வரையறை

மழை விடாமல் பெய்தது
பகல் இருள் கவிந்திருந்தது
அலுவலகத்திற்கு
தாமதமாய் போனால்
நந்தனைப் போல்
வெளியே நிற்கவைத்து
விடுவார்கள்
சூரல் நாற்காலியில்
அவர் அமர்ந்திருந்தார்
நெல் மணிகளைக் கொறிக்கும்
மைனாக்களைப் பார்த்தபடி
புத்தி பேதலித்தவர்கள் எல்லாம்
ஏன் ஒரே இடத்தை
வெறித்துப் பார்க்கிறார்கள்
மனிதர்களோடு அளவளாவ
விரும்பாதவரைப் போல்
முகத்தை வைத்துக் கொண்டிருந்தார்
துஷ்டி கேட்க
இப்போதெல்லாம் அவர்
எவருடைய வீட்டிற்கும்
செல்வதில்லை
இப்போது எங்கோ
கிளம்பிக் கொண்டிருக்கிறார்
துக்கம் நிகழாத வீட்டிலிருந்து
ஒரு பிடி மண்ணை
அள்ளி வர
கிளம்புகிறாரோ என்னவோ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன