பூனைகள் பூனைகள் பூனைகள்

ஒரு பொருளை தயாரிப்பதுபோல, ஒரு தொழிலில் ஈடுபடுவதுபோல, கவிதையை உருவாக்க முடியுமா? கவிதை எழுதுவது தானாகவே வரவேண்டுமா? அல்லது பயிற்சி எடுத்துக்கொண்டு வர வேண்டுமா? முதலில் கவிதை எழுதுபவர்களுக்கு கவிதை மீது ஒருவித ஈடுபாடு வேண்டும். கவிதையை ரசிப்பதற்கு மனம் செல்ல வேண்டும். மேலும் எது சரியான கவிதை என்பதை அடையாளம் காணத் தெரிய வேண்டும். கவிதையை எங்கே எப்படி எழுத முடியும்? எழுதும்போது என்ன மனநிலை ஒருவருக்கு இருக்கும். கவிதை மனதிலிருந்து உருவாக்கியபிறகு வருமா? அல்லது அந்தச் சமயத்தில் என்ன தோன்றுகிறதோ அது கவிதையாக வருமா? ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்துக்கொண்டு கவிதை எழுத முடியுமா? கவிதையின் தலைப்பு கவிதை எழுதியபிறகு கிடைக்குமா? அல்லது தலைப்பே இல்லாமல் கவிதை உருவாகுமா? இதுபோன்ற பல விஷயங்களை கவிதைக் குறித்து நாம் யோசித்துக்கொண்டே இருக்கலாம்.

பின் எது நல்ல கவிதை? எது கவிதை இல்லை? இந்த ஆராய்ச்சிக்குப் போனால் கவிதை எழுதுபவர்களில் ஒருவருக்கு ஒருவர் சண்டை வந்து விடும். கவிதை எழுதுபவதைவிட அதை ரசிக்க மனம் வேண்டும். சமீபத்தில் என் அலுவலகத்தில் உள்ள ஒருவருக்கு ஒரு கவிதையை எடுத்துப் படித்துக் காட்டினேன். அடுத்த நிமிடம் அவர் என் பக்கத்திலேயே வந்து நிற்காமல் ஓடிவிட்டார். இது குறித்து யோசிக்கும்போது யார் கவிதையைக் கேட்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. பெரும்பாலோர் கவிதையை ரசிப்பதற்கு மனமில்லாமல் இருக்கிறார்கள். கவிதை எழுதுபவர்களுக்கு கவிதையை ரசித்துப் படிப்பதற்கு ஆளில்லாமல் போய்விட்டால் பெரிய துன்பமாக மாறிவிடும். பின் யாருக்காக எதற்கு எழுத வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். ஆனால் கவிதை ஒரு அற்புதமான விஷயம்.
முன்பெல்லாம் தினமும் மின்சார வண்டியில் மாம்பலம் ரயில்வே நிலையத்திலிருந்து கடற்கரை ரயில்வே நிலையம் வரை செல்லும்போது எதாவது ஒரு கவிதையை எடுத்துப் படித்துக்கொண்டு போவேன். அது ஒரு நல்ல அனுபவமாக எனக்குத் தோன்றும்.

ஒரு படைப்பாளியின் ஒரு கவிதைத் தொகுதியை நாம் எடுத்துப் படிக்கும்போது முழு புத்தகத்தை உடனே எடுத்துப் படிக்கக் கூடாது. கவிதைப் புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை மட்டும்தான் படிக்க வேண்டும். பின் படிப்பதற்கு கால அவகாசம் கொடுத்துவிட்டுப் படிக்க வேண்டும். ஒரு சிறுகதையை அப்படிப் படிக்கலாம். ஒரு நாவலை முழு மூச்சாகப் படிக்கலாம். ஆனால் கவிதை வாசிப்பதற்கு அவகாசம் தேவை. மேலும் ஒருவர் எழுதிய கவிதைகளையே முழுதாகப் படிக்காமல் வேறு வேறு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் படிக்கலாம்.

ஆரம்ப நிலையில் கவிதை எழுத வேண்டுமென்று நினைப்பவர்கள். எல்லோருடைய கவிதைகளையும் ரசிக்கும் பயிற்சியை முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். கவிதை எழுதுவதில் உள்ள நுணுக்கத்தையும், கவிதை மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இதெல்லாம் ஏன் சொல்ல வருகிறேனென்றால், பூனையைப் பற்றி யாராவது கவிதை எழுத வேண்டுமென்று நினைத்தால் கவிதை உடனே எழுத வந்துவிடும். பூனை ஒரு ஆன்மிக மிருகம். எளிதில் பழகவும் பழகாது. அதனால்தான் பூனையைப் பற்றி யார் எழுதினாலும் எப்படியும் அது கவிதையாக மாறிவிடும். இந்த ஆச்சரியம் எனக்கு பல நாட்கள் உண்டு. அதனால்தான் பூனையைப் பற்றி ஒரு தொகுப்பு கொண்டு வரலாமென்றிருக்கிறேன்.

இதைப் படிப்பவர்கள் யாராவது பூனையைப் பற்றி கவிதை எழுதியிருந்தால் எனக்கு அனுப்புங்கள். அல்லது நீங்கள் பூனையைப் பற்றி கவிதை வாசித்தால் உடனே அனுப்புங்கள். நான் பூனையைப் பற்றி மொத்தமாக ஒரு கவிதைத் தொகுதி கொண்டு வரும் எண்ணத்தில் உள்ளேன். நீங்களும் உங்கள் பங்குக்கு உதவி செய்யுங்கள்.

6.
பூனைப் பெருமாட்டி

குவளைக்கண்ணன்

சிறுவயது முதலே
அவற்றுடன் விளையாட்டுத் தோழமை கொண்டிருந்தாலும்
இளமையின் இறுதியில்
மனச் சோர்வினால் ஏற்படுத்திக்கொண்ட
தனி ஒதுக்கத்தின்போது
அவரது வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தவை
துரத்தத் துரத்த மடியில் ஏறி அமரும்
அவரைக் கடக்கும் போதெல்லாம்
மென்மயிர் போர்த்திய உடலால் உரசிச் செல்லும்
உணவுண்ணும்போது அருகில் அமர்ந்திருக்கும்
துயர் மிகுந்து அழும்போது
முத்தமிட வருவதுபோலக் கிட்டே வரும்
காலையில் விழிக்கும்போது
கால்களின்மேல் மெத்தெனப் படுத்திருக்கும்
இவ்வாறெல்லாம் ஆரம்பித்தது
பூனைகளுடனான நெருக்கம்
அவற்றைக் கூர்ந்து கவனித்தவர்
தனி ஒதுக்கத்திலிருந்து மீண்டு
பொதுவாழ்வில் ஈடுபடத் தொடங்கினார்
ஆக உயரங்களுக்குச் சென்றார்
அவரது திட்டமிடல் காத்திருப்பு பதுங்கல்
பாய்ச்சல் வேட்டை அலட்சியம்
இவை கண்ட மக்கள்
ஆயிரம் ஆண்களை அழித்து ஆண்டவன்
அவரைப் படைத்திருக்க வேண்டுமென்று பிரமித்தனர்
அடுத்து என்ன எனப் பயந்தனர் எதிரிகள்
அறிஞர்களுக்குப் புதிராக இருக்கும்
அவரது வெற்றியின் ரகசியம்
என்னவெனில்

(‘பிள்ளை விளையாட்டு’ என்ற தொகுப்பிலிருந்து எடுத்தது)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன