கோயிலுக்குள் ஒரு யானை

‘மாஸ்கோ நகரம் மிகவும் நேசித்த எழுத்தாளரான ஆண்டன் செகாவின்
சவப்பெட்டி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பச்சை நிறத்தில் இருந்த அந்த
ரயில் பெட்டியின் கதவில் பெரிய எழுத்துகளில் ‘ஆயிஸ்டர்களுக்காக’ என்று
எழுதியிருந்தது. ரயில் நிலையத்தில் காத்திருந்த கூட்டம் சவப்பெட்டியைத்
தொடர்ந்து சென்றது. அப்போது இறுதி மரியாதைக்கான ராணுவ இசை முழங்கிற்று.
செகாவுக்கு ராணுவ மரியாதையா என்று கூட்டம் வியப்படைந்தது. ஆனால் அவர்கள்
தொடர்ந்து சென்ற ராணுவ அதிகாரியின் சவப்பெட்டி மஞ்சூரியாவிலிருந்து வந்தது.
விஷயம் தெரிந்ததும் செகாவின் இறுதி மரியாதைக்கான கூட்டம் சிரித்தது.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் மேல் இராது’ –
இப்படி எழுதியிருக்கிறார் செகாவின் சமகால எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி.

செகாவின் இறுதி ஊர்வலத்தில் நேரில் கலந்துகொண்ட கார்க்கி அந்தக்
கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை நூறுக்கு மேல் இல்லை என்றார்.
ஆனால் அவரே தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் அந்தக் கூட்டத்தில்
கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரம் முதல் ஐயாயிரம் வரைக்கும் என்று
சொல்லியிருக்கிறார். கட்டுரையில் ஒன்று சொல்கிறார், கடிதத்தில் ஒன்று
சொல்கிறார் கார்க்கி. வெறுமனே துக்கம் கொண்டாடப் போனவர் மட்டுமல்ல
கார்க்கி. எத்தனைப் பேர்கள் இறுதி ஊர்வலத்தில் வந்தார்கள் என்று
மட்டுமல்லாமல் அவர்களில் சிலர் என்ன பேசினார்கள் என்று
கவனித்துக்கொண்டிருந்தவராகவும் இருக்கிறார் காரக்கி. புதிய அழகான உடை
உடுத்திய ஒருவர் புறநகரில் தான் வாங்கிய வீட்டின் வசதிகளைப் பற்றியும்,
சுற்றிலும் அமைந்த இயற்கை அழகைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தாராம்.
இன்னொருவர் வளர்ப்பு நாய்களின் அறிவுடைமை பற்றிப் பேசினாராம். அழகான குடை
பிடித்துக்கொண்டு ஊர்வலத்தில் பங்கேற்ற ஒரு பெண் ஒருவரிடம் – நல் ப்ரேம்
போட்ட கண்ணாடி அணிந்தவர் – ‘ஹி இஸ் அன்பிலீவப்லி நைஸ் அண்ட் ஸோ விட்டி’
என்று சொல்லிக்கொண்டே நடந்தாராம். இவையெல்லாம் நமது சிந்தனைகளைத்
தூண்டுகின்றன. கார்க்கியிடம் எழுத்தாளர் எப்போதும் எந்தத் தருணத்திலும்
விழித்திருக்கிறார் என்பது தெளிவு. ஆனால் எவ்வளவு நம்பலாம் என்று சொல்ல
முடியாது. முதலில் நூறென்றும் பிறகு பல ஆயிரம் என்றும் நேரில் பார்த்த அவரே
சொல்வாரானால், பாரதியைக் கோவில் யானை தாக்கிய காட்சியை நேரில்
பார்த்தவர்கள் என்று நம்பப்படுபவர்கள் எதுவும் சொல்லாதிருக்க அல்லது என்ன
சொன்னார்கள் என்பது தெரியாதிருக்க யார் என்ன சொன்னாலும் நம்ப நேர்கிறது.

யானையால் பாரதி தாக்கப்பட்டாரா? அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது.
யார் சொன்னார்கள்? தெரியவில்லை. ஆனால் ஒரு செய்தி அக்காலத்தில்
வெளிவந்துகொண்டிருந்த சுதேசமித்திரனில் வெளியாகியிருக்கிறது. எந்தத்
தேதியில் வெளியாயிற்று அந்தச் செய்தி? பாரதியால் பூணூல்
அணிவிக்கப்பட்டதற்காகப் பெயர் பெற்ற கனகலிங்கம் ‘சுதேசமித்திரனில்
பார்த்தசாரதி கோவில் யானை பாரதியாரைத் தாக்கியது’ என்ற வாக்கியம் கண்ணில்
பட அவர் திருவல்லிக்கேணிக்குப் போய்ப் பார்த்தாராம். ஆறு சொற்களாலான
வாக்கியம் செய்தித் தாளுக்குள் இருந்ததா? அல்லது முக்கியச் செய்திகளைக்
கூறும் சுவரொட்டிதானா? அது எப்போது எந்த நாளில் வெளியாயிற்று? சாதாரணமாக
மறுநாள் வெளியாகியிருக்கக்கூடும். அல்லது தேதி குறிப்பிடாமல் ‘அண்மையில்’
என்று குறிப்பிட்டு செய்தி வெளியிடுவார்கள். அந்தச் செய்தி பாரதி யானையால்
தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நாளுக்கு எத்தனை நாள்கள் கழித்து வெளியாயிற்று?
தெரியாது. அந்தச் செய்தி ஆங்கில நாளேடுகளில் வெளிவந்ததா? தெரியாது. ஆனால்
சுதேசமித்திரன் பெயர் மட்டும்தான் அந்தச் சம்பவம் குறித்துக்
கூறப்படுகிறது. பாரதியின் பள்ளித் தேழர் நாவலர் சோமசுந்தர பாரதியார்

‘சமீபத்தில் சென்னையில் யானைக்குப் பழமருந்தப் போய் மிதியுண்டு (பாரதி) பலநாள் வருந்தியது பத்திரிகை படிக்கும் பலருக்கும் தெரியும்.’

என்று எழுதியிருக்கிறார். பலருக்கும் தெரியும் என்றால் என்ன அர்த்தம்?
பாரதியார் வண்டியில் கொண்டுபோகப்பட்டுப் புற நோயாளியாகப் பார்க்கப்பட்டு
உடனே வீடு திரும்பியிருக்கிறார். பாரதிக்கு ஏற்பட்ட காயம் பெரிய காயமாக
இருந்திராது. எனவேதான் உடனே அவர் வீடு திரும்ப முடிந்தது. யானையால் –
சோமசுந்தர பாரதி சொல்வது போல – பாரதியார் ‘மிதியுண்டிருந்தால்’ அது
சாத்தியமா?

‘இவர் (பாரதியார்) சர்வ ஜீவராசிகளோடும் தமக்குப் பகையற்ற நேசமுண்டு என்று வற்புறுத்தி வாதிக்கக் கேட்டிருக்கிறேன்.’

என்று ஒரு செய்தியைச் சேர்த்திருக்கிறார் சோமசுந்தர பாரதியார்.

சர்வ ஜீவராசிகளோடும் தமக்குப் பகையற்ற நேசமுண்டு என பாரதியார்
சொல்லியிருக்கலாம். ஆனால் இதில் வற்புறுத்த என்ன இருக்கிறது? இல்லை என்று
பிறர் மறுத்தபோதுதானே வற்புறுத்த நேரும்? பிறகு வாதிக்கக்
கேட்டிருப்பதாகவும் சொல்கிறார் பாரதியின் நண்பர். இங்கேயும் வாதிக்க என்ன
இருக்கிறது? நான் சர்வ ஜீவராசிகளுடனும் நேசமுடையவன் என்று ஒருவன் சொன்னால்
யார் கிடையாது என்று மறுக்கப்போகிறார்கள்? ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’,
’வானில் பறக்கும் புள்ளெலாம் நான்’ போன்ற வரிகளை எழுதியவர் பாரதி. இந்தச்
செய்தியை வைத்துக்கொண்டு கோயில் யானையால் பாரதி தள்ளப்பட்ட சம்பவம்
புனையப்பட்டதாகக் காட்சி தரத் தொடங்குகிறது.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்ததாகச் சொல்லப்படும் குவளைக் கண்ணனோ,
அல்லது மண்டயம் ஸ்ரீநிவாஸாசாரியரோ தாங்கள் எழுதிய கட்டுரைகளில்
இந்நிகழ்ச்சி பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. இத்தனைக்கும் இவர்களில்
ஒருவரான குவளைக் கண்ணன்தான் பாரதியாரை யானையிடமிருந்து மீட்டதாகக்
கூறப்படுகிறது. அது உண்மையென்றால் குவளைக் கண்ணன் அந்தச் செய்தியைச்
சொல்லாமல் விடுவாரா என்ன. இந்தக் கதை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு
பாரதிக்கு ஒரு ஆகிருதி ஏற்படத் தொடங்கியபோது அவருடைய மனைவி செல்லம்மாவால்
மகள் தங்கம்மாளுக்கு சொல்லப்படுகிறது. அது முதல் பாரதியின் கதையில்
இச்சம்பவம் வந்து அமர்கிறது.

செல்லம்மாள் ஓரளவு செய்தியைக் கூறியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
இந்நிகழ்ச்சி இப்படித்தான் நடந்ததென்று யாராலும் உறுதியாகக் கூற முடியாது.
பார்க்காதவர்கள் புனைந்த கதை இது. செல்லம்மா சொன்ன கதை அகில இந்திய அளவில்
பரவிவிட்டது. ஒரு கவிஞர் யானையால் தள்ளப்பட்டார், அதனால் விளைந்த காயத்தால்
இறந்தார் என்பது சுவாரசியமான கதையல்லவா? அதை யாரும் ஆராய்ந்தார்கள் என்று
சொல்ல முடியாது. பாரதியுடன் நேர்ப் பழக்கம் இருந்த வ. ராமஸ்வாமி, பாரதியின்
வாழ்க்கை வரலாற்றை எழுதி அளித்தவர் – இந்த நிகழ்ச்சியை அவர் மனைவி
செல்லம்மா சொன்னபடியே ஏற்றுக்கொள்கிறார். பின்பு கதையைப் பொலிவு
செய்கிறார். பார்த்தசாரதி கோயிலுக்குப் பக்கத்து வீதியில் பாரதி வாழ்ந்ததாக
வ.ரா. சொல்கிறார். பாரதி வாழ்ந்த தொல்சிங்கப் பெருமாள் கோயில் தெரு
பார்த்தசாரதி கோயிலுக்குப் பின்பக்கத்தில் உள்ளது என்பதே தெளிவானதாகும்.
பாரதி தன் வீட்டிலிருந்து பார்த்தசாரதி கோயிலுக்குப் போக வேண்டுமென்றால்
ஏறக்குறைய நூறடிக்கு மேல் நடக்க வேண்டும்.

பாரதியின் மகள் சகுந்தலா, யானை நிகழ்ச்சியை ஜாக்ரதையாக விவரிக்கிறார்.
சில நாளாகக் கோயில் பக்கம் போகாதிருந்தார் பாரதி என்கிறார் இவர். சில நாளாக
இவர் கோயில் பக்கம் போகவில்லை என்பதால் யானைக்கு மதம் பிடித்திருந்ததாக
சொல்லப்பட்டது அவருக்குத் தெரியவில்லை என்பதற்காகக் கூறப்பட்டுள்ளது. அவர்
சொல்படி ‘யானைக்கு மதம் பிடித்திருந்ததாம். நான்கு கால்களையும் சங்கிலியால்
அதைக் கட்டியிருந்தார்களாம். (ஆனால்) ஜனங்கள் கம்பி வேலிக்கு வெளியே
நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்களாம். யானைக்கு மதம்
பிடித்திருந்தால் மக்கள் அதை வேடிக்கை பார்ப்பார்களா? பார்க்க
அனுமதிக்கப்படுவார்களா? அந்த ஆண்டு 1921ம் ஆண்டாக இருந்தாலும் சரி. பாரதி
கம்பி வேலிக்கு உள்ளே போனாராம். ஆனால் ஜனங்கள் யாரும் தடுக்கவில்லையாம்!
பாரதியின் கையிலிருந்து பழத்தை வாங்கிக்கொண்ட யானை அவரைத் துதிக்கையால்
கீழே தள்ளிவிட்டது. யானையின் நான்கு கால்களுக்கிடையில் பாரதி
விழுந்துவிட்டார். எழுந்திருக்கவில்லை. இப்படிக் கூறும் சகுந்தலா

ஜனங்கள் அவரைத் (பாரதியை) தாங்கிய வண்ணம் கோயில் வாசல் மண்டபத்துக்குக் கொண்டு வந்தார்கள்

என்கிறார். கோயில் வாசல் மண்டபம் என்றால் எது? இப்போது இருக்கும் பகுதி.
அதாவது பிரதான வாசலுக்கு – கொடிமரத்துக்கு – முன்னே அமைந்துள்ள பெரிய
கதவுகள் உள்ள பகுதி. அப்படியானால் யானை எங்கே கட்டப்பட்டிருந்தது?
கோயிலுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. எல்லாக்
கோயில்களிலும் யானை கோயலுக்குள்ளேயே ஓரிடத்தில் கட்டி நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கும். எனவே பாரதி கோயிலுக்குள் போய்விட்டிருக்கிறார்.
அங்கு செல்லம்மா சொல்வது போல் பாரதியிடம் பழம் வாங்கிக்கொள்ளும் யானை
அவரைத் தள்ளி விட்டிருக்கிறது.

ஆனால் வ.ரா.வின் கதையில் பாரதிக்கும் யானைக்கும் உள்ள சகோதரத்வம்
முதிர்ந்துவிட்டது. பாரதி யானையிடம் போய் ‘சகோதரா’ என்று பழங்களை
நீட்டினாராம். சகோதரா என்று யானையைப் பாரதியார் அழைத்ததாக வ.ரா.வுக்குத்
தெரியவந்தது எப்படி? கற்பனைதான். வ.ரா. கதையை இன்னும் உக்கிரமாக
வர்ணிக்கிறார். பாரதி யானைக்குப் பக்கத்தில் போனபோதுதான் அது வெறி கொண்டது
போல் வ.ரா. சொல்கிறார்.

யானையோ பழங்களோடு பாரதியாரையும் சேர்த்துப் பிடித்து இழுத்துத் தான் இருக்கும் கோட்டத்துக்குக் கொண்டுபோய்விட்டது.

யானைக்குக் கோட்டமா? கோயில் யானைக்குக் கோட்டம் கட்டியிருந்ததாகத்
தெரியவில்லை. அப்படியிருந்தால் அந்தக் கோட்டத்தை வ.ரா.தான் கட்டியிருக்க
வேண்டும். வ.ரா.வின் வர்ணனையைப் படித்தால் யானை துதிக்கையில் பாரதியாரைத்
தூக்கிக்கொண்டு தன்னுடைய இடத்துக்குப் போவது சித்திரமாவதைப் பார்க்கலாம்.

இந்தச் சித்திரப்படி பாரதி யானையின் துதிக்கையில் இருக்கும்போது
தப்பித்துக்கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் சும்மா இருந்தது போல்
தெரிகிறது. இப்படி நடந்திருந்தால் பாரதி பெரிய காயங்களைப் பட்டிருப்பார்.
ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அதனால்தான் இராயப்பேட்டை
மருத்துவமனையில் அவரைப் புறநோயாளியாக மட்டுமே வைத்துக்கொண்டு முதல் உதவிகள்
(?) செய்து அனுப்பிவிட்டார்கள்.

ரா. கனகலிங்கம் பாரதியை யானை சம்பவத்துக்குப் பிறகு சந்திக்கிறார்.
அப்போது பாரதி அவரிடம் சொன்னதாக அவர் சொல்கிறார்: பாரதி சொன்னாராம்:

‘எப்போதும் நான் அந்த யானைக்கு வெல்லம்
கொடுப்பது வழக்கம். அன்று அது தென்னை ஓலையைத் தின்று கொண்டிருந்தது.
அச்சமயம் நான் வெல்லத்தை நீட்டினேன். அது தலைகுனிந்த வண்ணம் ஓலைப்
பட்சணத்தைப் பட்சித்துக் கொண்டிருந்ததால் என்னைப் பார்க்கவில்லை. என்னைப்
பாராமலேதான் தும்பிக்கையால் தள்ளிவிட்டது.’

கனகலிங்கம் எழுதியிருப்பது நம்பும்படியாக இருக்கிறது. பாரதி தன்
வீட்டில் அன்றாடம் பேசியிருக்கக்கூடிய தமிழாக அவருடைய பேச்சு
அமைந்திருக்கிறது. பட்சணம், பட்சித்தல் என்ற சொற்கள் அக்காலத்தில்
வழங்கிவந்தவைதான். பாரதி கனகலிங்கத்தைப் பார்த்து இளம் புன்னகை செய்ததாகக்
கனகலிங்கம் குறிப்பிடுகிறார். எனவே பாரதி அப்போது மோசமான நிலையில் இல்லை
என்பது தெளிவு. பாரதி யானைக்கு வெல்லம் கொடுக்கப் போனதாகக் கூறுகிறார்.
அதுவும் அதுதான் தனது வழக்கம் என்கிறார். ஆனால் சகுந்தலாவோ பாரதி பழம்
கொடுக்கப் போனதாகக் குறிப்பிடுகிறார். யானை தென்னை ஓலை
தின்றுகொண்டிருந்ததாகப் பாரதி சொன்னதும் கவனிக்கத் தகுந்தது. தென்னை
ஓலைகள், தேங்காய்கள் இவற்றைப் பாகன்தான் கொடுப்பான். யானை நல்ல நிலைமையில்
இருந்ததையே இந்தக் குறிப்புகள் காட்டுகின்றன. தனக்குத் தெரிந்த ஒருவர்
தனக்கு விருப்பமான ஒரு பொருளைத் தருகிறார் என்பதை யானை கவனிக்கவில்லை
என்கிறார் கனகலிங்கம். யானை அவரைத் தள்ளியது ஒரு பிழையே தவிர மதத்தினால்
அல்ல என்றுதானே முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. யானைக்கு மதம்
பிடித்திருந்தது, சங்கிலியால் கால்களைக் கட்டியிருந்தது போன்ற செய்திகள்
எதுவும் கனகலிங்கத்தின் கூற்றில் காணப்படவில்லை. பாரதி தன் நண்பர் பரலி.
சு. நெல்லையப்பர் செய்ய முன்வந்த மருத்துவ உதவியை நிராகரித்திருக்கிறார்.
பாரதி தனக்கு சிறப்பான சிகித்சை தேவைப்படவில்லை என்றுதானே அதை அவர்
நிராகரித்திருப்பார். தனக்குத் தேவைப்படும் ஒன்றைப் பிறரிடம் கேட்கத்
தயங்கும் இயல்புடையவர் இல்லை பாரதி என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

யானைக் கதையில் பாரதியின் மகள் சகுந்தலா எழுதுகிறார்:

என் தந்தை எழுந்திருக்கவில்லை.
முகத்தினின்றும் ரத்தம் பெருக்கெடுத்துவிட்டது. யானை தன் நண்பனுக்குத்
தீங்கு இழைத்துவிட்டோமே என்ற பச்சாதாபத்துடன் தன் பிழையை உணர்ந்தது போல
அசையாமல் நின்றுவிட்டது.

இந்த வர்ணனை, குறிப்பாகப் பச்சாதாபம் என்ற சொல் மற்றும் பாரதிக்கு
யானையால் ஏற்பட்டதாகக் கூறப்படும் காயம் எல்லாம் பாரதி எழுதிய ‘கோயில்
யானை’ என்ற நாடகத்தை நினைவூட்டுகிறது. கோயில் யானை நாடகக் கதையில்
கதாநாயகன் வஜ்ரி கோயில் யானைக்குப் பழம் கொடுக்கும்போது யானையால் அவன்
தள்ளப்படுகிறான். யானையைப் பற்றிப் பாரதி எழுதுகிறார்:

யானை தன் தந்தையுடைய கடிகாரத்தை வீழ்த்தி உடைத்துவிட்டுப் பின் பச்சாதாபம் எய்தும் குழந்தை விழிப்பது போல விழித்துக் கொண்டு நின்றது.

கோயிலில் ஒரு யானை, அதற்குத் தின்பண்டம் கொடுக்க ஒருவர் போவது, அவரை
யானை தள்ளிவிடுவது, இவையெல்லாம் பாரதி எழுதிய கோவில் யானை என்ற நாடகத்தில்
வருகிற நிகழ்ச்சிகள். இவையே பாரதிக்கும் நடந்ததாக சாதித்துவிட்டார்கள் போல்
தெரிகிறது. சம்பவம் நடந்த இடத்தில் வந்து பாரதியை யானையிடமிருந்து
மீட்டதாகக் கூறப்படும் குவளைக் கண்ணனோ ஸ்ரீநிவாஸாசாரியரோ ஒன்றும்
சொல்லாதிருக்க, இடத்தில் இல்லாதவர்கள் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாக
சாட்சி சொல்கிறார்கள். பத்திரிகையில் பாரதி யானையால் தள்ளப்பட்ட செய்தி
வந்ததாகச் சொன்னவர்கள் அதன் விவரத்தைத் தர இயலவில்லை.
ஆராய்ச்சியாளர்களுக்கும் இதைக் கண்டுபிடித்து உண்மை நிலை என்னவென்று
தெரிவிக்க இயலவில்லை.

குறிப்பிட்ட நாளன்று பாரதிக்கு ஏதோ உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருக்க
வேண்டும். தனது வீட்டிலிருந்து நூறடித் தொலைவில் உள்ள பார்த்தசாரதி
கோயிலுக்குப் போகும்போது அல்லது கோயிலின் முன்வாசலை அடைந்தபோது அவருக்குத்
தற்காலிக உடல்நலக் குறைவு ஏற்பட்டு விழுந்திருக்க வேண்டும். முதல் உதவி –
சிறிய ஒட்டல்கள் – சுத்திகரிப்புகள் முதலியன தேவைப்படும் அளவுக்கு அவருடைய
காயங்கள் இருந்திருக்கலாம். அல்லது பாரதியாருக்கு வீட்டிலேயேகூட ஏதாவது
நிகழ்ந்திருக்கலாம். எது உண்மை என்று தெரிந்துகொள்ள முடியாதபடி கோயில் யானை
தள்ளிய கதை என்ற கம்பளியை அவர் மீது போர்த்திவிட்டார்கள் என்று
தோன்றுகிறது.

கோயில் யானை தள்ளிய நிகழ்ச்சி உண்மையாக நடந்த ஒன்றுதான்
என்பவர்களுக்குச் சில சிக்கல்கள் உண்டு. அது எப்போது நடந்திருக்கக்கூடும்
என்பதில் அவர்களிடம் கருத்தொற்றுமை இல்லை. அந்த நிகழ்வின் காரணமாகத்தான்
அவர் இறந்துபோனார் என்றவர்கள் பாரதி அதற்குப் பிறகு மூன்று மாதத்தில்
இறந்தார் என்றும் (வ.ரா.), நெடுநாள் உலகில் வாழவில்லை என்றும் (பெ. தூரன்),
சம்பவம் ஜூன் மாதத்தில் நடந்ததென்றும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களில்
பாரதி வரலாற்றை முதலில் எழுதிய வ.ரா. ஒருவரால்தான் உண்மையை விசாரித்துத்
தெரிந்துகொண்டிருக்க முடியும். ஆனால் அவர் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தில்
ஈடுபட்டாரே தவிர அதை ஆராயவில்லை. அது உண்மையில் பாரதி எழுதிய கோயில் யானை
என்ற நாடகத்தில் வரும் ஒரு நிகழ்ச்சிதான் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
கோயில் யானை நாடகம் கிடைத்த பிறகு அது நிகழ்ந்தது 1921 ஜனவரியா அல்லது ஜூன்
21ஆ என்று ஆராய்வது சரியல்ல. கோயில் யானை நாடகம் 1921 ஜனவரியில்
வெளியாயிற்று என்பது இப்போது உறுதியாயிருக்கிறது. யானை தள்ளிய விஷயத்தை ஏன்
பாரதி தன் எழுத்துகளில் குறிப்பிடவில்லை?

கோயில் யானையால் தள்ளப்பட்டு ஒரு தமிழ்க் கவிஞர் இறந்துபோனார் என்ற
செய்தி வடநாட்டவரைக் கவர்ந்திருக்கிறது. மாடர்ன் ரிவ்யூ என்ற
பத்திரிகைையின் 1956ம் வருட நவம்பர் இதழில் ‘தெருவில் ஓடிய ஒரு மதம்
பிடித்த யானையிடமிருந்து ஒரு சிறுமியைக் காப்பாற்றிய பாரதி தன்னைக்
காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. அவரை ஸ்தலத்திலேயே யானை கொன்றுவிட்டது’
என்று எழுதியது. கதையின் ஒரு பகுதியை மறுத்த பாரதியின் தம்பி விஸ்வநாதன்,
பாரதியின் இறப்போடு யானைக்குள்ள தொடர்பை மறுக்கவில்லை. எனவே இந்த யானை
தாக்கிய விஷயம் பாரதியின் குடும்பத்தாரால் பேணப்பட்டது என்று சொல்லலாம்.

கோயில் யானை ஒருவனைத் தாக்கியது என்ற கற்பனை பாரதிக்குப் பார்த்தசாரதி
கோவிலிலிருந்தே கிடைத்திருக்கக்கூடும் என்று சொல்லலாம். பார்த்தசாரதி
கோயில் சிற்பங்கள் அந்தக் கோயில் அளவுக்குத் தொன்மையானவையா என்று சொல்ல
முடியாது. இருந்தாலும் கோயிலில் காணப்படும் இரண்டு சிற்பங்கள் பாரதியின்
மீது செல்வாக்குடையன என்று சொல்லலாம். ஒன்று, நரசிம்மர் சனனதியின் வலது
பக்கத்தில் ஒரு தூணில் உள்ள ஒரு சிற்பம். அதில் ஒரு மனிதன் தன் மனைவியை
இடது பக்கத்துத்தோளை அணைத்தவாறு இருக்கிறான். பாரதி தன் மனைவியுடன்
நிற்கும் ஒரு போட்டோவைப் பாரதியின் போட்டோக்களுடன் பரிச்சயமுள்ளவர்கள் உடனே
தெரிந்துகொண்டுவிடுவார்கள். மனைவியைத் தோள் பற்றி நிற்பது நவீனமல்ல
என்பதுதான் இங்கே விளங்கிக்கொள்ள வேண்டியது.

மற்றொரு சிற்பம் யானையைப் பற்றியது. இது ஒரு தொடராக அமைந்திருப்பது.
கவிதை இயலில் ஒரு கருத்தைப் பல செய்யுள்களால் அமைப்பதைக் குளகம்
என்பார்கள். இந்தச் சிற்பங்கள் எல்லாம் சேர்ந்து யானை என்னென்ன செய்யும்
என்று சொல்கிறது. இவற்றில் ஒன்று ஒரு யானை ஒரு வீரனை இடுப்பைப் பற்றித்
தூக்கிக்கொண்டு செல்கிறது. தூக்கிச் செல்லப்பட்ட வீரன் ஆபத்தில்
இருக்கிறான் என்பது தெளிவு. இப்படிக் கூறுவதன் மூலம் பழங்காலத்தில்
பார்த்தசாரதி கோயிலுக்கு வருபவர்களுக்கு யானையால் – அல்லது பிற
வனவிலங்குகளால் – ஆபத்து நேரலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட எச்சரிக்கைகளைக் கலை இலக்கியங்கள் தொன்றுதொட்டுச்
செய்துவருகின்றன. பாலை நிலத்தில் எத்தகைய ஆபத்துகள் உண்டு என்று பாலைத்
திணைச் செய்யுள்கள் சொல்கின்றன. பரத்தமையைப் பற்றி எச்சரிக்கும்
சிற்பங்களும் கோயில்களில் உண்டு. யானையால் எடுத்துச் செல்லப்படும்
காட்சியைக் கூறும் கோயில் சிற்பம்தான் பாரதிக்குக் ‘கோயில் யானை’ என்ற
நாடகம் எழுதத் தூண்டுதலாக இருந்திருக்கும் என்பதில் தவறில்லை. பாரதி கோயில்
யானைக்குப் பழமோ வெல்லமோ கொடுக்கப் போவார் என்பதுதான் மற்றவர்களுக்குத்
தெரிந்திருந்ததே தவிர அங்கே சிற்பங்களைத் தேடி நடந்திருக்கலாம் என்பது
தெரியவில்லை. ஏனெனில் அது அவர்கள் மனதில் பதிந்திராது. சென்னையின் வேறு
பகுதியில் சில காலம் வசித்துவிட்டுத் திருவல்லிக்கேணிக்கு வந்த புதிதில்
கோயிலை முதல் தடவையாக சுற்றிப் பார்த்து ஆராய்ந்தபோது பாரதி இந்த
சிற்பங்களைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். இந்த யானைச் சிற்பங்கள் –
அரையடி நீளமுள்ளவை – தாயார் சன்னதிக்குள் அமைந்த மண்டபத்தில் அடிபாகத்தில்
உள்ளன. இன்றும் உள்ளவை.

கட்டுரையின் தொடக்கத்தில் ஆண்டன் செகாவின் இறுதி ஊர்வலத்தைப் பற்றிக்
குறிப்பிட்டேன். நூறு என்று தொடங்கி மூவாயிரம் ஐயாயிரம் என்று செகாவின்
இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவவர்களின் எண்ணிக்கை பற்றி மாக்சிம் கார்க்கி
எழுதியதையும் குறிப்பிட்டேன். பாரதியார் இறுதிச் சடங்கில் பதினான்கு பேர்
கலந்துகொண்டார்கள் என்று தெரிகிறது. அவர்களது பெயர்கள்கூடத் தெரியும்.
1920களில் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மயானம் வரை ஊர்வலம் போகிற பண்பாடு
கிடையாது. இறுதி நாளன்று பார்க்கப் போகிறவர்கள் பின்பற்ற வேண்டிய மரபுகள்
உண்டு. அதுவும் பாரதி பிறந்த பிராமண வகுப்பில் நிறையவே உண்டு. எல்லோரும் வர
வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஈமச் சடங்கு உரிய நேரத்தில் நடத்தப்பட
வேண்டும். தகனம் செய்ய உரிமை உடையவர் உடனே வர இயலவில்லை என்றால்
இன்னொருவருக்கு அந்த உரிமை தரப்பட்டு அவர் சடங்குகளைச் செய்துவிடுவார்.
யார் வருகிறார்கள், எத்தனைப் பேர் வருகிறார்கள் என்பது முக்கியமில்லை.
பாரதியின் சடலத்தை மொய்த்த ஈக்களின் எண்ணிக்கைகூட இல்லை ஊர்வலத்தில்
கலந்துகொள்ள வந்தவர்களின் எண்ணிக்கை என்று சிலர் தற்காலத்தில்
சொல்கிறார்கள். ஆனால் அது அறியாமை உடைய கூற்றாகும். பாரதி வாழ்ந்த வீடு ஒரு
கோயிலின் முன்னே உள்ளது. கோயில் முன்னே அல்லது கோயிலின் பிரதான வீதிகளில்
எங்காவது ஒருவர் இறந்தால் உடனே கோயில் வேலைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.
சடலம் எடுத்துச் செல்லப்பட்ட பிறகு கோயில் நிர்வாகம் தெருவுக்குச் சாந்தி
செய்யும். பின்னரே பூசைகள் வழக்கம் போல் தொடரப்படும். எனவே பாரதி இறந்த
பின் உரிய நேரத்தில் ஈமக்கிரியைகளைச் செய்திருப்பார்கள். ஈ மொய்க்க நேரம்
இருந்திருக்காது.

பாரதி யானையால் எறியப்படவில்லை. அதனால் அவர் இறக்கவில்லை. அவர் எழுதிய
நாடகத்தின் கதையையே அவர் தலையில் சுற்றிவிட்டார்கள் என்றுதான் சொல்ல
வேண்டும்.

பாரதி இறந்த அடுத்த ஆண்டிலிருந்தே தமிழகம் அவரது நினைவு நாளைக்
கொண்டாடத் தொடங்கிவிட்டது. அவரது இறந்த நாளுக்குப் பதிலாகப் பிறந்த நாளைக்
கொண்டாட வேண்டும் என்று 1960ல் கோரிக்கை எழுப்பிய இளைஞர்களில் நானும்
ஒருவன் என்பதை நான் மகிழ்வுடன் நினைவுகூர்கிறேன்.

ஞானக்கூத்தன்
10.4.2015

குறிப்புகள்

  1. “1921ல் எவ்வளவு பிரபலம் அடைய வேண்டுமோ அந்த அளவுக்கு அவருடைய கவிகள் பிரசித்தி அடையவில்லை.”
    – 17.9.21 இதழில் (சுதேசமித்திரன்) எஸ். சத்யமூர்த்தி
  2. 1930ல் எழுத வந்த பல தமிழ் எழுத்தாளர்கள் பாரதியைப் பிறகுதான்
    தெரிந்துகொண்டார்கள். பலர் தமிழில் எழுத முடியும் என்று பாரதியைக்
    கொண்டுதான் தெரிந்துகொண்டதாகக் கூறியிருக்கிறார்கள்.
  3. 1940ல்கூடப் பாரதியின் பெருமைகளைத் தமிழகம் உணரவில்லை என்று சொல்லியுள்ளார் வ.ரா.
  4. பாரதியார் சில காலமாக நோயாளியாக இருந்துவந்தார் என்கிறது 12.9.21 தேதியிட்ட The Hindu.
  5. ஒருவார காலமாக பாரதி தேகநோய் கண்டு திருவல்லிக்கேணியில் அசௌகரியமாக
    இருந்து திடீரென்று நேற்று இரவு 1 மணிக்கு இம் மண்ணுலகை விட்டு விண்ணுலகை
    அடைந்தார் என்கிறது 12.9.21 தேதியிட்ட சுதேசமித்திரன் செய்தி. யானை
    தள்ளியதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
  6. ரா.அ. பத்மநாபன் சித்திர பாரதியில் ‘செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு
    வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அதுவே ரத்தக் கடுப்பாக மாறியது’ என்று
    குறிப்பிடுகிறார். இதைப் பற்றி மித்திரன் குறிப்பிடவில்லை. திரு பத்மநாபன்
    1981ல் சென்னை கார்ப்பரேஷன் சுகாதாரத் துறையிடமிருந்து பாரதிக்கு இறப்புச்
    சான்றிதழ் ஒன்றைப் பெற்றிருக்கிறார். அது பாரதியாரின் வர இருந்த நூற்றாண்டு
    விழாவை ஒட்டிப் பெறப்பட்டது போலும். அந்தச் சான்றிதழில் ‘அக்யூட்
    டிசண்ட்ரி டென் டேஸ்’ என்று இங்கிலீஷிலும் 10 நாள்களாகக் கடுமையான ரத்தக்
    கடுப்பு என்று மொழிபெயர்ப்பிலும் தரப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் பாரதி
    இறந்த 60 ஆண்டுகளுக்குப் பின் பெறப்பட்டுள்ளது. ஆங்கிலப் படிவத்தில்
    இறப்பின் காரணம் சொல்லப்படவில்லை. பிரதியில் இறப்புக் காரணத்தைக் கூற
    முடியாது என்றும் கார்ப்பரேஷனால் சொல்லப்பட்டுள்ளது. பாரதி வயிற்றுப்
    போக்கால் இறந்தார் என்று இறப்புச் சான்றிதழ் கூறுவதாக வாசகர் எண்ணும்படி
    இப்பகுதி அமைந்துள்ளது.

உதவிய நூல்கள்

  1. Anton Chekov and His Times, Progress Publishers, Moscow. 1990. ப. 187, 188, 247
  2. மகாகவி பாரதியார் – வ.ரா., சந்தியா பதிப்பகம், சென்னை 83. பதிப்பு 2001.
  3. பாரதியின் இறுதிக் காலம் – ய. மணிகண்டன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ். டிசம்பர் 2014
  4. சித்திரபாரதி – ரா.அ. பத்மநாபன்., காலச்சுவடு மற்றும் கடவு வெளியீடு, டிசம்பர் 2000
  5.  பாரதியார் கவிதைகள், விகடன் பிரசுரம், 2012.

கசடதபற ஜøலை 1971 – 10வது இதழ்


தெலியலேது ராமா
– ஜரதுஷ்டிரன்


‘ப்ராங்க்ளின் கொட்டைப்ராந்து
முத்துச்சாமி செத்த எலி’
செல்லப்பா சொல்லி விட்டார்
நாப்பா போட்டு விட்டார்
IDENTITY CRISIS
ALIENATION FEELING
‘இழப்பில்’ இதுவெல்லாம்
எங்கேயும் இல்லையாம்
செல்லப்பா சொல்லிவிட்டார்
நாப்பா போட்டுட்டார்.
தமிழ்நாட்டில் தமிழ்க் குலத்தில்
தமிழ்ச் சரித்திர வரலாற்றில்
சோகத்துக்கிடமில்லை – இதயச் 
சோரத்துக் கிடமில்லை
ஸந்தோஷம் ஸல்லாபம்
ஸம்போகம் தார் மீகம்
சத்தான சொல்லடுக்கு
தமிழ்க் கதைக்கு மிக மிடுக்கு
செல்லப்பா சொல்லிட்டார்
நாப்பா போட்டுட்டார்
இனி –
ஆறடி உயரம் அழகான பெண்மைமுகம்
(மேற்கொண்டு வர்ணனைக்கு
நாப்பாவைக் கேளுங்கள்)
சத்தான கருத்துக்கள்
நாயகன் அவிழ்த்துவிட
ஐந்தடி உயரம் ஐந்தடி கூந்தல்
திரண்ட தமிழறிவும் தியாகேசர் கீர்த்தனையும்
தெரிந்த நல்நாயகி திடீரென வந்து
நிம்போமேனியாவில் நாயகனைக் காதலுற்று
லக்ஷணமாய் குண்டு குண்டாய்ச் சித்திரங்கள் போட்டு
ட்ராஜடியாய் காமடியாய் ட்ராஜிக் காமெடியாய்
(தெலியலேது ராமா தமிழ் நாவல் மார்க்கமு)
நாப்பா எழுதிடுவார்
செல்லப்பா வாழ்த்திடுவார்
செத்த எலிகளுக்கு இடமில்லை தமிழினிலே
ஜோடித்த பிணங்களுக்கே சொகுசுண்டு இனிமேலே
ஜரதுஷ்டிரன் என்ற கவிஞர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.  அவர் எழுதிய சில கவிதைகள் கசடதபற, பிரஞ்ஞை, கணையாழி போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
மேற்குறிப்பிட்ட கவிதையை முதலில் படிப்பவர்கள் ஒன்றுமே புரியாமல் முழிப்பார்கள்.  கசடதபற இதழ்களை முன்பே படித்தவருக்கு 
ஓரளவு இந்தக் கவிதை எதைப் பற்றி சொல்கிறது என்பது தெரியும். இப்போது புதியதாகப் படிக்கும் வாசகர்களுக்கு தலையும் புரியாது காலும் புரியாது.  பொதுவாக தமிழில் கவிதை எழுதுபவர்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்வதும் கவிதையின் ஒரு அங்கம்.  
இந்தக் கவிதையில் செல்லப்பா என்று சொல்வது எழுத்து ஆசிரியர் சி சு செல்லப்பாவை குறிக்கும்.  நாப்பா என்பது நா பார்த்தசாரதியைக் குறிக்கும்.  ந முத்துசாமி எழுதிய கதையை ப்ராங்களின்  என்ற ஆங்கிலேயர் பாராட்டியதால், சி சு செல்லப்பா அந்தக் கதையைக் குறித்து நா பா நடத்திய தீபம் பத்திரிகையில் தாக்கி எழுதியதை கவிதை ஆக்கி உள்ளார் ஜரதுஷ்டிரன்.   

புத்தக விமர்சனம் 10

                 

அழகியசிங்கர்

    சமீபத்தில் நான் படித்தப் புத்தகம் தேவன், மனிதன், லூசிஃபர். 224 பக்கங்கள்  கொண்ட இந்த நாவலை எழுதியவர் சைலபதி.  இந்த நாவலைப் படித்து முடித்தப்பின் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.  நான் அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது இரா முருகன் என்ற எழுத்தாளர் நான் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டுவிட்டார்.  அவருடைய முகநூலில்.  வெகு நாட்கள் கழித்து ஒரு கிருத்துவ நாவலை இப்போதுதான் படிக்கிறேன்.  அதை அலுப்பில்லûôமல் எழுதி இருக்கும் சைலபதிக்கு வாழ்த்துகள்.  பொதுவாக கிருத்துவ சமுதாயத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள், கிருத்துவ மதச் சம்பந்தமாக எழுதுவதில்லை. 


    இந் நாவலில் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் கிருத்துவ மதத்துக்கு மாறுவதாக விவரிக்கிறார். ஆனால் உண்மையில் பிராமண வகுப்பைச் சார்ந்தவர்கள் கிருத்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு அதில் மாறுவது என்பது மிகக் குறைவான எண்ணிக்கைக் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.  பொதுவாக தலித்துகள்தான் வறுமையின் பொருட்டு கிருத்துவ மதத்திற்கு மாறுவது சகஜம்.  கிருத்துவமதத்தைச் சார்ந்தவர்கள்தான் இப்படி மதத்தை பிரச்சாரம் செய்து மற்ற மதத்தைச் சார்ந்தவர்களை இழுப்பார்கள். 

    கிருத்துவ மதத்திற்கு மாறிய ஒரு பிராமண இளைஞனுக்கும்,  ஒரு கிருத்துவரைத் திருமணம் செய்துகொண்ட பிராமணப் பெண்ணிற்கும் உள்ள தடுமாற்றம்தான் இந்த நாவல்.  அவர்கள் இருவரும் மதம் மாறினாலும் முழுமையாக மாறமுடியவில்லை.

    ஹரி – ஸ்ரீ வித்யா, பீட்டர் – காயத்திரி, பாஸ்கரன் – ரேவதி – நாவலா என்று ஒன்றுடன் ஒன்று முரண்படுகிற  உறவு முறைகள்.  பிராமணன் ஆகிய ஹரி கிருத்துவனன் ஆகிவிடுகிறான்.  ஸ்ரீவித்யாவை திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் திரும்பவும் பூணூல் அணிந்துகொண்டு பிராமணனாக அவன் மாற வேண்டும்.  தடுமாற்றத்தால் அதை ஏற்றுக்கொள்ள தயங்குகிற ஹரி காதலை தொலைத்து விடுகிறான்.  அதனால் அவன் புத்தி பேதலித்துப் போய்விடுகிறது. 

    அதேபோல் பிராமணப் பெண்ணான காயத்திரி ஞானஸ்நானம் செய்துகொண்டு கிருத்துவ மதத்தைத் தழுவி பீட்டரை திருமணம் செய்து கொள்கிறாள்.  ஆனால் முழுவதுமாக அவள் கிருத்துவளாக மாற முடியவில்லை.  அந்த முரண் அவளுக்கும் பீட்டருக்கும் பிரச்சினையை உண்டாக்குகிறது.  

    நாவலா என்ற பெண், கணவன் மனைவி ஆகிய  பாஸ்கரன் ரேவதிக்கும் உள்ள உறவை குலைக்கிறாள்.  ஒருநாள் அலுவலகத்தில் எல்லோர் முன்னும் மூவருக்கும் பெரிய ரகளையே நடக்கிறது.  ரேவதி அழுது நாவலாவை  வேலையைவிட்டு போகும்படி வற்புறுத்துகிறாள்.  நாவலா அங்கிருந்து போவதால் இரண்டு பெண்களுக்கு மகிழ்ச்சி ஒன்று ரேவதி, இன்னொன்று ஸ்ரீ வித்யா.  நாவலா அவரகள் வேலை பார்த்த இடத்தை விட்டு வேற இடத்திற்குப் போனாலும் ஸ்ரீ வித்யாவிடம் நாவலா எங்கே இருக்கிறாள் என்பதை சொல்ல ஹரி  மறுக்கிறான்.  இதையே பாஸ்கரனும் ஹரியிடம் கேட்கிறான்.  நாவலாவை மறக்க முடியாமல்  அவன் அளவுக்கு அதிகமாகக் குடிக்கிறான். 

    உண்மையில் பாஸ்கரன் மனம் உடைந்து போனதால் அவன் நடத்திக்கொண்டிருந்த அந்தக் கம்பெனியை ஹரி எடுத்துச் செய்வதாக இருந்தது.  ஆனால் உண்மை வேறுவிதமாகப் போய்விட்டது.  அவன் காதல் குலைந்தவுடன், எல்லாம் குலைந்துபோகிறது. 

    ஹரி பழையபடி அவன் குடும்பத்துடன் சேர்ந்து விடுகிறான்.  அவன் திரும்பவும் பிராமணனாக மாற வேண்டி உள்ளது.   இதைத்தான் ஸ்ரீ வித்யா அவனிடமிருந்து அப்போது எதிர்பார்த்தாள். ரிஜிஸ்டர் திருமணம் செய்துகொள்ளக்கூட தயாராக இருந்தாள்.தன்னை கிருத்துவ மதத்திலிருந்து வெளியே இழுக்க முயற்சிக்கிறாள் என்று தவறாக அவன் நினைத்துவிட்டான்.   அப்போது அவன் அதுமாதிரி மாறத் தயாராக இல்லாததால் ஸ்ரீ வித்யா அவனுக்குக் கிடைக்கவில்லை.

    சாமுவேல்தான் சாத்தானின் உண்மையான பெயர். சாத்தானின் கதை படிக்க சுவாரசியமாக இருக்கிறது. சாத்தான் என்ற பெயர் உள்ளவன், கிருத்துவ மதத்தை நேசிப்பவனாக இருக்கிறான்.   அவனுக்கு லூசிஃபர் என்ற பெயரை வைக்கிறாள் நாவலா.  சாத்தான் யேசு காவியத்தை எழுதிக் கொண்டிருக்கிறான்.  அதைப் படித்துப் பார்த்த உற்சாகத்தில் நாவலா அந்தப் பெயரை அவனுக்குச் சூட்டுகிறாள். 

    பாஸ்கரன் மாறிவிட்டான்.  அவன் அலுவலகத்தில் பெண்களே இல்லை.  அவன் மனைவி ரேவதி தினமும் அவனுடன் அலுவலகம் வந்துவிட்டு போகிறாள். 

    இந்த நாவலில் யேசு வாழ்க்கை அற்புதமாக விவரிக்கப் படுகிறது.  சாத்தான் எழுதிக் கொண்டிருக்கிற யேசு காவியத்தைத்தான் அப்படி கொண்டு வருகிறாரோ நாவலாசிரியர் என்று தோன்றுகிறது. கிறிஸ்துவ சபையில் நடக்கும் ஊழல்களும், அதை வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்கும் அவலமும் விவரிக்கப்படுகிறது.  பாஸ்டர் ஜீவானந்தம் சிறந்த ஊழியர்.  எதையும் எதிர்பாராமல் விசுவாசத்துடன் ஊழியம் பார்ப்பவர்.  ஆவியானவர்தான் தன்னை வழி நடத்துவதாக சொல்கிறார்.  அவர் இருந்தால் சபை மோசமாகிப் போய்விடும் என்று அவரை நீக்கி விடுகிறார்கள்.  விசுவாசமிக்க ஒருவர் தூக்கி எறியப்படுகிறார்.  உண்மையில் பாஸ்டர் மைக்கேலுக்கு அடுத்ததாக இந்தச் சபையை வழி நடத்த  சரியான மேய்ப்பன் ஜீவானந்தம்.  அவர்தான் நீக்கப்படுகிறார். உண்மையில் பாஸ்டர் மைக்கேலுக்கு அவர் பையனைக் கொண்டு வர எண்ணம்.    நியாயமில்லை என்று தெரிந்தும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பாஸ்டர் ஜீவானந்தம் விலகிப் போய்விடுகிறார்.  அவர் மீது அக்கறை உள்ளவர்கள் அவர் என்ன  செய்யப்போகிறார் என்று கவலைப் படுகிறார்கள் விசுவாசமுள்ள சிலரை வைத்துக்கொண்டு புதிய இலட்சிய சபையை உருவாக்குகிறார். 

    காயத்திரி முற்றிலும் மாறி விடுகிறாள்.  பைபிளை கிழித்தவள், கூச்சல் போட்டவள்.  இப்போது ஞாயிற்றுகிழமைகளில் சிறு பிள்ளைகளுக்கு வகுப்பு நடத்துகிறாள்.  பீட்டருக்காக மாறி விடுகிறாள்.

    பாஸ்டர் ஜீவானந்தம்  போட்டியாக புதிய இலட்சிய சபை  ஆரம்பித்ததால் சிலரால் தாக்கப்படுகிறார்.  அவர் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது.  அவருக்கு பிறகு அந்தப் பொறுப்பை லூசிஃபர் என்கிற சாத்தான்தான் ஏற்றுக் கொள்கிறான். இதுதான் பாஸ்டர் ஜீவானந்தம் விருப்பம் கூட.  இது மாதிரி நிகழ்வு ஏற்படுமென்பதை முன்னமே அவர் தீர்மானித்துவிடுகிறார். 

     இத்தனை கதாபாத்திரங்களையும் திறமையாக கையாள்கிறார்.  எந்த இடத்திலும் கிருத்துவ மதத்தை நாவல் மூலம் போதிக்கும்படி எழுதவில்லை.  அந்தச் சமுதாயத்தில் நடக்கும் முரணை நாசூக்காகக் கொண்டு வருகிறார்.  ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ஞானஸ்நானம் பெற பயன்படும் தொட்டியைப் பற்றி விவரிக்கிறார்.  ஞானஸ்நானம் செய்த பிறகு ஒருவர் கிறித்துவ மதத்திற்கு மாற்றப்பட்டு விடுகிறார். அதைப் பெறுவதற்கு பலர் க்யூவில் இருப்பதாக விவரிக்கிறார்.

    இந்த மதத்தைப் பற்றி தெரியாத வாசகர்களுக்கு இது புதிய தகவலாக இருக்கிறது.  மதம் மாற ஞானஸ்நானம் என்ற ஒன்று தேவை என்பதே எனக்கு இந்த நாவலைப் படித்தப் பிறகுதான் தெரிந்தது. மேலும் சில இடங்களில் சில தெறிப்புகளை வெளிப்படுத்துகிறார்.  முதுமையைப் பற்றி ஒரு இடத்தில் சொல்கிறார்.  அழுகையைப் பற்றி இன்னொரு இடத்தில் சொல்கிறார்.  திறமையாக எழுதப்பட்ட எழுத்து.
   
தேவன் மனிதன் லூசிஃபர் – நாவல் – சைலபதி – பக்கம் : 224 – விலை : 150 – இராசகுணா பதிப்பகம், 28 முதல் தளம், 36வது தெரு, பாலாஜி நகர் விரிவு, சின்னம்மாள் நகர், புழுதிவாக்கம், சென்னை 91-செல் 9444023182   
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       

   

காந்தி எங்கே?

அழகியசிங்கர்

    காந்தி ஜெயந்தி அன்று நாம் எல்லோரும் சுலபமாக காந்தியை     மறந்துவிட்டு அவருடைய பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறோம்.  அவருடைய படத்துக்கு அரசியல் பிரமுகர்கள் மாலை அணிவித்து டிவியில், செய்தித் தாள்களில் முகம் காட்டுகிறார்கள். 

    டிவிக்கள் காந்தி ஜெயந்திக்காக விதம் விதமான காட்சிகளை ஒளிபரப்புகின்றன.  தெருக்களில் எப்போதும் உள்ள கூட்ட நெரிசல் இன்று இல்லை.  இன்று இன்னொரு ஞாயிற்றுக்கிழமை மாதிரி தோற்றம் தந்தது. 

    சரி காந்தி இன்று இருந்தால் என்ன ஆயிருக்கும்?  காந்தி இன்னொரு முறை அல்ல இன்னும் பலமுறை கோட்úஸ போன்றவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார்.  அவர் எதிர்பார்த்த மாதிரியான சமூகத்தை அவரால் உருவாக்கி இருக்க முடியாது. 

    வெள்ளையர்களிடமிருந்து அவரால் சுதந்திரம் வாங்கித் தர முடிந்தது.  ஆனால் அவர் நினைத்த மாதிரி இந்தியாவை அவரால் கொண்டு போயிருக்க முடியாது.  ஊழலும் வன்முறையும் தலைவிரித்து ஆடும் இந்தியாவைப் பார்த்து அவர் ரத்தக் கண்ணீர் விட்டிருப்பார்.  இந்த சுதந்திர இந்தியாவில் அவர் இருந்திருந்தால் ஒன்று அவர் பேசாமல் மௌனமாகத்தான் இருந்தாக வேண்டும்.  இல்லாவிட்டால் பித்துப்பிடித்த நிலையில் இருந்திருக்க வேண்டும்.

    இந்தியா அவர்  நினைவைப் போற்றும்படி ரூபாய்த் தாள்களில் அவர் புகைப்படத்தை கொண்டு வந்துவிட்டது.  திரும்ப திரும்ப அவரை நாம் ஞாபகப்படுத்திக் கொள்கிறோம். 

    யாருக்கும் அவர் மீது எந்த அக்கறை இல்லை.

மஹ்ஹான் காந்தீ மஹ்ஹான்

ஞானக்கூத்தன்

எழுந்ததும் கனைத்தார்; மெல்ல
சொற்பொழிவாற்றலானார்-

வழுக்கையைச் சொறிந்தவாறு
‘வாழ்கநீ எம்மான்’ என்றார்;

மேசையின் விரிப்பைச் சுண்டி
‘வையத்து நாட்டில்’ என்றார்
வேட்டியை இறுக்கிக் கொண்டு
‘விடுதலை தவறி’ என்றார்

பெண்களை நோட்டம் விட்டு
‘பாழ்பட்டு நின்ற’ என்றார்

புறப்பட்டு நான் போகச்சே
‘பாரத தேசம்’ என்றார்;

‘வாழ்விக்க வந்த’ என்னும்
எஞ்சிய பாட்டை தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள,

என்னால் ஏன் குடிக்க முடியவில்லை?

  என்னால் ஏன் குடிக்க முடியவில்லை?

  அழகியசிங்கர்


    பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்தாளர் வண்ணநிலவன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன்.  வழியில் ஒரே கூட்டமாக இருந்தது.  என்ன என்று பார்த்தேன்.  எனக்கும் வண்ணநிலவனுக்கும் தெரிந்த நண்பர்.  கவிஞர்.  குடி போதை அதிகமாகி தெருவில் படுத்து இருந்தார்.  பார்க்க பரிதாபமாக இருந்தது.  பின் அழைத்துக்கொண்டு வண்ணநிலவன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனேன்.  இப்போது கூட அந்தக் கவிஞர் குடிக்காமல் இருக்க மாட்டார். கையில் ரூ400 வைத்திருந்தால் ரூ 200 ஐ குடிப்பதற்காக எடுத்துக் கொண்டு விடுவார்.ஒரு முறை நான் ஏற்பாடு செய்த இலக்கியக் கூட்டத்திற்கு அவரைப் பேசச் சொன்னேன்.  அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.  நீங்கள் குடிக்காமல் கூட்டத்தில் பேச வேண்டும் என்று.  சரி என்று  சொன்னவர்.  கூட்டம் நடக்கத் தொடங்கும் சமயத்தில் குடித்துவிட்டு வந்து விட்டார். வயதில் பெரியவரான எழுத்தாளர் ஒருவரை ஏக வசனத்தில் கூப்பிட்டு அவர் பக்கத்தில் அமரச் சொன்னார்.  உண்மையில் அந்த எழுத்தாளரும் குடிப்பதில் வல்லவர்.  மடா குடியர்.  வயது அதிகரித்து விட்டதால் அவர் முழுக்க முழுக்க நிறுத்தி விட்டார்.     
 
    என்னுடைய பல எழுத்தாள நண்பர்கள் குடிகாரர்கள்.  அவர்களுடன் நான் பழகினாலும் என்னால் மட்டும் குடிக்க முடியவில்லை.  அதில் எனக்கு விருப்பமும் இல்லை.  குடிப்பது தவறா இல்லையா?  ஆனால் என்னால் மட்டும் ஏன் குடிக்க முடியவில்லை. 

    திருவனந்தபுரத்தில் ஒரு வயதான எழுத்தாளர் என்னுடைய நண்பராக இருந்தார்.  அவர் சென்னைக்கு வந்தால், என்னை மாம்பலம் ஹை ரோடில் உள்ள ஒரு ஒயின் கடைக்கு அழைத்துப் போகச் சொல்வார்.  அங்கு எல்லோருடனும் இவரைப் பார்க்கும்போது வித்தியாசமாய் இருக்கும்.  பிரான்டி வாங்கிக் கொள்வார்.  பின் அவர் சகோதரன் வீட்டிற்கு வந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பார். 

    ராத்திரி முழுக்க பேசிக் கொண்டிருப்பார்.  பகலில் மட்டும் சிறிது  நேரம் தூங்குவார்.  அவரால் குடியை நிறுத்த முடியவில்லை.  அவர் மரணம் அடையும்வரை குடித்துக்கொண்டே இருந்தார்.  அவர் திருமணம் செய்து கொள்ளாதவர்.   பல எழுத்தாள நண்பர்கள் அவரைப் பார்க்கப் போவார்கள்.  எல்லோரும் பாட்டில் வாங்கிக் கொண்டு போகாமல் இருக்க மாட்டார்கள். 

    குடியை எப்படி ஒழிக்க முடியும்?  எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தக் குடியை யாராலும் நிறுத்த முடியாது.  குடிப்பவர்கள் குடித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.  பூரண மது விலக்கு வந்தால் கள்ளச் சாராயம் பெருகி விடும்.  யாரும் குடிப்பதை நிறுத்த மாட்டார்கள். 

    நானும் ஒரு முறை குடித்துப் பார்த்தேன்.  அப்போது ஐஐடியில் உள்ள ஒரு கல்லூரி மாணவன் அறையில்  விஸ்கி என்ற திரவத்தை எல்லோரும் கலந்து கொடுத்தார்கள்.   அதைக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன்.  ஒரே தலைவலி.  வாந்தி எடுத்தேன்.  தூக்கம் வரவில்லை.   அதன் பின் எனக்கு அந்தச் சனியன் மீது நாட்டம் ஏற்படவில்லை.

    இந்தக் குடியை விரும்புவர்கள் என் நண்பர்களாக இருந்தாலும் என்னால் அதை மட்டும் செய்ய முடியவில்லை.  ஒரு காலத்தில் பீர் மாத்திரம் கொஞ்சம் குடித்துப் பார்த்தேன்.  என்னால் அதைக் கூட எப்போதும் தொட முடியவில்லை.

    குறிப்பாக குடிப்பது எதாவது சந்தோஷத்தை வெளிப்படுத்ததான்.  என் அலுவலக நண்பர் ஒருவருக்கு திருமணம் ஏற்பாடு நடந்தது.  அவர் எல்லோரையும் அழைத்துப் போய் விருந்து வைத்தார்.   பின் மிலிடரியில் கிடைக்கும் ஒயிட் ரம் ஒன்றை கலந்து எல்லோருக்கும் கொடுத்தார்.  பார்ப்பதற்கு குடிக்கும் தண்ணீர் மாதிரி இருந்ததை நானும் கால் டம்ளர் குடித்துப் பார்த்தேன்.  கொஞ்ச நேரத்தில் என் தலை மறத்து விட்டது.  நான் பயந்து விட்டேன்.  அதிலிருந்து துளியாய் ஒட்டிக்கொண்டிருந்த என் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. 

    எப்போதும் டாஸ்மா கடை முன் நின்றுகொண்டு குடிக்க வருபவர்களைப் பார்க்கும்போது எனக்குப் பரிதாபமாக இருக்கும்.  காளி என்ற கிராமத்தில் உள்ள ஒரு வங்கிக் கிளையில் பணி ஆற்ற சென்றேன்.  அங்கே ஒரு கீழ்நிலை ஊழியர்.  அடிக்கடி டீக் கடைக்குப் போவதுபோல் சாராயக் கடைக்குச் சென்று குடித்துவிட்டு வருவார்.  எனக்கு அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும்.  அவரை நம்பி இருக்கும் அவர் குடும்பத்தை நினைத்து வருத்தமாக இருக்கும்.  அவர் ஒரு முறை குடியில் பஸ்ஸில் சரியாக ஏற முடியாமல் கீழே விழுந்து அடிப்பட்டுக் கொண்டார்.  அவருக்கு யார் அறிவுரை கூறுவது.  இப்போது அவர் உயிரோடு இருக்கிறாரா என்பது கூட தெரியாது. 

    அதில் என்ன இருக்கிறது.  குடி எப்படி மக்களை மயக்குகிறது.  சிலர் பேத்தலாக சொல்ல கேட்டிருக்கிறேன்.  குடித்தால்தான் கவிதை  எழுத வரும் என்று.    அதை நான் நம்பவில்லை.  ஒருமுறை பிரமிள் பற்றி ஒரு கூட்டம் ஒரு ஓட்டலில் நடந்தது.  எல்லோரும் கையில் கிளாஸ்ஸில் தீர்த்தம் நிரப்பி அமர்ந்திருந்தார்கள்.  நானும் அங்கிருந்தேன்.  ஒரு சொட்டு கூட நான் குடிக்கவில்லை.  நீங்கள் நம்பாவிட்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது.  அங்கு நாங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததை ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை போட்டோ எடுத்து பத்திரிகையில் பிரசுரம் செய்திருந்தது.  நானும் இருந்தேன்.  ஆனால் குடிக்கவில்லை.

    எப்போதும் மது அருந்துதலையும், சிகரெட் பிடிப்பதையும் எதிர்ப்பது பாட்டாளி மக்கள் கட்சிதான் முன்னணியில் நிற்கிறது.  ஏன் எனில் அந்தக் கட்சியில் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் மருத்துவர்கள்.  ஆரம்ப முழுவதும் அந்தக் கட்சியில் உள்ள தலைவர்கள்  இதற்கு எதிராக உள்ளார்கள்.  மற்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்துகொண்டு மதுவிலக்கு பிரச்சாரம் செய்தாலும், மனப்பூர்வமாக மதுவிலக்கு வேண்டும் என்று நினைப்பது பட்டாளி மக்கள் கட்சியாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது.  எல்லாக் கட்சியிலும் தொண்டர்கள் குடிக்காமல் இருக்க மாட்டார்கள்.  ஒரு மாநாடு என்றால் குடித்துவிட்டு தடுமாறும் தொண்டர்கள் இல்லாமல் இருப்பதில்லை. 

    மதுவை முழுக்க முழுக்க நீக்க முடியுமா?   எனக்குத் தோன்றவில்லை அதை நீக்க முடியும் என்று. தனிப்பட்ட ஒவ்வொருவரும் திருந்தினால்தான் இது முடியும்.  அதையும் கேட்கும் நிலையில் யாருமில்லை.  நீ யார் அதைச் சொல்ல என்று சொல்பவர்கள் தான் அதிகம். 

    இதோ நான் எழுதுவதை நிறுத்தி விடுகிறேன்.  எங்கள் தெரு கோடியில் ஷண்முகம் குடித்துவிட்டு தள்ளாடியபடி வருகிறான்.
   
   

இரண்டு முக்கிய ஆவணப்படங்கள்


அழகியசிங்கர்   

    விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 16வது கூட்டம் நேற்று நடந்தது.
இரண்டு முக்கிய ஆவணப்படங்களை நேற்று ஒளி பரப்பினோம்.  ஒரு படம் அசோகமித்திரன் அவர்களிள் ஆவணப் படம்.  இன்னொன்று ஞானக்கூத்தன் படம்.  அசோகமித்ரன் அவணப்படத்தை கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன் அம்ஷன்குமார் இயற்றி உள்ளார்.  இக் கூட்டம் டிஸ்கவரி புத்தக பேலஸில் நடந்தது. 


    அசோகமித்திரன் பிறந்தநாள் கொண்டாட்டமாக  அவர் கேக் வெட்டினார்.  பின் அம்ஷன்குமார் அவர் ஆவணப்படத்தைத் தயாரித்த விதத்தைப் பற்றி தன் அனுபவங்களைளப் பகர்ந்து  கொண்டார்.  இந்த ஆவணப்படத்தைத் தயாரிப்பதற்காக அசோகமித்திரன் வாழ்ந்த இடமான ஹைதராபாத்திற்கே  சென்று எடுத்திருக்கிறார். 

    அவர் ஆவணப்படத்தைப் பார்க்கும்போது அது ஒரு கதைபோல் எடுக்கப்பட்டிருந்தது.  அம்ஷன் குமார் குறிப்பிட்டார்.  ஒரு ஆவணப்படத்தை எடுக்கும்போது அந்தப் படத்தின் முக்கிய நாயகரான அசோகமித்திரன் இருப்பது ஆவணப்படத்திற்கு அதிக வலு சேர்க்கும் என்று.  அவரைப் பொறுத்தவரை இது எட்டாவது படம் என்றார்.  30 நிமிடங்கள் போனதே தெரியாமல் சுவாரஸியமான படமாக அது இருந்தது குறிப்பிடத்தக்கது.

    விஷ்ணுபுரம் இலக்கியம் சார்பாக வினோத் அவர்கள் ஞானக்கூத்தன் பற்றி ஒரு ஆவணப்படத்தை எடுத்திருந்தார்.  இது அவருடைய முதல் முயற்சி.  40 நிமிடங்களுக்கு மேல் இப்படம் எடுத்திருந்தார்.  சில குறைபாடுகள் இந்த ஆவணப்படத்தில் தெரிந்தாலும் திறமையாக எடுக்கப்பட்ட படம்.  அம்ஷன்குமார் படம் ஒரு கதைபோல் இருந்தது, ஆனால் வினோத் படத்தில் எல்லோருமு; மாறி மாறி ஞானக்கூத்தன் பற்றியும், அவர் கவிதைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பதாகப் பட்டது. 

    ஆவணப்படத்தில் பேச்சு  என்பது முக்கியமாகப் படுகிறது.  அம்ஷன்குமார் படத்தில் சற்று குறைவாகவும் ஞானக்கூத்தன் ஆவணப்படத்தில் சற்று தூக்கலாகவும் தெரிந்தது.  மேலும் ஞானக்கூத்தன் கோயிலில் பேசுகிற பேச்சு சற்று இரைச்சலாக காதில் விழுந்தது.  அதற்குக் காரணம் அந்தப் பகுதி எடுக்கும்போது எதிர் காற்று அடித்துக் கொண்டிருந்ததாக வினோத் குறிப்பிட்டார். 

    இன்னும் சில இடங்களில் ஆவணப்படத்தில் உள்ள வெளிச்சம் சற்று குறைந்து போனது போல் தோன்றியது.   ஆனாலும் வினோத் திறமையாக படத்தை எடுத்திருந்தார்.  அவர் குறைவாகவே இந்த ஆவணப்படத்தை எடுக்க பணம் செலவழித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.  இந்த ஆவணப்படத்தைப் பார்க்க வினோத் குடும்பமே வந்திருந்தது.  ‘இந்தப் படம் பார்க்க ஒரு கவிதை மாதிரி இருந்தது,’ என்று அசோகமித்திரன் தன் கருத்தை வெளிப்படுத்தினார்.

    இந்த இரண்டு ஆவணப்படங்களைப் பார்த்து முடித்தவுடன், நான் க்ளிக் ரவி எடுத்த அசோகமித்திரன் 2012 என்ற விடியோ படத்தை யும் ஒளி பரப்பினேன். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் எல்லோரும்  பாரதியார் இல்லத்தில் பேசியதை நினைவு கூர்வது போல் இருந்தது அந்த விடியோ படம். 

    இந்தத் தருணத்தில் எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.  குறும்படம், ஆவணப்படம், விடியோ படம் மூன்றுக்கும் என்ன வித்தியாசம். 

    குறும்படம் நடிகர்களை வைத்துக்கொண்டு ஒரு கதையை அடிப்படையாக வைத்து எடுப்பது.  அதில் எல்லாம் செயற்கையாக ஒரு காட்சியை உருவகப்படுத்த வேண்டும். படத்தில் ஆரம்பம் முடிவு எல்லாம் இருக்கும்.  ஒரு சினிமாவின் சிறு அம்சமாக அது தெரியவரும். 

    ஆவணப்படம் என்பது யார் பேரில் படம் தயாரிக்கப் படுகிறதோ  அவரைப் பற்றி பல விபரங்களுடன் படத்தை எடுக்க வேண்டும.  இதில் பெரும்பாலும் உண்மை கலந்த விபரம் இருக்கும். 

    மூன்றாவதாகிய விடியோ படத்தில் ஒரு காட்சி நம் முன் நடப்பதை அப்படியே பதிவு செய்வது.  விடியோ படம் எடுப்பது செலவு குறைவு.  அசோகமித்திரன் 2012 படம் எடுக்க நான் செலவு செய்த தொகை 6500 ரூபாய்.  ஆனால் குறும்படமும், ஆவணப்படமும் அதிகம் செலவு வைத்துவிடும். க்ளிக் ரவியால் பதிவு செய்யப்பட்ட விடியோ படத்தில் பேசுபவர்கள் பேச்சு தெளிவாக எல்லோருக்கும் கேட்கும்படி விழுகிறது.  இது எனக்கு ஆச்சரியம்.    எடிட்டிங் அது இது என்று மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டாம்.  என்னால் சுலபமாய் பல விடியோ படங்களை ஆவணப்படம் போல் எடுத்துவிட முடியும் என்று   தோன்றுகிறது

    அசோகமித்திரன் 2012 விடியோ படத்தில் கடைசி காட்சியில் அசோகமித்திரன் பேசுவதை எல்லோரும் ரசித்து சிரித்தோம்.
    பொதுவாக மூன்று படங்களையும்  எல்லோரும் ரசித்தோம்.  ஞானக்கூத்தன் ஆவணப்படத்தில் கடைசியில் ஞானக்கூத்தன் அவருடைய கவிதை வாசிப்பார்.  அதைக் கேட்டு எல்லோரும் ரசித்து கைத்தட்டினார்கள்.

    தொடர்ந்து ஆவணப்படங்கள் இப்படி ஒளி பரப்ப முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்.  தமிழில் ஏகப்பட்ட ஆவணப்படங்கள் பலரால் எடுக்கப்படுகின்றன.  மேலும் வேறு மொழி ஆவணப்படங்கள் சாகித்திய அக்காதெமி  போன்ற அமைப்புகள் எடுத்துள்ளன.  ஆனால் அவற்றை எல்லாம் ஒளிபரப்ப முடியுமா என்பது தெரியவில்லை.
   
   
   

விருட்சம் பத்து கேள்விகள் பத்து பதில்கள் மற்றும் கவிஞர் வைதீஸ்வரனின் ஓவியங்கள்


விருட்சம் பத்து கேள்விகள் பத்து பதில்கள் (10:10) தொடரில்
கவிஞர் எஸ். வைதீஸ்வரன்                      காணொளி

கவிஞர் வைதீஸ்வரன் ஒரு சிறந்த ஓவியரும் கூட. அவரது சில ஓவியங்கள்

எது ஆபாசம்?

அழகியசிங்கர்    
    லெகின்ஸ் ஆபாசம் என்ற தலைப்பில் இந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் ஒரு கட்டுரையை பிரசுரம் செய்திருந்தது.  அந்தக் கட்டுரையை வெளியிட்ட விதம் இன்னும் ஆபாசமாக இருந்தது.  அதைப் படிக்கும்போது எல்லாமே ஆபாசமாக இருந்தது.
    ஒருமுறை ஜே கிருஷ்ணமூர்த்தியை அவருக்கு உதவி செய்யும் பெண் ஒருவள் ஒரு கேள்வி கேட்கிறாள்.  “கிருஷ்ணாஜி. உங்களுக்கு செக்ஸ் உணர்வே இல்லையா?” என்பதுதான் கேள்வி.  அதற்கு அவர் பதில் சொல்கிறார்: எனக்கு ஒரு பெண்ணின் கையைத் தொடும்போதே அந்த உணர்வு ஏற்பட்டுவிடும் என்று. அவருடைய பதில் என்னை பலவாறு சிந்திக்கத் தூண்டியது.
    உண்மையில் ஒரு பெண்ணைப் பார்க்கும்போதோ தொடும்போதோ ஒரு ஆணிற்கு ஏற்படும் இயல்பான நிலையில் செக்ஸ÷ம் ஒரு அங்கம்தான்.  இதில் எந்த ஆணும் தப்பித்து விட முடியாமா என்பது தெரியவில்லை. 
    ஒரு பெண் எந்த ஆடையைப் போட்டிருந்தாலும் ஆணின் கபட பார்வையிலிருந்து தப்ப முடியாது.  நான் அலுவலகத்தில் பணிபுரிந்தபோது டீ ஷர்ட் போட்டுக்கொண்டு  அலுவலகத்திற்கு பணிபுரிய ஒருவர் வந்திருந்தார்.  மேலதிகாரி அவரைக் கூப்பிட்டு, “இது மாதிரி டிரஸ் செய்துகொண்டு அலுவலகத்திற்கு வரக்கூடாது,” என்று மிரட்டி வீட்டிற்கு அனுப்பி விட்டார்.  
    ஆனால் விளையாட்டில் கலந்து கொள்ளும் ஒரு பணிபுரியும் பெண்மணியைப் பார்த்து மேலதிகாரி யாரும் ஒன்றும் சொல்வதில்லை.  அப்படி வருபவர் ‘பேன்ட், ஷர்ட்’ போட்டுக்கொண்டு வருவார்.
    ஒரு ஆணின் கண்களில் ஒரு பெண் படாமல் தப்பிக்க முடியாது.  அதனால் எல்லா ஆண்களின் பார்வையும் மோசமானது என்றும் சொல்லமுடியாது.  எனக்கு இன்னும்கூட ஞாபகம் இருக்கிறது.  நானும் ஒரு நண்பனும் அக்கொளன்டன்சி கற்றுக்கொள்ள ஒரு ஆசிரியர் வீட்டிற்குச் சென்றோம்.  சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்கும்போது ஆசிரியருடைய தங்கை அந்தப் பக்கம் தலையைக் காட்டிவிட்டாள்.  அவள் எங்களைத் தாண்டி எதோ எடுத்துக்கொண்டு போக  வேண்டும்.  வாத்தியார் கண் ஜாடை மூலமாக அந்தப் பெண் ணை எங்களைத் தாண்டி வரவேண்டாம் என்று தடுத்து விட்டார்.
    இந்தக் காட்சியை நினைத்துப் பார்த்து நானும், நண்பரும் ஒவ்வொருமுறையும் சிரிப்போம். அந்தச் சமயத்தில் உண்மையில் நாங்கள் நல்லவர்கள்.  எந்த கெட்ட எண்ணமும் இல்லாதவர்கள்.
    தமிழ்நாட்டில் பஸ்ஸில் சென்றால் ஒரு பெண் பக்கத்தில் ஒரு ஆண் அமர்ந்துகொண்டு செல்லமுடியாது.  ஆனால் வடநாட்டில் ஏன் பெங்களூரில் ஒரு பஸ்ஸில் சென்றால் எந்தப் பெண்ணும் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஆணைப் பார்த்து எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. முதலில் நான் டில்லி சென்றபோது இதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  பெண்கள் சகஜமாக உட்கார்ந்துகொண்டு பயணம் செய்தார்கள்.  ஆனால் தமிழ்நாட்டில் இருந்தால் ஏதோ ஆகிவிட்டதுபோல் பெண்கள் லபோ திபோ என்று கத்த ஆரம்பித்து விடுவார்கள். அதுவும் மாயவரம் பக்கமாக உள்ள கிராமத்தில் நீங்கள் பஸ்ஸில் பயணம் செய்தால் தெரிந்துகொள்ளலாம்.
    இப்படிச் சொல்வதால் பெண்கள் பக்கம் நியாயம் இல்லை என்று சொல்லவில்லை.  பெண்களை இடிப்பதற்காகவே பஸ்ஸில் பயணம் செய்யும் ஆண்களும் உண்டு.
    சமீபத்தில் நான் என் வங்கியில் பாஸ்புக்கில் என்டிரி போடச் சென்றேன்.  அப்போது கவுண்டரில் உட்கார்ந்திருந்த பெண்மணி சொன்ன விஷயம் என்னைத் திகைக்க வைத்தது.
    “சார், என்னதான் சொல்லுங்கள்…ராத்திரி ஆகிவிட்டால் வீதியில் நாங்கள் ஆண் துணையில்லாமல் வெளியே வர முடியுமா?”
    கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவர்கள் சொல்வதில் எல்லாவித நியாயமும் இருப்பதாகப் படுகிறது.  இது மாதிரி ஒரு நிகழ்வு நடக்கும்போது பெண்கள் எதுமாதிரி உடை போட்டுக்கொண்டிருந்தால் என்ன…
    ஒரு பெண்ணின் பிரச்சினை ஆணின் கண்களுக்குத் தெரியாமல் பெண்ணின் எந்தப் பகுதியும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.  அதற்கேற்றாற் போல் துணியை அவர்கள் அணிந்துகொள்ள வேண்டும்.   ஆனால் ஆணின் பார்வையோ பெண்ணின் எந்தப் பகுதி கண்ணில் படுகிறது என்பதை ஆராய்வதுதான்.   இந்த சங்கடம் ஒரு பெண்ணிற்கு எப்போதும் இருக்கத்தான் செய்யும்.  அதனால் எந்தப் பெண்ணிற்கும் ஆணைப் பார்த்தால் மரியாதை பெரிதாக இருக்காது. 
    ஆனால் உண்மையில் ஒரு  பெண் ஒரு ஆணை எப்படிப் பார்க்கிறாள் என்பதும் தெரிந்துகொள்ள வேண்டும். ஆணைப் பார்க்க பெண்ணும் விரும்புவாளா?
    இன்று மதியம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் மசால்வடை வாங்கச் சென்றேன்.  எப்போதும் அங்கே  ஆண்கள்தான் தின்பண்டங்களை எடுத்துக் கொடுப்பார்கள்.  இன்று அதிசயமாக ஒரு பெண் உதவி செய்து கொண்டிருந்தாள்.  நான் வீடு வரும்வரை அந்தப் பெண் அத்தனை ஆண்களின் நடுவில் என்ன யோஜனை செய்து கொண்டு இருப்பாள் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.   அந்தப் பெண் தொடர்ந்து அங்கு பணிபுரிவாளா என்ற சந்தேகமும் எனக்குத் தோன்றியது.
    ஒரு கேள்வி பதில் கூட்டத்தில் ஜே கிருஷ்ணமூர்த்தி பிரமாதமாக உடை உடுத்திக்கொண்டு அமர்ந்திருந்தார்.  அவரைப் பார்த்து கூட்டத்தில் உள்ள ஒருவர் ஒரு கேள்வி கேட்டார்.  “நீங்கள் ஏன் இப்படி டிரஸ் செய்து கொண்டு வருகிறீர்கள்?” என்று.  எனக்கோ திகைப்பு.  எப்படி இதற்கு பதில் சொல்லப் போகிறார் என்ற திகைப்புதான்.  ஆனால் அவர் பதிலைக் கேட்டு நான் அசந்து விட்டேன்.  “மற்றவர்களுக்கு மரியாதைக் கொடுப்பதற்குத்தான் இதுமாதிரி டிரஸ் செய்து கொள்கிறேன்,” என்று.
 அதைத்தான் நானும் பெண்களிடம் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் வீட்டில் எப்படி வேண்டுமானாலும்  இருங்கள்.  ஆனால் வெளியே வரும்போது, உங்களைப் பார்க்கும்போது மற்றவர்களுக்கு மரியாதை வரவேண்டும்.  இப்படி சொல்வது ஆண்களுக்கும் சேர்த்துதான்.
     

இருவரின் பிறந்தநாள்

அழகியசிங்கர்
தமிழில் முக்கியமான படைப்பாளிகளான அசோகமித்திரன், எஸ் வைதீஸ்வரனின் பிறந்த நாள் இன்று.  இருவரும் ஒரே நாளில் பிறந்துள்ளார்கள்.  வைதீஸ்வரனுக்கு 80 வயது முடிந்து விட்டது. அசோகமித்திரனுக்கு 85 வயது.  முதலில் இருவருக்கும் என் பிறந்த தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என் சார்பாகவும், விருட்சம் சார்பாகவும்.
நான் பெரும்பாலும் அசோகமித்திரன் புத்தகங்களைத்தான் படித்துக்கொண்டிருப்பேன்.  அவருடைய எல்லா நாவல்களையும், சிறுகதைகளையும் படித்திருக்கிறேன்.  சமீபத்தில் சாருநிவேதிதாவும், ஜெயமோகனும் குறிப்பிட்டிருப்பதுபோல உலக அளவில் சொல்லப்பட வேண்டிய எழுத்தாளர் அசோகமித்திரன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.  ஏன் இந்தியா அளவில் அசோகமித்திரனுக்கு இணையாகச் சொல்லக்கூடிய எழுத்தாளர் யாராவது உண்டா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது.  
அசோகமித்திரனின் துரதிருஷ்டம் அவர் தமிழ்நாட்டு எழுத்தாளராகப் போய்விட்டார்.  அவரே வங்காளி எழுத்தாளராகவோ மலையாள எழுத்தாளராகவோ இருந்திருந்தால், அவர் புகழ் இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கும். ஞானபீட பரிசு என்று சொல்கிறார்களே அது நிச்சயமாகக் கிடைத்திருக்கும். இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளராக அவரை நிச்சயம் சொல்லியிருப்பார்கள்.  தமிழ்நாட்டில் மட்டும் நடிகர்கள், அரசியல்வாதிகள்தான் முக்கியம்.   அவர்களை துதிபாடும் கும்பல்கள்தான் அதிகம்.  
துதிபாடும் அளவிற்கு தகுதி உள்ள எழுத்தாளராக இருந்தாலும், அசோகமித்திரன் அதை விரும்ப மாட்டார்.  அவர் தன்னைப் பற்றி புகழ்ந்து பேசுவதைக்கூட எப்படி எடுத்துக்கொள்வார் என்பது தெரியாது.  பத்து கேள்விகளும், பத்து பதில்களும் என்ற வீடியோ பேட்டியில் ஒரு கேள்வி. அவருடைய முதல் படைப்பு எப்போது பிரசுரமானது என்று.  இதற்கு பதில் சொல்லும் அசோகமித்திரன் அது வந்த பத்திரிகையும், ஆண்டை மட்டும் சொன்னால் போதும்.  ஆனால் கூட ஒரு விஷயத்தையும் அவர் குறிப்பிடுகிறார்.  üஅக் கதையை அவ்வளவு சிறப்பாக சொல்லமுடியாது,ý என்று.  இது மாதிரி எந்தப் படைப்பாளியாவது கூறுவார்களா என்பது சந்தேகம்தான்.  தான் எழுதுவது மட்டுமல்லாமல், மற்றவர்கள் எழுதுவதையும் அவர் கூர்ந்து கவனிக்கிறார். அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில் அவர் தயங்குகிறார்.  எதைப்பற்றியாவது யாரைப்பற்றியாவது அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர் மௌனத்தின் மூலமாகக் கண்டுபிடித்து விடலாம்.  
2012ல் நான் சென்னைக்கு மாற்றலாகி வந்தபோது திருவல்லிக்கேணியில் உள்ள வங்கிக் கிளையில்  பணிபுரிய வாய்ப்பு கிட்டியது.  அந்த ஆண்டில் அசோகமித்திரனின் இதே 22ஆம்தேதி சனிக்கிழமை அன்று பாரதியார் இல்லத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தேன்.   அப்போது நான் கூட்டம் நடத்துவதையே விட்டுவிட்டேன்.  ரொம்ப மாதங்கள் கழித்து அசோகமித்திரன் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தேன்.  கூட்டம் வராவிட்டால் என்ன செய்வது என்ற பயம் என்னைத்  தொற்றிக்கொண்டதால்,  பேசுவதற்கு பலரை அழைத்திருந்தேன்.  கிட்டத்தட்ட 25  பேர்களுக்கு மேலிருக்கும்.  கூட்டத்திற்கு வருபவர்களைவிட பேசுபவர்கள் அதிகம் பேர்கள் இருக்கட்டும் என்பதுதான் என் திட்டம்.  
ஆனால் எதிர்பாராதவிதமாய் கூட்டம் அதிகமாக வந்தது என்பதோடல்லாமல்,  பேசுபவர்கள் எல்லோரும் அசோகமித்திரனைப் பாராட்டிப் பேசினார்கள்.  இது நானே எதிர்பார்க்காத ஒன்று. பொதுவாக இலக்கியக்கூட்டம் என்றால் 20 பேர்களுக்கு மேல் வர மாட்டார்கள். வருபவர்கள் பெரும்பாலோர் குறைந்தபட்சம் 50 வயதுக்கு மேல் இருப்பார்கள்.  பெண்களைப் பார்ப்பது கடினம். கடந்த பல ஆண்டுகளாக கூட்டம் நடத்திய அனுபவத்தால் நான் தெரிந்துகொúண்ட ஒன்று.  
எப்போதும் கூட்டங்களைப் பதிவு செய்யும் வழக்கம் எனக்குண்டு.  ஒரு ஆடியோ காசேட்டை வைத்துக்கொண்டு பேசுவதைப் பதிவு செய்வேன்.  அசோகமித்திரன் கூட்டத்தையும் வீடியோ ஆடியோ மூலம் பதிவு செய்தேன். கூட்டம் என்றால் பரபரப்பு அடைந்துவிடுவேன்.  ஆனால் மனதிற்குள் சொல்லிக்கொள்வேன் பரபரப்பு அடையாதே அடையாதே என்று. உண்மையில் கூட்டம் அதிகம் வந்தாலும் பரபரப்பு அடைந்து விடுவேன்.   அதேபோல் வராவிட்டாலும் பரபரப்பு அடைந்துவிடுவேன்.   ஒவ்வொரு முறையும் நான் எனக்குள் சொல்லும் வழக்கம் கூட்டம் நடப்பது நம் கையில் இல்லை என்பது.
அன்று உண்மையில் அசோகமித்திரனுக்காக அத்தனைப் பேர்களும் வந்தார்கள்.  ஒவ்வொருவரும் அசோகமித்திரன் ரசிகர்கள்.  கூட்டத்தில் பேசுவதற்காக பல படைப்பாளிகள் வந்தார்கள் என்றால் அவருடைய ரசிகர்கள் பலர் வந்திருந்தார்கள்.  ஒரு கூட்டம் என்றால் பேசுபவர்களை வரவழைக்க பல ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.  அசோகமித்திரனை மட்டும் குடும்பத்தோடு அழைத்துவர சுந்தர்ஜி என்ற நண்பர் உதவி செய்தார்.  பேசுபவர்கள் எல்லோரும் அவராகவே வந்தார்கள்.  இதெல்லாம் அசோகமித்திரன் மீது உள்ள அன்பால் நடந்தது.  
ஆனாலும் அசோகமித்திரன் போன்ற எழுத்தாளருக்கு இதைவிட அதிக கவனம் வேண்டும்.  இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பது என் என் எண்ணம்.  
வைதீஸ்வரன் என்ற பெயரை நான் விருட்சம் பத்திரிகை ஆரம்பிக்குமுன்பே அறிவேன்.  ஆனால் எழுதாமல் அவர் ரொம்ப ஆண்டுகள் காணாமல் போய்விட்டார்.  தமிழ் சூழலில் இதெல்லாம் சகஜம்.  நான் நடத்திக்கொண்டிருந்த பத்திரிகையில் அவர் படைப்புகள் குறிப்பாக கவிதைகள் வர வேண்டுமென்று நினைத்தேன்.  அவர் என் வீட்டில் பக்கத்தில் இருந்தார். உடனே அவரை நேரில் போய்ப் பார்த்தேன்.  முதன் முதலாக திரும்பவும் அவருடைய கவிதைகளை வாங்கி விருட்சத்தில் பிரசுரம் செய்தேன்.  கவிதைகள் மட்டுமல்ல கட்டுரைகளும் எழுதித் தருவார்.  அவர் ஒரு ஓவியரும் கூட.    விருட்சத்திற்காக ஓவியமும் வரைந்து கொடுத்திருக்கிறார்.
எழுத்து காலத்திலிருந்து எழுதும் மூத்தக் கவிஞர் அவர்.  அவர் கவிதைகளில் ஒரு தார்மீகக் கோபம் இருக்கும்.  தத்துவ வெளிப்பாடு இருக்கும்.  இயற்கையைப் பற்றிய அக்கறை இருக்கும்.  என்னைப் பொறுத்தவரை கவிதை வாசிப்பதில் ஒரு  அனுபவம் என்னவென்றால் தொடர்ந்து கவிதையை வாசிக்கக் கூடாது.  ஒரு கட்டத்தில் கவிதையைப் படித்துக்கொண்டு வரும்போது நிறுத்திவிட்டு கவிதையை அசைப் போட வேண்டும்.  வைதீஸ்வரன் கவிதையை நீங்கள் இப்படித்தான் படிக்க வேண்டும்.  
இதோ விருட்சத்தில் எழுதிய அவருடைய கவிதை ஒன்று. 
உலகத்தில்
எல்லோரையும் போல்
ஏற்றிவிட்ட ஏணிகளை
ஏறியவுடன் உதறிவிட வேண்டும்
என்பதுதான் எனக்கும் ஆசை
ஆனால் ஏணிகளோ
என் கால்களுக்கடியில்
முளைத்துக்கொண்டே யிருக்கின்றன
ஓயாமல்…..
ஆயுள் முழுவதும் பரமபத வாழ்வு
படிகளை உதறுவதற்கு 
சந்தர்ப்பம் கிடைப்பதில்லை
எப்போதும்..
இப்போதெல்லாம்
ஏணிகளே என்னை உதறி விடுகின்றன
பலசமயம் 
தன்னை மிதிக்கும் கால்களை சற்றே
தோள் மாற்றிப் பார்க்க.

எதையாவது சொல்லட்டுமா? ….101

 எதையாவது சொல்லட்டுமா? ….101

 அழகியசிங்கர்

 
 
 எனக்கு கார் வாங்கும் எண்ணமே நானோ கார் பற்றிய விளம்பரம் பார்த்தவுடன்தான் தோன்றியது.  ஒரு லட்சம் ரூபாய்ககு ஒரு காரா என்ற வியப்புத்தான் அதற்குக் காரணம்.  ஆனால் நான் முயற்சி செய்தபோது அதன் விலை ஒரு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் ரூபாய் வரை போய்விட்டது. 

 வேளச்சேரியில் உள்ள அந்தக் கடையின் முன்னால் நாநோ காரை எடுத்துக்கொண்டு வரும்போது, நான், மனைவி, மாமியார் மூவரும் கார் முன்னால் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொண்டோம். அந்த மாதிரி போட்டோவை கார் விற்பவர்களே எடுத்து எங்கள் கையில் கொடுத்தார்கள். 

 காரை எடுத்துக்கொண்டு போக ஒரு டிரைவரை ஏற்பாடு செய்தேன்.  அவருக்கு ரூ.200 கொடுத்தேன்.  காரை க்ரோம்பேட்டை வரைச் சென்று என் மனைவியின் இளைய சகோதரி வீட்டிற்குப் போனோம்.  üüநானோ வாங்கிவிட்டேன்.  நானோ வாங்கிவிட்டேன்,ýý என்று பெருமை அடித்துக் கொண்டேன்.

 அதன் பின் தான் பிரச்சினை ஆரம்பித்தது.  காரை எடுத்துக் கொண்டு போய் என் பெண் வீட்டில் போய் வைத்தேன்.  என் வீட்டில் காரை நிறுத்த ரோடிற்குத்தான் செல்ல வேண்டும்.  போஸ்டல் காலனியில் நாங்கள் இருந்தபோது எங்கள் இடம் ஒரு குறுகிய இடம். டூ வீலரை வைத்துக்கொள்ளவே இடம் போதாது. 

 நான் அப்போது மயிலாடுதுறையில் பணி புரிந்து கொண்டிருந்தேன்.  வாரம் ஒரு முறை சென்னை வருவேன்.  பெண் வீட்டிற்குச் சென்று நானோ காரை கற்றுக்கொள்ள முயற்சி செய்வேன்.  என் மருமகன்தான் எனக்குக் கற்றுக்கொடுக்க வருவார்.  அவருக்கு என்கூட வந்து கற்றுத் தரவே விருப்பம் இருக்காது.  அதனால் பல வாரங்கள் விட்டுப் போய்விடும். 

 பின் நான் இருக்கும் இடத்திற்கு நானோ காரை எடுத்துக் கொண்டு வந்தேன்.  நான் ஓட்டவில்லை.  யார் மூலமோ? வாசல் கேட் வழியாக வண்டியை வைத்தேன்.  காலையில் எழுந்து ஓட்டலாம் என்று வண்டியைத் தொட்டேன்.  நானோ கார் முன்னால் இன்னொரு கார் நின்றிருந்தது.  பின் பக்கமாக வண்டியை தள்ளும்போது, வண்டி பின்னால் உள்ள கார் மீது மோதி விட்டது.  என் நானோ காருக்கு ரோஷம் அதிகம்.  அது அதன் பின்னால் அசையாமல் நின்று விட்டது.

எடுத்துப் போக ஆள் கூப்பிட வேண்டியாகி விட்டது.  பணம பழுத்து விட்டது.
 நான் மயிலாடுதுறையிலிருந்து சென்னை வந்து விட்டேன்.  நானோ டூ வீலரில் போவேன்.  நானோ காரோ வாசலில் என்னைப் பார்த்து ஏக்கத்துடன் நின்று கொண்டிருக்கும். 

 அதன் பின் நாங்கள் வேற வீடு மாறினோம்.  கார் வைத்துக்கொள்ளும்படி ஒரு வீடு.  அங்கு போனபின்தான் நான் காரை ஓட்டக் கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன். 

 காலையில் வண்டியை எடுத்துக்கொண்டு போகும்போது திக் திக் என்று அடித்துக் கொள்ளும். 

 வண்டியை கேட் வழியாக மெதுவாக மெதுவாக இறக்குவேன்.  அதற்குள் மனதிற்குள் ஆயிரத்தெட்டு கற்பளைகள் ஓடும்.  எங்காவது கார் இடித்து விடுமோ என்ற விபரீத கற்பனைதான்.

 இப்படியாக சிரமப்பட்டு நானோ காரை எடுத்துக்கொண்டு பெண்கள் படிக்கும் கார்ப்பரேஷன் பள்ளி உள்ள இடத்தில் வைத்துவிட்டு வாக் போவேன்.  அப்போது என் கற்பனை முழுவதும் காரை ஓட்டுவது பற்றி இருக்கும்.

 ஒருமுறை நானோ காரை இரண்டாவது கேட் வழியாக உள்ளே வைக்க முயற்சிக்கும்போது கேட்டின் மீது நன்றாக இடித்து விட்டது.  அதன் சத்தம் பயங்கரமாக இருந்தது.  சத்த அதிர்வில் தெரு விளக்கு உடைந்து கீழே விழுந்து விட்டது.  கேட் சரி செய்ய 2000 ரூபாய் ஆயிற்று.  ஆனால் நானோ காருக்கு ஒன்றும் ஆகவில்லை.  அந்த விபத்தைப் பார்த்துவிட்டு என் மனைவி பயந்தே விட்டாள்.

 நான் காரை அப்படியே வைத்துவிட்டு வழக்கமாக பயன்படுத்தும் டூ வீலரை பயன் படுத்தினேன்.  ரொம்ப மாதஙகள் நானோ காரை எடுக்கவே எனக்கு விருப்பமில்லை.

 பிறகு ஒருநாள் காரை எடுத்தபோது, கார் நகரவில்லை.  காரின் பாட்டரி போய்விட்டது.  செலவு. 

 இப்படி பயந்தபடி காரை ஓட்டினால் என்ன ஆவது?  ஒரு முறை என் சகோதரன்தான் என்னை திட்டினான்.  ‘தைரியமாக காரை எடுத்து ஓட்டிக்கொண்டு அடையாரில் உள்ள என் வீட்டிற்கு வா.’ என்றான். 

அவன் சொன்னபடி காரை ஓட்டிக்கொண்டு போனேன்.  அப்படிச் சென்றதால் தைரியம் கொஞ்சம் துளிர்த்தது.  ஆனாலும், அவனைப் போல் தைரியமாக காரை என்னால் எடுத்துப் போக முடியவில்லை.  அவனிடம் சைக்கிள் இல்லை, டூ வீலர் இல்லை, இரண்டு கார்கள் மட்டும்தான் உண்டு.  தெரு முனைக்குக் கூட காரை எடுத்துக்கொண்டு போவான். 

 எனனிடமும் சைக்கிள் இல்லை.  ஆனால் டூ வீலர் உண்டு .  எப்போதும் டூ வீலரை எடுத்து எடுத்து ஓட்டுவேன்.  உண்மையில் இப்போது சைக்கிள் இருந்தால் என்னால் ஓட்ட முடியாது.  இதை நினைத்து நான் வருத்தப்படுவதுண்டு.  அதேபோல் என் சகோதரனால் டூ வீலரைக் கூட ஓட்ட முடியாது.  

 இந்தத் தருணத்தில்தான் என் நானோ காரை சர்வீஸிற்குக் கொடுத்தேன்.  அந்த இடத்தில் புது நானோ கார் வாங்கிக் கொள்கிறீரா என்று பேரம் நடந்தது.  நானும் யோசித்து நானோ டுவிஸ்ட் என்ற காரை வாங்கினேன்.  மொத்தம் இரண்டு லட்சம் பழைய காருடன் சேர்த்துக் கொடுத்தேன்.  பலவிதங்களில் இந்த புது நானோ டுவிஸ்ட் பிரமாதமாக இருந்தது.  எளிதாக திரும்ப பவர் ஸ்டிரிங். ஏசி.  உண்மையில் ஓட்ட ரொம்ப பிடித்திருந்தது.  எனக்குப் பிடித்த கலரில் நானோ வாங்கினேன்.

 அதை எடுத்துக்கொண்டு ஓட்டினேன்.  இப்போது எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் ஆயிரம் கிலோமீட்டார்கள் ஓட்டிவிட்டேன். ஏப்ரல் மாதம் இறுதியில்தான் இந்த வண்டியை வாங்கினேன். இன்னும் கூட மேட்டில் வண்டி போய்க்கொண்டிருக்கும்போது நிற்கும்படி நேர்ந்தால் முன்னாலும் பின்னாலும் வண்டிகள் அணிவகுத்து நின்று கொண்டிருந்தால், என் வண்டியை லாவகமாக எடுத்துக்கொண்டு போக எனக்கு தைரியம் இருக்காது என்று நினைக்கிறேன்.

 கார் வைத்திருக்கும் ஒவ்வொருவரையும் பார்த்து அது மாதிரி சந்தர்ப்பத்தில் எப்படி காரை ஓட்டுவது என்று பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
 ஒவ்வொரு வாரமும் நான் காரை எடுத்துக்கொண்டு மடிப்பாக்கம் உள்ள என் பெண் வீட்டிற்குச் செல்வேன்.  கூட வரும் என் மனைவி பயந்தபடி வருவாள். 
 
 
“ஒன்றும் ஆகாது.  உன் பயத்திற்கு அளவே இல்லை,” என்பேன். 

 காரை ஓட்டிக்கொண்டு போகும்போது என்னைத் தாண்டிப் போகும் வாகனங்களை விட்டுவிடுவேன்.  சிலசமயம் சைக்கிளில் செல்பவன் கூட என்னை தாண்டிப் போவான்.  பாதசாரிகளை கவனித்தபடியே செல்வேன்.  ஆட்டோ, வாடகை வண்டிக்காரர்களை எல்லாம் மரியாதையோடு நடத்துவேன்.  பல்லவன் வந்தால் முதலில் மரியாதைக் கொடுத்து அனுப்புவேன்.  40 கிலோ மீட்டர் வேகத்தில்தான் வண்டியை ஓட்டுவேன்.

 வண்டியை வீட்டில் ஏற்றுவதும் இறக்குவதும் முன் இருந்த அச்சம் எனக்கு இப்போது இல்லை.  முன்பு பழைய நானோ காரில் நான் ஆயிரம் கிலோ மீட்டர் கூட எட்டவில்லை.  ஆனால் புதிய நானோ டுவிஸ்டில் ஆயிரம் கிலோ மீட்டர்கள் தாண்டி விட்டேன்.