இரண்டு மாதம்கழித்துத் திரும்பி விட்டேன்

அழகியசிங்கர்

எங்கள் அடுக்ககத்தில் இரண்டாவது மாடியில் குடியிருப்போர் ஒருவர் வீட்டில் 3 நபர்களுக்குக் கொரானா தொற்று. . இது ஆகஸ்ட் மாதம் நடந்தது.  நானும் மனைவியும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கிளம்பி மடிப்பாக்கத்திலுள்ள என் பெண் வீட்டிற்குச் சென்றோம்.
மேல் வீட்டில் தொற்று சரியாய் போய்  மருத்துவமனையிலிருந்து திரும்பி விட்டார்கள்.  ஆனால் நாங்கள் இன்று மதியம்தான் (11.10.2020) பெண் வீட்டிலிருந்து திரும்பிவிட்டோம். எப்படித்தான் இரண்டு மாதம் போயிற்று என்று தெரியவில்லை.
கிட்டத்தட்ட 2 மாதங்கள் இருந்து விட்டோம்.  2019ஆம் ஆண்டு அப்படி அமெரிக்காவில் உள்ள பையன் வீட்டிலிருந்தேன். பொதுவாக நான் எங்குப் போனாலும் தங்குவது எனக்குக் கஷ்டமாக இருக்கும். என் வீட்டில் இருப்பதுபோல் என்னால் உணர முடியாது.
எப்படிப் பெண் வீட்டில் இரண்டு மாதம் தாக்குப் பிடித்தேன் என்று தெரியவில்லை.  பெண் வீடு தனி வீடு.  காலையில் மொட்டை மாடியில் நடை பயிற்சி செய்வேன்.  என் வீட்டில் மனைவியுடன் இருக்கும்போது சற்று தாமதமாகத்தான் சாப்பிடுவேன்.  கிட்டத்தட்ட 12 மணி ஆகிவிடும்.  ஆனால் பெண் வீட்டில் 10.30 மணிக்கே சாப்பிடுவேன்.

நான் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி போனவுடன் நெருங்கிய உறவினர் ஒருவர் திடீரென்று இறந்து விட்டார்.  அவருக்கு தொற்று இல்லை.  ஹார்ட் அட்டாக்.  சிலநாட்கள் அதிர்ச்சியாக இருந்தது.  நம்ப முடியவில்லை. 
ஆனால் பெண் வீட்டில் தீர்மானமாக ஒரு பெரியப் புத்தகத்தை எடுத்துப் படித்துவிட்டேன்.  தஸ்தயேவ்ஸ்கி யின் கரமாஸவ் சகோதரர்கள் என்ற புத்தகம் அரும்பு சுப்ரமணியன் ருஷ்ய மொழியிலிருந்து மொழி பெயர்த்தது.  காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது.  இந்தப் புத்தகத்தை 28.06.2014ல் வாங்கியது.  அப்போது 180 பக்கங்கள் வரை படித்துவிட்டுக் கைவிட்டுவிட்டேன். இப்போது வீராப்பாக முழுவதும் படித்து விட்டேன்.  இந்நாவல்களில் பெயர்கள் என்னைக் குழப்பாமலிருப்பதில்லை.  தன் தந்தையைக் கொலையே செய்யாத திமித்ரி கொலை தண்டனைக்கு ஆளாகிறான்.  யாரும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை.
என்னைப் பொறுத்தவரை மொழி பெயர்ப்பு சரியாகச் செய்திருந்தார் அரும்பு.  ஆனால் சத்திரத்தில் சந்தித்துக் கொள்வதாக எழுதப்பட்டிருந்தது.  இந்த நாவலைப் படித்துக் காட்டியபோது என் நண்பர் சத்திரம் என்பது சரியாக இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
குறைந்தபட்சம் நான் பத்து கட்டுரைகளைத் திண்ணைக்கு அனுப்பி பிரசுரமானது.  என் பெண் வீட்டில் புதியதாக 15 கவிதைகள் எழுதினேன்.  ஒரு கவிதையை ஒரு போட்டிக்கு அனுப்பி உள்ளேன்.  அதேபோல் சிறுகதை ஒன்றையும் எழுதி போட்டிக்கு அனுப்பி உள்ளேன். தீபாவளி மலர் ஒன்றிற்குக் கட்டுரையும்.
என் நீண்டகால அலுவலக நண்பர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கோவுட் பாதிப்பால் இறந்து போனது அதிர்ச்சியாக இருந்தது.    நான் வங்கியில் சேர்ந்ததிருந்து எனக்கு நண்பர்.  தீவிர வாசகர்.  என் புத்தகங்களை வாங்கி விரும்பிப் படிப்பவர்.  பதவி மூப்பு அடைந்தவுடன் கோவில்பட்டியில் செட்டில் ஆக நினைத்தார். அதேபோல் எஸ்.பி.பி என்ற பாடகர். சற்றும் எதிர்பாராத தருணத்தில் கி.அ.சச்திதானந்தம் என்ற இலக்கிய நண்பரின் மரணம்.   எல்லாம் கோவிட் என்ற விஷக் கிருமியால்  அதேபோல் தேவகோட்டை வா மூர்த்தி புற்றுநோயால் இறந்து விட்டார். நான் என் பெண் வீட்டில் இருந்ததால் இந்த மரணங்களும் மனதில் ஆழமாய் பதிந்துவிட்டன.  
முக்கியமாக 114வது நவீன விருட்சம் இதழ் அச்சில் கொண்டு வந்து விட்டேன்.
   இந்த இதழ் தாயரிப்பு விலை சற்று அதிகம்தான்.  மிகக் குறைவாக அச்சிட்டு சந்தாதாரர்களுக்குத்  தபாலில்   அனுப்பி விட்டேன். மடிப்பாக்கத்தில் தபால் அலுவலகம் ஒரு கேவலமான இடத்திலிருந்தது.  ஆனால் தபாலில் போட்டவுடன் அடுத்தநாள்  போய்ச் சேர்ந்து விட்டது.  தபால் அலுவலகத்தில் ஒரு வயதான பெண்மணி பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

சூம் வழியாக விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டம்

09.10.2020 அன்று சூம் வழியாக  விருட்சம்  கவிதை வாசிக்கும் கூட்டம்.   பெண் கவிஞர்கள் மட்டும்  பங்குப் பெற்றனர்   .  அதனுடைய ஒளிப் பதிவை இங்கு தருகிறேன். 
அழகியசிங்கர் 

‘பெண் கவிஞர்கள் நேற்று, இன்று , நாளை

  • அழகியசிங்கர்


நேற்று ஜூமில் விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டத்தில் முபீன் ‘பெண் கவிஞர்கள் நேற்று, இன்று , நாளை’ என்ற தலைப்பில் உரையாடினார். அந்த இங்கு உங்கள் முன் ஒளி பரப்புகிறேன் சிறப்பான அந்த உரை

நோபல் பரிசு பெற்ற பெண் கவிஞர் லூயிஸ் குலுக்கின் கவிதைகளை அறிமுகம் செய்து……


.அழகியசிங்கர்

நேற்று (09.10.2020) ஜூமில் விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டத்தில் முபீன் ‘பெண் கவிஞர்கள் நேற்று, இன்று , நாளை’ என்ற தலைப்பில் உரையாடினார். முன்னதாக நோபல் பரிசு பெற்ற பெண் கவிஞர் லூயிஸ் குலுக்கின் கவிதைகளை அறிமுகம் செய்து வாசித்த சிவகுமார், பானுமதியின் பேச்சுக்களை காணொளி மூலம் இப்போது காண்க.

துளிகள் 148 – இன்று ஞானக்கூத்தன் பிறந்த நாள்…

07.10.2020


அழகியசிங்கர்

    ஞானக்கூத்தன் பிறந்த நாள் இன்று.  அவர் 1938ல் பிறந்தவர். இப்போது இருந்திருந்தால் 82 வயதாகியிருக்கும்.

    1988ஆம் ஆண்டு விருட்சம் என்ற சிற்றேடு நடத்தும் போது எனக்கு நெருக்கமாக சில எழுத்தாள நண்பர்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தது.   அதில் ஞானக்கூத்தன் முதன்மையானவர். பலர்  தவறுதலாக விருட்சம் பத்திரிகையை ஞானக்கூத்தன்தான் நடத்துகிறார் என்று சொல்வார்கள்.

    நான் இல்லை இல்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்.  ஞானக்கூத்தன் போல இன்னும் பல இலக்கிய நண்பர்கள் அறிமுகம்.

    பிரமிள், வெங்கட்சாமிநாதன், அசோகமித்திரன், நகுலன், காசியபன், ஐராவதம், ஸ்டெல்லா புரூஸ் என்று பலர் எனக்கு நண்பர்கள்.  இவர்கள் எல்லோரும் என்னை விட மூத்தவர்கள்.

    இவர்கள் மூலம் நான் ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். விருட்சம் வரும் ஆரம்ப ஆண்டுகளில் ஒவ்வொரு இதழிலும் ஞானக்கூத்தன் கவிதை இடம் பெறாமலிருக்காது.

    அவர் ஒருநாள் பீச்சில் பேசிக்கொண்டிருந்தபோது என் கைக்குத் தங்கக் காப்பு போட வேண்டுமென்று அன்று கூடிய நண்பர்கள் முன்  சொன்னார்.  என்னால் நம்ப முடியாமல் இருந்தது.

    முழு மூச்சாகக் கவிதையைப் பற்றிச் சிந்தித்து கவிதைகள் மட்டும் எழுதி தன் வாழ் நாளைக் கழித்த ஞானக்கூத்தனுக்குக் குறைந்த பட்சம் சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்திருக்க வேண்டும்.

    நண்பர் ஜெயமோகன் விஷ்ணுபுர விருது கொடுத்து கௌரவம் செய்தது மறக்க முடியாதது.  நண்பர் வினோத் அவரைக் குறித்து ஒரு ஆவணப் படம் எடுத்து கௌரவம் செய்தார்.

    ஞானக்கூத்தனைப் பற்றிப் பேசும்போது அவர் ஆரம்பக் கால கவிதைகளை மட்டும் குறிப்பிட்டு ஓடிப் போய்விடுவார்கள்.

    கடைசிவரை அவர் சிறப்பாகக் கவிதை எழுதி உள்ளார்.

    நகுலனின் சுசீலா

    நான்கைந்து ரூபாய்கள் செலவழித்தால்
    கும்பகோணத்துக் கடைத் தெருவை
    வாங்கிவிடலாமென்று
    கனவு கண்ட சோமு முதலியார்
    கடைசியில் சோமுப் பண்டாரமாகி
    திடீரென ஒருநாள் செத்துக் கிடந்தார்

    சுசீலாவும் ஒருநாள்
    செத்துக் கிடந்ததாய்
    நகுலன் சொன்னார்
    சுசீலாவின் ரோமபந்தி
    தனியாய்க் கிடந்ததாய்க்
    கூறவும் செய்தார்.
    ஆனால் சுசீலா போனது
    தெருவிலா வீட்டிலா

அஞ்சலட்டைக் கதைகள் 23

அழகியசிங்கர்

    இது என் 23வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது இரண்டு நிமிடங்களுக்கு குறைவாக முடிந்து விட்டது.

கிட்ட நெருங்கிப் பேசாதே…

    இன்று வீட்டைவிட்டு கடைக்குப் போவதென்று முடிவு செய்தேன்.  ஒரு சவர பிளேடு குச்சி வேண்டும்.  நான் கடைக்குப் போய் இரண்டு பால் பாக்கெட்டுகளையும், இஞ்சி, பச்சை மிளகாவும் வாங்கச் சென்றேன்.

    இந்தச் செருப்பை  மாட்டிக்கொண்டு போவது எனக்கு அவ்வளவு சுலபமாகத் தெரியவில்லை.  சிலசமயம் கடுப்பாகக் கூட இருக்கிறது.  தெரு முனைக்குத்தான் போயிருந்தேன்.  ஒரு பெரியவர் எதிர்ப்பட்டார்.  என்னையே பார்த்தபடியே நின்றுவிட்டார்.  யாரையோ தேடுகிறாரோ என்று நினைத்தேன்.  ஆனால் அது மாதிரியும் தெரியவில்லை. 

    ஏன் நின்று என்னையே முறைத்துப் பார்க்கிறாரென்று எனக்குத் தோன்றியது.  அவருக்கு எதாவது பணம் தேவையா? உண்மையில் அவருக்குப் பணம் தேவையாக இருந்தாலும் என்னிடம் கொடுக்க முடியாது.  எல்லாம் நூறு ரூபாய் நோட்டுகளாகவும் இருநூறு ரூபாய் நோட்டாகவும் வைத்துக் கொண்டிருந்தேன்.   

