விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்…!




காலை வணக்கத்தில் தனம் சங்கீதா முற்பகல் பேட்டியொன்றில் கேரளத்துப் பாவ்னா பிற்பகல் பேட்டியில் பேரிளம்பெண் நமீதா மாலைத் திரைப்படத்தில் மறுபடியும் நமீதா கும்கும் குமரிகளின் குளுகுளு பேட்டிகளும் குத்தாட்டப் பாட்டுக்களும் பிரம்மச்சாரி பிள்ளையார்க்கு பெருங்குஷிதான்! பேரின்பம்தான்!

வனச்சிறுவனின் அந்தகன்

சூழ்ந்த நீருக்குள் மீனென அறியப்பட்டதை செவிட்டூமை அந்தகனுக்குணர்த்திடும் படி மிகக்கடின பணியொன்று வனச்சிறுவனுக்கிடப்பட்டது
எந்தக் கொம்பிலும் ஏறித் தேனெடுப்பவன் கொடிய விலங்கினையும் தனியே வேட்டையாடி ராசாவுக்குத் தோல்/ள் கொடுப்பவன் வனாந்தரத்தின் அத்தனை மூலைகளுக்கும் அமாவாசை நிசியிலும் அச்சமின்றிப் போய்வருபவன் முதன்முதலில் அயர்ந்து நின்றான் கட்டளையை மறுக்க வழியற்றும் மேற்கொண்டு ஏதும் செய்யும் நிலையற்றும் விதிர்த்து நின்றான்
செய்வதறியாச் சிறுவன் நடுங்குமந்தகனின் விரல்கள் பிடித்து வனத்தின் மத்திக்கு வழிகூட்டிப் போனான் அல்லிப் பெருங்குளத்தினுள்ளவன் கரங்களை நுழையச் செய்திவன் ‘தண்ணீர்’ என்றான் காலங்காலமாய்க் கடந்துவந்த வாழ்வின் சோர்வு தீரவெனவோ வற்றாத் தேகத்தின் எல்லாத்தாகங்களுந் தீரவெனவோ கரங்களைக் குழிவாக்கி உள்ளங்கையில் நீரேந்தி அள்ளியள்ளிக் குடித்தான் அந்தகன் சிறுவனின் பார்வைக்கு மட்டுமென நீரின் எல்லாச் சுழிகளிலும் நழுவி நீந்தின வண்ண வண்ண மீன்கள்
கற்றுக் கொடுக்கவேண்டிய கால எல்லை முடிந்ததெனச் சொல்லி அரச பரிவாரங்கள் சேதியனுப்பிய நாளில் விடியலின் கீற்றுக்கள் மலைகளின் கீழால் புதையுண்டு போக விருட்ச இலைகள் நீரைச் சிதறிட மழை தூவிற்று
வீற்றிருந்த அரசனை முன்னிருத்தி செவிட்டூமைக் குருடனை மீன்கள் பற்றிக் கேள்விகள் கேட்டான் மந்திரி தாமரைக்குளத்துத் தண்ணீரில் எண்ணங்கள் மிதக்குமவனது மொழிபெயர்ப்பாளனாகி எல்லாக் கேள்விகளுக்கும் மிகச் சரியாய்ப் பதில் சொன்னான் வனச்சிறுவன்

நட்சத்திரங்கள் பூத்த இரவொன்று

நட்சத்திரங்கள் பூத்த இரவொன்று
சில்லிட்டு காத்திருக்கிறது…
சப்தமின்றி விரைகின்றன
நிலழடுக்குப் பறவைகள்
கருநீல வானில்
அசையும் சித்திரங்களாய்.
பந்தெனச் சுழலும்
உணர்வுக் குவியல்களை
உயர எறிகிறேன்
உயிர் சினக்க.
அவையோ
பறவைகளோடு பயணித்து
அயர்ந்த வேளை
திரும்பி வீழ்கின்றன
பனித் துளிகளாய்.
செய்வதறியாமல்
திகைக்கும் வேளையில்
உள்ளீடற்று
கரையத் துவங்குகின்றன
மனத் துகள்கள்
இருள் உருகும்
இந்நிசப்த பரப்பில்…

கவிஞனென்றானதெல்லாம்

அறிந்துகொள்ள ஆசைப்பட்டுத்தான்அறிந்து கொண்டது
தெரிந்துகொள்ளத் தலைப்பட்டுத்தான்தெரிந்துகொண்டது
புரிந்துகொள்ள பிரயாசைப்பட்டுத்தான்புரிந்துகொண்டது
அறிந்தது தெரிந்தது புரிந்ததுஅத்தனையும் சேரத்தான் கவிஞனென்றானதே
கவிஞனென்றானதெல்லாம் நன்றோ தீதோகர்மவினைதான் போடி
அமர்
மெய்ப்பு பார்ப்பவனில்லை
புஸ்தக மதிப்புரையாளனில்லை
பத்திரிகையாளன்இல்லை
கருத்துரையாளன்இல்லை
பேச்சாளன் அல்லன்
பத்தி எழுத்தாளன்அல்லன்
கட்டுரையாளனோ விமர்சகனோ கூடஅல்லன்
சிறுகதை ஆசிரியனோ புதின ஆசிரியனோ கூடஅல்லன்
கவிஞன் அவனுக்காககாத்திருக்கின்றன கவிதைகள்

தாத்தா தந்த கடிகாரம்



குமரி எஸ். நீலகண்டன்
எனது தாத்தா இறக்கும் முன் ஒரு நாள் அவரது ஓடாத பழைய கடிகாரத்தை எனக்கு பரிசாக தந்துவிட்டு போனார்.
தாத்தாவின் இதயம் துடிக்கும் அதை நான் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன்.
உலகம் போற்றும் அந்த சிற்பி தற்போது புதிதாய் கவிதை எழுத துவங்கி இருக்கிறார் கவிதை பக்கம் செல்லாதவர்களும் தற்போது அவரது கவிதையைப் புகழ்ந்து போற்றுகின்றனர். கவிதையே போடாத பத்திரிகைகளும் தற்போது அவரது கவிதைக்காக ஒரு பக்கம் ஒதுக்கி உள்ளன.
நான் தற்போது அந்த கவிதைகளையெல்லாம் ஒரே ஒரு தடவை மட்டும் படித்துவிட்டு தாத்தா தந்த அந்த கடிகாரத்தின் அடியில் வைத்து பாதுகாத்து வருகிறேன்
குமரி எஸ். நீலகண்டன்

எதையாவது சொல்லட்டுமா / 25

சில தினங்களுக்கு முன் ஒரு கனவு வந்தது. அதில் ஸ்டெல்லா புரூஸ் வந்திருந்தார். ஆகஸட் 8ஆம் தேதி அவர் பிறந்தநாள். நான் அவரைப் பற்றி எழுதியிருந்தேன். அந்தக் கனவில் அவர் வேறு ஒரு இடத்திற்குப் போகப்போவதாக குறிப்பிட்டார். அவருடைய மனைவியையும் பார்த்தேன். பொதுவாக சமீணபத்தில் எனக்கு கனவுகள் வருவதில்லை. கனவு காண்பதும் பிடிக்காது. (அப்துல்கலாம் சொல்லும் கனவு இல்லை இது). பின் கனவும் நிஜமாக நடந்ததுபோல் ஒருவிதத் தோற்றத்தைக் கொடுக்கும். நம்முடைய நினைப்புதான் கனவாக மாறிவிடுகிறதா என்றும் தோன்றும். அப்போதுதான் ஸ்டெல்லா புரூஸ் பற்றி இன்னும் எதாவது சொல்லாமல் இருந்து விட்டேனா என்றும் தோன்றியது. எழுந்தவுடன் அவருடைய கவிதைகள் ஞாபகத்திற்கு வந்தது. காளி-தாஸ் என்ற பெயரில் அவர் ழ, விருட்சத்தில் கவிதைகள் பல எழுதி உள்ளார். நானும் நானும் என்ற பெயரில் கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளோம். அவர் கவிதைகள் சிலவற்றை எடுத்து இந்த blogல் அளிக்கலாம் என்று தோன்றியது. ஒரு கவிதையைக் கொண்டும் வந்துவிட்டேன். இன்னும் சில கவிதைகளை அப்படி கொண்டுவர உத்தேசம்.
ஒருமுறை கனவுகள் பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, கனவுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று நினைப்பேன். அந்த நண்பர் கனவுகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர். ஒவ்வொரு கனவிற்கும் எதாவது அர்த்தம் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒவ்வொருநாளும் நிஜமான நிகழ்ச்சிகளே கனவுபோல் தோன்றும். ஞாயிற்றுக்கிழமை சென்னையை விட்டு இங்கு வந்தவுடன், சென்னையில் இருந்ததே கனவுபோல் தோன்றும். நடந்த நிகழ்ச்சிகளை திரும்பவும் அசை போடும்போது அவை கனவுகளாக மாறிவிடுவதுபோல் தோன்றும். ஸ்டெல்லா புரூஸை நான் நிஜமாக பார்த்த நிகழ்ச்சிகள் எல்லாம் இப்போது கனவாக மாறி விட்டன. இப்போதுதான் ஞாபகம் வருகிறது. ஒருமுறை அவருக்கு அலுவலகம் வந்தபிறகு இரவு நேரத்தில் போன் செய்தேன். அப்போது தனியாக நான் மயிலாடுதுறையில் இருந்தேன். போனில் அவர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை உருக்கமாகச் சொன்னவர். ஏதோ சத்தம் கேட்டதுபோல் தோன்றியது. போனை கட் செய்யாமல் வைத்துவிட்டுப் போய்விட்டார். அந்த நிகழ்ச்சி எனக்கு திகைப்பாக இருந்தது. அன்று எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. இது நிஜமா கனவா? நிஜத்தில் கனவு?
நிஜம் கனவை விட மோசமான நிகழ்ச்சியாக மாறுவதைப் பார்த்திருக்கிறேன். ஒருமுறை தி நகரில் உள்ள பாலம் வழியாக வண்டியில் என் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். எங்கிருந்தோ வந்த ஒரு காகம்என் வண்டி மீது மோதி தரையில் பலமாக வீழ்ந்து இறந்து விட்டது. இது மாதிரி சம்பவம் குறித்து எனக்கு வருத்தமாக இருந்தது. இது ஏதோ மோசமான சம்பவத்தைக் குறிப்பதுபோல் எனக்குத் தோன்றியது. ஆனால் மறுநாள் திருநாவுக்கரசு என்ற அதிகாரி ஒருவர் அலுவலகத்திற்கு வந்துவிட்டு, உடல்நிலை சரியில்லை என்று வீட்டிற்குச் சென்றவர், மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். நானும் அவரும் பக்கத்தது பக்கத்து சீட்டில் அமர்ந்து பணி புரிபவர்கள். ஒரு சம்பவத்திற்கும் இன்னொரு சம்பவத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஆனால் மனம் முடிச்சுப் போட்டுக்கொண்டே இருக்கும்.ஒரு விஷயத்தைத் தீவிரமாக யோசித்தால் அது கனவாக மாறி நமக்கு எதாவது அர்த்தம் சொல்வதாக தோன்றுகிறது. வெறும் நினைவின் நீட்சிதான் கனவு. அப்படி சொல்வது சரியாக இருக்குமா? சமீபத்தில் நான் ஒரு தேர்வு எழுதி உள்ளேன். அந்தத் தேர்வின் ரிசல்ட் இன்னும் வரவில்லை. அதற்குள் என் கனவில் லிஸ்ட் வருவதுபோலவும் அந்த லிஸ்டில் என் பெயர் இல்லாததுபோல் கனவு கண்டேன். (இதை டைப் அடித்துக்கொண்டிருக்கும்போது, லிஸ்ட் வரவில்லை. ஆனால் இன்று (03.09.2010) லிஸ்ட் வந்து விட்டது. உண்மையில் என் பெயர் இல்லை.) என் பெரியப்பா ஒருவர் பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் படுத்துக் கிடந்தார். ஒருநாள் காலையில் நான் ஒரு கனவு கண்டேன். அவர் வாயில் அரிசி போடுவதுபோல். எனக்கு திகைப்பாக இருந்தது. காலையில் பெரியப்பா வீட்டிலிருந்து போன். அவர் இறந்து விட்டதாக.
இன்னொரு கனவு. ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி. அவர் எங்கோ சென்று விட்டு, காரிலிருந்து இறங்குகிறார். அப்போது யாரோ அவரைப் பார்த்து சுடுகிறான். இந்தக் கனவின் அர்த்தம் எனக்கு சில மாதங்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. அவர் கான்சர் நோயால் பாதிப்படைந்து மரணம் அடைவதைத்தான் அந்தக் கனவு சுட்டிக் காட்டியதாக நினைத்தேன்.
ஸ்டெல்லாபுரூஸ் பற்றி இன்னொரு கனவு. ரொம்ப வருடங்கள் முன்பு நான் கண்ட கனவு. இதை அவரிடம் சொன்னதுகூட கிடையாது. அவருக்கு தாமதமாகத்தான் திருமணம் நடந்தது. திருமணம் செய்து கொண்டேன் என்றுதான் அவர் மனைவியை எங்களுக்கெல்லாம் அறிமுகப் படுத்தினார். ஆனால் என் கனவில் அவர் மனைவி ஒரு பட்டுப்புடவை அவரிடமிருந்து வாங்கிப் பிரிப்பதுபோலவும் அப் புடவையில் ஒரு பகுதி கிழிந்திருப்பதுபோலவும் தெரிகிறது. சொன்னால் வருத்தப்படுவார் என்பதால் சொல்லவில்லை.
என் நெருங்கிய உறவினரின் பையன் ஒருவன் நிச்சல் கற்றுக்கொள்ளும் இடத்தில் மரணம் அடைந்துவிட்டான். இது பெரிய துக்கமாக இருந்தது. கொஞ்ச நாட்களாக அந்தப் பையனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் கனவில் அந்தப் பையன் வந்தான். அவன் ஓர் இடத்தில் தினசரி தியானம் செய்து கொண்டிருக்கிறான். நெற்றியில் விபூதிப் போட்டிருந்தான். அவனைக் கூப்பிடுகிறேன். ஆனால் அவன் எழுந்து வராமல் இருக்கிறான்.
என் பிறந்த தினம் போது யாரும் என்னைக் கூப்பிட்டு வாழ்த்துவதில்லையே என்று ஒவ்வொரு முறையும் பிறந்த நாள் போது நினைப்பதுண்டு. ஒருமுறை கனவில் என் பாட்டி என்னை வாழ்த்தினாள். அதை நினைத்து அன்று முழுவதும் எனக்கு திகைப்பாக இருந்தது.
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பயப்படும்படியான கனவுகள் பலவற்றை கண்டிருக்கிறேன். ஒரு கனவில் டிரெயின் கிளம்பி வேகமாகப் போய்க்கொண்டிருக்கும் அதைப் பிடிக்க எத்தனிப்பேன். முடியாது. என்னைச் சுற்றிலும் கோவில் கோவிலாக இருக்கும். எந்தப் பக்கம் திரும்பினாலும் கோவில் கோபுரம். பயமுறுத்துவதுபோல். தி.நகரில் முப்பத்தம்மாள் கோயில் உள்ள தெரு முனையில் ஒரு பப்ளிக் டாய்லட் இருக்கும் அந்த டாய்லட்டில் நானும், நடிகர் அமிதாப்பச்சனும் யூரின் போவதுபோல் ஒருமுறை கனவு. அந்தக் காலத்தில் இந்தி சினிமாவில் எனக்குப் பிடித்த நடிகர் அமிதாப்பச்சன்.
நான் ஒரு Flat வாங்கினேன். 406 சதுர அடிகள்தான். குளிக்க பாத்ரூம் போக சமையல் அறை வழியாகத்தான் போக வேண்டும். சமையல் அறை அவ்வளவு குறுகல். ஏமாந்து வாங்கிவிட்டேன். பல நாட்கள் தூக்கம் வரவில்லை. அப்போது ஒரு கனவு. சமையல் அறை ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு தாய் குரங்கும், குட்டிக் குரங்கும் இருப்பதுபோல்.இன்னும் பல கனவுகள். சில மட்டும் ஞாபகத்தில். என் எழுத்தாள நண்பர்களும் அவரவர் கனவுகளை என்னிடம் கூறி உள்ளார்கள். பிரமிள் சொன்ன கனவு ஒன்று என் ஞாபகத்திற்கு வருகிறது. அவர் காந்தி கடற்கரையில் (சென்னை) சிமெண்ட் பெஞ்சில் படுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது அவரை யாரோ தாக்க முயற்சி செய்கிறார்கள். தலையில் முண்டாசுடன் கையில் நீண்ட வாளுடன் ஒருவர் காப்பாற்ற வருகிறார். தாக்க வந்தவர்கள் ஓடிப் போய் விடுகிறார்கள். அவரைக் காப்பாற்றியவர் வேறு யாருமில்லை. சிரூடி சாய்பாபாதான். பிரமிள் இந்தக் கனவு காணும்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். தினம் தினம் நடக்கும் வாழ்க்கையே ஒரு கனவுபோல்தான். நம் முன்னால் சில காட்சிகள் தென்படுகின்றன. அந்தக் காட்சிகள் பின் கனவுகளாக மாறி விடுகின்றன.

நான் பிரமிள் விசிறி சாமியார்…..14

நான் இந்தத் தொடரை எழுதவே மறந்துவிட்டேன். இப்போது திரும்பவும் ஆரம்பிப்பதற்குள் என்ன எழுதினேன் என்பதை நினைவுப் படுத்திக்கொள்ள வேண்டும். திரும்பவும் நான் எழுதியதை எடுத்துப் படிக்க வேண்டும். ஏனென்றால் சொன்னதையே திரும்பவும் சொல்லக்கூடாது. ஆத்மாநாம் இரங்கல் கூட்டத்தின்போது பிரமிள் கலந்துகொண்டு பேசியதை எழுதியிருந்தேன். அதில் சில தகவல்களைக் கூறியிருந்தேன். அந்தத் தகவல்களில் சிலவற்றை நான் மறந்து விட்டேன். வங்கியில் பணிபுரிவது ஒரு பக்கம் இருந்துகொண்டாலும், பல படைப்பாளிகளைச் சந்தித்துப் பேசுவது என் பொழுதுபோக்கு. பொழுதுபோக்கு என்று சொல்வதைவிட உபயோகமான விஷயம். இப்போதெல்லாம் அதுமாதிரி நடப்பதில்லை. முன்பு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் வருவது எளிதான விஷயம். பார்க்கலாம். பேசலாம். திரும்பவும் போய்விடலாம். பிரமிள் எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்றுவிடுவார். அவர் நுங்கம்பாக்கம் ஹைரோட் வழியாக நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
நானும் அவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அப்படி சந்தித்துக்கொள்ள முடியாவிட்டால், இவரை ஏன் சந்திக்க முடியவில்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்படும். அடிக்கடி ஒருவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராமல் அவரைச் சந்திக்காமல் இருந்தால் இதுமாதிரி தோன்றும். இப்போதுள்ள செல்போன் வசதி அப்போது இல்லை. பிரமிளை பெரும்பாலும் என் அலுவலகக் கட்டிடத்தில் மதியம் உணவு உண்ணும் வேளையில் சந்திப்பேன். அவருக்கு எதாவது சாப்பிட வாங்கிக்கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இப்படி அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது வேறு எழுத்தாள நண்பர்களையும் நான் சந்திப்பேன். பிரமிளுடன் நான் பேசிக்கொண்டிருக்கும்போது, ரா ஸ்ரீனிவாஸனை சந்தித்து விட்டேன். இந்தத் தகவலை நான் எழுதியிருக்கிறேன் மேற்படி ஆத்மாநாம் இரங்கல் கட்டுரை எழுதியபோது. இதில் என்ன சிக்கல் என்றால், பிரமிள் தமக்குப் பிடித்தமானவர்களை மட்டும்தான் பார்ப்பார் .இயல்பாகப் பேசுவார். இது அவருடைய சுபாவம். ரா ஸ்ரீனிவாஸனைப் பார்த்தபோது அவர் ஞானக்கூத்தனுடன் தொடர்புப் படுத்திக்கொண்டு விட்டார். இது பிரச்சினை ஆகிவிட்டது. நான், ஸ்ரீனிவாஸன், பிரமிள் மூவரும் கான்டினில் டிபன் சாப்பிடச் சென்றபோது, பிரமிள் உரத்தக் குரலில், ‘நான் அப்படித்தான் மூச்சு விடுவேன்…பிறர் மேல் மூச்சு விடுவேன்..’ என்ற சத்தமாகக் கூறினார். இது நான் எதிர்பாராதது. ஏன்எனில் என்னுடன் தனிமையில் இருக்கும்போது இதுமாதிரியெல்லாம் வெளிப்படுத்த மாட்டார். ஸ்ரீனிவாஸனைப் பார்த்தவுடன் அதுமாதிரி பேச ஆரம்பித்து விட்டார். ஞானக்கூத்தன் கவிதை ஒன்றில் எனக்கும் தமிழ்தான் மூச்சு ஆனால் பிறர் மேல் விட மாட்டேன் என்று எழுதியிருப்பார். பிரமிளுக்கு ஸ்ரீனிவாஸனைப் பார்த்தபோது அவர் ஞானக்கூத்தன் கட்சியைச் சேர்ந்தவர் என்று எண்ணிவிட்டார். உண்மையில் அப்படியெல்லாம் கட்சி கிடையாது. எல்லோரும் கவிதைகள் எழுதத் தெரிந்தவர்கள். அவ்வளவுதான். மேலும் ஸ்ரீனிவாஸன் பிரமாதமாக பல கவிதைகளை எழுதியிருக்கிறார்.
இந்த இடத்தில் நான் தவறாக முந்தைய கட்டுரையில் எழுதிவிட்டேன். பிரமிளைப் பார்த்தவுடன் ஸ்ரீனிவாஸனுக்கு சங்கடம் ஏற்பட்டு விட்டது என்று. உண்மையில் அந்தச் சங்கடம் எனக்குத்தான் என்று எழுதியிருக்க வேண்டும். இந்தத் தவறை ஸ்ரீனிவாஸன் சுட்டிக் காட்டி உள்ளார். மேலும் சாப்பிட உட்கார்ந்தபோது பிரமிள், ஞானக்கூத்தனை ‘ஞானக்கூத்தன்…கேனைக்கூத்தன்’ என்று குறிப்பிட்டதாக ஸ்ரீனிவாஸன் என்னிடம் கூறி உள்ளார். இது எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஸ்ரீனிவாஸன் இது குறிப்பிட்டு உங்கள் கட்டுரையில் இதைக் குறிப்பிட வேண்டும் என்று கூறி உள்ளார். அவரே இந்தத் தவறை சுட்டிக்காட்டி எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நான் பழகிய நண்பர்களில் பிரமிள் ஒருவிதம் என்றால் ஸ்ரீனிவாஸன் இன்னொரு விதம். பிரமிள், ஸ்ரீனிவாஸனை ஒருசேர பார்த்தபோது நான் சங்கடப் பட்டது உண்மைதான். ஆனால் அதுமாதிரி நிகழ்ச்சி இப்போது ஏற்பட்டால் சங்கடப் பட்டிருக்க மாட்டேன்.
அதன்பின் பிரமிள் ஸ்ரீனிவாஸனை என் அலுவலகத்தில் பார்க்கும்போது, ‘உங்கள் நண்பர் வந்துவிட்டார்..நான் போகிறேன்…’ என்று ஓட்டமாய் ஓடிவிடுவார். அன்று ஸ்ரீனிவாஸன் பிரமிள் சொன்னதைக் கேட்டு வெறுமனே புன்னகைத்துக் கொண்டாரே தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை.

”காலம்”

யாரோ காலமானார் என்ற செய்திஎன் எதிரில்நட்சத்திரமாகத் தொங்குகிறதுகாலமென முதலில் உணர்ந்தவன்கபாலச் சூடு பொரியும்ஆண்மை நிறைந்தவனாக இருந்திருப்பான்சில சமயத்தில் தோன்றுகிறதுகாலம் நிர்ணயிக்கப் பட்டிருப்பது போலஆனால் பற்ற முடியாமல்நழுவிப் போகிறது.எங்கேயோ காத்திருக்கிறதுகாதலுடன் மெளனம் சாதிக்கிறதுகாலம் காலமாகக்கடல் ஒலிக்கிறது வெற்றுவெளியில் மேசம் சஞ்சரிக்கிறது கனத்தகாலப் பிரக்ஞையை எனக்குள் விதைத்துவிட்டார்கள். எவ்வளவோ காலம்கடந்தும் அறிந்துகொள்ள என்னவென்றுஅது – முளைக்கவே இல்லை. ஆனால்விலகாத கிரஹணமாக என்எதிரில் தொங்கிக்கொண்டே தானிருக்கிறதுயாரோ காலமான செய்திநானும் ஒரு காலத்தில்காலமாகி விடுவேனோ என்பதில்மட்டும் முளைத்து விடுகிறபயம்சொட்டுச் சொட்டாய் உதிரக்காத்திருக்கிறது – காலம் வராமல்….

(ஆகஸ்ட் 8ஆம் தேதி ஸ்டெல்லா புரூஸ் பிறந்த நாள். காளி-தாஸ் என்கிற பெயரில் அவர் பல கவிதைகள் எழுதி உள்ளார். அவருடைய எல்லாக் கவிதைகளையும் தொகுத்து விருட்சம் வெளியீடாக காளி-தாஸ் கவிதைகள் என்று கொண்டு வர உள்ளேன். எளிமையான வரிகள் கொண்ட ஆழமான கவிதைகள். இக் கவிதை பிரசுரமான ஆண்டு ஜனவரி 1979. இன்னும் சில கவிதைகளையும் இங்கு கொடுக்க விருப்பம்)

இலை மொழி


முதிர்வில்
இலை
தன் அடையாளத்தை
அகற்றிக் கொள்கிறது
ஆங்காங்கு
தெரியும்
நரம்புக் கோடுகள்
கண்களை
மூடிக் கொண்டாற்
போலொரு தோற்றம்
வண்ணத்து பூச்சியும
அண்டா விலக்கம்
பூமியின் பரப்பை
நோக்கி
நாளும் குவிந்திடும்
உயிர் இயக்கம்…
போகிற போக்கில்
இலைகளைக்
கிள்ளிச் செல்லும்
மனிதக் கரங்களூடே
நழுவிச் செல்கின்றன
மரணம் குறித்த
இயற்கையின்இலை வார்த்தைகள்…

எதையாவது சொல்லட்டுமா / 24

தினமும் காலை 9 மணி சுமாருக்கு, மயிலாடுதுறையிலிருந்து பஸ்ஸில் கிளம்பி சீர்காழிக்குச் சென்று வருவேன். சீர்காழியிலிருந்து திரும்பவும் வீடு வந்து சேர மணி 9 மணிமேல் ஆகிவிடுகிறது. சில சமயம் பத்தைத் தொட்டு விடுகிறது. இதுமாதிரியான வேலை கடுமையை நான் இதுவரை பார்த்ததில்லை. சுருக்கெழுத்தாளராக நான் சென்னையில் இருந்த காலம் பொற்காலம்.
எந்தத் தப்பை யார் செய்துவிடுவார்களோ என்ற பதைபதைப்போடு இருக்க வேண்டி உள்ளது.
பெரும்பாலும் என் அலுவலக நண்பர் அறிவானந்தமும் நானும் சேர்ந்துதான் வருவோம். அவரைப் பார்க்கும்போது பெரும்பாலும் சோர்வாக இருப்பார். நானும் அவரும் energy எல்லாம் தீர்ந்துபோய் வற்றிப் போய் வருவோம். வங்கியில் பணிபுரியும் பெரும்பாலோருக்கு தொடர்ந்து அதில் பணிபுரிய விருப்பமில்லை. இதில் தப்பிப்பவர்கள் க்ளார்க்காகப் பணிபுரிபவர்கள். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு இருக்க மாட்டார்கள். எந்த வேலையாக இருந்தாலும் அப்படியே வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். கொஞ்ச வேலை பளு அதிகமாக இருந்தால் முணுமுணுப்பார்கள். சண்டைக்கு வருவார்கள். ஆனால் 5 மணிக்குமேல் அவர்களை இருக்கச் சொல்லமுடியாது.
முன் யோசனை எதுவுமின்றி 2004ல் நான் இப்படி மாட்டிக்கொண்டேன். இதனால் எந்தப் பயனுமில்லை என்பதோடல்லாமல் எல்லாவித அவமரியாதையும் பெற்றுக்கொண்டேன். இதைப் பற்றி நான் எழுத ஆரம்பித்தபோது இதைப் பற்றியே நான் எழுதிக்கொண்டிருந்தேன். இப்படி சில கவிதைகளையும் கதைகளையும் எழுதிப் பார்த்துக்கொண்டேன். என் எழுத்தைப் படித்த சிலருக்கு என் மீது இரக்க உணர்ச்சியே ஏற்பட்டது. சிலருக்கு அலுப்பாகவும் இருந்திருக்கும்.
சரி இது இப்படியே எத்தனை நாட்கள் போகுமோ போகட்டுமே என்று நினைக்கத் தொடங்கி விட்டேன். என்ன எந்த விஷயம் நடக்க வேண்டுமென்றாலும் யாரையாவது நம்ப வேண்டி உள்ளது. தனியாக இருப்பதால் வீட்டிற்கு தினமும் போன் பண்ண வேண்டியுள்ளது. நான் நடத்தும் விருட்சம் தடுமாற்றம் அடைகிறது. இலக்கிய நண்பர்களைப் பார்க்க முடியவில்லை. பேசவும் முடிவதில்லை. ஜெயமோகன் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டதாக இந்துவில் படித்தேன். அவருக்கு சினிமா இருக்கிறது. என்னால் வேலையை விட முடியாதுதான் என்று தோன்றுகிறது.
பஸ்ஸில் சென்று கொண்டிருப்பதால் எத்தனையோ விதமான மனிதர்களை தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அன்று அப்படித்தான். அலுவலக வேலையை முடித்துவிட்டு நானும் அறிவானந்தனும் கொள்ளீட முக்கில் நின்றிருந்தோம். ஒரு பஸ் வந்தது. இந்த பஸ்ஸில் ஏறவேண்டாம் என்றார் அறிவானந்தன். ‘சீட்டெல்லாம் காலியாக இருக்கிறது,’ என்றேன். ஏனோ தடுத்துவிட்டார். அடுத்த பஸ்ஸில் ஏறினோம். சீர்காழி புது பஸ் ஸ்டாண்ட் வந்தவுடன், ஒரு பெரியவர் பஸ்ஸில் ஏறினார். ஒரு கம்பு வைத்திருந்தார்.. நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தார். என் பக்கத்து சீட் இளைஞர் எழுந்து அந்தப் பெரியவருக்கு இடம் கொடுத்தான். பெரியவர் என் பக்கத்தில் அமர்ந்தார். தலையில் முண்டாசு கட்டியிருந்தார். சட்டைப் பொத்தான்களைப் போடாமல் இருந்தார். கண் தெரியவில்லை. காதும் கேட்கவில்லை.
”என்ன வயது?” ”84” ”ஏன் இந்தத் தள்ளாத வயதில் பஸ்ஸில் வருகிறீர்கள்?” ”என்ன பண்றது? பையன் யாரையோ இழுத்துக்கொண்டு வந்துட்டான். வச்சுக்க மாட்டேங்கறான்..” ”வேற பையன்கள் இல்லையா?””யாருமில்லை.””பொண்டாட்டி இல்லையா?” ”அது எப்பவோ போயிடுத்து.” ”அப்ப எங்க வசிக்கிறீங்க?””மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்ட்.””ஏன் சீர்காழி வந்தீங்க?” ”தப்புதான் தெரியாம வந்துட்டேன்.””ஏன்?” ”எதாவது கிடைக்கும்னு பார்த்தேன்.” ”மாயவரம் நல்ல ஊர். சீகாழி ஒண்ணும் கிடைக்காது..” ”ஆமாம். ஆமாம். ஒருத்தன் கேட்டத்துக்கு தாடையில அடிச்சுட்டான்.” எனக்கு பாவமாக இருந்தது அந்தப் பெரியவரைப் பார்க்கும்போது. 84 வயதில் கண் சரியாத் தெரியவில்லை. காதும் கேட்கவில்லை. ”டிக்கட் வாங்க பணம் இருக்கா?” ”இருக்கு.,” என்றார்.பஸ் கண்டக்டர் டிக்கட் கேட்டபோது, சரியாக 6 ஒரு ரூபாய் காசுக்களைக் கொடுத்தார். நானும், அறிவானந்தனும் அவர் மேல் இரக்கம் கொண்டோம். இருவரும் கொஞ்சம் பணம் சேர்த்து அவரிடம் கொடுத்தோம். அறிவானந்தன் குறிப்பிட்டார். ‘இந்தப் பெரியவரைப் பார்க்கத்தான் நாம இந்த பஸ்ஸில் ஏறினோம்,’ என்றார். நான் திரும்பவும் அவரிடம் பேச்சை ஆரம்பித்தேன். ”நீங்க எங்க வேலை பாத்தீங்க?” ”சிங்கப்பூரில..வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன்..” கொஞ்ச நேரம் கழித்து அந்தப் பெரியவரே பேச ஆரம்பித்தார்.”எதுக்கு நான் இருக்கணும்……போனாத் தேவலை….கடவுள் கூப்பிட மாட்டேங்கறான்..”
அவருடைய பேச்சு சாதாரணமாகத்தான் இருந்தது. விரக்தி எதுவும் தெரியவில்லை. நான் இருக்கும் தெருவில் பிச்சைக்காரர்கள் இருப்பார்கள். இவர்கள் குளித்துவிட்டு சுத்தமாக காவி உடையை உடுத்திக்கொண்டு வியாழக்கிழமை மட்டும் வருவார்கள். அவர்கள் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்பதெல்லாம் தெரியாது. ஒருமுறை அவர்களை என் காமிராவில் படம் பிடிக்க வேண்டுமென்று நினைப்பேன். அன்று இரவு வீட்டில் அந்தப் பெரியவரைப் பற்றியே நினைப்பு ஓடிக்கொண்டிருந்தது.
எனக்குத் திடீரென்று ஆத்மாநாம் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது.
பிச்சை
நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போபிச்சை பிச்சை என்று கத்து உன் கூக்குரல் தெருமுனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்ணும்உன் பசிக்காக உணவு சில அரிசி மணிகளில் இல்லைஉன்னிடம் ஒன்றுமே இல்லை சில சதுரச் செங்கற்கள் தவிரஉனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர
இதனைச் சொல்வது நான் இல்லை நீதான்