22வது சூமில் நடந்த விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் 32 பேர்கள் கலந்து கொண்டார்கள். உற்சாகத்துடன் பெரும்பாலோர் கவிதை வாசித்தார்கள். இவை எப்படிப்பட்ட கவிதைகள், இவற்றின் தரம் எப்படி உள்ளது என்ற ஆராய்ச்சியெல்லாம் செய்யக் கூடாது. வேறு வேறு விதமாய் ஒவ்வொருவரும் கவிதை வாசிக்கிறார்கள். அவற்றைக் கேட்போம் . ரசிப்போம்.
முனைவர் கல்யாணராமன் நிகழ்த்திய உரையின் ஒளிப்பதிவை இங்கு தருகிறேன்.ஆவேசமான உரை. அவர் பேச்சின் போது இன்னும் சில கவிஞர்களைக் குறித்து அவர் கூறிய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. உரையை முழுவதும் கேட்டு ரசியுங்கள்
நேற்று நடந்த சூம் கூட்டத்தில் நானும் ஒரு கவிதை வாசித்தேன். உண்மையில் வாசிக்க நினைத்தது சீப்பு என்ற கவிதையை. ஆனால் வேறு இருவர் தலையைப் பற்றி கவிதைகள் வாசித்ததால் அழகி என்ற கவிதையை வாசித்தேன். என் தொகுப்பில் இது 152வது கவிதை. 2003ஆம் ஆண்டில் இக் கவிதையை எழுதினேன். ‘அழகியசிங்கர கவிதைகள்’ என்ற தொகுப்பில் நான் 1975முதல் 2018ஆம் ஆண்டு வரை தொகுத்து கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளேன்.முகநூல் நண்பர்களுக்கு இந்தக் கவிதையை வாசிக்க அளிக்கிறேன்.
இந்த முறை கவிதை வாசிக்கிறவர்கள் ஒரு கவிதையை வாசிக்க 2 நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். சற்று வித்தியாசமாகக் கவிதை வாசிக்க முயற்சி செய்வோம். நம்மிடையே பழங்கால கவிஞர்கள் அவ்வையார், காளமேகப் புலவர், இரட்டைப் புலவர்கள் எல்லாம் உண்டு. அவர்கள் சிலேடையாகவும், அங்கத உணர்வுடன் கூடிய கவிதைகள் எழுதி உள்ளார்கள்.
நவீன கவிஞர்களும் பலர் எழுதியிருக்கிறார்கள். கவிதை வாசிப்பவர்கள் அதுமாதிரியான உணர்வுடைய கவிதைகளை வாசிக்கவும்.
இந்த முறை யாருடைய கவிதை வேண்டுமானாலும் நீங்கள் வாசிக்கலாம். மொழிபெயர்ப்புக கவிதை வாசிக்கலாம். நேரிடையாகப் பெயர் கொடுத்துக் கலந்து கொள்ளுங்கள். வழக்கம்போல் கவிதை வாசிப்பவர்கள் சிலவற்றைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஆத்திகம், நாத்திகம் கவிதைகள், அரசியல்வாதிகளைப் போற்றியும் தூற்றியும் கவிதைகள், ஆபாசமாக எழுதப்படும் கவிதைகள், கொரானோ தொற்றைக் குறித்து கவிதைகள். வெள்ளிக்கிழமை (23.10.2020) அன்று மாலை 6.30க்கு கவிதை வாசிப்புக் கூட்டம்
முனைவர் கல்யாணராமன் ஆத்மாநாம் கவிதைகள் குறித்து உரை நிகழ்த்துகிறார். சிறப்பான உரையாக இது இருக்கும் தவற விடாதீர்கள்.
இரண்டு மாதங்கள் பெண் வீட்டிலிருந்துவிட்டு திரும்பவும் மாம்பலத்தில் உள்ள என் வீட்டிற்கு வந்தவுடன் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.
பெண் வீட்டிற்குப் போனபோது மிகக் குறைவாகப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போனேன். எளிதாகப் புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். பிரும்மாண்ட ‘கரமாஸவ் சகோதரர்கள்’ என்ற ‘தஸ்தயேவ்ஸ்கி’ புத்தகத்தைப் படித்து முடித்தேன். இத்தனையும் பெண் வீட்டில். என் வீட்டில் ஒரு கட்டில் முழுவதும் புத்தகங்கள். எதை எடுத்துப் படிப்பது என்ற குழப்பத்தில் இரண்டு நாட்கள் ஒன்றும் படிக்காமல் காலத்தைக் கழித்தேன்.
மெதுவாக கட்டிலில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் எடுத்து வைக்கலாமென்று தனித்தனியாக எடுத்து வைத்து அடுக்கி வைத்தேன். கிட்டத்தட்ட 400 அல்லது 500 புத்தகங்களுக்குக் குறைவில்லாமலிருக்கும். அதில் ஒரே ஒரு புத்தகம் மட்டும் என் கண்ணை உறுத்தியது.
அது வேறு ஒன்றுமில்லை என் சிறுகதைத் தொகுப்புதான். 664பக்கங்கள் கொண்ட தொகுப்பு. 100க்கும் மேற்பட்ட கதைகள் கொண்ட தொகுப்பு.
ஏன் இதை மட்டும் சொல்கிறேன்? என் கதைகளைப் படிப்பவருக்குத் தெரியும் அதன் சுவை.
உண்மைதான் எலிக்கு மட்டும் அது தெரிந்து சில பக்கங்களைச் சுவைத்து விட்டது. எங்கோ புத்தகக் கட்டின் அடியிலிருந்த அந்தப் புத்தகத்தை மட்டும் எலியனார் பதம் பார்த்து விட்டார். எலியனாரைப் பார்த்தால் கேள்வி கேட்க வேண்டும். எப்படி இருந்தது என் புத்தகம் சுவைக்க என்று.
கல்யாண்ஜி என்ற பெயரில் ஏராளமான கவிதைகளும், வண்ணதாசன் என்ற பெயரில் கதைகளும் எழுதிக் குவித்துக்கொண்டிருப்பவர் கல்யாணி.சி. இவர் சிறுகதைகளுக்கு எப்படி ஒரு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்ததோ அதேபோல் இவர் கவிதைகளுக்கும் சாகித்திய அக்காதெமி பரிசு கிடைக்க வேண்டும். அந்த அளவிற்குத் திறமையாக கவிதைகளிலிருந்து விலகி கதைகளும், கதைகளிலிருந்து விலகி கவிதைகளையும் எழுதியிருக்கிறார் கல்யாணி. இதைப் போன்ற திறமை ஒரு சிலருக்குத்தான் வரும். குறிப்பாகத் தமிழில் நகுலன், காசியபன், சுந்தர ராமசாமி. அதேபோல் கல்யாணி சி என்கிற வண்ணதாசனுக்கு. கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகள் எழுதும்போது அவர் வேறு ஒரு உலகத்திற்குப் போய் விடுகிறார். அதேபோல் வண்ணதாசன் என்ற பெயரில் கதை எழுதும்போது “இவர்தானா அவர் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறார். நான் இப்போது இங்கு எடுத்துக் கொண்டு பேசப்போவது மழை குறித்து என்ற கவிதையைப் பற்றி. இதோ அந்தக் கவிதையை இங்குத் தருகிறேன். கல்யாண்ஜி கவிதைகள் என்று வ.உ.சி நூலக வெளியீடிலிருந்து இந்தக் கவிதையை எடுத்துள்ளேன்.
மழை குறித்து
மழை உங்களிடம் இதுவரை ஏதேனும் புகார்
சொல்லியிருக்கிறதா
ஒரு பச்சைப் புழுவைக் காணோம் வெகு நாட்களாக
ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய்விட்டதாக
ஒரு வானவில் மீன்கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டதாக
நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை
நனையக் கூடாது என்று தடுத்துவிட்டதாக
வெளியே வந்து எதையும் பாராமல்
முட்டாள் பெட்டிமுன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக
இல்லை அல்லவா
அப்புறம் நீங்கள் ஏன் மழை குறித்து
இவ்வளவு புகார்களை எல்லோரிடமும் வீட்டுக்குள் தேநீர் அருந்திக்கொண்டே
சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்
இந்தக் கவிதையைப் படிக்கும்போது வாசிப்பவனை நோக்கி இந்தக் கவிதை பேசுவதுபோல் தோன்றுகிறது.
வாசிப்பவன் மழையைப் பற்றி ஏதோ புகார் கூறியதுபோலவும் அதனால் அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இக் கவிதை எழுதப் பட்டுள்ளது. மழை உங்களிடம் இதுவரை ஏதேனும் புகார் சொல்லியிருக்கிறதா என்று ஆரம்பம் ஆகிறது கவிதை. மழையே உங்களைப் பற்றி புகார் அளிக்காதபோது நீங்கள் ஏன் புகார் அளிக்கிறீர்கள் என்பதுபோல் அமைந்துள்ளது.
மழை வந்ததால் ஒரு பச்சைப் புழுவைக் காணோம் வெகு நாட்களாக. ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய் விட்டாள். ஒரு வானவில் மீன்கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டது இதெல்லாம் யாரு யாரிடம் குறை பட்டுக்கொள்கிறார்கள். மழையின் சார்பாகக் கவி குரலோன் இதையெல்லாம் சொல்கிறான். அப்புறம் இன்னொன்றும் கொல்கிறான்.
நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை நனையக் கூடாது என்று தடுத்து விட்டீர்கள் ஏன்?
உங்களுக்கு மழையைப் பார்த்தால் பயம். மழையில் நனைந்தால் சிறுவனின் உடல்நிலை பாதிக்கும் நீங்கள் முன்னதாகவே கற்பனை செய்து அவனை வெளியே வராமல் தடுத்து விட்டீர்கள். மேலும் நீங்களும் வெளியில் வந்து பார்க்கவில்லை.
அதேபோல நீங்களும் முட்டாள் பெட்டி முன் சாய்ந்த கிடக்கிறீர்கள். உங்களுக்கு எந்தவித அக்கறையுமில்லை. மழை பெய்கிறதா இல்லையா என்பதுகூட உங்களுக்குத் தெரியாது. இப்படி ஜாக்கிரதையாக இருக்கும் நீங்கள் ஏன் மழை குறித்து இவ்வளவு புகார்களை வீட்டிற்குள்ளே தேநீர் குடித்தபடி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். மனிதர்களுடைய இயல்பு
எதைப் பற்றியாவது குறை சொல்லிக்கொண்டிருப்பதை என்பதை இக் கவிதை மூலம் கவிகுரலோன் வெளிப்படுத்துகிறானோ? இவ்வளவு விஷயங்களை வெளிப்படுத்துபவன் யார்? கவிகுரலோன்தானா? அவனைத் தவிர வேற யாருமில்லை. அவன்தான் தன் செய்கையை நினைத்து நொந்து, நீங்கள்தான் இதற்குப் பொறுப்பு என்று உங்களைக் குற்றம் சாட்டுவதுபோல் தன்னை வெளிப்படுத்துகிறானா?
தன்னுடைய இயலாமையைக் கவிதை மூலம் கொண்டு வருகிறானா? மழையைப் பற்றி புகார்களைத் தேவையில்லாமல் சொல்லிக்கொண்டு வருகிறானா? எப்படிப் பார்த்தாலும் இக் கவிதை எழுதப்பட்ட விதம் சிறப்பாக உள்ளது.
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகையான திண்ணையில் 18.10.2020 அன்று வெளியான கட்டுரை)
முபீனுடைய போஸ்டிங்கைப் பார்த்தவுடன்தான் இன்று தமிழவனின் பிறந்தநாள் என்று தெரிந்தது. ஆரம்பத்தில் பங்களூர் செல்லும்போதெல்லாம் தமிழவன், பாவண்ணன், பா.கிருஷ்ணசாமி, நஞ்சுண்டன், மகாலிங்கம், ராமச்சந்திரன் என்றெல்லாம் ஒரு இடத்தில் கூடிச் சந்தித்துக் கொள்வோம். அதன்பின் நான் அங்கெல்லாம் போகும்போது யாரையும் ஒன்றாகச் சந்திக்க முடியவில்லை. ஒரு இடத்திலிருந்து ஒரு இடம் போவது ரொம்பவும் சிரமமாகப் போய் விட்டது. யாரையாவது ஒருத்தரைச் சந்தித்தால் அவரை மட்டும் சந்திப்பதாக மாறிவிட்டது. சிலசமயம் யாரையும் சந்திக்காமல் ப்ளாசம்ஸில் புத்தகங்கள் வாங்குவதோடு நின்றுவிட்டது. ‘யாருடனும் இல்லை’ என்ற என் முதல் கவிதை கொண்டு வரும்போது எனக்குத் தயக்கம் இருந்தது. தமிழவன்தான் அணிந்துரை எழுதிக்கொடுத்தார். அப்போதுதான் புத்தகங்களை விருட்சம் வெளியீடாகக் கொண்டுவர முயன்ற தருணம். அந்தப் புத்தகத்திற்கு தமிழவனைக் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்தார். அதன்பின் தமிழவனுடன் எங்காவது சந்தித்துப் பேசுவதென்றால் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தத் தவறவில்லை. பல விஷயங்களைப் பற்றிப் பேசுவார் நேரம் போவதே தெரியாது. அவர் சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னைப் பார்க்க விரும்பும் போதெல்லாம் நான் போய்ப் பார்த்துவிடுவேன். ஆனால் சமீபத்தில் அவரைச் சுற்றி கூட்டம் அதிகமாகி விட்டது. அதனால் அவர் யாருக்கும் தெரியாமல் கூட சென்னைக்கு வந்துவிட்டுப் போகிறாரென்று நினைக்கிறேன்.” ஆரம்பக் காலத்தில் அவருடைய புத்தகங்களுக்கெல்லாம் நான் விமர்சனக் கூட்டங்கள் சென்னையில் நடத்தியிருக்கிறேன். ஞானக்கூத்தன் கூட கலந்துகொண்டு அவர் நாவலைப் பற்றிப் பேசி உள்ளார். 2017 நவம்பர் மாதத்தில் அவரை ஒரு பேட்டி கண்டேன். பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் கீழ். அதை இங்குத் தர விரும்புகிறேன். இன்று அவருக்குப் பிறந்தநாள். அவருக்கு என் வாழ்த்துகள்.
16.10.2020 அன்று நடந்த சூம் விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டத்தில் பிரமிள் கவிதைகள் குறித்து கால சுப் ரமணியம் நடத்திய உரையாடல் ஒளிப்பதிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை இங்கு அளிக்கிறோம்.
16.10.2020 – வெள்ளிக்கிழமை – 6.30 மணிக்கு – நாளை சூன் மூலமாக 21வது கவிதை வாசித்தல் கூட்டம் நடைபெற உள்ளது. வழக்கம்போல் எல்லோரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்க வேண்டும். 20 வரிகளுக்கு மிகைப்படாமல் கவிதை வாசிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டம் ஆரம்பிக்கும் முன் கால சுப்ரமணியம் பிரமிள் கவிதைகள் குறித்து உரை நிகழ்த்துவார்.
வழக்கம்போல் கவிதை வாசிப்பவர்கள் சிலவற்றைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஆத்திகம், நாத்திகம் கவிதைகள், அரசியல்வாதிகளைப் போற்றியும் தூற்றியும் கவிதைகள், ஆபாசமாக எழுதப்படும் கவிதைகள், கொரானோ தொற்றைக் குறித்து கவிதைகள் வாசிப்பதைத் தவிர்க்கவும்.
‘சொல்லப்படாத நிஜங்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து சமீபத்தில் நான் படித்த கதை üபிற்பகல்ý என்ற சா.கந்தசாமியின் கதை. இந்தக் கதையைக் கொஞ்சம் பார்ப்போம். எளிய மொழிநடையில் சா.க.இந்தக் கதையை எடுத்துச் செல்கிறார். சாரதா அரைநாள் லீவு எழுதிக் கொடுத்துவிட்டு ஆபிஸிலிருந்து வெளியே வருகிறாள். அவளுக்குத் தாங்க முடியாத பல்வலி. ஒருவருக்குப் பல்வலி வந்தால் தாங்க முடியாது. சாரதாவிற்கும் அப்படித்தான். தாங்க முடியவில்லை. பல்வலியோடு அலுவலகத்தில் வேலை பார்க்க முடியாது என்பதால் வீட்டிற்கு வருகிறாள். சாரதாவிற்கு ஏற்படுகிற பல்வலியை நமக்கும் பல சம்பவங்களைக் கூட்டி ஏற்றுகிறார் கந்தசாமி. காலையில் பல்வலி தாங்காமல் அலுவலகத்திற்கு வருகிறாள் சாரதா. மதியம் விடுமுறை எடுத்துக்கொள்கிறாள். அங்கிருந்து திரும்பவும் வீட்டிற்குத் திரும்புகிறாள். மாலை கணவன் வந்தவுடன் மாலை ஏழு மணிக்கு டாக்டர் உஷாதேவியைப் பல்வலிக்காகப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறாள். வலியைப் பொறுத்துக்கொண்டு பிளாட்டில் மாடி ஏறி வருகிறாள். கரண்ட் இல்லாததால் மாடிப்படிக்கட்டுகளில் நடக்க வேண்டி உள்ளது. அப்போது நாலாவது மாடியிலிருந்து பிரதாப ரெட்டி சினிமா ஆர்ட் டைரக்டர் கீழே இறங்கி வருகிறான். அவள் அவனைப் பார்த்துப் புன்னகை பூக்கிறாள். “என்ன மேடம் அரைநாள் ம்டடமா?” என்று கேட்கிறான். அவன் என்ன காரணத்திற்காக மட்டம் என்று கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை. நர்த்தகியில் நடக்கும் ஷøட்டிங்குக்கு வரச் சொல்கிறான். பதிலொன்றும் சொல்லாமல் மேலே ஏறிச் சென்றாள்.. இந்த இடத்தில் பல் வலியோடு இருக்கும் சாரதா அதைக் குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லை. ஈரக் கையைத் துடைத்தபடி வெளியில் வந்து நாற்காலிலியல் உட்கார்ந்தாள். வாசல் கதவு மெதுவாகத் தட்டப்படும் சப்தம் கேட்டது. தலையை நிமிர்ந்து பார்த்தாள். எழுந்து போய் கதவைத் திறந்தாள். எலக்டிரிசிட்டி கார்டில் என்ட்ரி போட்டுகிட்டு வந்திருக்கிறான் வாட்சுமேன் நாராயணன். அவனிடம் இரண்டு ரூபாய் சில்லறையைக் கொடுத்து விட்டு கார்டை வாங்கி வைத்துக் கொள்கிறாள் சாரதா. இந்த இடத்திலும் தவறிப்போய் தனக்குப் பல்வலி தாங்க முடியவில்லை என்று சொல்லவில்லை சாரதா. ஆனால் அவளுக்கு ஏற்பட்ட பல் வலியை விவரிக்கிறார் கதாசிரியர். ‘கடைவாய்ப் பல்லுக்குக் கீழே வலிப்பது மாதிரி இருந்தது. இடது கையால் ஒரு முறை தடவிவிட்டுக் கொண்டாள். கை தாடையில் பட்டதுமே ஈறு வலிப்பது மாதிரி இருந்தது. புரண்டு குப்புறப்படுத்து, கால்களைப் படபடவென்று மெத்தை மீது உதைத்துக்கொண்டாள்.’ காலிங் பெல் அடிக்கிறது. படுக்கை அறையில் தலைக்கு மேல் வைக்க வேண்டாமென்று எத்தனையோ முறை சொல்லியும் அவன் கேட்கவில்லை. சாரதா கதவைத் திறந்தாள். ஒரு பெண். இருபது இருபத்தொரு வயதிருக்கும். தோளில் காது வைத்த பையும், கையில் பிளாஸ்டிக் கூடையுமாக நின்றுகொண்டு இருந்தாள். இவளைப் பார்த்ததும் பல்லெல்லாம் தெரியப் பெரிதாகச் சிரித்தபடி, “மேடம் புதுசா வந்திருக்கிற லேடீஸ் டவல் மேடம்..” என்கிறாள். பொருளைக் காட்டி பல்லைக் காட்டியபடி விற்க வந்திருக்கிற பெண்ணை மெதுவாக அனுப்பி விடுகிறாள். பல் வலியோடு பிரம்பு நாற்காலியை முன்னே இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள். இந்தக் கதையில் இதுவரை அவளுடைய பல்வலியை யாரிடமும் பிரஸ்தாபிக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். பிரதாப் ரெட்டி போன் செய்து அவன் மனைவியிடம் ஹைதராபாத்து போவது பற்றிக் குறிப்பிடச் சொல்கிறான். மனைவியிடம். சாரதா சொன்னால் போதும் என்கிறான். மனைவியைக் கூப்பிட வேண்டாமென்கிறான். டெலிபோனைக் கீழே வைத்தாள். வாசல் கதவு தட்டப்பட்டது. அவள் முன்னே சென்று கதவைத் திறந்தாள். இரண்டாவது பிளாட் மனோன்மணி சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள். “என்ன உடம்பு சரியில்லையா, ஆட்டோவில் வந்தீங்க போலிருக்கு?” என்கிறாள் மனோன்மணி. இப்போதுதான் சாரதா தனக்குப் பல்வலி என்பதைப் பற்றிப் பேசுகிறாள். “ஐய்யய்யோ எது வந்தாலும் வரலாம்.இந்தப் பல்லு வலி மட்டும் வரக்கூடாது,” என்கிறாள் மனோன்மணி. மனோன்மணி போய் விட்டாள். இப்போது பல்வலியுடன் சாரதா போராடுகிறாள். திரும்பவும் மணி அடிக்கிறது. கதவைத் திறந்தவுடன் வாசலில் பூ விற்கும் ராணி நிற்கிறாள். இரண்டு முழம் ஜாதி மல்லியைத் தந்து விட்டு, உடம்பு சரியாய் இல்லையாம்மா என்று கேட்கிறாள். நாளைக்கு வா என்று அவளுக்குப் பதில் அளித்துவிட்டு கதவைச் சாத்துகிறாள். அவளிடம் அவள் பல்வலியைப் பற்றிப் பேசவில்லை. திரும்பவும் தொடர்ந்து மணி அடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் உடனே போய் கதவைத் திறக்கவில்லை சாரதா. அவள் கண்ணாடியைப் பார்க்கிறாள். தலைமுடியை விரலால் கோதி சரிசெய்து கொண்டாள். மணி மறுபடியும் அடித்தது. அவள் வாசல் பக்கம் ஒரு முறை பார்த்துக்கொண்டாள். ஆனால் வாசல் கதவைத் திறக்கப் போகவில்லை. நிதானமாக ஒருமுறை இருமி எச்சிலை வாஷ்பேசினில் துப்பி விட்டு பாத்ரூமுக்குள் சென்றாள். மணி விட்டு விட்டு ஒலித்துக்கொண்டே இருந்தது. அவளிடம் ஒரு அலட்சியம் கதவைத் திறக்க. பின் அவள் ஈரக் காலை மிதியடியில் துடைத்தபடி பாத் ரூமை விட்டு வெளியில் வந்தாள். இப்போது கதவு படபடவென்று தட்டப்பட்டது. அவள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னே போய் கதவைத் திறந்தாள். அவள் கணவன் ரவிச்சந்திரன் நின்று கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது. “எவ்வளவு நேரமா கதவைத் தட்டிக்கிட்டு இருக்கேன். உள்ள என்ன புடுங்கிக்கிட்டா இருக்க..”என்று அவளை இடித்துத் தள்ளியபடி உள்ளே சென்றான். அவள் திரும்பி அவனைப் பார்த்தாள். மின்னல் கீற்று போல ஒரு புன்னகை தோன்றி மறைந்து சென்றது. இத்துடன் இந்தக் கதை முடிந்து விடுகிறது. அவளிடம் அவள் தனக்குப் பல்வலி என்ற சொல்லாமல் புன்னகை மூலம் சொல்லப் பார்க்கிறாள். அந்தப் புன்னகையும் ஒரு நொடியில் போய் விடுகிறது. மனித உறவுகளைப் பற்றி நுணுக்கமாக விவரிக்கப்படுகிறது இந்தக் கதையில். சாரதா கதவைத் திறக்காமல் ஏன் அவசரப்படாமலிருந்தாள்.. ஒரு சமயம் அவள் கணவன்தான் வரப்போகிறான் என்று ஊகித்திருந்தாளா? அவனும் தாமதமாகக் கதவைத் திறக்கிறாளென்று கோபமாக அவளைத் திட்டிவிட்டு உள்ளே நுழைகிறான். சா கந்தசாமியால் நுணுக்கமாக எழுதப்பட்ட கதை இது. (11.10.2020 அன்று இணைய இதழ் திண்ணையில் வெளியான கட்டுரை)