சாய்பாபா

வெற்றிகரமாக விளங்கும் எந்தவொரு கோட்பாடும் அதன் வளர்ச்சிப்போக்கில் மூன்று நிலைகளைக் கொண்டிருப்பதாக வில்லியம் ஜேம்ஸ் கூறுவார். முதல் நிலையில் அக்கோட்பாடு அபத்தமானது என்று தாக்கப்படும். இரண்டாம் நிலையில் அது பழக்கப்பட்ட ஒன்றாகவும் உண்மை என்று ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் கருதப்படும். இறுதி நிலையில் அதன் அத்தியாவசியம் உணரப்பட்டு அதைத் தாங்களே கண்டுபிடித்தது போன்று அதன் விமர்சகர்களும் சீராட்டுவார்கள்.

சத்ய சாய்பாபாவை ஒரு கோட்பாடு என்கிற அளவில் சுருக்கிக்கொண்டு பார்க்க முடியாதெனினும் அவரும் இந்த மூன்று நிலைகளையும் கடக்க வேண்டியிருந்தது. ஷிர்டி சாய்பாபா இறந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு 1926இல் பிறந்த சத்யநாராயண ராஜூ தனது பதினான்காம் வயதில் தான் ஷிர்டி பாபாவின் மறு அவதாரமான சாய்பாபா என அறிவித்தபொழுது அவர் சிற்சில அதிசயங்களையும் புரிய ஆரம்பித்திருந்தார். தன் நண்பர்களுக்கு திடீரென லட்டுகள், மாம்பழங்கள் ஆகியனவற்றை வரவழைத்துக் கொடுப்பது போன்றவை மட்டுமல்லாது ஷிர்டி பாபா தன் பக்தர்களிடம் என்னவெல்லாம் சொன்னாரோ அவற்றைஎல்லாம் அவர்களிடமே நினைவூட்டி அசரவைத்தார் சாய்பாபா.

சாய்பாபாவிற்கு நாளும் கிடைத்து வந்த புகழ் அவருக்குப் பலத்த எதிரியாகியது. அவரைப் பற்றி ஒன்றும் அறிந்து கொள்ளாமலேயே அவர்மீது தாக்குதல்களைத் தொடுத்தனர் அவர் நடத்திக் காட்டிய அதியசயங்கள் பழிக்கப்பட்டன. தன்னை நாடுபவர்களின் குறைகள் அனைத்தையும், அவை எதுவாயினும் நிவர்த்திக்கும் சக்தி படைத்திருந்தார். தீராத வியாதியாகட்டும், மனக்கவலையாகட்டும், பொருள் பதவி ஆகியன அடைவதற்கு எதிர்படும் இடர்பாடுகளாகட்டும் எல்லாம் அவரை சந்தித்த விநாடியில் தொலைந்து போனதாக பக்தர்கள் நம்பினார்கள். எதிர்ப்புகள் மங்கத்தொடங்கின. பாபாவின் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகின் பலநாடுகளிலும் பரவத் தொடங்கிற்று. அவரது சமூகப் பணிகள் பலரையும் பயனடைய வைத்தன. ஆத்திகர்கள் நாத்திகர்கள் என்றில்லாமல் எல்லோரும் அவரை மரியாதையுடன் நேசிக்கத் தொடங்கினர். எண்பத்து ஐந்தாவது வயதில் அவர் இறந்தபொழுது அந்த நேசத்தின் பல பரிமாணங்களையும் பார்க்க முடிந்தது.

பாபா சகமனிதர்களுக்கு ஆற்றிய சேவைகளை மனதாரப் பாராட்டும் பண்பு படைத்தவர்களுள் அவரது சித்து வேலைகளை விரும்பாதவர்கள் அநேகர் உண்டு. இவர்கள்தான் பாபாவின் ஆரம்பகால பகுத்தறிவு விமர்சகர்கள். இப்பொழுது விமர்சனம் தவிர்த்த தொனியில் ஆதங்கத்துடன் பாபா அந்த சித்து வேலைகளை மட்டும் செய்யாமலிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்பவர்கள். பாபா சித்து வேலைகள் என்று சொல்லப்படும் அதிசயங்களை நிகழத்தாமல் இருந்திருந்தால் ஒருவேளை இந்த அளவிற்கு புகழ் பெற்றிருப்பாரா?

இது காலம் காலமாகத் தொடுக்கப்பட்டு வரும் வினா. யேசு கிறிஸ்து அதிசயங்கள் புரியாமல் இருந்திருந்தால் இந்த உலகமே அவரது காலடியில் வீழ்ந்து கிடக்கும் என்று ரூஸோ கருதினார். யேசுவை மாபெரும் பொருளாதார அரசியல் மேதையாகக் கண்டெடுத்த பெர்னாட்ஷாவும் இதே கருத்தை வழி மொழிந்தார். யேசுவிற்குப் புகழ் சேர்த்ததைப் போலவே பாபாவிற்கும் அதிசயங்கள் புகழைச் சேர்த்தன. பாமரர்களிலிருந்து மேதைகள்வரை அதிசயங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.

ஒரு கிறித்துப் பெரியவரின் மறைவிற்குப் பிறகு அவரது சக்தியால் இரண்டு அதிசயங்கள் நடைபெற்றதென்றால் அவருக்குப் புனிதர் (saint) பட்டம் வழங்குகிற நடைமுறையைக் கத்தோலிக்க தலைமை பீடம் இன்றுவரை அனுசரித்து வருகிறது. மகான்களுக்குத் தங்கள் பணிகளை ஆற்ற நேர்கையில் எதிர்ப்படும் தடைகளை வேரறுக்க அதிசயம் போன்ற கூரான எஃகு வேறில்லை.
அதிசயங்கள் புரிவதில் ஒரு உலக ரிகார்டை படைத்தவர் பாபா. அனு தினமும் அதிசயங்கள் புரிந்தவர். ஒருமுறை கூட அதில் அவர் தவறிழைத்தது கிடையாது. அநேகமாக ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்றுமுறைகள் விபூதியை வரவழைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிப்பார். சட்டை மடிப்பிலிருந்து விபூதியைக் கொணர்கிறார் என்றெல்லாம் பழி சுமத்தப்பட்டார். சிலர் அதை நிரூபித்ததாகவும் மார்தட்டினர். மக்களிடம் அவையெல்லாம் சற்றும் எடுபடவில்லை. விபூதி மட்டுமின்றி தங்க டாலர், மோதிரம், வாட்ச், புடவை, என்று கைக்கு அடக்கமான பலவற்றையும் அவர் காற்றிலிருந்து வரவழைத்துக் கொடுத்தார். அவர் வரவழைக்கும் மோதிரத்தின் அளவு பெரிதாகவோ சிறிதாகவோ இல்லாமல் அணிபவரின் விரலுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்படி இருக்கும். தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் வழக்கமாக அணியும் குங்குமப்பூ நிற உடை தவிர்த்து வெண்பட்டு உடை அணிந்துகொண்டு வாயிலிருந்து சிரமப்பட்டு ஒரு லிங்கத்தை கக்கியெடுப்பார்.

அவர் மாயமாய் வரவழைக்கும் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன? அவை எங்கு தயாரிக்கப்பட்டு எவ்வாறு அவர் கையில் எல்லோர் முன்னிலையிலும் தோன்றுகின்றன என்பனவெல்லாம் எவராலும் அறியமுடியாதவை. தங்கக் கட்டுபாடு சட்டத்தின் கீழ் பாபா மீது ஆந்திர பிரதேசத்தில் பகுத்தறிவாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். தங்கத்தை பாபா பதுக்கிவைத்திருந்ததாக அவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். திடீரெனத் தென்படும் தங்க ஆபரணம் பதுக்கிவைத்ததற்கான எவ்விதத் தடயத்தையும் தரவில்லை என்பது தீர்ப்பு. பாபா விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதில்லை. அவரது சக்தியைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்று பெங்களூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எச். நரசிம்மய்யா முயன்ற பொழுது பாபா அதை தடை செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார். உலகின் எத்திசையிலிருந்தும வரும் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும் பாபா தனக்கு ஏற்படும் தொந்தரவைத் தன்னால் தீர்த்துக்கொள்ள முடியாது இந்திரா காந்திக்கு கடிதம் எழுதுகிறாரே என்று அந்த சம்பவம் நினைக்கத் தூண்டியது.

பாபாவைப் போன்று அதிசய ஆற்றல் (Para Normal) படைத்தவர்களை மேலைநாடுகளில் சோதிக்கிறார்கள். ஈஎஸ்பி, டெலிபதி ஆற்றல் உடையவர்கள் இவ்விதம் சோதனைக்குள்ளாகிறார்கள். ஆர்தர் கோஸ்லர் இது குறித்த ஆராய்ச்சிகளுக்கு எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கையை நிறுவ தனது சொத்தின் பெரும் பகுதியை உயில் எழுதிவைத்தார். இதுவரை இவ்வாராய்ச்சிகளால் எவ்வித முடிவிற்கும் வர இயலவில்லை. ஆனால் இவை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இத்தகைய ஆற்றல் படைத்தவர்கள் இந்தியாவில் அதிகம் தென்படுவதால் இந்தியப் பல்கலைக்கழகங்கள் இந்த முயற்சிகளில் தவறாது ஈடுபட வேண்டும். அதிசய ஆற்றல் படைத்தவர்களை புரட்டாளர்கள் என்று பழித்தொதுக்குவது ஒரு விஞ்ஞான மூட நம்பிக்கை.

ஆனால் பாபா வெறும் அதிசய சாமியார் அல்லர். அவர் சாத்வீகமான யோகி. அன்பை போதிப்பவர். வன்முறையை விலக்கிய வாழ்வை மேற்கொள்ளத் தூண்டுபவர். இந்து மதத்தினராக இருந்தபோதிலும் பிற மதங்களை அரவணைத்தவர். மத மாற்றத்தில் அவர் நம்பிக்கை இல்லாதவர். புட்டபர்த்தியிலுள்ள பிரசாந்தி நிலையம் பெங்களூரிலுள்ள ஒயிட் பீல்ட் ஆகிய அவரது ஆசிரமங்களில் எல்லா மதத்தினரின் பண்டிகைகளும் கொண்டாடப்படும். மத நல்லிணக்கத்திற்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டு. எந்த மதத்தலைவரையும் அவர் விமர்சித்ததுமில்லை. அவரது ஆசிரமங்கள் சர்வதேசக் குடில்கள் போன்று தோற்றமளிக்கும். வெளிநாட்டவர்களில், அதிகமாக இத்தாலியர்களை நான் அங்கு பார்த்தேன். இத்தாலிய மொழியில் அவர்களுக்காக பாபா பற்றிய சொற்பொழிவுகளும் அங்கு நடைபெறும்.

நான் முதன்முறையாக புட்டபர்த்திக்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் சென்றேன். என் மனைவியின் மிக நெருங்கிய உறவினர் பிரசாந்தி நிலையத்தில் வசித்து வந்தார். அப்பழுக்கற்ற தியாக வாழ்க்கை அவருடையது. அவரது அன்பிற்கு பாத்திரமான பாபாவின் மீது நாளடைவில் எனக்கும் மிகுந்த ஈர்ப்பு உண்டாயிற்று.

அப்பொழுதெல்லாம் அவரைப் பார்ப்பது அவ்வளவு கடினமல்ல. காலை மாலை ஆகிய இருவேளைகளிலும் அவர் தரிசனம் தருவார். பிரசாந்தி நிலையம் ஒருசில குடியிருப்பு கட்டடங்கள் மட்டுமே கொண்டிருந்தது. பூர்ண சந்திரஹால் என்று ஒரெயொரு கூடம்.

மலிவுவிலைக் கேண்டீன். வியாழக்கிழமைகளில் பேக்கரியில் பிட்ஸா கூடக் கிடைக்கும். அதற்கு மட்டும் முன்னதாகவே டோக்கன் வாங்கியிருக்க வேண்டும். புட்டபர்த்தியில் அப்பொழுதே மருத்துவ, கல்வி நிறுவனங்கள் எழும்பியிருந்தன. அவை யாவும் இலவசம். ஊரை ஒட்டி சித்ராவதி ஆறு ஒரு சிறு கால்வாயாக ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் அங்கு வேறொரு கட்டடம் இருந்தது. அப்பொழுது இந்தியாவின் பெரும் நகரங்களில்- சென்னை அவற்றில் ஒன்றாக இல்லை– மட்டுமே இருந்த பிர்லாவின் பிளானடேரியம் அக்குக்கிராமத்தில் இருந்தது, பாபாவின் செல்வாக்கினால்.

பாபாவைப் பற்றி ஒரு அவதூறு கிளம்பி ஓய்ந்திருந்தது. அவருடன் நெருங்கிப் பழகியதாகத் தன்னை அறிவித்துக் கொணட டால் ப்ரூக் என்னும் மேற்கத்தியர் பாபாவை ஓரினச் சேர்க்கையாளர் என்று தனது புத்தகத்தில் எழுதியிருந்தார். இதுபோன்ற அம்பலங்கள் சந்நியாசிகளைத் தொலைத்துவிடும். சந்நியாசிகள் தங்களைப் பற்றித்தரும் உறுதி மொழிகளே இவற்றுக்கு மூலகாரணங்கள். சந்நியாசிகள் பிரம்மச்சரிய விரதம் பூணாவிடில் ஒன்றும்குடி முழுகிப் போகாது. நமது பாரம்பரியத்தில் ரிஷிகள் பத்தினிகளுடன் வாழ்ந்தவர்கள்தாம். சந்நியாசிகளே தங்கள் பாலுணர்வு விருப்புகளைத் தெரிவித்துவிட்டால் பரபரப்புகளுக்கு அங்கே இடமிராது. ஓஷோ ரஜனீஷ் இதைத்தான் செய்தார். தவிரவும் பாலுணர்வைத் தவிர்ப்பது மட்டும்தான் துறவா? பொதுவாழ்விற்கு வருபவர்கள் தங்களுக்குரிய தர்மத்தை எவ்விதம் ஒழுகுகிறார்கள் என்பதைத்தான் கண்காணிக்க வேண்டும். பாவ மன்னிப்பை காசுக்கு விற்றபொழுது மார்டின் லூதர் அதைக் கண்டித்து வெளியேறி புதிய மதத்தை தோற்றுவித்தார். அதுதான் அறிவார்ந்த எதிர்ப்பு. தனிமனிதனின் அந்தரங்கங்களைப் பகிரங்கப்படுத்துவது பண்பாடற்ற செயல். நல்லவேளையாகப் பாபாவின் ஓரினச் சேர்க்கைப் பற்றிய வம்பளப்பு விரைவாக முடிவினை எட்டியது.

பாபா தன்னை வழிபட்டவர்கள்மீது எந்தச் சுமையையும் திணிக்கவில்லை. அவரது அலுவலர்களுக்கு வெள்ளைச் சீருடை தரப்பட்டதைத் தவிர வேறு பிரத்யேகமான கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. புகைபிடித்தல், மதுஅருந்துதல், அசைவம் உண்ணுதல் ஆகியவை அவரது ஆசிரமங்களில் விலக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் பொதுவாகவே எல்லா ஆசிரமங்களிலும் அமல்படுத்தப்பட்டிருக்கும் நடைமுறைகள்தான்.

பாபா பளிச்சென்று தோன்றுவார். கௌபீனத்திலிருந்து அரைகுறை ஆடைகள் வரையிலான உடுப்புகளைத் தங்களுக்கு தேர்ந்தெடுக்கும் சாமியார்களிடமிருந்து அவர் மிகவும் வேறுபட்டவர். கழுத்திலிருந்து பாதம்வரை உடல்முழுவதையும் மறைக்கும் மடிப்பு கலையாத அங்கி. நன்கு சவரம் செய்யப்பட்ட முகம். ஒளிவட்டம் போன்ற அழகான எண்ணெய் பிசுக்கற்ற கறுத்தசிகை. நடை, அசைவுகள் எல்லாவற்றிலும் மென்மை. சிவசக்தி அவதாரம் என்று தன்னை அறிவித்துக் கொண்டதற்கு ஏற்றார்போல் வசீகரமான திருநங்கையாக அவர் இளமைக்கால புகைப்படங்களில் தோன்றுவார். பாபா நம் கண்முன் தோன்றிவிட்டால் அவரையே இமைகொட்டாது பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்படும். சாய் பக்தர்கள் பலர் அவர் தூர சென்றுவிட்டால்கூட பைனாகுலர் வழியாக அவரைத் தொடர்வார்கள். மடோனாவே நிர்வாணமாக பாபாவுக்குப் பக்கத்தில் வந்து நின்றால்கூட மடோனாவை பொருட்படுத்தாமல் பாபாவையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்படியொரு காந்தசக்தி அவருக்கு.

கோபம் வராது. ஒரு முறைதான் அவர் கோபமாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். புட்டபர்த்தியில் ஒரு சமயம் நூற்றுக்கு மேற்பட்ட ஜோடிகளுக்கு இலவசத் திருமணங்கள் நடந்தபொழுது ஏற்பட்ட இரைச்சல் தாளாமல் மந்திர் என்றழைக்கப்படும். தனது குடியிருப்பிலிருந்து வெளிவந்து தனது அலுவலர்களைக் கடிந்துகொண்டார். எல்லாற்றிலும் ஒழுங்கை வேண்டுபவர். அதுதான் அவரது பலம். பாபாவின் சமூகப் பணிகளை– அவற்றில் பெரும் சிகரங்களாக விளங்குவன அனந்தபூர், மேடக், சென்னை ஆகிய இடங்களுக்கு குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தது.– சுலபமாக பட்டியலிட்டுவிட முடியாது. இவற்றையெல்லாம் அவரால் செய்ய முடிந்ததற்கு அவருக்கு செல்வந்தர்களான அடியார்கள் அளித்த தாராளமான நன்கொடைகள் மட்டுமல்ல. பாபாவின் நிர்வாகத் திறமைதான் எல்லாவற்றையும்விட முக்கியமானது. தனது அனைத்து நிறுவனங்களையும் அவரே நேரிடையாக நிர்வாகம் செய்தார். பொதுவாக சாமியார்கள் நிர்வாகத்தில் கோட்டைவிடுவார்கள். மற்றவர்களை அளவிற்கதிகமாக சார்ந்திருப்பார்கள். தங்களைக் கவனித்துக்கொள்ளக்கூட அவர்களால் முடியாது போய்விடும். இதனால் பலவிதமான துன்பங்களுக்கும் ஆளாவார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சரை அவரது உதவியாளர் பாடாய்படுத்தி வைத்தார். பாபாவிடம் அதெல்லாம் நடக்காது. உடல்நலம் குன்றிப்போன கடைசி நாட்களில் எப்படியோ, அவர் நன்றாக இருந்தவரை, சிறுவயது முதலே தனது சேவைகளாக வளர்ந்த சகோதரரின் மகன் ரத்னாகர் தவிர வேறு உறவினர்கள் எவரையும் அண்டவிட்டதில்லை.

முதியவர்கள் மீது மிகுந்த அன்பு காட்டியவர் பாபா. மிகச்சிறந்த முதியோர் இல்லங்கள் அவரது ஆசிரமங்கள். அங்கு நிரந்தமாகக் குடியிருப்பவர்கள் அனைவரும் முதியவர்கள். பாபாவின் மீது அவர்களைப்போல் நம்பிக்கையும் பக்தியும் வைத்திருப்பவர்கள் வேறு எவருமில்லை. அவரின்றி அவர்களுக்கு அணுகூட அசையாது. அவர்களை பைத்தியங்கள் என்று வாஞ்சையுடன் பாபா சில வேளைகளில் அழைப்பார் என்று ஒரு ஆசிரம வாசி சொல்லக் கேட்டிருக்கிறேன். தங்களது உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டுமெனறால் கூட முதலில் அவரது அனுமதியைத்தான் கோருவார்கள். பாபாவிடம் ஒரு குணாதிசயம் உண்டு. அவர் பல சமயங்களில் புதிர் தன்மையோடு நடந்து கொள்வார். ஏன் என்று அவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் அவர்களுக்கு அனுமதி மறுப்பார். ‘உங்களுக்கு அனுகூலமாக இருந்தால் செய்யுங்கள்’ என்று மட்டும் கூறினால் அவருக்கு அதில் விருப்பமில்லை என்று பொருள். பின்னர் என்ன அவர்கள் ஓர் அடி கூட ஆசிரமத்தைவிட்டு வெளியே வைக்க மாட்டார்கள். அதேபோல் எவ்வித முன்னறிவிப்புமின்றி பாபா பிரசாந்தி நிலையத்திலிருந்து ஒயிட் பீல்டுக்கு கிளம்பி விடுவார். அவரருகிலேயே சதாகாலமும் இருக்க வேண்டும் என அவாவும் அவரது அடியார்களும் உடனேயே அவருக்குப் பின்னால் அடுத்த சில நிமிடங்களில் புறப்பட்டுவிடுவார்கள். புட்டபர்த்தி. பெங்களூர், கொடைக்கானல் ஆகியவை அவர் செல்லுமிடங்கள். சென்னை சேமியர்ஸ் சாலையிலுள்ள சுந்தரம் இல்லத்திற்கு ஆண்டிற்கொருமுறை வந்து கொண்டிருந்தவர் திடீரென அதையும் நிறுத்திவிட்டார். உகாண்டா தவிர வேறு வெளிநாடு எதுவும் சென்றதில்லை.
சாய்பாபா யார்? மனிதரா? அவதாரமா?

தன்னைக் கடவுள் என்று அவர் அடிக்கடி கூறியதில்லை. அதிசயங்கள் நிகழ்த்துவதையும் அவர் பின்னாட்களில் வெகுவாகக் குறைத்துக் கொண்டார். பிறப்பிலும் இறப்பிலும் இன்ன பிறவற்றிலும் அவர் மனிதராகத்தான் வாழ்ந்து மறைந்தார். இதற்கிடையே அவர் அவதாரம் என்பது சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. கடவுளின் அவதாரம், தூதர் என்றெல்லாம் ஒருவர் தன்னைப் பற்றிக்கூறும் பொழுது அவர் மனிதர்கள் காலம் காலமாக எழுப்பும் கேள்விகளுக்கு என்ன பதில்களைத் தருகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். கடவுளின் அவதாரங்கள் ஏன் எப்பொழுதும் மனிதர்களின் ஒழுக்கங்களைப் பற்றியே பேசுகிறார்கள்? என்றும் விடை காணவியலாத பிறப்பு இறப்பு குறித்த ஆச்சர்யங்கள் மட்டுமின்றி பிரபஞ்சத்தைப்பற்றிய மனிதர்களின் சந்தேகங்களை ஏன் அவர்கள் தீர்த்து வைப்பதில்லை? அவர்கள் புவிக்கு மட்டுந்தான் காப்பாளர்களா? உலகம் உருண்டை, அது சூரியனை சுற்றுகிறது என்பதிலிருந்து தொடங்கி மனிதனின் அறிவார்ந்த ஏக்கங்களுக்கு செவிசாய்ப்பவை மனிதனின் விஞ்ஞான செயல்பாடுகள்தான்.

விஞ்ஞானப் புதிர்களைத் தீர்த்து வைக்காவிடினும் அப்துல் கலாம் கூறியதைப்போல் மக்களிடையே கல்விக்கான விழிப்புணர்வை ஊட்டியதில் பாபாவிற்கு சிறப்பான பங்குண்டு. பாபா செய்த பல நற்பணிகளை நியாயமாக அரசாங்கம் செய்திருக்க வேண்டும். ஊழல் மலிந்த நமது அரசாங்கம் அவற்றை செய்யத் தவறியது. தனிமனிதனாக அவற்றை செய்து காட்டினார் பாபா. பாபாவின் அன்பும் கருணையும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் அமைதியையும் மகிழ்ச்சியையும் உருவாக்கியுள்ளன.

முகங்கள்

சில முகங்கள் வெகு சீக்கிரமாகவே முதுமை
அடைகின்றன. ஏமாற்றங்கள் அவற்றில்
எழுதி ஒட்டியிருக்கும்.
குழந்தைகளின் பிடிவாதத்தினால் தாடைகள் இறுகியிருக்கும்
குடும்பத்தில் பல சாவுகளினால் மூக்கு எப்பொழுதும்
விம்மிய நிலையிலிருக்கும்
ஒவ்வொரு முகமும் கர்ப்பப்பையினுள்ளே நீண்டநேரம்
தீர்மானித்திருக்கும் – லௌகீக விஷயங்கள் தன்னை எப்படி
பாதிக்கும் என்பதை – பிரச்சினைகள் வரும்போது குப்புறப்
படுப்பதா கண்காணாத ஊருக்கு ஓடிவிடுவதா என்பதை.
சில முகங்கள் விட்டுக் கொடுக்கின்றன
வேறு சிலவோ விடைத்து நிற்கின்றன
சில முகங்கள் பிரகாசமாய் தெளிவாய் தெரிகின்றன
வாழ்க்கையின் விடை தேடி அவற்றை நாம் ஆராய்கிறோம்
முப்பத்தோரு வயதான முத்துப்பல்லழகி நிர்மலா சொன்னாள்
üஎன் அப்பா பெயர் ராமச்சந்திரன்.நாங்கள் குழந்தைகள்
கூட்டாக ராமோ, ராமா, ராமென என்று அவர் காதுபடி
ராம சப்தம் சொல்வோம்.ý
அவள் கண்களின் உற்சாகம் உங்களையும் பற்றிக்கொள்ளும்
ரெடிமணியில் முப்பதாயிரம் இழந்த ராகவன் சொன்னான்.
üஉலகம் தர்ம நியாயத்திற்குக் கட்டுப்பட்டது. இந்த நம்பிக்கை
இல்லாமல் வாழ்வதில் அர்த்தம் இல்லை.
நம்மில் சிலருக்கோ வசவுகள். வேதனைகள் உள்தங்கி
விடுகின்றன. கால்கள் தடுமாறி வழி தவறுகின்றன
பசியும், குளிரும் பலரை பாதிக்கிறது
முகங்கள் மாறுகின்றன. அதில் ஒன்றும் தவறில்லை
காலை எழுந்ததும் கண்ணாடியில் உற்று கவனியுங்கள்
நீங்கள் யார் என்பது உங்களுக்குப் புரியக்கூடும்.

மையம்

நிர்மாலியப்படாத பூக்கள்
தெய்வத்தின் திருமேனியை
அலங்கரிக்கும்
பால் வற்றிப் போன
தாயின் முலை சப்பும்
குழந்தை
பள்ளிக் கூட வாசலில்
வியாபாரியின் கைபட்டவுடன்
புதுப்புது வடிவெடுக்கும்
பஞ்சுமிட்டாய்
ஏனோ சிறுவர்களை
ஈர்க்கும்
வாழை இலை அசைவைப்
பார்த்து
பயந்து போன சிநேகிதன்
ஜுர வேகத்தில்
உளறிக்கொண்டிருந்தான்
பேயைப் பார்த்ததாக
சிட்டுக் குருவியின் சீண்டல்களைப்
பார்த்து செவ்வந்தியின் மனம்
சிறகடிக்கும்
அந்தி நேரம்
கணவனின் வருகைக்காக
முகம் கழுவி பவுடர் பூசி
வாசலில் காத்திருக்கும்
தோப்புக்காரன்
தேங்காய் தலையில் விழுந்து
கபாலம் சிதறி
இறந்து போனான்
உச் கொட்டிய கூட்டம்
தேங்காய் சிரட்டை கூட
ஈயமாட்டாரு
போறப்ப என்னத்த
எடுத்துகிட்டு போனாரு
என்றது.

அறியாப் பிறவி

நான் கோபக்காரன்

கொலைகாரன்

காட்டுச் சிங்கமென்று

எனது கவிதை

நாயகனுக்குத் தெரியாது.

அப்பாவியாய்

அபகரிக்க வல்லவனாய்

எண்ணி என்னை

அன்றாடம் அலைக்கழிக்கும்

சூன்யக்காரனான

அவனறிய மாட்டான்

நான் அவனை

அவ்வப்போது எழுத்தால்

கண்டந்துண்டமாய்

வெட்டிப் பிளப்பதை.

பாவம் அவன்

என் கவிதைகளைப்

படிப்பதில்லை.

கவிதைகளும்

அவனுக்குப் பிடிப்பதில்லை.

சில க.நா.சு கவிதைகள்

நல்லவர்களும் வீரர்களும்

கடவுளுக்கு கண்ணூண்டு. அவனுக்கு
வீரர்களையும் நல்லவர்களையும் ரொம்ப
ரொம்பப் பிடிக்கும். உண்மையில்
வீரர்களையும்.சமாதான காலத்தில்
நல்லவர்களையும் அதிகமாக
இப்பாழான உலகத்தில் உலவ
விடாமல் சீக்கிரமே கடவுள்
தன்னிடம் அழைத்துக் கொண்டு
விடுகிறான். கடவுளுக்கு உண்மையில்
கண்ணுன்டு. நல்லவர்களையும்
வீரர்களையும் அவனுக்குத் தெரியும்
என்று நிச்சயமாக நம்பலாம் !

எதையாவது சொல்லட்டுமா – 42

வெயில் கடுமையாக இருப்பதால், நான் எதையாவது சொல்லட்டுமா பகுதியில் எதையும் சொல்லாமல் விட்டுவிட்டேன். பல கற்பனைகளை செய்து வைத்திருந்தேன். பெருந்தேவி, நேசன் கவிதைத் தொகுதிகளைப் பற்றி எழுதுவது. பின் பிரமிள் கட்டுரையைத் தொடர்வது என்றெல்லாம் நினைத்திருந்தேன். கவிதையைப் பற்றிய என் கட்டுரையைத் தொடரலாம் என்றெல்லாம் நினைத்திருந்தேன். வெயில் என் எண்ணத்தைச் சிதற அடித்துவிட்டது. என் இயலாமையை வெயில் மீது கொட்டுகிறேன் என்றுகூட தோன்றுகிறது.

நாம் எந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது, அதை நிறுத்துவது எப்படி என்றும் யோசிக்க வேண்டும். எப்போதும் எதையாவது படிப்பதை நிறுத்திவிட்டு, பேசாமல் இருந்தால் என்ன என்றுகூட தோன்றுகிறது. நம்முடைய பிரச்சினை நாம் எதையும் நிறுத்தமுடியாமல் அவதிப் படுகிறோம். வாழ்க்கை இப்படியே போய்க் கொண்டிருக்காது. எதையும் தொடர்வதை நிறுத்திப் பார்த்து என்ன நடக்கிறது என்று ஆராய வேண்டும். ஒரு பத்திரிகையைப் புரட்டிப் பார்த்தேன். ஒவ்வொரு இதழிலும் அவர் ஏகப்பட்ட கவிதைகளை எழுதிக்கொண்டே போகிறார். அதைப் பார்த்தபோது, இவர் ஏன் நிறுத்தாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டே போகிறார் என்று தோன்றியது. எழுதிக் கொண்டே போகும்போது எழுதவதை நிறுத்த வேண்டும். படித்துக்கொண்டே போகும்போது படிப்பதை நிறுத்த வேண்டும். யாரும் அதைச் செய்வதில்லை. டிவியில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் மாதிரி எல்லோருடைய வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது.

********

கணையாழி ஸ்தாபகர் கஸ்தூரி ரங்கன் அவர்கள் மரணம் அடைந்த செய்தி sms ல் வந்தபோது, வருத்தமாக இருந்தது. கணையாழில் என் குறுநாவல் ஒன்று வரும் தருணத்தில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவர் அலுவலகத்தில் போய்ப் பார்த்தேன். தனியாக இருந்தார். பழைய கணையாழி இதழ்கள் சிதறிக் கிடந்தன. ஒரு தட்டச்சுப் பொறி முன் அமர்ந்து எதையோ டைப் அடித்துக்கொண்டிருந்தார். என் குறுநாவலைக் குறித்து பக்கங்களைக் குறைக்கச் சொன்னார். அவர் சொன்னபடி செய்தேன். கணையாழி சம்பந்தப்பட்ட அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா மூவரையும் பார்த்திருக்கிறேன். கஸ்தூரி ரங்கன் அதிகமாகப் பேச மாட்டார். கணையாழி கொண்டுவருவதில் உள்ள அவருடைய தீவிரத்தை அறிவேன்.

ஒருமுறை விருட்சம் வெளியீடாக வந்துள்ள ஒரு கவிதைத் தொகுப்புக்கு அவரைத் தலைமை ஏற்கும்படி கேட்டுக்கொண்டேன். வந்திருந்து சிறப்பாக உரையாற்றினார். ஆனால் என்ன எல்லாவற்றையும் பதிவு செய்யும் பக்குவம் என்னிடமில்லை. அதனால் தெளிவாக என்னால் எதையும் குறிப்பிடமுடியவில்லை. தனி மனிதராக கணையாழி இதழைத் தொடர்ந்து நடத்தியது அசுர சாதனை. இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெரும்பாலான படைப்பாளிகளுக்கு கணையாழி வழி காட்டியாக இருந்தது. ஒரு காலத்தில் நான் இரண்டு சிறுகதைகளை எழுதி ஒன்றை ஆனந்தவிகடனுக்கும், இன்னொன்றை கணையாழிக்கும் அனுப்பினேன். கணையாழில் என் கதை உடனே வந்துவிட்டது. ஆனந்தவிகடன் ஒரு ஆண்டு கழித்து கதையைத் திருப்பி அனுப்பியது.

ஒரு கட்டத்திற்குப் பின் யாராலும் எதையும் தொடர முடியாது. கணையாழியை அவரால் தொடர முடியவில்லை. வேறு ஒரு நிறுவனத்திடம் கொடுத்துவிட்டார். அந்த கணையாழி வந்தாலும், கஸ்தூரி ரங்கன் கொண்டு வந்த எளிமையான கணையாழி இல்லை. மசாலா போட்ட அது வேறு ரகம்.

எளிமையான தோற்றம் கொண்ட கஸ்தூரி ரங்கனை மறக்க முடியாது. அவரை இழந்து நிற்கும் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சில க.நா.சு கவிதைகள்

போ

எட்கார் ஆலன் போவின் கதைகளைப் படிக்கும்போது
மிகவும் உஷாராகத்தான் படிக்க வேண்டியதாக இருக்கிறது.
ஏதாவது ஒரு வார்த்தையின் இடத்தையும் அர்த்தத்தையும்
கவனிக்காமல் விட்டு விட்டால், அவன் என்னதான் சொல்ல
வருகிறான் என்பது தெரியாமலே போய் விடுகிறது. இத்தனைக்கும்
அவன் எழுதியதெல்லாவற்றையும் பத்திரிகைத் தேவைக்காக
அவசர அவசரமாக எழுதினான் என்றுதான் தெரிகிறது.
கவனமாகப் படிக்காவிட்டால் அவன் அர்த்தப்படுத்துவதற்கு
எதிர் மறையாக வேறு விதமாக அர்த்தப்படுத்திக்கொள்ள
ஏதுவாகியிருக்கிறது. லிஜீயா என்கிற கதையில் அவன்
தனது இரண்டாவது மனைவியைக் கொன்றானா; ஆகாயத்
திலிருந்து கொட்டிய விஷத்துளிகள் மனப்பிராந்தியா
உண்மையின் எதிரொலியா பிரதிபலிப்பா என்று
கண்டுகொள்ள முடியாமல் திணறிப் போவோம்.
தன் கூடப்பிறந்தவனைக் கொன்றானா? யாரையோ
நட்புடன் உயிரோடு புதைத்து சாக விட்டுவிட்டு
தான் செய்த தவறுக்குத் தண்டனை வேண்டி
நின்றானா?-கவனித்துப் படித்தால்தான் தெரியும்
வேறு விதமாகவும் பதினாறு விதங்களாகவும்
அர்த்தப்படுத்திக்கொள்ள அவன் உபநிஷத்துக்கள்
எழுதினானா? வெறும் கதைகள்தான் எழுதினானா?
போவின் எழுத்துக் கலையின் பூர்ணத் தன்மை
உனக்குப் புரிகிறபோது இலக்கியத்தின் அமைதியும்
அமைதியின்மையும் பலித்து விட்டதுபோல
ஒரு நினைப்பு ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மஹானுபவர்

எங்கள் வங்கிக்கிளையில்
மஹானுபவர் வந்திறங்கியிருக்கிறார்
அவதார புருஷர் அல்லர்
தினமும்
அவருக்கு யாரிடமாவது
பிரசங்கம் செய்யாமலிருக்க முடியாது
பார்ப்பவர்களைக் கவர்ந்திழுக்க
செய்யத் தவறிய காரியங்களைச்
செய்ததாகச் சொல்லும் அவர்
சொல்லில் வல்லவர்
செயலில் வில்லங்கர்
அவரைப் பார்த்தால்
கவர்ந்திழுக்கும் தோற்றம்
பேசினால் போதும்
இழு இழு
மஹானுபவரைத் தாண்டி
நான் அப்படிப் போனால்
வாங்கி வாருங்கள்
தயிர்சாதமென்று கட்டளை இடுவார்
பாக்கெட்டில் கையை விட்டு
பணம் எடுக்க முயற்சிமட்டும் செய்வார்

அவருக்கும் எனக்கும்
அலுவலகத்தில் ஒரே பதவிதான்
ஏழுமணிக்குமேல் அலுவலகத்தைவிட்டுப்
போக நெளிவார்
பதைபதைப்பார்
தினசரி ஒன்றை எடுத்துக்கொண்டு
படித்துக்கொண்டிருப்பார்

எனக்கோ எட்டுமணிக்குமேல்
இருப்பு கொள்ளாது

நானும் மஹானுபவருடனும்
மஹானுபவர் என்னுடனும்

தினம் தினம் அலுவலகம்
வர நாங்கள் இருவரும் தவற மாட்டோ ம்..

அன்பு மழை

அலைபேசியில் அன்பின்

பரிமாற்றங்கள் குறுஞ்செய்திகளாய்

குவிந்தும் குழைந்தும்

சிந்தி சிதறிக் கொண்டிருக்க

அவளுக்கொரு அழைப்பு

வந்தது.

ஹாய் என்றாள்..

அவசரமாய் எங்கோ

செல்வதாகச் சொன்னாள்.

அப்படியா என்று

ஆச்சரியப் பட்டாள்..

சுதாவுக்கு ஹாய் சொல்லு..

சந்தோஷுக்கும் ஒரு ஹாய் சொல்லு..

மல்லிகாவுக்கு ஹாய் சொல்லு

மஞ்சுவுக்கும் ஹாய் சொல்லு

வர்ஷூக்கும் ஹாய் சொல்லு

லாரன்ஸ்க்கும் ஹாய் சொல்லு

ஜெயஸ்ரீக்கும் ஒரு ஹாய் சொல்லுடி..

என்று எத்தனையோ பேருக்கு

ஹாய் சொல்ல சொன்னவள்

இடையில்…

கொஞ்சம் நில்லுடி

இன்னொரு கால் வருது

என்று சொல்லி

ஒரே நிமிடம் லைனில்

காத்திருக்கச் சொன்னாள்..

இன்னொரு பழைய

பெரிய நைந்து போன

அலைபேசியில்

எரிந்து விழுந்தாள்

இன்னப் பாரு..

திருப்பி திருப்பி

என்னக் கூப்பிடாதே..

நான் ரெம்ப

பிசியா இருக்கிறேன்.

எனக்கு எதுக்கும்

நேரமே இல்லை.

இப்போ எனக்கு

ஊருக்கு வரவே முடியாது.

வயசானா பேசாம

இருக்க மாட்டே..

தொந்தரவு பண்ணாதே என்று

அந்த அழைப்பை

அழுத்தி நிறுத்தி விட்டு….

தொடர்ந்து ஹாய்

பாடினாள்.. அடுத்து

ஒரு அப்படியா என்று

ஆச்சரியப்பட்டு விட்டு

ரியலி இண்ணைக்கு

உங்களையெல்லாம்

மிஸ் பண்ணறேன்டீ

என்று கூறி

பை சொல்லிவிட்டு

எதிரே வந்த

இன்னொரு பெண்ணிடம்

ஹை சொன்னாள்.

அரங்கு நிறையாக் காட்சிகள்

நண்டுகளோடு ஓடிப்பிடித்து
விளையாடிக் கொண்டிருந்தன
வெள்ளலைகள்

ஆளுயர அலைகளுக்கு அகப்படாமல்
பறந்தெழும்பித் தணிந்தமர்ந்தன
மீண்டும் மீண்டும் சாமர்த்தியமாய்..
நண்டைப் பிடிக்கவோ நீர் பருகவோ
குழுமியிருந்த கடற்பறவைகள்

எண்பதெழுபது கிலோ
எடை மனிதர்களை
அநாயசமாய் இழுத்தோடி
உற்சாகமாய் வலம் வந்தன
உடற்பயிற்சி ஆசான்களாகி..
அழகான நாய்க்குட்டிகள்

கடலுக்குள் இறங்கும்
சூரியனின் கதிர்வீச்சில்
நிஜத்தை விட பன்மடங்கு
நீண்டு விழுந்து
பிரமிப்பைத் தந்தன
கரையோர நிழல்கள்

இணக்கமாய் கோர்த்துக் கொண்ட
இரு கரங்களிலிருந்து விடுப்பட்டு
உப்புக் காற்றோடு கரைந்தன
சில பிணக்கங்கள்

அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன
எவ்விடத்திலும் ஏதேனும்
அற்புதக் காட்சிகள்

அவசரகதியில் சுழலும் பூமியரங்கில்
அமர்வாரின்றிக் காத்தேக் கிடக்கின்றன
அநேக நாற்காலிகள்.
*** ***