துளி : 34 – பீனிக்ஸில் பார்த்த தமிழ் படம்

அழகியசிங்கர்

நேற்று மதியம் 3.30 மணிக்கு பீனிக்ஸில் ஹார்க்கின்ஸ் தியேட்டரில் தடம் என்ற தமிழ் படம் பார்த்தேன்.  ஹார்கின்ஸ்  என்ற பெயர் உள்ள கட்டடத்தில் 16 திரையரங்குகள் உள்ளன. ஹார்க்கின்ஸ் என்ற பெயரில் 30 இடங்களில் பீனிக்ஸ் முழுவதும் கட்டடங்கள் உள்ளன.  ஒவ்வொரு கட்டடத்திலும் 16 க்கும் மேலே திரை அரங்குகள் உள்ளன.  

நேற்று நாங்கள் 3.30 மணிக்கு தியேட்டரில் நுழைந்தபோது படம் ஆரம்பித்து விட்டது.  படம் பார்க்க மொத்தமே 9 பேர்கள்தான்.  இத்தனைப் பேர்கள் உதயம் தியோட்டரில் பார்க்க வந்தால் படமே ஓட்ட மாட்டார்கள்.  வெளியே தாங்கமுடியாத குளிர்.  தியேட்டரில் வெதுவெதுப்பாக இருந்தது.  இந்தப் படம் எப்படி என்பதைப் பற்றி எழுதுகிறேன். 

நீங்களும் படிக்கலாம் – 47 – நாபிக் கமலம் – 3

அழகியசிங்கர்

பிப்ரவரி மாதம் வண்ணதாசனின் எல்லாக் கதைகளையும் படித்துவிட்டு நான் குறிப்புகள் எழுதினாலும் திரும்பவும் கதைகள் எல்லாவற்றையும் இப்போதும் படித்தேன்.  

நீங்களும் படிக்கலாம் தொகுதி 1 புத்தகத்தை அசோகமித்திரனிடம் கொடுத்தபோது அவர் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. üஒரு புத்தகத்திற்கு விமர்சனம் எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  சிலசமயம் என்ன எழுத வேண்டுமென்று தோன்றாமல் போய்விடும்.ý  அவர் சொன்னது உண்மை என்பதை வண்ணதாசனின் சில கதைகளைப் படிக்கும்போது என்னால் உணர முடிந்தது.  அவர் கதைகள் சொல்லாமல் ஏதோ சொல்ல வருகிறார்.  வாசகன்தான் கவனமாகப் படிக்க வேண்டும். கதைகள் மூலம் மறைமுகமான அனுபவத்தைத்தான் உணர முடியும்.     

7. அகஸ்தியம் 

மனித உறவுகளுக்குள் நடப்பதெல்லாம் புரியாத புதிராக உள்ளது.  நடேச கம்பர் மகன் தனுஷ்கோடிக்கும் அகஸ்தியர் அத்தைக்கும் இடையில் நடந்தது என்ன?  

8.  மகா மாயீ

உணர்வு முழுவதையும் வெளிப்படையாகக் கூறாமல் எதிரொலிக்கும் கதை.  குடும்பத்திற்கு எதிராக திலகா தனக்குப் பிடித்த ஆணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள்.  அதற்கு முழு சம்மதத்தை மாமு ஆச்சி வெளிப்படுத்துகிறாள். üஒப்படைசாச்சுý என்ற ஒற்றை வரியில் கதையின் போக்கு முடிவுக்கு வருகிறது.  

9. சல்லாத் துணிகளின் ஊடாக மலைகள்

முதல் முறையாக இந்தக் கதையைப் படித்துக் குறிப்புகள் எழுதினாலும், இப்போது இன்னும் இரண்டு மூன்று முறைகள் இக் கதையைப் படித்துப் பார்த்தேன்.  கதை மூலம் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை.  சொல்லாமல் சொல்லும் கதை வண்ணதாசனுக்கு அமைந்திருக்கிறது.  பாண்டியம்மாளைப் பார்த்த இளம்பிறைக்கு அண்ணன் செழியன் ஞாபகம் வருகிறது. முறிந்துபோன உறவு.  ஒரு வார்த்தை கூட அண்ணன் செழியனைப் பற்றி பாண்டியம்மாள் விஜாரிக்கவில்லை என்பதை நினைத்து வருத்தப்படுகிறாள். 

10. இக்கரைக்கும் அக்கரைக்கும்

எப்படி பாட்டு எல்லோருடைய உணர்வுகளையும் ஒருங்கிணைக்கிறது என்பதுதான் இக் கதை. 

11. ஸ்படிகம்

இந்தக் கதையில் காதல் என்கிற அனுபவம் நுணுக்கமாகச் செயல்படுகிறது.  செல்வக்குமாரிடமிருந்துதான் கதை ஆரம்பிக்கிறது.  பல பெண்களிடம் அவன் காட்டும் அன்புதான் 

அவனை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுகிறது. மனம் ஒரு வித்தியாசமானது. அதைப் பிடித்து வைத்துக்கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல.  

12..  இனிமேல் என்பது, இதில் இருந்து

எதிர்பார்த்தபடி அம்மா இறந்து விடுகிறாள்.  அவளுடன் கொண்ட பாசப்பிணைப்புதான் இக் கதை.  ஒரு புதல்வனின் உணர்வுகள் அழுத்தமாக வெளிப்படுகின்றன.  

13. கருப்பும் வெள்ளையும்

ஒரு புகைப்படம் எடுப்பவரின் கதை. சர்க்கரைப் பாண்டி.  üஇப்படியான முகங்கள் புகைப்படக்காரர்களின் பரவசம்.  அது அவனை வேட்டையாட வைத்து விடுகிறது,ý என்கிறார் சர்க்கரைப் பாண்டி ஆனந்தவல்லியைப் பார்த்து.  அவள் கணவன் பாப்புராஜ்  அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறானா என்பதைக் கதையின் கடைசி வரியில் தெரியவரும்.  

நாபிக் கமலம் – வண்ணதாசன் – சிறுகதைகள் – வெளியீடு : சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83 – தொலைபேசி : 044-24896979 – பக் : 160 -விலை : 140

நீங்களும் படிக்கலாம் – 47 – நாபிக் கமலம் – 2


அழகியசிங்கர்

சி சு செல்லப்பா ‘ராமையாவின் சிறுகதை பாணி’ என்ற  ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.  அப் புத்தகத்தில் ராமையாவின் 200க்கும்  மேற்பட்ட சிறுகதைகளைப் படித்து விமர்சனம் செய்துள்ளார்.  ஒவ்வொரு கதையையும் படித்து அக் கதையை சுருக்கமாக எழுதி பின் அக் கதையைப் பற்றி ஒற்றை வரியில் விமர்சனம் செய்திருப்பார்.  உண்மையில் ராமையாவின் மொத்த கதைகளும் புத்தகமாக வரவில்லை.  ஆனால் சி சு செல்லப்பாவின்  புத்தகத்தைப் படித்தால் ராமையா எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்று தெரிந்துவிடும்.  கதைகளைப் படிக்கும் எண்ணமும் போயிருக்கும்.  கதைச் சுருக்கம் போதும் என்று விட்டுவிட்டிருக்கலாம்.  நானோ  வண்ணதாசன் 13 கதைகளின் முன் கதைச் சுருக்கத்தைத் தராமல் கதையின் தன்மையை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறேன்.  என் குறிப்புகளைப் படிக்கும் ஒருவர், வண்ணதாசனின் கதைகளைப் படிக்கும் எண்ணம் வராமல் இருக்காது. 

1. சற்றே விலகி –

இந்தக் கதையில் கபாலியா பிள்ளை பகவதி என்ற பெயரை உச்சரிப்பது ஏன்?  பகவதி போய் விட்டாளா என்கிறார். எல்லோருடைய ஏச்சுக்கும் அவர் ஆளானாலும் அவருடைய இயல்பை அவரால் மாற்றிக்கொள்ள முடியவில்லை.  அவர் வெறித்துப் பார்க்கிற எல்லாப் பெண்களையும் பகவதியாகப் பார்க்கிறாரா? அதனால்தான் அவருக்கு எந்தக் குற்ற உணர்வு ஏற்படவில்லை. மனோரீதியாக எழுதப்பட்ட கதை.

2. போதாமை

முழுவதும் வெளிப்படுத்த முடியாத உணர்வை காசிநாதன் தாயம்மாளிடம் எதிர்பார்க்கிறான்.  பெரிய ஏமாற்றம்தான் கிடைக்கிறது.  ‘அவரு என்ன சொல்கிறதுங்க? எனக்கே போதும்னு தோணிடுச்சு,’ என்கிறாள் தாயம்மாள். இந்த வார்த்தைகளில் எல்லாவற்றையும் உதறி விடுகிறாள் தாயம்மாள். காசிநாதன் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை.  அவன் கற்பனை செய்து பார்க்க வந்த தாயம்மாள் அங்கு இல்லை. 

3. எது தெரிகிறதோ அது

விருப்பம் இல்லாத திருமணம்.  தன் இயலாமையை ஊஞ்சல் ஆடுவதன் வெளிப்படுத்துகிறாள் பிரேமா. 

4. காற்று வெளியிடை 

ஒரு சிலரை நமக்குப் பிடித்துவிட்டால் அவர்களைப்பற்றிய தப்பான அபிப்பிராயங்களை நாம் ஏற்றுக்கொள்வதில்லை  குறுமணி டீச்சரைப் பற்றி ராஜாங்கத்திற்கு ஏற்பட்ட உணர்வுதான் அது.  ஒரு சித்திரம்போல குறுமணி டீச்சரை நம் கண் முன் நிறுத்துகிறார்.  

5. தரையோடு தரையாக

ரத்னவேல் மாமா என்பவரைப் பற்றி ஒரு நீளமான கதை. யாரும் எதிர்பாராத விபத்து ரத்னவேல் மாமாவின் வாழ்க்கையில் நடந்து நிலைகுலைய வைக்கிறது. விபத்துக்குப் பிறகு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் விதமதான் இக் கதை  

6. நாபிக் கமலம்

சதாகாலமும் கணவனைச் சந்தேகிக்கிற மனைவியாக கனகம் சங்கரபாகத்திற்கு அமைந்து விடுகிறாள்.  அவள் பிரிவு அவரை ரொம்பவும் வாட்டி விடுகிறது.  அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்கிறார். மிகக் குறைந்த வசனத்தைக் கொண்டு முழுமையான கதையாகத் தென்படுகிறது.  ஆண் பெண் உறவில் ஏற்படும் விரிசலை வெளிப்படுத்துவதில் வண்ணதாசன் தனித்துவம் மிக்கவராகத் தென்படுகிறார்.

                                                                                                         (இன்னும் வரும்)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 108

அழகியசிங்கர்  



வேணு வேட்ராயன் கவிதை 

யாரையும் குறை சொல்வதற்கில்லை

சம்பவங்களால் ஆனது வாழ்வெனில்

எச்சம்பவத்தின் தலைமேல்

எவ்வளவு பொறுப்பை சுமத்துவது?

எக்கணத்தில் எத்திசையில் எடுத்துவைத்த

காலடி

என்னை இங்கு கொண்டு சேர்த்தது?

பிரிந்தும் சேர்ந்தும் மாறிமயங்கும்

வண்ணப்பிரிகைகளான உறவுகளில்

எந்நிறத்தை தொட்டெடுத்து பூசிக்கொள்வது?

இயல்பென்றும் இருப்பென்றும்

மெய்யென்றும் பொய்யென்றும்

அறிந்ததும் அறியவொண்ணாததுமாய்

பெருமரமாய் கிளைத்து பரவி

விழுதில் வேரூன்றிக் கிடக்கிறது அது.

சிறுமனக்கூட்டில் கூச்சலிட்டபடி

ஆயிரம் அலகுகளால்

தீராத எண்ணங்களை

தின்றுகொண்டிருக்கின்றன குருவிக்குஞ்சுகள்.

மரக்கிளையில் தனித்துவிடப்பட்ட

பறவைக்கூடொன்று

தரையில் விழுகிறது சத்தமின்றி.

நன்றி : அலகில் அலகு – வேணு வேட்ராயன் – விருட்சம், சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600 033 – 9444113205 – பக் : 82 – விலை : ரூ.60

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 107



அழகியசிங்கர்  


ப்ரியாராஜ் கவிதை 

சிறுவயதில் கனவில் நான்

வந்தியத்தேவன்!

குதிரையையும், குந்தவியையும்

தேடிக் களைத்திருந்தேன்!

பின்னாளில் நான் பாரதியாய்

மீசையுடன் மாறி கவி எழுதி

தோற்றிருக்கிறேன்!

பாம்பு சட்டையை உரிப்பதுபோல

நான் அவ்வப்போது, சிவாஜியாய்,

ரஜினியாய், கமலாய் மாறி கனவில்

நாயகிகளைப் புணர்ந்திருக்கிறேன்!

ஆனாலும்,

இப்போதெல்லாம் நான் நானாக

இருக்க ஆசைப்படுகிறேன்!

முடியவில்லை! பழக்க தோஷம்!

நன்றி : இன்னொரு முகம் – ப்ரியாராஜ் – வெளியீடு : சந்தியா பதிப்பகம், ப எண் : 57, 53ஆவது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600 083 – பக் : 160 – விலை : ரூ.80 – வெளியான ஆண்டு : 2009 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – –>

– 106

அழகியசிங்கர்  

அவன்

ரமேஷ் பிரேதன்

வாழ்ந்த நினைவுகளை

அசைபோட்டபடி வாழ்ந்துகொண்டிருக்கிறான்

குறுக்காக ஒரு வெள்ளைப் பசு

சாலையைக் கடக்கிறது

மடி கனக்கிறது

உணவகத்தின் வாசலில் வைத்துக் கறக்க

சைக்கிள் கேரியரில்

வைக்கோல் திணித்த கன்றோடு

அவன்

வாழ்ந்த நினைவுகளை

அசைபோட்டபடி வாழ்ந்துகொண்டிருக்கிறான்

சாலையைக் குறுக்காகக் கடக்கிறான்

பசுவைப் பின்தொடர்ந்து

நன்றி : சாராயக் கடை – ரமேஷ் பிரேதன் – வெளியீடு ; உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018 – பக்கங்கள் :72 – விலை : ரூ.40 – வெளியான ஆண்டு : டிசம்பர் 2008.

துளி : 31 – சில தினங்களுக்கு முன்னால்..

அழகியசிங்கர்

சில தினங்களுக்கு முன்னால், நான் குறும்படம் எடுத்தேன். அதற்காக நான் ஒரு பைசாவும் செலவு செய்யவில்லை. அப்படத்தில் நடித்தவர் என் நண்பர். சத்யஜித்ரேயின் டூ என்ற படத்தைப் பார்த்தவுடன் எனக்கும் ஒரு குறும்படம் எடுக்க வேண்டுமென்று தோன்றியது.
என்னுடைய சோனி டிஜிட்டல் காமெராவை எடுத்துக்கொண்டு படம் எடுத்தேன். அந்தப் படம் 11 நிமிடங்களில் முடிந்து விட்டது. அதில் வசனம் எதுவுமில்லை. படத்தின் பெயர் சைலன்ஸ். ஆர்.கே. சிறப்பாக நடித்தார். ஆனால் இந்தக் குறும்படத்தை இப்போது வெளியிட முடியாது. எடிட் செய்யவேண்டும். டைட்டில் கொண்டு வர வேண்டும். படத்தில் மியூசிக்கைச் சேர்க்க வேண்டும். அதனால் இதை எப்படி சரிசெய்வது என்று யோசனை செய்து கொண்டிருக்கிறேன். அந்தப் படத்தின் ஒரு காட்சியை இங்கே தருகிறேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 105



அழகியசிங்கர்  



பிளாஸ்டிக்கை சுவைத்தலும் சுவை கூட்டல் உத்திகளும்



றாம் சந்தோஷ்

பிளாஸ்டிக் சுவைப்பதை

நான் முதலில்

ஒரு கழுதையிடமும்

பிறகு இரண்டு நாட்டு, ஜெர்ஸி மாடுகளிடமும்

கற்றுக் கொண்டேன்

அவற்றின் பற்களைப் போன்றே

நல்ல திடமானவைகளுக்கு

நாம் நம் கடைவாய்ப் பற்களைத்

தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாயினுள் திணித்து மெல்லும்போது

சுவிங்கம் போல் ஒட்டாது, இம்சிக்காது;

கரைந்தும் போகாது; காசும் மிச்சம்.

நல்ல சுவைக்கு

ஒன்று : உங்கள் எச்சில் சுவையாக இருக்க வேண்டும்.

அல்லது : பிளாஸ்டிக் மண்ணிடைப்பட்டதாய் இருக்க வேண்டும்.

நன்றி : சொல் வெளித் தவளைகள்  – றாம் சந்தோஷ் – வெளடியீடு : சொன்மை பதிப்பகம், 25 முதல் தளம், எம்.எல்.ஏ அலுவலகம் எதிரில், ஜின்னா ரோடு, காதர் பேட்டை, வாணியம்பாடி 635 751  பக்கங்கள் : 100 – விலை : 110 

துளி : 30 – 108வது இதழ் விருட்சம் வந்துவிட்டது

அழகியசிங்கர்

ஜனவரி மாதம் புத்தகக் காட்சி முடிந்தவுடன், விருட்சம் 108வது இதழ் கொண்டு வர வேண்டியதாக இருந்தது.  டிசம்பர்- ஜனவரி-பிப்ரவரி வர வேண்டிய இதழ்.  ஆனால் ஜனவரி புத்தகக் காட்சி படுத்தியப் பாட்டில் எந்தப் பத்திரிசையும் புத்தகமும் கொண்டு வர வேண்டாமென்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  உண்மையில் பிப்பரவரியில் வராமல் மார்ச்சு அல்லது ஏப்ரல் கூடப் போயிருக்கும்.  ஆனால் என் புதல்வனின் வற்புறுத்தலுக்கு இணங்க நானும் மனைவியும் அமெரிக்கா செல்ல வேண்டும்.  அதுவும் பிப்பரவரி மாதம் 27ஆம் தேதி கிளம்புகிறோம்.  பிப்பரவரி மாதம் விருட்சம் முடிக்காவிட்டால் இன்னும் ஆறுமாதம் தள்ளிப் போய்விடும்.  ஒரு தம் பிடித்து விருட்சம் 108வது இதழை பிப்பரவரி மாதமே கொண்டு வந்துவிட்டேன்.   இதோ எல்லோருக்கும் அனுப்பவும் தயாராகிவிட்டேன்.  108வது இதழில் இன்னொரு விசேஷம்.  மொத்தப் பக்கங்களும் 108.  பொதுவாக நான் 80 பக்கங்களுக்கு  மேல் பத்திரிகையைக் கொண்டு வர மாட்டேன்.  இந்த இதழை 108 பக்கங்கள் கொண்ட இதழாகக் கொண்டு வந்துவிட்டேன்.  வழக்கம்போல் யார்யார் எழுதியிருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை இங்கே கொடுக்க விரும்புகிறேன்.

1. இளமையில் கல் – சிறுகதை- ஏ.ஏ.ஹெச்.கே. கோரி

2. ஞானக்கூத்தன் எழுதிய முன்னுரை       

3. கடிதங்கள் 

4. சரஸ்வதம் – சிறுகதை – ஸிந்துஜா                            .   

5. புத்தக விமர்சனம் – டாக்டர் ஜெ பாஸ்கரன் 

6. புத்தக விமர்சனம் – உஷாதீபன்      

7. பூனைப் பார்வை – கவிதை – ஜான்னவி

8. காதலர் தினம் என்றால் என்ன? – கவிதை-அழகியசிங்கர்

9. விடுதலை – சிறுகதை – ஐ கிருத்திகா

10. இரண்டு கவிதைகள் – ஷாஅ

11. புத்தக விமர்சனம் – சந்தியா நடராஜன் 

12. புத்தக விமர்சனம்  – அழகியசிங்கர்

13. மலை பூமியும் மனைச்சியும் – கட்டுரை – பெஷரா 

14. இந்தச்சாலையில் இந்தத்தெருவில்- கவிதை-ராணிதிலக்   

15. பிரபு மயிலாடுதுறை கவிதைகள் 

16. சித்திரம் பேசேல் அல்லது  ஏதோ ஒரு தேசம் – சிறுகதை

–  (எ) சாய்நாத்           

17. பானுமதி கவிதைகள்    

18. மரம் – சிறுகதை – அழகியசிங்கர்         

19. உபா சுட் – சிறுகதை -சோ சுப்புராஜ் 

20. துணை – சிறுகதை – டாக்டர் ஜெ.பாஸ்கரன் 

21. பிரபஞ்சன் நினைவுகள் – தேவகோட்டை வா மூர்த்தி     

22. சாருகேசி – அஞ்சலி – டாக்டர் ஜெ பாஸ்கரன் 

23. யோகாவைப் பற்றி சாருகேசி எழுதியது

24. உரையாடல்

நவீன விருட்சம் இதழைப் பெருமைப்படுத்திய படைப்பாளிகளுக்கு என் நன்றி உரித்தாகும்.  இந்த இதழின் அட்டைப் படம் கவிஞர் வைதீஸ்வரனின் கைவண்ணம்.  

துளி : 29- விருட்சம் நடத்தும் கூட்டங்கள்

19.02.2019

அழகியசிங்கர்

கடந்த இரண்டாண்டுகளாக விருட்சம் இலச்கியச் சந்திப்புகளை மூகாம்பிகை காம்பளெக்ஸில் நடத்தி வருகிறேன்.  கூட்டம் ஆரம்பிக்கும்போது ஏதுமாதிரியான கூட்டம் என்ற எண்ணம் இல்லாமலிருந்தேன்.  முதல் கூட்டத்தில் ஜானகிராமனைக் குறித்து திரூப்பூர் கிருஷ்ணன் பேசியவுடன் கூட்டம் எப்படி நடத்த வேண்டும் என்பது புரிந்தது.

ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றி இன்னொரு எழுத்தாளர் சொல்வது அல்லது வாசகர் சொல்வது என்பதுதான் கூட்டத்தின் தன்மை என்பது புரிந்துவிட்டது.

இக் கூட்த்தில் பேசுவதை ஆடியோவோ வீடியோவோ எடுத்து அதை எல்லோருக்கும் தெரிவிக்கிறேன்.  இந்த மாதம் ஆர் வெங்கடேஷ் ஆதவன் குறித்துப் பேசியது முக்கியமானதாகக் கருதுகிறேன். 
பல எழுத்தாளர்களை நாம் மறந்துகொண்டே வருகிறோம்.  அதேபோல் ஆதவனையும் மறந்து விடுவோம்.  ஆதவன் பற்றி வெங்கடேஷ் பேச ஏற்பாடு செய்தபிறகு நானும் ஆதவன் சிறுகதைகள் தொகுதியை எடுத்து கதைகளைப் படிக்கத் தொடங்கினேன்.  அப்பர் பெர்த் என்ற ஆதவன் கதையை இன்றுதான் படித்து முடித்தேன்.  ஏற்கனவே படித்ததுதான்.  19.09.2011 இந்தக் கதையைப் படித்திருக்கிறேன்.  பின் சுத்தமாக இந்தக் கதை மறந்து விட்டது.  இந்தக் கதையில் வருகிற சிதம்பரத்திற்கு மூன்று பெண்களுடன் ஏற்படும் சல்லாபம்தான் இந்தக் கதை.  ரொம்ப ஜாக்கிரதையாக எழுதப்பட்ட கதை.