கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து

அழகியசிங்கர் 

2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு புத்தகக் காட்சியில் என்னுடைய ஸ்டாலில் ராம் காலனி என்ற என் சிறுகதைத் தொகுதியை  அசோகமித்திரன் வெளியிட அதை ஞானக்கூத்தன் பெற்றுக் கொள்கிறார்.  அன்று என் ஸ்டாலில் ஏகப்பட்ட கூட்டம்.  சா கந்தசாமி, நாஞ்சில்நாடன், மலர் மன்னன், க்ருஷாங்கினி, ஆர் ராஜகோபாலன், அம்ஷன்குமார் என்று பல இலக்கிய நண்பர்கள் வந்திருந்தார்கள்.  ஒரு பிரதியை என் மனைவியின் சகோதரி பெற்றுக்கொண்டார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து புத்தகக் காட்சியில் பெருந்தேவியின் புத்தக வெளியீட்டில் கலந்து கொள்ள பலரை அழைத்துள்ளேன்.  
இன்று மாலை 6.30 மணிக்கு அழுக்கு சாக்ஸ் என்ற புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு ஸ்டால் 594-ல் நாம் திரும்பவும் சந்திக்கிறோம்.

இரண்டு சந்தன மாலைகள்

அழகியசிங்கர்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் பதவி மூப்பு அடையும்போது என் அலுவலக நண்பர்கள் எனக்கு சந்தன மாலை அணிவித்தார்கள்.  அதை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.  ஒருமுறை  விசிறி சாமியாரைப் பார்க்க திருவண்ணாமலை போனபோது அவர் தங்கிருந்த வீட்டு வாசலில் உள்ள ஆணியில் ரோஜாப்பூ மாலைகளை தூர எறியாமல் மாட்டியிருந்தார்கள்.  ரோஜாப்பூ மாலைகள் நிறம் இழந்து கருத்த நிறத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.  ஏன் அதைத் தூக்கி எறியாமல் மாட்டியிருந்தார்கள் என்று யோசித்துக் கொண்டிருப்பேன்.  விசிறி சாமியார் ஒரு யோகி.  அதற்கு எதாவது காரணம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால் சந்தன மாலை அப்படி அல்ல.  அதை எத்தனை ஆண்டுகளாக இருந்தாலும் பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனக்கு அணிவித்த அந்த சந்தன மாலையை இன்னும் தூக்கி எறியாமல் வைத்திருக்கிறேன்.
இப்போது இன்னொரு சந்தன மாலை கிடைத்திருக்கிறது.  படிகம் என்ற நவீன கவிதைக்கான இதழ் நடத்தும் இலக்கியக் கூட்டத்தில்.  எனக்கு ஆச்சரியம்.  பெரும்பாலும் எந்த இலக்கியக் கூட்டங்களிலும் நான் பார்வையாளனாகத்தான் இருப்பேன்.  பேசுபவனாக இருந்தாலும் மேடையில் அமர்வதில் சங்கடப்பட்டு அமர்வேன்.  ஆனால் என்னை மேடையில் உட்கார வைத்து சந்தனமாலையைக் கொடுத்து கௌரவப்படுத்திய படிகம் இதழிற்கு என் நன்றி உரித்தாகும். இதுவரை எந்த இலக்கியக் கூட்டத்திலும் (கூப்பிடுவதே கஷ்டம்) கூப்பிட்டாலும் மேடையில் உட்கார வைத்தாலும் மாலையெல்லாம் போட மாட்டார்கள்.  நான் பத்திரப்படுத்த இரண்டாவது சந்தன மாலை கிடைத்துவிட்டதாக நினைக்கிறேன்.  படிகம் இலக்கியக் குழுவிற்கு என் நன்றி.  சந்தன மாலை மட்டுமல்லாமல் மூன்று கவிதைப் புத்தகங்கள் எனக்குக் கிடைத்தன.  லக்ஷ்மி மணிவண்ணன் எழுதிய கேட்பவரே என்ற கவிதைத் தொகுதி கிடைத்தது.  320பக்கங்கள் கொண்ட தொகுதி இது. ரொம்ப நாட்களாக லக்ஷ்மி மணிவண்ணன் எழுதுவதை கவனித்து வருகிறேன்.  இத் தொகுப்பில் உள்ள எல்லாக் கவிதைகளையும் வாசித்து அது குறித்து எழுத வேண்டும்.  அதேபோல் கைலாஷ் சிவன் எழுதிய சூனியப்பிளவு என்ற கவிதைத் தொகுதி.  132 பக்கங்கள் கொண்ட தொகுப்பு.  இதையும் வாசிக்க வேண்டும்.  மூன்றாவது தொகுப்பாக ராஜன் ஆத்தியப்பன் எழுதிய கருவிகளின் ஞாயிறு என்ற தொகுப்பு.  80 பக்கம் கொண்ட தொகுப்பு இது.  இம் மூன்று புத்தகங்களையும் படித்து எழுத வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு கவிதைப் புத்தகத்தைப் படிக்கும்போது அது கொடுக்கும் உத்வேகம் என்னையும கவிதை எழுதத் தூண்டும் என்று நினைக்கிறேன். 
நேற்று நடந்த கூட்டத்தில் நான் சற்று தாமதமாகத்தான் சென்றேன்.  என் நெடுநாளைய நண்பர் சண்முகம் பேசிக்கொண்டிருந்தபோது சென்றேன். அதனால் மற்றவர்கள் பேசியதைக் கேட்கவில்லை.  முக்கிய நிகழ்ச்சியாக கவிதை வாசிப்பு கூட்டம் நடந்தது.  எல்லோருடைய கவிதைகளையும் வாசிக்கக் கேட்டேன்.  கவிதையை வாசிக்கக் கேட்கும்போது கேட்பவர்களுக்கு என்ன மனநிலையை ஏற்படுத்தும்.  கவிதையை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியுமா?  எல்லோரும் கவிதைகள் வாசிக்கும்போது அந் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.  எனக்கும் கவிதை வாசிக்க வேண்டுமென்று தோன்றியது.
ஒருவர் ஒரு கவிதையை வாசிக்கும்போது பார்வையாளர்கள் அக் கவிதையைக் குறித்து என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள உடனடியாக வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது.  லக்ஷ்மி மணிவண்ணன் முதலில் கவிதை வாசித்தார்.  அவர் கவிதையை சத்தமாக அவர் வாசித்தபோது பார்வையாளர் மனநிலை அதை எப்படி உணர்ந்திருக்க முடியும் என்பது தெரியவில்லை. பொதுவாக ஒரு பார்வையாளன் பார்வையில் பல கவிதைகளை அவர் எழுதியிருப்பதாக தோன்றியது.  அவர் முதலில் வாசித்த ஒரு கவிதையில் முதல் ஐந்து வரிகளை அவர் படித்தபோது  என்னால் ரசிக்க முடியவில்லை.  இது என் ரசனையின் குறைபாடாக இருக்கலாம்.
ஒரு கவிதை கேட்பவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்க முடியுமா? முடியாது என்றுதான் சொல்ல தோன்றுகிறது.  

அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு

நான் இந்த மாதம் வரை 5 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன்.  ஐந்தாவது புத்தகம் அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு.  232 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இது.  கதைகளும் கட்டுரைகளும் கலந்த தொகுப்பு.  இத் தொகுப்பைப் படிப்பவருக்கு  தெரியும்.  அசோகமித்திரன் எதை கதையாக எழுதியிருக்கிறார், கட்டுரையாக எழுதியிருக்கிறார் என்று.  
ஒரு கூட்டத்தில் ஒரு எழுத்தாளர் அசோகமித்திரன் கதை ஒன்றைப் படித்துவிட்டு அது கதை அல்ல கட்டுரை என்று உரத்து சத்தம் போட்டு வாதம் செய்தார்.  அசோகமித்திரன் என்ன பதில் சொல்கிறார் என்றும் எதிர்பார்த்தார்.  உங்கள் பார்வையில் அப்படி பட்டால் நான் இனிமேல் ஒன்றும் செய்வதற்கில்லை என்று குறிப்பிட்டார்.
அசோகமித்தரன் போன்ற படைப்பாளிக்கு எது கதையாக வருகிறது, எது கட்டுரைகயாக வருகிறது என்பது நன்றாகவே தெரியும்.  நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் கன்னிமேரா லைப்ரரியில் பழைய பத்திரிகைகளின் இதழ்களைப் பார்க்க நேரிட்டது.  அப்போது ஒரு பெண் எழுத்தாளரின் கதையைப் படித்தேன்.  என்னால் படிக்கவே முடியவில்லை.  ஆனால் அவர் பின்னால் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தார்.  அதே அசோகமித்திரனின் பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய கதையை இப்போது எடுத்துப் படிக்கும்போது, அதன் புதுத்தன்மை மெருகு குலையாமல் இருக்கும்.
கதையும் கட்டுரையும் கலந்த இந்தத் தொகுப்பு ஒரு அந்தர்கமானதொரு தொகுப்பு தான்.  இதில் முக்கியமாக இன்கிரிட் பெர்க்மன் சுயசரிதையைப் பற்றி எழுதியிருக்கிறார். கல்கியும் தேவனும் என்ற ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  
கல்கியின் நிழலிலேயே தேவன் இருந்து வந்தார்.  üகல்கிக்கும் தேவன் மாதிரி ஒருவர் ஆனந்தவிகடனை விட்டு விலகுவதில் பெரிய வருத்தம் இருக்காது. தனக்குக் கீழே உள்ளவன் நிறைய ஆற்றல் படைத்தவனாக இருந்தால் எந்த நேரம் தன்னையே கவிழ்த்து விடுவானோ என்ற அச்சம் பத்திரிகைத் துறையில் தவிர்க்க முடியாதது.  பின்னொரு காலத்தில் தேவனுக்கும் இதே பெயர் கிடைத்ததுý என்று அசோகமித்திரன் இப் புத்தகத்தின் 55வது பக்கத்தில் குறிப்பிடுகிறார்.
இப்படி படிக்க தூண்டுகிற கட்டுரைகளும் கதைகளும் கொண்ட தொகுப்புதான் இது  
கணவன். மகள். மகன் என்ற கதை எனக்குப் பிடித்த கதை.  எப்படி மனைவியை கணவன் அலட்சியப்படுத்துகிறான் என்பதையும், மகள் அம்மாவை எப்படி அலட்சியப்படுத்துகிறாள் என்பதையும், மகன் தான் குடிப்பதை அம்மாவிடம் ஏன் மறைக்கிறான் என்பதையும் விவரித்துக் கொண்டு போகிறார்.
ஒரு புத்தகத்தை எப்போதும் எடுத்து வாசிக்க வேண்டுமா , அந்தரங்கமானதொரு தொகுப்பு அப்படிப்பட்ட ஒன்றுதான் என்பதில் சந்தேகமே இல்லை.  விருட்சம் வெளியீடாக ஐந்தாவது புத்தகமாக இதைக் கொண்டு வந்துள்ளேன்.

வம்சி முதல் விருட்சம் வரை….

