கடந்த ஒரு மாதமாகக் கவிதை வாசிக்கும் கூட்டத்தை நடத்தி வருகிறேன். இந்த எண்ணம் எப்படி ஏற்பட்டது என்று யோசிக்கிறேன். நான் கல்லூரியில் படிக்கும்போதுதான் கவிதை எழுத ஆரம்பித்தது அப்போதுதான். மக்கள் தலைவர் ஜீவா அவர்களின் புதல்வர் என்னுடன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அவர் பெயர் இப்போது ஞாபகம் வரவில்லை. அவர் ஒரு முறை கடற்கரையில் நடக்கும் ஒரு கவிதைக் கூட்டத்திற்கு என்னை அழைத்துப் போனார். கடற்கரையில் அப்போது பொன்னடியான் நடத்தும் கவிதை வாசிக்கும் கூட்டம். மாதம் ஒருமுறை அக்கூட்டம் கூடும்.
கவிதை வாசிக்க வருபவர்கள் வட்டமாக அமர்ந்து கொண்டு கவிதை வாசிப்பார்கள்.
ஒவ்வொருவரும் எப்போது தம் கவிதையை வாசிப்பது என்று காத்துக்கொண்டிருப்பார்கள். ஆரம்பத்தில் கலந்து கொண்ட நான், பின் நாட்களில் போவதை நிறுத்திக்கொண்டேன். டிவியில் அவர்கள் வாசிப்பதைப் படம் பிடிக்கிறார்கள் என்றால் அன்று கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதன்பின் சில இலக்கிய நண்பர்களுடன் ஏற்பட்ட நட்பால் கவிதை வாசிப்பது மௌனமாகத்தான் வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் உடையவனாக இருந்தேன். ஆனால் உண்மையில் யாருமே கவிதைகளை வாசிப்பதில்லை. மௌனமாகக் கூட. நாம் எழுதும் கவிதைகளையே சத்தம் போட்டு வாசித்துப் பழக வேண்டும். அப்போதுதான் நம் கவிதையில் எதாவது தப்பு செய்கிறோமா என்று தெரியும்.
இப்போது கவிதை எழுதும் இளைஞர்களின் கவிதைகளை நாம் பார்ப்பது கூட கிடையாது. ரசிப்பதும் கிடையாது. நயமாக எழுதியிருக்கிறார்களா என்பதும் தெரிவதும் கிடையாது.
சமீபத்தில் நடந்த புத்தகக் காட்சியில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பல கவிஞர்கள் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார்கள். ஆரம்பத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் ஒவ்வொருவரும் கவிதை வாசிக்க வாசிக்கக் கூட்டம் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் ஏற்பாடு செய்த ஒருவரும் கவிதை வாசிக்கக் காத்திருந்தவர் ஒருத்தர்தான் இருந்தார்கள்.
யாரும் மற்ற கவிஞர்கள் வாசிக்கும் கவிதைகளைக் கேட்கப் பொறுமையுமில்லை. அக்கறையுமில்லை.
சூம் கூட்டம் ஆரம்பித்தபோது எனக்குக் கவிதை வாசிக்கும் கூட்டம் நடத்த வேண்டுமென்று தோன்றியது. அந்த முயற்சியில்தான் கவிதை வாசிக்கும் கூட்டம் நடத்துகிறேன். கிட்டத்தட்ட 34 கவிஞர்கள் 100க்கும் மேற்பட்ட கவிதைகளைக் கடந்த ஒரு மாதமாகக் கேட்டிருக்கிறோம்.
இப்போது எழுதும் இளைஞர்கள் தாமாகவே முன்வந்து அவர்களுடைய கவிதைகளை வாசிக்க வர வேண்டும்.
கவிதை வாசிப்பதில் நாம் எப்படி ஆர்வமாக இருக்கிறோமோ அதேபோல் கவிதையைக் காது கொடுத்துக் கேட்கவும் தயாராக இருக்க வேண்டும். இன்னும் கேட்டால் கவிதையை வாசிப்பதைவிடக் கேட்பதில் முக்கியத்துவம் தரவேண்டும். பலதரப்பட்ட கவிஞர்களின் கவிதைகளைக் கேட்கும்போது பலவிதமான குரல்களைக் கேட்கிறேன். எதை வேண்டுமானாலும் கவிதைப் பொருளாக எடுத்துக்கொண்டு கவிதை வாசிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இன்னும் தோண்டத் தோண்ட பலரிடமிருந்து அற்புதமான கவிதைகள் வருமென்று தோன்றுகிறது. ஏற்கனவே கவிதை வாசித்த சிலர் அடுத்த கூட்டத்திற்கு வருவதில்லை. கவிதை மீது அக்கறை இருந்தால் கேட்க வேண்டுமென்று நினைப்பார்கள்
விருட்சம் சூமில் ஆறாவது கவிதை வாசிக்கும் கூட்டம் 03.07.2020 வெள்ளிக்கிழமை – மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்களின் பெயர்கள் கீழ்வருமாறு : 1. கவிச்சுடர் கா.ந.கல்யாண சுந்தரம் 2. கவிஞர் செல்வா ஆறுமுகம் 3. கவிதாயினி கனகா பாலன் 4. கவிதாயினி பத்மஜா நாராயணன் 5. கவிதாயினி கனிமொழி ஜீ 6. கவிஞர் நிஷாந்தன் – ஒவ்வொருவரும் அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு சுற்றிலும் ஒரு கவிதை வாசிக்க வேண்டும். – உங்கள் கவிதைகளை மட்டும் வாசிக்க வேண்டும் – உங்களைப் பற்றிய குறிப்புகளைத் தவிரக் கவிதையைத் தவிர வேற எதுவும் கூட்டத்தில் சொல்லக் கூடாது. – அரசியல் கவிதையில் வரக் கூடாது – எந்த மதத்தையும் இழிவுபடுத்தும்படி கவிதை வாசிக்கக் கூடாது.
எப்போது ஜானகிராமனைப் படிக்க ஆரம்பித்தேன்? இப்போது ஞாபகத்தில் வரவில்லை. மற்ற நாவல்களைப் படிக்க ஆரம்பித்தபோதுதான், ஜானகிராமன் பெயரையும் கேள்விப்பட்டுப் படிக்க ஆரம்பித்தேன். அவருடைய ‘அம்மா வந்தாள்’ நாவலைத்தான் முதலில் படிக்க ஆரம்பித்தேன். எந்த ஆண்டு? ஞாபகமில்லை. ஆனால் ஜானகிராமனுடன் கூட இன்னும் சில நாவலாசிரியர்களின் நாவல்கள் ஏனோ என்னைக் கவரவில்லை. தனிப்பட்ட முறையில் இலக்கிய ஆசிரியர்களின் நாவல்களைப் படிக்கத் தொடங்கியபோது, ஜானகிராமனும் அதிலிருந்தார். கிட்டத்தட்டத் தமிழில் இலக்கிய நாவல்கள் பல வெளிவந்துள்ளன. அப்படி ஒவ்வொன்றாகத் தேடிப் படிக்கும்போது ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள’, ‘மரப்பசு’ நாவல்களையும் படித்தேன். பின்பு ‘மோகமுள்’ என்ற நாவலையும் படித்தேன். ஜானகிராமன் நாவல்களில் பெண் பாத்திரங்கள் படும்பாட்டை நினைத்துப் பார்த்ததுண்டு. பொதுவாக அவருடைய நாவல்களில் ‘அடல்டிரி’ விஷயம் முக்கியமாகக் கையாளப்படுகிறது. ‘அம்மா வந்தாள்’ நாவலில் பூடகமாகவும், ‘மரப்பசுவில்’ பகிரங்கமாகவும் வெளிப்படுகிறது. பிறகு அவருக்கு எழுதுவது என்பது கைவந்தகலையாக இருக்கிறது. ஆண் பெண் உறவுமுறையில் உள்ள ஒழுங்கின்மையையும், முரண்பாட்டையும் சுவாரசியமான முறையில் எழுதி உள்ளார். நாவல் மட்டுமல்லாமல், சிறுகதைகள், பயணக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நாடகங்கள் என்று இலக்கியத்தில், பல தளங்களில் செயல்பட்டவர் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக உள்ளது. ஜானகிராமனைப் படிக்கும்போது, இங்கு கு.ப.ராவையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. ஆண் – பெண் உறவின் அதீதப் போக்கை முரண்பாட்டை கு.ப.ரா சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்திக் காட்டியவர். எளிமையான நடையில், பூடகமாக எழுதுவது அவருடைய கலை. அதே பாணியை ஜானகிரமான் ஸ்வீகரித்துக் கொண்டவர். குறைந்த வயதிலேயே கு ப ரா மறைந்து விட்டார். அவர் இல்லாத குறையைப் போக்கியவர் ஜானகிராமன். ஜானகிராமனின் எல்லை நீண்டு, சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள், என்றெல்லாம் போய்விட்டது. அவர் நாவல்களை மட்டும் படித்துப் பழக்கப்பட்ட எனக்கு, அவர் சிறுகதைகளைப் படிக்க ஏனோ அப்போது தோன்றவில்லை. அதனால் அவர் சிறுகதைகளை முதலில் படிக்க ஆரம்பிக்கவில்லை. இப்போதுதான் அவர் சிறுகதைகளைப் படிக்க வேண்டுமென்று தோன்றியது. (இன்னும் வரும்)
இன்று புதுமைப்பித்தனின் நினைவு நாள். எதாவது ஒரு கதையைப் படித்துவிட்டு எதாவது எழுத முயற்சி செய்ய வேண்டுமென்று தோன்றியது. பக்கம் குறைவாக உள்ள கதையாக எடுத்துக்கொள்ளலாமென்று பட்டது.
புதுமைப்பித்தன் 97 கதைகள் எழுதி உள்ளார். ஜøன் 30ல் மரணம் அடைந்தார். 1948ஆம் ஆண்டு. இங்கு எடுத்துக் கொண்டிருக்கும் கதையின் பெயர் ‘ஒரு கொலை அனுபவம்.’ ஊழியன் என்ற பத்திரிகையில் 22.02.1935ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
சாதாரண ஒன்றரைப் பக்கம் கொண்ட கதையில் புதுமைப் பித்தன் நகைச்சுவை உணர்வுடன் இந்தக் கதையை எடுத்துக்கொண்டு போகிறார். கதைசொல்லி சொல்வதுபோல் இந்தக் கதை ஆரம்பமாகிறது. இது ஒரு தானே சொல்கிற கதை. இருட்டிலே ஒரு மனிதன் தள்ளாடிக் கொண்டு வருகிறான். ரோட்டில் ஒற்றை விளக்கு வெளிச்சம் மட்டும்தான் இருக்கிறது. வருகிற மனிதன் விளக்கு இருக்கும் இரும்பு கம்பத்தில் ஏறி குறுக்கில் அமர்ந்து கொண்டு விடுகிறான். உட்கார்ந்து கொண்டு ‘ராஜாதி ராஜன்’ என்று பாடுகிறான்.
