விருட்சம் இலக்கியச் சந்திப்பு

அன்புள்ள நண்பர்களே,

வணக்கம்.

உங்களுடன் நவீன விருட்சம் ஏற்பாடு செய்த கூட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்று நினைத்தபோது, 2 வாரங்கள் கணினியின் மூளை மழுங்கிவிட்டது. கூட்டம் பற்றியும் அதில் கலந்துகொண்டவர்களைப் பற்றியும் கருத்தும், அவர்களுடைய புகைபடங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 16.08.2009 அன்று நடந்த கூட்டம் நவீன விருட்சம் நடத்தும் 51வது கூட்டம். நவீன விருட்சத்தின் கடைசிக் கூட்டம் 2003ல் நடந்தது.

ஒரு கூட்டத்தைப் பற்றி உடனே எழுதாவிட்டால், கூட்டத்தில் என்ன பேசினோம் என்பது மறந்தே போய்விடுகிறது. என் விஷயத்தில் இது இன்னும் மோசம். முக்கிய பேச்சாளர்களாக சிவக்குமாரும், ஞானக்கூத்தனும் கலந்து கொண்டார்கள். ஆள் சேகரிக்கும் கூட்டம் இல்லாததால் வருபவர்கள் வரட்டுமென்று விட்டுவிட்டேன். 25 பேர்கள் கலந்து கொண்டார்கள். இந்த 25 பேர்களும் முக்கியமானவர்கள். எல்லோரும் படைப்பாளிகள். பார்வையாளர்கள் என்பது படைப்பாளிகளாகவும், பார்வையாளர்களாகவும் மாறி மாறி தோற்றம் தந்தார்கள்.

இக் கூட்டம் தேவநேய பாவணர் மைய நூலகத்தில் 16.08.2009ல் மாலை 6மணிக்குமேல் நடைபெற்றது. முன்பு இக் கருந்தரங்கு அறையின் வாடகை ரூ.50. இப்போது ரூ.250. ஆனால் முன்பை விட புதிய பொலிவுடன் அறை காட்சி தந்தது. முக்கியமாக இக் கூட்டம் நடைபெற வேண்டிய இடம் அண்ணாசாலை. இங்கிருந்து எல்லா இடங்களுக்கும் போய்ச் சேர வசதியாக இருந்தது.

இக் கூட்டம் நடைபெறும் இடத்தைப் பதிவு செய்ய நான் பட்டப்பாடைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். கூட்டம் நடத்துவதற்கு இந்த தேதியில் இடம் உள்ளதா என்று கேட்க வேண்டும். பின் இந்த நேரத்தில் இந்தத் தேதியில் இடம் கிடைத்தால் உடனே பணம் கட்ட வேண்டும். பின் ஒரு கடிதம் எழுதி அக் கடிதத்தை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்திற்குச் சென்று அனுமதி பெற வேண்டும். கொஞ்ச நாட்களாய் பிரச்சினையாக இருப்பதால் போலீஸ் அனுமதி இன்றி கூட்டம் நடத்த முடியாது.

நான் என்னைப் பற்றியும் கொஞ்சம் விளக்க வேண்டும். 31 ஆண்டுகளாக ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிகிறவன். அலுவலகத்திற்குக் காலை 7.30 மணிக்குக் கிளம்பினால், இரவு சுமார் 7.30 க்கு வீட்டிற்கு வந்துவிடுவேன். அலுவலகத்திற்கு வந்தால் துணியைப் பிழிவதுபோல் பிழிந்துவிடுவார்கள். எளிதில் தப்பித்து வரமுடியாது. கூட்டத்தை எப்படி நடத்துவது? தேவநேய பாவணர் மைய நூலகத்திற்கு 5.30 மணிக்குள் சென்று எப்படி பணம் கட்டுவது. நான் பணிபுரியும் இடம் அஸ்தினாபுரம். கிட்டத்தட்ட குறைந்தபட்சம் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பவன். அங்கிருந்து வருவது என்பது அசாத்தியமான திறமை வேண்டும்.

யாராவது நமக்காக இந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு உதவி செய்வார்களா என்று எதிர்பார்த்தால், இந்தக் கூட்டத்திற்கு வந்த 25 பேர்களும் வர மாட்டார்கள். லாவண்யா என்ற இலக்கிய நண்பர் எனக்காக போய் பணம் கட்டிவிட்டு வந்தார். பின் நான் ஏதோ காரணத்திற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்று பல மணிநேரம் காத்திருந்தேன். அப்போதுதான் தோன்றியது ஏன் இதுமாதிரி கூட்டம் நடத்த வேண்டுமென்று.

போலீஸ்காரரிடம் நான் நடத்துவது இலக்கியக் கூட்டமென்றும், 50 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புதுக்கவிதைக்காக இக்கூட்டம் என்று கூறினேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. யார் முக்கிய புள்ளி கூட்டத்திற்கு வருகிறார்கள் என்று கேட்டார். நாங்கள் எல்லோரும் முக்கியப் புள்ளிகள் என்றேன் சிரித்துக்கொண்டே.

இப்படியெல்லாம் ஏற்பாடு செய்தபிறகு நான் கூட்டத்திற்கு யார் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. விரும்புவர்கள் வரட்டுமென்று இருந்துவிட்டேன். அல்லது கூட்டத்தில் பேசுபவர்கள், பின் நான் நிச்சயமாக வருவோம் என்று எண்ணியிருந்தேன். பின் கூட்டத்திற்கு 25 பேர்கள் வரை வந்துவிட்டார்கள். ‘எழுத்து’ பத்திரிகை தொடங்கி இன்றைய சிறு பத்திரிகைகள் பற்றி சிவக்குமார் உரை நிகழ்த்தினார். புதுக்கவிதையின் தோற்றம் பற்றி ஞானக்கூத்தன் பேசினார். பின் பலர் கவிதைகள் வாசித்தார்கள். எல்லாவற்றையும் காசெட்டில் பதிவு செய்திருப்பதால், என்ன பேசினார் என்பதை முடிந்தவரை எழுத முயற்சி செய்கிறேன்.
(இன்னும் வளரும்)

“விருட்சம் இலக்கியச் சந்திப்பு” இல் 3 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன