும் திரும்ப திரும்ப நம்மை யோசிக்க வைக்கிறது ஏன்? 
நகுலன் அவர் கவிதைகளை மனதிலிருந்து எழுதுகிறார்.  புறவயமான தன்மையைக் கூட அகவயமான பார்பையுடன் பார்க்கிறார். அதனால்தான் அவர் கவிதைகளை ஒரு முறை நாம் படித்தாலும் பலமுறை நம்மை யோசிக்க வைக்கிறது.  
குழப்பம் என்ற இன்னொரு கவிதையைப் படியுங்கள்.
பார்த்துக்கொண்டே
நின்றேன்
மண்டை உடையாமலிருக்க
விநாயகர் சிலை முன்
ஒரு தேங்காய்
உடைந்தது
யாருடைய குரூரம
அல்லது நகைச்சுவை 
என்று 
மனம் குழம்பினேன்.

ஏன் இப்படி கூறுகிறார்?  தேங்காயை உடைப்பது பக்தி பெருக்கால் என்று சொல்லாமல் யாருடைய குரூரம் அல்லது நகைச் சுவை என்று ஏன் கூறுகிறார்.  இதுதான் நகுலன்.  படிப்பவரை பலவிதமாக யோசிக்க வைக்கிறார்.  இன்னும் இன்னும் படிக்க வேண்டுமென்று தூண்டுகிறார்.
சுருதி என்கிற கவிதையில்,
ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி/ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா 
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.
இவ்வளவு சொன்ன நகுலன், ஏன் சாவிலும் ஒரு சுகம் உண்டு என்கிறார். ஏன் அப்படி சொல்கிறார்?  இதுதான் நகுலன்.  வாசகனை யோசிக்க வைக்கிறார்.  மேலும் இவர் கவிதைகள் எல்லாம் மரணத்தைச் சுற்றி சுற்றி வருகிறது.  அதனால்தான் இவர் கவிதைகள் வசீகரமாகத் தோன்றுகின்றனவோ என்று நினைக்க வைக்கிறது.
இன்னொரு விஷயமும் இவரிடம் உண்டு.  இவர் கவிதைகளை வாசிக்கும் சிலர் இதெல்லாம் கவிதையா என்று கூட சொல்லக்கூடும்.
நான் என்ற கவிதை
நான்
சரி
நான் மாத்திரம்
சரியே சரி.
ஆனால் நான் அவர் கவிதைகளைப் படிக்கும்போது,  அதில்தான் பல அர்த்தங்களைக் கொண்ட தளங்களை உருவாக்குவதுபோல் தோன்றும்.  
உண்மையில் அவர் கவிதைகளைப் படிக்கும் நானும் சரி, நீங்களும் சரி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
சுருதி – கவிதைகள் – நகுலன் – முதல் பதிப்பு – 1987 – மொத்தப் பக்கங்கள் : 42 – விலை ரு.10 – தாரணி பதிப்பகம்- ட்டி எம் நந்தலாலா, 476 கேசவலு நகர், கள்ளக்குறிச்சி 606 202
  

பாஜிராவ் மஸ்தானி

பிரபு மயிலாடுதுறை

சில ஆண்டுகளுக்கு முன்னால், மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பகல் நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.  அது செல்ஃபோன் பிரபலமாகிக் கொண்டிருந்த காலம்.  நான் பேருந்தின் கடைசி வரிசைக்கு முன்னால் இருந்த இடதுபக்க இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தேன்.  புதுச்சேரி பேருந்து நிலையத்தில் ஓர் இளைஞன்  ஏறினான்.  கடைசி வரிசையின் நடுவில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.  அவனது தோற்றம், கைப்பை, காலணிகள் மற்றும் அவன் கையிலிருந்த புத்தகங்கள் இவற்றைக்கொண்டு அவன் பொறியியல் மாணவனாக இருக்கக் கூடும் என கணித்தேன்.  பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது இரண்டு கல்லூரி மாணவிகள் புதுச்சேரி பொறியியல் கல்லூரி அருகே ஏறினர்.  கடைசி வரிசையில் மட்டுமே இடம் இருந்தது.  அம்மாணவனுக்கு அருகே அமர்ந்து கொண்டனர்.  ஒரே வகுப்பில் படிப்பவர்களாக இருக்கக் கூடும்!   புதுச்சேரியிலிருந்து சென்னை வரை உரையாடிய வண்ணம் இருந்தனர்.  ஒரு பெண் அவ்வப்போது தூங்கி எழுந்து உரையாடலில் இணைத்து கொண்டாள்.  அவள் உரையாடும் போது இன்னொரு பெண் தூங்கினாள்.  மோட்டலில் வண்டி நின்ற போது அம்மாணவன் தான் இறங்கிச் சென்று குடிநீர், பிஸ்கட் மற்றும் நொறுக்குத் தீனி வாங்கி வந்து தந்தான். அவர்களுக்கான பயணச்சீட்டையும் அவன் தான் எடுத்தான்.
அவர்கள் பல விஷயங்களைப் பேசினர்.  மேத்தமேடிக்ஸ் – 4 என்ற தாளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.  ஃபோரியர் சீரிஸ்,  ஆய்லர் தேற்றம் என்ற வார்த்தைகள் காதில் விழுந்தன.  எழுபது ஐந்து மதிப்பெண்களுக்கு எழுதிய தேர்வில் அறுபத்து ஐந்து மதிப்பெண்கள் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அப்பெண் இருந்தாள்.  கிடைக்காத பத்து மதிப்பெண்ணுக்காக 
வருந்தினாள்.  தோழிகள் தான் குழப்பி விட்டனர் என அங்கலாய்த்தாள்.  “இட் இஸ் ஆள் இன் எ கேம்” என்றாள். அது அவளுக்கு உவப்பான வாக்கியம் போலும்! அடிக்கடி அதனைபிரயோகித்தாள்.  அவர்கள் பேருந்தில் உரையாட ஒரு பாணியை பின்பற்றுவதை நான் பேருந்தில் ஏறியதுமே கவனித்தேன்.
பேருந்தில் ஏறியதுமே அவர்கள் உரையாடத் துவங்கவில்லை.  முன்னிருக்கையில் இருப்பவர்கள் ஓய்வு நிலைக்கு செல்லும் வரை பேசாமல் இருந்தனர்.  அப்பெண்கள் வந்து அமர்ந்ததும் அந்த இளைஞன் அவனே நடத்துனரிடம் சென்று பயணச்சீட்டு வாங்கி வந்தான் என்பதை நடத்துனர் அப்பெண்களிடம் சீட்டு வழங்க அவர்கள் இடத்துக்கு வராததிலிருந்து யூகித்துக் கொண்டேன்.  என்ஜின் சத்தத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்பவே அவர்கள்  உரையாடலின் ஸ்தாயி இருந்தது. என்ஜின் சத்தம் அதிகமாக இருக்கும் போதே உரையாடினர்.  நிறுத்தங்களில் வண்டியை நிறுத்த ஓட்டுனர் வாகனத்தை மெதுவாக இயக்கினால் பேச்சு நின்று விடும்.  பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்குமே அவர்களைப் பற்றிய கவனம் இல்லை அல்லது எவர் கவனத்தையும் கவராத ஒரு தகவமைப்பை அவர்கள் உருவாக்கியிருந்தனர். இரண்டு பெண்களில் ஒரு பெண் மிகவும் புத்திசாலி என்பது அவளது பேச்சில் தெரிந்தது. அவ்விளைஞனும் அவளுக்கு சமமான அறிவு கொண்டிருந்தான்.  இன்னொரு பெண்ணும் அவர்களை ஒத்த திறனுடன் இருந்தாள்.
 பரீட்சைத் தாள்கள், கல்லூரித் தோழிகள், சென்னைத் தோழிகள், விடுமுறைத் திட்டங்கள், எதிர்காலத்தில் எழுத வேண்டிய போட்டித் தேர்வுகள், பெற்றோர்கள் என நானாவித விஷயங்களைப் பற்றியும் அப்பெண் உற்சாகத்துடன் பேசினாள்.  நடந்த – அவள் எதிர்பாராத – விஷயங்களைப் பற்றி பேசும்போது ‘இட் இஸ் ஆல் இன் எ கேம்’ என்றாள். 
 இட் இஸ் ஆல் இன் எ கேம்.  ஆம், நாம் விரும்புவதும் வாழ்வில் நடக்கும்.  நாம் எதிர்பாராததும் வாழ்வில் நடக்கும்.  அனைத்தும் சாத்தியமே.வாழ்வை முழுமையாக அணுகுவதும் புகாரின்றி ஏற்பதுமே அழகான, நேர்மையான வழிமுறை. 
அவர்களது பேச்சு ஓம் சாந்தி ஓம் என்ற திரைப்படம் பற்றி திரும்பியது.  அப்படம் அன்றைய தினத்துக்கு ஓரிரு நாட்கள் முன்பே வெளியாகியிருந்தது என்பதை அவர்கள் பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன்.  ‘சான்ஸே இல்ல சான்ஸே இல்ல’ என்று அப்பெண் சொன்னாள்.  அவ்வியப்பு வாக்கியத்தை நான் அன்றுதான் முதல் முறையாகக் கேட்டேன்.  பின்னரே அது சென்னை கல்லூரி மாணவர்களிடம் பிரபலமாக இருந்த வாக்கியம் என அறிந்தேன்.  ‘இட் இஸ் ஆல் இன் எ கேம்’ என்ற சொற்றொடரும்  ‘ஓம் சாந்தி ஓம்’ என்ற பெயரும் என் மனதில் பதிவானது.  
சென்னை கிண்டியில் அவர்கள் மூவருமே இறங்கிச் சென்றனர். நான் அவர்களைப் பற்றி யோசித்தவாறு அசோகத்தூண் நிறுத்தத்தில் இறங்கினேன். அன்றைய தினம் போன்ற அழகான நாட்கள் அவர்களுக்கு கல்லூரிக் காலங்களுக்குப் பின் நீடிக்குமா என யோசித்தேன்.  துடிப்பு, உவகை மற்றும் உத்வேகம் ஆகியவை இளவயதில் தானாக வாய்க்கிறது.  இளமை கடந்ததும் நாமே அவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது.  
சில நாட்களில், எனது நண்பனின் திருமணத்துக்கு கோயம்புத்தூர் சென்றேன். நகரில் நுழைந்ததுமே ஓம் சாந்தி ஓம் திரைபடத்தின் சுவரொட்டிகள் வரவேற்றன.  எந்த திரையரங்கில் படம் ஓடுகிறது என பார்த்து வைத்துக் கொண்டேன்.  கனகதாரா திரையரங்கம்.  திருமண அரங்கில் ஒரு உள்ளூர்வாசியிடம் அவ்வரங்கு எங்குள்ளது எந்த பாதையில் செல்ல வேண்டும் என விசாரித்துக் கொண்டேன் காலையில் திருமணம் முடிந்ததும் மணமகனின் இல்லத்திற்கு வந்துவிட்டோம்.  மதியம் திருமணத்துக்கு வந்துருந்த ஒரு மயிலாடுதுறை வாசியை கூட்டிக்கொண்டு கனகதாரா திரையங்கம் சென்றேன்.  
ஓம் சாந்தி ஓம் சிறந்த இந்தித் திரைப்படங்களில் ஒன்று.  நாம் காணும் திரைபடத்தினுள் ஒரு திரைப்படம் உருவாவதன் கதை இருக்கும்.  கதைக்குள் கதை என்ற உத்தியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட திரைக்கதை. ஃபராகானின் இயக்கத்தின் ஆகச் சிறப்பான  படமும், மிக சிறந்த இந்தி திரைப்படங்களில் ஒன்றாக உள்ளதும் ஓம் சாந்தி ஓம்.  படத்தின் துவக்கத்திலிருந்துஅப்படத்தின் கதாநாயகி திரையை ஆக்கிரமித்திருந்தார். அவரது பெயரை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.  இந்தி சினிமாவையும் அதன் வணிக பாணிகளையும் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட இந்தி சினிமாவான ஓம் சாந்தி ஓம் ஒரு நிறைவான அனுபவத்தை அளித்தது.  படம் முடிந்து டைட்டில் கார்டில் கதாநாயகி நடிகை அறிமுகம் : தீபிகா படுகோனே – என குறிப்பிடப்பட்டடிருந்தார்.  இவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியவருக்கு இதுதான் முதல் படம் என்பது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.  தீபிகா இன்னும் பல ஆண்டுகள் சிறந்த நட்சத்திரமாய் நீடிப்பார் என நினைத்தேன்.  அவ்வாறே நிகழ்ந்தது.  ஓம் சாந்தி ஓம் திரைப்படத்திற்கு பின்னர் தீபிகா நடித்த ஹேப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களை பார்த்தேன்.  
சமீபத்தில் பாஜிராவ் மஸ்தானி திரைப்படம் பார்த்தேன்.  இன்று தீபிகா திரையுலகின் ஒரு முன்னணி நட்சத்திரம்.  யாருடைய திருமணத்திற்கு சென்றேனோ, அந்நண்பனுக்கு இப்போது ஹர்ஷவர்தன் என்ற ஆறு வயது மகன் இருக்கிறான்.  ஹர்ஷாவுக்கு தீபிகா நடித்த கோச்சடையான் படத்தில் வரும் எங்கே போகுதோ  வானம் அங்கே போகிறோம் நாமும் என்ற பாடல் பிடித்த பாடல்.  அப்பாடலில் உன் வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு என்ற வரி வரும்.  
ஹர்ஷா என்னிடம் ஒரு சூரியனை உண்டாக்கி என்ன செய்வது என்று கேட்டான்.  பின்னர் அவனே மாலையில் அஸ்தமிக்க விடாமல் செய்தால் இன்னும் கொஞ்ச நேரம் விளையாட முடியும் என்று பதிலும் சொன்னான்.  
பாஜிராவ் மஸ்தானியில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா மூவருமே பாஜிராவாகவும் மஸ்தானியாகவும் காசியாகவும் மாறியுள்ளனர்.  படம் முழுதும் உணர்ச்சி அலையலையாய் எழுந்து பிரவாகம் எடுக்கிறது.  ஒரு தளபதியின் உடல் மொழியும் தோரணைகளும் ரன்வீருக்கு சிறப்பாக அமைத்துள்ளது.  ஒரு மாவீரனின் நேசத்துக்குரியவள் எப்படி இருப்பாள்,  எப்படி யோசிப்பாள், எப்படி செயல் புரிவாள் என்பதை இயக்குனர் 
உணர்ச்சிவேகம் குறையாமல் எடுத்துள்ளார்.  பேஷ்வாவிடம் உதவி கேட்டு வரும்  காட்சியிலேயே பாஜிராவ் மஸ்தானியையும் மஸ்தானி பாஜிராவையும் மனதால் ஏற்கும் காட்சி திரைப்படத்தின் காட்சியமைப்பில் – இயக்கத்தில் – நடிகர்களின் நடிப்பில் – ஒரு நுண் கணத்தில் வெளிப்பட்டுள்ளது.  பாஜிராவ் குடும்பதினரின் அவமதிப்புகளை பொருட்படுத்தாது சாதுர்யமாக பதில் கூறுவது  ஒரு ராஜகுமாரியின் கதாபாத்திரத்துக்கு அழகு சேர்க்கிறது.  ஒரு பெண்ணின் 
நேசத்துக்காக தனது பதவி, அதிகாரம், குடும்பம் அனைத்தையும் இழப்பதுற்கு பாஜிராவ் தயாராவதற்கு இன்னொரு கோணமும் உண்டு : ஒரு பெண்ணின் நேசத்தை உணர முடியாத அவை எந்த மதிப்பும் அற்றவை.  உலகில் மதங்கள் அன்பை போதிக்கின்றன.  அனால் அன்பே இறைமை என படம் முடிகிறது.  தீபிகாவின் திரைத் தடத்தில் பாஜிராவ் மஸ்தானி ஒரு மாஸ்டர் 
மஸ்தானி சாவுக்கு அஞ்சாதவள் என்பதே பாஜிராவை நேசம் கொள்ள செய்கிறது.  சாவுக்கு அஞ்சாதவளால் விரும்பப்படுபவராக பாஜிராவ் இருக்கிறார்.  புத்தேல் கண்டைக் காப்பாற்ற பாஜிராவிடம் உதவி கேட்டு வரும்போது அவரை காண்கிறாள்.  சாவுக்கு சில கணங்களுக்கு முன்னாள் தன் குழந்தையிடம் யாரைப் போன்ற வீரனாவாய் என்று கேட்கிறாள்.  
குழந்தை, தந்தை பேஷ்வா பாஜிராவைப் போல என்று சொல்கிறான்.  ஒரு வீரனை நேசித்து ஒரு வீரனுக்குத் தாயாகி ஒரு வீராங்கனையாக வாழும் மஸ்தானி பாஜிராவையும் தாண்டி செல்கிறாள். 
திரைப்படத்தின் கலையில் இயக்குனர் ஒரு காட்சியை கற்பனையில் உருவாக்குகிறார்.  கலை இயக்குனர் அக்காட்சி நிகழும் வெளியை புறஉலகில் உருவாக்குகிறார்.  நடிகர்கள் இயக்குனரின் கற்பனையை உள்வாங்கி நடிப்புக்கலையை வெளிப்படுத்துகின்றனர்.  
ஒளிப்பதிவாளர் அதனை சினிமாவின் சட்டகத்துக்குள் கொண்டு வருகிறார்.  திரைக்கு முன்னும் பின்னும் பங்களிக்கும் நூற்றுக்கணக்கான கலைஞர்களும் தொழில்நுட்ப உதவியாளர்களும்தங்கள் பங்களிப்பை வழங்குகின்றனர்.  இவை அனைத்தும் ஒருங்கிணையும் ஒரு புள்ளி 
பார்வையாளனுக்கு கடத்தப்படும்போது கலாபூர்வமாக சினிமா முழுமையடைகிறது.  பாஜிராவ்  மஸ்தானி படம் முழுதும் இது நிகழ்ந்துள்ளதாக நான் எண்ணுவது உண்மையா அல்லது பிரமையா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. 
பாஜிராவ் மஸ்தானி திரைப்படக் குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் 
தெரிவித்துக் கொள்கிறேன்.

அங்கும் இங்கும்……..

அழகியசிங்கர்

பத்மஸ்ரீ விருதை தவிர்ப்பதாக ஜெயமோகன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.  இதைக் காரணமாக வைத்துக்கொண்டு சிலர் ஜெயமோகனை தாக்கியும் இன்னும் சிலர் அவரை வாழ்த்தியும் வலைதளத்தில் தங்கள் கருத்துகளை எழுதி உள்ளார்கள்.  இந்தப் பரிசை ஏற்பதால் அவருக்கு என்ன அவமதிப்புகளும், புறகணிப்புகளும் உருவாகும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.  
இதனால் ஜெயமோகனுக்கு எதிர்காலத்தில் யாரும் பரிசு தர யோஜனை செய்வார்கள்.  ஒரு பரிசு என்பது ஒருசிலரின் முயற்சியால்தான் கிடைக்கிறது.  இதை யாரும் பெறுவதற்கு பெரிய சிபாரிசு செய்யக் கூடாது.  அது தானாகவே கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் விட்டுவிட வேண்டும. ஜெயமோகனுக்கு இந்த விருது தானாகவே கிடைத்துள்ளது.  அதற்கு ஏன் வேண்டாம் என்று அவர் மறுக்கிறார் என்பது புரியவில்லை.  ஜெயமோகனுக்கு இந்த விருதை இந்த அரசு கொடுக்கவில்லை என்றால் வேற யார் பின்னால் அவருக்குக் கொடுப்பார்கள் என்பது கேள்விக்குறியே?
‘இந்து மெய்யியல்மேல் எனக்கிருக்கும் அழுத்தமான நம்பிக்கையை முன்வைத்தே எழுதி வருகிறேன்,’ என்று குறிப்பிடுகிறார்.  அப்படியிருக்கும்போது இந்த விருதை வாங்க ஏன் தயங்க வேண்டும்.  ஜெயமோகன் எது எழுதினாலும் அவரைத் தாக்க சிலரும், அவரை கொண்டாட சிலரும் இருந்துகொண்டே இருப்பார்கள்.  மனதில் படுவதை வெளிப்படுத்துவார்.  எழுத்தாளர் அகிலன் பெயரில் நடந்த நாவல் போட்டியில் தேர்வு செய்யப்பட்டு ஜெயமோகனின் ரப்பர் நாவலுக்குப் பரிசு கிடைத்தது. புத்தகத்தை நாவலுக்குப் பரிசு தரும் அமைப்பே அடித்து, அந்த நாவலுக்கான பரிசையும் கொடுத்தது.  ஜெயமோகன் பேசும்போது அகிலனை நாவலாசிரியராக தான் ஏற்கவில்லை என்று குறிப்பிட்டார்.  அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எனக்கு அவர் பேசியதைக் கேட்டு திகைப்பாக இருந்தது.
அவ்வாறு பேசியதால் என்ன ஆயிற்று என்றால் ஒவ்வொரு ஆண்டும் அகிலன் பெயரில் நடக்க வேண்டிய நாவல் போட்டி அந்த வருடத்துடன்  விடை பெற்று கொண்டது.  புதியதாக நாவல் எழுதுபவருடைய நாவலையும் பிரசுரம் செய்வதோடு, பரிசும் கொடுப்பதும் அத்துடன் நின்று விடடது.  இது புதியதாக எழுதுபவர்களுக்கு நஷ்டம்.   ஜெயமோகன் எதுவும் சொல்லாவிட்டால் ஒன்றும் நடந்திருக்காது.  
பரிசு அல்லது விருது பெறுவதற்கு தமிழ் நாட்டில் இன்னும் பல எழுத்தாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்காதா என்று ஏக்கத்துடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.   இதில் ஒரு விருதை வேண்டாமென்று மறுப்பவர்களுக்கு இனிமேல் க்யூவில் நிற்க வேண்டுமென்றால் கடைசியில்தான் போய் நிற்க வேண்டி வரும்.  இந்தக் க்யூவில் கடைசி ஆளாக நானும் நின்று கொண்டிருக்கிறேன்.
                                                                                     ********
இன்னும் சில தினங்களில் விருட்சம் இதழின் 99வது இதழை அச்சுக்குக் கொண்டு வந்து விடுவேன்.  போன இதழ் தயாரிக்கும்போது இதழ் செலவு கொஞ்சம் அதிகமாகி விட்டது.  இது குறித்து அச்சகத்தாருடன் பேச வேண்டும். மொத்தமாக ஒரு இதழை அச்சடிக்க இவ்வளவு கொடுத்து விடுங்கள் என்கிறார்கள்.  இதில் காகிதத்தின் விலை என்ன? பைன்டிங் விலை என்ன? ஒரு பாரம் அடிக்க எவ்வளவு ஆகும் என்பதெல்லாம் சொல்வதில்லை. திரும்பவும் நான் பழையபடி ஆரம்பிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். பேப்பர் விற்பவரிடம் சென்று பேப்பர் வாங்க வேண்டும்.  பைன்டரிடம் சென்று ஒரு பாரம் மடிக்க எவ்வளவு என்று பேரம் பேச வேண்டும். இப்போதெல்லாம் நெகடிவ் கிடையாது.  அதனால் பாரம் தயார் செய்ய எவ்வளவு என்று கேட்க வேண்டும்.  
ஆனால் ஒரு இதழ் விருட்சம் கொண்டு வர போதும் போதுமென்று ஆகிவிடும்.   எழுதுபவர்களே கிடையாது. இப் பத்திரிகையில் எழுதினால் யாருக்கும் சன்மானம் கிடையாது.  எழுதுபவர்களுக்கு எந்த நிச்சயமும் இல்லை.  பத்திரிகை எப்போது வரும் என்று சொல்ல முடியாது. நான் ஒருவனே நினைத்தால் எல்லாப் பக்கங்களையும் எழுதி விடலாம்.  ஆனால் அது தர்மம் இல்லை.  படிப்பவர்களை இப்படியெல்லாம் கஷ்டப் படுத்த விரும்பவில்லை. இப்படித்தான் 99 இதழ்கள் வந்து விட்டன.  100வது இதழ் ஏப்ரல் மாதம் வர உள்ளது.
                                                                               *****
இந்தப் பத்திக்கு நான் வைத்தத் தலைப்பைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.  முதலில் ஒரு சொல் கேளீரோ என்ற தலைப்பை வைத்தேன். அதை யாரோ பயன்படுத்துவதாக தோன்ற, வேண்டாம் என்று முடிவு எடுத்தேன். அடுத்தது அக்கம் பக்கம் என்ற பெயரை யோசித்தேன். அது கசடதபறா வில் நா கி பயன்படுத்திய தலைப்பு,  அங்கும் இங்கும்தான் பொருத்தமாக இருக்கும் என்று வைத்துள்ளேன்.
                                                                              (இன்னும் வரும்)

மறந்து போன பக்கங்கள்….

அழகியசிங்கர்






தி சோ வேணுகோபாலன் கோடை வயல் என்கிற தன் கவிதைத் தொகுதியை ந பிச்சமூர்த்திக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். அப்போது அவர் எழுதிய வரிகள் :
‘என் கவிதையின்
புதுக்குரலுக்கு
பிரசவம் பார்த்த
மருத்துவர்
திரு ந. பிச்சமூர்த்தி
அவர்களின்
அடிக்கமலங்களுக்கு’

ஒரு கவிதையைப் படிக்கும்போது ஒருமுறைக்கு இரண்டு முறை படிக்க வேண்டும்.  அப்படிப் படிக்கும்போது கவிதை படிப்பவர் நோக்கி கவிதை மெதுவாக நகர்ந்து வரும்.  வெள்ளம் பற்றி எழுதிய தி சோ வேணுகோபாலன் üவெள்ளம் சிவமதமா?ý என்கிறார்.  வெள்ளத்தைப் பற்றி சொல்ல வருகிறார் என்று நினைத்தாலும், சிவமதமா என்று ஏன் சொல்கிறார். இதற்குக் காரணம் எதாவது யாருக்காவது தெரியுமா?
கடைசியில் கவிதையை முடிக்கும்போது வெள்ளம் சிவமதமா? இல்லை சிவன்மதமா? என்று முடிக்கிறார்.  இரண்டு வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? புரியவில்லை.

 வெள்ளம்

வழியாடிக்
கரைசாடி
விம்மிப் புடைத்துறுமி
வருகின்ற
வெள்ளம் சிவமதமா?
இல்லை வெறுந்துயரா?

தாளம் தவறியதா?
கோளின் கதிபிசகா?

தாளம் தவறியதால்
கோளில் கதிபிசகால்
மேலே பனிமுடியில்
காலும் நொடித்ததனால்
கட்டுச் சடைபிரிய
கங்கை விடுதலையாய்
கொட்டி முழக்கிடுமோர்
கோரச் சிரிப்பொலியா?

வெள்ளம் சிவமதமா?
இல்லை வெறும்துயரா?

குடிசை பொடியாக்கிக்
குழைத்து நிறம்சிவந்த
வெள்ளம் சினன்நடமா?
இல்லை பயங்கரமா?

மீன் துள்ளுமேனி:
மாட்டுச் சுமையுண்டு
சுற்றிச் சடலங்கள்
சூழ்ந்து வருகின்ற
வெள்ளம் சிவமதமா?
இல்லை சிவன்மதமா?

புத்தக விமர்சனம் 15

அழகியசிங்கர்


சாகித்திய அகாதெமி விருது பெற்ற வங்க நாவல் அனுபவங்கள்.  இந்த நாவலை எழுதியவர் திவ்யேந்து பாலித்.  தமிழில் மொழி பெயர்த்தவர் புவனா நடராஜன்.  
திருமதி புவனா நடராஜன், 2009ம் ஆண்டில் மொழிபெயர்ப்புக்கான ‘சாகித்திய அகாதெமி விருது’ பெற்றவர்.  நல்லி திசை எட்டும் விருதையும் 2007ம் ஆண்டு பெற்றுள்ளார்.  22 மொழி பெயர்ப்பு நூல்களுக்கு ஆசிரியர் அவர்.  
திவ்யேநது பாலித்தின் நாவலான அனுபவ் என்ற நாவல்தான் அனுபவங்கள் என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள். பொதுவாக மொழிபெயர்ப்பில் உள்ள ஒரு படைப்பைப் படிக்கும்போது, அதன் மூல மொழியின் உணர்வை நிச்சயமாகப் பெற முடியாது.  ஆனாலும் மூல மொழியில் உள்ள ஒரு படைப்பை ஓரளவாவது நம்மால் உணர முடியும்.  இந்த நாவலைப் படிக்கும்போது இது ஒரு வங்க நாவல் என்ற ஒன்றை  தமிழில்தான்  படிக்கிறோம் என்று தோன்றியது.  
வங்க மொழியில் ஒரு நாவல் எப்படி எழுதப் படுகிறது என்பதை அறிய ஆவலாக இருந்தேன்.  வித்தியாசமாக எழுதப்பட்ட நாவல்.  220 பக்கங்கள் கொண்ட  நாவல் மிக எளிதாக எழுதப்பட்டுள்ளது. ஆத்ரேயி என்ற பெண்ணின் ஒத்தக் குரலாக  நாவல் எழுதப்பட்டுள்ளது.  முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை ஆத்ரேயிதான் தன் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டு போகிறாள்.   திறமையாக ஆசிரியர் விவரித்துக் கொண்டு போகிறார்.  கொஞ்சங்கூட அலுப்பில்லாமல்.   
லண்டனில் வசிக்கும் ராகுல் பானர்ஜி என்பவனை ஆத்ரேயி திருமணம் செய்து கொள்கிறாள்.  14 ஆண்டுகளாக லண்டனில் இன்னொரு பெண்ணுடன் மனைவி போன்ற ஒரு தொடர்பு அவனுக்கு உண்டு.  அத்துடன் இந்தியா வந்து ஆத்ரேயியைத் திருமணம் செய்து கொண்டு விடுகிறான்.   இரண்டு ஆண்டுகளில் அவனுடைய தொடர்பு தெரிந்து அவனிடமிருநது விவாகரத்துப் பெற்று திரும்பவும் கல்கத்தாவிற்கு தன் பிறந்த வீட்டிற்கு வந்து விடுகிறாள்.  
பிறந்த வீட்டில் அவளை எல்லோரும் அனுதாபத்துடன் அணுகுகிறார்கள்.  ஆனால் முன்புபோல் அவளால் அவர்களுடன் பழக முடியவில்லை.   தன்னால் அங்கு சுதந்திரமாக காலத்தை கழிக்க முடியாது என்று நினைக்கிறாள்.  
கதை இப்படி ஆரம்பமாகிறது.  ஆத்ரேயி ஒழுக்கக் கேடான கணவனை விட்டு விவாகரத்துப் பெற்று வந்துவிடுகிறாள்.  பிறந்த வீட்டிற்கு வந்தாலும் தன்மானததோடு தனித்து வாழ நினைக்கிறாள்.  அதனால் எதாவது ஒரு வேலையில் சேர நினைக்கிறாள்.  ஸிமார்ஸியில் அவள் மார்க்கெட்டிங் சர்வே வேலையில் அவளை பணியில் அமர்த்துகிறார்கள்.  இந்தியாவில் உள்ள வேசிகளைப் பற்றி சர்வே எடுத்து அவர்கள் வாழ்க்கை முறைகளைப் பற்றி கணக்கிடுவதுதான் அவளுடைய பணி.  ஆரம்பத்தில் இதைப் பற்றி ஆத்ரேயி கேள்விபடும்போது அதிர்ச்சி அடைகிறாள்.  எந்தப் பணியில் இருக்கிறோம் என்று யாராவது கேட்டால் அவளுக்குப் பதில் சொல்வது சங்கடமாக இருக்கும்.
உத்பல் என்பவனோடு அவளுக்கு மனம் ஒன்றி போகிறது.  ஆனால் வெளிப்படையாக தன் எண்ணத்தை உத்பலிடம் அவள் சொல்வதில்லை.  உத்பல் கான்சர் நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும்  தறுவாயில் இருக்கும் தேவிகா என்ற பெண்ணின் மீது நாட்டம் கொள்கிறான். அவளுடைய பெண்ணான தேவியை வளர்க்க முடிவெடுக்கிறான்.
அவள் அலுவலகத்தில் டாலி ùஸன்னுக்கும் ஆத்ரேயிக்கும் போட்டி ஏற்படுகிறது.  இவர்களுடைய மேலதிகாரியான கல்பதரு டாலி ஸன்னுடன் நெருங்கி பழகுவதிலிருந்து விலகி ஆத்ரேயிடம் நெருங்கி பழகும் சூழ்நிலை உண்டாகிறது. இதைப் புரிந்து கொண்ட டாலி ஸன் அவளுடன் பழகும்போது கடுமையாக நடந்து கொள்கிறாள். இந்த இக் கட்டான சூழ்நிலையிலிருந்து ஆத்ரேயி அதிலிருந்து விலகி விடுவது என்று தீர்மானிக்கிறாள்.  
இந்த வேலை அவளுக்கு சுதந்திரத்தைக் கொடுத்தாலும், விலகுவதுதான் சரியான தீர்ப்பு என்று நினைக்கிறாள்.  கல்பதரு தாஸ்குப்தாவின் காரியதரிசியினிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டு வேறு எதுவும் பேசாமல் யாரையும் சந்திக்காமல் வெளியே வந்து விடுகிறாள்.  
ஒரு வித மௌனம் ஆத்ரேயைப் பிடித்துக் கொள்கிறது.  இனி எங்கே போவாள்? யாரிடம் போவாள்? அடுத்த கணம் அவள் கால்கள் முன்னேறி நடந்தன.  அவள் மட்டும் இந்த உலகத்தில் தனியாக இல்லை என்று அவள் நினைத்தாள்?
ஒரு பெண்ணின் தனிப்பட்ட உணர்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.  அவள் நினைத்தால் அவள் எப்படி வேணடுமானாலும் வாழலாம்.  ஆனால் அதில் அவளுக்கு விருப்பமில்லை.  எதையும் தொந்தரவு செய்து பெற அவள் முயற்சி செய்யவில்லை.
இந்த நாவலில் இந்தியாவில் வேசி தொழில் செய்பவர்களின் பல அனுபவங்கள் செக்ஸ் ஒர்க்கர்ஸின் வாழ்க்கை முறைகளைப் பற்றிய ரிப்போர்ட் பேட்டிகள் பலவும் வெளிப்படுகின்றன.  பம்பாய் மாநகரத்தின் சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்த பதினான்கே வயதான ஒரு அழகான பெண்ணைப் பற்றிய குறிப்புகளும் வெளிப்படுத்துகின்றன.  தொண்டு நிறுவனம் எப்படி அந்தப் பெண்ணை அதிலிருந்து விடுவித்துக் காப்பாற்றுகிறது என்றெல்லாம் சொல்லப் படுகிறது.  
படிக்க சுவாரசியமாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.  சாகித்திய அகாதெமி விருது பெற்ற வங்க நாவல் இது.
அனுபவங்கள் – மூலம் தீவ்யேந்து பாலித் – தமிழாக்கம் : புவனா நடராஜன் – நாவல் – வெளியீடு : சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443 அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18 விலை : ரூ.100 – பக்கங்கள் : 220  
 

மறந்து போன பக்கங்கள்…2


அழகியசிங்கர்

தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள இரண்டாவது கவிதை இது.  இத் தொகுதியில் மொத்தம் 29 கவிதைகள் உள்ளன.  ஒவ்வொரு கவிதையாகக் கொண்டு வர எண்ணத்தில் உள்ளேன். படித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன்.

நான் கவியானேன்

முகக் கண்ணாடியில்
முனைந்து பார்த்தேன்.
கண்களில் கவனமாய்
கவிஞனைத் தேடினேன்.
புருவ மத்தியில்
புலப்படவில்லை
சிந்தனைக் கொக்கி
சுருங்கிடும் நெற்றியில்
கோடுகட் கிடையில்
தேடினேன்:  கண்டிலன்.
நாசியின் நீளம்
சிந்தனைக் கறிகுறி
என்றனர்: அளந்தேன்.
அளவிலும் தோல்வியே!
என்ன தெரிந்தது?
நானும் மக்களின்
தொகுதியில் ஒருவனாய்
பேதம் தவிர்த்துக்
கலந்து நிற்பதே!

கவிதை பின் எப்படிக்
கனன்றுயிர்க் கின்றது?
காகிதம் எடுத்து
வேண்டுமென் றெழுத
விரும்பினாலும் வராத
வித்தையை எங்ஙனம்
விளைவித்தேன் நான்?
என்னுளே ஏதோ
குமுறிச் சிரித்தது:

பித்தோ ? வெறியோ?
எழுத்திலே வேகம்
ஏறித் துடித்தது:
நான் எதற்கெழுதினேன்?
என்செயல் இதிலே
எதுவும் இல்லை.
ஏனெனில் எனக்கே
புரிந்திட வில்லை!
ஒருக்கால் மாந்தர்
ஒவ்வொருவருமிக்
கர்ப்ப வேதனை
கொண்டவர் தாமோ?
ஏதோ சொல்ல
எழுதுகோல் எடுத்திங்கு
எழுதிய பின்னர்
ஏமாறிப் போய்
புரியாப் புதிராய்
உலவிட விட்டுக்
காகிதம் கிறுக்கிக்
‘கவி-யானேனே!’

மறதி என்கிற பிசாசு….

அழகியசிங்கர்


நேற்று காலையில் எழுந்தவுடன் கீழே போய் தண்ணீர் போட வேண்டும் என்று மாடிப்படிக்கட்டுகளில் இறங்கினேன்.  சின்ன கேட் திறந்திருந்தது. யாரோ சின்ன கேட்டைத் திறந்து வைத்து விட்டுப் போய்விட்டார்கள் என்று நினைத்தபடி படிக்கட்டுகளைத் தாண்டியபடி வந்தேன்.  கீழ் படியைத் தாண்டிவிட்டேன் என்று நினைத்து காலை வைத்தேன். தடாரென்று கீழே விழுந்தேன்.  முட்டியில் சிராய்ப்பு.  ஒரு நிமிடம் விழுந்த வாக்கில் இருந்தேன். அபபோதுதான் ஏன் இப்படி மறந்து போய் காலை வைத்தேன் என்று யோசிக்க ஆரமபித்தேன்.  
மறதி மன்னன் என்று யாருக்காவது பட்டம் கொடுக்க நினைத்தால் எனக்குக் கொடுக்கலாம்.  அவ்வளவு மறதிக்காரன்.  காலம் காலமாக இந்த மறதியுடன் போராடிக் கொண்டிருக்கிறேன்.   எங்கள் அலுவலகத்தில் டௌட் வெங்கட்ராமன் என்ற ஒருவர் உண்டு. பலரும் அவரை டௌட் வெங்கட்ராமன் என்று சொல்லும்போது ஏன் அப்படி குறிப்பிடுகிறார்கள் என்று சொன்னவர்களைக் கேட்டேன்.
”அலுவலகக் கதவுகளை எல்லாம் பூட்டிவிட்டு வெளியில் வந்து விடுவார்.  அவருக்கு திடீரென்று சந்தேகம் வந்துவிடும்.  உடனே கதவு அருகே போய்விட்டு பூட்டை இழுத்துப் பார்ப்பார்,” என்றார்கள்.
மனதிற்குள் நான் சிரித்துக்கொண்டேன்.  அவருடைய வாரிசு நானாகத்தான் இருப்பேன் என்று சொல்லிக்கொண்டேன். நான் எப்படி பள்ளிக்கூடத்தில் கல்லூரிகளில் பாடங்களைப் படித்துப் பாஸ் செய்தேன் என்று யோசிப்பேன்.  சுத்தமாக என் மனதில் ஒன்று கூட நிற்காது.  மூளையில் எதுவும் பளிச்சிடாது.  திருப்பூர் கிருஷ்ணன் அன்று நளன் சரிதத்தை இரண்டு மணிநேரம் மேல்  பிரசங்கம் செய்துகொண்டே போனார்.  அங்கங்கே நளன் சரிதப் பாடல்களை மனப்பாடமாக சொல்லிக்கொண்டே போனார்.  அவர் திறமையைக் கண்டு நான் வியந்தேன்.  என்னால் அதுமாதிரி ஒன்றும் செய்ய முடியாது.  ஆனால் என்னால் பார்த்து எழுதிதான் படிக்க முடியும். 
பல விஷயங்களை நான் இப்படித்தான் மறந்திருக்கிறேன்.  இளமை காலததில் நடநத நிகழ்ச்சியை வீட்டில் யாராவது ஞாபகப்படுத்தினால் என்னால் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க முடியாது.  எனக்கே சொன்னவர மீது ஆச்சரியமாக இருக்கும்.  அலுவலகததில் பணிபுரிநதாலும அலுவலகப் போன் எண் ஞாபகத்திற்கு வராது.  ஆனால் இலக்கிய நண்பர் கட்டுரையில் எழுதியதைப போல கல்யாண தேதி ஞாபகத்திலிருந்து மறந்து விடாது.  எந்த இடத்தில் திருமணம் நடந்தது என்று கூட சொல்ல முடியும்.  என் பெண் எப்போது பிறந்தாள், பையன் எப்போது பிறந்தான் என்பதையெல்லாம சொல்ல முடியும்.  சமீபத்தில் பிறந்த பேத்தியின் தேதியை எளிதாக ஞாபகத்தில் வைத்திருக்க முடியும். ஏன் எனில் இந்த ஆண்டு முதல்தேதிதான் பிறந்திருக்கிறாள்.
ஒருமுறை வல்லிக்கண்ணன் நான் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசினார்.  மூச்சு விடாமல் அவர் படித்த அத்தனை தமிழ் நாவல்களைப் பற்றி முன் கதைச் சுருக்கம் மாதிரி சொல்லிக்கொண்டே போனார். நான் ஆச்சரியப்பட்டுவிட்டேன்.  பல ஆண்டுகளாக அவர் படித்தப் புத்தகங்ளை அப்படி சொல்லிக்கொண்டே போனார். ஆனால் என்னால் அதுமாதிரி முடியாது. நான் ஒரு புத்தகத்தைப் படித்தால்அதைப் பற்றி உடனடியாக எழுதி விட வேண்டும். எப்போதாவது அந்தக் குறிப்புகள் திரும்பவும் படிக்கும் போது நான் என்ன படித்தேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முயற்சி செய்யமுடியும்.  ஒரு முறை உ வே சாமிநாதய்யர் எழுதிய என் சரிதம் புத்தகத்தைப் படித்துக்கொண்டே வந்தேன்.  அதை ஒரே நாளில் படிக்கவில்லை.  சிறிது சிறிதாக பலநாட்களாகப் படித்துக்கொண்டு வந்தேன். என் கூட முன்பு வாக் பண்ண வந்த நண்பர் ஒருவர் அந்தப் புத்தகத்திலிருந்து எதாவது ஒரு கேள்வி கேட்பார்.  நான் படித்தப் பக்கங்களில்தான் அந்த கேள்வி இருக்கும்.  எனக்கு ஞாபகத்தில் இருக்காது.  அவர் கிண்டல் செய்வார்.  அதனால்தான் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம் படிக்கும்போது நான் இன்னும் ஒருமுறை புரட்டிக் கொண்டு படிக்கவேண்டும்.
எனக்குத் தெரிந்து அசோகமித்திரன் நன்றாக ஞாபகம் வைத்துக் கொணடிருபபார்.  ஜெயமோகனைப் பற்றி ஒரு நண்பர் சொன்னார்.  அவர் எதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வார் என்று.  ஒருவரைப் பார்த்தார் என்றால் அவர் பார்த்த சமயத்தில் என்ன பேசினார் என்பதை ஞாபகத்திலிருந்து சொல்வார் என்று.  ஜெயமோகனைப் பார்த்தால் அது உண்மையா என்று கேட்கவேண்டும். 
நான் எத்தனையோ கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன்.  கூட்டத்தின் சாரம்சத்தை உடனே பதிவு செய்யவில்லை என்றால், கூட்டம் என்னை விட்டுப் போய்விடும்.  காஞ்சிபுரத்தில் வே நாராயணன் என்ற நண்பர் இருந்தார்.  அவர் பல இலக்கியக் கூட்டங்களை நடத்தினார்.  கூட்டம் நடந்து முடிந்தவுடன் அந்தக் கூட்டத்தில் யார் யார் என்ன பேசினார் என்பதை மட்டுமல்ல, கூட்டத்தில் கலந்து கொண்டவர் பேசியதையும் ஒப்பிப்பார்.  
இன்னொரு நண்பர் இருக்கிறார் அவர் ஒரு சிறுகதை படித்தாலும், ஒரு கவிதை படித்தாலும் அப்படியே திருப்பிச் சொல்லும் ஆற்றல் பெற்றவர்.  அவரை நன்கு தெரிந்த என் உறவினர் என்னிடம் சொல்வார்: üஅவருக்கு காமெரா ப்ரெயின்,ý என்று.  சுவாமி விவேகானந்தரைப் பற்றி ஒரு கதை உண்டு.  அது உண்மையா பொய்யா என்பது தெரியாது.  ஒரு புத்தகத்தை விவேகானந்தர் புரட்டிப் பார்ப்பாராம். பின் அப்படியே அந்தப் புத்தகத்திலிருந்து எந்தப் பகுதியில் எது கேட்டாலும் பதில் சொல்வாராம்.  எப்படி?
நான் 300 கவிதைகள் எழுதியிருக்கிறேன்.  இரண்டு புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கிறேன்.  ஆனால் பேப்பரில் எழுதிக்கொண்டிருக்கும்போது என் கவிதை எனக்குத் தெரியும்.  பின் மனப்பாடமாக அந்தக் கவிதை எனக்கு வராது.  மேலும் இன்னும் ஒரு முறை அந்தக் கவிதையைத் திருப்பி எழுதினால் வேறு வேறு வரிகள் வந்து விழும்.  அல்லது எழுத முடியாமல் போய்விடும்.  என் கவிதையைப் படித்த யாராவது ஒருவர் (அப்படி யாரும் படித்து விட மாட்டார்கள் என்பதில் நிச்சயம் நம்பிக்கை உண்டு) என் கவிதையைத் திருப்பி சொன்னால் எனக்கே என்னை நம்ப முடியாமல் இருக்கும்.
இருந்தாலும் ஞாபக மறதியைப் பற்றி எளிதாக ஞாபகம் வைத்துக் கொள்ளும்படி நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.
இன்றுவரை 

ஏதோ ஒன்று 
ஏதோ ஒன்று
ஏதோ ஒன்று 
ஏதோ ஒன்று 
ஏதோ ஒன்று 
ஏதோ ஒன்று 
ஏதோ ஒன்று 
ஏதோ ஒன்று 
ஏதோ ஒன்று 
ஏதோ ஒன்று 
சொல்லாமலே………
இந்தக் கவிதையில் ஒரு குடும்ப ரகசியத்தை யாரோ ஒருவர் யாருக்கோ சொல்கிறார்.  சொன்னவர் ரகசியத்தை யாரிடமும் சொல்லாதீர்கள் என்று எச்சரித்துச் சொல்கிறார்.  கேட்டவர் சரி சரி என்கிறார்.  பின் பல ஆண்டுகள் கழித்து யோசிக்கும்போது ரகசியத்தைச் சொல்லாதீர்கள் என்று சொன்னதுதான் கேடட்டவருக்கு ஞாபகத்தில் இருக்கிறது.  ரகசியம் ஞாபகத்தில் இல்லை.
ஆனால் எனக்கு சில விஷயங்களை மறப்பதில்லை.  ஆர்யா கவுடர் ரோடில் பிள்ளையார் கோயில் பக்கத்தில் ஒரு பேப்பர் கடை இருக்கும்,  அந்தக் கடையில் எல்லாப் பத்திரிகைகளும் கிடைக்கும்.  குமுதம், ஆனந்தவிகடன் மாத்திரமில்லை.  கணையாழி, காட்சிப்பிழை, காலச்சுவடு, உயிர்மை போன்ற பத்திரிகைகளும் இருக்கும்.  அங்கே என் விருட்சம் இதழ்களும் இருக்கட்டும் என்று சில பிரதிகள் விற்பதற்குக் கொடுத்தேன்.
  மேலும் நான் வெளியிட்ட புத்தகங்களையும் ஒரு பிரதி விதம் விற்கக் கொடுத்தேன். ஏன்என்றால் கிழக்குப் பதிப்பகப் புத்தகங்கள் அங்கே கண்களில் பளிச்சிட்டன.  ஆனால் என் விருட்சம் பத்திரிகை மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் என்று பெயர், 4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது 5 மாதங்களுக்கு ஒரு முறை சிலசமயம் 6 மாதங்களுக்கு ஒரு முறை என்றெல்லாம் வரத் தொடங்கி விடும்.  இப்போது 99வது இதழ் வர வேண்டும். 
அந்தக்கடைக்காரரைப் பார்த்து அடுத்த இதழ் கொண்டு வரும்போது கடையில் கொடுக்கும்போது, கண்ணிலே படாத அந்தக் கடை உரிமையாளரை தப்பித் தவறி பார்த்தால் எவ்வளவு கேவலமாகப் பார்ப்பான் என்று யாராலும் வர்ணித்து விட முடியாது.  அவன் முகத்தில் நான் விற்ற என் விருட்சம் இதழிற்கு பணம் கேட்பேன் என்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கும்.  அவன் கடையில் நிறையா பூனைகள் இருக்கும்.  பூனைகளைக் கொஞ்சிக்கொண்டே இருப்பான்.  ஆனால் நிமிர்ந்து என்னிடம் எதுவும் பேச மாட்டான்.  ‘பிறகு கணக்குப் பார்த்து தருகிறேன்.. உங்கள் பத்திரிகையைத் தேட வேண்டும்.’ என்று  சொல்வதற்குள் அவன் அப்படி பிகு பண்ணிக்கொள்வான்.  அதை நம்பி நீங்கள் போய்விடுவீர்கள்.   பின் அவனிடமிருந்து நீங்கள் பணமே வாங்க முடியாது.  சரி அந்தத் தொகை பெரியா தொகையா. ரூ30 கூட கிடையாது. புத்தகங்களைச் சேர்த்தால் இன்னும் நூறோ இருநூறோ தேறும்.  அவனைப் பார்ப்பதே கஷ்டம்.  நான் வரும்போது அவன் கடையில் பணிபுரியும் பணியாளர்கள்தான் இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால் அவரிடம் கேளுங்கள் என்பார்கள்.  அவரிடம்தான் கேட்கவும் முடியவில்லை, பார்க்கவும் முடியவில்லையே என்றால் எனக்குத் தெரியாது என்று அழகான பதிலை சொல்லி விடுவார்கள். 
      ஒருமுறை அந்தப் பணியாளரிடம் நான் சண்டையே போட்டேன். பெரிய சீன் ஆகிவிட்டது.  அங்கு பத்திரிகை வாங்க வந்தவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். அங்கிருந்து வந்தபிறகுதான் யோசனை செய்தேன்.  ஏன் இதுமாதிரி செய்தோம் என்று. மனமே அமைதியாய் இரு என்று சொல்லிக் கொண்டேன். பின் அந்தக் கடைக்கே போகவில்லை.  அந்தக் கடையில் புத்தகப் பரிவர்த்தனை செய்யவில்லை.  
ஆனால் ஒவ்வொரு முறையும் நான் அந்தக் கடையைத் தாண்டும்போது எரிச்சலுடன் போவேன். ஆனால் அந்த எரிச்சலும் என்னை விட்டுப் போக ஞாபகமறதிதான் உதவ வேண்டும்.