அழகியசிங்கர் 

நேற்று சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கி விட்டது.  இம் முறை தீவுத் திடலில்.  கிட்டத்தட்ட மாலை 4 மணிக்குத்தான் சென்றேன்.  புத்தகக் கட்டுகளை எடுத்துக்கொண்டு என் ஸ்டாலில் கொண்டு போவதற்குள் படாதபாடு பட வேண்டியிருந்தது.  ஏனென்றால் என் ஸ்டால் இருக்கும் வரிசை ரொம்ப நீளமானது. அதில் கடைசீ.
புத்தகம் வைக்க பெரிய மேஜைகளைத் தேட வேண்டியிருந்தது. ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக மிக நிதானமாகத்தான் எல்லாவற்றையும் வைக்க வேண்டியிருந்தது.  எனக்கு உதவி செய்யும் கிருபானந்தன் எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் மடமடவென்று புத்தகங்கள் எல்லாவற்றையும் அடுக்கி வைத்து விட்டார்.  நாங்கள் இருந்த பக்கத்தில் காற்றே இல்லை.   ஒரு பேனிலிருந்து வரும் காற்றை நம்பி ப்ளாஸ்டிக் நாற்காலியை நகர்த்த வேண்டியிருந்தது.  பில்  போட சரியான மேஜை கிடைக்கவில்லை. குப்குப்பென்று வியர்த்தது.  என்னால் நிற்கவே முடியவில்லை.  உட்கார்ந்தே இருக்க வேண்டுமென்று தோன்றியது.  
நேற்று என்னை யாராவது பார்த்தால் பெரிய நோயில் அடிப்பட்டவன் போல் இருக்கிறான் என்று நினைத்துக்கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.  தீவுத்திடலில் பரவிய வெப்பத்தை முழுதாக உணர்ந்தேன்.  
என் வரிசையில் முதலில் வம்சி என்ற கடை இருந்தது.  எனக்கு ஆச்சரியம்.  அதைத் தாண்டி மெதுவாக நடந்து (என்னால் மெதுவாகத்தான் நடந்து வர முடியும்.  வேகமாக ஓட முடியாது) வரும்போது காலச்சுவடு கடை இருந்தது.  நமக்கு உறுதுணையாக இரண்டு கடைகள் என்று நினைத்தேன். 
இன்னும் தாண்டி வந்தேன்.  கிழக்கு கடையும் காட்சி அளித்தது.  சரிதான் நல்லதுதான் என்று நினைத்தேன்.  இன்னும் தள்ளி நடந்து வந்தேன்.  உயிர்மை கடை இருந்தது.  ஆச்சரியமாகி விட்டது.  இன்னும் தள்ளி நடந்தேன்.   சந்தியா பதிப்பகம் கடை இருந்தது.  ஒரே வரிசையிலா என்ற பிரமிப்பு என் மனதிலிருந்து ஓயவில்லை. புலம் என்ற கடையும கண்ணில் பட்டது. இன்னும் சந்று தூரத்தில் நிழல் பத்திரிகை ஆசிரியர் நடத்தும் முன்றில் கடை.
  அவ்வளவுதான் எல்லாம் இலக்கியச் சந்திப்பு நிகழ்த்தும் கடைகளாக இருந்தன.  இறுதியில் விருட்சம் கடை.  எல்லாக் கடைகளிலும் கூட்டங்கள் வரும்.  அந்தக் கூட்டங்களிலிருந்து ஒருசிலராவது விருட்சம் கடைக்கு வராமல் இருக்க மாட்டார்கள்.  நிழல் ஆசிரியர் திருநாவுக்கரரிடம் கேட்டேன். ஒரு சின்ன படம் எடுக்க ஐந்தாயிரம் போதுமா?  
‘டிசம்பர் மாதம் நடத்தும் வகுப்புக்கு வாருங்கள்.  எல்லாம் சொல்லித் தருகிறோம்,’ என்றார்.
இந்தப் புத்தகக் காட்சியில் வெயிலின் உக்கிரம் தாங்க முடியவில்லை. கூவம் அருகில் ஓடுவதால், அதன் வாசனையை வர்ணிக்க விரும்பவில்லை. நான் ரொம்ப நேரம் நின்று கொண்டிருந்தேன்.  என்னால் நிற்கவே முடியவில்லை என்பதோடல்லாம்,  இன்னும் சிறிது நேரம் நின்றிருந்தால், தலைச் சுற்றி விழுந்து விடுவேன் போல் தோன்றியது.   வலு குறைவான நாற்காலியில் உட்கார்ந்தேன்.  கிருபாவிற்கும் எனக்கும் ஒரே வயது.  அவர் சாமாளித்துக் கொண்டு இருந்தார்.  அவருடைய உதவி பெரிய உதவி.  சனி ஞாயிறுகளில் காலையிலிருந்து இருக்க வேண்டும் என்று நினைத்தால் கதி கலங்குகிறது.
அதனால்தான் கேட்கிறேன்.  யாராவது இளைஞர் கிடைப்பாரா?  ஒருவர் மட்டும் இருந்தால் போதும்.  ஒருசில மணி நேரம் சமாளித்தால் போதும்.  முழு நேரமும் வேண்டாம்.நன்கொடை அளிக்கப்படும். என்னை தொடர்பு கொள்ளுங்கள்.  9444113295.  ஸ்டால் எண் 594.

வைதீஸ்வரனின் ‘அதற்கு மட்டும் ஒரு ஆகாயம்,’

அழகியசிங்கர்

எண்பது வயதாகிற வைதீஸ்வரனின் கவிதைத் தொகுதியின் ெயர். அதற்குமட்டும் ஒரு ஆகாயம்  80 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது.  எழுத்து காலத்திலிருந்து எழுதி வருபவர் வைதீஸ்வரன்.  ஒரு விதத்தில் எழுத்து என்பது தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் எழுத முடியுமா என்பது சந்தேகத்திற்குரியதுதான்.  மூத்தத் தலைமுறை சேர்ந்த எழுத்தாளர் என்கிறபோது, வைதீஸ்வரன், ஞானக்கூத்தன் முதலிய கவிஞர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் வருகிறார்கள். 
இன்று எழுதப்படுகிற கவிதைகள் எப்படிப்பட்ட கவிதைகள்.  இக் கவிதைகளிலிருந்து வைதீஸ்வரன் எப்படி தெரிய வருகிறார் என்ற கேள்வி நம் முன் இருக்கத்தான் இருக்கிறது.  இன்றைய கவிதை பொது தளத்திற்கு வந்து விட்டது.  நவீன விருட்சத்தில் கவிதை பிரசுரமாவதை விட ஆனந்தவிகடனில் கவிதை வருவதை பெருமிதமாக கருதுகிற கவிஞர்கள் இன்றைக்கு இருக்கிறார்கள்.  
மேலும் கவிதை என்பது ஒரு ஜோக் மாதிரி ஆகிவிட்டது.  ஜோக்கை பிரசுரம் செய்கிற மாதிரிதான் கவிதைகளையும் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் பிரசுரம் செய்கின்றன.  அதனால் கவிதைக்குக் கிடைக்க வேண்டிய உரிய மரியாதை கிடைக்காமல் போகிறது.
ஒரு கவிதைத் தொகுதியை புத்தகமாகக் கொண்டு வர பதிப்பாளன் தயங்குகிறான்.  அதனால்தான் சார்வாகன் கதைகள் பிரசுரமான வேகத்தில் அவர் கவிதைக்கு அலட்சியமான போக்கு கையாளப்பட்டது.
அதற்கு மட்டும் ஒரு ஆகாயம் என்ற இந்தத் தொகுப்பில் வைதீஸ்வரன் அவர் கவிதைகளை ஒட்டு மொத்தமாக சாருபிழிந்து கொடுத்திருக்கிறார்.  ஒவ்வொருவரின் ரசனைக்குரிய தொகுதிதான் இது.  விருட்சம் வெளியீடாக இதைக் கொண்டு வந்துள்ளேன்.
புதிர் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையை  இங்கு தருகிறேன்.
புதிர்
இருட்டை வரைந் திருக்கின்றேன்.
பார் என்கிறான்.
தெரியவில்லையே என்கிறேன்
அது தான் இருட்டு என்கிறான்
இன்னும் தெரியவில்லை என்கிறேன்
மேலும் உற்றுப் பார்த்து.
அதுவே 
அதனால் இருட்டு என்கிறான் – 
இவன் இருட்டு 
எனக்கு எப்போது வெளிச்சமாகும்? 

ரங்கம்மாள் விருது கிடைத்தப் புத்தகம் ஜெயசாந்தியின் சங்கவை என்ற நாவல்

அழகியசிங்கர்


டிசம்பர் வெள்ளம் வந்து பாதிக்கப்பட்ட வீடுகளில் என் வீடும் ஒன்று. கீழ் அறையில் வைத்திருந்த எத்தனையோ புத்தகங்கள் பாழாகி விட்டன. முதலில் நேர்பக்கம் என்ற பெயரில் நான் கொண்டு வந்த கட்டுரைப் புத்தகங்கள் எல்லாம் நாசமாகி விட்டன. அந்தப் புத்தகத்தை இப்போதும் விற்பனைக்காக இந்தப் புத்தகக் கண்காட்சியில் கொண்டு வர உள்ளேன். ஆனால் பாதி விலையில். அதேபோல் என்னுடைய கதைப் புத்தகமான ரோஜாநிறச் சட்டை வீணாகிவிட்டது. அப்புத்தகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உலர்ந்த நிலையில் விற்பனை செய்ய உள்ளேன். ரூ 100 விலை உள்ள அப் புத்தகத்தை ரூ 20 க்கு விற்க உள்ளேன். அதேபோல் வினோதமான பறவை என்ற என் கவிதைப் புத்தகத்தை ரூ.10 க்கு விற்க உள்ளேன். எல்லாப் புத்தகங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தப்பித்தப் புத்தகங்கள்.

டிசம்பர் மாதம் ரங்கம்மாள் விருது கிடைத்தப் புத்தகம் ஜெயசாந்தியின் சங்கவை என்ற நாவல். 927 பக்கங்கள் கொண்ட இந் நாவலின் விலை ரூ.820. இந் நாவலின் சில பிரதிகள் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்து விட்டன.

ஆனால் பெரும்பாலான பிரதிகள் காப்பாற்றப்பட்டு விட்டன. இப் புத்தகத்தை விலை குறைவுடன் தர உத்தேசம். ரூ820 கொண்ட இப் புத்தகத்தை ரூ200க்கு புத்தகக் காட்சி முன்னிட்டு தர உத்தேசம். புத்தகக் காட்சியில் ரூ 200க்கு வாங்கிக் கொள்ளவும். பல ஆண்டுகளுக்கு முன் சுதந்திர தாகம் என்ற சி சு செல்லப்பாவின் நாவலை அதிரடியாக ரூ100 க்கு விற்று, விற்பனையில் சாதனை படைத்தவன் நான்.  

இதைத் தவிர விருட்சம் வெளியீடாக 4 புத்தகங்கள் புதியதாக வெளிவந்துள்ளன. 1. விருட்சம்பரிசுப் பெற்ற கதைகள். 2. பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ். 3. வைதீஸ்வரனின் üஅதற்கு மட்டும் ஒரு ஆகாயம் 4. அந்தரங்கமானதொரு தொகுப்பு என்ற அசோகமித்திரனின் புத்தகம். நான்கு புத்தகங்களைக் கொண்டு வந்த நான், ஐந்தாவது புத்தகமான ஞானக்கூத்தன் கவிதைகளை புத்தகக் கண்காட்சி முடிவதற்குள் கொண்டு வர முடியுமா என்பது தெரியவில்லை. 

புத்தகக் கண்காட்சி சாலையில் என் ஸ்டால் எண். 594. நானும் ஒரு முறை சொல்லிப் பார்த்துக்கொள்கிறேன். யாராவது கேட்டால் உடனே சொல்ல வரவில்லை.

ஏழு வரிக் கதை

1. தண்ணீர்

அழகியசிங்கர 
அந்த வீட்டு சமையல் அறையில் உள்ள ஒரு குழாயிலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது.  உள்ளே படுத்திருந்த பெரியவர் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

அவருடைய வயது 94.  எழுந்திருக்க முடியவில்லை.  படுத்தப் படுக்கையாக இருந்தார். அவருடைய பையன் கணினியில் ஒரு ஏழுவரிக் கதை டைப் அடித்துக்கொண்டிருந்தான்.  அதன் தலைபபு தண்ணீர்.  அவனுடைய மனைவி டிவியில் ஆழ்ந்திருந்தால.  டிவியையாவது அசைத்து விடலாம். அவளை அசைக்க முடியாது.  சமையல் அறையில் தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது.  டொக் டொக் என்று சப்தம்.  பெரியவர் சத்தமாக பையனைக் கூப்பிட்டார்.  பையன் அவர் அறைக்குச் சென்றான்.  அவர் சொன்னார் :  ‘தண்ணீ….தண்ணீ…’  பையன் ஒரு டம்பளரில் தண்ணீர் கொண்டு வந்து குடிக்கச் சொன்னான்.  பெரியவர் விடாமல், ‘தண்ணீ..தண்ணீ’ என்றார்.  அவனுக்குப் புரியவில்லை.  அவன் மனைவி டிவியில் முக்கியமான கட்டத்தில் மூழ்கி இருந்தாள்.  சமையல் அறை குழாயிலிருந்து டொக் டொக்…..

2.  ரோஜாப்பூ வாசனை 

தெருவில் அந்தப் பெண் நடந்து கொண்டிருந்தாள்.  கையில் ஒரு பிளாஸ்டிக் பேக்.  தலையில் ரோஜாப் பூக்கள் சூடியிருந்தாள்.  அவள் நடக்க நடக்க ரோஜாவின் வாசன எல்லார் மூக்குகளையும் துளைத்தது. எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  நானும் மாடி பால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.  அந்தப் பெண் தெரு முனையில் உள்ள குப்பைத் தொட்டியில் கையில் வைத்திருந்த பேக்கை தூக்கிப் போட்டாள்.  பின் நடந்து வந்தாள்.  ரோஜாப் பூக்கள் வாசனையைச் சிந்தியபடி அவளுடன் நடந்தன. எல்லோரும் திரும்பவும் பார்த்தார்கள். அவள் வெட்கப்படவில்லை.  பால்கனியிலிருந்து நானும் பார்த்தேன்.  அவள் நடந்து அவள் வீட்டிற்குள் போய்விட்டாள்.  ஆனால்  அவள் பரப்பிய ரோஜா மணம் அங்கே சுழன்றபடி இருந்தது….

பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ்

அழகியசிங்கர் 

தீயுறைத் தூக்கம் என்ற கவிதைத் தொகுதிக்குப் பிறகு நான் கொண்டு வந்துள்ள இன்னொரு கவிதைத் தொகுதி அழுக்கு சாக்ஸ் என்ற பெருந்தேவியின் தொகுப்பு. பெருந்தேவி வித்தியாசமான பெண் கவிஞர் என்பதோடல்லாமல் மற்ற பெண் கவிஞர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். நான் ஆண் கவிஞர் பெண் கவிஞர் என்றெல்லாம் பிரித்துச் சொல்ல விரும்பவில்லை. 
பெருந்தேவி கவிதையின் முக்கியமான சாரம் என்று நான் கருதுவது, அவருடைய நவீன போக்குக்கொண்ட உள்அழகுக் கொண்ட கவிதைகள். கவிதையிலிருந்து பெரும்பாலோர் உரைநடை வடிவத்திற்கு மாறி விட்டார்கள். க நா சு உருவாக்கிய உரைநடைக் கவிதைகள்தான் எழுதுகிற சாத்தியமாய் இருக்கிற சூழ்நிலையில் பெருந்தேவி கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எழுதிச் செல்கிறார். இவருடைய முதல் தொகுதியான தீயுறைத் தூக்கம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளின் சாயல் இந்தத் தொகுதியிலும் உண்டு. 
ஒவ்வொரு முறையும் கவிதையை எடுத்துப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வமும், பத்திரப்படுத்த வேண்டுமென்ற எண்ணமும் இத் தொகுப்பைப் பார்ப்பவர்களுக்குத் தோன்றும். 

இன்று மதியம் ஒரு புத்தக விற்பனையாளரிடம் பேசும்போது, கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளேன் என்று கூறினேன். அவர் தரவேண்டாம். விற்பனை ஆகாது என்று சொல்லி மறுத்துவிட்டார். அதேபோல் ஒரு பெரிய பதிப்பாளர் அவருடைய பதிப்பகத்தில் எப்போதும் கவிதைகளுக்கு இடமில்லை என்று பெருமிதமாகக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கும் கவிதை என்றால் பிடிக்காதாம். அதேபோல் அவர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கும் பிடிக்காதாம். ஆனால் நவீனவிருட்சம் ஆரம்பத்திலிருந்து கவிதைப் புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் பத்திரிகை. ஏனென்றால் நானும் கவிதை எழுதுவதை விரும்புவேன். நான் அலுவலகம் போகும் காலத்தில் கூட மின்சார வண்டியில் கவிதைகளை வாசித்துக் கொண்டு போவேன். 
விருட்சம் வெளியீடாக முதல் புத்தகம் ரா ஸ்ரீனிவாஸன் கவிதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டேன். மொத்தம் 500 பிரதிகள் அச்சடித்திருந்தேன். அதில் வெளியான பெரும்பாலான கவிதைகள் வாசிக்க தூண்டும் அற்புதமான மொழி நடையில் எழுதப்பட்ட கவிதைகள். ஆனால் அதன் விற்பனை? 
அந்தக் காலத்தில் ராயப்பேட்டையில் இருந்த க்ரியா அலுவலகத்தில் ஒரு புத்தகம் இருக்கும். சி மணியின் üவரும் போகும்ý என்ற தொகுப்பு. அற்புதமான முறையில் அச்சடிக்கப்பட்டிருக்கும். நான் ஒவ்வொரு முறையும் க்ரியாவிற்குப் போகும்போது என்னைப் பார்த்து வரவேற்பது, வரும் போகும் என்ற சி மணியின் தொகுப்புதான். அது அங்கேதான் இருக்கும் எங்கும் போகாது என்று நினைத்துக்கொள்வேன். 
நானே முன்பு சொன்னதுபோல் விஸிட்டிங் கார்டுதான் கவிதைத் தொகுதி, விஸிட்டிங் கார்டிற்குப் பதில் கவிதைத் தொகுதியைக் கொடுத்து விடலாம் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் இப்போது அப்படி சொல்வதை நான் மறுக்கிறேன். யாராவது ஒரு ரூபாய் கொடுத்து வாங்குவதாக இருந்தால்தான் என்னிடம் உள்ள கவிதைத் தொகுதியை வாங்க முடியும். 
ஒருவர் கவிதைத் தொகுதியை ரசிப்பவராக இருந்தால், தலைகாணி புத்தகத்தில் நீங்கள் தெரிந்து கொள்வதைவிட கவிதைகள் உங்களை வேறு உலகத்திற்கு அழைத்துக்கொண்டு போய்விடும். சுலபமாக எடுத்துப் படிப்பதும் கவிதைப் புத்தகம்தான். மனசிலிருந்து படிப்பதுதான் கவிதைப் புத்தகம். 
மூன்றாண்டுகளுக்கு முன் நான் அலுவலகத்தில் இருந்து பதவி மூப்பு அடையும் தறுவாயில் என் கவிதைத் தொகுப்பு ஒன்றை கொண்டு வந்தேன். வினோதமான பறவை என்பது தொகுப்பின் பெயர். மொத்தம் 64 கவிதைகள் கொண்ட தொகுப்பு. 90 பக்கங்கள் கொண்ட அப்புத்தகத்தின் விலை ரூ 60 தான். நான் தெரியாமல் 300 பிரதிகள் அச்சடித்து விட்டேன். அதேபோல் ரோஜா நிறச் சட்டை என்ற என் சிறுகதைத் தொகுயையும்அச்சடித்திருந்தேன். அப்போது என் அறுபதாவது வயதை முன்னிட்டு அச்சடித்திருந்தேன். என் சிறுகதைத் தொகுதியைப் பற்றி எனக்கும் சிறிதும் கவலை இல்லை. ஆனால் கவிதைத் தொகுதியைப் பற்றி எனக்கு பெரிய சந்தேகம். அதனால் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு விண்ணப்பம் எழுதினேன். என் கவிதைத் தொகுதியை வாங்கிக் கொள்ளும்படி. அறுபது ரூபாய் புத்தகத்தை முப்பது ரூபாயிக்குத் தருவதாகவும் ஒவ்வொருவரும் ஒரு பிரதி வாங்கிக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டிருந்தேன். நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நான் எழுதிய விண்ணப்பக் கடிதம் தரையில் கிடந்தது. சில குப்பைத் தொட்டியில் அடைக்கலம் புகுந்து கொண்டது. யாரும் வாங்கவில்லை. ஆனால் எனக்குத் தெரிந்த இரண்டு பெண்மணிகள்தான் கவிதைப் புத்தகத்தை வாங்கினார்கள். ஆனால் முன்பு என் எழுத்தாள நண்பர் எனக்கு அறிவுரை கூறி உள்ளார். யாரிடமும் நீங்கள் எழுதுபவர் என்பதைச் சொல்லிக் கொள்ளாதீர்கள். ஏன் என்றால் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாவது எழுத்தாளர்கள்தான்.
அலுவலகத்தில் பணிபுரிகிற ஒருவர் கவிதைப் புத்தகம் கொண்டு வந்துள்ளார். அவருடைய புத்தகம் ஒன்றை முப்பது ரூபாயிக்கு ஏன் வாங்கக் கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு வரவில்லையே என்று எனக்குத் தோன்றியது. அவர்கள் பக்கம் எல்லா நியாயமும் இருப்பதாகப்பட்டது. என் மீதுதான் தவறு என்றும் தோன்றியது. ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமாய் ஒரு விண்ணப்பத்தை வைத்தோம் என்று கூட நினைத்தேன். 
புத்தகக் கண்காட்சியிலும் என் கவிதைப் புத்தகத்தை யாராவது வாங்கினால் நான் சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்குவேன். ஆனால் எதிர்பாராதவிதமாய் போன ஆண்டு டிஸம்பர் மாதம் வெள்ளம்வந்து என் கவிதைப்புத்தகம் முழுவதும் வீணாய்ப் போய்விட்டது. வெள்ளத்தில் நனைந்த புத்தகங்களை இன்னும் ஜன்னல் பக்கத்தில் வைத்திருக்கிறேன். பேப்பர் கடையில் கட்டாக போடவும் எனக்கு மனசு வரவில்லை. தினமும் ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியே வரும்போது ஏக்கத்தோடு அப் புத்தகக் கட்டை பார்த்தபடியே சென்று கொண்டிருக்கிறேன். 
ஆனால் இப்போது கவிதைப் புத்தகம் அச்சிட புதிய அணுகுமுறையை கையாளுகிறேன். கவிதைப் புத்தகம் விஸிட்டிங் கார்டு இல்லை. நீங்கள் வாங்கினால் வாங்குங்கள் வாங்காவிட்டால் போங்கள் என்ற கொள்கைப் பிடிப்போடு இருக்கிறேன். என்றாவது ஒருநாள் யாராவது ஒருவர் கவிதைப் புத்தகத்தை வாங்காமல் இருக்க மாட்டார்கள்.
பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ் என்ற கவிதைத் தொகுதி பிரமிக்கும்படி அச்சாகி உள்ளது. அதில் வந்துள்ள அழுக்கு சாக்ஸ் என்ற கவிதையை உங்கள் வாசிப்புக்கு விடுகிறேன்.

அதன் ஜோடியைக் காணோம்
டிரையர் தின்றிருக்கும்
இயந்திரத்தின் பசிக்கு வரலாறுண்டு 
இல்லாவிட்டால்
காக்கா தூக்கிக்கிட்டுப் போயிருக்கும்
என்கிற சொலவடையில்
தன்னிருப்பை உறுதிசெய்ய
காகம் தூக்கிக்கொண்டு போயிருக்கும்

ஒருவேளை சாக்ஸ் அணிந்த காகத்தைப் பார்த்தால்
எனக்குத் தெரிவியுங்கள்
சாக்ஸின் விவரம் சாக்ஸ்
காகத்தின் விவரம் ஒருவருக்குக் கருப்பாக
இன்னொருவருக்கு மஞ்சளாகத் தெரியும்
கண்ணைப் பொறுத்தது
ஒருவரும் இன்னொருவரும் பார்த்தால்
என் சாக்ûஸத் திருப்பிக்கொடுத்துவிட்டு
வைத்துக்கொள்ளுங்கள்
நிறம் பற்றிய உங்கள் சண்டையை
 
  

ஜே கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல்கள் என்ற ஒரு புத்தகம்

அழகியசிங்கர்  
ஆரம்பத்தில் நான் சுவாமி விவேகானந்தர் புத்தகத்தைத்தான் படித்துக் கொண்டிருப்பேன்.   The Complete works of Swami Vivekananda  Part 1   என்ற புத்தகத்தை நான் ஆர்யகவுடர் ரோடில் உள்ள ரேஷன் கடை க்யூவில் நின்றுகொண்டு படித்ததாக நினைப்பு.  இது எப்பவோ நடந்த சம்பவம்.  எனக்கு விவேகானந்தர் புத்தகம் வீரமாக இருப்பதற்கு தைரியத்தைக் கொடுப்பதாக நினைப்பேன். ஆனால் அப்படியெல்லாம் இல்லை.  வீரமாக இருப்பதற்கு பெரிய போராட்டம் எல்லாம் இல்லை.  மெதுவாக விவேகானந்தர் என்னிடமிருந்து உதிர்ந்து போய் விட்டார்.  அவரைப் பற்றிய செய்திகளை மற்றவர்கள் சொல்வதன் மூலம் கேட்டிருக்கிறேன்.
அவர் இறந்து போனபோது அவருக்கு சர்க்கரை நோய் இருந்ததாக கேள்விப்பட்ட செய்தி என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லை. கம்பீரமான அவருடைய புகைப்படங்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். அவருக்கு காமெரா மூளை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஒரு தடியான புத்தகத்தை அவர் வெறுமனே  சில நிமிடங்களில் புரட்டிப் பார்த்தே உள் வாங்கிக் கொள்வார் என்று  சொல்வார்கள்.  அந்தப் புத்தகத்திலிருந்து யார் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்வார் என்று சொல்வார்கள்.  அதெல்லாம் எந்த அளவு உண்மை என்று தெரியாது.  ஆனால் உலக அரங்கில் எல்லோரும் வியக்கும்படி செய்து காட்டியவர்.   
இந்தத் தருணத்தில்தான் நான் ஜே கிருஷ்ணமூர்த்தி என்ற தத்துவஞானியைப் பற்றி  அறியத் தொடங்கினேன்.  அதுவும் அந்தக் காலத்தில் தீவிர எழுத்தாளர்கள் பலரும் ஜே கிருஷண்மூர்த்தியை எழுத்தில் கொண்டு வந்து விடுவார்கள்.  ஆனால் ஒருவர் ஜே கிருஷ்ணமூர்த்தியை மட்டும் வாசித்தால் போதும்.  கதைப் புத்தகமோ கவிதைப் புத்தகமோ வாசிக்கத் தோன்றாது. கிருஷ்ணமூர்த்தியே போதும் என்ற எண்ணம் தோன்றும்.  திறமையாக கவிதைகள் எழுதி வந்த ஒரு கவிஞர், ஜே கிருஷ்ணமூர்த்தி படிக்கத் தொடங்கியபோது மாறி விட்டார். ‘இங்கு எழுதுவதெல்லாம் வீண்.  கிருஷ்ணமூர்த்தி ஒருவரே போதும்,’ என்றெல்லாம் சொல்லத் தொடங்கினார். அவர் சொல்வதைக் கேட்டு நானே திகைத்து விட்டேன். உண்மையில் கிருஷ்ணமூர்த்தியைப் படிக்கத் தொடங்கினால் போதும், எல்லோரும் பற்றற்ற நிலைக்கு வந்து விடுவார்கள்.  எழுத வேண்டுமென்ற எண்ணம் தோன்றாமல் போய்விடும்.
என்னுடைய இன்னொரு இலக்கிய நண்பர் குறிப்பிடுவார்.  ‘ஜே கிருஷ்ணமூர்த்தியைப் படிக்காதீர்கள்… நம்மை எழுத விடாமல் செய்து விடுவார்,’ என்று. நான் ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டம் என்றால் அங்கு போய் நின்றுவிடுவேன்..கிருஷ்ணமூர்த்தி புத்தகங்களை எல்லாம் விடாமல் வாங்கி வீடுவேன்.  இன்னும் கூட நினைவில் இருக்கிறது.  கிருஷ்ணமூர்த்தியின் Awakening of Intelligence  என்ற புத்தகத்தை வாங்கியது. 
ஒவ்வொரு கிருஷ்ணமூர்த்தி கூட்டத்திற்கும்  பிரமிள் வந்துவிடுவார்.  அவர் கதைகள் சொல்வார்.  கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி மற்றவர்களைப் பற்றி. கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி அவ்வளவு ஈடுபாடு கொண்டவர் பிரமிள்.  
    நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் பிரமிளுக்கு இருந்தது.  ஆனால் அவரால் எழுதமுடியவில்லை.  காரணம் கிருஷ்ணமூர்த்திதான் என்று தோன்றுகிறது. 
இப்படி பல எழுத்தாளர்களை எழுத விடாமல் செய்து விட்டாரா என்று தோன்றும்.  ஆனால் மணிக்கொடி எழுத்தாளர்களை ஜே கிருஷ்ணமூர்த்தி எதாவது செய்தாரா என்பது தெரியவில்லை.  அவர்கள் யாரும் கிருஷ்ணமூர்த்தியைக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் பெரும்பாலும் கிருஷ்ணமூர்த்தி புத்தகத்தை வைத்துக் கொண்டு  திண்டாடுவேன்.  
இதோ ஜே கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல்கள் என்ற ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  என் கண்ணில் ஏனோ இது பட்டுவிட்டது. உண்மையில் ஒரு கதைப் புத்தகத்தைப் படிப்பதை விட அற்புதமான அனுபவத்தைத் தருகிறது இந்தப் புத்தகம்.  

என் புத்தக ஸ்டால் எண் 594

அழகியசிங்கர்


இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்த ஸ்டாலைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை.  எபபோதும் எதிலும் நான் முதலும் இல்லை கடைசியிலும் இல்லை. எங்குப் போனாலும் அப்படித்தான் வாய்க்கும்.   எல்லாம் நடுவில்தான் கிடைக்கும்.  பள்ளிக்கூடத்திலோ கல்லூரியிலே நான் முதல் பெஞ்சிலோ கடைசிப் பெஞ்சிலோ உட்காரமாட்டேன்.  அதேபோல் இதுவரை புத்தகக் காட்சியில முதல் ஸ்டாலோ கடைசி ஸ்டாலோ வந்தது கிடையாது.  ஆனால் இந்த முறை 594 என்ற கடைசி ஸ்டால் கிடைத்துள்ளது.  என்ன செய்வது?
என்ன வரிசை என்பது தெரியவில்லை.  ஐந்தாவது வரிசையா முதல் வரிசையா என்பது தெரியவில்லை.  ஆனால் அந்த வரிசையில் நடக்க ஆரம்பிப்பவர் பாதிதூரம் நடந்தவுடன்,  ரொம்ப ரொம்ப களைத்துப் போய்விடுவார்கள்.  கடைசி ஸ்டாலை ஏன் பார்க்க வேண்டும் அப்படியே போய்விடலாம் என்று போய் விடுவார்கள்.  
அதனால் நான் புத்தகங்களை மிகக் குறைவான பிரதிகளே எடுத்துக்கொண்டு வர உத்தேசித்துள்ளேன்.  இந்த முறை புத்தகக் காட்சியை முன்னிட்டு ஐந்து புத்தகங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளேன்.  நூறாவது இதழான விருட்சம் இபபோது கொண்டு வர முடியாது.  புத்தகக் காட்சி முடிந்தபின்தான் யோசிக்க முடியும். 
ஐந்து புத்தகங்களில் இரண்டு புத்தகங்களான அழுக்கு சாக்ஸ் என்ற பெருந்தேவியின் கவிதைத் தொகுதியும், விருட்சம் பரிசுப் பெற்ற கதைகள் தொகுதியும் அச்சாகி விட்டன.  வைதீஸ்வரனின் அதற்கு மட்டும் ஒரு ஆகாயம் என்ற புத்தகம் இன்னும் சில தினங்களில் கிடைத்து விடும்.  நான்காவது புத்தகமான அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு என்ற புத்தகம் தயாராகிறது.  அதேபோல் ஞானக்கூத்தனின் புதிய கவிதைத் தொகுதியும் தயாராகிறது.
புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நான் ஏற்கனவே ஸ்டால் வாடகையைக் கட்டிவிட்டேன்.  இன்னும் பத்தாயிரம் வரையாவது செலவாகும்.  ஆனால் வரவு? சந்தேகம்தான்.  கடைசி ஸ்டாலில் அமைதியாக உட்கார்ந்திருப்பதைத் தவிர வேற வழி இல்லை. தூரம் வேறு என்னை அச்சப்பட வைக்கிறது.  மாம்பலத்திலிருந்து புத்தக ஸ்டால் நடக்கும் இடம் வரை வருவதற்குள் போதும் போதுமென்றாகி விடும்  அதனால் நான் மெதுவாகத்தான் ஸ்டாலை திறக்க வருவேன்.  எனக்கு உதவி செய்ய ஒரு நண்பர் வரத் தயாராகி உள்ளார்.  எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படி உதவி செய்ய ஒருவர் கிடைக்கிறார் என்றால் என்னால் மனம் திறந்து அவரை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை.  இந்த முறை இதன் மூலம் நஷ்டம்தான் என்று கணக்கு எழுதி வைத்துவிட்டேன்.  இதைப் படிப்பவர்கள் ஏன் அழுது புலம்புகிறீர்கள் என்று என்னைக் கேட்கத் தோன்றும்.  ஆனால் உண்மை என்னவென்றால் இதுமாதிரி ஒன்று நிகழப் போவதையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
இந்தப் புத்தகங்களை நான் மிக மெதுவாக விற்றுவிட முடியும் என்று நம்புகிறேன்.  ஏனென்றால் நான் கொண்டு வரும் எல்லாப் புத்தகங்களும் தரமான புத்தகங்கள்.  விலை குறைவான புத்தகங்கள்.
விருட்சம் பரிசுப் பெற்ற கதைகள் என்ற புத்தகத்தில் 12 படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.   தமிழில் வெளிவந்துள்ள பல முக்கிய பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ள குறிப்பிடப்பட வேண்டிய படைப்பாளிகளின் கதைகள் அடங்கிய புத்தகம் இது.  இப் புத்தகம் உருவான பிறகு எனக்கு வேறு சில புத்தகங்கள் இதுமாதிரி கொண்டு வரயோசனை போய்க் கொண்டிருக்கிறது. யார் கதைகள் இடம் பெற்றுள்ளன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.  1. எஸ் செந்தில்குமார் 2. எஸ் ராமகிருஷ்ணன் 3. ப முகமது ஜமிலுதீன் 4. பாவண்ணன் 5. சுகா 6. உஷாதேவி 7. அ முத்துலிங்கம் 8. அசோகமித்திரன் 9. யுவன் சந்திரசேகர் 10. ஐசக் அருமைராஜன் 11. அட்டனத்தி 12. நர்சிம். ஒவ்வொரு கதையும் படிக்க ஆவலைத் தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. 
பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ் என்ற கவிதைத் தொகுதி ஒரு வித்தியாசமான தொகுப்பு.  இதற்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளேன்.  தமிழில் எதிர் கவிதைகள் சிலவற்றை எழுதி உள்ளார். குடிவிதி என்ற ஒரு கவிதை.
பெண்ணோடு சேர்ந்து
குடிக்கும்போது
அவள்
பெண்ணாகத் தோன்றினால்
நீ இன்னும் குடிக்கவேண்டும்
தேவதையாகத் தோன்றினால்
உடனே அங்கிருந்து நகரவேண்டும்
சரி புத்தகக் கண்காட்சியில் கோடியிலும் கோடியில் வீற்றிருக்கும் என் புத்தக ஸ்டால் எண் 594 தான்.