பிரிதலின் நிறங்கள் – மூன்று கவிதை

1.
யாருமற்ற அறையில்
மடியில் முகம் புதைத்த
ஒருத்தியின்
விசும்பல் சப்தம் கேட்கிறது.
மெல்ல மெல்ல உருவம்
பெறுகிறேன் நான்.
விசும்பலின் கரங்களை
பற்றிக்கொண்டு
கண்கள் மூடி லயித்திருந்த கணத்தில்
கதவைத் திறந்து
உள்நுழைகிறான் அந்நியனொருவன்.
விசும்பல் சப்தமும்
உருவம் தொலைந்த
நானும் காற்றில் கலந்து
மறைந்து போகிறோம்.
தன்
அறை அது என்றெண்ணியபடி
உடை களைந்து
சதைப்பசியுடன் நெருங்குகிறானவன்.

2.
புழுதிகளால் நிறைந்திருக்கிறது
நீ வசிக்கும் அறையின்
கண்ணாடி சன்ன்ல்கள்.
தூர வானின் நீலம்,
வெளிச்சமற்ற அறையின்
இருள்,
இரக்கமற்ற வார்த்தையின்
சிவப்பு என
உன் கண்ணீர்
மூன்று நிறங்களின்
கலவையாய் வழிந்தோடுகிறது.
நீயோ சலனமின்றி
சன்னல் புழுதியில்
என் பெயரை
எழுதிக்கொண்டிருக்கிறாய்.

3.
சாத்தானின் கைகளில்
தேவதை
உன்னை சேர்க்கிறார்கள்.
சில வருட தனிமைத்தவம்
உடைத்து வெளிவருகிறேன்
நான்.
சாத்தானும் தேவதையும்
சொர்க்கத்தில் மிதப்பதை
காண்கிறேன்.
சாத்தானை ஆசிர்வதித்து
தேவதையை சபித்து
கடவுளாகிறேன் நான்.

“பிரிதலின் நிறங்கள் – மூன்று கவிதை” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன