யார் அந்த இரண்டு பேர்களில்…

சிறுகதை
அழகியசிங்கர்
(நவீன விருட்சம் 98வது இதழில் வெளிவந்த என்னுடைய கதை.  அசோகமித்திரன் இக் கதையைப் படித்துவிட்டு பாராட்டி உள்ளார். நீங்களும் படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.)
  
மேற்கு மாம்பலம் பரோடா தெருவில்தான் வைஷ்ணவியின் வீடு.  ஐடி கம்பெனி ஒன்றில் ஓராண்டாக பணிபுரிகிறாள். வாசுதேவன் தம்பதியருக்கு ஒரே பெண். பார்க்க லட்சணமாக இருக்கிற பெண். நெடு நெடுவென்று நல்ல உயரம்.  அவள் அம்மாவிற்கு பெண்ணைப் பற்றியே கவலை.  எப்படித்தான் அவளுக்கு திருமணம் செய்து வைப்பது என்று. வளர்ந்துவரும் பெண்ணைப் பார்த்து பெற்றவர்களுக்கு உண்டாகும் கவலைதான் இது.  
வாசுதேவன் போரூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் கணக்குப் பார்க்கும் பிரிவில் பல ஆண்டுகளாக பணி புரிகிறான்.  அவனுடைய சம்பளத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை.  தினமும் காலையில் வாசுதேவன் அவன் மனைவி லட்சுமி தரும் டிபனை ஒரு டப்பாவில் கட்டிக்கொண்டு எடுத்துக்கொண்டு போவான்.  அங்கு கான்டினில் ஆபிஸ் நிர்வாகம் தரும் டீயைக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து விடுவான். பெரிய ஆடம்பரம் கிடையாது.  தி நகரிலிருந்து வரும் பஸ்ûஸப் பிடித்து அபீஸ் போய்விடுவான்.  பின் அதே பஸ்ûஸப்பிடித்து வீடு வந்து விடுவான்.
ஆனால் வைஷ்ணவி அப்படி அல்ல.  அவளும் அப்பா மாதிரி அதிகம் வாழ்க்கையிலிருந்து எதிர்பார்க்காத அமைதியான பெண்.  படிப்பில் கெட்டிக்காரி.  அவள் தகுதியை மீறி பிஇ படித்து ஒரு ஐடி கம்பெனியின் புண்ணியத்தால் பணியில் அமர்ந்திருக்கிறாள்.  அவளுக்கு அப்பாவை விடஅதிக சம்பளம்.  தன் செலவுக்குப் போக மீதிப் பணத்தை அம்மாவிடம் பயப்பக்தியுடன் கொடுத்து விடுவாள்.  அம்மா மீது அவளுக்கு வாஞ்சை அதிகம்.  எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அம்மா இருப்பது அவளுக்கு ஆச்சரியம்.  வைஷ்ணவி கொடுக்கிற பணத்தை அப்படியே கொண்டுபோய் வங்கியில் போட்டுவிடுவாள் அவள் அம்மா. 
கல்யாணம் செய்து கொடுத்துவிடலாம் என்று நினைத்தாலும், பணத்துக்கு எங்கே போவது?  
வைஷ்ணவிக்கு இது ஒரு பிரச்சினையாக இருந்தாலும், யாராவது ஒரு பையன் தன் வலையில் மாட்டிக்கொள்வான் என்று நினைத்தாள்.
தான் பார்த்துக்கொண்டிருக்கிற வேலை, தன் அழகு யாரையாவது ஒரு பையனை தன் முன்னால் மண்டிப் போட வைத்துவிடும் என்று நினைத்தாள்.
சாய்சங்கரா மேட்டிரிமோனியலில் தன்னைப் பற்றி விளம்பரம் தர சம்மதித்தாள்.  தன்னைப் பற்றி குறிப்பிடும்போது, எளிதாக யார் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்களோ அவர்களுக்கு தான் மாலை இட விரும்புவதாக குறிப்பிட்டாள். ஆனால் அதன் மூலம் பெரிதாக எதுவும் வரவில்ûலை என்பது வைஷ்ணவிக்கு ஏமாற்றமாக இருந்தது.  அப்படியென்றால் இந்தக் காலத்து இளைஞர்கள் எப்படிப்பட்ட பெண்ணை தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள் என்ற கேள்வி அவளை குடைந்து கொண்டே இருந்தது.  
இந்தச் சமயத்தில்தான் அவள் இரண்டு இளைஞர்களை சந்தித்தாள்.  ஒருவன் குரு.  இன்னொருவன் மூர்த்தி.  இந்த இருவர்களும் அவளுடன் பழக விரும்பியவர்கள்.  இந்த இரண்டு பேர்களுடன் பழகிக் கொண்டிருக்கும்போதே யாராவது ஒருவருடன் தன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ள வேண்டும் என்று வைஷ்ணவி நினைத்தாள்.  
ஒருநாள் அம்மாவிடம் சொன்னாள். இப்படி இரண்டு பேர்கள் என்னிடம் அன்பை காட்டுகிறார்கள் என்று.
இரண்டு பேர்களிடமும் ஏமாந்து போய்விடாதே என்று அம்மா எச்சரித்தாள்.
சரி எப்படி இரண்டு பேர்களைத் தேர்ந்தெடுப்பது?  குருவும் சரி, மூர்த்தியும் சரி.  ஒரே தராசில் நிறுத்திப் பார்த்தாலும் ஒரே மாதிரியாகத்தான் தெரிந்தார்கள்.  
அவர்கள் இருவரிடமும் பொதுவாக சில குணங்கள் இருந்தன.
இருவரும் புகைக்க மாட்டார்கள்.
இருவரும் மது அருந்த மாட்டார்கள்.
இருவரும் சாதாரண குடும்பத்தில் இருந்துதான் வந்திருக்கிறார்கள்.
இருவருக்கும் குடும்பத்தின் அருமை தெரியும்.
நிறையா சம்பாதிக்க வேண்டும் என்பதில் இருவருக்கும் ஒரே கற்பனைதான்.
இருவரும் ஒரே உயரம். ஒரே பருமன்.  ஒரே நிறம்.
வைஷ்ணவிக்குத்தான் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் அதிகமாகிக் கொண்டு  வந்தது.  நாளுக்குநாள் இது ஒரு பிரச்சினையாக மாறிக்கொண்டே வந்தது.
‘அம்மா, இரண்டு பேர்களையும் எனக்குப் பிடித்திருக்கிறது.  யாரைக் கல்யாணம் செய்து கொள்வது?’
‘வைஷ், அவர்களுக்கு உன் மீது ஈடுபாடு உண்டா
‘என்னைப் பார்க்காமல், பேசாமல்  அவர்களால் இருக்க முடியாது.’ 
‘பெரிய ஆபத்தாச்சே.. யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறே?’
‘அதுதான் தெரியலை…இருவரும் சாதாரண மெடில்க்ளாஸ் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்.  இருவருக்கும் குடும்பத்தில் பொறுப்புகள் அதிகம் உண்டு.’
‘ஒரு கோணத்தில் குருதான் எனக்கு ஏற்றவன் என்று தோன்றினாலும், மூர்த்தி மீதும் எனக்கு ஆசை இல்லாமலில்லை.  சிலசமயம் இரணடு பேர்களுடன் குடும்பம் நடத்தினால் என்ன  என்று தோன்றுகிறது.’
‘போடீ பைத்தியக்காரி.  ஒரு பெண் இப்படி நினைக்கிறது அசிங்கம்.
வைஷ்ணவியும் அவள் அம்மாவும் பேசிக்கொள்வது  வாசுதேவனுக்குத் தெரியாது.  அவன் உண்டு அவன் வேலை உண்டென்று காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தான்.  
‘அப்பா இல்லாத சமயத்தில் இருவரையும் நம் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வா,’ என்றாள் அம்மா.
‘நீ தேர்ந்தெடுப்பாயா?  அது சரியான தீர்வாகத்தான் இருக்கும்.  நீ யாரைச் சொல்றியோ அவனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்…’ என்றாள் வைஷ்ணவி மகிழ்ச்சியுடன்.
சிலதினங்கள் கழிந்தன.  வைஷ்ணவி எப்படி அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வருவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.  நடுவில் அவளுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.  இருவரையும் ஒன்றாக அழைத்து வருவதா?  தனித்தனியாக அழைத்து வருவதா?
அம்மா தெளிவாக சொன்னாள்:  வெளிப்படையாக நாம் அவர்களிடம் பேசுவோம்.  ஒன்றாகவே அழைத்துக் கொண்டு வா.. என்றாள் அம்மா.
ஒரு சனிக்கிழமை அப்பா இல்லாத சமயத்தில் அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்தாள் வைஷ்ணவி.  
üஎதற்கு?ý என்று அவர்கள் கேட்டார்கள்.
üசும்மாதான்,ý என்றாள் வைஷ்ணவி சிரித்துக்கொண்டே. வைஷ்ணவி அப்படிச் சொல்லி சிரிப்பதே அழகாக இருந்தது.
இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.  ஆனால் வைஷ்ணவி கூப்பிடுகிறாள் என்றால் எதாவது விசேஷம் இருக்குமென்று நினைத்தார்கள்.  வைஷ்ணவி என்ற பெண்மீது உள்ள காதலால் அவர்கள் இருவரும் அவள் எங்கு கூப்பிட்டாலும் வரத் தயாராக இருந்தார்கள்.   இருவரும் அவளை திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறார்கள்.
அவர்கள் இருவரும் சிறப்பாக டிரஸ் செய்துகொண்டு வைஷ்ணவி வீட்டிற்கு வந்தார்கள்.  வைஷ்ணவி அவர்கள் இருவரையும் அம்மாவிற்கு அறிமுகப்படுத்தினாள்.  அவள் அம்மா தாங்க முடியாத சிரிப்புடன் அவர்கள் இருவரையும் வரவேற்றாள்.
அவள் அம்மா செய்து போட்ட டிபனை தின்றுகொண்டு அவர்கள் இருவரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
வைஷ்ணவி அவர்கள இருவரையும் பாரத்து வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தாள்.
“நாங்கள் முடியாத குடும்பம்.  நான் கல்யாணம் செய்து கொள்வதற்குக்கூட என் அப்பாவால் பெரிதாக செலவு செய்ய முடியாது..”
“எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது,” என்றார்கள் இருவரும்.
இருவருமே கல்யாணத்திற்கு ஆகும் செலவு வீண்.  நாம் வெறுமனே ரிஜிஸ்டர் ஆபிஸில் திருமணம் செய்து கொண்டு விடலாம்.  அல்லது எதாவது கோயிலில் எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றார்கள்.
அவர்கள் இருவரும் அவர்களுடன் அரட்டை அடித்துவிட்டு ரொம்ப நேரம் கழித்துதான் வீட்டிற்குக் கிளம்பினார்கள்.  உண்மையில் அவர்களால் வைஷ்ணவியை விட்டுவிட்டுப் போகமுடியவில்லை.  வைஷ்ணவி யாருக்குக் கிடைப்பாள் என்பதில் ஒருவித பதட்டம் அவர்கள் இருவரிடமும் ஒட்டிக் கொண்டிருந்தது.  வைஷ்ணவியை விட்டுப் பிரிவது என்பது முடியாத காரியமாக இருந்தது. அவள் அம்மாவால் கூட யாருக்கு வைஷ்ணவி என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை.  வைஷ்ணவியிடமே அந்தப் பொறுப்பை விட்டுவிட்டாள்.
ஒருவாரம் கழித்து அவர்கள் இருவரையும் சந்திக்கும்போது, அவள் சொன்னாள் : üüஉங்கள் இருவரையுமே என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது.  யாராவது ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்ள முடியும்,ýý என்றாள். 
“அது ஏன் நானாக இருக்கக் கூடாது?” என்று குரு கேட்டான்.
“நானாகக் கூட இருககலாம் அல்லவா?” என்றான் மூர்த்தி.
“எனக்குக் குழப்பமாக இருக்கிறது,” என்று கூறிவிட்டு வைஷ்ணவி அந்த இடத்தை விட்டுப் போய்விட்டாள்.
குருவிற்கும், மூர்த்திக்கும் வைஷ்ணவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற துடிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது தவிர குறையவில்லை.
üüஎன் அப்பா அம்மாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வரட்டுமா?ýý என்று குரு கேட்டான்.
மூர்த்தியும் அதேபோல் நச்சரித்தான்.
வைஷ்ணவி, “நான் இன்னும் தீர்மானம் செய்யவில்லை.  எதற்காக அழைத்து வரவேண்டும், பார்க்கலாம்,” என்றாள்.
மேலும் இன்னொன்றும் சொன்னாள் :  “என் அப்பா பாவம்.  அவரால் கல்யாணத்திற்காக எந்தப் பணமும் செலவழிக்க முடியாது?”
உடனே மூர்த்தி சொன்னான் : “நாங்கள் செலவு செய்து திருமணம் செய்கிறோம்.  நீ கட்டினப் புடவையோடு வந்தால் போதும்.”
அதைக் கேட்டு குருவைப் பார்த்து சிரித்தாள் வைஷ்ணவி.  அவனும் மூர்த்தி சொன்னதையே திரும்பச் சொன்னான்.
