மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2

– 113

அழகியசிங்கர்  

பேப்பர் பையன் 

பயணி

விடிந்தும் விடியாத காலை தெருக்களில்

சைக்கிளில் பேப்பர் போட்டுக்கொண்டு வருகிறான் பேப்பர் பையன்

மாடியில் குடியிருப்போருக்குக் கீழிருந்து வீசப்படும் பேப்பர்

வழக்கம்போல் பால்கனியில் விழாமல்

பால்கனியைக் கடந்து மாடியைக் கடந்து 

காலைவேளை பறவைகளைக் கடந்து

வானத்தை நோக்கிச் செல்கிறது

வானம் நெருங்க நெருங்க

பேப்பர் தன்னைப் பூதாகரமாக விரித்துக் கொள்கிறது

வானமே கூரையாகவிருந்த இந்த நகருக்கு

இப்பொழுது பேப்பரே கூரையாகிவிட்டது

பேப்பரின் இருளும் ஒளியுமே நகரின் இரவு பகலாக மாறுகிறது

ஒவ்வொரு நாள் காலையிலும்

பேப்பரிலுள்ள செய்திகள் மாற்றமடைகின்றன

இதைக் கண்டு பேப்பர் பையன் கலக்கமடைகிறான்

காலப்போக்கில் அவன் குல்பி ஐஸ்காரனாக மாறுகிறான்

இரவுகளில் குல்பி ஐஸ் விற்கும்போது

அதை வாங்குவோர் சிலர் கேட்கிறார்கள்

உன் கரத்தில் பேப்பர் வாசம் அடிக்கிறதே

மேலே அண்ணாந்து பார்த்து

அவன் தனக்குள்ளே சிரித்துக்கொள்கிறான்

நன்றி : மீள மேலும் மூன்று வழிகள் – புது எழுத்து, 2/205 அண்ணாநகர், காவேரிப்பட்டிணம் 12, கிருஷ்ணகிரி மாவட்டம் – முதல் பதிப்பு : டிசம்பர் 2013 – விலை : ரூ.70 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன