மொழி அதிர்ச்சி

”பிரச்சனெ பெரிஸ்ஸா ஒண்ணுமில்லீங்க.”

”பரவாயில்லெ, எதுவானாலும் சொல்லுங்க..அவங்களுக்கு என்ன பிரச்சினென்னு முழுஸ்ஸாத் தெரிஞ்சாத்தான் உதவி செய்யிறதுக்கு எங்களுக்குச் சுலபமா இருக்கும்.”

”கொஞ்ச நாளாவே சிடுசிடுங்கறது, எங்கிட்டே எரிஞ்சு விழுறது, கொழந்தைகங்களெப் போட்டு மொத்தறது இப்பிடியாயிருக்குதுங்க.  சமாதானப்படுத்துனாகூட கோபம் தணியிறதில்லெ..”
”வீட்டுலெ ஏதாச்சும் சிக்கலாச்சா?”

”சிக்கலுன்னு என்னெத்தெங்க சொல்றது?  கொஞ்ச நாளா யாபாரம் அவ்வளவு சொகமில்லீங்க.. ஒருவேளை அதனாலெதான் ரிலேக்ஸேஸனாயி ஒரு மாதிரி ஆயிட்டாளோன்னு நெனெக்கிறேன்.”

”என்ன ஆயிடுச்சின்னு சொன்னீங்க?”

”அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு என்ன வெவரம் வேணும்னு சொல்லுங்க..”
”சரி, நல்ல ஆழ்ந்து தூங்குறாங்களா?”

”தூங்குறா.  ஆனாக்க சில வேளெயிலே ரிலேக்ஸேஸனாயி ஒரே முட்டா யோசிக்க ஆரம்பிச்சிருவா..அண்ணிக்குப் படுக்கிறதுக்கு ரவெக்கி ஒரு மணி ரெண்டு மணி ஆயிரும்.”
”என்ன ஆச்சுன்னா தூக்கம் கெடுங்குறீங்க?”

”அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு கேளுங்க.”

”நல்ல ருசிச்சு வேளாவேளெக்கிச் சாப்பிட்றாங்களா?”

”அப்படிச் சொல்றதுக்கில்லீங்க..ஏதோ சாப்பிடும்..ஆனா ரிலேக்ஸேஸனாயிட்டா சாப்பாடு எறங்காது.”

”என்ன ஆயிடுச்சின்னா சாப்பாடு எறங்காதின்னீங்க?”

”அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு கேளுங்க..”

”குளிக்கிறதுலெ ஏதாச்சும் பிரச்சினெயிருக்கா?  தெனமும் நேரத்துக்குக் குளிக்கிறாங்களா?”

”குளிக்குது.  அதுலெ என்னாங்க இருக்கு?  ஆனாக்க சிலவேளே இந்த ரிலேக்ஸேஸன் ஆயிடுங்க.. அப்ப குளிக்காதுங்க..”

”என்ன ஆனா குளிக்கமாட்டாங்கன்னு சொன்னீங்க?”

”அது ஒண்ணுமில்லீங்க.. நீங்க மேக்கொண்டு கேளுங்க..”

”இவங்களுக்குத் தலையிலெ எப்பவாச்சும் அடிபட்டிருக்கா?”

”பலமா அடின்னு சொல்றதுக்கு ஒண்ணுமில்லீங்க..ஆனா இவ படுத்துற கூத்து தாங்கமாட்டாமெ எனக்கே ரிலேக்ஸேஸன் ஆயி ஒரு ருல் தடியெ எடுத்து அவ தலையிலே சிறுஸ்ஸா ஒரு போடு போட்டுட்டேங்க. ஒரு நாலு தையல் போட்டிருக்கு.  அவ்வளவுதாங்க..”

”ஒங்களுக்கு என்ன ஆச்சுன்னு சொன்னீங்க?”

”அது ஒண்ணுமில்லீங்க.  நீங்க மேக்கொண்டு கேளுங்க..”

”நா மேக்கொண்டு கேக்குறதுக்கு முன்னாடி ஒங்ககிட்டெ ஒரு உதவி கேக்கணும்..”

”எங்கிட்டெயா, நா ஒங்களுக்கென்ன உதவி செஞ்சிறப் போறேங்க?”

”அப்பிடிச் சொல்றதுக்கில்லே..ஒங்களெப் புரிஞ்சிக்கர்றதுக்கு நீங்கதான் உதவி செய்யணும்..”

”………………………….”

”நடுநடுவுலெ எனனமோ ஒரு வார்த்தெயெ உபயோகிச்சீங்க..அது என்னான்னு கொஞ்சஞ் சொல்றீங்களா?”

”அட, நீங்க ஒண்ணு..அது ஒண்ணுமில்லீங்க..”

”அப்பிடி நீங்க சொல்லக்கூடாது.  நீங்க அது என்ன வார்த்தைன்னு சொன்னாத்தான் நீங்க சொன்ன முழு வெவரமும் எனக்கு வெளங்கும்.  இல்லேன்னா இவ்வளவு வெவரம் சேகரிச்சும் பிரயோசமில்லாமெப் போயிரும்..”

”நா புரியாத எதெயும் சொல்லலீங்களே.”

”இல்லெ, சொன்னீங்க. இந்த ரிலேக்ஸஸன்னு ஏதோ அடிக்கடிச் சொன்னீங்க. இந்த வார்த்தெய வேறெ ஒரு அர்த்தத்துலெதான் எனக்குத் தெரியும்.. ஆனா நீங்க எந்த அர்த்தத்துலெ அதெச் சொன்னீங்கன்னு சொல்ல முடியுமா?”

”அதுங்களா? அது சும்மாங்க..இந்த பேண்ட் சட்டை போட்டுவிட்டு ‘டை’ யெல்லாம் கட்டிக்கிட்டு ஒயிலாச் சிகரெட்டுப் பிடிக்கிற மாதிரித்தானுங்க அதுவும்..”
”எனக்குச் சத்தியமாப் புரியல்லெ.”

”ஆமாங்க, இந்த இங்கிலீஷ் வார்த்தைக்கெல்லாம் என்னாங்க பெரிஸ்ஸா அர்த்தம் இருந்திறப் போறது?”

”என்ன ஒரேயடியா அப்படிச் சொல்லீட்டீங்க..”

”பெறகென்னாங்க..இங்கிலீஷ்லெ தஸ்ஸு புஸ்ஸுன்னு நாலு வார்த்தெ விட்றதெல்லாம் ஒரு ஸ்டைலுக்குத்தானுங்களே.  ரிலேக்ஸேஸனும் அதே மாதிரித்தானுங்க..சும்மா ஸ்டைலுக்கு நடுநடுவுலெ அங்கெ அங்கெ விட்டுக்கிர்றதுங்க.. இதுக்கெல்லாம் போயி நீங்க அர்த்தங் கேட்டுக்கிட்டு இருக்கீங்க?”

(அக்டோ பர் – டிசம்பர் 1991ஆம் ஆண்டு நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கதை)

 

ஜன்னல் வழியே

சம்பவம் 1 னக்கு வயிற்றுப்போக்கு கண்டிருந்தது. எங்கள் வீட்டின் அருகாமையில் இருக்கும் மருந்துக்கடைக்கு, என் பிரச்சினைத் தீர மாத்திரைகள் வாங்கச் சென்றிருந்தேன். கடையின் உரிமையாளர் நிவாரண மாத்திரைகளைத் தந்துவிட்டு, மிகவும் மென்மையாகவும், பொறுமையாகவும், “ஒரு முறை அவசரத்தில் ஐந்து ரூபாய் பெறுமானமுள்ள மாத்திரைகளை நீங்கள் வாங்கிச் சென்றது நினைவில் இருக்கிறதா?” என்று கேட்டார். அவர் பேசிய தொனி நலன் விசாரிப்புத் தொனி. எனக்கும் நினைவுக்கு வந்து நான் காசு கொடுத்தேன். பேருந்து நிறுத்தத்துக்குப் போக வேண்டுமானால் அந்தக் கடையைத் தாண்டித்தான் போக வேண்டும். எத்தனையோ முறை கடையைக் கடந்து சென்றிருந்தும் என்னை அழைக்காமல் கடைக்கு மீண்டும் சென்றபோதுதான் பாக்கி கேட்ட கடைக்காரரின் இங்கிதமும், பெருந்தன்மையும் என்னைத் தொட்டன.
சம்பவம் 2
நான் தேனீர் அருந்தும் கடையில் பீடி சிகரெட்டும் விற்கிறார்கள். ஒரு முறை ஒரு ரூபாய்க்குக் காஜா பீடி கேட்டபோது, கடையை நடத்திவரும் பெரியவர் ஐந்து பீடிகளைக் கொடுத்தார். ஒரு ரூபாய்க்கு நான்கு பீடிகள்தான். கூடுதலாகப் பெற்ற ஒரு பீடியைத் திருப்பித் தந்தேன். பெரியவர் மிகுந்த நன்றியுணர்வுடன் அதைப் பெற்றுக்கொண்டார். அடிப்படை நம்பிக்கைதான் உறவுகளின் அஸ்திவாரம் என்று நினைக்கத் தோன்றிற்று. சம்பவம் 3 ங்கோ வெளியே சென்று இரவு ஒன்பது மணி வாக்கில், கிடைத்த கட் சர்வீஸ் பேருந்தில் ஏறி அண்ணாநகர் மேற்கு நிறுத்தத்தில் இறங்கி, அங்கு என் வீட்டுக்குப் போகும் பேருந்துக்காகக் காத்திருந்தேன். நெரிசல் இருந்தால் நான் பேருந்தில் பயணம் செய்ய மாட்டேன். தோள்பையைச் சுலபத்தில் பிளேடு போட்டு அறுத்து விடுகிறார்கள். எனக்கு அந்த மாதிரி மூன்று முறை நடந்திருக்கிறது. மனம் இறுக்கத்துக்கு உள்ளாகியிருந்தது. பக்கத்தில் ஓர் ஆட்டோ வந்தது. “சாருக்கு எங்கே போகணும்?” என்று கேட்டார் ஓட்டுநர். நானும் சொன்னேன். “ஐந்து ரூபாய் கொடுங்கள், போதும்,” என்றார் அவர். அதே மாதிரி ஒரு பிராமணப் பெண்மணியையும் ஐந்து ரூபாயில் அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டார். பொதுவாக என் வீட்டருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு ரூ.15க்குக் கீழ் வர மாட்டார்கள். அதேபோல் அம்பத்தூர் தொழிற்பேட்டை என்றால் ரூ.35 க்குக் கீழ் வர மாட்டார்கள். ஓட்டுநர் பேசிக்கொண்டு வந்தார். தான் வீட்டுக்குப் போய்க்கொண்டிருப்பதாகவும் வழியில் ஓரிருவருக்கு ஓர் உதவியாகக் குறைந்த கட்டணத்தை வசூலிப்பதாகவும் சொன்னார் அவர். இதனால் அவரைச் சக ஆட்டோ ஓட்டுநர்கள் திட்டுவதாகவும் அதை அவர் பொருட்படுத்துவதில்லை என்றும் சொன்னார். அந்த ஆட்டோ ஓட்டுநரின் உபகாரம் என் மனதைத் தொட்டது.
சம்பவம் 422.12.2002 (ஞாயிறு) நவீன விருட்சம் ஏற்பாடு செய்த ஆத்மாநாம் இலக்கியக் கூட்டம். ஆத்மாநாம் கவிதைகள் குறித்துக் கலந்துரையாடல். உடல்நலம் பாதிப்படைந்ததால், கலந்து கொள்ள முடியாமல் போனது. கூட்டம் மாலை 4 மணிக்கு. இரண்டு மணி வாக்கில் மூச்சிரைப்பு அதிகரித்து விட்டது. அதையும் மீறிக் கூட்டத்தில் கலந்து கொண்டால், ஒருகால் நான் பிற நண்பர்களுக்கு ஒரு சுமையாக ஆகியிருப்பேன். ஆத்மாநாம் மீது நான் பெரும் மதிப்பு கொண்டவன். கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமல் போனது அவருடைய நட்புக்கு நான் செய்த துரோகம் என்று நினைக்கத் தோன்றிற்று. இந்த உணர்வு எனக்குள் ஏற்கனவே இருக்கும் மனச்சோர்வை அதிகப்படுத்தியது. என்னையே நான் சபித்துக்கொண்டேன்.