  “என்னிடம் சில்லறை இல்லை,” என்றேன் அவரைப் பார்த்து.  வந்தது வினை.  அவர் என்னிடம் நேராக வந்தார். 

   “உங்களிடம் பைசா கேட்டேனா,” என்றார். 

   “இல்லை,” என்றேன்.

    “பின் ஏன் நீங்கள் பிச்சைக்காரன் போல் என்னை நினைத்துக் கொண்டிருந்தீர்கள்.”

    “மன்னிக்கவும். தவறாக நினைத்து விட்டேன்.”

    “நான் தள்ளாமையால் நிற்கிறேன்.”

    “நினைத்தது தப்பு.  நீங்கள் முகக் கவசம் போடாமலிருக்கிறீர்கள்.”

    “என் பையில் இருக்கிறது அது.”

    “மன்னித்து விடுங்கள்.  நான் போகிறேன்,” என்று கூறியபடியே நடக்க ஆரம்பித்தேன்.

    கொஞ்ச தூரம் நடந்தவுடன், ஒரு கடையின் வாசலில் நிற்பவர் என்னை உற்றுப் பார்த்தார்.  ஏன் அப்படிப் பார்க்கிறார் என்று யோசித்தேன்.

    “தலை முடி வெட்டிக்கொள்ள வேண்டாமா?” என்றார்.

    “வேண்டாம்,” என்று கூறியபடியே நடந்தேன்.  அந்த வியாபாரிக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும்.  அவன் வைத்திருக்கும் கடை.  ஒரு சிறிய பெட்டிக் கடை மாதிரி இருந்தது.   உண்மையில் தலை முடியை வெட்டிக் கொள்ளும்படி தான் வளர்ந்திருந்தது.  மார்ச்சு மாதத்திலிருந்து நான் தலை முடி வெட்டவில்லை.  இரண்டு நாட்கள் முன்னால் என்தலை முடியை என் மனைவிதான் வெட்டிவிட்டாள்.

    நான் திரும்பவும் கடையில் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தேன்.

    முடிவெட்டிக்கொள்ளும் கடை முன் வேற யாரோ நின்று கொண்டிருந்தான். 

    நான் பேசாமல் போயிருக்கலாம்.  ஆனால் அவனைப் பார்த்து, “ஏன் இப்போதெல்லாம் முடி வெட்டிக்கொள்ள யாரும் வருவதில்லையா?” என்று கேட்டேன்.

    ஆனால் அவன் பதிலே சொல்லவில்லை.


கவிதையும் ரசனையும் – 2


அழகியசிங்கர்

கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த தினம் 22ஆம் தேதி செப்டம்பர் மாதம். இன்று நம்முடன் இருப்பவர் எழுத்து காலத்திலிருந்து கவிதை எழுதி வரும் வைதீஸ்வரன்.  அவர் ஒரு ஓவியர், ஒரு சிறுகதை ஆசிரியர், ஒரு கட்டுரையாளர்.

அவருடைய எதாவது ஒரு கவிதையை எடுத்து வாசித்து என் ரசனையைத் தெரியப்படுத்தலாமென்று நினைக்கிறேன்.
நான் எடுத்துக்கொண்ட கவிதை 'உபதேசம் நமக்கு' என்ற கவிதை. 

உபதேசம் நமக்கு

அடுத்த வீட்டுக்காரனிடம்
இருந்து தொலைத்துவிடு
வம்பில்லை .

பல்தேய்த்துக் கொண்டிருக்கும்போது
பக்கத்து வீட்டுக்காரனிடம்
வள்ளையாக சிரித்துவிடு.
தொல்லை யில்லை.

என்றாவது
உன் வீட்டில்
மழை பெய்யும்போது
அவன் வீட்டில்
குடை இருக்கும்.
என்றாவது உன் செடியை
ஆடு கடிக்கும்போது,
அவன் கையில் ஆளுயரக்
கம்பு இருக்கும்.
உன் வீட்டுக் குழந்தைகள்
ஓடியாட
அவன் வீட்டுத் தாழ்வாரம்
நீளமாயிருக்கும்.

எதற்கும்
ஒருவிதமான தவமாக,
தினந்தினம்
வேலியோரம் சற்றே
கால்சொறிந்து நில்லு.

உளுந்தூரில் அவன் பாட்டி செத்ததால்,
உனக்குப் போன தூக்கம்,
ஊருக்குள் திருட்டு, கற்பழிப்பு
உணவுத்தட்டு, கருப்பு மார்க்கட்டு,
லாட்டரிச் சீட்டு,
எவனுக்கோ பிறந்துவிட்ட
இரண்டு தலைப் பிள்ளை ,
இன்னும்
கிரஸின் விலை, ஊசி விலை
கழுதை விலை, காக்காய் விலை
எல்லா நிலையும், பந்தமுடன்
பல்திறந்து பேசிவிட்டு
வாய்கொப்பளித்து வந்துவிடு.
தொந்தரவில்லை.

என்றாவது நின்றுபோகும்
உன் சுவர் கடிகாரம்கூட
அவன் வீட்டில் அடிக்கும் மணியை
ஒட்டுக் கேட்கட்டும்.

ஏசுவும் புத்தனும்
எதற்குச் சொன்னான் பின்னே,
அடுத்தவனை நேசி என்று.
அவனால் உபகாரம்
ஆயிரங்கள் உனக்கு இருக்கும்

அதை மட்டும் யோசி
நீ ஒரு நகரவாசி.

இந்தக் கவிதையைப் படிக்கும்போது  எளிதாக நமக்குப் புரிந்து விடுகிறது. வைதீஸ்வரனின் கவிதையில் எந்தக் குழப்பமும் இல்லை.

பக்கத்து வீட்டுக்காரனுடன் பகைத்துக் கொள்ளாதே என்கிறது கவிதை. அதுவும் பல் தேய்த்துக் கொண்டிருக்கும்போது வெள்ளையாகச் சிரித்துவிடு தொல்லை இல்லை.

ஏன் இப்படிச் சொல்கிறது? கவிதை மூலம் நமக்கு வைதீஸ்வரன் படிப்பவர்களுக்கு அறிவுரை கூற வருகிறாரா? ஆமாம் அப்படித்தான் தோன்றுகிறது.

நம்மிடம் இல்லாத ஒன்று கட்டாயம் பக்கத்து வீட்டுக்காரனிடம் இருக்கும்.  அவனுடைய தயவு நமக்கு வேண்டியிருக்கும்.  இந்தக் கவிதையை ஆராயும்போது, மழை பெய்யும்போது நம்மிடம் குடை தட்டுப்படாமல் இருக்கும்போது பக்கத்து வீட்டுக்காரனிடம் குடை இருக்கும். நம் வீட்டுச் செடியை ஆடு கடிக்கும்போது அந்த ஆட்டைத் துரத்த அவனிடம் கம்பு இருக்கும்.

அவன் வீட்டில் குழந்தைகள் இருக்கிறதா என்பதைக் கவிதை சொல்லவில்லை, ஆனால் நம் வீட்டுக் குழந்தைகள் ஓடியாட அவன் வீட்டுத் தாழ்வாரம் நீளமாயிருக்கும் என்கிறது கவிதை. அதற்காகவாவது அவனுடன் சண்டை போடாதே என்கிறது கவிதை.

அவனை அனுசரித்துப் போக இன்னும் ஒன்று சொல்கிறது கவிதை. தினந்தினம் வேலியோரம் சற்றே கால் சொறிந்து நில்லு என்று.

அடுத்தது அவன் பாட்டி செத்தால் உனக்குப் போன துக்கம் என்கிறது. ஊருக்குள் நடக்கும் திருட்டு, கற்பழிப்பு, உணவுத் தட்டு, கருப்பு மார்க்கெட், லாட்டரிச் சீட்டு, எவனுக்கோ பிறந்துவிட்ட இரண்டு தலைப் பிள்ளை, இன்னும் கிரஸின் விலை, காக்காய் விலை, கழுதை விலை எல்லா நிலையிலும் பந்தமுடன் பல்திறந்து பேசிவிட்டு வாயைக் கொப்பளித்து வந்துவிடச் சொல்கிறது.  அப்படி இருப்பது தொந்தரவாக இருக்கிறது.  இது எப்படிப்பட்ட உபதேசம்.  பக்கத்து வீட்டுக்காரனுடன் மேம் போக்காகப் பழகச் சொல்கிறார்.

எப்போதும் பக்கத்து வீட்டுக்காரன் உதவி செய்வான். உன் உதவி அவனுக்குத் தேவையில்லை. அவன் உதவிதான் உன்க்கு எப்போதும் தேவை.

கவிதையில் உபதேசம் நமக்கு என்று கூறப்படும் அர்த்தம் நமக்கு நன்கு விளங்கி விடுகிறது. 

பாருங்கள் என்றோ நின்றுபோகும் நம் சுவர்க் கடிகாரம் கூட அவன் வீட்டில் அடிக்கும் மணியை ஒட்டுக் கேட்குமாம்.

இந்தக் கவிதையின் கிண்டல் இறுதி வரியில்தான் வருகிறது. ஏசுவும் புத்தனும் எதற்குச் சொன்னார்கள்?  அடுத்தவனை நேசி என்று. அவனால் கிடைக்கும் போகும் உபகாரங்கள் ஆயிரமாம். 

தவறிப்போய் கூட நீயும் எதாவது அவனுக்கு உதவி செய் என்று இந்தக் கவிதை சொல்லவில்லை.

மேல் உதடு அசையப் பக்கத்து வீட்டுக்காரனுடன் உறவு வைத்துக்கொள்பவன் யார்?

அவன் ஒரு நகரவாசி.  இறுதியில் எல்லா நகர வாசிகளும் அப்படித்தான் இருப்பார்கள் என்ற முடிவுக்கு வருகிறார் கவிஞர்.

உறவு என்பது போலித்தனமாக இருப்பதை இந்தக் கவிதை நன்றாகத் தோலுரித்துக் காட்டுகிறது.  நகரவாசியில் இருப்பவர்கள் பெரும்பாலோர் போலித்தனமான அன்புடன் இருப்பார்கள் என்கிறார் கவிஞர்.

கவிதையை ஆரம்பிக்கும்போது, அடுத்த வீட்டுக்காரனிடம் அன்பாய் இருந்து தொலைத்துவிடு என்கிறார்.  அன்பு என்பது தானாகவே உருவாக வேண்டும்.  ஆனால் இங்குப் போலியாக அன்பாக இருக்கும்படி வற்புறுத்துகிறார்.

ஆனால் கவிஞர் சொல்வது ஓரளவு உண்மை.  ஒவ்வொருவரும் இன்னொருவரிடம் போலியாகத்தான் அன்பாக இருப்பார்கள். அல்லது இருக்க வேண்டும்.  அதுவும் அப்படி அன்பு காட்டுபவர்கள் நகரவாசி என்கிறார்.  ஏன் நகரவாசி என்கிறார்?

நகரவாசிதான் அதிகமாகக் கெட்டுப் போகிறான்.  உண்மையாக அன்பு செலுத்தாமல் நடிக்கிறான். இவ்வளவு சூட்சுமம் உள்ளது இந்தக் கவிதையில்.
இப்படிப்பட்ட சிந்தனைகள் நவீன கவிதையில்தான் சாத்தியம்.       

                                                                 (அக்டோபர் 4  2020, திண்ணையில் வெளிவந்த கட்டுரை)

அசோகமித்திரனின் பிறந்த தினக் கூட்டத்தில் கி.அ. சச்சிதானந்தம்

அழகியசிங்கர் 

சமீபத்தில் மறைந்த கி.அ சச்சிதானந்தம் அசோகமித்திரனின் 82 வது பிறந்த நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டத்தை நெறி செய்தார்.  அக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை மட்டும் இங்கு அவர் நினைவாக அளிக்கிறேன்.

இன்றைய காந்தி

அழகியசிங்கர்

2.10.2020 அன்று வீரராகவன் அவர்கள் üஇன்றைய காந்திý என்ற  தலைப்பில் காந்தியைப் பற்றி உரை நிகழ்த்தினார்.  அதை இங்கே ஒளிபரப்புகிறேன்

செப்டம்பர் 30ஆம் தேதி நடந்த வித்தியாசமான கூட்டம்

அழகியசிங்கர்

சூம் மூலமாக ஒரு சிலரை மட்டும் கூப்பிட்டு இலக்கியக் கூட்டம் ஏற்பாடு செய்து நடத்தினேன்.
அது வைதீஸ்வரனின் கதைகள், கவிதைகள் விமர்சனம் செய்யும் கூட்டம்.
எத்தனைப் பேர்கள் அவரைப் பற்றி பேசுகிறார்களோ அத்தனைப் பேர்கள்தான் அரங்கத்தில் இருந்தார்கள்.
அதை ஒளிப்பதிவு செய்துள்ளேன்.  அந்த ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.