கவிதையும் ரசனையும் – 10


அழகியசிங்கர்


நான் இதை எழுதும்போது என் முன்னால் ஏகப்பட்ட கவிதைத் தொகுதிகள் படிக்கக் கிடைக்காமலில்லை. இதைப்பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுத வேண்டுமென்று தோன்றுகிறது. ஒரு புத்தகத்தின் முழுப் பகுதியை எழுதவில்லை. ஒரு சில கவிதைகளைக் குறிப்பிட்டுத்தான் எழுதுகிறேன். என்னால் எதை ரசிக்க முடிகிறது என்று வரிசைப்படுத்த விரும்புகிறேன்


அதே சமயத்தில் விட்டுப்போன கவிதைகளை இன்னொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடலாமென்று தோன்றுகிறது.
மணல்வீடு பதிப்பகம் சிறப்பாகக் கொண்டு வந்த ஜபூஜ்ய விலாசம்ஹ என்ற நெகிழன் கவிதைத் தொகுதியை எடுத்துக்கொள்வோம். அதில் பல கவிதைகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. உண்மையான உணர்வுடன் எழுதப் பட்டிருக்கின்றன.
நற்பெயர் என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம். ஒரு நாயைப் பற்றி கவிதை எழுதியிருக்கிறார். மிட்டு என்ற நாயைப் பற்றி. இங்கே அந்தக் கவிதையைக் குறிப்பிடுகிறேன்.
நற்பெயர்
வாசலில் புதிதாக ஒரு ஆளைப்பார்த்துவிட்டால் போதும் மிட்டுவுக்கு ஒரே குஷி குரைப்பான் குரைப்பான் வாய் வலிக்கக் குரைப்பான் பழகிய முகங்கள் அவனிருப்பை இன்மைக்குத் தள்ளுகின்றன மேலுமவை ஒருபோதும் நற்பெயர் வழங்குவதில்லை சலாம் வைப்பதும் வாலை விதான விசிறியாய் சுழற்றுவதும் சில இரவுகளில் யாருமற்ற வெளியை நா தள்ளக் குரைப்பதும் என எல்லாப் பாடுகளும் அந்த ஒன்றுக்குத்தான் இன்னும் சுருங்கச் சொல்வதெனில் மிட்டுவின் அகராதியில் நற்பெயர் என்பது ஞாயிற்றுக்கிழமையின் ஒரு நல்லி எலும்பு. மிட்டு என்ற ஒரு நாயைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கவிகுரலோன். அதாவது ஒரு புதிய ஆள் எதிர்ப்பட்டால் மிட்டு என்ற நாய் ஒரே குரைப்பாகக் குரைத்துவிடும்.
அதாவது மனிதர்களின் பழக்க வழக்கமெல்லாம் அதற்கு வந்துவிடுகிறது. மனிதர்களுடன் பழகி. புதிய ஆளைப் பார்த்தால் வாய் வலிக்கக் குரைப்பான். அதே பழைய முகங்களைப் பார்த்தால் ஒன்றும் குரைப்பதில்லை. பழைய முகங்கள் அவனிருப்பை இன்மைக்குத் தள்ளுகின்றன. சலாம் வைப்பதும் வாலை விதான விசிறியாய் சுழற்றுவதும் அவன் பெயருக்கு ஒரு போதும் நற்பெயர் வழங்குவதில்லை.
சில இரவுகளில் யாருமற்ற வெளியை பார்த்து நா தள்ளக் குலைப்பதும் என எல்லாப்பாடுகளும் நற்பெயர் வாங்கும் அந்த ஒன்றுக்குத்தான். மிட்டு குரைக்கக் குரைக்கத்தான் அவனிருப்பை வெளிப்படுத்த முடியும். அவனிருக்கிறான் என்பதை ஊறுதி செய்து நற்பெயரையும் எடுக்க முடியும். நற்பெயர் என்பது ஞாயிற்றுக்கிழமையின் ஒரு நல்லி எலும்பு என்கிறார் கவிஞர்.
‘ஊற்று’ என்ற அடுத்த கவிதையைப் பார்ப்போம்.
ஊற்று
எங்கள் ஊரில் ஒரு புகழ்பெற்றக் கிணறிருக்கிறது நீர் கீழிறங்கும்போதெல்லாம் ஒருவர் கல்லைக் கட்டிக் குதிப்பார் நீர் சற்று மேலெழும் ஒவ்வொரு மாதமும் இப்படித்தான் போனமாதம் ரொம்பவும் கீழே போய்விட ஒரு குடும்பமே கல்லெடுத்துக்கொண்டு நீருக்குள் போனது ஒவ்வொருமுறையும் நீருக்குள் போகிறவர்கள் அதன் ஊற்றைக் கண்டுபிடிக்கிறார்கள் அதன் இனிக்கும் நீரைப் பருகுகிறார்கள் ஊற்றாய் மாறுகிறார்கள் பின் மெல்ல மேலெழும்பி நீராய் சூரிய ஒளியில் மின்னுகிறார்கள்..
எளிமையாக தன் அனுபவங்களை அடுக்கிக்கொண்டு போகிறார் கவிஞர். பொதுவாக இருக்கிற கிணறு பற்றி இந்தக் கவிதை பேசுகிறது. புகழ்பெற்றக் கிணறு என்கிறார். என்? ஊரில் பொதுவாக கிணறொன்றை புகழ்பெற்ற கிணறு என்றால் என்ன? எல்லோருடைய உபயோகித்துக்கும் அந்த கிணறு இருந்தவண்ணம் இருக்கிறது.
எப்போதும் ஊரில் பாழடைந்த கிணறுகள்தான் தென்படும். அந்தக் கிணறுகளைச் சுற்றிப் பல கதைகள் உண்டு ஆனால் இது புகழ்பெற்ற கிணறு. எல்லோருக்கும் இனிக்கும் நீரை வழங்கிக்கொண்டிருக்கிற கிணறு.
நீர் கிணற்றில் வற்றிப் போய்க்கொண்டிருக்கும்போது யாராவது ஒருவர் கல்லைக் கட்டிக் குதிப்பார். உடனே நீர் ஊற்று மேலெழும்.
கிணற்றின் பயன் ஊருக்கு அதிகம் இருப்பதால் ஒவ்வொரு மாதமும் இப்படித்தான் நடக்கும்.
போனமாதம் ரொம்பவும் கீழே போய்விட்டது. ஏன்? கோடைக்காலமாகப் போன மாதம் இருக்கலாம். கிணற்றின் பயன்பாடு மிக அதிகமாக இருந்திருக்கும்.
ஒரு குடும்பமே கல்லெடுத்துக் கொண்டு நீருக்குள் போனது. நீருக்குள் போகிறவர்கள் அதன் ஊற்றைக் கண்டுபிடிக்கிறார்கள். அதன் இனிக்கும் நீரைப் பருகுகிறார்கள்.. அதோடு அல்லாமல் ஊற்றாய் மாற்றுகிறார்கள். பின் கிணற்றிலிருந்து மேலே வந்து நீராய் சூரிய ஒளியில் மின்னுகிறார்கள்.
நான் குடியிருந்த அடுக்கத்தில் கூட ஒரு கிணறு இருந்தது. கடுமையான வெயில் காலத்தில்கூட அதன் ஊற்றிலிருந்து தண்ணீர் கொடுத்துக்கொண்டு இருக்கும். மற்ற வீடுகள் உள்ள கிணறுகளில் கிடைக்காது. அதைக் குறித்து ஜஅற்புதக் கிணறேஹ என்று கவிதை எழுதி மகிழ்ந்திருக்கிறேன்.
நெகிழன் கவிதையில் ஊரிலிருக்கும் கிணறு. எல்லோராலும் போற்றப் படுகிறது.
இத்தொகுப்பில் நான் ரசித்த வரிகள் பல கவிதைகளில் வெளிப்படுகின்றன. ‘மழைக்கால ஈசல்கள்’ என்ற கவிதையில் இப்படி எழுதியிருக்கிறார். ‘பானை புற்றாகிவிட்டிருந்த மாயையை இறகுகள் முளைத்து ஈசல்களால் வெளியேறிவிட்ட அரிசிகளை’ சமீபத்தில் வெட்டுக்கிளியைப் பற்றி ஒரே பேச்சாக இருந்தது. ‘களவு’ என்ற தலைப்பில் எழுதியிருப்பதைப் பாருங்கள்.
‘ஒரேயொரு வெட்டுக்கிளி ஒரு நெல் மூட்டையைத் தூக்கிக்கொண்டு தாவித் தாவிப் பறந்து சென்றதைப் பார்த்ததாக நாங்கள் சொன்னால் யாரும் நம்புவார்கள்’
இவர் கவிதைகள் சில புரியாதத்தன்மையுடன் எழுதப்பட்டிருக்கின்றன. ‘ பூஜ்ய விலாசம்’ என்ற கவிதையை எடுத்துக்கொள்ளலாம். அதைக் குறையாகச் சொல்லவில்லை. ஒரு கவிதை புரியவில்லையென்றால் வாசகனும் முயற்சி செய்ய வேண்டும். அப்படியும் புரியாவிட்டால் விட்டுவிட வேண்டியதுதான்.
புத்தகத்தின் பின் அட்டையில் இப்படி ஒரு கவிதை எழுதப்பட்டிருக்கிறது.
நம்பிக்கையின் எலும்புகள் முறியும் அகாலத்தில் உச்சுக் கொட்டுகிறது பல்லி கனவுகளின் ஒளிநாடா பற்றியெரியும் இரவுகளில் தன் பூட்ஸ் கால்கள் அழுந்த புதிய வீடெங்கும் நடைபயில்கிறது சுவர்க்கடிகாரம்.
இதை உற்றுப் பார்த்தால் கவிதையைப் புரிந்து கொள்ள இயலும். ஒரு சாதாரண நிகழ்ச்சியை அசாதாரண தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது.
இதில் பல கவிதைகள் ரசிக்கும்படி உள்ளன. பூஜ்ய விலாசம் என்ற கவிதைப் புத்தகத்தை ஒருவர் விலைக்கு வாங்கி வைத்துக்கொள்வது ஒரு நல்ல கவிதைத் தொகுப்பிற்குக் கொடுக்கும் மரியாதையாகும். மணல்வீடு வெளியீடாக இந்தப் புத்தகம் வந்திருக்கிறது.
(இந்தக் கட்டுரை தமிழின் முதல் இணைய இதழ் வாரப்பத்திரிகை திண்ணையில் 31.01.2021ல் வெளிவந்துள்ளது)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 152

அழகியசிங்கர்

பிரத்யேக பிராணி

நெகிழன்


யாரை

பிடிக்கும் பிடிக்காதென்றெல்லாம் தெரியாது

எதற்கு 

வருகிறது போகிறதென்றும் தெரியாது 

எதற்கதை 

கொல்ல வேண்டுமென்றும் தெரியாது 

எனக்குத் தெரிந்தது 

அதுவொரு எலி 

பார்க்கச் சின்னதாக இருக்கும் 

சிறு தேங்காய் பத்தைக்கோ வடைக்கோ 

அல்லது தக்காளிக்கோ

தன் உயிரையே விடுகிற அல்பம் 

யாரும் 

எளிதில் சித்திரவதைச் செய்ய முடிகிற 

கொல்ல முடிகிற ஜந்து 

எல்லாவற்றுக்கும் மேலாக 

நம்மை வீர புருஷர்களாக்கும் பிரத்யேக பிராணி.


நன்றி : பூஜ்ய விலாசம் – நெகிழன் – வெளியீடு : மணல்வீடு – ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – 636 453  தொலைப்பேசி : 9894605371 விலை :ரூ.80 – பக்கம் : 65 

சூம் மூலமாக 34வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

 

அழகியசிங்கர்

16.01.2021  – சனிக்கிழமை  மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 34வது கவிதை  நேசிக்கும்  கூட்டம் நடைபெறுகிறது.
கவிதை வாசிப்பவர்கள் 2 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு கவிதைகள் வாசிக்கவும்.

கவிதை மீது ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது.  யார் வேண்டுமானாலும் எந்த வகையில் எழுதப்பட்ட கவிதையும் வாசிக்கலாம்.  உங்கள் கவிதை மட்டுமல்ல.  மொழிபெயர்ப்பு கவிதைகளும் வாசிக்கலாம்.  ஆனால் ஏற்கனவே வாசித்த கவிதைகளை திரும்பவும் வாசிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்
கூட்டத்தில் கலந்து கொள்ளபவர்கள் கூட்டம் முடியும் வரை இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மனம் திறந்து வரவேற்கிறேன்.  உற்சாகத்துடன் கவிதையை வாசிக்க வாருங்கள்.நீங்கள் இரண்டு விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

1. வெள்ளிக்கிழமைக்குப் பதில் சனிக்கிழமை கூட்டம்.2. கூட்டம் துவங்கும் நேரம் 6.30 மணிக்கு
Topic: சூம் மூலமாக 34வது கவிதை நேசிக்கும்  நிகழ்ச்சி
Time: Jan 16, 2021 06:30 PM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/85905310425?pwd=UEl5dGM1RzlnUlpiT0pjeDRwUkRwZz09

Meeting ID: 859 0531 0425

Passcode: 144014

./

க.பூரணச்சந்திரனின் கதையியல்



அழகியசிங்கர்


புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகம் ‘கதையியல்’ என்ற க.பூரணச்சந்திரன் புத்தகம்.பல உபயோகமான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் கண்டெடுத்தேன்.
பொதுவாக ஒரு புத்தகம் குறிப்பாகக் கட்டுரைப் புத்தகம் ஆரம்பத்தில் இருப்பதுபோல் புத்தகத்தைப் படித்து முடிக்கு முன் இருப்பதில்லை.
க.பூரணச்சந்திரனின் புத்தகமும் விதிவிலக்கல்ல.இது என்ன காரணம் என்றால் ஆரம்பத்திலேயே பூரணச்சந்திரன் சொல்ல வேண்டிய தகவல்களை சொல்லி முடித்து விடுகிறார். பின்னால் ஏற்கனவே சொன்னதைச் சொல்கிறாரோ என்று என் மனதிற்குப் பட்டது.
இதோ இப் புத்தகத்திலிருந்து உபயோகமான கருத்துக்களை தங்கள் முன் சொல்ல விரும்புகிறேன்.200 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் 15 பகுதிகளாகப் பிரித்து எழுதியிருக்கிறார்.’வாழ்க்கை விளக்கமும் தப்பித்தலும்’ என்ற தலைப்பில் முதல் அத்தியாயத்தை எழுதியிருக்கிறார்.அதில் கவனிக்கவேண்டிய சில பகுதிகளை இங்குத் தருகிறேன்.
கதைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் என்கிறார்.
1. வெறும் இன்பத்திற்கான பொழுது போக்குவதற்கான இலக்கியம் ஒரு வகை.
2. வாழ்க்கையில் சற்றே வெளிச்சத்தையும் ஈடுபாட்டையும் ஆழ்நோக்குகளையும் நல்லுணர்வுகளையும் அளிக்கக்கூடிய இலக்கியம்.,
முதல் வகை இலக்கியத்தைத் தப்பிப்பு இலக்கியம் என்கிறார். இரண்டாவது வகையை வாழ்க்கை விளக்க இலக்கியம் என்கிறார்.
இப்படி இருவகை இலக்கியம் இருக்கிறது என்று சொல்லும்போதே இரண்டு வகை வாசகர்களும் இருக்கிறார்கள் என்பதும் பெறப்படும். முதிர்ச்சி குறைந்த வாசகர்கள் முதிர்ச்சி பெற்ற வாசகர்கள் என்று அவர்களுக்குப் பெயரிடலாம்.
முதிர்ச்சி குறைந்த வாசகர்கள் என்பதை ஒரு கீழான அல்லது வசைக் சொல்லாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.
ஆனால் வயது முதிர்ந்த பிறகும் பல வாசகர்களுக்குத் தேவதை கதைகளுடைய மாற்றுகள்தான் தேவைப்படுகின்றன. அவை ருசிகரமாக இருக்கின்றன. இவர்களுக்கும் ஒரு கதாநாயகன் வந்து இருபத்தைந்து பேரோடு சண்டைபோட்டு இரண்டு மூன்று பெண்களுடன் காதல் செய்து களிப்போடு பூங்காக்களில் ஓடியாடி சில வில்லன்களை ஒழித்துக்கட்டி சபமாக வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது. ஆகவே இந்த வகையான வாசகர்கள் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்வதற்கு மாறாக, தங்கள் குழந்தைப் பருவத்திற்குப் பின்னோக்கிச் செல்கிறார்கள்.
முதிர்ச்சி இல்லாத வாசகர்களைப் பற்றி பட்டியிடுகிறார் ஆசிரியர்.
அவர்கள் ஒவ்வொரு கதையிலும் தங்கள் குறித்த சில தேவைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அப்படி இல்லாமல் போனால் ஏமாற்றமடைகிறார்கள்.பல சமயங்களில் ஒரே மாதிரியான விஷயங்களைக் கதையில் எதிர்பார்க்கிறார்கள்.
உதாரணமாகச் சாகசக் கதைகள், விளையாட்டுக் கதைகள், காதல் கதைகள், குற்றக் கதைகள் எனப் பெயர்கள் கொண்ட ஒரே விதமான கதைகளைப் படிக்கிறார்கள். ஒரே ஃபார்முலாவில் அமைந்த கதைகள் அவர்களுக்கு இன்பமளிக்கின்றன.
தப்பிப்பு இலக்கியங்களின் பொதுப் பண்புகளை விவரித்துக் கொண்டு போகிறார் நூலாசிரியர்.நமது வாழ்க்கை அனுபவத்தை விரிவுபடுத்துவதற்கும், நமது ஞானத்தைப் பரவலாக்கிக் கொள்வதற்கும் இவை உதவுவதில்லை என்று கூறுகிறார்.
நுணுகிப் பார்க்கும் வாசகர்கள், தப்பிப்பை முன்னிறுத்தும் கதைகளை விட, வாழ்க்கையைக் காட்டும் இலக்கியங்களைத்தாம் விரும்புகிறார்கள். தப்பிப்பு இலக்கியத்தை அவர்கள் விரும்புவதில்லை, படிப்பதில்லை என்று கூற முடியாது. ஏனென்றால் தப்பிப்பு இலக்கியம் எல்லாமே மலிவானதாகவோ, மிகச் சாதாரணமானதாகவோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
இந்தப் புத்தகம் சில அறிவுரைகளையும் கூறுகிறது. நாம் வாசிக்கும் எந்தப் புத்தகத்தையும் எப்படி மிகச் சிறப்பாகப் பயன் படுத்திக் கொள்வது என்று அறிந்துகொள்ள வேண்டும். இந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
இதற்குக் கதைகள் மட்டுமல்ல, கதையில்லா வாசிப்பும் முக்கியம். புனைகதை, புனைகதையல்லாதவை என்னும் இரு துறைகளிலும் நல்ல வாசிப்பு இருப்பது அனுபவங்களை அளித்தும், அறிவை விசாலப்படுத்தியும் மனதைச் செழுமைப்படுத்தும்.ஒன்றை இலக்கியமாகப் பார்க்கப்பட வேண்டுமென்றால் மற்றப் படைப்புகளுடன் தொடர்புப் படுத்திப் பார்க்க வேண்டுமென்கிறார்.
கதையியல் என்ற புத்தகத்தில் முக்கியமாக 15 அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். முதல் அத்தியாயம்தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது.
கதையியல் என்ற இப் புத்தகத்தின் விலை ரூ.180. அடையாளம் வெளியீடாக இப்புத்தகம் வந்துள்ளது.

சுவாமி விவேகானந்தர் பற்றி..2

 

அழகியசிங்கர்

நேற்று என் லைப்பரரி போனபோது தற்செயலாக என் கண்ணில் விவேகானந்தர் பற்றி புத்தகம் கிடைத்தது.  அதைப் படிப்போம் என்று எடுத்து வந்தேன். 168 பக்கங்கள் கொண்ட அப் புத்தகத்தில்  42 பக்கங்கள் படித்து விட்டேன்.
கம்பளிட் ஒர்க்ஸ் சுவாமி விவேகானந்தர் என்ற புத்தகத்தில் ஒரு பாகமே என்னால் தாண்ட முடியவில்லை.  பெரும்பாலும் ரேஷன் கடை முன்னால் க்யு நிற்கிற இடத்தில் விவேகானந்தர் புத்தகம் வைத்துக்கொண்டு படிப்பேன்.  அப்போதெல்லாம் சின்ன வயது.  
ஒரு வரி கூட மூளையில் ஏறவில்லை. அரவிந்தர் புத்தகம் இன்னும்  மோசம்.
சுலபமாகப் படிப்பது ரமணர், ஜேகிருஷ்ணமூர்த்தி, யூஜி, ரஜினிஷ் இதெல்லாம்தான்.
விவேகானந்தர் கூறுகிற பொன் மொழிகளை என்னால் ஏற்க முடியவில்லை.  பொதுவாக நான் பொன் மொழிகளையே படிப்பதில்லை. 
ஆனால் நேற்று எடுத்துக் கொண்டு வந்த புத்தகம் எனக்குப் படிக்க வேண்டும் போலிருந்தது .  இதை எழுதியவர் நெமய் சதன் போஸ்.  இந்திய இலக்கியச்  சிற்பிகள் என்ற புத்தகம். இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்திருப்பவர்க் கா.செல்லப்பன்.  இவற்றைப் படிக்கப் படிக்க  புதிய தகவல்களை அறிந்து ஆச்சரிய மடைந்தேன்.  
ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளைக் காண முடியுமா என்ற விவேகானந்தர் கேள்விக்கு, காட்ட முடியும் என்று கூறி விவேகானந்தரை அவர் பக்கம் வீழ்த்தி விடுகிறார்.
“ பரமஹம்சரின் முக்கியமான சேவை மக்களுக்குச் சேவை செய்வது.  இன்று வரை ராமகிருஷ்ண மடங்கள் சத்தமில்லாமல் பல உயர்ந்த சேவைகளைச் செய்து கொண்டு வருகின்றன.
விவேகானந்தர் பல இடங்களில் சுற்றுப் பயணம் செய்கிறார்.  மக்கள் எந்த வசதியும் இல்லாமல் ஏழ்மையாகவும், வறுமையில் வாடுவதையும் கண்டு வருத்தமடைகிறார். 
இதோ அந்தப் புத்தகத்திலிருந்து இன்னும் சில பகுதிகளைத் தருகிறேன்.
முன்னாள் மிக்சிகனின் கவர்னரின் மனைவியர் ஜான் ஜே. பேக்ஙூ அம்மையார், தன் இல்லத்தில் முன்னொரு சமயம் சுவாமிகளை விருந்தினராகப் பெற்றிருந்ததை எண்ணி, அவரைப் பற்றி ஒரு கடிதத்தில், ஒவ்வொரு மனிதனும் அவரை நன்கு அறிவதன் மூலமும் சிறப்பு அடைவான்.  அமெரிக்காவிலுள்ள ஒவ்வொருவரும் விவேகானந்தரை அறிய வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.  மேலும் அவர் போன்றவர் இன்னும் இந்தியாவில் இருப்பார்களேயானால் இந்தியா அவர்களையும் எங்களிடம் அனுப்பட்டும், என்று எழுதினார். ******
விவேகானந்தரின் ஆன்ம ஆற்றலையும் பெருமையையும் முதலில் கண்டறிந்து போற்றியவர்கள் தென்னிந்திய மக்கள்தான் என்று கூறினால் அது மிகையாகாது.  அவர்களுள் துளசிங்கப் பெருமாளும் ஒருவராவார்.  
1894 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாள் சென்னையில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.  புகழ்பெற்ற பல பெரியோர்கள் அக் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.  எஸ்.சுப்பிரமணிய அய்யர் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.  சர். இராமசுவாமி முதலியார் அக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த முக்கியமானவர்களுள் ஒருவர்.   ****** 
தன்னை அறிதல் என்ற தலைப்பில் அவர் முதன்முதலாக இலண்டனில் நிகழ்த்திய சொற்பொழிவு ஒரு மகத்தான வெற்றியாக இருந்தது. அச்சொற்பொழிவினைக் கேட்டவர்கள் மந்திரத்தால் கட்டுண்டது போல் இருந்தனர் . 
அவற்றுள் மறக்கமுடியாத மிகவும் முக்கியமான கூட்டம் எதுவென்றால் 1995 ஆம் ஆண்டு, நவம்பர் 10ஆம் நாள் செசெமி குழாத்தில் நடந்த ஒன்றாம்.  அங்கு வருகை புரிந்திருந்தவர்களுள் மார்கரெட் நோபிள் ஒருவராவார்.  அவர் 1967 ஆம் ஆண்டு வட அயர்லாந்தில் பிறந்தவர்.  அவருடைய தாத்தாவும் தந்தையும் பிராட்டஸ்டண்ட் மதத் தொண்டர்களாக இருந்து ஐரிஷ் சுதந்திர இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். இந்தியத்தாயின் ஒரு உண்மையான மகளாகவும் அவர் விளங்கினார்.  அவரை மக்களின் அன்னை என்று இரவிந்திரநாத் தாகூர்  வருணித்தார். இன்று சகோதரி  நிவேதிதாவின் பெயர் இந்தியர் இல்லங்களிலெல்லாம் பேசப்படும் ஒன்று.

சுவாமி விவேகானந்தர் பற்றி..1

12.01.2020

அழகியசிங்கர்

1894 ஆம் ஆண்டு அவருடைய தந்தையை இழந்ததால் அவர் படிப்புக்குத் தடை ஏற்பட்டது.  வீட்டில் வறுமை தாண்டவமாட அவர் வேலை தேடிப் போகும்படி நேர்ந்தது.
சிலகாலம் கழித்து, ஒருநாள் இராமகிருஷணர் நரேந்திரநாத்தைப் பார்த்து,  அன்று மாலையில் அன்னை காளியின் கோயிலுக்குச் சென்று, வாட்டும் வறுமையிலிருந்து அவரது குடும்பத்தை விடுவிக்குமாறு வேண்டி வரச் சொன்னார்.
அந்த நாள் ஒரு மங்கலமான நாளாகவிருந்தது.  அவருடைய விருப்பத்தை அன்னை நிச்சயம் நிறைவேற்றுவாள் என்று அவருக்கு இராமகிருஷ்ணனர் உறுதியளித்தார்.  நரேந்திரநாத்தும் கோயிலுக்குச் சென்று அன்னையின் முன்னே நின்று வேண்டினார். ஆனால் அவர் கேட்ட வரமோ அவருக்குப் பகுத்தறியும் ஆற்றல், பற்றொழித்தல், பக்தி ஆகியவை கிடைக்க வேண்டும் என்பதே.
âââââââââââââ  தான் இறப்பதற்குச் சற்று முன்பு, ஒருநாள், இராமகிருஷணர் நரேனை தனது படுக்கையருகில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி மறைந்தார்.  அப்போது, தன்னுடைய உடம்பில், மிக அதிக மின்னழுத்தமுள்ள மின்னோட்டத்திற்குச் சமமான ஒரு விவரிக்கவியலாத மாபெரும் சக்தி பாய்வதை விவேகானந்தர் உணர்ந்தார்.  சிறிது நேரம் சென்றபின் ராமகிருஷ்ணர் பௌதீக உலகப் பிரக்ஞையை மீண்டும் பெற்றபிறகு, “இன்று என்னிடம் உளதெல்லாம் உனக்குக் கொடுத்துவிட்டேன்.  இப்போது நான் ஒன்றுமில்லாத சாதாரண பிச்சைக்காரன்.  நான் உனக்களித்த சக்திகளைக் கொண்டு, நீ இவ்வுலகில் பெரிய செயல்களைச் சாதிப்பாய்.  அதுவரையில் நீ எவ்விடத்திலிருந்து வந்தாயோ அவ்விடத்திற்குத் திரும்பிச் செல்ல மாட்டாய்” என்று கூறினார்.
ஆம், ராமகிருஷ்ணரின் முடிவு 1886 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16 ம் நாள் வந்தது.

07.01.2021 சூம் மூலமாக 33வது ஹைக்கூ கவிதை வாசிக்கும் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு.

திரு மு.முருகேஷ் உரை ஆற்றுகிறார்.

அழகியசிங்கர்

ஹைக்கூ குறித்து சிறப்புரை ஆற்றிய திரு. மு.முருகேஷ்.  ஒளிப்பதிவில் கண்டு ரசியுங்கள்.  ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில் நிபுணர்.  ஹைக்கூ கவிதைகளுக்காக பல

ரமணிசந்திரன் புத்தகங்கள்

அழகியசிங்கர் 

பழைய பேப்பர் கடையில்

புத்தகம் வாங்கும் பழக்கம் எனக்கு

ரமணிசந்திரன் புத்தகங்கள்

ஒருநாள் இருக்கக் கண்டேன்


அப்படியே வாங்கிக் கொண்டு(கிலோ  ரூ.70க்கு)

புத்தகக் கண்காட்சிக்கு எடுத்துக்

கொண்டு விற்க வைத்தேன்.
எல்லாவற்றையும் உடனே வாங்கிக்

கொண்டு போனார்கள் பெண் ரசிகர்கள்

பெண் ரசிகர்களின் ஜாடை ரமணிசந்திரன்

சாயலாக இருக்கக் கண்டேன்
ஒரு முறையாவது ஒரு புத்தகமாவது வாங்கிப்

படிக்க வேண்டுமென்று தோன்றியது
என்னதான் எழுதியிருக்கிறார் ரமணிசந்திரன்?
நான் தயாரித்த புத்தகங்கள் எல்லாம்

பொதுவாகக் கவிதைப் புத்தகங்கள்

கண்ணைக் கண்ணை விழித்துப் பார்த்தன

என்னை.                         28.12.2020

அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..

அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..
அழகியசிங்கர்
என் நண்பர் ஒருவரிடம் இரவு பத்து மணிக்கு மேல் பேசிக் கொண்டிருந்தேன். நான் பொதுவாக இரவு 11.30 மணிக்கு மேல் தான் தூங்கப் போவேன்.திடீரென்று அசோகமித்திரன் சிறுகதைகள் பற்றி பேச்சு வந்தது. இரண்டு கதைகளை அவர் குறிப்பிட்டார். ஒன்று புலிக்கலைஞன். இரண்டாவது கதை எலி .
“இரண்டு கதைகளையும் சாதாரணமாகத்தான் எழுதியிருக்கிறார். அக் கதைகளை ஏன் விசேஷமாகக் குறிப்பிடுகிறார்கள்?” என்று கேட்டார்.அவர் சொன்னதை நான் நம்பவில்லை. நான் அக் கதைகளை உடனடியாகப் படிக்க வேண்டுமென்று தோன்றியது.
அந்த இரவு நேரத்தில் இரண்டு கதைகளையும் படித்து விட்டுத்தான் தூங்கச் சென்றேன். அக் கதைகளைக் குறித்து விசேஷமாக யார் சொல்லியிருக்கிறார்கள் என்று யோசித்தேன்.
அக் கதைகளைப் படித்த மன நிறைவை அக் கதைகள் கொடுக்கத் தவறவில்லை.
அசோகமித்திரன் கதைகள் புத்தகத்தை ஒரு கெயிட் புத்தகம் மாதிரி கதை எழுத முன் வருபவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.அவர் கதைகளைக் குறித்து ஒரு பொதுவான சில கருத்துக்கள் சொல்ல விரும்புகிறேன்.
1. தொடர்ந்து ஒரு ஆசிரியரின் கதைகளைப் படிக்கும்போது சற்று அயர்ச்சி ஏற்பட்டு விடும். ஆனால் அசோகமித்திரன் கதைகளில் அப்படியொரு அனுபவம் ஏற்பட்டதில்லை.
2. கதைகளில் எளிமை என்றால் அப்படியொரு எளிமையாக எழுதியிருப்பார்.
3. பெரும்பாலான கதைகள் இரண்டு மூன்று பக்கங்களில் முடிந்து விடும்.
4. அவர் கதைகளை உணர்ச்சிப் பூர்வமாக எழுதியிருக்க மாட்டார். அறிவுப் பூர்வமாக எழுதியிருப்பார்.
5. அவர் கதைகளில் பெரும்பாலும் நகைச்சுவை உணர்ச்சி இயல்பாக வெளிப்படும். வலிந்து திணிக்க மாட்டார்.
நண்பர் கேட்கும்போது எதையும் கோர்வையாகச் சொல்ல வரவில்லை. யோசிக்க யோசிக்க இதெல்லாம் தோன்றுகிறது.
‘அசோகமித்திரன் கதைகள்’ என்ற முழுத் தொகுதியில், 274 கதைகள் இருக்கின்றன.
இதில் எந்தக் கதையையும் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம்.அவர் எழுதிய எல்லாக் கதைகளும் சிறந்த கதைகள் என்று சொன்னால் நண்பர் சண்டைக்கு வந்து விடுவார்.
நான் கண்ணை மூடிக்கொண்டு 274 கதைகளில் எதாவது ஒரு கதையைப் படிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதி அற்புதமான அனுபவத்தை கதை ஏற்படுத்தாமலிருக்காது.நண்பர் சொன்ன இரண்டு கதைகளையும் எடுத்துக்கொண்டு எழுத வேண்டுமென்று எனக்குத் தோன்றியது.
புலிக்கலைஞன். என்ற கதையை பலமுறை படித்திருக்கிறேன். இப்போது எத்தனையாவது முறை என்று தெரியாது . உண்மையில் இப்போது படிக்கும்போது புதியதாகப் படிப்பதுபோல் தோன்றுகிறது.
ஒரு கதை பலமுறை படிக்கும்போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அரத்த்தத்தைக் கொடுக்கும்.அசோகமித்திரன் பொதுவாக அவர் சார்ந்த உலகத்தை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுவார். அதேபோல் இந்தக் கதையிலும் வெளிப்படுத்துகிறார். அதைச் சாதாரணமாக விளக்குவது போல் ஒருவித கிண்டல் தொனியில் தெரியப்படுத்துகிறார்.
இதோ இந்தக் கதையை எடுத்துக்கொள்வோம்.ஒரு திரைப்படம் எடுக்கும் அலுவலகத்தில் கதைசொல்லி பணிபுரிகிறான். முதலில் தன் வருத்தத்தைத் தெரிவிக்கிறான். அலுவலகத்தில் பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை டிபன் இடைவெளி இருந்தது. இப்போது அப்படி இல்லை என்கிறான். கடந்த ஒரு மாதமாக பத்து மணிக்கே அலுவலகம் வந்து விட வேண்டும். டிபனுக்காக பிற்பகல் ஒன்றிலிருந்து இரண்டு மணி வரை. மாலை ஐந்து மணிக்கே முடியும் அலுவலகம் ஆறு மணிவரை நீட்டி வைக்கப்பட்டு விட்டது.
புலிக்கலைஞனை அறிமுகப்படுத்தும்போது அலுவலக நிலையை வெளிப்படுத்துகிறார். ஒன்றரை வருடம் திரைப்படமே எடுக்காமல் இருந்திருக்கிறது. வேலையொன்றும் செய்யாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு, காரியாலய நேரத்தில் மேஜை மீது காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு தூங்கி, தலைமயிரை நரைக்க வைத்து, அடிவயிற்றில் ஊளச்சதை சேர்த்து, டயாபிடிஸ் நோய்க்கு இடம் கொடுத்து, சிந்தனைக்கு இலக்கு இயலாத காரணத்தால் விழிகளுக்கு அலைபாயக் கற்றுக்கொடுத்து, பேச்சில் நிறைய உளறலை வரவழைத்துக் கொள்ளலாம். ஒன்றரை வருடத்திற்கு நிலைமை மாறலாம். அப்போது ஏற்படும் கிளர்ச்சியும் தடுமாற்றத்தையும் எதிர்பார்த்திருந்த நாளில்தான் புலிக்கலைஞன் அங்கு வருகிறான்.
சர்மா என்ற கதாபாத்திரத்தை இப்போது அறிமுகப்படுத்துகிறார் அசோகமித்திரன்., சர்மா சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். நாடகம், கதைகள் எழுதிப் பிரசுரம் செய்து பெயர் வாங்கி, அந்த ஸ்டூடியோவில் கதை இலாகாவில் ஒரு புள்ளியாகி விட்டிருந்தார்.
அடுத்தது அவர்களுடைய அலுவலகத்தில் உள்ள சிறு அறையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் சிறிதும் பெரிதுமாகப் பழங்காலத்து மேஜைகள் மூன்று இருப்பதாகச் சொல்கிறார்.
அசோகமித்திரன் இங்கே நகைச்சுவை உணர்வுடன் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘நாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளைத் தவிர இன்னும் ஒன்று அதிகப்படியாக இருந்தது. அதிகப்படியான நாற்காலியில் ஒரு கால் குட்டை. யார் வந்து அதில் உட்கார்ந்தாலும் ஒரு புறம் சாய்ந்து, அதில் உட்கார்ந்தவரை ஒரு கணம் வயிற்றைக் கலக்கச் செய்யும்.’
வந்த புலிக்கலைஞன் அதைப்பிடித்துக்கொண்டு நின்றான்.
சர்மாவிற்கும் அவனுக்கும் உரையாடல் நடக்கிறது. அந்த உரையாடலைப் படிக்கும்போது சிரிப்பை வரவழைக்கும்படி இருக்கும்.
அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.
“காலையிலே வந்தேனுங்க. நீங்கக் கூட ஒரு குடையை ரிப்பேர் பண்ணிட்டிருந்தீங்க.”
“ஓ..நீயா? வேலாயுதமில்லை?”
“இல்லீங்க. காதர் டகர் பாயிட்காதர்” என்கிறான்
“நீ வந்திருந்தியா?” என்று சந்தேகத்துடன் கேட்கிறார் சர்மா.
“ஆமாம். வெள்ளை சொன்னான் ஐயாவை வீட்டிலே போய் பாருன்னு” என்கிறான்..
இப்போது வெள்ளை என்ற பாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார் அசோகமித்திரன்.வெள்ளை என்பவன்தான் அவர்கள் ஸ்டூடியோவில் பெரிய கூட்டங்களைப் படம் எடுக்க வேண்டியிருந்தால் நூற்றுக் கணக்கில் ஆண்களையும் பெண்களையும் சேர்த்துக் கொண்டு வருபவன்.
கூட்டமாக இருப்பதைத் தவிர அவர்களிடமிருந்து நடிப்பு ஒன்றும் தேவைப்படாது. நபருக்கு ஒரு நாளைக்குச் சாப்பாடு போட்டு இரண்டு ரூபாய் என்று கணக்கு. வெள்ளை ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு விடுவான் என்று கிண்டலாகக் குறிப்பிடுகிறார்.
புலிக்கலைஞன் எதாவது நடிப்பதற்கு எதாவது ரோல் கிடைக்குமா என்று வந்திருக்கிறான். சர்மா, “இப்ப ஒன்றும் கிரவுட் சீன் எடுக்கலையேப்பா” என்கிறார்.இங்கு புலிக்கலைஞனைப் பற்றிய வர்ணனைத் தொடருகிறது.
ஒரு காலத்தில் கட்டுமஸ்தான உடம்பு இருந்திருக்க வேண்டும். இப்போது தோள்பட்டை எலும்பு தெரிய இருந்தான். நன்றாகத் தூக்கியிருந்த அவனுடைய தாடை மூட்டுக்கள் அவனுடைய கரிய கன்னங்களை அளவுக்கு மீறி ஒட்டிப் போனதாகக் காண்பித்தன. வர்ணிக்கும்போது இங்கே ஒரு கிண்டல். வெள்ளை கொண்டு வரும் ஆட்கள் எல்லோரும் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். ராமராஜ்யம் படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாகத்தான் இருப்பார்கள் என்று.பிடிவாதமாக இருக்கிறான். எதாவது ரோல் கொடுக்கும்படி.
சர்மா, “உனக்கு என்ன ரோல்பா தர முடியும்? அதோ காஸ்டிங் அசிஸ்டெண்ட் இருக்காரு. அவர் கிட்டே எல்லா விவரமும் தந்துவிட்டுப் போ” என்கிறார்.காஸ்டிங் அசிஸ்டெண்ட் கதைசொல்லிதான். வந்தவன் மாதிரி ஆயிரக்கணக்கான நபர்களைப் பார்த்திருக்கிறார். பெயர், வயது, உயரம், விலாசம் என்று எல்லாம் குறித்து வைத்திருப்பார்.அந்தக் குறிப்பிகளிலிருந்து தேவைப்படும்போது நான்கு பேருக்குக் கடிதம் போட்டால் மூன்று கடிதங்கள் திரும்பி வந்துவிடும். அப்புறம் எல்லாம் வெள்ளைதான்.ஆனால் அவன் கதைசொல்லி பக்கம் திரும்பவில்லை. எல்லாம் சர்மாதான் என்று அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
அவனைப் பார்த்து, சர்மா, “உனக்கு நீந்தத் தெரியுமா?” என்று கேட்டார்.
“கொஞ்சம் கொஞ்சம் தெரியும்” என்கிறான்.
“மேலேந்து ஆத்துலே பாய்ஞ்சு நீஞ்சிப் போற மாதிரி ஒரு சீன் எடுக்க வேண்டியிருக்கும். அதுக்கு நீ போறாது” என்கிறார் சர்மா.”எனக்கு டகர் பாயிட் வரும். என் பேரே டகர் பாயிட் காதர்தானுங்க” என்கிறான் அவன்.
ஒருவருக்கும் அவன் சொல்வது புரியவில்லைஅவன் திரும்பவும் சொன்னான் “புலிங்க, புலி. புலி பாயிட்”
“ஓ..நீ புலியோட சண்டைப் போடுவியா?” என்று கேட்கிறார் சர்மா.
“இல்லீங்க புலி வேஷம் போடுவேங்க. அதைத்தான் டகர் பாயிட்னுவாங்க. இல்லீங்களா?”
இந்த இடத்தில் அவர்கள் இருவரும் பேசுவது நகைச்சுவை உச்சத்துக்குப் போய்விடுகிறது.அந்தப் புலி கலைஞன் பரிதாபமான முறையில் தன்னை நிரூபிக்க வேண்டி வந்துள்ளது.
“நம்பளது வேறு மாதிரிங்க. நிஜப் புலி மாதிரியே இருக்கும் ” என்கிறான்.
எங்கிருந்தோ ஒரு புலித் தலையை எடுத்தான். அப்போதுதான் அவன் ஒரு துணிப்பையை எடுத்து வந்திருந்தது தெரிந்தது. புலித்தலை என்பது தலையின் வெளித்தோல் மட்டும். ஒரு சிறுத்தையின் முகம் உடையவனாக மாறினான். அறையை ஒருமுறை அங்குமிங்கும் பார்த்துக் கொண்டான்.அங்கு அவர்கள் முன் நிஜப் புலி மாதிரி காட்டிக்கொண்டு தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.
இப்படி வர்ணிக்கிறார் அசோகமித்திரன்.
‘அவன் பூனைபோல் முதுகை மட்டும் உயர்த்தி உடலை வளைத்துச் சிலிர்த்துக் கொண்டான். பிறகு வாயைத் திறந்தான். நாங்கள் திடுக்கிட்டோம். அவ்வளவு நெருக்கத்தில் அவ்வளவு பயங்கரமாகப் புலி கர்ஜனையை நாங்கள் கேட்டது கிடையாது.அவன் குதித்த சுவடு தெரியாமல் அங்கும் இங்கும் குதிக்கிறான். கூடவே புலி மாதிரி கர்ஜிக்கிறான். அங்கிருப்பவர்கள் திகைத்துப் போகிறார்கள். சர்மாவால் கூட பேஷ் என்று கூற முடியவில்லை. அவன் சிறுத்தை முகமூடியைக் கழற்றி விட்டான்.’
அவன் பழைய மனிதன் ஆனான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு “நான் கட்டாயம் ஏதாவது பார்க்கறேம்பா என்றார் சர்மா. கதைசொல்லிஅவன் முகவரியைக் குறித்துக் கொண்டார். சர்மா அவர் ஜேபியில் கையை விட்டார். மற்றவர்களும் கையை விட்டார்கள். எல்லாம் சேர்ந்து இரண்டு ரூபாயிருக்கும்.
சர்மா, “இந்தா இதைக் கொண்டு போய் முதல்லே காண்டீனுக்குப் போய் நன்னாச் சாப்பிடு,” என்றார்.
“வேண்டாங்க” என்றான் அவன்.
“என்ன வேண்டாம்? போய்ச் சாப்பிடுப்பா முதல்லே” என்று சர்மா சொல்ல,
“ஏதாவது ரோல் வாங்கித் தாங்க ஐயா” என்று அழுது கொண்டே அவன் சொன்னான்.
அவன் அழுகை ஓய்ந்து பணத்தை வாங்கிக்கொண்டான்.
“போ. முதல்ல வயித்துக்கு ஏதாவது போடு” என்றார் சர்மா.
அவன் போனபிறகு கொஞ்ச நேரம் யோசித்து,
“அவனுக்கு என்ன பண்றது? நாம இப்போ எடுக்கிறதோ ராஜா ராணிக் கதை”.\ஆனால் சர்மா வெறுமனே இருந்துவிடவில்லை. இருவாரங்கள் கழித்து மீண்டும் கதை இலாகா கூடியபோது கதாநாயகன் புலி வேஷம் போட்டுக்கொண்டு எதிரிக் கோட்டைக்குள் நுழைவதாகப் படமெடுக்கலாம் என்று சம்மதம் பெற்று விட்டார். கதாநாயகனுக்குப் பதில் அவனுக்கு டூப் செய்யலாம். அதனால் ஒரு நூறு ரூபாயாதவது வாங்கித் தரலாம் என்று நினைத்தார் சர்மா.
கதைசொல்லி அவனுக்குக் கடிதம் போட வழக்கம்போல் 4 நாட்களில் கடிதம் திரும்பி வந்தது.
சர்மா வெள்ளையை அழைத்துக்கொண்டு போய் காதரைத் தேடினார். எல்லோரும் விசாரித்துக் கொண்டு எங்கங்கோ தேடினார்கள். காதர் கிடைக்கவில்லை. கதாநாயகன் எதிரி கோட்டைக்குள் நுழைய வேண்டிய காட்சி வந்தது.
அவன் கிடைத்தாலும் அதிகம் பயன் இருந்திருக்காது. அந்த ஒரு மாதத்திற்குள் வெளியான ஒரு படத்தில் கிராமிய சங்கீதத்துடன் அந்தக் கதாநாயகன் காவடி எடுப்பதாகக் காட்சி வந்திருந்தது. அந்தப் படம் தமிழ்நாடெல்லாம் தாங்க முடியாத கூட்டத்தைக் கூட்டிக் கொண்டிருந்தது.
அவர்கள் எடுக்கும் படத்தில் கதாநாயகன் கரகம் எடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது என்று அசோகமித்திரன் கதையை முடிக்கிறார்.
இந்தக் கதையில் எப்படி சினிமா படங்களில் அர்த்தமில்லாமல் அபத்தமாகக் காட்சி எடுக்கப்படுகிறது என்று சொல்வதுபோல் உள்ளது.
இந்தக் கதை மூலம் சினிமாவை அசோகமித்திரன் கிண்டல் செய்கிறார். சினிமாவிற்கு ரோல் கேட்ட காதர், அவர்கள் முன் புலி வேஷம் போட்டு நடித்துக் காட்டினான். சினிமாவில் நடிப்பதற்குப் பதில்.
மிகக் குறைந்த பக்கங்களில் சாதாரணமாக எழுதப்பட்ட கதை என்றாலும், வாழ்க்கையின் அபத்தத்தையும் இக் கதை சுட்டிக்காட்டத் தவறவில்லை.
அசோகமித்திரனின் இன்னொரு கதையான எலி கதையைப் பிறகு பார்ப்போம்.
(இந்த வார (10.01.2021) திண்ணையில் அசோகமித்திரனின் “புலிக் கலைஞன்’என்ற பெயரில் வெளிவந்த கட்டுரை.)

ம வே சிவகுமாரின் பாப்கார்ன் கனவுகள்

 10.01.2021

அழகியசிங்கர்

ம.வே.சிவகுமாரின் நினைவு தினம் இன்று. சில வருடங்களுக்கு முன் அவருடைய பாப்கார்ன் கனவுகள் என்ற நாவலை புத்தகக் காட்சியில் விற்பதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் உயர் அதிகாரியாக இருந்த கணேசன் விற்பனைக்குக் கொடுத்தார்.
விற்க முடியாமல் அவருடைய நாவலின் எல்லாப் பிரதிகளையும் பரண் மேல் போட்டிருந்தார். நான் சில பிரதிகளை விற்றுக் கொடுத்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில் ம.வே.சிவகுமாரைச் சந்தித்தேன்.


இந்த நாவல் 1995ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்துள்ளது. அப்போது இந்த நாவலைப் படிக்கவில்லை.


இந்த நாவல் அவருடைய சுய சரிதம் போல் எழுதப்பட்டாலும் முழுக்க முழுக்க அவர் சுயசரிதமில்லை. இந்த நாவலின் கதாநாயகனான லக்ஷ்மிநாராயணனுக்கும் ம.வே.சிவக்குமாருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. அதேபோல் வேற்றுமைகளும் உண்டு.


கல்கி பத்திரிகையில் தொடராக வெளிவந்துள்ள நாவல் இது. முழுக்க முழுக்க ம.வே.சிவகுமாரின் கனவைப் பிரதிபலிக்கிற நாவலாக இது எழுதப்பட்டிருக்கிறது.


ஒரு வங்கியில் பணிபுரியும் சாதாரண ஊழியர் லக்ஷ்மிநாராயணன் என்ற ஊழியர். அவர் விஜயலஷ்மி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் அவருடைய ஆசை சினிமாவில் நடிக்க வேண்டும். அது சாத்தியமா என்பதை இந்த நாவல் அலசுகிறது.


லக்ஷ்மிநாராயணன் எப்படிப்பட்டவன் என்பதை இந்த நாவல் ஆரம்பத்திலேயே அலசி விடுகிறது.எடுத்த உடன் லக்ஷ்மிநாராயணனுக்கு நடக்கும் திருமணத்திலிருந்து ஆரம்பமாகிறது கதை. அதை விவரிப்பதன் மூலம் கதாசிரியர் எந்த அளவிற்குத் திறமையானவர் என்பதை நிரூபிக்கிறார்.
…..’வெல்வெட்டு வேலைப்பாடுகளுடைய பேண்டு வாத்தியம். வேட்டியும், அங்கவஸ்திரமும் அணிந்து காதில் நாதஸ்வரம் வாங்கி மெல்லத் தொடர்கிற பெரியவர்கள் பழைய ஹெரால்டு காரில் பலகையடித்து நடமாடும் இன்னிசைக் குழு. நகர்கிற ட்யூப்லைட் வெளிச்சத்தில் நடமாடுகிற இளைஞர்கள். சூழ்நிலையின் மகிழ்ச்சி கருதி உடன் ஆட இறங்கிவிட்ட யுவதிகள்’….


இப்படி மாப்பிள்ளை அழைப்பு வைபவத்தை வர்ணிக்கிறது கதை. ஆரம்பத்திலேயே லக்ஷ்மிநாராயணன் ஒரு மாதிரி. தன் திருமணம் நடைபெறும்போதே அவன் நண்பர்களுடன் இரவு சினிமா காட்சிக்குச் சென்று விடுகிறான்.அந்த அளவிற்கு சினிமா பார்க்கும் வெறி அவனுக்கு. வங்கியில் காஷியராகப் பணிபுரிகிறான். விடாமல் சிகரெட் பிடிக்கிற பழக்கம் அவனுக்கு இருக்கிறது. இரண்டு இச்சைகளிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை. ஒன்று சினிமா. இன்னொன்று சிகரெட்.


இதெல்லாம் தெரிந்துகொண்டு விஜயலக்ஷ்மி அவனைத் திருமணம் செய்துகொள்கிறாள். அவளுடைய அப்பாவிற்கு வங்கியில் அதிகாரியாகும் தேர்வு எழுதி அவன் அதிகாரி ஆகிவிட வேண்டுமென்ற கனவு.ஆனால் அவன் வங்கியில் பணிபுரிந்தாலும் ஒரு சினிமா நடிகனாக வேண்டுமென்று கனவு. சினிமா பற்றி வருகிற எல்லாப் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் வாங்கி தனியாக ஒரு அலமாரியில் பூட்டிப் பத்திரப்படுத்தி வைக்கிறான் வீட்டில். அதை யாரையும் திறக்க விடுவதில்லை.


அதேபோல் வங்கியில் யூனியனில் முக்கியமான நபராக இருக்கிறான். அவன் வங்கிக்குப் போவதே ஒரே கூத்தாக இருக்கும். ரகளையாக இருக்கும். அவன் கனவு சினிமாவில் நடிப்பது. பொழுது போக்காக வருவதுபோல்தான் வங்கிக்கு வருகிறான் .அவன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு வரும்போதே தாமதமாகத்தான் வருவான். அவனுடைய மேலதிகாரி கேட்டால் ஏடாகூடமாகப் பதில் அளிப்பான்.


அவன் கனவு நடிகர் சிவாஜி கணேசன். அவர் முன்னால் அவனுக்கு நடிப்பதற்கு ஒருவாய்ப்பு கிடைக்கிறது. கல்கத்தாவில் நடைபெறப் போகிற நாடகத்திற்கு அவன் தன்னை நடிகனாகத் தயார் செய்து கொள்ள விரும்புகிறேன். நடிகனாகத் தேர்ந்தெடுப்பதற்கு நடிகர் சிவாஜி கணேசன் முன்னால் நடிக்க வேண்டும்.சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி வசனத்தைப் பேசி அசத்துகிறான். இதற்காக வீட்டில் ஒத்திகைப் பார்த்திருந்தான். சிவாஜி அவனைப் பார்த்து, ‘நல்லாத்தான் இருந்தது. ‘ஆனா மிமிக்ரி வேற, நடிப்பு வேற தெரிஞ்சுதா” என்கிறார்.


லக்ஷ்மிநாராயணன் 13 வது பேராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறான். சிவாஜிகணேசன் அந்த இடத்தை விட்டுப் போவதற்கு முன், அவனைக் கூப்பிட்டு ‘ஒழுங்கா இருக்கணும், தெரிஞ்சுதா’ என்கிறார்.


ஒரு சிறந்த நாடக நடிகர் என்ற பட்டத்தைக் கல்கத்தாவில் நடந்த நாடகத்தில் நிரூபித்து விடுகிறான். ஆனால் அவன் மாமனார் அதை விரும்பவில்லை. அவன் ஒரு வங்கியில் ஒரு அதிகாரியாக மாற வேண்டுமென்று விரும்புகிறார். அவன் மனைவியோ அவன் விருப்பப்படி இருப்பதை ஏற்றுக்கொள்கிறாள். அவளுக்கென்று எந்த எதிர்பார்ப்பும் இல்லை.


சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்யும்போதுதான் பெரிய சறுக்கலாகச் சறுக்கி வீழ்கிறான்.


அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு இந்த இடத்தில் ஒரு சினிமா கம்பெனியின் ஷூட்டிங் கலந்து கொள்கிறான். டைரக்டர் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை.அவனுக்கு ஒரு துண்டு ரோல் கொடுக்கப்படுகிறது. லக்ஷ்மிநாராயணனுக்கு வெறுப்பாகி விடுகிறது. அவன் டைரக்டரைப் பார்த்துச் சொல்கிறான்.
பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட் பேரைச் சொல்லி “நான் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தேன் சார். இந்த வேஷத்துல நான் நடிச்சா அது எனக்கும் பெருமையில்லை. அவங்களுக்கும் பெருமையில்லை ” என்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறான்.


அவன் கனவு கலைந்து விடுகிறது. சினிமாவில் நடிக்கும் ஆசை போய் விடுகிறது. இன்னொரு சினிமா கம்பெனியிலும் அவனை நடிக்கக் கூப்பிட்டு ஏமாற்றப் படுகிறான்.


அவனுக்கு ஆசையே போய்விடுகிறது. ஒரு முறை அவன் அலுவலகத்தின் எதிரில் ஒரு படப்பிடிப்பு நடைபெறுகிறது. அவன் அலுவலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் பரபரப்பாக இருக்கிறார்கள். அவன் அதைப் பார்க்க வேண்டுமென்ற எந்த ஆர்வமும் இல்லாமலிருக்கிறான்.


‘திரைத்துளிர்’ என்ற வார இதழ் மூலம் வாசகர்கள் சார்பாக திரு.கமல்ஹாசன் அவர்களுடன் ஒருநாள் சந்திக்கும்படி ஏற்பாடு செய்கிறார்கள். அவன் மனம் சந்தோசமடைகிறது.
கமல்ஹாசன் நடிக்கும் அவுட்டோர் படப்பிடிப்பில் அவன் கலந்து கொள்கிறான் வாசகனாக. அந்தப் படத்தில் சிவாஜியும் நடிக்கிறார். சிவாஜிக்கு மகனாக கமல்ஹாசன் நடிக்கிறார்.
லக்ஷ்மி நாராயணனைப் பார்த்து சிவாஜி கூப்பிடுகிறார். ‘நாம் இதுக்கு முன்னாடி பார்த்திருக்கிறோமே?’ என்கிறார்.
பதிலுக்கு லக்ஷ்மிநாராயணனுக்கு வாயில் வார்த்தைகளே வரவில்லை. இந்த இடத்தில் லக்ஷ்மிநாராயணன் நினைத்துக் கொள்கிறான். ‘இத்தனை நாள் கஷ்டப்பட்டதற்கு இன்றைக்கு ஒரு நாள் பெரும் திறமைகள் நடுவே நிற்க வைத்திருக்கிறாய். வாழ்க்கையில் நினைக்காததையெல்லாம் குலுக்கலில் தந்திருக்கிறாய். நினைத்து வருந்திக் கேட்டதை என்றேனும் தராமலா போய்விடுவாய்?’ என்று நினைத்துக் கொள்கிறான் லக்ஷ்மிநராயணன்.


அவன் அதிகாரியாகும் தேர்வு எழுதுகிறான். மும்பைக்கு மாற்றலாகிப் போகிறான். மாமனார் விருப்பத்தை நிறைவேற்றி விடுகிறான். இந்த நாவலில் பல இடங்களில் ஹாஸ்ய உணர்வு வெளிப்படும்படி எழுதப்பட்டிருக்கிறது.


ம.வே.சிவகுமாரின் நடை சிறப்பாக உள்ளது. இந்த நாவலை இன்று படிக்கும்போதும் விறுவிறுப்புக்குக் குறைவில்லை