“அப்படி என்றால் ஒன்று செய்யுங்கள்..நான் மண மேடையில் நடுவில் நிற்கிறேன்.  மூர்த்தி இந்தப் பக்கமும், குரு அந்தப் பக்கமும் நின்றுகொண்டு ஒவ்வொருவராக எனக்குத் தாலி கட்டுங்கள்..” என்றாள் சிரித்தபடியே.   அவர்கள் இருவருக்கும் முகம் தொங்கிவிட்டது.  இந்த வைஷ்ணவி புரியாத புதிராக இருக்கிறாளே என்று கனத்த இதயத்துடன் யோசிக்கத் தொடங்கினார்கள்.
அவரகள் இருவரையும் பார்த்து, ஒரு நாள் வைஷ்ணவி இப்படிச் சொன்னாள் :  “வர ஞாயிற்றுக்கிழமை நான் முடிவு செய்து விடுகிறேன்… மாம்பலம் ரயில் நிலையத்தில் நாம் சந்திப்போம்,”என்றாள்.
அதைக் கேட்டவுடன், இருவருக்கும் படபடப்பாகி விட்டது.  வைஷ்ணவி வைக்கப் போகும் பரிட்சையில் யார் ஜெயிக்கப் போகிறோம் என்ற படபடப்புத்தான் அது.
வைஷ்ணவி அப்படிச் சொன்னாளே தவிர, யாரைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க வைப்பது என்பதில் பெரிய குழப்பம் இருந்து கொண்டுதான் இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை அவர்கள் இருவரும் வந்து விட்டார்கள்.  இருவர் முகங்களிலும் காரணம் புரியாத ஒரு படபடப்பு.  வைஷ்ணவி என்கிற மகாராணியை யார் கைப்பிடிக்க போவது என்ற படபடப்புதான்.  
வேகமாக மின்சார வண்டிகள் இரண்டு பக்கங்களிலும் போய் வந்தவண்ணம் இருந்தன.  ஒரே கூட்ட நெரிசல்.  அந்தக் கூட்டத்தில் மிதந்தபடி வைஷ்ணவி படி இறங்கி வந்து கொண்டிருந்தாள்.  
உடனே இருவரும் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள்.  வைஷ்ணவிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.  அவர்கள் அவளைப் பார்த்து, “நீ யாரை விரும்புகிறாய்?” என்று கேட்டார்கள்.  வைஷ்ணவி உடனே குருவைப் பார்த்து, “எனக்கு உன்னைத்தான் பிடிக்கிறது,”என்று கூறிவிட்டாள். ஏன் அப்படிச் சொன்னாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.  குருவிற்கு தாங்கமுடியாத சந்தோஷம்.
மூர்த்தி திகைத்து விட்டான்.  அவன் மூர்ச்சை ஆகும் நிலைக்கு வந்துவிட்டான்.  üüநான் இனிமேல் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்,ýý என்று உளர ஆரம்பித்தான்.  உடனே ஓடிப்போய் பிளாட்பாரத்திலிருந்து கீழே இறங்கி, தண்டவாளத்தில் தலையை வைத்துக்கொண்டு, “நான் செத்துப் போகிறேன்,”என்றான். 
வைஷ்ணவிக்கு மூச்சே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது.   உடனே ஓடிப்போய் அவள் கத்தினாள் :  “ஏன் இது மாதிரி செய்கிறாய்?  உனக்குப் பைத்தியமா?” என்று.
மூர்த்தி எழுந்திருக்கத் தயாராய் இல்லை.  “எழுந்திருக்கிறாயா அல்லது உதை கொடுக்கட்டுமா?” என்றான் குரு.
தூரத்தில் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது.  வைஷ்ணவியின் பதட்டம் அதிகமாகிவிட்டது. அதற்குள் பிளாட்பார்தில் உள்ள பயணிகள் பலர் சேர்ந்து சத்தம்போட, மூர்த்தி தண்டவாளத்திலிருந்து எழுந்து பிளாட்பாரத்திற்கு ஏறி வந்தான். படபடப்பாக இருந்தான். 
குரு வேகமாக மூர்த்தியிடம் வந்து, ஓங்கி ஒரு அடி விட்டான்.  “நாயே…தற்கொலை செய்துகொள்ள இதுவா இடம்,” என்று.
வைஷ்ணவி மூர்த்தியை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை.  
அவளை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு குரு அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டான்.
  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன