நிறைந்த கனவுகளின் பாரம் தாங்காது
மனப் பொதி ஒரேயடியாக வெடித்து
அதிர்ஷ்டத்தின் குறியுடனான ஒரு கனவு
கவிதையொன்றுக்கு மழையெனப் பெய்யும்
நாசிக்கடியில் குறு மீசைக்குப் பதிலாக
மீசை வளர்த்துக் கொண்ட ஹிட்லர்
*நீலப் படைகளுக்கு இடையிலும்
*சிவப்புப் படைகளுக்கு இடையிலும்
ஒரே நேரத்தில் நடமாடுவார்
ஒரே இடத்தில் சுழலும் ரூபாய் நாணயத்தில்
தலைப் பக்கத்திலும்
பூ பக்கத்திலும்
மீசை முறுக்கும் ஹிட்லர்
குப்புறக் கவிழ்ந்து
கனவுக்கு மெலிதாகச் சிரிப்பார்
*நீல வர்ணத்தை வானமும் வெறுக்கும்
**பச்சை வர்ணத்தை மரம்,கொடிகள் வெறுக்கும்
*சிவப்பு வர்ணத்தை குருதி வெறுக்கும்
கனவுக்கு ஹிட்லரே சிரிப்பார்
புது வருடத்துக்கு
புதிதாகக் காணும் கனவு
எத்தனை மென்மையானது?
பழைய கனவுக்கு உரித்தானவன் நான்
எவ்வளவு முரடானவன் ?
மூலம் – மஞ்சுள வெடிவர்த்தன (சிங்களமொழி மூலம்) 20091230
Author: virutcham
மொழிபெயர்ப்புக் கவிதை
சாரை சாரையாய்…
எதையாவது சொல்லட்டுமா….13
July மாதத்தில் நான் நான்கு மாதங்களுக்கு நூலகக் கட்டடத்தின் சின்ன அறையைப் பதிவு செய்திருந்தேன். அதாவது டிசம்பர் மாதம் வரை.ஆனால் எதிர்பாராத திருப்பமாக அக்டோபர் மாதம் சென்னையிலிருந்து கும்பகோணம் போகும்படி நேரிட்டது. இனி பணி நிமித்தமாக அங்குதான் இருக்கும்படி ஆகிவிட்டது. நான் இப்போது சீர்காழியில் இருக்கும்படி இருந்தாலும், சென்னையில் கூட்டம் நடத்தும் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. நவம்பர் மாதம் முழுவதும் நான் லோலோவென்று கும்பகோணம் முழுவதும் அலைந்தேன். அதனால் நவம்பர் மாதம் நான் நடத்தும் கூட்டம் மழையும் சேர்ந்துகொண்டதால் நடத்த இயலவில்லை. கூட்டம் நடத்தாமலே ரூ.250 போய்விட்டது. டிசம்பர் மாதக் கூட்டம் என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்தேன். வழக்கமாக மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை என்னால் கூட்டம் நடத்த முடியவில்லை. நான் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கிளம்பி சென்னையை அடைந்து, ஒரே ஒரு நாளான ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து, அன்று இரவு 11 மணிக்கு ஒரு பஸ்ûஸப் பிடித்து சீர்காழி வந்து விடுவேன். அப்படி வரும் கால் வீங்கி விடுகிறது. பிறகு சரியாகி விடுகிறது. நான் முதலில் பயந்துபோய் டாக்டர்களிடம் கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். இப்படி ஞாயிற்றுக்கிழமை அங்கிருக்கும்போது பரபரப்பாக இருப்பேன். எப்படி பரபரப்பைக் குறைப்பது என்பதே என் ஞாயிற்றுக்கிழமைப் பயணமாக இருந்தது. பின் அந்தப் பரபரப்பும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக்கொண்டு விடுகிறது. திங்கள் கிழமை (28.12.2009) விடுமுறை வந்ததால் அதை நன்றாகப் பயன்படுத்தினேன். திங்கள் மதியம் கூட்டம். எஸ். சண்முகம் பேசினார். வழக்கம்போல் முதல்நாள் எல்லோரையும் போனில் கூப்பிட்டுக்கொண்டிருந்தேன். எல்லோரும் தமிழச்சி பாண்டியனின் புத்தக விழாவிற்குச் சென்று கொண்டிருந்தார்கள். அவசரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். போனில் தொடர்பு கொண்டபோது, ‘இதோ போய்க் கொண்டிருக்கிறேன் வண்டியில்’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதனால் பலரை போனில் கூப்பிடுவதை நிறுத்திக்கொண்டேன். நானும் 7 மணிக்கு அங்குக் கிளம்பிச் சென்றேன். தாங்க முடியாத கூட்டம். ஸ்டாலின் தலைமையில் நடப்பதால் கட்சிக்காரர்களின் கூட்டமும் சேர்ந்து கொண்டு விட்டது. நான் உள்ளே நுழைந்தபோது ஹால் முழுக்க ஒரே கூட்டம். பலர் இடம் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தார்கள். இலக்கிய நண்பர்கள் பலரைப் பார்த்தேன். பேசவில்லை. நான் உடனே வெளியே வந்துவிட்டேன். எனக்கு கூட்டத்தைக் கண்டால் பயம். கூட்டம் நடத்தும் நாளன்று காலையில் திரும்பவும் இலக்கியம் பேசும் நண்பர்களைக் கூப்பிட்டேன். கூப்பிட்டாலும் யாரும் வரப்போவதில்லை என்றுதான் மனதில் தோன்றி கொண்டிருந்தது. அதேபோல்தான் ஆயிற்று. 5 பேர்கள்தான் வந்திருந்தார்கள். என்னையும் சண்முகத்தையும் சேர்த்தால் 7 பேர்கள். 10 ஆண்டுகளுக்கு முன் நான் நடத்தும் கூட்டத்திற்கு யாரும் வரவில்லை என்றால் படப்படப்பாக இருப்பேன். ஆனால் இப்போது அப்படி இல்லை. கூல் என்று சொல்லிக்கொண்டேன். வழக்கம்போல் கூட்டம் விறுவிறுப்பாக 3 மணிநேரம் வரை ஓடியது. பேச்செல்லாம் ஆடியோ காசெட்டில் ரிக்கார்ட் செய்தேன். கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது டீக் கடையில் டீயைக் குடித்தபடி பிரிந்தோம்.அடுத்தக் கூட்டத்தை வீட்டு மொட்டை மாடியிலோ அல்லது பூங்காவிலோ நடத்துவது என்று தீர்மானித்தேன். அது இன்னும் எளிமையானது. லைப்ரரி கட்டடத்தில் வைத்தால் இனி 300 ஆகும். பூங்காவில் அதுகூட ஆகாது. கூட்டத்தில் என்ன பேசினார் என்பதைத் தொடர்ந்து எழுதுகிறேன்.
எதையாவது சொல்லட்டுமா….12
20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் பத்திரிகைகளைப் படித்தவர்கள் புரிந்துகொண்ட விஷயம். தொடர்கதைகள், கதைகள் எல்லாம். ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை முத்திரைக் கதைகளை எல்லாம் பிரசுரம் செய்திருக்கிறது. இன்று ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரை அறிவதற்கு ஆனந்தவிகடன் ஒரு காரணம். குமுதம் பத்திரிகை சாண்டில்யன் போன்ற படைப்பாளியெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறது.
பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார், ராஜேஸ்குமார் , புஷ்பாதங்கத்துரை போன்ற பிரபல எழுத்தாளர்களையும் இந்த லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் பத்திரிகைகளில் வலம் வந்தவர்கள்.இன்றைக்குப் பிரபலமாக அறியப்படும் சுஜாதா என்ற எழுத்தாளர் குமுதம் பத்திரிகையில் முதன் முதலாக தொடர்கதை மூலம் அறியப்பட்டவர்தாம். என் நண்பர் ஸ்டெல்லா புரூஸ் ஆரம்பத்தில் காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர். பின்னர் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் தொடர்கதைகளை ஆனந்தவிகடனில் எழுத ஆரம்பித்த பிறகு பிரபலமானார்.
இப்படி பிரபல பத்திரிகைகளில் எழுதுபவர்களுக்கு ஏகப்பட்ட வாசகர்கள் வாசகிகள் கிடைப்பார்கள். அண்ணாசாலையில் உள்ள பொது நூலகத்தில் நடந்த ஒரு வாசகர் சந்திப்பில் சுஜாதாவை நான் சந்தித்திருக்கிறேன். அதில் பாலகுமாரன் ஆரம்ப எழுத்தாளர். சுஜாதா தடுமாறி தடுமாறிப் பேசியதாக ஞாபகம். ஏன் இதெல்லாம் இப்போது சொல்கிறேன் என்றால், மேலே குறிப்பிட்ட பத்திரிகைகள் இப்போதெல்லாம் தொடர் கதைகள், சிறுகதைகளைப் பிரசுரம் செய்வதில்லை. இன்று இது பெரிய ஆபத்து என்று தோன்றுகிறது. வெறும் செய்திகளை மட்டும் தீனியாக இப் பத்திரிகைகள் வெளிப்படுத்துகின்றன.
ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் பிரபல பத்திரிகைகள் மூலம்தான் தீவிர இலக்கியப் பத்திரிகைகளைப் படிக்க வாசகர்கள் தயாராவார்கள். தமிழில் படிப்பது என்பதை முதலில் இப் பத்திரிகைகள் மூலம்தான் உருவாக்க முடியும். அதனால் அன்றைய வாசகர்களுக்கு கதைகள், தொடர்கதைகள் போன்றவற்றில் அறிமுகம் கிட்டின. ஆனால் இன்றைய வாசகர்கள் இப்பத்திரிகைகளில் வெளிவரும் மேம்போக்கான செய்திகளை மட்டும் அறிகின்றனர். இது பெரிய ஆபத்தை உருவாக்கி விடும். கதை என்றால் என்ன என்று வகுப்பு எடுக்கும் நிலைக்குத் தள்ளிவிடும். பத்திரிகை மூலம் படிப்பது வேறு, நேரிடையாக ஒரு நாவலைப் படிப்பது என்பது வேறு. இந்தப் பெரிய பத்திரிகைகள் தப்பான அறிமுகமாக ஒரு பக்கக் கதைகளை அறிமுகப்படுத்துகின்றன. அக் கதைகள் போன்ற அபத்தம் வேறு எதுவுமில்லை.
மேலும் இப் பத்திரிகைகள் செய்திகளை, குறிப்பாக சினிமா செய்திகளை வாரி வழங்குகின்றன. நடிகர் நடிகைகள் பற்றிய கிசுகிசுப்புகள் அதிகம். அரசியல் எல்லாம்.
தினசரிகளான தினமணி, தினமலர் எல்லாம் செய்திகளை வாரிவழங்குகின்றன. இச் செய்திகள் மூலம் பலவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. அறிவுபூர்வமாக தினமணி தலையங்கங்களை எழுதுகின்றன. உலகம் முழுவதும் நடக்கும் செய்திகளை எப்படி கிளுகிளுப்பாக மாற்றுவது என்ற கலையை தினமலர் செய்து காட்டுகிறது. இன்னும் பல செய்தித் தாள்கள் இப் பணியை செய்தவண்ணம் உள்ளன. ஆனால் கதைகளேளா, கவிதைகளோ, தொடர் கதைகளோ நடைபெறவில்லை. வாசகர்கள் இச் செய்திகளைப் படித்தாலே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது. கதை எழுதுபவர்கள் செய்தி மூலம் பலவற்றைத் தெரிந்துகொள்வது அவசியம் என்றாலும், கதை என்பது வேறு, செய்தி என்பது வேறு. செய்தி நம்மைச் சுற்றிலும் நடக்கும் விஷயங்களை மட்டும்தான் கொடுக்கும். ஆனால் கதைகள் வாழ்க்கையின் கூறுகளை யதார்த்தங்களை மனதை உலுக்கும்படி வெளிப்படுத்தும்.
செய்திகள் ஒரு கட்டத்தில் நின்று விடும். ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்லி விட்டு அடுத்த அதிர்ச்சியான செய்திக்குத் தாவிவிடும். கதையோ அப்படி அல்ல. எழுதப்பட்டவுடன் பலமுறை படிக்க படிக்க வாழ்க்கையை வேறுவிதமாகப் புரிய உதவி செய்யும்.
இப்பத்திரிகைகள் செய்திகளை கதைமாதிரி சுவாரசியமாக எழுதினால், கதையில் நிற்கக் கூடிய உணர்வை, புத்திக்கூர்மையை அவை வெளிப்படுத்த முடியாது. செய்தி அப்படியே நின்று விடும். கதை நகர்ந்துகொண்டே இருக்கும். அந்தக் கதைத் தன்மையே முழுவதும் அழிந்துவிடும் நிலையில் செய்திகள் மட்டும் வந்தவண்ணம் உள்ளன. வாசகர்களும் செய்திகளுடன் நின்று விடுகின்றனர்.
இன்று சிறுபத்திரிகைகள் மட்டும் கதைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. ஆனால் அதிகம் வாசகர் இல்லாத சிறுபத்திரிகைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.
ட்யூஷன் ஆசிரியரின் கவிதை
இன்றொரு கவிதை எழுதவேண்டும் சொல்லும்பொழுதே தாளொன்று பாதி நிறுத்தப்பட்ட ட்யூட்டொன்று உம்மென்றிருந்தன எடுக்கும்வரைக்கும்
விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு ஒன்பது மணிக்கு குழு வகுப்பு இரவில் விடைதிருத்தும் வேலை சிவப்புப் பேனையிலிருந்து வழிவது மனைவியின் முறைப்பு
செஞ்சாயத் தேனீரருந்தியபடி சிற்றுண்டிச் சாலையில் எழுதிய எளிய கவிதைப் புத்தகத்தின் கவிதைத் தலைப்புகளே இங்கு சுவர் முழுதுமிருந்து என்னைப் பார்த்துச் சிரிப்பவை
கரும்பலகையில் வெண்கட்டி போல தேய்ந்துபோகும் வாழ்விடையே கவிதைகள் கைவிட்டு நழுவி எனக்கே மிதிபட்டு அலறும்
சாகித்திய வானிலே கவிதையொன்றைக் கற்பனை செய்கிறேன் இரவில் வந்து அரை மயக்கத்தில் நித்திரை கொள்கிறேன் கண்களில் வீழ்கின்றன சந்திரனின் கிரணங்கள் எவ்வாறு நாளை கவிதையொன்றை எழுதுவேன்
மூலம் – திலீப் குமார லியனகே ( சிங்களமொழியில்)
எதையாவது சொல்லட்டுமா / 11
இங்கு எழுதுவதில் எதாவது தலைப்பு இட்டு எழுதலாமா என்று யோசிக்கிறேன். அப்படி எழுதுவதென்றால் காலடியில் கவிதைகள் என்ற பெயர் இடலாம். 22 ஆண்டுகளுக்கு முன்னால் நவீன விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது அது கவிதைக்கான பத்திரிகையாகத்தான் திகழ்ந்தது. ஒரே கவிதை மயமாக இருக்கும். முதன் முதலாக ரா ஸ்ரீனிவாஸன் கவிதைப் புத்தகம்தான் விருட்சம் வெளியீடாக வந்தது.
சமீபத்தில் நேசமுடன் என்று வெங்கடேஷ் எழுதிய கட்டுரையைப் படித்தேன். புத்தகம் விற்பது என்பதைப் பற்றி எழுதியிருந்தார். அப்படியென்றால் என்னவென்று தெரியாது. ஒரு கவிதைப் புத்தகத்தை ஒரு 100 பிரதிகளாவது எப்படி விற்பது..எனக்கு அந்த ரகசியத்தை யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். நான் சொல்வது பிரபலமாகாத யாருக்கும் தெரியாத புதியவரின் கவிதைத் தொகுதி. கடந்த 22 ஆண்டுகளாக புத்தகம் கொண்டுவரும் நான் அதை எப்படி விற்பது எனபதைக் கற்றுக்கொள்ளவே இல்லை. முழுக்க முழுக்க லைப்ரரியை நம்ப வேண்டியுள்ளது. கவிதைக்கு லைப்ரரியின் கருணை கிடையாது. இதைத் தெரிவிக்க முதல்வருக்கு ஒரு விண்ணப்பம் என்ற பெயரில் ஒரு கடிதம் எழுதினேன். விண்ணப்பம் எழுதி என்ன பிரயோசனம். கவிதைப் புத்தகங்கள் என்னை விட்டு நகரவே இல்லை.
இன்னும்கூட புத்தகம் கொண்டுவருவதில் ஒருவித சந்தோஷம் என்னை விட்டு அகலவில்லை. ஆனால் புத்தகம் எப்படி விற்பது? அதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. என் குடும்பத்தினர் என்னைப் பற்றி கவலைப் படுகிறார்கள். என் தந்தை என்னிடம் புத்தகம் கொண்டு வருகிறாயே, எவ்வளவு செலவு செய்கிறாய் என்று கேட்காமல் இருப்பதில்லை. ரொம்பவும் குறைவான எண்ணிக்கையில் புத்தகம் கொண்டு வந்தாலும் என்னைவிட கவலை அவருக்கு அதிகமாகவே உள்ளது. ஏன்? அவர் இன்னொரு கேள்வி கேட்கிறார்..நீ செலவு செய்கிறாயே? எவ்வளவு பணம் உனக்குத் திரும்பவும் கிடைக்கிறது? இதற்கு பதிலே சொல்ல வரவில்லை. நான் ஒரு இடத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறேன். என் மனைவி அந்த இடத்திற்கு வருவதற்கே பயப்படுகிறாள். நியாயம்தான் அவள் பயப்படுவது. கொஞ்சம் யோசித்தால் நானும் பயப்படத்தான் செய்வேன்.
முன்பெல்லாம் நான் புத்தகங்களை சில இடங்களுக்கெல்லாம் அனுப்புவேன். கொஞ்சமாவது பணம் வரும். இப்போதெல்லாம் பணமும் வருவதில்லை..புத்தகமும் கேட்பதில்லை..
வெங்கடேஷ் சொல்வதுபோல் யாராவது புத்தகம் விற்றுக்கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும். 50% கொடுத்து விடுகிறேன். இதை யாரும் செய்வதில்லை. பல ஆண்டுகளாக நான் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு புத்தகம் போடுவதை முழு நேரத் தொழிலாக மாற்றிக்கொண்டு விடலாமா என்று யோசிப்பதுண்டு. ஆனால் அப்படி இறங்குவதில் எனக்கு முழுக்க நம்பிக்கை இல்லை. உண்மையில் என்னுடைய வேலைதான் புத்தகம் போடுவதற்கு எனக்கு உறுதுணையாக இருக்கிறது. நான் நண்பர்களிடம் வேடிக்கையாகச் சொல்வேன். நான் போடும் புத்தகங்கள் எல்லாம் Non Performing Asset என்று.
குறைந்த எண்ணிக்கையில் போடும் புத்தகமே ஆயிரக்கணக்கில் என்னிடம் குவிந்து கிடக்கிறது. வைக்க இடம் இல்லாமல் காலடியில் கவிதைப் புத்தகங்கள் இடறிக் கிடக்கின்றன. இதோ கடலின் மீது ஒரு கையெழுத்து என்ற பெயரில் லாவண்யாவின் கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளேன். காலடியில் இன்னொரு கவிதைத் தொகுதி.
குழிவண்டுகளின் அரண்மனை
பக்கம் 80
ரூ.40
புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்
சுகுமாரன் முன்னுரை:
அரவிந்தனின் கவிதைகள் தனி வழியில் உருவாகியிருப்பவை. தனித்துவமான இயல்புகள் கொண்ட கவிதைகள்தாம் கவனத்துக்குள்ளாகும் என்ற இலக்கிய நியதியை அறிந்துகொண்டேதான் இதைக் குறிப்பிடுகிறேன். பல தனித்துவங்கள் கவிதையுலகில் நிலவும்போது அதுவே ஒரு பொதுமொழியையும் உருவாக்கி விடுகின்றன. கவிதை எப்போதும் புதுமையை எதிர்நோக்கி நிற்கிறது என்பதும் புதிதாக வரும் கவிஞன் இந்தப் பொதுமொழியைக் கடந்து தன்னுடையதான கவிதை மொழியை நிறுவ வேண்டியது கட்டாயமாகிறது என்பதும் கவிதையாக்கத்தின் சவால்கள். இந்தச் சவால்களைத் தன்னுடையதான மாற்று வழியில் அரவிந்தன் எதிர்கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சான்றளிக்கின்றன.
(அட்டைப் படம் இணைத்துள்ளேன்)
தொலைந்த பாதங்களின் சுவடுகளேந்தி…
பார்வைக்குப் புலப்படாப்
பாதங்களைக் கொண்டது
நீருக்குள் அசைந்தது
சிற்பங்களெனக் கண்ட
உயிர்த் தாவரங்கள்
ஒளித்தொகுக்கும் வழியற்று
மூலைகளை அலங்கரித்திட
விட்டுவந்த துணையை
குமிழிகள் செல்லும்
பரப்பெங்கிலும் தேடியது
எல்லாத் திசைகளின் முனைகளிலும்
வாழ்வின் இருளே மீதமிருக்க
காணும் யாரும் உணராவண்ணம்
மூடா விழிகளில் நீர் உகுத்து
அழகுக் கூரை கொண்ட
கண்ணாடிச் சுவர்களிடம்
தன் இருப்பை உணர்த்த
கொத்திக் கொத்தி நகர்ந்திற்று
செம்மஞ்சள் நிற தங்கமீனொன்று
அது நானாகவும் இருக்கக் கூடும்
-,
செல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு.
எதிர்வரும் புத்தக கண்காட்சியை யொட்டி, எனது இரண்டாவது கவிதைத் தொகுதி
“இன்ன பிறவும்” கவிஞர் சுகுமாரன் அவர்களின் முன்னுரையோடு வெளியாகிறது.
நூல் விபரம்:
நூல் பெயர்: இன்ன பிறவும்
பதிப்பகம்: அகரம், தஞ்சாவூர்
கிடைக்குமிடம்:
டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் அகரம் பதிப்பக ஸ்டால் மற்றும் சென்னை தியாகராய நகர் புக்லாண்ட்ஸ்.
அன்புடன்,
செல்வராஜ் ஜெகதீசன்.