பூனைகளைக் கொண்டாடுவோம்..

அழகியசிங்கர்

உலகப் பூனைகள் தினம் இந்த மாதம் 8ஆம் தேதி முடிந்து விட்டது.  
வரும் வெள்ளிக்கிழமை பூனைகளைப் பற்றி கவிதைகள் வாசிப்பது என்று தீர்மானித்துள்ளோம்.  இதுவரை விருட்சம் சார்பில் நடைபெற்ற கவிதைக் கூட்டங்களில் 60க்கும் மேற்பட்ட கவிஞர்கள் கவிதைகள் வாசித்து கவிஅரங்சத்தைக் கௌரவப்படுத்தி உள்ளார்கள்.
அவர்களில் பெரும்பாலோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பாக்குவார்கள் என்று நினைக்கிறேன்.
இன்னும் புதியவர்கள் சிலரும் கவிதைகள் வாசிக்க உள்ளார்கள்.  விருட்சம் கவிதை வாசிப்பு என்ற பெயரில் ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கியிருக்கிறேன்.  கவிதைகள் வாசித்த எல்லோருடைய பெயர்களையும் அதில் சேர்த்துள்ளேன். 
ஒரு குழுவாகச் செயல்பட வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது.
பூனையைப் பற்றி கவிதை வாசிக்கக் குறைந்தது 60பேர்களாவது வருவார்கள் என்று நினைக்கிறேன்.  எல்லோரும் ஒருமுறைதான் ஒரு கவிதைதான் வாசிக்க இயலுமென்று நினைக்கிறேன்.
பூனை வாழ்க.  மியாவ்.  (பாஸ்கரனின் பூனைப்படம்)

எளிமையான மனிதர்…

அழகியசிங்கர்

அவர் தி நகரில் பூங்கா லாட்ஜில் ஒரு சிறிய அறையில் வாடகைக்கு எடுத்துக்கொண்டு தங்கியிருந்தார்.  ஒரே அறை.  நான் போய்ப் பார்க்கும் போது அந்தச் சிறிய அறையில் மகிழ்ச்சியாக இருப்பவர் ஸ்டெல்லா புரூஸ். 
பெற்றவர்களை விருதுநகரில் விட்டு விட்டு, சுற்றம் எதையும் சேர்த்துக்கொள்ளாமல், ஒருவர் தனியாக வாழ்வது என்னால் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.”
படிக்க சில புத்தகங்கள், கேட்க சில இசைத்தட்டுக்கள், பழக சில நண்பர்கள்.  அவ்வளவுதான்.  அவர் உலகம் அத்துடன் முடிந்தது.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உபாசகர்.  எதைப் பற்றியும் தெளிவாக தன் கருத்துக்களைக் கூறக் கூடியவர்.  இப்படி வாழ்ந்து வந்த ராம் மோஹன் என்கிற ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்று கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
இப்போதெல்லாம் இருந்தால் அவருக்கு 80 வயது முடிந்திருக்கும்.  மார்ச்சு ஒன்றாம் தேதி 2008ல் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  அவர் தற்கொலை செய்து கொண்டே 12 ஆண்டுகள் முடிந்து விட்டது.
அவருடைய பிறந்தநாள் இன்று.  ஒவ்வொரு முறையும் நான் ஞாபகமாய் அவர் பிறந்த தினத்தையும் மரணம் அடைந்த தினத்தையும் முகநூலில்  ஞாபகப்படுத்தும் வழக்கம் உள்ளவன்.
கண்ணுக்குத் தெரியாத சிலுவைகள் என்ற கட்டுரையில் அவரி; இதுமாதிரி எழுதியிருக்கிறார். …..1965ல் சென்னை வாழ்க்கைக்கு இடம் பெயர்வதற்கு முந்திய சில மாதங்களின் பெரும்பான்மையான நேரங்கள் நூல் நிலையக் கிளையிலேயே எனக்குக் கழிந்தது.  கு.அழகிரிசாமி, கு.ப.ரா போன்றோரின் சிறுகதைத் தொகுப்புகளும் அங்கு எனக்கு வாசிக்கக்  கிடைத்தன. 1970ஆம் வருடம் ஞானரதம் என்ற இலக்கிய இதழின் என் எழுத்து முதல் முறையாகப் பிரசுரம் பெற்றது.  ஞானரதம் இதழின் ஆசிரியர்.  ஜெயகாந்தன்.  இதுதான் வாழ்க்கையின் எதிரேபாராத சம்பவம்.  தமிழில் என்னுடைய எழுத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டது ஜெயகாந்தனின் எழுத்துக்கள்.  என் எழுத்து பிரசுரமாவதற்கான பிள்ளையார் சுழி போட்டது ஜெயகாந்தன் ஆசிரியராகக் கொண்ட பத்திரிகை…
இப்படி எழுதியிருக்கும் ஸ்டெல்லா புரூஸ் ஆனந்தவிகடனில் தொடர்கதை எழுதிப் பிரபலமான எழுத்தாளர் ஆகிவிட்டார்.  
அந்தக் கட்டுரையில் சி.சு.செல்லப்பாவைப் பற்றிக் குறிப்பிடும்போது இப்படி எழுதுகிறார்.
…..இந்த இடத்தில் சி.சு செல்லப்பா மரணம் குறித்து எனக்குள் இருக்கும் ஆதங்கம் ஒன்றினை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.  மொத்த வாழ்க்கையும் இலக்கியத்திற்கு அர்ப்பணித்த இலக்கிய யாத்ரீகன் செல்லப்பா.  அந்த அயராத இலக்கிய யாத்ரீகனின் மரணம் அதற்கான மாபெரும் அஞ்சலியைப் பெறவில்லை.  அந்த இலக்கியவாதியை நினைவு கூறும் இலக்கிய கொண்டாட்டங்கள் கொண்டாடப்படவில்லை.  என்ன காரணம்? அதற்கான நிறுவன பலம் செல்லாப்பாவிற்குப் பின்னால் இல்லை.  அவருக்குக் கொடி கட்டுவதற்கான வலைப்பின்னல் அமைப்புகள் உலகம் பூராவும் விரிந்து கிடக்கவில்லை…
ஸ்டெல்லா புரூஸ÷ற்கும் அந்த நிறுவன பலம் இல்லை.  ஏன் இன்றைய காலகட்டத்தில் எந்த எழுத்தாளருக்கும் இல்லை. அதுதான் நிதர்சன உண்மை.    

உலகப் பூனைகள் தினத்தை ஒட்டி விருட்சம் கவியரங்கம்

அழகியசிங்கர்

உலகப் பூனைகள் தினம் இன்று.  நான் விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டம் நடத்த ஆரம்பித்து 3 மாதங்கள் ஓடிவிட்டன.  அடுத்த வாரம் (14.08.2020) உலகப் பூனைகள் கவியரங்கம் நடத்த முன் வந்துள்ளேன். 
பூனைகள் குறித்து ஏராளமானவர்கள் கவிதைகள் எழுதி உள்ளார்கள்.  பூனை ஒரு ஆன்மிக மிருகம்.  எளிதில் யாரிடமும் பழகாது.   ஒரு பூனையைத் தூக்கி மேலே போட்டால் அது கொஞ்சமும் அடிப்படாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் திறமை வாய்ந்தது.  அசோகமித்திரன் தாமோதர ரெட்டி வீட்டில் வசித்தபோது அவருடன் பூனைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
சமீபத்தில் நான்  கவிதை வாசிக்கும் கூட்டம் நடத்தும் போது ஒவ்வொரு முறையும் பூனைகள் குறித்து கவியரங்கம் நடத்த வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும்.
இதோ அடுத்த வாரம் உலகப் பூனைகள் கவியரங்கம் நடத்த உள்ளேன்.
முதலில் பாரதியார் எழுதிய பூனைக் கவிதையுடன் துவங்க உள்ளேன்.  
பூனைகள் குறித்து கவிதைகள் எழுதி உள்ள கவிஞர்களை எல்லாம் ஒன்று திரட்ட விரும்புகிறேன்.
வாசிக்க வரும் ஒவ்வொரு கவிஞரும் பூனை பற்றி எழுதிய கவிதை மட்டும் வாசிக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு கூட இருக்கலாம்.   வாசிக்க வருபவர்கள் அவர்கள் கேள்விப்பட்ட வாசித்த கவிதைகளைக் கூட வாசிக்கலாம்   
எல்லாரும் வாசித்த கவிதைகளைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வருவேன்.   நான் ஏற்கனவே பூனைகள் குறித்து ஒரு புத்தகமாகக் கொண்டு வர முனைந்துள்ளேன்.
நீங்கள் பூனையைக் குறித்து வாசிக்க விரும்புவதாக இருந்தால் உங்கள் தொலைப் பேசி எண்ணைக் குறிப்பிடவும்.
அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை (14.08.2020) பூனையைக் கொண்டாடுவோம். 
நன்றி. மியாவ். 
பூனைக் கவிதையை ஞாபகப்படுத்தும் விதமாய் இதோ ஒரு பூனைக் கவிதை 

               இரண்டு பூனைகள்

ஒரு கருப்புப் பூனை நாற்காலி மீது அமர்ந்து கொண்டு என்னைப் பார்த்தது மியாவ் என்றது..
இன்னொரு பூனை கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில்  நாற்காலி கீழே அமர்ந்திருந்தது. என்னைப் பார்த்து மியாவ் மியாவ் என்று இரண்டு முறை கத்தியது
நான் பேசாமல் வந்து விட்டேன்.


நாளை எழுத்தாளர் சா.கந்தசாமிக்கு அஞ்சலிக் கூட்டம்

அழகியசிங்கர்

கடந்த சில மாதங்களாக  சூமில்தான் கூட்டங்கள் நடக்கின்றன. நேரில் கூட்டம் நடத்துவதுபோல் இது வராது என்று ஒரு சிலர் நினைக்கலாம்.  ஆனால் சூமில் கூட்டம் நடத்தும்போது எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை.  யார் வேண்டுமானாலும் எங்கிருந்தாலும் கலந்து கொள்ளலாம்.
இன்றைய சூழ்நிலையில் நேரிடையாகக் கூட்டம் நடத்த இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மூகாம்பிகை காம்பளெக்ஸில் 50க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி உள்ளேன்.  அங்குத் தொடர்ந்து வருபவர்கள் பத்துக்கும் மேல் இருக்க மாட்டார்கள். 
ஆனால் சூமில் நடத்தும் கூட்டங்களில் 40க்கு மேல் வருகிறார்கள்.  
எழுத்தாளர் சா.கந்தசாமிக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்துகிறோம். இதுவரை பத்து பேர்களுக்கு மேல் கலந்துகொண்டு பேச வருவதாகக் கூறி உள்ளார். அவர்களுக்கு நன்றி.
இன்னும் பலர் கலந்துகொண்டு பேச விரும்பினால் நேரில் சூமில் வரும்போது தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எல்லோரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நாளை (06.08.2020) ஏழுமணிக்குக் கூட்டம்.  கூட்டம் பற்றி விபரம் இங்குத் தருகிறேன்.  

Zoom meeting ID 83876967530 No Password US02WEB.ZOOM.USJoin our Cloud HD Video Meeting

1Sathya GP

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 149


அழகியசிங்கர்  



பூக்குட்டி 



யாழி 



அவனது கையசைவில் ஒலித்த  மணி
எழுப்பி விடுகிறது பூக்குட்டியை
கோர்த்து மாலையைப்போல்”
குச்சியில் தொங்கும் பஞ்சு மிட்டாயை
விழிவிரித்து இதழ்பிரித்து
பெரும்புன்னகையுடன் ஏந்திக்கொள்கிறாள்
புசுபுசுவென இருக்கும் பிங்க்பொதியை
விரலால் தொடுகிறாள்

ஆஆ வென வாய்திறந்து
நாக்கு ரோஸ்கலராயிடுசிசே சொல்ஙூக் குதிக்கிறாள்
அந்த பிங்க் நிறச்சாலையில்
பயணிக்கத் தொடங்கிவிட்டேன் நான்


	நன்றி : கேவல் நதி - யாழி - உயரிமை பதிப்பகம் - பக்: 64 - விலை : 60. 

எழுத்தாளர் சா.கந்தசாமிக்கு சூம் மூலம் அஞ்சலி


அழகியசிங்கர்


விருட்சத்துடன் குவிகம் இணைந்து நடத்தும் சூம் கூட்டம்.

விருட்சம் மூலமாக  அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன்.   கடைசியாக நடத்திய அஞ்சலிக் கூட்டம் அசோகமித்திரனுக்கு .
ஞாபகத்திலிருந்து சொல்ல விரும்புகிறேன் யார் யாருக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேனென்று.  1. சி சு செல்லப்பா 2. ஷண்முக சுப்பையா 3. கரிச்சான் குஞ்சு 4. வெங்கட் சாமிநாதன் 5. ஜெயகாந்தன் 6. ஞானக்கூத்தன்   7 அசோகமித்திரன் 
இவர்களில் பலர் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள்.  சிலர் நண்பர்கள் சொல்லி கூட்டம் நடத்தியிருக்கிறேன்.
இந்த முறை சூம் மூலமாகக் கூட்டம் நடத்த எண்ணம்.  கலந்து கொள்ள விரும்புபவர்கள்  9444113205 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் வாட்ஸ்அப்பில் தெரியப்படுத்தவும்.  
தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய எழுத்தாளர்களில் சா.கந்தசாமியும் ஒருவர்.  சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று அவருடைய பங்களிப்பை யாரும் மறைக்க முடியாது. 
அவருடைய சாயா வனம் என்ற நாவல் புத்தகமாக வரும்போது அவருக்கு வயது 24.  திரும்பவும் அதை மூன்று முறை எழுதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
        கூட்டம் வரும் வியாழக்கிழமை – 06.08.2020 – 7 மணிக்கு நடைபெற உள்ளது.

சா.கந்தசாமிக்கு அஞ்சலியைத் தெரிவிக்க வேண்டியவர்கள் முன்னதாக பதிவு செய்து கொள்ளுங்கள்.  9444113205 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுங்கள். 

கந்தசாமி கந்தசாமிதான்…



அழகியசிங்கர்


இன்று மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து (கசடதபற ஆசிரியர்) போன் வந்தது.  காலை 7.30 மணிக்கு சா. கந்தசாமி இறந்து விட்டதாகத் தகவல் கூறினார்.
இந்த மாதம் சில தினங்களுக்கு முன்னால்தான் கந்தசாமி 80வயதை முடித்திருந்தார்.  அப்போது அவர் மருத்துவ மனையில் தீவிர கண்காணிப்பிலிருந்தார்.  “
அவருடைய பிறந்தநாள் பற்றி முகநூலில் எழுதலாமா என்று சந்தியா நடராஜனைக் கேட்டேன்.  அவர் வேண்டாம் என்று சொன்னார்.  அவர் சொன்னது நியாயமாகப் பட்டது.  அவர் மருத்துவமனையிலிருந்து மீண்டு வரட்டும் என்று காத்திருந்தோம்.
இன்று மரணமடைந்து விட்டார்.  என் முக்கியமான எழுத்தாளர் வரிசையில் அவரும் ஒருவர்.  பல ஆண்டுகளாக நான் அவரிடம் நட்புடன் பழகி வருகிறேன்.  உற்சாகி.  தோன்றுவதைச் செய்து முடித்து விட வேண்டுமென்று நினைப்பவர்.     
அவருடன் பழகினால் முதுமையே தெரியாது.  நான் எழுதிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தால் உடனே படித்து விட்டு அடுத்தநாள் போன் செய்து தன் அபிப்பிராயத்தைச் சொல்லி விடுவார். அந்த அளவிற்குப் புத்தகம் படிப்பதில் தீவிரமானவர்.  
பெரும்பாலும் இலக்கியக் கூட்டங்களில்தான் அவரைப் பார்த்திருக்கிறேன்.   நான் நடத்திக்கொண்டு வந்த மூகாம்பிகைக் கூட்டத்திலும் உற்சாகமாகக் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார்.  இதை இங்கு திரும்பவும் ஒளிபரப்ப நினைக்கிறேன்.
அவருடைய பிறந்ததினத்தை ஒட்டி அவருடைய அவருக்குப் பிடித்த சிறுகதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகத் தயாரித்து விட்டேன்.  ந. கிருஷ்ணமூர்த்தியின் முன்னுரையுடன்.  ஆனால் அதற்குள் அவர் மரணம் முந்திக்கொண்டது.
ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டிலுள்ள அவருடைய இரண்டாவது புதல்வன் வீட்டிற்குச் செல்வர்.  திரும்பி வரும்போது ஒருபுத்தகம் எழுதிக்கொண்டு வருவார்.  
நான் அமெரிக்கா செல்லும்போது அவரிடம் சொல்லிக்கொண்டு போனேன்.  “பொழுதை வீணடிக்காதைய்ய…நிறையா புத்தகங்கள் படி…உன் பயணத்தைப் பற்றி எழுது,” என்றார்.  
ஒரு முறை சாகித்திய அக்காதெமியின் தேனாம்பேட்டை அலுவலகத்தில் அவரைச் சந்தித்தபோது அவர் ரவீந்திரநாத் தாகூரின் ‘சிதைந்த கூடு’  என்ற புத்தகத்தை வாங்கச் சொன்னார்.  அதில் சிதைந்த கூடு குறுநாவலைப் படிக்கும்படிச் சொன்னார்.
அதன்பின் ஒவ்வொரு முறையும் அவரைச் சந்திக்கும்போது சிதைந்த கூடு படித்தியா? என்று கேட்பார்.  படிக்கவில்லை என்று சொன்னால் லேசாகக் கோபித்துக்கொள்வார்.  பிறகு கேட்பதையே விட்டு விட்டார்.  இதோ இன்னும் இரண்டு மூன்று பக்கங்கள்தான் அந்தக் கதையைப் படித்துமுடிக்க  இருக்கின்றன.  படித்து முடித்தவுடன் அவரிடம் சொல்லலாமென்றிருந்தேன்.
எழுதுவதையும் படிப்பதையும் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தான்.  அசோகமித்திரன் கூட டைப் அடித்துப் படைப்புகளை அனுப்புவார்.  கந்தசாமி  கையாலேயே எழுதுவார்.  ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ என்ற வரிசையில் அசோகமித்திரன் பற்றி ஒரு புத்தகம் அவர் வெளிநாடு போவதற்கு முன் முடித்து விட்டுப் போயிருந்தார்.  அது தான் அவருடைய கடைசியாக எழுதிய புத்தகம் என்று நினைக்கிறேன்.           அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.     

ஞானக்கூத்தன் மொழிபெயர்ப்பில் ஒரு தாஒ கவிதை


அழகியசிங்கர்

எழுத்து பத்திரிகை ஞானக்கூத்தனின் திறமையைப் புரிந்து கொள்ளவில்லை.  ஆனால் 1970 வெளிவந்த ‘கசடதபற’ என்ற சிற்றேட்டில்தான் அவருடைய படைப்புகள் எல்லாம் வெளிவந்தன.

‘தமிழை எங்கே நிறுத்தலாம்’ என்று அவருடைய முதல் கவிதையிலிருந்து தொடர்ந்து கசடதபறவில் அவர் படைப்புகள் வெளிவந்து கொண்டிருந்தன.  
ஜனவரி 1971ஆம் ஆண்டு ‘கசடதபற’  இதழில் (4வது இதழ்) அவருடைய மொழிபெயர்ப்பு ஒன்று வெளிவந்தது.  மொத்தமே 3 வரிகள்தான்.  ஒரு தாஓ கவிதை என்ற தலைப்பில்.  இங்கே வாசிக்கத் தருகிறேன்.

ஒரு தாஒ கவிதை

“ சோளக் கொல்லைப் பொம்மையிடம் இரவல் பெற்ற தொப்பியின் மேல் மழை வலுத்துப் பெய்கிறது.

பிரிவு என்கிற பிரபு மயிலாடுதுறை கதை

அழகியசிங்கர்

            சொல்வனம் என்ற  மின் இதழில் பிரபு எழுதியிருக்கிற கதையின் பெயர் பிரிவு.  இது வங்கியில் பணி ஓய்வு பெறுகிற ஒரு பெண் ஊழியரைப் பற்றிய கதை.

            பெண் ஊழியர் பத்மா ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட நூறு பேர்கள் கலந்து கொள்கிறார்கள். 

            ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் பத்மாவின் புகழ் பாடுகிறார்கள்.  அதைக் கேட்கும்போது தன்னுடைய கதைதானா என்று அவளுக்குத் தோன்றுகிறது.

            மேலாளர் பேசும்போது, பதமா மேடம் இன்று ஓய்வு பெறுகிறார்.  நான் அவரைவிட வயதில் சிறியவன்.  அவர் எப்போதும் வங்கி திறப்பதற்கு அரை மணி நேரம் முன்பே வந்து விடுவார்.  அலுவலகம் முடிந்தபின்னும் அவருடைய அடுத்தநாள் பணிகளை ஒருங்கமைப்பார்.. கலையில் எந்த மனநிலையில் வந்தாரோ அந்த மனநிலையில் முடியும் வரை இருப்பார். கிளையின் பணியை எளிதாக்கினார் என்றார்.

            இந்திய அணியின் பந்து வீச்சாளர் அந்த வங்கிக் கிளையில் ஒரு வாடிக்கையாளர்.  அவரது தாயார் நிகழ்ச்சியில்  பத்மாவைப்  புகழ்ந்து பேசுகிறார்.

            நிகழ்ச்சி தொடங்கி பத்து நிமிடம் கழித்து தாரணி வந்திருந்தாள். அவள் நுழையும் போதே இருவரும் பார்த்துக் கொண்டார்கள்.  தாரணி நடுவயதில் இருக்கிறாள். 

            தாரணி ஒரு வாடிக்கையாளர்.  நந்தினியின் முயற்சியில் காரணிக்குக் கடன் கிடைக்கிறது.  அவள் இவ்வளவு தூரம் பொருளாதார முன்னேற்றம் அடையக் காரணம் பத்மாதான். 

            கதை தாரணியைப் பற்றிப் பேசும்போது பின் பக்கமாகச் சுழலுகிறது.  தாரணி லோன் வாங்க மானேஜரைப் பார்க்க வருகிறாள்.

லோன் விஷயமாக மேனேஜரைப் பார்க்க வேண்டுமென்றால் மாலை மூணு மணிக்கு வர சொல்கிறாள் பத்மா.   திரும்பவும் மூன்று மணிக்கு வரும்போது மேனேஜர் அலுவல் விஷயமாகப் போய்விடுகிறார். 

            தாரணியை அடுத்த நாள் வரும்படி பதமா கூறுகிறாள். 

            பதமா ஓய்வு பெறும் நாளில் தாரணி 300 கிலோமீட்டர் தூரத்திலிருந்து  பத்மாவைப் பார்க்க வந்திருக்கிறாள். “

            தாரணியைப் பேசக் கூப்பிடுகிறார்கள்.  தாரணி பேசுகிறாள்.   “ஒரு பெரிய அரசமரத்தோட நிழலைப் பார்க்கிறோம் அதுக்கடியில் ஒரு தண்ணீர்ப் பந்தல் இருக்கு. ஒரு பானை நிறைய தண்ணீரும் அதோடா மூடிமேல ஒரு பிளாஸ்டிக் டம்ளரும் இருக்கு. நாம் அந்த நிழலல் நிக்கறோம். ரெண்டு டம்ளர் மூணு டம்ளர் தண்ணீர் குடிக்கிறோம். அப்ப தீரர்து நம்ம தாகம் மட்டும் இல்ல.  நம்மோட  துக்கமும்தான்.  இந்த மரத்ததை நட்டவருக்கு இந்த நாள்ல இந்த நிமிஷத்துல நாம் வரப்போறோம்னு தெரியாது.  அன்னைக்கு காலைல அந்த பானையில் தண்ணீர் நிரப்பினவருக்கும் நம்மள தெரியாது.  எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி நடப்பட்ட மரமும் ஒரு டம்ளர் தண்ணீரும் நம்ம துக்கத்தை இல்லாமல் ஆக்கி நம்பிக்கை தருது.  அந்த மரத்து நிழலும் ஒரு டம்ளர் தண்ணீரும் போன்றவர் பதமா மேடம்.”

            சாதாரண ஒரு நிகழ்ச்சிதான் இங்குக் கதையாக மாறி உள்ளது.

அந்த நிகழ்ச்சியில் உள்ளடங்கிய எத்தனையோ உணர்வலைகள் இங்குக் கதையாகப் பின்னப்பட்டுள்ளன.

            இந்தக் கதையின் கூறுகளைப் பார்ப்போம்.

            பத்மா என்பவர் வங்கியில் ஒரு சாதாரண காசாளர் பணியில் சேர்ந்ததிலிருந்து பதவி மூப்பு வரும் வரை கதை விவரிக்கப்படுகிறது.

            பெரிய பதவியை வகிக்காவிட்டாலும், அவருடைய பணியில் அவர் நேர்மையாக இருந்திருக்கிறார்

            தாரணி என்பவருக்கு வங்கியிலிருந்து லோன் வாங்க உதவியிருக்கிறார் அதற்கு நன்றிக்கடனாக பத்மாவின் நட்புக்காக தாரணி 300 கிலோமீட்டர் தூரத்திலிருந்து கார் ஓட்டிக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருக்கிறார்.

            இந்தக் கதையை இப்படி எழுதியிருக்கிறார் கதாசிரியர்.  ஒரு இயல்பான நிகழ்ச்சியை விவரிக்குமுன் எல்லாவற்றையும் கதைகளாக மாற்றி உள்ளார்.  கதைக்குள் கிளைக்கதைகள் வருகின்றன.  மேலும் பணிமூப்பு என்ற நிகழ்வை ஒரு கதையாகக் கட்டமைக்கிறார்.

            ஒரு நாகலிங்க மரம் நின்று கொண்டிருக்கும். தன்னைச் சுற்றி தான் உருவாக்கிய மலர்களை அலங்காரமாய் செய்து கொண்டு மெல்லிய மணம் காற்றில் பரவ விண் நோக்கி மெல்ல அசைந்தவாறு வளரும். பத்மா அதன் நிழலில் நின்று கை கூப்பி வணங்கினாள். சிறு குழந்தையாயிருந்த போது அப்பா மடியில் உட்கார வைத்து கதை சொன்னது. ‘’பத்மாக்கண்ணு! ஆதுரசாலைல அடிப்பட்டு சிகிச்சை எடுத்துக்கற சீடன் குருகிட்ட கேக்கறான். ‘’குருநாதா! எல்லாமே பிரம்மத்தோட ரூபம்னு நீங்க சொன்னீங்க. அப்ப மதம் பிடிச்ச யானையும் பிரம்மம் தானே.’’ குருநாதர், ‘’நான் சொன்னது முழு உண்மை குழந்தை. நீ அதில பாதியை மட்டும் புரிஞ்சுகிட்ட. முழுசா புரிஞ்சுகிட்டிருந்தா ’விலகிப் போ! விலகிப் போ!’ன்னு சொன்ன யானைப் பாகனையும் நீ பிரம்ம சொரூபமா பாத்திருப்ப.’’ அப்பா எத்தனை கதைகள் எனக்கு சொன்னீர்கள். இப்போது நீங்கள் எங்கே? நீங்கள் சொன்ன புத்தர் கதை. ‘’அம்மா! சாவே நிகழாத ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒரு பிடி கடுகு கொண்டு வா அம்மா. உன் மகனை நான் உயிர்ப்பிக்கிறேன்.’’ ராமர் கதை. ‘’தன்னையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதம்’’. நீ ராமான்னு அவன் பேரைச் சொன்னா போதும். ’’எங்கேடா இருக்கிறான் ஸ்ரீஹரி?’’ பிரகலாதன் சொல்கிறான். ‘’அப்பா! அவன் எங்கும் இருப்பான். துரும்பிலும் இருப்பான். தூணிலும் இருப்பான்.’’ கீதைல கிருஷ்ணன் சொல்றான்: ‘’சேவா பரம் தர்ம’’. அப்பா நீங்கள் ஒரு குரலாக என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.

             கதைக்குள் கதையாக இதைக் கொண்டு போகிறார்.  ஆனால் சாதாரண நிகழ்ச்சிதான் இந்தக் கதை. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கதை. கதை சொல்லும்படி பேரன் வற்புறுத்தலுடன் கதை முடிவடைகிறது.

50 கவிஞர்கள் சூம் மூலமாகக் கவிதைகள் வாசித்து விட்டார்கள்..

அழகியசிங்கர்

இதுவரை 50 கவிஞர்கள் சூம் மூலமாகக் கவிதைகள் வாசித்து விட்டார்கள். தொடர்ந்து கவியரங்கக் கூட்டங்களை சூம் மூலமாக நடத்திக்கொண்டு வருகிறேன்.

9வாரங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறேன். நேற்று நடந்த கூட்டம் 9வது கூட்டம். சில திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென்று நினைத்திருந்தேன். எதிர்பாராதவிதமாய் இன்டெர் நெட் தொடர்பு போனதால் முதல் பாதியில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. என் நண்பர் சுந்தர்ராஜன் திறமையாக நடத்திச் சமாளித்து விட்டார்.

அடுத்த பாதியில்தான் நான் கலந்து கொண்டேன். என் திட்டத்தில் கவிதை வாசிப்பவர்களின் கவிதைகளைக் கேட்டு மற்றவர்களும் தனக்குத் தோன்றுகிற அபிப்பிராயங்களைக் கூற வேண்டுமென்று முயற்சி செய்தேன். ஓரளவுதான் வெற்றி பெற முடிந்தது. நான் மறைந்த கவிஞரின் கவிதைகளை எடுத்துக்கொண்டு வாசிக்கிறேன். இதுவரை திரிசடை, ஆத்மாநாம் என்று வாசித்திருக்கிறேன். நேற்று க.நா.சுவை சரியாக அறிமுகம் செய்து வாசிக்க முடியாமல் போய்விட்டது.

கவிதை எழுதுபவர்களே அவர்களுடைய கவிதைகளை வாய்விட்டுப் படிக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது. ஒருவர் வாசிக்கிற கவிதையை எந்த அளவிற்கு நாம் உன்னிப்பாகக் கவனிக்க முடிகிறது. அல்லது உள்வாங்கிக் கொள்ள முடிகிறது என்பது எனக்கே விடப்பட்ட சவால் என்று தோன்றுகிறது.

இதை இன்னும் செம்மையாகக் கொண்டு போவதை நண்பர்களுடன் ஆலோசித்துக் கொண்டு வர உள்ளேன். இந்தக் கூட்டத்தை ஒருவரே நடத்த முடியாது. கவிதை வாசிப்பவரும், கவிதையை ரசிப்பவரும் சேர்ந்து நடத்தும் கூட்டமாக நான் நினைக்கிறேன்.

இதுவரை யார்யார் எந்தந்த தேதிகளில் கவிதைகள் வாசித்தார்கள் என்ற பட்டியலைத் தர நினைக்கிறேன்.1) 29.05.2020 அன்று கவிதை வசித்தவர்கள் : 1. தேவேந்திர பூபதி 2. லக்ஷ்மி மணிவண்ணன் 3. யவனிகா ஸ்ரீராம் 4. திருக்கூனன் கண்டராதித்தன்.

2) 05.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் : 1. தமிழ் மணவாளன் 2. சொர்ணபாரதி 4. பானுமதி 5. உமா பாலு 6. வசந்த தீபன 7 ஆர்.கே 8 . வேணுவேட்ராயன் 9. சுரேஷ் ராஜகோபாலன்

3) 12.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் : 1. இராய செல்லப்பா 2. கால சுப்ரமணியன் 3. ப்ரியம்4. திருநாவுக்கரசு 5. புதிய மாதவி 6. தாமரைச் செல்வன்

4) 19.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் 1. வ.வே.சு 2. நாகேந்திர பாரதி 3. தில்லை வேந்தன் 4. சதூர் புஜன் 5. அன்புச்செல்வி

5) 26.06.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் 1. லாவண்யா 2. மனோன்மணி புது எழுத்து 3. சத்தியானந்தன் 4. சரஸ்வதி 5. சுரேஷ் பரதன் 6. எஸ்.லக்ஷ்மணன்

6) 03.07.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் 1. கவிஞர் கா.ந.கல்யாண சுந்தரம் 2.. கவிஞர் கனகா பாலன் 3. கவிஞர் பத்மஜா நாராயணன் 4. கவிஞர் நிஷாந்தன் (34 பேர்கள்)

7) 10.07.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் 1. தஞ்சாவூர் கவிராயர் 2. வேல் கண்ணன் 3. புலவர் பூ.அ. ரவீந்திரன் 4. கீர்த்தி கிருஷ். 5. திரிசடை கவிதைகள் (39) (குரல் அழகியசிங்கர்)

8) 17.07.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் 1. ஷா அ 2. க.வை பழனிசாமி 3. தென்றல் சிவக்குமார் 4. சிறகா 5. ந. இந்திராணி 6. ஆத்மாநாம் கவிதைகள் ( வாசிப்பு : அழகியசிங்கர்) (44)

9) 24.07.2020 அன்று கவிதை வாசித்தவர்கள் 1. சு.பசுபதி 2. வானவில் கே ரவி 3. தஞ்சாவூர் ஹரணி 4. பிரேமா பிரபா 5. நளினா கணேசன் 6. சோம சுந்தரி

7. க.நா.சு கவிதைகள் (வாசிப்பு : அழகியசிங்கர்) (50 கவிஞர்கள்)