இப்போதுதான் அவன் முகத்தைக் கவனிக்கிறான் கதைசொல்லி. ‘நான் தான அவன் இதென்ன வேடிக்கை’ என்கிறார் கதைசொல்லி. விளக்கு கம்பத்தில் ஏறி உட்கார்ந்திருப்பவனைப் பார்த்தால் கதைசொல்லி முகம் போல் இருக்கிறது. உடனே கதைசொல்லிக்குச் சந்தேகம் வருகிறது. இரட்டை சகோதரன் மாதிரி இருக்கிறானே என்று. உடனே கவலையும் ஏற்படுகிறது. ‘எங்கே வந்து சொத்தில் உரிமை கேட்கப் போகிறானோ’ என்ற கவலைதான்.
விளக்கெல்லாம் அணைந்து விடுகிறது. அந்த இருட்டில் பாதையின் திருப்பத்திலிருந்து இன்னொரு உருவம் வருகிறது. ஏன் இப்படி நடக்கவேண்டும்? அசாமியைப் பார்த்தால் பொம்மை மாதிரி இருக்கிறான். இதென்ன அதிசயம் அவனும் கதைசொல்லி போல் இருக்கிறான். ஒரே குழப்பமாகி விடுகிறது கதைசொல்லிக்கு. ‘கம்பத்தின் மீதி ஏறி இருக்கும் ஆசாமியும் நான்தான். இப்போது வருகிறானே அவனும் நான்தான்,’ என்ற குழப்பம் கதைசொல்லிக்கு.
இந்த இடத்தில் பிரம்மாவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பிரம்மாவிற்கு நான் சொத்து சுகம் வைத்துக்கொண்டிருப்பதில் பொறாமையா என்கிறார்.
இரண்டாவது ஆசாமி நெருங்கி வருகிறான். அவனுக்குத் தாடியும் மீசையும் இருக்கிறது. அவனை உற்றுப் பார்க்கிறான் கதைசொல்லி. சந்தேகமே இல்லை அவனும் நான்தான் என்கிறான் கதைசொல்லி. மூன்று பேரும் நான்தானா என்ற குழப்பம். எல்லாம் நானே என்ற முக்தியை அடைந்து விட்டேனா? தாடியுடைய என் கையில் என்ன மின்னுகிறது? என்ற கேள்வி கதைசொல்லிக்கு ஏற்படுகிறது. கத்தி. ‘முன் செல்லும் எனக்குப் பின் இந்த இரண்டாவது நான் ஏன் பதுங்கிப் பதுங்கிச் செல்ல வேண்டும்?
முதல் நான் எங்கே?’ முதல் நான் குஷியாகக் கம்பத்தின் மீது பாட்டுப் பாடுகிறான். நெருங்கி விட்டான் இரண்டாவது நான். அய்யோ கொல்கிறானே மூன்றும் கதைசொல்லியின் குரல். எல்லாம் இருள். ஒன்றையும் காணோம். விழிக்கிறான். பகலில் என்ன தூக்கம் என்று முதுகைத் தட்டிக்கொண்டிருந்தான் நண்பன். கனவு. ஏன் இதுமாதிரி கனவு வருகிறது. துப்பறியும் நாவல் எழுத வேண்டுமென்று உள்ளத்தாசை. கதைசொல்லிக்கு. இந்த இடத்தில் கதைசொல்லி புதுமைப் பித்தனாக மாறி விடுகிறானோ? தூக்குத் தண்டனை இல்லாமல் ஆட்களைக் கொல்ல வேண்டும்.
பிறகு துப்பறிவோனாகக் கண்டு பிடிக்க வேண்டும். அப்பப்பா? அந்தத் தொழில் நமக்கு வேண்டாம் என்கிறார் புதுமைப்பித்தன் என்கிற கதைசொல்லி பொதுவாக கதைசொல்லி வேறு கதை எழுதுபவன் வேறு. பலருடைய கதைகளில் கதை சொல்லி ஒரு பெண்ணாகவோ ஆணாகவோ முதியவனாகவோ சிறுவனாகவோ இருக்கலாம். அவர்கள் எல்லாம் கதை எழுதுபவனோடு மாறுபட்டுத்தான் தெரிவார்கள்.
இந்தக் கதையில்
புதுமைப்பித்தனே கதைசொல்லியாக வந்து அவருடைய கனவைச் சொல்கிறார். துப்பறியும் கதை எழுதப் போவதில்லை என்று குறிப்பிடுகிறார்.
எளிதான கதை. ஒன்றரைப் பக்கக் கதை. அதைச் சொல்லியிருக்கிற விதம் சிறப்பாக உள்ளது. இங்குதான் கதை எழுதும் விதத்தில் மேதாவித்தனம் தெரிகிறது. புதுமைப்பித்தன் கதைகளில் எந்தக் கதையை எடுத்துப் படித்தாலும் நம்மால் ரசிக்க முடியும். அவருடைய தனித்திறமை எல்லாக் கதைகளிலும் வெளிப்படுகிறது.
இது என் 17வது கதை. இந்தக் கதையைப் படிக்கும்போது ஒரு நிமிடத்திஙூருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும். முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.
அறை
நீங்கள் போன் செய்து என்னைப் பார்க்க வருவதைப் பற்றி அறிவித்துள்ளீர்கள். நீங்கள் ஏன் வர வேண்டும்? உண்மையாக நீங்கள் வருவது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் உங்கள் முகத்துக்கு நேரே அப்படிச் சொல்வதில் எனக்குத் தயக்கமிருக்கிறது.
அவசரம் அவசரமாக என் கண்ணில் தட்டுப்படும் புத்தகங்களை என் புத்தக அறையில் கொண்டு போட்டேன். பின் அறைக் கதவை நன்றாகப் பூட்டினேன்.”
எந்தப் புத்தகமும் உங்கள் கண்ணில் படாது என்று உறுதியாக நம்பினேன். உங்களிடம் ஒரு கெட்டப் பழக்கம் இருக்கிறது. எந்தப் புத்தகத்தைப் பார்த்தாலும் நீங்கள் எடுத்து வைத்துக் கொண்டு விடுவீர்.
உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் புத்தக அலமாரியைப் பார்க்க வேண்டும். எத்தனைப் புத்தகங்களை எல்லாரிடமிருந்து தள்ளிக்கொண்டு வந்தீர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு விடலாம். சரியாகச் சொன்னபடி வீட்டிற்கு வந்து விட்டீர்கள். உங்களை வரவேற்று என் இன்னொரு அறைக்கு அழைத்துக்கொண்டு போனேன். கண்ணில் எதாவது புத்தகம் தென் படுகிறதா என்று பார்த்தேன். நிம்மதியாக இருந்தது எந்தப் புத்தகமும் தென்படவில்லை. ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.
உங்களைக் கூர்ந்து கவனித்தேன். சற்று ஏமாற்றமாக உங்கள் தென்பட்டது.
“என்னய்யா எப்படி இருக்கே?” “நல்லாயிருக்கேன்.” “இலக்கியக் கூட்டத்திற்கு எங்காவது போனீயா?” “போனேன்.” “நீ கூட்டம் நடத்துவது என்ன ஆச்சு?” “மாசம் மூன்றாவது சனிக்கிழமை நடத்துகிறேன்.” “எத்தனைப் பேர் வர்றாங்க” “பத்து பேர். அதற்கு மேல் வந்தால் அது வெற்றிகரமான கூட்டம்.”
இதைச் சொன்னவுடன் நீங்கள் வாய்விட்டுச் சிரிக்கிறீர்கள்.
“என்னய்யா உன் புத்தங்கள் எதுவும் கண்ணில் படவில்லையே?” “பக்கத்து அறையில் வைத்திருக்கிறேன்.” “அந்த அறைக் கதவைத் திற. அங்குப் போகலாம்.” “அந்த அறைக்குப் போக முடியாது.” “சாவி எடுத்துக்கொண்டு வா. திறப்போம்.” “காலையிருந்து சாவியைத் தேடிக் கொண்டிருக்கிறேன். சாவியைத் தொலைத்து விட்டேன்.” உங்கள் முகத்தில் ஏமாற்றம் தெரிகிறது. உங்களிடமிருந்து தப்பிக்க இந்தப் பொய்யைத் தவிர வேற வழியில்லை. நீங்கள் கூர்ந்து உட்கார்ந்து இருந்த அறையைப் பார்க்கிறீர். அப்போதுதான் ஒன்று தோன்றியது. ஆடியோ காசெட்டுகள். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ஆடியோ காசெட்டுகள். உங்கள் கண்ணில் படக்கூடாது என்று நினைத்தேன். பட்டு விட்டது.
“இது என்னய்யா?” “ஜே.கே கேசட்டுகள்.””அதைக் கொடுய்யா…கேட்டுட்டு கொண்டு தர்றேன்.,”. என்று நீங்கள் என்னைக் கேட்காமலேயே எடுத்து வைத்துக்கொண்டீர்கள். நான் செய்வதறியாது திகைத்தேன்.
மாலதி சுவாமிநாதன் எழுதிய காக்கைகள் என்ற சிறு கதை நவீன விருட்சம் 113வது இதழில் வெளிவருகிறது. இதழை முதலில் மின் இதழாகக் கொண்டு வர எண்ணம். அதில் வெளிவர உள்ள கதையை நீங்களும் வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சிறிய கதை. மாலதி சுவாமிநாதன் ஒரு மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர். சிறு கதை
காக்கைகள்
மாலதி சுவாமிநாதன்(மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்)
தினமும் அதே நேரத்தில் அந்த காக்கைக் கூட்டம் வருவதுண்டு. அதே இடத்தில். உட்கார்ந்ததுமே கா…கா..கா எனக் குரலை எழுப்பிப் பாடும். என்ன பிரயோஜனம்? நிராசைதான்!. இந்த கூச்சலுக்குக் காரணம் உண்டு. காக்கைகளுக்கு ஞாபக சக்தி யானைகள் மாதிரி, புத்திக் கூர்மை அதிகம் என்று படித்திருக்கிறேன். நமக்குத் தான் எல்லாக் காக்கைகளும் ஒன்று போலத் எனத் தோன்றும். அவற்றுக்கு நம்மை அடையாளம் தெரியுமாம் . காக்கைகளுக்கு இங்கே நிலவுவது லாக்டவுன், கோவிட்-19 என்று தெரியவில்லை. தங்களுக்கு உணவு தருபவரைக் காண விரும்பின. அவள் கண்ணில் பட்டாள். ஆனால் ஆடாமல், அசையாமல் இருக்கிறாளே? ஒன்றும் புரியவில்லை. காக்கை கூட்டம் நெடுநேரம் சத்தமிட்டு விட்டு, பறந்து போய் விட்டது. மறு நாளும். அதே நேரத்தில் வந்தது காக்கை கூட்டம். கா…கா..என்று குரல் எழுப்பியது . சற்று நேரம் காத்திருந்து, பிறகு எல்லாக் காக்கைகளும் பறந்து விட்டன. அடுத்த நாளும், காலை ஐந்தரை மணிக்கு வரும் காக்கை கூட்டம், வழக்கம் போல் அவளுடைய பால்கனி அருகில் வந்தது. சமையலறைக்குப் பக்கத்திலிருந்தது இந்த பால்கனி. அங்கு அமர்ந்து, கா…கா..கா…வென கரைந்து இறக்கையை வேகமாக அடித்துக் கொள்ளும் சத்தம்…. ஒரே சத்தம். அடக் கடவுளே! என்றே அவள் விரைந்து வந்தாள். ஆனால், வெடுக்கென்று திரும்பி விட்டாள். கால்களைத் தேய்த்துக் கொண்டு நடந்தாள், தலை கலைந்து இருந்தது, முகத்தில் சோகம் மட்டுமே. எதிலுமே எந்த பிடிப்பும், ஈடுபாடும் இல்லாதது வெளிப்பட்டது. காக்கை ஆரவாரம் செய்யும் போது, முன்பெல்லாம் இவளும் உணவு வைத்து, காக்கைகளுடன் கடகடவென உயர்ந்த குரலில் குதுகலமாகப் பேசுபவள். இன்று பேசாமல் போய்விட்டாளே? அவளது மௌனம் காக்கைகளுக்குப் புரியவில்லை. ஏன் உணவு வைக்கவில்லை ஏன் தங்களுக்கு ஈடுகொடுத்து சத்தம் போடவில்லை? என்ற கேள்விகள். குழப்பம் நிலவியது. காக்கை கூட்டம் வந்தாலும் அன்று ஒரு கா சத்தம் செய்யாமலேயே இருந்து விட்டுப் பறந்துசென்றது.. அடுத்த நாள், கொஞ்சம் தாமதமாக, ஆறு மணி அளவில் வழக்கம் போல் அந்த பால்கனியில் காக்கைக் கூட்டம் வந்து அமர்ந்தது. அவள் ஏதோ செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தது. அங்கேயே உட்கார்ந்து, சிறிது நேரத்திற்குப் பிறகு பறந்து விட்டது. காப்பி கோப்பையைக் கையில் ஏந்தி, தற்செயலாக பால்கனிக்குச் சென்ற அவள் கால் வைத்த இடத்தில், ஒரு செம்பருத்திப் பூ. அவ்வளவு ‘ஃப்ரெஷ்’! வியக்கவில்லை. அப்படியே விட்டு விட்டாள். பிற்பகல், இவள் உணவு உண்ணும் நேரத்தில் ஒரு பிடி சாதத்தைக் காக்கைகளுக்கு வைப்பது வழக்கம். ஐந்து காக்கைகள் பழக்கத் தோஷத்தில் வந்தன. அன்று உணவு வைக்கப்படவில்லை. அவை ஏன் வந்தன? பசியைப் போக்கிக்கொள்ளவா அல்லது அவளுக்கு ஞாபகப் படுத்தவா? தெரியவில்லை. காக்கைகளின் பாட்டு பலமாக இருந்தது. பல நிமிடங்கள் பாட, அவள் அங்கே வந்ததும் வெடுக்கென்று பறந்து விட்டன. பால்கனியில் பல சுள்ளிகளைப் பார்த்தாள். ம்ச் எனப் பெருமூச்சுடன் உள்ளே வந்துவிட்டாள். செம்பருத்தி இவளைப் போல வாட ஆரம்பித்து இருந்தது. மாலை, நாலரை மணி. அவள் தேநீர் அருந்தும் நேரம். அந்நேரத்தில், பிஸ்கட் போடுவாள். போடவில்லை. ஆனாலும் காக்கைகள், அந்த நேரத்தில் வந்தன, இலைகளைக் கொத்து கொத்தாக விட்டுச் சென்றன. அவளுடைய எதிர்வீட்டுனர் கோவிட் தொற்று பறவைகளுக்கு வரக்கூடாது என்ற அச்சத்தினால்தான் அவள் உணவு வைக்கவில்லை என எடுத்துக் கொண்டன. . காக்கைகளோ இதை எல்லாவற்றிற்கும் அப்பால், “நாங்கள் அவளைப் பார்க்கவே தினமும் வருவோம்-பாடுவோம்”. (காக்கைகளின் மைன்ட் வாயிஸ்) . ஒரு ஒப்பந்தம் – ஏதோ ஒன்றைப் போட்டுப் போவதாக. ஒரு காக்கை, அவளுடைய ஒரு ஜன்னலை மூக்கால் தட்டத் தட்ட, அவள் அங்கே பக்கத்தில் வருவது போல் இருந்தது, அவள் ஜன்னலைத் திறந்ததும் பறந்து விட்டது. மிதமான மாலை வெயில், சில்லென்று காற்று அவள் முகத்தில் மல்லிகையின் சுகந்தத்துடன் பட்டதும் திடீரென விழித்ததுப் பார்த்தாள். அந்நிலப்பரப்பில் மல்லி விழுந்த கிடந்த தரையைப் பார்த்து நின்றாள். காக்கை தானும் அங்கே இருப்பதை ஞாபகப் படுத்த, இப்படி அப்படிப் பறந்து சென்று கொண்டிருந்தது. ஒரு விளையாட்டானது. இந்த ஜன்னல் வழியே வெளியே பார்ப்பது ஆரம்பமானது. உலகைப் பார்த்தாள். இன்னொரு அறையின் ஜன்னலை ஒட்டினார்போல இன்னொரு பால்கனி. அந்தப் பக்கம் காக்கை அழைப்பது கேட்டது. பல நாட்களுக்குப் பின் அங்குச் சென்றாள். விதவிதமான பூக்கள், சுள்ளி, காகிதம் என்னென்னவோ. அதையும் பார்த்து, காக்கை பறப்பதையும் பார்த்தாள், வெளியே பார்த்தாள். அவளுக்கு அன்று தான் புதியதாகப் பார்ப்பது போலத் தோன்றியது. இந்த ஜன்னலின் வெளியே உள்ள உலகம் வேறாக இருந்தது. ஒவ்வொரு ஜன்னல் வெவ்வேறு காட்சிகள். காக்கைகள், அவளை ஜன்னல் அருகே, பால்கனியில் சந்தித்தன. தாங்கள் உச்சத் ஸ்தாயியில் பாடும் பாட்டைக் கேட்டும் , அவளை மெதுவாகச் சுற்றி உள்ள உலகைப் பார்த்தும், ரசிக்கச் செய்தன . காக்கை கூட்டம் தங்களது தோழியைத் திரும்பப் பெற்றதில் மிகக் குதுகலமாகப் பாடிக் கொண்டாடியது.
தினமும் அதே நேரத்தில் அந்த காக்கைக் கூட்டம் வருவதுண்டு. அதே இடத்தில். உட்கார்ந்ததுமே கா…கா..கா எனக் குரலை எழுப்பிப் பாடும். என்ன பிரயோஜனம்? நிராசைதான்!. இந்த கூச்சலுக்குக் காரணம் உண்டு. காக்கைகளுக்கு ஞாபக சக்தி யானைகள் மாதிரி, புத்திக் கூர்மை அதிகம் என்று படித்திருக்கிறேன். நமக்குத் தான் எல்லா காக்கையும் ஒரே மாதிரியே எனத் தோன்றும். அவர்கள் நம்மை அறிவார்கள். காக்கைகளுக்கு இங்கே நிலவுவது லாக்டவுன், கோவிட்-19 என்று தெரியவில்லை. அவர்களைப் பொருத்தவரை தங்களுக்கு உணவு தருபவரைக் காண ஆவல். கண்பட்டாள். ஆடாமல், அசையாமல் இருப்பதைப் பார்த்தார்கள். ஒன்றும் புரியவில்லை. காக்கை கூட்டம் நெடுநேரம் சத்தமிட்டு விட்டு, பறந்து போய் விட்டது. மறு நாளும். அதே நேரத்தில் வந்தன காக்கையர் கூட்டம். கா…கா..என்று குரல் எழுப்பின. சற்று நேரம் காத்திருந்து, பிறகு பறந்து விட்டன. அடுத்த நாளும், காலை ஐந்தரை மணிக்கு வரும் காக்கை கூட்டம், வழக்கம் போல் அவளுடைய பால்கனியில் வந்தது. சமையலறைக்குப் பக்கத்திலிருந்தது இந்த பால்கனி. அங்கு அமர்ந்து, கா…கா..கா…வென, இறக்கையை வேகமாக அடுத்துக் கொள்ளும் சத்தம் வந்தது. அவ்வளவு சத்தம். அடக் கடவுளே! என்றே அவள் விரைந்து வந்தாள். வெடுக்கென்று திரும்பி விட்டாள். கால்களைத் தேய்த்துக் கொண்டு நடந்தாள், தலை கலைந்து இருந்தது, முகத்தில் சோகம் மட்டுமே. எதிலுமே எந்த பிடிப்பும், ஈடுபாடும் இல்லாதது வெளிப்பட்டது. காக்கை ஆரவாரம் செய்யும் போது, முன்பெல்லாம் இவளும் காக்கையுடன் டகடகவென உயர்த்த குரலில் பேசி, நெல் வைத்து, அவர்களுடன் குதுகலமாகப் பேசுபவள். அதனால் தான் இந்த மொளனமாக இருப்பது காக்கைக்குப் புரியவில்லை. ஏன் நெல் இல்லை? ஏன் தங்களுக்கு ஈடுகொடுத்து சத்தம் வருவதில்லை? என்ற கேள்விகள். குழப்பம் நிலவியது. காக்கை கூட்டம் வந்தாலும் அன்று ஒரு கா சத்தம் செய்யாமலேயே இருந்து விட்டுப் பறந்து சென்றார்கள். அடுத்த நாள், கொஞ்சம் தாமதமாக, ஆறு மணி அளவில் வழக்கம் போல் அந்த பால்கனியில் காக்கைக் கூட்டம் வந்து அமர்ந்தது. அவள் ஏதோ செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தது. அங்கேயே உட்கார்ந்து, சிறிது நேரத்திற்குப் பிறகு பறந்து விட்டது. காப்பி கோப்பையைக் கையில் ஏந்தி, அகஸ்மாத்தாக பால்கனிக்குச் சென்ற அவள் கால் வைத்த இடத்தில், ஒரு செம்பருத்திப் பூ. அவ்வளவு ஃப்ரெஷ்! வியக்கவில்லை. அப்படியே விட்டு விட்டாள். பிற்பகல், இவள் உணவு உண்ணும் நேரத்தில் ஒரு பிடி சாதத்தைக் காக்கைகளுக்கு வைப்பது வழக்கம். அந்த ஐந்து காக்கை பழக்கத் தோஷத்தில் வந்தார்கள். அன்று உணவு இல்லை. பசியைப் போக்கவா இல்லை அவளுக்கு ஞாபகப் படுத்தவா? தெரியவில்லை காக்கைகளின் பாட்டு பலமாக இருந்தது. பல நிமிடங்கள் பாட, அவள் வெடுக்கென்று அங்கே வந்ததும் பறந்து விட்டார்கள். பால்கனியில் பல சுள்ளிகளைப் பார்த்தாள். ம்ச் எனப் பெருமூச்சுடன் உள்ளே வந்துவிட்டாள். செம்பருத்தி இவளைப் போல வாட ஆரம்பித்து இருந்தது.மாலை, நாலரை மணி. அவள் தேநீர் அருந்தும் நேரம். அந்நேரத்தில், பிஸ்கட் போடுவாள். போடவில்லை. ஆனாலும் இவர்கள், அதே நேரத்தில் வந்தார்கள், இலை கொத்து கொத்தாக விட்டுச் சென்றார்கள்.அவளுடைய எதிர்வீட்டுனர் கோவிட் தொற்று பறவைகளுக்கு வரக்கூடாது என்ற அச்சத்தினால்தான் அவள் உணவு வைக்கவில்லை என எடுத்துக் கொண்டார்கள். காக்கைகளோ இதை எல்லாவிற்கும் அப்பால், “நாங்கள் அவளைப் பார்த்துக் கொள்ள நேரம், வருவோம்-பாடுவோம்”. அவர்களுக்குள்ளேயே ஒரு ஒப்பந்தம் (காக்கைகளின் மைன்ட் வாயிஸ்) – ஏதோ ஒன்றைப் போட்டுப் போவதாக. ஒரு காக்கை, அவளுடைய ஒரு ஜன்னலை மூக்கால் தட்டத் தட்ட, அவள் அங்கே பக்கத்தில் வருவது போல் செய்ய, அவள் ஜன்னலைத் திறந்ததும் பறந்து விட்டது. மிதமான மாலை வெயில், சில்லென்று காற்று அவள் முகத்தில் அந்த மல்லியின் சுகந்தத்துடன் பட்டதும் திடீரென விழித்ததுப் பார்த்தாள். அந்நிலப்பரப்பில் மல்லி விழுந்த வெள்ளை தரையைப் பார்த்து நின்றாள். காக்கை தானும் அங்கே இருப்பதை ஞாபகப் படுத்த, இப்படி அப்படிப் பறந்து சென்று கொண்டிருந்தது. ஒரு விளையாட்டானது. இந்த ஜன்னல் வழியே வெளியே பார்ப்பது ஆரம்பமானது. உலகைப் பார்த்தாள். இன்னொரு அறையின் ஜன்னலை ஒட்டினார் போல இன்னொரு பால்கனி. அந்த பக்கம் காக்கை அழைப்பது கேட்டது. பல நாட்களுக்குப் பின் அங்குச் சென்றாள். விதவிதமான பூக்கள், சுள்ளி, காகிதம் என்னென்னவோ. அதையும் பார்த்து, காக்கை பறப்பதையும் பார்த்தாள், வெளியே பார்த்தாள். அவளுக்கு அன்று தான் புதியதாகப் பார்ப்பது போலத் தோன்றியது. இந்த ஜன்னலின் வெளியே உள்ள உலகம் வேறாக இருந்தது. ஒவ்வொரு ஜன்னல் வெவ்வேறு காட்சிகள். காக்கைகள், அவளை ஜன்னல் அருகே, பால்கனியில் சந்தித்தன. தாங்கள் உச்சத் ஸ்தாயில் பாடும் பாட்டை, அவளை மெதுவாகச் சுற்றி உள்ள உலகைப் பார்க்க, ரசிக்கச் செய்தது. காக்கை கூட்டம் தங்களது தோழியைத் திரும்பப் பெற்றதில் மிகக் குதுகலமாகப் பாடி கொண்டாடினார்கள்.
சமீபத்தில் நான் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். அதைப் பற்றிக் கூடிய சீக்கிரத்தில் என் அறிவுக்கு எட்டியவரை எழுதலாமென்று நினைக்கிறேன். அந்தப் புத்தகம் பெயர் தாவோ தே ஜிங் (தாவோயிசத்தின் அடித்தளம்) லாவோ ட்சு என்பவர் ஆசிரியர். அதைச் சாரமும் விசாரமும் செய்திருப்பவர் சந்தியா நடராஜன். அந்தப் புத்தகத்திற்கு இந்த ஆண்டு ஆத்மாநாம் விருது கொடுத்து கௌரவம் செய்திருக்கிறார்கள். விருது பெறப்போகிறவருக்கும் வாழ்த்துக்கள். விருது கொடுக்கப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள். அடிக்கடி நானும் நடராஜனும் பூங்காவில் நடைப்பயிற்சி செய்வோம். யார் கண்ணோ பட்டுவிட்டது. 4 மாதங்களாகப் பார்க்கவில்லை. கொரோனா பிரித்து விட்டது. இது குறித்தும் தாவோ எதாவது எழுதியிருப்பார். கண்டு பிடிக்க வேண்டும்.
விருட்சம் நான்காவது சூம் கவிதை வாசிக்கும் கூட்டம் நாளை 26.06.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்கள் பெயர்கள் பின்வருமாறு : 1. லாவண்யா 2. மனோன்மணி புது எழுத்து 3. சத்தியானந்தன் 4. சரஸ்வதி 5. சுரேஷ் பரதன் 6. எஸ்.லக்ஷ்மணன்
azhagiyasingar mouli is inviting you to a scheduled Zoom meeting. Topic: Virutcham Poetry Reading 5 Time: Jun 26, 2020 07:00 PM India
பா.ராகவனின் யதி என்ற நாவலை முன் வைத்து ஓர் உரையாடல்..
அழகியசிங்கர்
திரும்பவும் சந்திப்பு நிகழ்கிறது. பா ராகவன் குறித்து நாவலைப் பற்றிப் பேச.
ஜெகன் : வணக்கம். மோகினி : வணக்கம். அழகியசிங்கர் : வணக்கம். ஜெகன் : யதி நாவலை நானும் முழுவதுமாகப் படித்து விட்டேன். மோகினி : இந்த நாவலை இலக்கியத் தரமான நாவலாகக் கருதுகிறீர்களா? அழகியசிங்கர் : நிச்சயமாக. பரிசுக்குரிய நாவலாகவும் கருதுகிறேன். ஜெகன் : நம்ப முடியாத சம்பவம் இதில் நிறைய இருக்கின்றன. அழகியசிங்கர் : நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள் என்று தெரியும். இந்த இலக்கியப் பிரதியில் எல்லாம் இருக்கிறது. மோகினி : அடுக்கடுக்காக பல நிகழ்ச்சிகள். பல சம்பவங்கள். எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் எதாவது கிடைக்கும். ஜெகன் : உண்மைதான். ஆனால் படிக்கும்போது நம்புவது கடினம். அழகியசிங்கர் : இந்தப் பிரதியில் நான் ஒரு இடத்தில் படித்தேன். சித்ரா என்ற கதாபாத்திரம் விமல் என்ற கதாபாத்திரத்துடன் பேசுகிற மாதிரி. உண்மையில் சித்ரா ஒரு ஆவி உலகத்தில் நடமாடும் கதாபாத்திரம். மோகினி : இதையெல்லாம் எவ்வளவு தூரம் நம்புவது. அழகியசிங்கர் : சமீபத்தில் நடிகர் விக்ரம் நடித்த டேவிட் என்ற படத்தைப் பார்த்தேன். விக்ரமுடன் அவர் அப்பா பேசுவதுபோல் பல காட்சிகள் வருகின்றன. ஆனால் டேவிட் அப்பா உயிருடன் இல்லை. இது ஒரு சர்ரியலிஸ படமாக இருக்கும்போது தோன்றுகிறது. அதே போல் யதி ஒரு சர்ரியலிஸ நாவலாக இருக்கும். பல நம்பமுடியாத சம்பவங்களைக் கொண்ட நாவல், ஜெகன் : இதில் இடாகினிப் பேயெல்லாம் வருகிறது. அதை இரண்டாவது பையன் வினய்தான் தன் கைவசப்படுத்தி வைத்திருக்கிறான். மோகினி : சித்ராவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்தபின் கல்யாணத்திற்கு முதல் நாள் வினோத் காணாமல் போய்விடுகிறான். சித்ரா தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள். ஆவி ரூபத்தில் அவனைப் பழி வாங்க நினைக்கிறாள். அவன் அண்ணன் வினய் மூலமாக முயற்சி செய்து பார்க்கிறாள். ஜெகன் : நாவல் முடிவில் நால்வரும் அவர்கள் அம்மாவிற்குப் பிறந்தவர்கள் இல்லை என்பதுபோல் வருகிறது. மோகினி : எல்லாம் பூடகமாகக் கொண்டு போயிருக்கிறார். கடைசி வரை அவர்கள் அம்மா தன் பிள்ளைகளிடம் நீங்கள் என் பிள்ளைகளென்று சொல்லவில்லை. ஜெகன் : இந்த இடத்தில் இந்தப் பிரதியில் இப்படி வருகிறது எதற்கு அதிர்ச்சியடைய வேண்டும்? ஏதோ ஒரு பெண் வடிவிலிருந்துதான் எல்லோரும் தோன்றுகிறோம். ஏதோ ஒரு பெண் வடிவை அம்மா என்கிறோம் என்னைப் பொறுத்தவரை எல்லாப் பெண்களுமே ஒன்றுதான். மோகினி : அதேபோல் இன்னொன்றைச் சொல்லவேண்டும். அம்மாவின் அப்பா காலராவில் இறந்து போன நிகழ்ச்சியும் வருகிறது. அழகியசிங்கர் : இதை இன்னொரு முறை படித்தால்தான் புரியும். படிப்பதுகூட அங்கங்கே பக்கங்களைப் புரட்டிக்கொண்டு படிக்கலாம். எனக்கு என்னவோ எதைத் தேடிக்கொண்டு போனார்களோ அது நால்வர்களுக்கும் கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது. சொறி முத்து சித்தர் என்ற கதாபாத்திரம் விசித்திரமாக இருக்கிறது. அம்மாவின் மரணத்தில் பங்குகொள்ள மூத்த அண்ணன் கூட நாய் ரூபத்தில் வந்து விடுகிறான். படித்த திருப்தியை உண்டாக்கிய நாவல்.