சிறு கவிதைகள்

01

அழைத்துப் போய்வந்தஆசிரியரின் அத்தனைகெடுபிடிகளுக்குப் பின்னும்இன்னமும் நினைவில்
அந்த ஸ்கூல் பயணம்இன்பச் சுற்றுலா என்றே.
o
02
இலவசமாய்அரிசி டிவி
இயற்கை
உபாதைக்குகட்டண
கழிப்பிடங்கள்.
o
03
எதிர்வரும் பேருந்தில்
அடிபடும் அபாயம்.இடப்புறம் நகர்ந்து
நடந்தேன்.இளவயது மாதொருத்தியை இடித்தபடி.

o

04யாருமற்ற பூங்காவில்ஊஞ்சல்ஆடிக்கொண்டிருக்கிறான்என் மகன்.எவரையோ சேருமென்றுகவிதைகள்எழுதிக்கொண்டிருக்கிறேன்நான்.
o
05
ஏதோவொன்றின் தொடர்பாகவே
எதுவொன்றின்நினைவும்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

11

விளையாடும் பூனைக்குட்டி

க நா சு
மல்லாந்து படுத்துக் கால்நீட்டிக்
குறுக்
கிக்கயிற்றின் நுனியைப் பல்லால்கடித் திழுத்துத்
தாவி எழுந்து வெள்ளைப்
பந்தாக
உருண்டோடிக் கூர்நகம் காட்டி
மெலிந்து சிவந்த நாக்கால்
அழுக்குத் திரட்டித் தின்னும்
பூனைக்குட்டி –
என்னோடு விளையாடத் தயாராக
வந்து நின்று, என் கால்களில் உடம்பைச்
சூடாகத் தேய்த்துக் கொண்டு நிமிர்ந்து
அறிவு ததும்பும் கண்களுடன் என்னைப்
பார்க்கிறது. அப்போது நான்
சிலப்
பதிகாரம் படிந்திருந்து விட்டேன்
பின்னர்
நான் அதை விளையாட
‘மியாவ் மியாவ் ஓடி வா’
என்று கூப்பிடும் போது நின்று
ஒய்யாரமாக ஒரு பார்வையை என்
மேல் வீசிவிட்டு மீன் நாற்றம்
அடிக்கும் கொட்டாவி விட்டுக்கொண்டே
அடுப்படியிலே போய்ச் சுருண்டு படுத்துக்கொள்கிறது
பூனைக்குட்டி

(எழுத்து / ஏப்ரல் 1959)

இப்படி ஒரு பயணம் சி.மணி – (1936-1979)

சி.மணி மறைந்து விட்டார் நேற்று, என்று நண்பரும் விருட்சம் என்னும் சிறுபத்திரிகாசிரியருமான அழகியசிங்கர் தொலைபேசியில் சொன்னார். கொஞ்ச காலமாக அவர் உடல் நிலை சரியில்லாது இருக்கிறார் என்று க்ரியா ராம க்ரிஷ்ணனும் எனக்குச் சில மாதங்கள் முன் தொலைபேசியில் சொல்லியிருந்தார்.

ஐந்தாறு வருடங்களுக்கு முன் சேலத்தில் காலச்சுவடு நடத்திய சி.சு.செல்லப்பா – கு.ப.ராஜகோபாலன் பற்றிய கருத்தரங்கின்போது தானே நடக்க சக்தியில்லாத ஒரு தளர்ந்த முதியவரை கைத்தாங்கலாக ஹாலுக்குள் அழைத்து வந்து ஓர் இருக்கையில் அமர்த்தினர். பக்கத்தில் இருந்தவரிடம் (அனேகமாக சச்சிதானந்தமாக இருக்கவேண்டும்), “யார் அவர்?” என்று விசாரித்தேன். “யோவ், சி.மணிய்யா அது!” என்று என் அறியாமையை இடித்துப் பேசும் குரலில் அதிர்ந்து போனேன். உடனே அவரிடம் விரைந்து சென்று, என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன்.

அவரது தளர்ந்த நிலை, என் அறியாமை, அதிர்ச்சி, என்னை அவருக்கு நான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டி வந்த நிலை எல்லாம் எல்லாம் ஒரு விதத்தில் சொல்லப் போனால், தமிழ் உலகம் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய இன்றைய நிலையின் அன்றைய முன் அறிவிப்பு போன்ற உருவகக் காட்சியோ என்று தோன்றுகிறது. உருவகத்தின் ஒரே ஒரு விவரம் தான் மாறுகிறது. நான் என்னை அறிமுகப் படுத்திக்கொள்ள விரைந்தேன். இன்று தமிழ் நாடு அப்படியெல்லாம் செய்யவேண்டிய அவசியம் கொண்டதல்ல.

சி. மணிதான் தன்னை இன்றைய தமிழ்க் கவிதையின் ஒரு புது அத்தியாயத் தொடக்கத்தில் பங்கு கொண்ட கவிஞர் என்று தன்னை தமிழுக்கு நினைவுபடுத்தவேண்டும். தமிழ் இலக்கிய உலகம் கேட்குமோ கேட்காதோ எனக்கு நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை.

நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம், அவர் யார் என்று எனக்குச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் என் நினைவில் சுமார் முப்பது முப்பதைந்து வருடங்களுக்கு இடையில் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாத காரணம் தான்.

எழுபதுகளின் ஆரம்ப வருடங்களில் ஒரு நாள் நான் சென்னையில் விடுமுறையில் வந்திருந்தபோது ந.முத்துசாமிதான் கடற்கரைக்கு என்னை அழைத்துச் சென்று அங்கு சி.மணி, வி.து.ஸ்ரீனிவாசன், இன்னும் ஒரு சேலத்துக்காரர், பெயர் மறந்து விட்டது, எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் எல்லோரும் சென்னையில் கல்லூரித் தோழர்கள் என்றே நினைக்கிறேன். அப்படித்தான் ஒரு சின்ன நண்பர்கள் கூட்டம் எழுத்துக்கு ஒருமுகமாக அறிமுகமானது. அவர்கள் எல்லோரிலும் சி.மணி தான் ஒரு ராஜ தோரணையும், நெடிய உருவமும் கொண்டு தனித்துத் தெரிந்தார். அன்று astral bodies பற்றி முதன் முறையாக அவர் பேசக் கேட்டேன். இலக்கியம் பற்றியோ, கவிதை பற்றியோ பேசவில்லை. வி.,து. ஸ்ரீனிவாசனும் நிறையப் படித்தவராகத் தோன்றியது. ஸ்ரீனிவாசன் தத்துவ உலகில் சஞ்சாரம் செய்தார்.
சி.மணியைப் பார்த்த போது அவரை நான் எழுத்து பத்திfரிகையில் அவர் எழுதியிருந்த நீண்ட நரகம் கவிதையில்

கால் பட்டமணலிலும்
கண்பட்ட மனதிலும்

பல சுவடு பதித்து,

பதித்த நிலை தெரியாது

குதித்தோடும் ஒரு கும்பல்;

அதைத்தொடரும் மற்றொன்று

இன்னல் தனித்தே வராதா?

என்று எழுதக்கூடும் ஒருவரைப் பார்த்தேனே ஒழிய

கலைந்த மழையுள, மறைந்த பூவுள

தாங்கிய செங்கை தலைக்கண் மேலுள

ஒலித்த வளையுள, ஓய்ந்த விரலுள

சரிந்த தலைப்பால் தெரிந்த மலருள,

என்று எழுதியிருந்த, அதை சாத்தியமாக்கும் ஆழ்ந்த, பரந்த தமிழ்ப் பாண்டித்யமும் அதை நினைத்த கணத்தில் எடுத்தாளும் திறனும் கொண்ட ஒரு தமிழ் பண்டிதத் தோற்றத்தை நான் காணவில்லை.

மிகுந்த தோழமையோடும் பழகினார். ஒரு சில மணிநேரங்கள்தான். பின் அவரை நேரில் பார்க்கவில்லை. நடை பத்திரிகையில் எங்கள் நெருக்கம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அவர்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்த கலிங்கத்துப் பரணியில் ஒரு பகுதிப் பாடல்களை (கடைதிறப்பு – மிக சுவாஸ்ய்மான பகுதி) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்ததைப் பார்த்தேன். கைப் பிரதியில் தான். எனக்குத் தெரிந்து அவை எங்கும் பிரசுரமாகவில்லை.

சி.மணி ஆங்கில இலக்கியத்தில்தான் பட்டம் பெற்றவர் என்று நினைக்கிறேன். ஒரு வேளை தமிழிலும் பட்டம் பெற்றிருக்கலாம். ஆனால் அவர் எழுத்து பத்திரிகையில் அதன் தொடக்க வருடத்திலிருந்தே எழுதிய கவிதைகள், மரபும், மரபு மீறலும், அம்மீறலில் தனக்கென ஒரு தனித் தடமும், கொண்டவராக, அதிலும் இவை கவிதை, தமிழ், யாப்பு என்ற வட்டத்துக்குள் சிறைப்பட்டு விடாது, ஒரு பரந்த உலகையும், பல துறைகளையும் ஒன்றிணைத்த , எள்ளலும், சமூக விமர்சனமும், ஒரு இளைஞனின் தான் அன்னியப்பட்டுவிட்ட நிலையில் தந்திருப்பது ஒரு புதிய வருகையை, தமிழுக்கு வந்துள்ள வளத்தைக் கொண்டாடுவதுதான்.

பல விஷயங்களில் பழமைப் பிடிப்பும் பிடிவாதமும் கொண்ட செல்லப்ப அந்த நாடகளில் சி.மணியின் புதிய பார்வையையும் குரலையும் இனங்கண்டு கொண்டாடி ஆர்ப்பரித்தது அப்போது மட்டுமல்ல, இப்போதும் நினத்துப் பார்க்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. சி.மணியின் பார்வையும் எழுத்தும் கஷ்டப்பட்டு யோசித்து வலிந்து பெற்ற ஒன்றல்ல. அது தாமாக சட்டென வெளிப்படுவது. சென்னை பஸ் நிறுத்தத்தில் பஸ் வந்ததும், கூடியிருக்கும் கூட்டம் பஸ்ஸில் இடம் பிடிக்க முண்டியடிக்கும் காட்சியைக் கண்டு இதை எதற்கு ஒப்பிடலாம், பழம் இலக்கியத்தில் தான் பண்டிதன் என்று காட்டிக்கொள்ள எந்த வரியை எடுத்தாளலாம் என்று யோசிக்கும் காரியமில்லை. “யோவ் பொம்பிளைங்கள ஏறவிடுய்யா முதல்லே” என்று ஆரம்பித்துத் தொடரும் கூச்சலையும் முண்டியடித்து ஏறும் காட்சியையும் பார்த்த உடனேயே சி.மணி உதட்டில் நகையேற,

சேவலே முன்னென்போரும், இல்லை

பெடையே முன்னென்போரும், இல்லை,

வரிசையே நன்றென்போரும், ஏறுவோரும்

தேர்ந்ததே தேரினல்லால், யாவரே

தெரியக்கண்டார்.

என்று மனதுக்குள் வரிகள் ஓடிக்கொண்டிருக்கும்.

நரகம், வரும் போகும் போன்ற நீண்ட கவிதைகளில் வரும் இன்றைய நடப்புலக நகரக் காட்சிகள், பழந்தமிழ் இலக்கியத்தில் பரிச்சமுள்ளவர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது மதுரைக் காஞ்சியில் வரும் நகரக் காட்சிகள். அதிலும் ஆடவர்கள் கவனத்தைக் கவர கணிகையர் தம்மை வண்ணக் கோலங்களில் அலங்கரித்து வரும் இரவு நகரக் காட்சியும் அடக்கம். ரோமானினர்களும், கிரேக்கர்களும் தம் நாட்டு உடைகளில் உலாவருகிறார்கள். நகரம் என்றால் எல்லாம் தான் அதில் அடக்கம்.

பழந்தமிழ் பா வரிகளை அப்படியே கையாண்டுள்ளதை நான் பாரதிதாசனில் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு தமிழாசிரியர் தானே. ஆனால் அவர் அந்த வரிகள் வசதியாகச் சேர்ந்தவை. அதற்கு மேல் அதற்கு மாறிய, வேறுபட்ட பயனோ, அர்த்தமோ இருந்ததில்லை. ஆனால் சி.மணி அந்த வரிகளை அப்படியே கையாள்வதில்லை. பழம் இலக்கிய வரிகள என்ற அடையாளத்தைத் தக்க வைத்துக்கொண்டு அதை மாற்றி, இன்றைய சமூகத்தின் நடப்புகளைக் கிண்டலோடு விமரிசிக்கும் பொருளில் கையாள்கிறார். அது வெறும் கிண்டல் இல்லை. சமூக விமர்சன்மும் பொதிந்தது. ஒரு ஜென் ஞானியின் பார்வையும், திருமூலரின் எளிமைத் தோற்றம் கொண்ட ஆழமும், முரணே போன்ற உண்மையும், கொண்ட தத்துவ விசாரமும் அடங்கியிருக்கும். முதல் கவிதையே

முற்றிய வித்து

பழமையின் திரட்டு; புதுமையின் பிறப்பிடம்(1959).

தோற்ற முரண் கொண்ட உண்மை.

இந்த விசாரம் கடைசி வரை தொடர்கிறது.

சிந்திப்பதற்கு மிகச் சிறந்த முறை எது

என்றால்சிந்திகாமல் இருந்து விடுவது தான். (1994)

இரண்டு மே ஏதோ ஒரு epigram மாதிரித் தோன்றினாலும் முன்னது இரண்டு வரிகளிலேயே கவிதையாகியுள்ளது. பின்னது ஒரு கவிதையின் தொடக்க வரியாகக் கொள்ளாமல், இரண்டு வரிகளினுடனேயே நின்று விட்டால் epigram- ஆக நின்று விடுகிறது.

எழுத்துக்கு இப்படி ஒரு கவிதைக் குரல் கிடைத்ததில் செல்லப்பாவுக்கு சந்தோஷமே. அதைக் கொண்டாடவும் செய்தார். சி.மணிக்கு தன் கவித்வ வெளிப்பாட்டிற்கு ஒரு மேடை கிடைத்தது பற்றி சந்தோஷமே. ஆனால் எழுத்து பத்திரிகையின் புதுக்கவிதையின் பிரயாணம் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. மரபை வரித்துக்கொண்டோரிடமிருந்து எதிர்ப்பு. தாம் புரட்சிக்காரர்களாக்கும் என்று கோஷமிடுவோரிடமிருந்தும் எதிர்ப்பு. அத்தோடு இவ்விரு சாராரையும் சேராத, செல்லப்பா போல புதுமை இலக்கியக்காரர்களிடமிருந்தும் எதிர்ப்பு. எல்லா எதிர்ப்பும் கிண்டலோடுதான். அதெல்லாம் பழைய கதை. இப்போது ஜஸ்டீஸ் பார்ட்டிக்காரர்களும், செஞ்சட்டை வீரர்களும், திராவிட கழகங்களும் அவர்களுக்கு அன்று வெறும் காந்தியாக இருந்தவரை, அண்ணல் காந்தியாக்கி அவர் சிலைக்கு மாலை அணிவிப்பது போல, இப்போது எல்லோரும் புதுக்கவிதைக் காரர்கள் தாம். ஆனால், சி.மணி எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அவருக்குக் கிடைத்த எதிர் வினை தான் தமிழ் இலக்கிய உலகத்தின் குணங்களில் குறிப்பிடத்தக்க விசேஷமான ஒன்று.

க.நா.சு. செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் வந்த எதையும் அங்கீகரிக்கத் தயாராயில்லை. “ட்.எஸ். இலியட் செய்ததைத் திரும்பச் செயவதில் என்ன இருக்கு?” என்றார். காரணம் எழுத்து பத்திரிகையின் மீதும் செல்லப்பா மீதும் இருந்த பகைமை உணர்ச்சி. எழுத்து கடை மூடிய பிறகு வெகு காலம் கழிந்த பின்னர் அவர் எழுத்துவையும் செல்லப்பாவையும் பாராட்டி எழுதியவர்தான். க.நா.சுவுக்கு என ஒரு தனி சிஷ்ய கோடிகள் இருந்தார்கள். அவர்களும் அவர் வழியொட்டி சி.மணியைக் கண்டு கொள்ளவில்லை. ஷண்முக சுப்பையாவைக் கொண்டாடியவர்கள் சி.மணியைக் கண்டு கொள்ளாத வேடிக்கை எங்கு நடக்கும்? தமிழ் நாட்டில். மெத்தப் படித்தவர்களுக்கு டி.எஸ் இலியட்டின் Waste land-ஐ பிரதி செய்ததாகச் சொல்வது தம்மை உயர்த்திக்கொண்டதாகவும் இருக்கும், தாம் காணச் சகிக்காத சி.மணியை மட்டம் தட்டியதாகவும் இருக்கும் என்ற எண்ணம். அவர்கள் மெத்தப் படித்தவர்கள் மட்டுமே. அவர்களுக்கு வெறும் உத்தியையும் ஒரு உத்தி தந்த சிருஷ்டியையும் குழ்ப்பிக்கொள்பவர்கள். தம்மில் குழ்ப்பம் இல்லாவிட்டாலும் குழ்ப்பம் இருப்பதாகச் சொல்லி மகிழ்ந்தவர்கள்.

இந்திய மொழிகள் பலவற்றில் waste land-ன் பாதிப்பைக் காணலாம் என்று பார்தீய சாஹிக்தயவின் ஆசிரியர் என்னிடம் சொன்னார். எனக்குத் தெரிந்து மலையாளத்தில் அய்யப் பணிக்கர் இருக்கவே இருக்கிறார். இதில்லாம் தெரியாதென்று இல்லை. வேண்டுமென்றே புரளி செய்பவர்களை என்ன செய்யமுடியும்?. சி.மணியின் நரகம் சொல்வதை டி.எஸ் இலியட்டும் சொல்லவில்லை. அய்யப்ப பணிக்கரும் சொல்லவில்லை.

எழுத்து பத்திரிகை தன் கவிதையை நிராகரித்தது என்ற காரணத்தால், சி.மணி மட்டுமல்ல, தர்மூ சிவராமூ, சுந்தர ராமசாமி என்று சகட்டு மேனிக்கு எல்லோரையுமே நிராகரித்தவர்களும் உண்டு. சி.மணி நடை பத்திரிகையில் வே.மாலி என்று இன்னொரு புனை பெயரில் எழுதிய கவிதைகளைக் கண்டு ஆர்ப்பரிப்பதில் க.நா.சு.வுக்கு தயக்கமிருக்கவில்லை. வே.மாலி என்று எழுதுவது சுந்தர ராமசாமி என்று அவர் நினைத்தார். நான் அவரிடம் இது அவர் நிராகரிக்கும் சி.மணி என்று சொல்லவில்லை. அவருக்கு விஷயம் தெரியாது என்றில்லை. செல்லப்பாவை வெளிப்படையாக அங்கீகரிகக் கூடாது என்ற ஒரு தீர்மானம். அதில் இரையானது சி.மணி.

1964-65-ல் தில்லியில் என்னுடனான நேர்பேச்சில் அவர் சொன்னது, “எழுத்து மூலம் செல்லப்பா வெளிக்கொணர்ந்த இரண்டு முக்கிய பெயர்கள்: ஒன்று தருமூ சிவராமூ, இரண்டு வெ. சாமிநாதன்:”

மற்றொரு சமயம், “செல்லப்பா எதைப் பற்றி எழுதினாலும், அதை நான் கட்டாயம் பார்த்தாகணும். நான் அவரிடமிருந்து அதில் புதிதாகத் தெரிந்து கொள்ள ஏதும் இருக்கும்” ஆனால் இதையெல்லாம் அவர் எழுதியதில்லை. க.நா.சு போலத்தான் அன்று சி.மணியெல்லாம் ஒரு கவிஞரா என்று எழுதியவர்களும். எழுபதுகளில் பிரக்ஞை, தாமரை போன்ற இதழ்களில் ஒரு campaign- என்றே அதைச் சொல்ல வேண்டும். அப்படி ஒரு காட்டமான தொடர்ந்த எதிர்ப்புப் பிரசாரம் நடந்தது.

·ப்ராய்டிய மனப் பிறழ்ச்சி, அந்நியமாதல், எக்ஸிஸ்டன்ஸியலிஸம்,, இதெல்லாம் முதலாளித்வ சமூகத்தின் சீ£ர் கேடுகள்” என்று சோவியத் துண்டுப் பிரசுர பொது உடமைத் தத்துவ நோக்கில் நா.வானமாமலை எழுதலானார். இது முன் தீர்மானிக்கப்பட்ட கட்சிப் பார்வை. நா.வானமாமலை ரொமப விஸ்வாசமான கட்சிக் காரர். மற்றக் கட்சிக்காரர்கள் போல இலக்கியம் இன்னும் மற்ற சமாச்சாரங்கள் பற்றி ஏதும் தானே அறிந்து கொள்ளாதவர். மேலும் சி.மணியின் கவிதைகளில் பாலியல் ரொமபவும் பச்சையாகப் பேசப்படுகிறது என்று வேறு குற்றம் சாட்டியிருந்தார். வேறு எதற்கும் யாருக்கும் பதில் சொல்லாத சி.மணி பழம் இலக்கியங்களில் பேசப்பட்டிருக்கிறதே ஐயா, நான் அவ்வளவு தூரம் போகவில்லையே என்று பதில் சொல்லியிருந்தார். நா. வானமாமலை, இலக்கியத்தில் கொள்ளப்பட வேண்டுவதும், கொள்ள வேண்டாததும் எல்லாம் தான் இருக்கும். கூளப்ப நாயக்கன் காதலும் இருக்கிறது. விறலி விடு தூதும் இருக்கிறது. அதையெல்லாம் ஒதுக்க வேண்டும்”. என்றார்., ஆண்டாளும் கம்பனும், குறுந்தொகை இன்னும் மற்ற அகப் பாடல்களும் இருக்கின்றனவே, அவற்றையும் ஒதுக்கிவிடலாமா? என்று சி.மணி கேட்டிருக்கலாம். அவர் கேட்கவில்லை என்று தான் நினைக்கிறேன். அவருக்கு இந்த வாதங்கள் புரிவதில் நம்பிக்கை இல்லை. நீ எழுதுவதெல்லாம் கவிதையா என்று கேட்டவர்களுக்கே பதில் எழுதவில்லை. க.நாசு.வுக்கு அவர் பதில் சொன்னதில்லை.

அவரது இயல்பு அது. ஆனால், எழுத்திலும் நடையிலும் மற்ற இலக்கியச் சிறுபத்திரிகைகளிலும் தன் காலத்தில் எழுதிய மற்ற புதுக்கவிஞர்கள் ஆரவார வரவேற்பு பெற்ற இடங்களில் கூட சி.மணிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. Personal rivalry என்ற தளத்தில் மற்ற கவிஞர்களிடமிருந்தும், கண்டு கொள்ளாமல் ஒதுக்குவது என்ற வகையில் இலக்கிய கர்த்தாக்களிடமிருந்து வரும் எதிர்ப்பு இலக்கிய தளத்தில் புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. இது அந்த ஆரம்ப கால நோய்க்கூறுகளில் ஒன்று என்று தோன்றுகிறது. அந்தக் காலத்தில் மிகவும் பேசப்பட்ட, அவர்கள் தமக்குள் தாம் தான் பெரியவன் என்ற மிதப்பில் மிதந்தவர்கள் ஒருவரை ஒருவர் நிராகரித்துக் கொண்டார்கள். அது போல் தானே சி.மணிக்கும் நேர்ந்தது என்று கேட்டால், இவர்கள் அனைவரும் ஒன்று போல சி.மணியை நிராகரித்தார்கள் என்பதுதான் வேடிக்கை. பின்னர் அந்த ஆரம்பக் கால காட்டம் எல்லாம் மறைந்த பிறகு அன்று எதிர்த்தவர்களே சி.மணியைப் பாராட்டவும் செய்தார்கள். தம் மனதுக்குள் தம் அந்நாளைய எதிர்ப்பை எண்ணி வருந்திய்மிருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், எனக்குத் தெரிந்து வேறு சில எதிர்ப்புக்களுக்கு அவர்கள் வருந்தியது எனக்குத் தெரியும்.

தமிழ் இலக்கியம் அறிந்த எந்த யாப்பின் வகைப்பட்டதும் அல்ல இது என்ற பண்டித கண்டனத்திற்கு மாத்திரம் அவர் விரிவாக ‘செல்வம்’ என்ற பெயரில் பதில் தந்தார். அது அவசியமா என்ன? அதை அவர்கள் எதிர்கொள்ளவும் இல்லை. அதன் காரண்மாக இதென்ன யாப்பு வகை? என்ற கேள்வியையும அவர்கள் அன்று நிறுத்தவும் இல்லை. காலவோட்டத்தில் அந்த்க் கேள்வி தானாகவே மறைந்தும் விட்டது. ·ப்ராய்டிஸ் மனப் பிறழ்ச்சி, முதலாளித்வத்தின் சீரழிவு போன்ற கண்டனக் குரல்களும் மறைந்து விட்டன.
ஆனால் நம் இருப்பின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தால் தான் தமிழ் உலகம் நாமும் இருக்கிறோம் என்று ஒப்புக்கொள்ளும். நாம் அமைதியாக இருந்துவிட்டால், நாம் ஒரு காலத்தில் இருந்த தடையமும் மறைந்து விடும். சத்தமிட்டுக் கேட்கும் குரல்களின் குணம் என்ன தரம் என்ன என்ற கேள்விகளை தமிழ் உலகம் கேட்பதில்லை. சத்தமே தரம், ச்த்தமே குணம் அதற்கு. இப்படித் தான் சார்வாகன் என்ற கவிஞரும் மறக்கப்பட்டு விட்டார். எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். நான் இருக்கிறேன் என்ற சத்தம் அவர்களுக்குக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
தமிழ் இலக்கிய உலகம் சி.மணியை அங்கீகரிக்கவில்லை. அவரைக் கண்டுகொண்டது அமெரிக்கா வாழ் தமிழ்ர்கள் அளித்த விளக்கு விருது. தமிழ் நாடு எல்லை தாண்டி கேரளம் தந்த குமரன் ஆசான் பரிசு. இது ஏன் இப்படி நிகழ்கிறது என்று நாம் சற்று யோசித்தால் .
எழுத்து நின்றபிறகு, சி.மணி அதிகம் எழுதியவரில்லை. கணையாழி பத்திரிகையில் அவ்வப்போது சிறு கவிதைகள் எழுதி வந்திருக்கிறார். ஆனால் அறுபதுகளின் மணி அல்ல அவர். எழுபதுக்களுக்குப் பின் அதுவும் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கிவிட்டது.

ஆனால், ஆரம்பத்திலிருந்து அவருக்கு இருந்த கார்லோஸ் காஸ்டனாடா, குர்ஜீ·ப், ஜென், ஈடுபாடுகளில் அவர் மன்ம் முழுதுமாகத் தோய்ந்து விட்டது என்று தான் சொல்லவேண்டும். சில வருஷங்களுக்கு முன் வெளிவந்த தாவோ தே ஜிங் மொழிபெயர்ப்பு புத்தகம் அவரிடமிருந்து நமக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான கொடை. மொழிபெயர்ப்புத் தான். சீன மொழியிலிருந்து ஒரு சீனரே ஆங்கிலத்தில் தந்துள்ள பிரதியிலிருந்து பெற்ற தமிழ் மொழி பெயர்ப்பு இது. சி.மணிக்கு இமாதிரியான விசாரணகளில் உள்ள ஈடுபாடு, கவித்வ மனம், மொழி வல்லமை எல்லாம் இம்மொழிபெயர்ப்பில் சாட்சியம் பெறுகின்றன.

வாசலைத் தாண்டிப் போகாமலே

உலகம் அனைத்தையும்

ஒரு மனிதன் தெரிந்து கொள்ள முடியும்

ஜன்னல் வழியே எட்டிப் பார்க்காமலே

வானத்துத் தாவோவை ‘

பார்க்க முடியும்

அதிகம் பயணிக்கும் ஒருவன்

மிகவும் குறைவாகவே தெரிந்து கொள்கிறான்.

ஆரம்பத்தில், 1959 வெளிவந்த அவர் முதல் எழுத்திலிருந்தே இத்தகைய விசாரணைகளோடு தான் அவர் பயணம் தொடங்கியதை திரும்ப நினைவுக்குக் கொள்ளலாம். பயணத்தின் முடிவிலும் அதே முரண்பட்ட உண்மைகளை அடந்திருப்பது பயணத்தின் தொடக்கமா, முடிவா, பயணம் தானா என்று சிலருக்குக் கேள்விகள் எழும். இன்னொரு கவிதை சி.

மணியினது
ஒரு உண்மை தேடி நச்சரித்தான்:

ஓ குருவேஇறப்புக்குப் பிறகு என்ன?
குரு சொன்னார், பார்வையில் குறும்புடன், ஓ அதுவா,பிறப்புக்குப் பிறகு என்ன?
70-க்களிலிருந்து அவர் அறுபதுக்களில் தெரியவந்த சி.மணியாக இல்லையே என்று எனக்கு வருத்தம் ஒரு பக்கம். அவரது கவித்திறனின் முழு வியாபகத்தை அவரது நீண்ட கவிதைகளில் தான் காண்கிறோம். புதுக்கவிதை தோற்றத்திற்குப் பிறகு நீண்ட கவிதைகளை யாரும் எழுதுவதில்லை. வெற்றிகரமாக அதைச் சாதித்தவர் சி.மணி தான். அவரது கவித்வ வாழ்வு கடைசி வரை ஏதோ வகையில் தொடர்ந்தது தான். தாவோ தேஜிங் சாட்சியப்படுத்துவது போல். ஆனால் அறுபதுகளில் அவரது கவித்வம் கண்ட வீச்சு காணப்படவில்லை. இதற்கு காரணம் சி.மணியின் ஆளுமை இயல்பா அல்லது தமிழ் இலக்கிய உலகின் குணவிசேஷங்களா? எனக்கு என்னவோ வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒரு கவிஞனை மூச்சடைக்கச் செய்துவிட்டோமோ என்று. இயல்பான பயணம் அல்ல இது. தடைக்கற்களை பாதை எங்கும் கொட்டி விட்ட பயணம்.
இலக்கிய பயணத்தில் மாத்திரம் இல்லை. தொடக்கத்தில் நெருங்கியிருந்த நண்பர்கள் கூட கால கதியில் ஒவ்வொருவராக விலகி தூரச் சென்று விட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். இனி சி.மணியால் என்ன பயன் என்றோ என்னவோ? சி.மணியின் முதல் கவிதைத் தொகுப்பை (அவரது மூன்று நீண்ட கவிதைகளையும் கொண்ட – வரும் போகும்) எழுபதுகளில் வெளியிட்ட க்ரியா ராமகிருஷ்ணன் தான் சி.மணியின் முமுக் கவிதைத் தொகுப்பையும் (இது வரை) பின் தாவோ ஜிங் மொழிபெயர்ப்பையும் வெளியிட்டு இன்னும் பல தளங்களில் அவரது ஒத்துழைப்பை வேண்டிக்கொண்டவர். அவருக்கு ஆரம்பத்திலிருந்து நட்பும் ஆதரவும் தந்தவர் எனக்குத் தெரிந்து ராமகிருஷ்ணன் மாத்திரம் தான். தனித்து விடப்பட்டிருந்த சி.மணிக்கு இந்த நட்பு இதம் தந்திருக்கும்.
17.4.09

கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா

இரண்டு வாரங்களுக்கு முன் திரிசூலம் ரயில்வே நிலையத்தில் அமர்ந்திருந்தபோது எங்களுடைய முதல் கேள்வி கவிதை புரிய வேண்டுமா வேண்டாமா என்பதுதான். எங்களிடையே பலத்த சர்ச்சையை இந்தக் கேள்வி ஏற்படுத்தியது. என்னைப் பொறுத்தவரை கவிதை புரிய வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன். ஆனால் கவிதை மனதிலிருந்து எழுதுவதால் புரியாமல் போக வாய்ப்புண்டு. கவிதையை எழுதுகிற மனமும், கவிதையை வாசிக்கிற மனமும் வேறு வேறு தளங்களில் இயங்குபவை. அதனால் கவிதை புரியவில்லை என்று ஒரு வாசிப்பவன் சொல்லி கவிதையைத் தூக்கிப் போட்டுவிட முடியும். என் நண்பர்கள் சிலர் கவிதை புரியவில்லை என்றே சொல்லாதே என்று அறிவுரை கூறுவார்கள். ஏனெனில் கவிதை புரியவில்லை என்று சொன்னால் எழுதுபவர்களுக்குப் பெரிய கித்தாப்பு ஏற்பட்டுவிடும். ஆனால் கவிதை எளிதாகப் புரியவேண்டும் என்று பாரதியார் கூறியபடி எளிதாக பல கவிதைகளைப் படைத்திருக்கிறார்.

சிலசமயம் கவிதை புரியும் ஆனால் கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியாது. அதனால் கவிதையைப் பொருத்தவரை இரண்டுவிதமான அபிப்பிராயங்கள் தோன்றாமல் இருப்பதில்லை. ஒன்று கவிஞரின் அபிப்பிராயம். இரண்டாவது வாசகனின் அபிப்பிராயம். எனக்குத் தெரிந்து நகுலன் ஆனந்த் கவிதை ஒன்றைப் படித்துவிட்டு, என்ன எழுதியிருக்கிறார், புரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷாஅ என்பவரின் ஒரு கவிதையைப் பார்ப்போம்.

எனது

வீணையின் நரம்புகளுக்கு

பாடத்

தெரியாது

நடனம்தான்

தெரியும்.

அவை

ஆடினால்

பார்க்கமுடியாது

கேட்கத்தான்

முடியும்

மேலே குறிப்பிடப்பட்ட கவிதை படிப்பதற்கு எளிதாக தோன்றினாலும், என்ன சொல்ல வருகிறார் என்பதை வாசகர்கள் மூளையைக் கசக்கிக்கொண்டுதான் இருக்க வேண்டும். கவிதை மூலம் எளிமையாகச் சொல்லுதல் வேறு. அப்படி எளிதாக சொல்வதன் மூலம் புரிந்துகொண்டு விட முடியும் என்று சொல்ல முடியாது. ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்லுவது எளிதாகப் புரிவதுபோல் இருக்கும். ஆனால் ஆழமாக யோசித்தால் ஒன்றும் புரிபடாது. நம் வாழ்க்கைக்கு ஜே கே தத்துவம் உதவாது. என் நண்பர் ஒருவர் ஜே கே பேசுவதைக் கேட்டு எக்ஸ்பிரஸ் காஃபி குடிப்பதுபோல் இருக்கிறது என்பார். இன்னும் பல நண்பர்கள் ஜேகே படித்துவிட்டு இயல்பு நிலையிலிருந்து மாறி விட்டதாக தோன்றும். நான் ஜே கேயைத் தீவிரமாகப் படித்தபிறகு, எனக்கு கோபமே இல்லாமல் போய்விட்டது. யாராவது திட்டினால்கூட கேட்டுக்கெண்டிருப்பேன் சும்மா. நாராணோ ஜெயராமன் என்ற ஒரு கவிஞர். ‘வேலி மீறிய கிளைகள்’ என்ற தொகுதி க்ரியா பதிப்பகம் மூலம் வெளி வந்திருக்கிறது. இத் தொகுப்பு வந்தவுடன் அவர் எழுதுவதையே நிறுத்திவிட்டார். காரணம் ஜே கே. ஜே கே மாதிரி ஒருவரைப் பார்த்தபிறகு எழுதுவதில் ஒரு அர்த்தமுமில்லை என்பார் அவர். எனக்கு ஜே கே மீது கோபம் வரும்.

அதேபோல் கவிதை எழுதுவதிலும், கவிதையை வாசிப்பதிலும் நம்மைப் பெரிதும் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். நாம் கவிதை எழுதுகிறோம். கவிதை வாசிக்கிறோம். எதை வாசிக்கிறோமோ அதை வேறு மாதிரி எழுத முயற்சிக்கிறோம். நாம் வாசிக்கும்போதே நம்முடைய உலகத்தை கவிதை பிடித்து விடுகிறது. அதேபோல் கவிதை எழுதுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் கவிதை எழுதுபவனை கவிதை காட்டிக் கொடுத்துவிடுகிறது. இது கவிதை எழுதுபவனுக்கே தெரியாது.

‘கொல்லும் முகம்’ என்ற சம்பத்தின் கவிதையைப் பார்ப்போம்.

சுழலும் விழிகளில் நீர் ஏனோ?

கழநிகளில் பாய்ந்ததுதான் போதாதோ

மறையும் மாலையில் ஒளிர்ந்திடும் –

உன் முகம்தான் என் வாழ்வின் விதிப்பயனோ?

தெரிந்ததில்லை பயணம் தொடர்ந்தக்கால்

தெரிந்ததில்லை – பருவமதில் – மாற்றத்தில் –

தெரிந்ததுதான் யாருக்கு எப்போது?

இயம்புமோ உன் முகம்தான் அதைப்பற்றி?

என் உறக்க, விழிப்பில், ஊர்ந்தவளே

என் சிந்தையில் படர்ந்த கொடிப் பூவே

என் மூளையில் பூத்த வெண் மலரே

உன் முகம்தான் என்னைக் கொன்றதடி.

மூளையில் வெண் மலர் பூத்தால் எப்படி இருக்கும்? எதிர்பாராதவிதமாக சம்பத் மூளை வெடித்து இறந்துவிட்டார். இந்தக் கவிதை மூலம் அவர் இது மாதிரி ஒரு முடிவு அவருக்கு ஏற்படுமென்று தெரியாமல் தெரிவித்து விட்டதாக எனக்குத் தோன்றும்.

அதேபோல் ஆத்மாநாம் கவிதை ஒன்றை பார்க்கலாம்.

நான் ஒரு ஞானியுமில்லை

நான் ஒரு சித்தனுமில்லை

பித்தம் பிடித்தும் பிடிக்காத மேதை நான்

படித்தும் படிக்காத புலவன் நான்

வைத்தியம் தெரிந்தும் செய்து கொள்ளா நோயாளி நான்

உண்மையைத் தொட்ட ஒரு பேதை நான்

உத்தமனில்லை ஆனால் பொய் சொல்லத் தெரியாது

சத்தியவான் இல்லை ஆனால் உண்மையே பேசுபவன்

இவற்றையும் மீறி இருக்கிற கொஞ்சம் மட்டுமே நான்

இந்தக் கவிதை தெளிவாகவே ஆத்மாநாமின் மனநிலையைக் காட்டுகிறது. நான் என்ன சொல்ல வருகிறேனென்றால் இக் கவிதை எழுதுபவனுக்கு மட்டுமல்ல வாசிப்பவனையும் வசப்படுத்துகிறது. வாசிப்பவன் இந்தக் கவிதையைப் படித்து மயங்கிவிட்டால் தொலைந்தான். அவனையும் இந்தக் கவிதைப் பிடித்துக் கொண்டு விடும். கவிஞனின் பிரக்ஞையை வாசகனைத் தெட்டுவிடும்.

இது கவிஞனின் பிரச்சினையாக மட்டுமல்லாமல், வாசிப்பவனின் பிரச்சினையாகக் கூட மாறிவிடத் தொடங்கும். இதைப் பற்றி இன்னும் யோசித்து எதாவது எழுத முடியுமாவென்று பார்க்கிறேன். இதை வாசிப்பவர்களும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கலாம். (இன்னும் வரும்)

நான்கு கவிதைகள்

கவிதை ஒன்று

ஓடிக்கொண்டிருந்தது நதி. கரையில் அமர்ந்திருந்தேன். வெயில் தாழ குளித்துக் கரைமீண்டாய் நீ நதியின் சுழல், ஆழம், குளிர்மை z
எனப் பேசிக்கொண்டே போனாய். ஓடிக்கொண்டிருந்தது நதி.
கேட்டுக்கொண்டிருந்தேன்
ஒரு முடவனைப் போல.
ஏதோ ஒரு தருணத்தில்
உன் தலை சிலுப்பில்
பூ தூறலாய் விழுந்தது
நதி என் மேலும்.
நீந்த முடியாத நதி.

கவிதை இரண்டு

அம்மா
காத்திருப்பாள்
அப்பாவிற்காக.
மிடறு தண்ணீரும்
கவளம் சோறும்
இறங்காது.
தகிக்கும் வெயிலில்.
வெறிச்சோடிய தெருவும்.
ஆண்டணா கம்பிகளும் –
ஒதிய மரமும்
மெளனமாய்
அம்மாவைப் பார்த்துக் கிடக்கும்
அம்மா காத்திருப்பாள்
அரவமற்ற வெளியில்
ஏதோ ஒரு தேவகணத்தில்
மலரும்
கருஞ்சிறகுகள்
அம்மாவின் மனங்குளிர.

கவிதை மூன்று

விரிந்த வானம்.
யாரோ இறைத்துபோன
தானிய மணிகள்போல
இறைந்து கிடக்கும் நட்சத்திரம் –
முற்றம் வழி
கூடம் நிறைக்கும் நிலவு
என்பதாய் இருந்தது
அப்பாவின் இரவுகள்

எனக்குக் கிடைத்தது
துண்டு வானம் –
முட்டம் இல்லாத நாளில்
இரண்டொரு நட்சத்திரம்
சாளரம் வழியே
கொஞ்சம் நிலவு.

உன் வீடுதான் காரணமென்றாலும்
நீயும் சொல்லக்கூடும்
என் வீடு
உன் வானத்தை மறைப்பதை.

கவிதை நான்கு

மிகவும் அழகானது
நீ உடைத்தப் பூஞ்ஜாடி
ஒரு பிரயாணத்தின் நினைவாக
அது இருந்தது
என் மேஜையில்.
உன் முகம் வீங்க
அறைய வேண்டும் போலிருக்கிறது
இருந்தாலும்-
அது உடைந்துதான் போய்விட்டது.

வேர்கள்

மெரிக்க கவிஞர் ஜெர்ட்ருட் ஸ்டைன் ஒரு கவிதையில் A Rose is a rose is a rose is a rose என்று ஒரு வரி எழுதியிருந்தார்.அது மிகவும் புகழ் பெற்ற வரி கிவிட்டது. பல சமயங்களில் அந்த தொடர் ஆறு அல்லது ஏழு முறைகள் Rose என்கிற சொல்லுடன் உபயோகிக்கப்படுவதுமுண்டு. ஆனால் ஸ்டைன் நான்கு முறைகள்தான் Rose என்கிற சொல்லை எழுதியிருந்தார். எத்தனை முறை வந்தாலும் அர்த்தம் ஒன்றுதான். ரோஜா ரோஜாதான். ரோஜாவை ரோஜாவால்தான் முழுதாக அர்த்தப் படுத்திக் கொள்ளமுடியும். ரோஜா என்கிற சொல்லை மட்டுமல்ல எந்த சொல்லை எடுத்துக் கொண்டாலும் அதைப் பிறிதொரு சொல்லால் பெயர்த்துவிட முடியாது. அகராதியில் நாம் ஒரு சொல்லுக்கு காண்கிற அர்த்தங்கள் யாவும் அதை நெருக்கமாக அணுகத்தான் பயன்படுகின்றன. அகராதி இல்லாவிடில் அதன் அர்த்தத்தை பிரபஞ்சம் முழுவதும் தேட வேண்டி வரும். எந்த ஒரு சொல்லின் பொருளும் அதிலேயே உள்ளது.

இதே போன்று நுண்மான் நுழைபுலத்துடன் இன்னொரு வரியையும் ஸ்டைன் எழுதியுள்ளார்.அது `There is no there there`. வசீகரமும் திறமையும் வாய்ந்த ஸ்டைன் தன் வாழ்நாளை பாரிஸிலேயே கழித்தார். அவர் பிகாஸோ, மாடீஸ், ஹெமிங்வே போன்ற பல பிரபலங்களின் சிநேகிதி. முப்பது வருடங்கள் கழித்து பாரிஸிலிருந்து அவர் தான் சிறு வயதில் வாழ்ந்த கலிபோர்னியாவிலுள்ள ஓக்லாண்டிற்கு சென்றார்.அந்த இடைப்பட்ட காலத்தில் அங்கு எல்லாமே மாறிவிட்டிருந்தது. தான் படித்த பள்ளி, பார்த்த பார்க், சென்ற கோயில் மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற அனைத்தும் மாறிவிட்டிருந்ததைப் பற்றித்தான் அவர் `அங்கிருந்த அங்கு அங்கில்லை` என்று எழுதினார். அவ்வாறு அவர் நடந்து கொண்டது உள்ளூர்வாசிகளுக்கு மன வருத்தம்தான். என்ன செய்வது? பாரிஸ்வாசியான ஸ்டைன் வாழ்வில் ஓக்லாண்ட் அத்தியாயம் அத்தோடு முடிவுற்றது.

ஆனால் சென்னைக்கு குடியேறுகிற பலர் தங்கள் சொந்த ஊரையே நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். தங்களுடைய பொற்காலம் அங்குதான் இருந்ததாக நினைக்கிறார்கள். அதிகப்படியாக அவர்களில் பலர் பதினெட்டு வருடங்கள் வரைதான் சொந்த ஊரில் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் வயது எழுபது ஆனாலும் அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். பல அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், எழுத்தாளர்கள்,அலுவலர்கள் இதில் அடக்கம். இவ்வளவிற்கும் இவர்களுக்கு சென்னை வந்த பிறகுதான் புகழ், பணம், சொத்து, பதவி ஆகியனவெல்லாம் கிடைத்திருக்கும். இருந்தும் இவர்கள் சென்னையை விரும்பாததுபோல் காட்டிக்கொள்வார்கள். தங்களுடைய வேர்கள் அங்குதான் இருப்பதாக சொல்லிக்கொண்டிருப்பார்கள். சென்னையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இல்லாத ஒரு கவர்ச்சி அம்சத்தையும் இதன் மூலம் இவர்கள் தங்கள் மேல் தோற்றுவித்து விடுவார்கள்.

ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலி இத்தகைய கவர்ச்சியை மிகுந்த சாமர்த்தியத்துடன் பயன்படுத்தி Roots என்கிற சுயசரிதையை எழுதினார். தன்னுடைய முன்னோர்களை காம்பியாவிலுள்ள ஒரு இனத்துடன் முடிச்சு போட்டார். பதினெட்டாம் நூற்றாண்டில் அங்கிருந்து அடிமையாக வந்த குந்தா கிந்தே என்பவரின் வாரிசு என்று தன்னை அறிவித்தார். புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்று புலிட்சர் பரிசையும் வென்றது. அந்த அமளி எல்லாம் முடிந்த பிறகு வேர்கள் புத்தகத்தில் காணப்பட்டவை வேறு பல புத்தகங்களில் ஏற்கனவே வேர் கொண்டிருப்பதை விமர்சகர்கள் அடையாளம் காட்டினர். திருட்டு குற்றத்தை ஹேலியே ஒப்புக் கொண்டார். ஒரு எழுத்தாளருக்கு பெரும் நஷ்ட ஈடும் கொடுத்தார். இது ஒரு அதீத உதாரணம். வேர்களைத் தேடிச் செல்பவர்கள் எல்லாம் பொய்யர்கள் இல்லை.

கடந்தகால வாழ்வின் ஒரு கால கட்டம் ஜீவனுடையதாக இருக்கும் பட்சத்தில் அதன் பாதிப்புகளை பாராட்டுவதுதான் நியாயமானது. ஆனால் வேர்கள் என்ற ஒன்றை வலுக்கட்டாயமாகத் தேடிச் செல்ல வேண்டுமா என்பது தான் கேள்வி. எனது நண்பரான ஒரு வங்காளப் பெண்மனி பலகாலம் சென்னையிலேயே வாழ்ந்துவிட்டு பின் வரும் காலத்தை கொல்கத்தாவில் கழிக்க முடிவு செய்து சென்னையிலிருந்த சொந்த வீட்டையும் விற்றுவிட்டு தன் கணவருடன் கிளம்பினார்.என்ன இருந்தாலும் தன்னுடைய இடம் அதுதான் என்று அவர் நினைத்தார். ஒரு வருடம் கழித்து ஒரு நாள் அவரிடமிருந்து போன் வந்தது. கொல்கத்தாவிலிருந்து பேசுகிறார் என்று நினைத்தேன். தானும் தன் கணவரும் சென்னைக்கே திரும்பிவிட்டதாக அவர் கூறினார். கொல்கத்தாவுடன் அவரால் தன்னை இணத்துக் கொள்ள இயலவில்லை. சென்னையில் கிடைத்த நண்பர் குழாத்தை அவரால் அங்கே ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை.பூர்விகம்தான் நமது வேர் என்றில்லாது ஆக்கபூர்வமாக எது நம்மை செயலுக்குட்படுத்துகிறதோ அதை நாடிச் செல்வதுதான் பொருள் பொதிந்த செயலாகும். ஐரீஷ் கவிஞர் டபிள்யு.பி.யேட்ஸ் தன் முன் வந்து நின்ற ஜே.எம்.சிங் என்னும் நாடக சிரியரிடம் `ஏரன் தீவுகளுக்குச் செல்.அங்குள்ள மனிதர்களின் வாழ்வைப் பகிர்ந்துகொள். எவரும் வெளிப்படுத்தாத அந்த வாழ்க்கையை நீ வெளிப்படுத்து.` என்றார். சிங் அதை வேத வாக்கியமாக பாவித்து ஏரன் தீவுகளுக்கு உடனே சென்று அந்த வாழ்க்கையை தனது நாடகங்களில் உலகே வியக்கும் வண்ணம்வெளிப்படுத்தினார்.
மகாகவி பாரதி எட்டையபுரத்தில் பிறந்து வளர்ந்து பின்னர் காசி, சென்னை, புதுவை என்று புலம் பெயர்ந்து கொண்டே இருந்தார். தனது படைப்புகளில் எட்டயபுரத்து வாழ்க்கையை஢ல் தேவைக்கு மேல் லயித்ததில்லை. அகில இந்தியாவையும் தனது பரப்பாக பாவித்தவர் அவர். தேசியக் கவி மட்டுமல்ல, தேசிய எழுத்தாளரும் பாரதிதான். பதின்மூன்று வயதிலேயே கடலூரை விட்டு சென்னைக்கு குடிபெயர்ந்த ஜெயகாந்தன் மிகுதியாக எழுதியதெல்லாம் சென்னை வாழ்க்கையைப் பற்றித்தான். யாரும் அதுவரை பார்த்திராத சென்னையையும் அவர் தன் எழுத்துகளில் வெளிக்கொணர்ந்தார்.
செகந்திராபாத்தில் பிறந்து வளர்ந்து எப்போதோ சென்னைவாசியாகிவிட்ட அசோகமித்திரன் இப்பொழுதும் கூட தன் இளமைக் கால அனுபவங்கள் பற்றி எழுதுகிறார். ஆனால் அதற்கு இணையாக அவர் சென்னை வாழ்க்கைபற்றியும் எழுதுபவர். தனது அமெரிக்க அனுபவங்களை வைத்தும் அவர் குறிப்பிடத்தக்க கதைகளை எழுதியுள்ளார்.பதினெட்டாம் அட்சக்கோடு நாவல் எழுதி முடிக்கும்வரை ஒரு இருபத்தைந்து வருட காலம் அவர் செகந்திராபாத்-ஹைதராபாத் எல்லைக்குள் கால் வைக்கவில்லை என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்த ருசிகரமான தகவல். ஞாபகத்திலுள்ள இரட்டை நகரத்தை நிகழ்காலத்தில் சென்று பார்ப்பது தனது படைப்புக்கு எவ்விதத்திலும் உதவாது என்று அவர் முடிவு செய்தார். அவர் அறிவார் `அங்கிருந்த அங்கு அங்கில்லை` என்பதை.
நான் 2002ல் எடுத்த `அசோகமித்திரன்` டாகுமெண்டரியின் போது அதற்கு தொடர்பான இன்னொரு சுவையான சம்பவம் நிகழ்ந்தது.அவரை நான் செகந்திராபாத்தில் அவர் வாழ்ந்த லான்சர் பாரக்ஸ் என்கிற ரயில்வே குடியிருப்புக்கு அழைத்துச் சென்றேன். பல வருடங்களுக்குப் பின் அவர் அங்கு செல்கிறார். அப்பொழுது அந்த வீட்டில் யாரோ ஒரு உயர் அதிகாரி தங்கியிருந்தார். அந்த வீட்டிற்குள் அசோகமித்திரனுடன் சென்று அவரது நினைவுகளைப் பற்றிய வெளிப்பாடுகளை படமெடுப்பதாக ஏற்பாடு. நாங்கள் சென்ற சமயம் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டுக்காரர் அதன் சாவியைக் கொண்டு வந்து திறந்து விடுவதாகக் கூறினார். ஆனால் அசோகமித்திரன் ஏனோ அதை விரும்பவில்லை. அவர் மன நிலை மாறிவிட்டிருந்தது. அவர் இல்லாமல் அந்த வீட்டினுள் சென்று அதைப் படம் பிடிக்க எனக்கும் விருப்பமில்லை. அந்த வீட்டின் கேட் முன்னால் நின்று கொண்டே தனது கடந்த கால நினைவுகளை அவர் அசோகத்துடன் பகிர்ந்து கொண்டார். தன் சிறுபிராயத்து தடயங்கள் அழிந்ததற்காக அவர் வருந்தவில்லை.அன்று தான் விளையாடியதற்கு கிடைத்த மைதானம் போல் இன்று உள்ள சிறுவர்களுக்கு விளையாட மைதான வசதி இல்லையே என்பது பற்றித்தான் அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார். எவ்வித முன்கூட்டிய திட்டமிடலும் இன்றி உருவான அக்கணங்கள் டாகுமெண்டரியில் பதிவாயின. டாகுமெண்டரியைப் பார்த்தவர்களுக்கும் அப்பகுதி மிகவும் பிடித்திருந்தது.
நான் சென்னைக்கு வந்து இருபத்தாறு வருடங்களாகிவிட்டன. பிறந்தது, ஆறாவதிலிருந்து கல்லூரி வரை படித்தது எல்லாம் திருச்சியில்தான். அன்றிலிருந்து இதுநாள் வரை இலக்கியம், நாடகம், சினிமா ஆகியவற்றில் தொடர்ந்து ஆர்வம் உள்ள சில நண்பர்களைக்காணத்தான் நான் திருச்சி செல்கிறேன். மற்றபடி பழைய ஞாபகங்களைக் கிளறவோ, பழைய இடங்களை மீண்டும் மீண்டும் பார்த்து பெருமூச்செறியவோ அங்கு செல்வதில்லை. எல்லா ஊர்களையும் போல அங்கும் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சில பகுதிகளுக்கு செல்லும்பொழுது நான் அங்கே அதுவரை சென்றதே இல்லை என்று கூட அவை எண்ண வைக்கின்றன. பாரபட்சமற்ற ஒரு பார்வையில் சென்னைதான் தமிழ் நாட்டின் சிறந்த இடமாக எனக்குப் படுகிறது. வந்தாரை மட்டுமல்ல நிந்தனை செய்வோரையும்கூட வாழ்விக்கும்நகரமும் சென்னைதான்.

மூன்று கவிதைகள்

கவிதை ஒன்று

வெகு நாட்களுக்குப் பிறகு

எனக்கொரு கடிதம் வந்தது

சுட்டெரிக்கும் வெறுமையின் மத்தியில்

எனக்கென தோன்றிவிட்ட மாயையை

அக்கடிதம் ஏற்படுத்தியிருந்தது

நிரம்பி வழியும் தனிமையின் நிழலை

அழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம்

இன்னும் கிழித்துப் படிக்கவில்லை

இழந்து போனவர்களில் யாரோ ஒருவர்

இதை அனுப்பியிருக்கக் கூடும்

எதன் அடையாளமாகவேனும்

தெரிந்து கொள்ளும் ஆவலில்

கடிதத்தைக் கிழித்தேன்

அதனுள்

ஏதோவொரு பறவையின்

முறிந்த சிறகு கிடந்தது

கவிதை இரண்டு

இரவுகளின் நடனத்தைக்

கண்டவர்

அவ்வளவு எளிதில் உர்ரான்குவதில்லை

கழிதலறியும் உத்திகளை

எவ்வழியிலேனும் கையாளத்

தயாராக இருக்கிறார்

சுயசெய்கைகளுக்கு உட்பட்ட

காமவெளிப்பாடுகள் துருத்தி நிற்கும்

கழியாத இரவொவ்வொன்றும்

அவரை வீழ்த்த எப்பொழுதும்

காத்துக்கிடக்கின்றன

நடனத்தின் அசைவுக்குள்

விழும் எம்முறையும் வெறுக்கிறார்

நெடியுடன் பிறக்கும் விட்டிலை

கவிதை மூன்று

உதிர்தலில் வாடாத மரங்களின்

பெருமூச்சைக் கடந்து செல்லும்

நதியின் சலனமாக கடவுள் உறங்குகிறார்

ஒரு பூனையின் சாதுர்யமாக

கடவுளின் இல்லத்திற்குள் நுழைந்து

அவரது பஞ்சனைக்கு அருகில் அமர்கிறேன்

அவரின் பாதங்களில்

பிரார்த்தனைச் சீட்டுக்கள் விழுகின்றன

ஒவ்வொரு சீட்டினுள்ளும்

கடவுளின் உஷ்ணத்தில் பிறந்து

சூடு தாளாமல் இறந்து போன

யாரோ ஒருவர் இருக்கிறார்

வெகு சிலர் எனது இருப்பை

கடவுளுக்குத் தெரியப்படுத்த முயலுகிறார்கள்

அவர் இன்னும் உறங்கிக்

என் கோணிப்பை நிறைத்திருக்கும்

விஷத்திலிருந்து இரு சொட்டுக்களை

அவரது வாயில் ஊற்றுகிறேன்

அவை வழுக்கிச் சென்று

மரண முடிச்சைத் தேடுகின்றன

கடவுள் திமிருகிறார்

கண்கள் பிதுங்குகின்றன

சிறிது நேரம் மனிதர்கள் பிறப்பது நிற்கிறது

மூச்சு அடங்குகிறது

கடவுள் இறந்து போகிறார்

கடவுளின் இல்லம் விட்டு நகர்கையில்

எனது வாயிலிருந்து இருபற்கள்

நீட்டி முளைத்து நிற்கின்றன

ஒரு பிசாசின் உருவமாக

தேர்தலும் நானும்……..

(நன்றி : தினமணி)நான் சாதாரணத்திலும் சாதாரண வாக்காளன். ஓட்டுப் போட உரிமை எனக்கு வந்தபிறகு, ஓட்டுப் போடும் தருணத்தை வேண்டுமென்றே தவற விட்டிருக்கிறேன். ஏனோ இந்த அரசியல் கட்சிகளின் மீது அளவுகடந்த அலட்சியம். இந்தியா மாதிரியான ஒரு பெரிய தேசத்தை ஆள்வது சாதாரணமான விஷயமல்ல. எல்லோரையும் திருப்தி செய்யும்படியான ஒரு ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது. பாரதிய ஜனதாவும், காங்கிரசும் குட்டி குட்டி மாநிலக் கட்சிகளின் தயவால் 5 ஆண்டுகள் ஒரு திருப்புமுனையும் இல்லாமல் ஆட்சியை முடித்துக்கொண்டது பெரிய சாதனையாகவே எனக்குத் தோன்றுகிறது. முதலில் இதைச் சாதித்தவர் முன்னாள் பிரதம மந்திரி நரசிம்மராவ்தான்.

இப்போதோ எந்த அளவிற்கு உடைய முடியுமோ அந்த அளவிற்கு தேசிய கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாவும் உடைந்து போயிருக்கின்றன. தேர்தல் நடப்பதற்கு முன்பே இந்தத் துண்டு துண்டான நிலையை உணர முடிகிறது. தேர்தலுக்குப் பிறகு என்ன நிலை என்பது தெரியவில்லை.
தேர்தல் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஏராளமான பணம் செலவாகும். தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர், ராணுவத்தினர், அரசாங்கத்தில் உத்தியோகம் பார்ப்பவர்கள் என்று பலர் பலவிதமாக முடுக்கப்பட்டு சிரமத்திற்கு உட்படுவார்கள்.
எப்படியாக இருந்தாலும் எதாவது ஒரு கட்சி ஆட்சி செய்ய வரவேண்டும். இப்போது நடக்கப்போகும் தேர்தலில் அப்படி நடக்க வாய்ப்புள்ளதா என்பது சந்தேகமாக உள்ளது.

ஒவ்வொரு முறையும் வாக்குப் போடும்போது அதிருப்தி நிலை அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு சமயத்தில் நான் பலருக்கும் ஓட்டுப் போடுவேன். அல்லது எனக்குத் தெரியாத தனியாக நிற்கும் தனிநபருக்கு ஓட்டுப் போடுவேன். ஒரு முறை திமுகாவிற்கும், இன்னொரு முறை அதிமுகாவிற்கும் ஓட்டுப் போடுவேன். நான் யாருக்கு ஓட்டுப் போட்டாலும், போடாவிட்டாலும் ஆட்சியை ஏற்படுத்தும் சக்தி என் ஓட்டிற்கு இல்லை. பல லட்சக்கணக்கான மனிதர்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான்.
தேர்தலை ஒடடி நடக்கும் வன்முறை எல்லோரையும் போல என்னையும் கவலைப்படுத்தும். ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் என் வீட்டுச் சுவரில் பல கட்சிகளின் விளம்பரம் அலங்கரிக்கும். உற்சாகமுள்ள கட்சிக்காரர்கள் சுவர்களை நாசம் செய்துவிடுவார்கள். தேர்தல் முடிந்தபின்னும் சுவரொட்டிகளைத் தாங்கி நிற்கும் சுவர்கள் இருந்துகொண்டே இருக்கும்.

தேர்தலைச் சந்திப்பவர்கள் ஏகப்பட்ட பணத்தைத் தண்ணீராக செலவு செய்துகொண்டே இருப்பார்கள். கருப்புப் பணத்தையெல்லாம் தாராளமாகச் செலவிடுவார்கள். ஒரு வங்கியிலோ, அரசாங்கத்திலோ ஒருவர் பணியில் சேர்வதற்கு, குறைந்தபட்சம் கல்வித் தகுதி, தேர்வு எழுதி அதில் வெற்றி பெறும் தகுதி என்றெல்லாம் தேவை. ஆனால் ஒரு அரசியல் பிரமுகருக்கு எதுமாதிரியான தகுதி வேண்டும்?

தீவிரவாதக் கவிதை

ஒற்றைத் தோட்டாவை மட்டும் மிச்சம் வைத்துகண்ணுக்குப் பட்டதையெல்லாம் இலக்காக்கிக் குறிவைக்கிறேன்கருந்துளை நீண்ட எனது துப்பாக்கி முனையில்.பொருட்களையெல்லாம் குறி வைக்கிறேன்-உயிர்களைக் குறிவைக்கிறேன்-தாவரங்களைக் குறிவைக்கிறேன்-விலங்குகளைக் குறிவைக்கிறேன்-பறவைகளைக் குறிவைக்கிறேன்-மனிதர்களைக் குறிவைக்கிறேன்-உறவுகளைக் குறிவைக்கிறேன்-நண்பர்களைக் குறிவைக்கிறேன்-எதிரிகளைக் குறிவைக்கிறேன்-துரோகிகளைக் குறிவைக்கிறேன்-உங்கள் ஒவ்வொருவரையும்தனித்தனியே குறிவைக்கிறேன்-காலூன்றி பூமிக்குக் குறிவைக்கிறேன்-நிமிர்ந்து நின்று வானத்தைக் குறிவைக்கிறேன்-பரிதியையும் நிலவையும் குறிவைக்கிறேன்-கோள்களைக் குறிவைக்கிறேன்-விண்மீன்களைக் குறிவைக்கிறேன்-என் சுட்டுவரல் நுனியில்இந்தப் பேரண்டத்தையேஇலக்காக்கிக் குறிவைக்கிறேன்-இவை யாதொன்றையும்சுட்டுவிடாமல் விட்டுவிடுகிறேன்.அவை இருந்துவிட்டுப் போகட்டும்…இலக்காகஎனக்கு அவற்றின் பெயர்கள் மட்டும் போதுமானதால்பெயர்களையெல்லாம் எடுத்துக் கொள்கிறேன்-பெயர்களின் ஒலிக்குறிப்புகளை எடுத்துக்கொள்கிறேன்-பெயர்களின் பிம்பத்தை எடுத்துக்கொள்கிறேன்-பிம்பங்களின் பிரதிகளை எடுத்துக் கொள்கிறேன்-பிரதிகளின் உருவங்களை எடுத்துக் கொள்கிறேன்-உருவத்தை, வடிவத்தை, வண்ணங்களையெல்லாம்ஒலிச் சரங்களால் சொற்களாக மீட்டெடுத்துஇலக்காக்கிச் சுட்டுத் தள்ளுகிறேன்.சிதறிய ஒலித்துணுக்குகளைச் சுடுகிறேன்.சுட்டுக் கொண்டேயிருக்கிறேன்.தூரச் சொற்களைத் தொலைநோக்கியில் கண்டு சுடுகிறேன்.தப்பிய சொற்களைத் தேடிப்பிடித்துச் சுடுகிறேன்.இடமும் வலமும் மேலும் கீழும் முன்னும் பின்னும் சுடுகிறேன்.சுற்றிச் சுழன்று எனது காட்சிகளை சுட்டுத் தள்ளுகிறேன்.என் கனவை சுட்டுக் கொல்கிறேன். சுட்டுத் தள்ள ஏதுமில்லாதபோதுமீதமுள்ள தோட்டாகொண்டுஎனது பெயரையே இலக்காக்கி சுட்டுக் கொல்கிறேன்.

கவிதைகள் (குறும்பா என்றும் சொல்லலாம்)

1. வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன்

2.வெகுநாள் மீனவன்
தொடர்ந்த வேட்டையில்
மங்கிய தன் கண்களால்
ஆமையைக் கும்பிட்டான்
நின்று கொன்றால்
எதுவும் தெய்வந்தான்

3.உனக்கான என் அன்பு
உணரப்படாமலே
புறக்கணிக்கப் பட்டுள்ளது
பிரித்ததும் கசக்கப்பட்ட
உறையின் உட்புறத்து
இளஞ்சிவப்பு காகிதம் போல

4.உலர்த்தப்பட்ட ஆடையின்
நாலைந்து கண்கள்
உள்ளங்கைக் குளத்தில்
பிணைந்திருந்த ரேகைகள்